பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..

மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.

குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.

ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!

திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.

வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.

திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.

திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.

ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.

மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.

முந்தைய பதிவிலிருந்து:

ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?

இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.

ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.

வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.

என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?

இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!

பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.

அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

பொன்னியின் செல்வன்

ஒரு வழியாக பொ.செ. திரைப்படமாக வந்துவிட்டது. அதனால் புத்தகம் பற்றிய என் பதிவை மீள்பதித்திருக்கிறேன். மூலப்பதிவு இங்கே

பதின்ம வயதில் நடிக நடிகையர்களுக்கு எங்கள் தேர்வு:

ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலும் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

இன்று விக்ரம் ஆதித்தகரிகாலன்; ஜெயம் ரவி அருண்மொழிவர்மன்; கார்த்தி வந்தியத்தேவன்; பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்; ஜெயராம் ஆழ்வார்க்கடியான்… பிரகாஷ் ராஜ் சுந்தர சோழன். ஐஸ்வர்யா ராய் மந்தாகினி/நந்தினி; த் ரிஷா குந்தவை; பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர்; கிஷோர் ரவிதாசன்… பொருத்தமாகத்தான் இருக்கும், ஆனால் பிரகாஷ் ராஜ் பெரிய பழுவேட்டரையராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ? என் கண்ணில் சுந்தர சோழன் ஒரு filler, மொக்கை ரோல். அதுவும் பிரகாஷ் ராஜ் எப்படி மந்தாகினி/நந்தினியைப் பார்த்து துடிப்பார் என்று இப்போதே கண்ணில் தெரிகிறது. அவருக்கு கொஞ்சம் meatier பாத்திரமான பெரிய பழுவேட்டரையர் ரோலைக் கொடுத்திருக்கலாமோ? திரைப்படத்தைப் பார்க்காமல் சொல்லக் கூடாதுதான், ஆனால் அருண்மொழிக்கு ஜெயம் ரவியைப் பற்றி எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது…

கதையிலிருந்து மாற்றிவிட்டார்கள் என்று சில விமர்சனங்களைப் பார்க்கிறேன். வந்தியத்தேவன் தற்செயலாக கடம்பூர் மாளிகையில் சதி நடக்கிறதா என்று கண்டுபிடித்தானா இல்லை அதை உளவறியத்தான் அனுப்பப்பட்டானா என்பதெல்லாம் கதையின் போக்கை மாற்றுவதில்லை. இதைப் போன்ற சின்ன சின்ன கதையின் போக்கை மாற்றாத மாற்றங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உதாரணமாக ராஷ்டிரகூடர்களோடு சண்டையைக் காட்டுவதில் என்ன பிரச்சினை? பிரம்மாண்டப்படுத்துவதற்காக சேர்த்திருப்பார்கள். நொட்டை சொல்பவர்கள் நாவலை உள்வாங்கிக் கொண்டார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைப்படத்தை நான் கட்டாயமாகப் பார்ப்பேன். எல்லாரும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். தமிழ் நாவல்களுக்கு மார்க்கெட் அதிகரிக்க வேண்டுமென்றால் இந்த மாதிரிப் படங்கள் வெற்றி பெற வேண்டும். இது வென்றால் அடுத்தபடி யவனராணியையும் கடல்புறாவையும் திரைப்படமாக்க யாராவது முன் வருவார்கள். இது தோல்வி அடைந்தால் அது இன்னும் பத்து வருஷம் தள்ளிப் போகும். இவையே தள்ளிப் போனால் அம்மா வந்தாளுக்கு இன்னும் இருபது வருஷம் ஆகும்!

பீடிகை போதும், பழைய பதிவு கீழே


பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். கல்கி பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.

இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.

ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.

பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.

வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு போய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.

பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.

இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலும் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். வாரப்பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த் உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.

இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.

ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.

பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.

வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டுபோய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.

பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.

இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலௌம் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.

நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.

பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.

அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.

