பொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்

பொங்கல் வாழ்த்துக்கள்!

வேறு சில பொங்கல் தருணங்களிலும் இந்தக் கதையை பகிர்ந்திருக்கிறேன். அப்போது சொந்த வாழ்க்கையின் இழப்புகள், ஆங்காரம் எல்லாம் லா.ச.ரா.வின் மண் சிறுகதையை நினைவு கூர வைத்தன. இந்த முறை ஆங்காரம் எல்லாம் கொஞ்சம் நீர்த்துப் போயிருக்கிறது, கலக்கி இருக்கிறார் என்பதால் பகிர்கிறேன்.

ஆனால் பொங்கல் புனைவு என்றவுடன் இப்போதெல்லாம் முதலில் நினைவு வருவது மண் சிறுகதைதான். மங்கல நாளில் இத்தனை ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையை பகிர்வது தேவையா என்றெல்லாம் கேட்கக் கூடாது. லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகளை நினைவில் கொள்ளுங்கள்!

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. கதைச் சுருக்கம் எல்லாம் எழுதி அதை நீங்கள் படிப்பதை விட நேராக சிறுகதையைப் படிப்பது உத்தமம். இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே. அதுவே கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து மீள்பதித்ததுதான். மீள்பதிக்க காரணம் அழிசி பதிப்பகம் இந்தப் புத்தகத்தை மீண்டும் கொண்டு வருவதுதான். அழிசி ஸ்ரீனிவாச கோபாலனுக்கு ஒரு ஜே!

ஃபேஸ்புக்கிலிருந்து:

புதிய வெளியீடு
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளியான கட்டுரைத் தொடர் ‘படித்திருக்கிறீர்களா?’ மூன்று தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. இது முதல் தொகுதியின் மறுபதிப்பு. இரண்டாவது தொகுதியின் மறுபதிப்பும் விரைவில் வெளியாகும்.
*
‘தமிழ் விக்கி’ இணையக் கலைக்களஞ்சியத்திலிருந்து…
க. நா. சுப்ரமணியத்தின் புகழ்பெற்ற ‘படித்திருக்கிறீர்களா?’ என்னும் நூல் பரிந்துரைப் பட்டியல் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். அது க. நா. சுப்ரமணியம் முன்வைத்த அறிவியக்கத்திற்குத் தொடக்கமாக அமைந்தது. அந்தப் பரிந்துரைப் பட்டியலை ஒட்டி ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் ஆதரவும் எதிர்ப்புமாக விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்நூல் தமிழில் ஒரு மூலநூல்தொகை (Modern Tamil Canon) ஒன்றை உருவாக்கும் முயற்சி. அப்பட்டியலை தொடர்ந்து தன் வாழ்நாள் முழுக்க க.நா.சுப்ரமணியம் விரிவாக்கிக் கொண்டே இருந்தார். அதில் அவர் புதிய படைப்பாளிகளைச் சேர்த்தார், பழையவர்கள் சிலரை தவிர்த்தார். அவர் பரிந்துரைத்தவர் களில் ஷண்முகசுப்பையா, அநுத்தமா போன்ற சிலர் பின்னாட்களில் அவருடைய வழிவந்த விமர்சகர்களாலும் அவரை ஏற்கும் வாசகர் களாலும்கூட ஏற்கப்படாது மறைந்தனர். அவரால் முதன்மைப் படுத்தப்பட்ட ஆர். ஷண்முகசுந்தரம் போன்ற சிலர் அவர் அளித்த இடத்தை அடையவில்லை. அவர் பொருட்படுத்தாத ப. சிங்காரம் போன்றவர்கள் பின்னாளில் அவருடைய வழிவந்த விமர்சகர் களாலேயே முதன்மையான இடத்தில் வைக்கப்பட்டனர். ஆனால் இந்த மாறுபாடுகளை கடந்து க. நா. சுப்ரமணியம் உருவகித்த அந்த மூலநூல்தொகையே நவீனத் தமிழிலக்கியத்தின் மையத்தொகுதி என இன்றும் மறுக்கப்படாமல் நிலைகொள்கிறது.
*
படித்திருக்கிறீர்களா? (தொகுதி 1)
க. நா. சுப்ரமண்யம்
விலை ரூ.170
தொடர்புக்கு: 70194-26274


(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

மணிக்கொடி சதஸ்

ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:

நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.

ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.

புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை.

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”

தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

க. நா. சு.: படித்திருக்கிறீர்களா?

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.)

