சிவாஜி கணேசனைத் தாக்கும் நாவலுக்கு சாஹித்ய அகடமி விருது

மீள்பதிவு, முதல் பதிவு 2010-இல்.

நா.பா. எழுதிய சமுதாய வீதி 1968-இல் வெளிவந்தது. 1971-இல் சாஹித்ய அகடமி பரிசு பெற்றது.

இந்தப் புத்தகம் சிவாஜி கணேசனை கடுமையாகத் தாக்குகிறது. நாவலின் “வில்லன்” கோபால் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறான். போக் ரோட்டில் வசிக்கிறான். நாடக மன்றம் வைத்து பலருக்கு சம்பளம் தருகிறான். நாவலின் நாயகன் முத்துக்குமரன் நா.பா.வேதான் என்பதும் தெளிவு. கதாசிரியன், அழகன், நீண்ட பாகவதர் ஸ்டைல் முடி, தான் சிறந்த எழுத்தாளன் என்ற செருக்குடையவன். கதை நா.பா.வின் wish fulfilment fantasy மாதிரி இருக்கிறது.

காமராஜின் காங்கிரசில் அந்தக் காலத்தில் சிவாஜி பெரும் சக்தி. ஜெயகாந்தன், நா.பா. போன்றவர்கள் ஸ்டார் பேச்சாளர்கள். 68-இல், காமராஜின் தோல்விக்குப் பிறகு வெளிவந்த புத்தகம். ஒரு வருஷம் முன்னால் கூட இருவரும் ஒரே மேடையில் முழங்கி இருப்பார்கள். என்ன தகராறோ? ஒரு வேளை சிவாஜி நா.பா.வை தனக்காக ஒரு நாடகம் எழுதச் சொல்லி அதில் இரண்டு பேருக்கும் ஏதாவது உரசலா, யாருக்காவது தெரியுமா? திருப்பூர் கிருஷ்ணன் மாதிரி யாருக்காவது தெரிந்தால் உண்டு.

அறுபதுகளில் நா.பா. ஒரு ஸ்டார் எழுத்தாளர். அவருடைய குறிஞ்சி மலர் எக்கச்சக்க பிரபலம். அதைப் படித்துவிட்டு குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பேர் வைத்தவர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி பேர் இருந்தால் அவர்களுக்கு அனேகமாக நாற்பத்து சொச்சம் வயது இருக்கும். ராணி மங்கம்மாள், பொன் விலங்கு, மணிபல்லவம் போன்ற புத்தகங்களும் புகழ் பெற்றவை. சமுதாய வீதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.

நா.பா.வின் புத்தகங்களில் நாயகன் எப்போதுமே லட்சியவாதி. சமுதாய அவலங்களைக் கண்டு பொங்குவான். இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்களே என்று பக்கம் பக்கமாக பொருமுவான். அவருடைய கனவு நாயகி “காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவையும் கை கொடுப்பவள்”. நாயகனின் அழகு, ஆண்மை, திமிர், லட்சியங்கள் எல்லாவற்றையும் கண்டு சொக்கிக் கொண்டே இருப்பாள். சுதந்திரத்துக்குப் பிறகு தெருக்களில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவு உடைந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களை அவர் தன் எழுத்தில் கொண்டு வந்தது ஒன்றே அவரது எழுத்தின் பலம். ஆனால் எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறாக இருக்கின்றன.

இன்று கறாராக மதிப்பிட்டால் என் கண்ணில் அவர் ஒரு வணிக எழுத்தாளரே. சில சமயம் சுவாரசியமாக இருக்கும், அன்றைய தமிழ் உலகம் எதை விரும்பியது என்று தெரிந்து கொள்ள உதவும் கதைகளை எழுதி இருக்கிறார். வணிக எழுத்தாகக் கூட அவர் எழுத்து காலாவதி ஆகிவிட்டது. சமுதாய வீதி போன்ற நாவலுக்கெல்லாம் சாஹித்ய அகடமி பரிசா என்றுதான் தோன்றுகிறது. 71-இல் க.நா.சு.வுக்கும், சி.சு. செல்லப்பாவுக்கும், எம்.வி. வெங்கட்ராமுக்கும், லா.ச.ரா.வுக்கும், பிச்சமூர்த்திக்கும் கூட கொடுக்கப்படவில்லை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே. எழுதி இருக்கிறார்.

ஆனால் நா.பா. நல்ல எழுத்து என்றால் என்ன என்று நன்றாகவே அறிந்தவர். அவர் சாஹித்ய அகடமி விருதுக் குழுவில் இருந்தபோது இலக்கியம் படைப்பவர்களுக்கு பரிசு கிடைக்கப் பாடுபட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவரால் நல்ல இலக்கியத்தைப் படைக்கவே முடியவில்லை என்பதுதான் வாழ்வின் நகைமுரண்.

எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறு என்றால் சுவாரசியத்துக்கு வேறு ஏதாவது காரணம்தான் தேட வேண்டி இருக்கிறது. சமுதாய வீதியின் சுவாரசியம் கதைப்பின்னல் அல்ல, பாத்திரங்கள் மிகவும் வெளிப்படையாக நிஜ மனிதர்களைத் தாக்குவதுதான் என்று கருதுகிறேன்.