14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

மூன்று வருஷங்களுக்கு முன் – என் டாப் டென் தமிழ் நாவல்கள், தமிழ் எழுத்தாளர்கள்

மூன்று வருஷங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு பதிவு சமீபத்தில் கண்ணில் பட்டது. சுஜாதாவையும், பாலகுமாரனையும், கல்கியையும் அப்போது தி.ஜா.வுக்கும் அழகிரிசாமிக்கும் மேலாக மதிப்பிட்டிருந்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

கல்கியின் பேரைச் சொல்லப் போகும் ஒரே புத்தகம் பொன்னியின் செல்வன். அதுவும் இப்போது எனக்கு மூன்றாம் படியில் இருக்கும் இலக்கியமே. இதை எழுதும்போது எனக்கு எக்கச்சக்க நாஸ்டால்ஜியாவாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று வார காலகட்டத்தில் பாலகுமாரனின் ஆறேழு சிறந்த புத்தகங்களைப் – பந்தயப்புறா, ஆனந்த வயல், கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், அகல்யா என்று சில – படித்த நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் எழுதப்பட்ட பதிவாக இருக்க வேண்டும். 🙂 இப்போது நன்றாகவே தெரிகிறது – பாலகுமாரன் அழகிரிசாமி, தி.ஜா. அருகே நிற்கக் கூட முடியாது.

சுஜாதா நிற்கலாம். 🙂 இந்த லிஸ்டைப் போடும்போது சுஜாதா சொதப்பிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை – இல்லை, இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும். வாரப் பத்திரிகை எழுத்துகளில் சுஜாதாவின் தரம் மிகவும் உயர்ந்தது, அதனால் அவரது குறைகள் ரெஜிஸ்டர் ஆகவே இல்லை. மீண்டும் அவர் புத்தகங்களை புரட்டும்போதுதான் குற்றம் குறை எல்லாம் தெரிகிறது. சில சமயம் எழுத்தின் தரம் மட்டும் இல்லை, அதன் தாக்கமும் இந்த மாதிரி லிஸ்ட்களில் இடம் பெற ஒரு முக்கியமான காரணி. அப்படித்தான் சுஜாதா has sneaked in. இன்றும் டாப் டென் என்று ஒரு லிஸ்ட் போட்டால் சுஜாதா எப்படியாவது முண்டியடித்து உள்ளே வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

மேலும் இந்தப் பதிவை எழுதும்போது நான் காடு, வாசவேஸ்வரம், ஆழிசூழ் உலகு, பொய்த்தேவு மாதிரி பல புத்தகங்களைப் படிக்கவில்லை. இன்று டாப் டென் நிறைய மாறி இருக்கும். இன்றளவு படிக்காதபோதே பத்துக்குள் அடக்கமுடியவில்லை என்றால் இன்று மிகவும் கஷ்டம், அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. என் ரசனை கொஞ்சம் முன்னேறி, சரி வேண்டாம் மாறி இருப்பதற்கு ஜெயமோகனின் பழக்கம், பரிந்துரைகள், அவர் இங்கு வந்தபோது பரிச்சயமான நண்பர்கள் ஒரு முக்கிய காரணம். அவரது பரிந்துரைகள், விளக்கங்கள் பல புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தன (ஆழிசூழ் உலகு…), சில புத்தகங்களை மீண்டும் படிக்க வைத்தன (பதினெட்டாம் அட்சக் கோடு…) அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்வதில் அர்த்தமில்லை; இருந்தாலும் நன்றி!

Curiosity value-வுக்காக மீள்பதித்திருக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

  1. பின் தொடரும் நிழலின் குரல்
  2. விஷ்ணுபுரம்
  3. பொன்னியின் செல்வன்
  4. என் பெயர் ராமசேஷன்
  5. கரைந்த நிழல்கள்
  6. சாயாவனம்
  7. கோபல்ல கிராமம்
  8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
  9. வெக்கை
  10. ஜேஜே சில குறிப்புகள்
  11. மோகமுள்

எனக்குப் பிடித்த டாப் டென் ஆசிரியர்கள்: (வரிசைப்படி அல்ல)

  1. ஜெயமோகன்
  2. சுந்தர ராமசாமி
  3. புதுமைப்பித்தன்
  4. அசோகமித்ரன்
  5. கல்கி
  6. சுஜாதா
  7. பாலகுமாரன்
  8. தி. ஜானகிராமன்
  9. கி. ராஜநாராயணன்
  10. கு. அழகிரிசாமி
  11. பூமணி
  12. சா. கந்தசாமி

எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. 🙂 ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.