க.நா.சு.வின் இந்தப் பட்டியல் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. Eye opener. தமிழ் புனைவுலகு டைம் பாஸ் மட்டுமே அல்ல, விகடன்/குமுதம், சுஜாதா/சாண்டில்யன்/பொ. செல்வன் மட்டுமே அல்ல, மிகச் சிறந்த படைப்புகள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ நாலைந்து நல்ல எழுத்தாளர்கள்/புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். இந்தப் புத்தகத்தை வாங்கி அடுத்த ஒரு மணி நேரத்தில் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடாக திலீப்குமாரின் புத்தகக் கடையை கண்டுபிடித்தபோது கிடைத்த மகிழ்ச்சி, ஜெயமோகனை முதல் முறை சந்தித்தபோது கிடைத்த மகிழ்ச்சியைத்தான் சொல்லலாம்.

செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் அப்போது கிடைத்தது.

தன் ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் அலசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் சமகால தமிழ் படைப்புகளைப் பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை. நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும், ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது என்றுதான் அன்று தோன்றியது. இன்று இவற்றைப் படிக்கும் முதிர்ச்சி வந்திருக்கிறது, ஆனால் இன்றும் அவற்றை நேரடியாகப் படிப்பதைத்தான் விரும்புகிறேன், கோனார் நோட்ஸ்களை அல்ல.

க.நா.சு.வின் அணுகுமுறை எனக்கு மிகவும் இசைவானதுதான். ஆனால் அவர் ரசனைக்கும் எனது ரசனைக்கும் ஒத்துப் போகவில்லை என்பது பெரிய நகைமுரண். க.நா.சு.வின் பட்டியலில் அனேகமானவை எனக்கு சாதாரணப் புத்தகங்களாகத் தெரிகின்றன. சில சமயம் க.நா.சு. போன்ற ஜாம்பவான் இதை எப்படிய்யா பரிந்துரைத்தார் என்று வியக்கிறேன். ஜெயமோகன் சட்டகங்களை வகுத்து வரையறைகளை செதுக்கி இந்தப் புத்தகம் இந்தப் பாணி இப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும்போது புத்தகத்தைப் படிக்க வேண்டும் அதற்கு என்ன இத்தனை சட்டதிட்டம் என்று தோன்றும். ஆனால் அவர் எனக்கு ஒரு புத்தகம் பிடித்திருக்கிறது என்று சொன்னால் அனேகமாக எனக்கும் பிடித்திருக்கும். இது அடுத்த நகைமுரண்!

அதாவது க.நா.சு.வின் அணுகுமுறையைத்தான் என்னால் ஏற்க முடிகிறது. ஆனால் ஜெயமோகனின் ரசனைதான் எனக்கு ஒத்து வருகிறது. 🙂

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

ஜெயமோகன் ஒரு பின்னோட்டத்தில் சொன்னார்.

அவர் (க.நா.சு.) போட்டு 30 வருடம் புழங்கிய பட்டியல்தான் படித்திருக்கிறீர்களா? இன்றும் தமிழில் புழங்கும் தரவரிசை அதில் உருவாகி வந்ததே. அதற்காக கநாசு 30 வருடம் வசைபாடப்பட்டார். வசை தாங்க முடியாமல் சென்னையை விட்டே ஓடி டெல்லியில் தஞ்சம் புகுந்தார்.

க.நா.சு. போட்டதுதான் முதல் பட்டியல் போலிருக்கிறது. இதற்கு வசை பாடப்பட்டாரா? என்ன மக்களோ!

க.நா.சு.வின் பட்டியல் கீழே. இவற்றில் சில இன்னும் கிடைக்கவில்லை, ரசனை வேறுபட்டிருக்கிறது என்று தெரிந்தாலும் இன்னும் தேடுவதை நானும் நிறுத்தவில்லை.

  • புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. காஞ்சனைதான் தமிழின் முதல் பேய்க்கதையாம். க.நா.சு. இந்தச் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியதை இங்கே முழுமையாகப் படிக்கலாம். புதுமைப்பித்தனே எழுதிய முன்னுரை இங்கே. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு. தேர்வு.
  • தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதம் – இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே இருந்தது. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. ஆனால் படித்தபோது இது ஒரு சுமாரான நாவல் என்றுதான் எண்ணினேன். ஏன் இதைப் பரிந்துரைத்தார் என்று யோசிக்க வைத்தது. படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.
  • எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – நல்ல புத்தகம், நானும் பரிந்துரைக்கிறேன். பிள்ளையைப் பற்றிய சில பதிவுகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.
  • லா.ச.ரா.வின் ஜனனி – நல்ல சிறுகதைத் தொகுப்பு, ஆனால் என் கண்ணில் இதை விட சிறந்த புத்தகங்களை லா.ச.ரா. எழுதி இருக்கிறார். பாற்கடல், புத்ர, அபிதா, சிந்தாநதி, இதழ்கள்… லா.ச.ரா.வின் எழுத்துகள் எப்போதுமே உணர்ச்சி பிரவாகம், இதுவும் அப்படித்தான். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?
  • எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – அந்தக் காலத்தில் படித்தபோது எஸ்.வி.வி. கலக்கிவிட்டார் என்று தோன்றியது. நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருந்தது. “படித்திருக்கிறீர்களா” பட்டியலைப் பார்த்துவிட்டு அதே புத்தகக் கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான். கல்கியின் நகைச்சுவை மாதிரி இருந்தது. ஆனால் 15-20 வருஷம் கழிந்த பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்று தோன்றியது. அப்போதே அவரது ராமமூர்த்தி போன்ற பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை. என் கண்ணில் இதற்கு இன்றைக்கு ஒரு curiosity value மட்டுமே.
  • வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் முழு புத்தகத்தையும் படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை என்று பரவலாகக் கருதப்படுகிறது. மங்கையர்க்கரசியின் காதல் சிறுகதையை இங்கே படிக்கலாம்.
  • யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். மிகைப்படுத்துதல் எதுவும் இல்லாத, மிக உண்மையான அவதானிப்புகள். என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். மீள்வாசிப்பிலும் பிடித்திருந்தது. என் ரசனைக்கு ஒத்துப் போகும் க.நா.சு.வின் தேர்வு.
  • சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – நல்ல தேர்வு.
  • தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு அருமையான சிறுகதை. பசி ஆறிற்று, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை.
  • மு.வ.வின் கரித்துண்டு. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. ஆனால் இது எல்லாருக்குமான நாவல் அல்ல. தமிழின் சிறந்த நாவல்கள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் வராது.
  • தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
  • டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள்/. நானும் பரிந்துரைக்கும் புத்தகம். விரிவாக இங்கே.
  • ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் -க.நா.சு.வின் விவரிப்பு படிக்க வேண்டும் என்று ஏக்கப்பட வைத்தது. ஆனால் முதல் வாசிப்பு எனக்கு ஏமாற்றம் தந்தது. க.நா.சு. கொடுத்த பில்டப் அளவுக்கு புத்தகம் இல்லை என்று நினைத்தேன். மறுவாசிப்பில் எனது வாசிப்பின் குறைகள் தெரிந்தன, நல்ல புத்தகம் என்று நினைத்தேன்.
  • கு. அழகிரிசாமி கதைகள்அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். மேலே வார்த்தைகளை வளர்த்துவானேன்?
  • அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் இந்தப் புத்தகம்தான் எங்கள் ரசனை வேறுபாட்டை சந்தேகம் இல்லாமல் காட்டுகிறது. இதெல்லாம் ஒரு புத்தகம், இதை க.நா.சு. பரிந்துரைக்கிறார் என்ற வியப்பு அடங்கவே இல்லை.
  • கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. க.நா.சு.வின் முழுக் கட்டுரையும் இங்கே.
  • பாரதிதாசன் கவிதைகள் – அவருக்கு சந்தம் கை வந்த கலை, அவ்வளவுதான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்துப் பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும். ஆனால் பாரதிதாசன் நல்ல கவிஞர் இல்லை என்பது என் உறுதியான கருத்து. இத்தனைக்கும் எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
  • கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதைத் தொகுப்பு. கனகாம்பரம், திரை, பண்ணை செங்கான், விடியுமா? ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம், புத்தகப் பரிந்துரைகள்

லா.ச.ரா.: ஜனனி

ஜனனி சிறுகதைத் தொகுப்பு. க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. மின்புத்தகமாகக் கிடைக்கிறது.

லா.ச.ரா.வின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாற்கடல். என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தினரைப் பற்றி எழுத வேண்டும்.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதை யோகம். விவரிப்பது கஷ்டம். ஒரு கல். அதன் மேல் புகையிலை துப்பப்படுகிறது. அதன் அருகே கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு விதவை தன் தோழியின் கணவனோடு உறவு கொள்கிறாள். என்னென்னவோ நடக்கிறது. அந்தக் கல் ஒரு சுயம்புலிங்கம்.

இதே பாணியில் அமைந்த சிறுகதை ரயில். ஒரு ரயில் பெட்டி பிரயாணிகளின் விவரிப்பு. கதை சுமாராகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதன் முத்தாய்ப்பில் (denouement) வயசாளி கணவர் மனைவியிடம் பேசுவது நன்றாக வந்து விழுந்திருந்தது.