நாவலில் முத்துக்குமரன் ஒரு நாடக ஆசிரியன். அவன் குழுவில் அந்தக் காலத்தில் ஸ்திரீபார்ட் வேஷங்களில் நடித்த கோபால் – இவனுடன் நெருங்கிப் பழகிய நண்பன் – இன்றைக்கு பெரிய திரைப்பட கதாநாயகன். முத்துக்குமரன் கோபாலைப் பார்க்க வருகிறான். கோபால் முத்துவை ஒரு நாடகம் எழுதித் தரச் சொல்கிறான். கதாநாயகி மாதவிதான் நாடகத்திற்கு நாயகி. அவள் முத்துவைப் பார்த்த அடுத்த நிமிஷத்திலிருந்து அவன் அழகிலும் திமிரிலும் மயங்குகிறாள், மாதவிக்கும் முத்துவுக்கும் காதல் உருவாகிறது. கோபாலின் “போலித்தனம்” மெதுமெதுவாகத் தெரிகிறது. முத்து கோபாலிடம் சில சமயம் முறைத்துக் கொள்கிறான். கோபாலுக்கு பழகிய தோஷத்தாலும், முத்து மீது அந்தக் காலத்திலிருந்து இருக்கும் பயம் கலந்த மரியாதையாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. முத்து அங்கங்கே கோபாலின் “சின்னத்தனத்தை” கண்டு பொருமுகிறான். கோபாலுக்கு விபத்து ஏற்படும்போது முத்துக்குமரன் தானே நாடகத்தில் நாயகனாக நடிக்கிறான். அப்புறம் தன் வழியே காதலியுடன் போய்விடுகிறான். இதுதான் கதை.

கோபால் அப்படி ஒன்றும் தவறாக நடந்துகொண்ட மாதிரியும் தெரியவில்லை. கோபால் தன்னை மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் முத்து, கோபாலை மரியாதையாக நடத்துவதில்லை. பலர் முன் எடுத்தெறிந்து பேசுகிறான். மாதவி முத்துவைக் கண்டு மயங்கிய பிறகு கற்புக்கரசி மாதிரி நடந்தாலும் அதற்கு முன் அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. கோபால் முன் மாதிரியே பெரிய மனிதர்களிடம் மாதவி “அட்ஜஸ்ட்” செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது முத்துவுக்கு தவறாகத் தெரிகிறது. மாதவியின் மனம் மாறும் என்று கோபால் எப்படி யூகிப்பது?

நாவல் காலாவதி ஆகிவிட்டது, படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிவாஜியை வம்புக்கு இழுத்திருப்பது கிசுகிசு படிப்பதைப் போல சுவாரசியமாக இருக்கிறது.

சமுதாய வீதி இணையத்தில் கிடைக்கிறது. ஜெயமோகன் இந்த நாவலை நல்ல social romance என்று குறிப்பிடுகிறார்.

சில வருஷங்களுக்கு முன் ஜெயமோகன் தொந்தி தொப்பி என்று எழுதியதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் கொதித்தெழுந்தது. அன்றைக்கு சிவாஜி ரசிகர் மன்றங்கள் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கிய காலத்தில் இதைப் பற்றி சர்ச்சை எதுவும் எழவில்லையா? நினைவிருப்பவர் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
சமுதாய வீதி – மின் புத்தகம்
எஸ். கிருஷ்ணமூர்த்தியின் விலாவாரியான அலசல்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

நா.பா.வின் “பொன்விலங்கு”

பி.ஜி. வுட்ஹவுஸ் ஒரு புத்தக முன்னுரையில் விமர்சகர்கள் தான் போன நாவலில் அதே பாத்திரங்களுக்கு பேரை மட்டும் மாற்றி மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருப்பதாக விமர்சித்ததாகவும், அந்த விமர்சனத்தைத் தான் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முறை அதே பாத்திரங்களை பேரைக் கூட மாற்றாமல் அரைத்த மாவை அரைத்திருப்பவதாகவும் எழுதி இருப்பார். நா.பா.வின் புத்தகங்களும் அப்படித்தான். அதே பாத்திரங்கள் அதே சூழல்களில் மீண்டும் மீண்டும் வேறு வேறு பேர்களில் வருகிறார்கள். பொன் விலங்கின் சத்தியமூர்த்தி, பாரதி, மோகினி, குமரப்பன், கண்ணாயிரம், பூபதி, கல்லூரி முதல்வர் எல்லாரும் குறிஞ்சி மலரிலும், மூலக்கனலிலும் சமுதாய வீதியிலும் வந்தவர்கள்தான். இன்றைக்கு எதைக் கண்டு பொங்கலாம், சமுதாயத்தின் குறைகளைச் சாடலாம் என்று சிந்திப்பவர்கள்தான்.

பொன்விலங்கு 700 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைச்சுருக்கத்துக்கு 7 வரி கூட தேவைப்படாது. வழக்கம் போல சமுதாயச் சிறுமைகளைக் கொண்டு பொங்கிக் கொண்டே இருக்கும் ஹீரோ சத்தியமூர்த்தி, அவனைக் கூட இல்லை, அவன் பாதங்களைப் பார்த்ததும் காதல்வசப்படும் பாரதி, அவனால் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து காப்பாற்றப்பட்டு பின்னர் அவனைக் காதலிக்கும், அவன் காதலிக்கும் தாசி குலப் பெண் ஆட்டக்காரி மோகினி, கொஞ்சம் ஈகோ உள்ள, ஆனால் திறமையாளர்களைத் தேடிப் பிடித்து தன் கல்லூரியில் வேலை தரும் பணக்காரர் பூபதி, காதலுக்கு எதிரியாக வரும் ஜமீந்தார், கல்லூரி மாணவர்களிடையே அவன் பாப்புலாரிடியைக் கண்டு அசூயைப்படும் கல்லூரி பிரின்சிபால் என்று சொன்னாலே கதை எப்படிப் போகும் என்று யூகித்துக் கொள்ளலாம். ஜமீந்தார், மற்றும் அவரது மதியூக மந்திரி கண்ணாயிரம் சூழ்ச்சியால் சத்தியமூர்த்தி மோகினி மேல் சந்தேகப்படுகிறான், மோகினி தற்கொலை, சத்தியமூர்த்தி ஜெர்மனிக்குப் போவதோடு கதை முடிந்துவிடுகிறது.