ஜெயகாந்தனை இந்த லிஸ்டில் புகுத்த முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

தமிழில் சரித்திர நாவல்கள்

நாலாம் வகுப்பில் தெரியாத்தனமாக மரியசூசை சாரிடம் “பாபரின் பேரன் அக்பராக இருந்தால் என்ன, அக்பரின் பேரன் பாபராக இருந்தால் என்ன, இதை எல்லாம் தெரிந்து கொள்வதில் வாழ்க்கைக்கு ஏதாவது பயன் உண்டா?” என்று கேட்டுவிட்டேன். வாத்தியார் வீட்டுப் பிள்ளையே இப்படி கேள்வி கேக்குதே, அய்யர் வீட்டுப் பிள்ளைங்கதான் படிப்பாங்க, நீயே இப்படி கேக்கறியே என்றெல்லாம் மூச்சு விடாமல் திட்டினார். நல்ல வேளை, அப்பா அம்மாவிடம் போட்டுக் கொடுக்கவில்லை.

ஆனால் எனக்கு உண்மையிலேயே அந்த சந்தேகம் இருந்தது. அப்போதுதான் சாண்டில்யன் புத்தகங்களை எல்லாம் படிக்க ஆரம்பித்திருந்தேன். சும்மா கதைப்புத்தகம் மாதிரி படிக்க வேண்டியவற்றை எதற்காக கஷ்டப்பட்டு உருப்போட்டு பரீட்சை எழுதி அவஸ்தைப்பட வேண்டும் என்று அப்போது புரியவில்லை. இப்போதும் புரியவில்லை. உண்மையில் சாண்டில்யன் நாவல்களில் படித்த சரித்திரம்தான் இன்னும் நினைவிருக்கிறது.

அநேகம் பேர் என் போல்தான் என்று நினைக்கிறேன். ஏதோ படித்தோம், அசோகர் சாலையின் இரு புறமும் மரங்களை நட்டார், அதற்கப்புறம் வந்த ஏதோ ஒரு குப்தர் அந்த மரங்களை பிடுங்கிப் போட்டுவிட்டு வேறு மரங்களை அதே சாலையின் இரு புறமும் நட்டார், அசோகர் வெட்டிய குளங்களை தூர் வாரினார் என்று பரீட்சையில் எழுதினோம், பாசானோம், பத்தாவது முடிந்த பிறகு மறந்துவிட்டோம் என்று இருப்பவர்கள்தான். எங்களுக்கெல்லாம் நல்ல சரித்திர நாவல் என்றால் என்ன? அதற்கும் நல்ல சமூக நாவலுக்கும் என்ன வித்தியாசம்?

எனக்கு (வழக்கம் போல) ரொம்ப சிம்பிளான definition-தான். சரித்திர நாவல் என்றாலும் ஒரு நல்ல நாவலுக்குண்டான எல்லா லட்சணங்களும் இருக்க வேண்டும். அது ஒரு காலகட்டத்தை, அன்றைய உலகத்தை காட்ட வேண்டும். என்றைக்கும் இருக்கக் கூடிய மனித இயல்பை, உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை, பிரச்சினைகளை, அன்றைய காலகட்டத்தின் வார்ப்புருவில், அன்றைய பிரச்சினைகளை வைத்து காட்ட வேண்டும். சிந்திக்க வைக்க வேண்டும். நல்ல பாத்திரப் படைப்பு இருக்க வேண்டும். சுவாரசியம் இருக்க வேண்டும், அலுப்புத் தட்டக் கூடாது. அப்படி இல்லாவிட்டால் அது ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தாலும் சரி, கருனாநிதிச் சோழன் காலத்தில் இருந்தாலும் சரி, எனக்குத் தேறப்போவதில்லை.