அக்காவை விரட்டிக் கொண்டு ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்க்கும் சின்னப் பையனாக நான் இருந்திருக்கிறேன். இன்னமும் மாப்பிள்ளை கருக்கு கழியாமல் வண்டியே தனக்காகத்தான் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் வயசுப் பிள்ளையாகவும் இருந்திருக்கிறேன். ஏண்டாப்பா இத்தனை பெரிய குடும்பத்தைப் படைத்தோம் என்று ஏங்கும் அந்தச் சம்சாரியாகவும் இருந்திருக்கிறேன்….

உப்புமில்லை புளியுமில்லாதற்கு எல்லாம் உறுமிக் கொண்டும் கருவிக் கொண்டும் குலாவிக் கொண்டும் கொக்கரித்துக் கொண்டும் இருந்திருக்கிறோம் – இருக்கிறோம்.

அக்காவை சின்னத் தம்பி மிரட்டுவதும் புன்னகைக்க வைக்கிறது.

டேய் சொன்னத்தைக் கேளு. நீ ரொம்ப எட்டிப் பாக்கறே, காலை வாரி விட்டுடப் போறது…

நீ என் காலைப் பிடிச்சுக்கோ, அதை விட உனக்கு என்னடி வேலை?

ஜனனி, புற்று, அரவான், பூர்வா, கணுக்கள், கொட்டுமேளம் சிறுகதைகள் அவர் பாணி சிறுகதைகள். படிக்கலாம்.

ஜனனி சிறுகதையை கல்கியின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி சூடாமணியின் ஒரு சிறுகதையோடு ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

புற்று சிறுகதையில் அம்மா மகனை நீ அழிந்து போவாய் என்று சாபம் விடும் காட்சி வருகிறது. இந்தக் காட்சிதான் பிற்காலத்தில் புத்ர நாவல் ஆனதோ?

அரவானில் பணக்கார வீட்டுக் குழந்தைக்கு பாலூட்டும் வேலை பார்க்கும் மனைவியும் தங்கள் குழந்தைக்கு பாலில்லையே என்று உளைச்சல்படும் கணவனும் நல்ல சித்தரிப்பு. பூர்வாவில் ஒரு வரி புன்னகையை வரவழைத்தது. எந்த ஜன்மத்தில் பார்த்தாரோ!

வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதியாக ஓடுகிறது

கொட்டுமேளம் உணர்ச்சிப் பிரவாகம். அண்ணனும் விதவையாகிவிட்ட தங்கையும் பயங்கர அன்னியோன்யம். மனைவி சந்தேகப்பட்டு, கணவன் வீம்பாய் நின்று என்று கதை போகிறது. எனக்குப் பிடித்தது சில வரிகள்தாம்.

அவள் விழுங்கியது ஜலமா, அந்த நாதத்தின் விறுவிறுப்பா?

நாயனத்தின் வாசிப்பை விட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து கல்யாணக்கூடம் முழுதும் சிதறி ஓடி உருண்டு பந்துகள் போல எகிறி எழும்பியது.

அண்ணனுக்கு இள வயதிலேயே தலை நரைத்துவிட தங்கை பார்ப்பவர் முடியை எல்லாம் நோட்டம் விடுகிறாள். வழுக்கைத்தலையனனான நானும் அப்படித்தான்.

கதைகள் சோடை போகவில்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதையான யோகத்தை விட நல்ல சிறுகதைகளை லா.ச.ரா. எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்பிரதி
சீதா ரவி கட்டுரை

பொங்கல் சிறுகதை: லா.ச.ரா.வின் மண்

பொங்கல் வாழ்த்துக்கள்!

போன வருஷப் பொங்கல் தருணத்தில் சொந்த வாழ்க்கையின் இழப்புகள், ஆங்காரம் எல்லாம் லா.ச.ரா.வின் மண் சிறுகதையை நினைவு கூர வைத்தன. இந்த வருஷம் வேலை மிச்சம், அந்தப் பதிவையே மீள்பதித்திருக்கிறேன்.

பொங்கல் புனைவு என்றவுடன் முதலில் நினைவு வந்தது மண் சிறுகதைதான். மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய வேளையில் இப்படி ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். எனக்கே நிறைய ஆங்காரம் இருக்கிறது. மேலும் லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகள் நினைவு வந்தன.

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. கதைச் சுருக்கம் எல்லாம் எழுதி அதை நீங்கள் படிப்பதை விட நேராக சிறுகதையைப் படிப்பது உத்தமம். இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

  1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
  2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
  3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
  4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
  5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
  6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
  7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
  8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
  9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
  10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
  11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
  12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
  13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
  14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
  15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
  16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
  17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
  18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
  19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

  1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
  2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
  3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
  4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

  1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

  1. ‘கவிதை’ – Jabberwocky
  2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

  1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
  2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
  3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
  4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
  5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
  6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
  7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.

நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.

பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.

அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.

14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

பொங்கல் சிறுகதை – லா.ச.ரா.வின் ‘மண்’

pongal

பொங்கலுக்காக ஒரு சிறுகதை என்றவுடன் முதலில் நினைவு வந்தது லா.ச.ரா. எழுதிய ‘மண்‘ சிறுகதைதான். மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாட வேண்டிய வேளையில் இப்படி ஆங்காரத்தை வெளிப்படுத்தும் கதையா என்று ஒரு நிமிஷம் யோசித்தேன். அப்புறம் லா.ச.ரா.வே பாற்கடல் என்ற சிறுகதையில் எழுதிய சில வரிகள் நினைவு வந்தன.

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்…

மண் லா.ச.ரா.வின் பிரமாதமான சிறுகதைகளில் ஒன்று. இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயம் தவறவிடாதீர்கள்!

பொங்கல் என்றால் உங்களுக்கு நினைவு வரும் சிறுகதை என்ன? கட்டாயம் அதை மறுமொழியில் குறிப்பிடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

புத்ர பற்றி லா.ச.ரா.

ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் வந்த கட்டுரையை மீள்பதித்திருக்கிறேன், நன்றி, ஹிந்து!

La_Sa_Raஎங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள். முன்கோபிகள். கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா?

என் நாவலின் கதாநாயகி ஜகதாவாக, அவளுடைய மாமியாராக மாற்றி மாறி என் தாயாரைத்தான் பார்க்கிறேன். அவளுடைய மாமனார் பல இடங்களில் என் பாட்டனாரை ஒத்திருக்கிறார். ஜகதாவின் கணவன் அங்கங்கு என் தகப்பனாரை நினைவூட்டுகிறார். ஜகதாவின் பிறந்த கத்தின் ஏழ்மை எங்கள் குடும்பத்தின் ஏழ்மை. இந்த நாவல் தோன்றுவதற்கே அடிப்படையாக விளங்கும் சாபம், எங்கள் குடும்பத்தில் யாரோ ஒரு பாட்டி வயிறு கொதித்து இட்டு பலித்துவிட்ட வாக்கு. மாதா பிதாவின் சாபம் மக்கள் தலைமேலே என்கிற வழக்கு சும்மா பிராசத்திற்காக அல்ல. THE SINS OF THE FATHERS SHALL BE VISITED ON THE CHILDREN. இது பைபிள் வாக்கு. இரண்டும் ஒன்று அல்ல எனினும் ஏறக்குறைய ஒன்றுதான். பரம்பரை அதன் ஆசாரம், பண்பு, வாழ்முறை அவைகளைப் பேணுவதில் இருக்கும் இன்பம் அவசியம். நான் ஐதீகவாதி.

‘அடே!’ இந்த விளிப்பைப் படிக்கையில் எனக்கு இப்போதே குலை நடுங்குகிறது. இந்த ‘அடே’ பெரிசு இல்லை. தொடர்ந்து வரும் சாபத்தின் வார்த்தைகள் பெரிசு இல்லை. ஆனால் அந்த த்வனி நாபிக் கொதிப்பினின்று கக்கும் அந்த எரிமலைப் பிழம்பு – எப்படி என் வாழ்த்தைகளில் பிடிபட்டன என்று இப்போதும் வியப்பாய், பயமாய் இருக்கிறது. இப்பொழுது எனக்கு இப்படி எழுதவருமா? வராது என்பதே என் துணிபு. சொல்லின் உக்ரம் எப்படிப்பட்டது என்று இப்போது உணர்கிறேன்.

பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும் புத்ர, அபிதா இரண்டும் என்னை உறிஞ்சிவிட்டன. அப்படியும் அல்லது அதனாலேதானோ ஒரு சந்தோஷமும் இருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, இந்த நாவலைப் பற்றி இன்னமும் பேசுகிறார்கள். என் வாசகர் வட்டம் சலிக்கவில்லை என்று என் பதிப்பாளர்களே சொல்லும்போது அதுவேதான் எனக்கு பலம் – உடல் உள்ளம் இரண்டும் சேர்ந்துதான்.

நான் எழுதிக்கொண்டது எனக்குத்தான். வாசகர்கள் நீங்கள் படிப்பதும் உங்களுக்காகத்தான். அதனால்தான் ‘புத்ர’ இன்னமும் பேசப்படுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்