கதை எழுதப்பட்ட காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றவுடன் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவுகள் கலையத் தொடங்கிவிட்டன. அப்போது இப்படிப்பட்ட லட்சியவாத வெளிப்படுத்துதல் செயற்கையாக இருந்தாலும் அது அந்தப் பொற்காலம் போச்சே என்று புலம்புபவர்களிடம், லட்சியவாதம் உள்ள இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கும். இன்றைக்கும் நா.பா.வை படிக்கச் சொல்பவர்களுக்கு ஒரு நாற்பது வயதாவது இருக்கும். ஐமபது வயதுக்காரரான ஜெயமோகன் இதை சிறந்த வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். 🙂

ஜெயமோகன் சிபாரிசு செய்த நா.பா. நாவல்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டேன். (ராணி மங்கம்மாள், மணிபல்லவம், சமுதாய வீதி, குறிஞ்சி மலர், பொன்விலங்கு) இதற்கு மேல் நான் படிக்க விரும்புவது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது அதற்கு எழுந்த எதிர்ப்பைப் பின்புலமாக வைத்து அவர் எழுதிய ஒரு நாவலும் (என்ன பேர் என்று யாருக்காவது நினைவு வருகிறதா? ஹீரோயின் பேர் கண்ணுக்கினியாள், ஒரு சைக்கிள் கடை அண்ணாச்சி முக்கிய பாத்திரம்), மூவரை வென்றான் என்ற சிறுகதைத் தொகுப்பும் மட்டுமே. சிறு வயதில் இவை இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன.

நா.பா. பெரிய கனவுகள் கண்டு அதில் ஒரு சிறு பகுதியைக் கூட செயல்படுத்த முடியாமல் போனவர். மணிபல்லவம் போன்ற பெரிய கனவுகளுக்காக அவரைப் பாராட்டினாலும் ஒரு எழுத்தாளராக அவரை நிராகரிக்கத்தான் வேண்டி இருக்கிறது. அவரது சிறந்த நாவலாக நான் கருதுவது ராணி மங்கம்மாளைத்தான். ஆனால் குறிஞ்சி மலர்தான் மிகவும் பாப்புலரான நாவலாக இருக்க வேண்டும்.

நா.பா.வின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவரிடம் எந்த போலித்தனமும் இல்லை. அவர் உண்மையிலேயே லட்சியவாதத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அவர் படைப்புலகம் எதிர்பார்த்தபடியே நடக்கும் ஃபார்முலா பாத்திரங்களால் நிறைந்தது. செயற்கையான சம்பவங்கள், பாய்ஸ் கம்பெனி நாடகம் போன்ற கதைப்பின்னல் ஆகியவற்றை அவரால் தாண்ட முடியாதது துரதிருஷ்டமே.

தொடர்புடைய சுட்டிகள்:
சென்னை லைப்ரரி தளத்தில் நா.பா.வின் நூல்கள்
ராணி மங்கம்மாள்
மணிபல்லவம்
சமுதாய வீதி
குறிஞ்சி மலர்

நா.பா.வின் “குறிஞ்சி மலர்”

இன்று ஒரு நாற்பத்து சொச்சம் வயதுத் தமிழனுக்கு அரவிந்தன் என்று பேரிருந்தால் அவர்கள் அப்பா, அம்மா நா.பா.வின் குறிஞ்சி மலர் நாவலைப் படித்து நெகிழ்ந்தவர்கள் என்று யூகிக்கலாம். எனக்குத் தெரிந்து வேறு எந்த கதாபாத்திரத்தின் பேரும் இத்தனை தூரம் பிரபலம் அடையவில்லை.

குறிஞ்சி மலரை சிறு வயதில் படித்து நானும் உத்வேகம் அடைந்திருக்கிறேன். ஆனால் இன்று அவ்வப்போது கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான் என்று அலுப்பு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. வாசகர்கள் பத்து வயதுக்கு மேல் வளரவே மாட்டார்கள் என்று நா.பா. உறுதியாக நம்பி இருக்கிறார். அவருடைய வில்லன் முகத்தைப் பார்த்தால் புலி போல இருக்கும். இல்லாவிட்டால் கழுகு, வல்லூறு இப்படி ஏதாவது. நாயகி மான், மயில். பேசாமல் நெற்றியில் நான்தான் வில்லன், ஹீரோ, ஹீரோயின், செகண்ட் ஹீரோ என்று பச்சை குத்திக் கொள்ளலாம்.

குறிஞ்சி மலரை நிச்சயமாகப் படித்திருக்கும் தலைமுறைகளுக்கு அடுத்த தலைமுறைகள் வந்துவிட்டன. அதனால் சுருக்கமாக கதை: அப்பாவை இழந்த பூரணி, அரவிந்தன் இருவரும் உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடுகிறார்கள். சமூக அவலங்களைக் கண்டு பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாசகர்களை சோகப்படுத்த அரவிந்தன் இறந்துவிடுகிறான். திருமணம் ஆகாமலே பூரணி வாழ்க்கையை சமூக முன்னேற்றத்துக்காக அர்ப்பணிக்கிறாள். என்னடா இப்படி ஒரு லைனில் முடித்துவிட்டேனே என்று பார்க்கிறீர்களா? இதுவே ஜாஸ்தி.