என்றாலும் அதன் களம் ஒரு நூறு வருஷம் முன்னாலாவது இருக்க வேண்டும். நூறு வருஷம் முன்னால் என்றால் ஒரு சம்பவத்தின் பரபரப்பு அடங்கி இருக்கும். அதைப் பற்றி விருப்பு வெறுப்பின்றி எழுதுவது கொஞ்சம் சுலபம். ருக்மிணி தேவி என்ற இளம் இந்தியப் பெண் அருண்டேல் என்ற வெள்ளைக்காரரை மணந்ததை எதிர்த்து அன்றைக்கு பக்கம் பக்கமாக வ.உ.சி. உட்பட்ட பலர் எழுதித் தள்ளினார்கள். அதில் எவ்வளவு xenophobia, எவ்வளவு தேசபக்தி என்று இன்றைக்கு ஆய்வு மனப்பான்மையோடு எழுதுவது கொஞ்சம் சுலபம். புலிகேசி மகேந்திரவர்மனை வென்றதாகவும், மகேந்திரவர்மன் புலிகேசியை வென்றதாகவும் – இரண்டு விதமாகவும் – கல்வெட்டு இருக்கிறதாம். இந்த முரணை வைத்து மகேந்திரவர்மன் காலத்தில் எழுதினால் தலை போய்விடலாம். இன்றைக்கு ஆய்வு செய்து எழுத முடியும்.

தமிழில் அப்படி நல்ல சரித்திர நாவல் என்று இருப்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதற்கு கல்கி ஒரு முக்கிய காரணம்.

1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல். தொடர்கதையாக வந்தது. சமீபத்தில் மீண்டும் படித்தேன், திரைப்படமும் பார்த்தேன். வாண்டு மாமா லெவலில் உள்ள நாவல். ரோமியோ ஜூலியட் மாதிரி ஒரு காதல் ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்த நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாசகர்கள் விரும்பிப் படித்திருக்க வேண்டும். யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கி அதை சுவாரசியமாகத்தான் எழுதி இருக்கிறார். அவரது சரளமான நடை நிச்சயமாக உதவி இருக்கும். பத்திரிகை பலம் அவருக்கு அப்போது பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கி இருக்க வேண்டும். கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். அன்றைக்கு அது ஒரு பெரும் சாதனையே. ஒரு கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் என்று அவர் எழுதியதை இன்றும் எட்டு ஒன்பது வயதில் படித்தால் சுவையாகத்தான் இருக்கும். ஒரு முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, ஏனென்றால் அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட்டும்தான்.

கல்கி கோடு போட்டார், ரோடு போட இன்னும் யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்னும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது. சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.கல்கி போட்ட கோட்டிலேயேதான் அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். சரித்திரக் கதைகளில் இருக்கும் எத்தனையோ possibilities பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. உதாரணமாக ராஜராஜ சோழன் பெரிய போர்களில் ஈடுபட்டான். ஆயுதம் தயாரிக்க வேண்டிய இரும்பு எங்கிருந்து கிடைத்தது? ஆழ்வார்க்கடியான் வைஷ்ணவப் பிராமணன். ஜாதி ஆசாரம் மிகுந்திருந்த அந்தக் காலத்தில் அவன் சாப்பாட்டுக்கு என்ன செய்தான்? தில்லியிலிருந்து அஹமத் நகர் வர அன்றைக்கு இரண்டு மூன்று மாதம் ஆகி இருக்கும். இன்னும் கொஞ்சம் படை வேண்டும் என்றால் அஹமத் நகரில் இருப்பவன் என்ன செய்வான்? கபீரின் சூஃபியிசம் அன்றைய ஜாதி கட்டுப்பாடுகளை தாக்கி இருக்கும். இதை டில்லி சுல்தான்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? இதை எல்லாம் வைத்து அருமையான கதைகள் எழுதலாம். ஆனால் இங்கே கதாபாத்திரங்களின் பிரச்சினைகள் எப்போதுமே அரண்மனைச் சதிகள்தான்.

கல்கி அடுத்தபடி சிவகாமியின் சபதம் எழுதினார். அதில் மெலோட்ராமா அதிகம். ஆனால் பாத்திரப் படைப்பு, கதையின் சுவாரசியம் எல்லாம் உயர்ந்திருக்கின்றன. நாகநந்தி கொஞ்சம் அதீதம்தான், ஆனால் எல்லா பாத்திரங்களிலும் நம்பகத்தன்மை அதிகம். கார்ட்போர்ட் கட்அவுட் மாதிரி இல்லை. ஆயனருக்கு அரண்மனையை தாண்டி அஜந்தா ஓவியங்களைப் பற்றி கவலைப்பட முடிந்தது. தமிழின் சிறந்த சரித்திர நாவல்களில் ஒன்று. ஒரு விதத்தில் பராசக்தி திரைப்படம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். மெலோட்ராமாதான், ஆனால் நிச்சயமாக பாருங்கள் என்று சிபாரிசு செய்வேன்.

