2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

  1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
  2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
  3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
  4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
  5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
  6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
  7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
  8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
  9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
  10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
  11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
  12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
  13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
  14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
  15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
  16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
  17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
  18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
  19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

  1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
  2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
  3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
  4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

  1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

  1. ‘கவிதை’ – Jabberwocky
  2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

  1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
  2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
  3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
  4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
  5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
  6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
  7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

நோபல் பரிசு வென்ற பாட்ரிக் மோடியானோவின் ‘Suspended Sentences’

modianoமோடியானோ ஃப்ரென்ச் எழுத்தாளர். 2014-இல் நோபல் பரிசை வென்றவர். நானும் ஒரு வருஷமாக அவரது புத்தகம் எதையாவது படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன், இப்போதுதான் முடிந்திருக்கிறது.

Suspended Sentences மூன்று குறுநாவல்களின் – Suspended Sentences (1988), Flowers of Ruin (1991), Afterimage (1993) – தொகுப்பு. மூன்றுக்கும் ஒன்றோடொன்று தொடர்புண்டு. அசோகமித்ரனின்இன்று‘ நாவல் மாதிரி. அவை மூன்றும் சேர்ந்து ஒரு சூழலை – ambience – நமக்குக் காட்டுகின்றன. சொல்லப்படுபவை, காட்டப்படுபவை எல்லாமே கொஞ்சம் பனியில் மறைந்த மாதிரி மங்கலாகத்தான் காட்டப்படுகின்றன. Feels like looking at a blurred photo. அவர் கதை, சம்பவங்கள் ஆகியவற்றை விவரிக்கவில்லை. அவர் கொண்டு வர நினைப்பது ஒரு சூழலை, ambience, atmosphere-ஐ. அதில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுகிறார். அப்படி கதையே இல்லாத கதைகளிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொகுப்பின் பலம் அந்தச் சுவையை உணரச் செய்வதுதான்.

ஏதாவது ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Suspended Sentences. இரண்டாம் உலகப் போரின் காலம். பாரிஸ் ஜெர்மனியின் கைக்குள் இருக்கிறது. அப்பா யூதர். அம்மாவும் யூதரா என்று தெளிவாக இல்லை. அப்பா யூதர்தானா என்பதே தெளிவாக இல்லை. அம்மா சர்க்கஸ்காரி, ஊர் ஊராகப் போகிறாள். தன் இரண்டு மகன்களை ஒரு தோழியிடம் விட்டுச் செல்கிறாள். தோழியும் பழைய சர்க்கஸ்காரி, ஒரு விபத்துக்குப் பிறகு சர்க்கஸில் ட்ரபீஸ் ஆடமுடிவதில்லை. அந்த வீட்டில் தோழி, அவளுக்கு ஒரு தோழி, அம்மாக்காரி ஒருத்தி இருக்கிறார்கள். இவர்களை பார்த்துக் கொள்ள இன்னொரு பெண் வருகிறாள். மூத்தவன் (படோசே என்று பேர்) கண்ணோட்டத்தில்தான் கதை விவரிக்கப்படுகிறது. படோசேக்கு சில சமயம் பெரியவர்கள் பேசும் வாக்கியங்கள் – சரியாகப் புரியாவிட்டாலும் கூட – அப்படியே மனதில் நின்றுவிடுகின்றன. இவர்கள் பள்ளிக்குப் போகிறார்கள். புழக்கம் இல்லாத ஒரு மாளிகையைக் கண்டு கொஞ்சம் பயம். வீட்டுக்கு வந்து போகும் சிலர். மெதுமெதுவாக அவர்கள் ஜெர்மானியர்களுக்கு உதவுபவர்கள், சின்ன லெவல் திருடர்கள் என்று காட்டப்படுகிறது. அப்பா கைது செய்யப்படும்போது இவர்களில் ஒருவர் உதவியோடு விடுதலை செய்யப்படுகிறார். படோசே பெரியவனான பிறகும் இவர்கள் அவனுக்கு ஒரு obsession ஆக இருக்கிறார்கள். அவர்களைத் தேடுகிறான். ஆனால் அவர்களை சந்திக்க விரும்புகிறானா என்பது சந்தேகம்தான். ஒரு நாள் இரண்டு சிறுவர்களையும் அம்போ என்றுவிட்டுவிட்டு எல்லாரும் போய்விடுகிறார்கள். கதையே அவ்வளவுதான். குவியம், க்ளைமாக்ஸ், பஞ்ச் லைன் என்று எதுவும் கிடையாது. ஆனாலும் நல்ல படைப்புதான்.

குறை என்றால் இது என் மனதைத் தொடவில்லை. இதில் தெரிவது முழுக்க முழுக்க மோடியானோவின் திறமை. சிறுவனுக்கும் அவனைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது சரியாகப் புரிவதில்லை. அவன் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் நமக்கும் பாதிதான் புரிகிறது, ஆனால் சிறுவனின் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதால்தான் அப்படி பாதி புரியாமல் இருக்கிறது என்பதும் தெரிகிறது. மோடியானோவிடம் நல்ல craft இருக்கிறது, ஆனால் அது என்னைப் பொறுத்த வரை கலையாக மிளிரவில்லை. அசோகமித்ரனின் பல கதைகள் இதை விட எனக்கு பல மடங்கு உயர்வானவை.

Flowers of Ruin-இல் அதே பையன். அவனது பதின்ம வயது அனுபவங்களும் தற்போதைய அனுபவங்களும் மாற்றி மாற்றி விவரிக்கப்படுகின்றன. 1930களில் மர்மமாக இறந்து போன ஒரு கணவன்-மனைவியைப் பற்றி ஆராய்கிறான். இதிலும் கதை முக்கியமே இல்லை.

Afterimage இன்னும் சுத்தம். கதையின் வாடை கூட கிடையாது. ஒரு புகைப்படக் கலைஞனிடம் நட்பு கொள்ளும் இளைஞன். இதை எல்லாம் விவரிப்பது ரொம்ப கஷ்டம்.

மோடியானோ நல்ல எழுத்தாளர்தான். ஆனால் அவரும் லா.ச.ரா. போன்று ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறாரா என்று தெரியவில்லை. ஒப்பிட்டுப் பார்த்தால் இவரை விட நோபல் பரிசுக்குத் தகுதி உள்ளவர்கள் என்று பத்து தமிழ் எழுத்தாளர்களையாவது சொல்லலாம் என்பது கொஞ்சம் உறுத்துகிறது.

Suspended Sentences தொகுப்பை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இது தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மட்டும்தான். விறுவிறுப்பு, கதை என்று ஒன்று இருக்க வேண்டியது இதெல்லாம் உங்களுக்கு அவசியம் என்றால் நீங்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
மோடியானோ பற்றிய விக்கி குறிப்பு
மோடியானோவின் நோபல் உரை
மோடியானோவின் பின்புலம் பற்றிய ஒரு நல்ல பேட்டி/கட்டுரை

இலக்கியத்துக்கான நோபல் பரிசு (2014)

modiano2014 இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஃப்ரென்ச் எழுத்தாளர் பாட்ரிக் மோடியானோவுக்கு கிடைத்திருக்கிறது. நோபல் பரிசுக் குழு

The Nobel Prize in Literature 2014 was awarded to Patrick Modiano “for the art of memory with which he has evoked the most ungraspable human destinies and uncovered the life-world of the occupation

என்கிறது.

நான் மோடியானோவைப் பற்றி முன்னே பின்னே கேள்விப்பட்டதில்லை. யாராவது ஏதாவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்