அம்புலி மாமாக் கதையின் பலவீனங்களைப் பற்றி என்ன விவரிப்பு வேண்டிக் கிடக்கிறது? பலத்தைப் பற்றிப் பேசுவோம். அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். லட்சியவாதம் என்று அன்று உணரப்பட்டதை இந்தப் பாத்திரப் படைப்புகளின் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். அது இன்று உலக மகா சிம்ப்ளிஸ்டிக்காக இருக்கிறது. அது நா.பா.வின் தவறு இல்லை. நா.பா.வே. அப்படிப்பட்ட ஒரு லட்சியவாதிதான் என்று நினைக்கிறேன். அரவிந்தன் அவரது idealized சுய விவரிப்பாகவே இருக்க வேண்டும். அப்புறம் அகிலனை விட நன்றாகவே எழுதுகிறார்! (எனக்கென்னவோ அகிலன் ஒரு pet peeve ஆகவே மாறிவிட்டார்)

கதையின் முக்கியத்துவும் ஒரு காலத்தில் அதற்கு இருந்த தாக்கத்தால்தான். ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். வணிக நாவல்கள் எப்படி எல்லாம் evolve ஆகி இருக்கின்றன என்று புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டும்.

பிற்சேர்க்கை: சந்தடி சாக்கில் இன்னொரு நா.பா. புத்தகத்தைப் பற்றிய சின்னக் குறிப்பையும் உள்ளே நுழைத்துவிடுகிறேன்.
மூலக்கனல்: நா.பா. ஒரு காலத்தில் காங்கிரசின் ஸ்டார் பேச்சாளரும் கூட. திராவிட இயக்கத்தின் மீது அவருக்குப் பெரிய கசப்பு உண்டு. அந்த கசப்பை ஒரு சம கால (contemporary) வரலாற்று நாவல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருமலைராஜன் (திரு) ஜமீந்தாருக்கு தவறான வழியில் பிறந்த பிள்ளை. அவனை சின்ன ஜமீந்தார் அடித்துத் துரத்திவிடுகிறார். தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்பதற்காக கருப்புச்சட்டைக்காரர் பொன்னுசாமியுடன் சேர்கிறான். கருணாநிதி, கல்லக்குடி-டால்மியாநகர் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் அவனும் ஏதோ ஒரு ஊரை பெயர் மாற்றும் போராட்டத்தில் ஈடுபடுகிறான், சினிமாவுக்கு வசனம் எழுதப் போகிறான். குடி, பெண்கள் என்று ஆரம்பிக்கிறான். தன மனைவி, பிள்ளையை விட்டு விலகுகிறான். காலப்போக்கில் மந்திரி ஆகிறான். ஊழல். பிள்ளை பெரியவனாகி இவனை தாக்கி பத்திரிகையில் எழுத, தன பிள்ளைதான் என்று தெரியாமல் அவனைக் ஆட்கள் மூலம் கொன்றுவிடுகிறான்.
கதை சுமார்தான். ஆனால் அந்த சம கால நிகழ்ச்சிகளை – தி.மு.க. ராபின்சன் பூங்காவில் தோன்றியது, சென்னை மாநகராட்சித் தேர்தலில் வென்றது, ராஜாஜி திராவிட இயக்கத்துடன் கை கோர்த்தது – கோத்திருக்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.

பிற்சேர்க்கை: விமல் புண்ணியத்தில் “குறிஞ்சி மலர்” மின்னூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

மணிபல்லவம்

சரித்திர நாவல்கள் என்று ஆறேழு பதிவுகள் எழுதியபோது ஜெயமோகன் ஒரு மறுமொழியில் சொல்லி இருந்தார் –

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும். அக்கால அறிவுலகம் பதிவாகிய நாவல் அது

அவரது கருத்தைப் படித்ததிலிருந்து இந்த நாவலைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. நண்பன் பக்சிடம் புத்தகமும் இருந்தது. ஆனால் அறுநூறு பக்கத்துக்கு மேல் இருந்தது, அதுதான் பிரச்சினை.

எப்படியோ ஒரு நாள் தம் கட்டி ஆரம்பித்தேன். சும்மா கிடுகிடுவென்று படிக்க முடிந்தது. ஏதாவது stuff இருந்தால்தானே நேரமாகும்? கல்கியின் தளத்திலிருந்து மாறுபட்டவை என்று அறுநூறு பக்கத்து நாவலில் ஒரு ஆறு பக்கம் தேறலாம். நா.பா.வுக்கு அரண்மனைச் சதி என்ற genre-ஐத் தாண்டியும் எழுதலாம் என்ற பிரக்ஞை இருந்திருக்கிறது, அப்படி எழுதவேண்டும் என்று ஆர்வமும் ஆசையும் இருந்திருக்கிறது, என்ன எழுதலாம் என்ற ஐடியாவும் இருந்திருக்கிறது, ஆனால் எழுதத்தான் தெரியவில்லை/முடியவில்லை.

அரண்மனைச் சதி என்ற பாணியிலிருந்து விலகி எழுதவேண்டும் என்று நினைத்த நா.பா. அந்தச் சதி வேலைகளை சிம்பிளாக ஒரு செல்வந்தர்-வில்லன் வீட்டுக்கு மாற்றிவிடுகிறார். இதையெல்லாம் வேறுபாடு என்று எப்படி அவரால் நினைக்க முடிந்ததோ தெரியவில்லை. சரித்திர நாவலில் சரித்திர மனிதர்கள் யாருமில்லை. (ஆனால் பூம்புகாரின் geography பற்றி – இங்கே இந்த வனம், அங்கே அந்தக் கோவில் – என்று சில விவரங்கள் தருகிறார்.) மனிதர்கள் இருந்தால் நாவலின் காலம் உறுதியாக நிர்ணயப்படுத்தப்படும். இப்போது நாவல் ஒரு நூறு இருநூறு வருஷங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு பாத்திரமாவது caricature என்ற அளவுக்கு மேல் போகவில்லை. ரஜினி, விஜய், அஜீத் மாதிரி என்ட்ரி கொடுக்கும் அழகான ஹீரோ இளங்குமரன் (நா.பா.வின் ஹீரோக்கள் எப்போதுமே அழகாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்து பெண்கள் தெருவில் சொத்சொத்தென்று மயங்கி விழுந்து கொண்டே இருப்பார்கள்) ஓபனிங்கில் ஒரு யவன மல்லனை வீழ்த்துவது, அவனைப் பார்த்தவுடனே காதல் கொள்ளும் ஹீரோயின் சுரமஞ்சரி, திமிராக அவளை மறுக்கும் ஹீரோ (நா.பா.வின் முக்கால்வாசி ஹீரோக்கள் அப்படித்தான் – திமிராக இருப்பதுதான் ஆண்மை என்பது நா.பா.வின் நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு motif), இளங்குமரனை காதலிக்கும் இரண்டாவது ஹீரோயின் முல்லை, இளங்குமரனின் பிறப்பில் ஒரு உப்புச்சப்பில்லாத மர்மம், எம்ஜிஆர் படத்தில் வரும் அசோகன்-நம்பியார் மாதிரி வில்லன்கள் (நகைவேழம்பர், பெருநிதிச்செல்வர்), அதே படத்தில் வரும் மேஜர் சுந்தரராஜன் மாதிரி இளங்குமரனை வளர்க்கும் ஒரு முனிவர் என்று மோசமான cliches நிறைந்த ஒரு நாவல்.