அவரது சாதனை அடுத்து வந்த பொன்னியின் செல்வன்தான். இதை விட சிறந்த கதைப் பின்னலை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். கதாபாத்திரங்கள் மிகவும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நந்தினி அதீதமான பாத்திரம்தான், ஆனாலும் நம்பகத்தன்மை இருக்கிறது. கட்டுக்கோப்பான கதை, பெருமிதம், அருமையான பாத்திரங்கள், கதை முடிச்சுகள், சுவாரசியம், எல்லாம் உண்டு. அரண்மனைச் சதிகள் என்ற genre -இல் இதை விட சிறந்த புத்தகம் இன்னும் வரவில்லை. (எனக்குத் தெரிந்து) ஒரு டூமாவை விட, ஒரு ஸ்காட்டை விட பல மடங்கு சிறந்த நாவல். லே மிசராபில்ஸ் நாவலின் கதைப் பின்னலை இதனுடன் ஒப்பிடலாம். ஆனால் ஹ்யூகோ அந்தக் கதைப் பின்னலின் மூலம் மனித மனதின் உச்சங்களை எல்லாம் காட்டுகிறார், கல்கி அந்தப் பக்கம் போவதே இல்லை. இருந்தாலும் இது இலக்கியமே. மொழிபெயர்க்கப்பட வேண்டிய நாவலே.

தமிழின் சிறந்த சரித்திர நாவல் ஆசிரியர் கல்கியே. அவரது பாணியின் உச்சம் பொன்னியின் செல்வன். அதன் கதைப்பின்னல் மூலம் அது இலக்கியம் என்ற ஸ்தானத்தை அடைகிறது. அடுத்து வந்தவர்கள் பொ. செல்வன் அளவுக்கு இன்னும் போகவில்லை. சி. சபதம் அளவுக்குப் போனவர்களே அபூர்வம்.

ஜெயமோகன் பொ. செல்வன், சி. சபதம் இரண்டையும் தன் historical romances முதல் பட்டியலிலும் பா. கனவை இரண்டாம் பட்டியலிலும் சேர்க்கிறார். எஸ்.ரா. என் கட்சி போலிருக்கிறது. அவருக்கு பொ. செல்வன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று.

ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா பொ. செல்வனை ஆடியோ வடிவத்தில் இங்கே பதிவு செய்து கொண்டிருக்கிறார். மூன்று நாவல்களுமே சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கக் கிடைக்கிறது.

கல்கி ஒரு முன்னோடி, அவரைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்லலாமா என்றும் தோன்றுகிறது. கல்கியின் பாணியை எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு பேர்தான் தாண்டி இருக்கிறார்கள். ஒருவர் பிரபஞ்சன். இன்னொருவர் பாலகுமாரன். முதலில் கல்கி பாணி எழுத்தாளர்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டு அவர்களைப் பற்றி ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன். ஏற்கனவே பதிவு ரொம்ப நீளமாகிவிட்டது, பகுதி பகுதியாகத்தான் எழுத வேண்டும்.

தொடரும்…

பொன்னியின் செல்வன்

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் முக்கால்வாசி தமிழர்களுக்குத் தெரிந்தவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர். அவரது ப்ரோக்ராமை வளைகுடா பகுதித் தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதிருந்தும் கேட்பவர்கள் உண்டு.

ஸ்ரீனிவாசா கல்கி ரசிகரும் கூட. இப்போது பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஆடியோ வடிவில் இன்டர்நெட்டில் பதிவு செய்து கொண்டிருக்கிறார். முதல் இரண்டு பாகம் முடிந்துவிட்டது, மூன்றாவது பாகத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறார். தமிழ் படிக்கத் தெரியாத இரண்டாம் தலைமுறை தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பதின்ம வயதினரை கேட்கச் சொல்லலாம். ஐபாடில் டவுன்லோட் செய்து காரில் போகும்போது கேட்கலாம். எல்லா விதத்திலும் சவுகரியம்!