லாஜிக் என்பது துளியும் இல்லை. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். இளங்குமரன் போகும் கப்பலை நகைவேழம்பரின் கப்பல் தாக்குகிறது. ஹீரோவின் கப்பல் காப்டன் தீயம்புகளை வீசி வில்லனின் கப்பலைத் தீப்பிடிக்க வைக்கிறார். கப்பல் எரிகிறது, கப்பலில் இருக்கும் ஏறக்குறைய அனைவருக்கும் உயிரிழப்பு, படுகாயம். அப்போது ஒருவர் நகைவேழம்பரைக் கொல்ல வேலை எடுத்து வீசப் போகிறார். கப்பல் காப்டன் தடுக்கிறார் – புனிதமான புத்த பூர்ணிமை தினம் அன்று ஒரு உயிரை கொலை செய்ய வேண்டாமாம். ஒரு வரி முன்னால் காப்டன் எறிந்த தீயம்பு அந்தக் கப்பலில் அடுப்பு மூட்டி சமைக்கவா?

கதையின் ஒரே நல்ல விஷயம் – இளங்குமரன் தர்க்க முறைய கற்று “ஞானி”யாகிறான் என்பதுதான். ஒரு ஆறேழு பக்கத்துக்கு தர்க்கங்கள் – விஷ்ணுபுரத்துக்கு முன்னால் இப்படி ஒரு விஷயம் எந்த தமிழ் புனைவிலும் சொல்லப்பட்டதில்லை. ஆனால் வாதங்களில் எனக்கு லாஜிக் குறைவாகவே தெரிந்தது. நா.பா. வாசகனுக்காக oversimplify செய்தாரா என்று தெரியவில்லை.

அதிலும் இதே மாதிரிதான் – ஆசையும் ஆணவமும் அற்றவனாக, சாந்த சொரூபியாக, உலகில் அனைவர் மீதும் அன்பே உருவானவாக பரிணாமித்திருக்கிரானாம். அவன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் உலகின் எல்லா மதத்தவரையும் “ஞானிகளையும்” தர்க்கப் போரில் வென்று நாவலோ நாவல் என்று தன் கொடியை நாட்டுவதுதானாம். அன்பே உருவான சாந்த சொரூபிக்கு எதுக்கய்யா போட்டியும் வெற்றியும்? இதில் உள்ள முரண்பாடு நா.பா.வுக்கும் அப்போது படித்தவர்களுக்கும் தெரியவே இல்லையா? ஹீரோவை எதிர்த்து வாதிடுபவர்கள் ஆணவம் நிறைந்தவர்கள், அவர்களை எதிர்க்கும் ஹீரோ தியாகச் சுடர். “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என்று பாடாததுதான் பாக்கி.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை முன்னூறு ரூபாய். சென்னை லைப்ரரி தளத்தில் இலவசமாக மின்புத்தகம் கிடைக்கிறது.

நா.பா.வின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்த நாவல் குப்பை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே எழுதி இருக்கிறார். குறிஞ்சி மலர் போன்றவை இதை விட பல மடங்கு பெட்டர். இதில் அவரது தன்னைப் பற்றியே கொண்டிருக்கும் பகல் கனவுதான் தெரிகிறது. ஜெயமோகனின் ரசனையும் என் ரசனையும் ஓரளவு ஒத்துப் போகும். இந்த நாவல் விஷயத்தில் மட்டும் ஏனோ எங்கள் கருத்து முற்றிலும் எதிரும் புதிருமாக இருக்கிறது.

நாஞ்சில் நாடனின் “இடலாக்குடி ராசா”

இது வரை நான் படித்த நாஞ்சில் நாடன் புனைவுகளில் எனக்குப் பிடித்த சிறுகதை இதுதான். லௌகீக (லௌகீகத்துக்கு நல்ல தமிழில் என்ன சொல்வது?) வாழ்க்கையில் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்பதை அழகாக எழுதி இருக்கிறார். வாழ்வில் களைப்பு ஏற்படும்போதெல்லாம் இதைப் படித்தால் கொஞ்சம் தெளிவு ஏற்படலாம். என்னத்துக்கு வளவள என்று பேசிக்கொண்டு? சுல்தான் இந்தக் கதையை பதித்திருக்கிறார், நேராக அங்கே போங்கள்!

1978-ஆம் ஆண்டு தீபம் இதழில் வெளிவந்திருக்கிறது. அப்போதெல்லாம் நா.பா.தான் தீபம் ஆசிரியர் என்று நினைக்கிறேன். நா.பா.வை ஆயிரம் குறை சொன்னாலும் அவர் இலக்கியத் தேடல் உள்ளவர் என்பது உண்மை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன்

கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)

இங்கே கல்கி பாணியில் (அரண்மனைச் சதி genre) சரித்திர நாவல் எழுதிய சிலரைப் பற்றி மட்டும்:

தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் சாண்டில்யனின் மிகச் சிறந்த நாவல் கூட சிவகாமியின் சபதம் தரத்துக்கு வரவில்லை.

சாண்டில்யனுக்கு ரஃபேல் சபாடினிதான் ஆதர்சம் என்று நினைக்கிறேன். அவரது நாயகனுக்கு boss-ஆக ஒரு பெரிய ஆளுமை இருக்கும். நாயகன் எப்போதுமே வீரன். நிறைய தந்திர வேலை எல்லாம் செய்வான். தந்திர வேலை என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்தில் எம்ஜிஆரின் படகை அசோகன் இன்னொரு படகில் துரத்துவார். முன்னாள் எம்ஜிஆர், பின்னால் அசோகன். எம்ஜியார், அசோகன், எம்ஜிஆர், அசோகன். திடீரென்று எம்ஜிஆர் தூய தமிழில் தாய்லாந்தை சேர்ந்த சப்பை மூக்கு படகோட்டியிடம் “இடது பக்கம் திரும்பு” என்பார். அங்கே ஒரு பெரிய படகு இருக்கும். இவர்கள் அந்தப் படகுக்குப் பின்னால் போனது தெரியாமல் அசோகன் தான் வந்த வழியிலேயே போவார். வாத்யாரைக் காணோம்! எம்ஜிஆர் தப்பிவிட்ட ஏமாற்றத்தில் அசோகன் ஒரு கையில் இன்னொரு கையால் குத்திக்கொண்டே ஆ! என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்வார். சாண்டில்யனின் கதாநாயகன்கள் தந்திரம் எல்லாம் இந்த ரேஞ்சில்தான் இருக்கும்.

அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தவை யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம். இவை எல்லாம் சின்ன வயதில் படிக்கத்தான் லாயக்கு. பார்த்திபன் கனவு லெவலில் இருக்கும்.

இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சாண்டில்யன் இன்றும் பல wannabe எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார். கமலப்ரியா (தீரன் சின்னமலை பற்றிய “கொங்குத் தங்கம்” என்ற நாவல்) என்பவர் அவரது பாணியை, மொழியை, கதைப் பின்னலை, ஏன் சேலை விலகி இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன பாணி கிளுகிளுப்பைக் கூட அப்படியே பிரதிபலிக்கிறார். ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றால் ஏதோ தெரியாத சாண்டில்யன் எழுத்தோ என்று சந்தேகம் வரலாம்! சின்ன சாண்டில்யன் என்ற புனைபெயரிலேயே ஒருவர் எழுதுகிறார். (ஜெம்புலிங்க நாடாரை வைத்து ஒரு நாவல் – )

சாண்டில்யன் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் ஜெகசிற்பியன் ஓரளவு பிரபலமான சரித்திரக் கதை ஆசிரியர்தான். பல சமூகக் கதைகளையும் எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது திருச்சிற்றம்பலம், மற்றும் நாயகி நற்சோணை.

திருச்சிற்றம்பலம் பேப்பருக்குப் பிடித்த கேடு. வளவளவளவளவளவளவளவளவென்று எழுதி இருக்கிறார். குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை இடித்ததாகவும் அந்த மூலவர் சிலையை கடலில் போட்டதாகவும், பொதுவாக வைணவர்களை கொடுமை செய்ததாகவும், குறிப்பாக ராமானுஜரின் பிரதம சிஷ்யர் கூரத்தாழ்வாரை குருடாக்கியதாகவும் ஸ்ரீரங்க வைஷ்ணவ குருபரம்பரையில் சொல்லப்படுகிறது. மூலவர் சிலை கடலில் போடப்பட்டது சமீபத்தில் தசாவதாரம் படத்தில் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை பின்புலமாக வைத்து அதில் காதல், இரண்டாம் கிளாஸ் பிள்ளைகள் தரத்தில் ஒரு சதி என்று எழுதி இருக்கிறார். சிவன் கோவிலை விரிவாக்க பெருமாள் சந்நிதி தடையாக இருக்கிறது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்பவர், அதனால் கடலில் போடுவேன் என்கிறான் சோழன்; சிவபெருமான் சிலையை சுடுகாட்டில் வைக்க வேண்டியதுதானே?

நா. நற்சோணை ஏறக்குறைய திருச்சிற்றம்பலம் ஃபார்முலாதான். இந்த முறை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ஒரு soft காதலி. ஒரு சாமர்த்தியமான, காதலனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் காதலி. வளவளதான். ஆனால் இதில் சொல்லப்படும் வரலாறு கொஞ்சம் intriguing. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாலன், கங்கை கொண்ட சோழன் எல்லாரையும் பற்றி வட நாட்டு ரெகார்ட் ஏதாவது இருக்கிறதா? இந்த கனக விஜயர் யார், எந்த நாட்டு மன்னர்கள்?

ஆனால் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் I am awestruck by திருச்சிற்றம்பலம். இந்த கதையை என்னால் நாலு பக்கம் கூட எழுதமுடியாது. அவரால் நானூறு பக்கம் எழுத முடிந்திருக்கிறது! இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு பத்தில் ஒரு பங்கு ஆற்றல் இருந்தால் கூட போதும்!

கோவி. மணிசேகரன் எழுதிய குற்றாலக் குறிஞ்சிக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் தலைப்பு மாதிரி ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் மொத்தப் புத்தகத்திலும் சுவாரசியமான ஒரே பகுதி.

அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இது சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வந்திருக்கிறது.