ஏன் படிக்கிறேன்?

(மீள்பதிவு)

இந்தப் பதிவு 2010 செப்டம்பரில் முதல் முறையாக எழுதப்பட்டது. இந்தத் தளத்தின் முதல் பதிவு இதுதான். எழுதியபோது அப்போது வந்துகொண்டிருந்த யூத்ஃபுல் விகடனில் நல்ல பதிவாக குறிப்பிட்டிருந்தார்கள். பாஸ்கர், கிரி இரண்டு பேரும் தங்கள் காரணங்களை எழுதினார்கள். ஜெயமோகன் இதைப் பற்றிய என் கடிதத்தைப் பிரசுரித்திருந்தார்.

இன்று மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் சோகமாக இருக்கிறது. ஏனென்றால் இத்தனை வருஷங்கள் கடந்தும் எனக்கு வேறு காரணங்கள் இல்லை, இந்தப் பதிவு அப்படியே பொருந்துகிறது. தேக்க நிலையோ என்று தோன்றுகிறது.

இன்றும் அதே வேண்டுகோள்தான். இந்தப் பதிவைப் படிப்பவர்கள் தாங்கள் ஏன் படிக்கிறார்கள் – குறிப்பாக புனைவுகளை ஏன் படிக்கிறார்கள் – என்று சொல்லுங்களேன்!

எனக்கு கொஞ்ச நாளாகவே இந்த கேள்வி இருக்கிறது. எதற்காக படிக்கிறோம், குறிப்பாக புனைகதைகளை எதற்காக படிக்கிறோம்?

கதை கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் நம் ரத்தத்திலேயே ஊறி வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அம்மாவும் பாட்டியும் தூங்க வைக்க சொன்ன கதைகளும், காலட்சேபமும், தெருக்கூத்தும், சினிமாவும், படித்த புத்தகங்களும், தன்னை எம்ஜிஆராகவும் ஜெய்ஷங்கராகவும் நினைத்து கண்ட பகல் கனவுகளும் கதைதானே! அதில் ஒரு சந்தோஷம், நிறைவு! அந்த சந்தோஷத்தை என்னால் லாஜிகலாக விளக்க முடியவில்லை. ஆனால் எப்போது அந்த நிறைவு கிடைக்கிறது, அந்த நிறைவுக்கு என்ன அறிகுறி என்றாவது சொல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

அறிகுறி என்றால் இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று செக் செய்கிறேனா இல்லையா என்பதுதான். இன்று ஒரு கதையை கேட்கும்/பார்க்கும்/படிக்கும்போது அந்த கதையை நம்முடைய மன அலமாரியில் எங்கே பொருத்தலாம், சிறந்த புத்தக வரிசையிலா, டைம் பாஸ் வரிசையிலா, இல்லை குப்பையா என்று மனதில் எண்ணங்கள் ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. ஒரு புத்தகத்தை படிக்கும்போது இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று புரட்டி கடைசி பக்கத்தின் எண்ணைப பார்த்தால் எண்ண ஓட்டங்கள் மறையவில்லை என்று நிச்சயமாக சொல்லலாம். இப்படி எத்தனை பக்கம் இன்னும் இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு அனேகமாக எல்லா துப்பறியும் கதைகளிலும் நடக்கும், சில சமயம் க்ளைமாக்சை முதலில் படித்துவிடுவேன். 🙂 அப்படி எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் படிப்பதிலோ, பார்ப்பதிலோ மனம் முழுமையாக ஆழ்ந்தால் படிப்பது சிறந்த புத்தகம், பார்ப்பது சிறந்த சினிமா. அப்படி முழுமையாக மனம் ஆழ்வது என்பது மேலும் மேலும் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் புத்தகங்கள் படிக்கும்போது அப்படி நடந்தது. ஏழாவது உலகம், விஷ்ணுபுரம், பொய்த்தேவு மாதிரி புத்தகங்கள் படிக்கும்போது வேறு எண்ணம் வரவில்லை. ஆனால் இதய நாதம் மாதிரி ஒரு புத்தகம் படிக்கும்போது எண்ண ஓட்டங்கள் மறைவதில்லை. இப்போதெல்லாம் முக்கால்வாசி புத்தகங்களில் கடைசி பக்க எண்ணை பார்ப்பது நிகழ்கிறது.