இவற்றைத் தவிர நாயகன் நாயகி, செஞ்சி அபரஞ்சி என்ற நாவல்களையும் சித்ராங்கி, ராஜதரங்கிணி, காந்தாரி, மிதக்கும் திமிங்கலங்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்திருக்கிறேன். குப்பமுத்தாச்சாரி கதை அப்படியே “மறவர் குல மாணிக்கங்கள்” நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கதையை சில சமயம் இன்னொரு தொகுப்பில் recycle பண்ணி இருக்கிறார். செஞ்சி அபரஞ்சி அவர் லெவலுக்கு சுமாரான நாவல். நாயகன் நாயகியில் வரலாறும் இல்லை, கதையும் இல்லை. தவிர்க்கலாம்.

கோவி அலங்காரத் தமிழை விரும்புபவர். வீரர்களின் மார்பு எப்போதும் விரிந்து பரந்திருக்கும், அழகிகளின் மார்பு எப்போதும் விம்மித் ததும்பும். அந்த மாதிரி கதைகளின் காலம் போய்விட்டது. தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்றால் எப்படி?

அகிலன் எழுதிய கயல்விழியும் இதே டைப்தான். மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இதைத்தான் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று திரைப்படமாக வேறு எடுத்தார். இந்த நாவல் பிடிக்காததால், நான் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன், வெற்றித்திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும். ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. விரிவாக இங்கே படிக்கலாம். கபாடபுரம் ரம்பம். ஜெயமோகன்

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [ நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும்

என்கிறார். படித்துப் பார்க்க வேண்டும்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை: ர. ஒ. நிறம் ஓரளவு நல்ல கதை. கல்கி பாணியில் இருக்காது. வசந்தகுமாரன் கதை பாதியிலேயே நின்றுவிட்டமாதிரி இருக்கிறது. வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் இருக்கும் திசையில் கூட போக ஆரம்பிக்கவில்லை, அதற்குள் புத்தகமே முடிந்துவிட்டது.

ர.சு. நல்லபெருமாள் எழுதிய மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதில் எவ்வளவு சரித்திரம், எவ்வளவு folklore என்று தெரியவில்லை. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்துப் பார்த்தால் இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கௌசிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன். கௌசிகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைபெயர்.

“கல்கி” ராஜேந்திரனின் ரவிகுலதிலகன்: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்து அதிகாரத்துக்கு வந்த கதை. என்னை intrigue செய்த ஒரே விஷயம் விஜயாலயனை வழக்கமான மாசுமறுவற்ற உத்தம வீரனாகக் காட்டாமல் கோபமும், பழி வாங்கும் உணர்ச்சியும் உள்ள ஒருவனாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் கதை படு சுமார்.

திலகவதி எழுதிய “தீக்கு கனல் தந்த தேவி“யும் இப்படி ஒரு டைம்பாஸ் குறுநாவல்தான்.

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் சரித்திரக் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. கதைகளின் தரம் அப்படி! இந்த லட்சணத்தில் அவர் எழுதிய சேரமான் காதலி என்ற புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். நான் நல்ல புத்தகத்தை சில சமயம் பாதியில் நிறுத்திவிட்டு சரியான மூட் வந்ததும் தொடர்வேன். ஆனால் தண்டமான ஒரு புத்தகத்தில் இருபது முப்பது பக்கம் படித்துவிட்டால் அதை (அசட்டுப்) பிடிவாதமாகப் படித்துவிடுவேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தில் ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. சரியான போர். இதைத் தவிர ஊமையன் கோட்டை (கட்டபொம்மன் மறைவுக்குப் பிறகு ஊமைத்துரையின் தொடரும் புரட்சி), மற்றும் பாரிமலைக்கொடி என்ற கதைகளைப் படித்திருக்கிறேன். பாரிமலைக்கொடி பாரியின் கொடை, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?

ஆனால் கண்ணதாசனே பரவாயில்லை என்று நினைக்க வைத்தவர்களும் உண்டு. கவியழகன் எழுதிய “மாவீரன் புலித்தேவன்” இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அனுஷா வெங்கடேஷ் இந்த genre-இல் literal ஆகவே கல்கியின் வாரிசாக வர முயற்சிப்பவர். அவர் எழுதிய காஞ்சித்தாரகை சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சி. கதையே இல்லாமல் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் கதையை இரண்டு வரியில் எழுதிவிடலாம், இவருக்கு நானூறு பக்கம் பிடித்திருக்கிறது.

மு. மேத்தா எழுதிய சோழ நிலா அந்தக் காலத்தில் ஆனந்த விகடனின் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் டைப்ரைட்டரில் கார்பன் காகிதம் வைத்து பிரதி எடுப்பார்கள். இது சாண்டில்யனின் சுமாரான நாவல் ஒன்றை எட்டாவது பிரதி எடுத்தது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. கற்றுக்குட்டித்தனமான நாவல்.

இவர்களைத் தவிர விக்ரமன், கௌதம நீலாம்பரன் (வீரத்தளபதி மருதநாயகம்), தாமரைமணாளன், வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னைக் கவரவில்லை. குறிப்பாக விக்ரமன் எழுதிய “வந்தியத்தேவன் வாள்” உண்மையில் வாள் இல்லை ரம்பம். சாஹித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கியவராயிற்றே என்றுதான் வல்லிக்கண்ணன் எழுதிய விடிவெள்ளியைப் (பாண்டியன் கடுங்கோன்) படித்தேன். உலக மகா தண்டம். கோவிந்தராஜன் கிருஷ்ணராவ் எழுதிய விக்கிரமனின் சபதம் கற்றுக்குட்டித்தனமாக இருக்கிறது.

தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நகுபோலியன் என்பவர் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய மழநாட்டு மகுடம் கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

நான் படித்த வரையில் சாண்டில்யன், சுஜாதா, நா.பா. மூன்று பேர்தான் பொருட்படுத்தக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்தான் இவற்றில் பெஸ்ட். ஆனால் படிக்க இன்னும் இருக்கிறது. அது அடுத்த பகுதியில். அது வரையில் reference-க்காக ஜெயமோகனின் historical romances லிஸ்டை இங்கே ஒரு அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். ஜெயமோகன் பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” நாவலை romance என்ற நிலையைத் தாண்டிய இலக்கியம் என்றும், சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். எஸ்.ரா. பொ. செல்வன், வீ. மனைவி, மா. வெல்லும், சுஜாதாவின் ர.ஒ. நிறம், பாலகுமாரனின் உடையார் ஆகியவற்றை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.

தொடரும்…

அனுபந்தம் (Appendix) – ஜெயமோகனின் Historical Romances லிஸ்ட்

முதல் பட்டியல்:

  1. பொன்னியின் செல்வன் — கல்கி
  2. சிவகாமியின் சபதம் — கல்கி
  3. மன்னன் மகள் — சாண்டில்யன்
  4. யவன ராணி — சாண்டில்யன்
  5. கடல்புறா — சாண்டில்யன்
  6. வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
  7. ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்
  8. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
  9. வேங்கையின் மைந்தன் — அகிலன்
  10. மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி

இரண்டாம் பட்டியல்:

  1. பார்த்திபன் கனவு — கல்கி
  2. ஜலதீபம் — சாண்டில்யன்
  3. கன்னிமாடம் — சாண்டில்யன்
  4. மூங்கில் கோட்டை — சாண்டில்யன்
  5. ராஜ முத்திரை — சாண்டில்யன்
  6. கயல்விழி — அகிலன்
  7. வெற்றித்திருநகர் — அகிலன்
  8. ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா
  9. கோபுர கலசம் — S.S. தென்னரசு
  10. ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
  11. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
  12. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
  13. பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்
  14. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
  15. திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்

தொடர்புள்ள பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி)

நா. பார்த்தசாரதியின் ராணி மங்கம்மாள்

இன்னும் லீவ்தான். ஆசைக்கு ஒரு பதிவு…

ராணி மங்கம்மாளுக்கு தனி போஸ்ட் எழுத ஒரே காரணம்தான் – ஜெயமோகன் இதை சிறந்த historical romance ஆக குறிப்பிட்டிருப்பது. அவருடைய இந்தப் பதிவில் இருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசை.

சரித்திரத்தில் வெகு சில பேர்களே வரலாற்று அறிஞர்களைத் தாண்டி சாதாரண மக்களின் மனதிலும் இடம் பெறுகின்றன. ராஜா தேசிங்கு, கட்டபொம்மன், ராணி மங்கம்மாள் என்று மூன்று பேர்தான் எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரைக்கு தெற்கே, மங்கம்மாள் என்ற பேருக்கு ஒரு கவுரவம் உண்டு. அது மங்கம்மாள் “சாலையின் இரு புறமும் மரம் நட்டதாலா”, இல்லை மரம் நடுவதற்கு சாலை போட்டதாலா, சத்திரங்கள் வைத்ததாலா என்று தெரியவில்லை. இன்றைக்கும் மங்கம்மாள் சத்திரம் இருக்கிறதாம் (இன்றைய, அன்றைய ஃபோட்டோக்கள் கீழே). இத்தனைக்கும் அவருக்கு இழுக்கு உண்டாக்குவதற்காகவே கள்ளக் காதல் என்றெல்லாம் வதந்தியைப் பரப்பினார்களாம்.

சரித்திரம் சரியாக நினைவில்லாதவர்களுக்காக: கணவன் சொக்கநாத நாயக்கர் இறந்ததும் மகன் ரங்ககிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனுக்கு regent ஆக இருந்து வயது வந்ததும் அவனுக்கு மகுடம் சூட்டுகிறாள் ராணி மங்கம்மாள். மகன் இறந்ததும் பேரனுக்கு regent. பேரன் அவளை சிறை வைத்து முடிசூடுகிறான். மங்கம்மாள் பெரும் வெற்றிகளை எல்லாம் அடையவில்லை. அவர் “ஆட்சிக்காலத்தில்” ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி தன் நாடு ஒரு சுதந்திர நாடு என்று பிரிந்து போனார். ஆனால் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு இருந்தது. அதுவே அவர் நினைவில் தங்கக் காரணம் என்று நினைக்கிறேன்.

நா.பா. இந்தக் கதையை அவர் பாணியில் எழுதுகிறார். கதையில் அவ்வளவாக சுவாரசியம் இல்லை. பாத்திரங்கள் எல்லாம் caricatures மட்டுமே. அதுவும் கிழவன் சேதுபதியுடன் மகன் முத்துவீரப்பன் இடும் “போர்” ரொம்ப கேனத்தனமாக இருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நல்ல அருமையான வாய்ப்பு – இதையே கி.ரா., சு.ரா., ஜெயமோகன், ஏன் கல்கி மாதிரி ஒருவர் கூட பிய்த்து உதறி இருப்பார்கள். இவர் சாண்டில்யனை விட பரவாயில்லாமல் எழுதி இருக்கிறார், அவ்வளவுதான். என்னைக் கேட்டால் இதற்கு பதில் ஏதாவது நாயக்கர் வரலாறு என்கிற மாதிரி சரித்திரப் புத்தகத்தையே படிக்கலாம். ஆனால் இதுவே அவர் எழுதிய சிறந்த சரித்திரப் புத்தகம் என்று நினைக்கிறேன். சம்பவங்களை நேர்மையாகத் தொகுத்திருக்கிறார். உபதேசம் இருந்தாலும் குறைவாகத்தான் இருக்கிறது.

வரலாறு என்ற முறையில் படிக்கலாம். கதை என்ற முறையில் தோல்வி.

புத்தகத்தை ஆன்லைனில் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், சரித்திர நாவல்கள்