மிச்ச கால்வாசி புத்தகங்களுக்காகத்தான் படிக்கிறேன். அந்த கால்வாசி புத்தகங்களின் குணாதிசயங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்தால்:

  • மனிதனின் உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை உண்மையாக காட்டும்போது

அந்த நிலையை – அன்பு, பாசம், நட்பு, நேர்மை, உண்மை என்ற உயர்ந்த நிலையாகட்டும், இல்லை குரூரம், சுயநலம், வெட்டி பந்தா, கயமைத்தனம், போலித்தனம் மாதிரி தாழ்ந்த நிலையாகட்டும் – அதை உண்மையாக சித்தரிக்கும்போது பெரும் மன எழுச்சியோ, இல்லை சீ, மனிதன் இவ்வளவுதானா என்ற வெறுப்போ எழுகிறது. அந்த அன்பும் பாசமும் குரூரமும் சுயநலமும் நம்முள்ளும் இருக்கிறது என்ற உண்மையும் தெரிகிறது. To Kill a Mockingbird படிக்கும்போது என் குழந்தைகளுக்கும் எனக்கும் அட்டிகசுக்கும் ஸ்கவுட்டுக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும் என்று தோன்றியது. (படித்து பத்து வருஷத்துக்கு பிறகுதான் என் முதல் பெண் பிறந்தாள்.) அப்போதெல்லாம் நண்பர்கள் யார் கர்ப்பமானாலும் அவர்களுக்கு இந்த புத்தகத்தை வாங்கி பரிசளிப்பேன். உதாரணமாக மோக முள், பின் தொடரும் நிழலின் குரல், Les Miserables போன்ற புத்தகங்களை படிக்கும்போது இப்படி உணர்ந்தேன்.

  • சிந்திக்க வைக்கும்போது

புனைகதைகளுக்கு சிந்திக்க வைக்கும் ஆற்றல் அதிகம். கற்பு, பெண்ணியம் என்று பக்கம் பக்கமாக எழுதலாம். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற ஒரு வரி கற்பு என்ற கருத்தில் இருக்கும் செயற்கைத்தன்மையை காட்டிவிடுகிறது. சீதையின் அக்னி பிரவேசத்தைப் பற்றி கேட்ட அகலிகை மீண்டும் கல்லானாள் என்ற நாலு பக்க கதை ஆயிரம் ஆயிரம் வருஷமாக வழிப்படப்படும் ராமனின் முரண்பாட்டை காட்டிவிடுகிறது. Atlas Shrugged-இல் ஃபிரான்சிஸ்கோ டன்கொனியா money is the root of all evil என்ற கருத்தைப் பற்றி ஆற்றும் ஒரு மூன்று பக்க “சொற்பொழிவு” பணக்காரன் என்றால் கெட்டவன் என்றே கேட்டு வளர்ந்த என்னை வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது. All Quite on the Western Front நாவல் போர் என்றால் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பங்களாதேஷ் கொண்டாள் மாதிரி ஹீரோக்களுக்கான, வீரம் செறிந்த ஒரு நிகழ்வு என்று நினைத்திருந்த எனக்கு போரின் dehumanization பற்றி புரிய வைத்தது.
ஆனால் இவற்றுக்கு ஒரு குறை உண்டு. பொன்னகரம் கதை கற்பைப் பற்றி பெரிதாக கவலைப்படாத ஒரு சமூகத்திடம் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்? அவர்களுக்கு நளாயினி கதையோ, சீதையின் கதையோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். (அப்படித்தான் இந்திய பழங்குடி சமூகங்களிடம் நடந்திருக்க வேண்டும் என்பது என் தியரி.) உங்களுக்கு போதிக்கப்பட்ட, நீங்கள் கற்ற சிந்தனைகளை தாண்டும் கதைகள் உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாரிடமும் ஏற்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
சில science fiction கதைகள் இந்த குறைபாட்டை தாண்டுகின்றன. அவற்றில் மனித இனத்தின் அடிப்படை கொஞ்சம் மாற்றப்படுகிறது. உதாரணமாக உர்சுலா லீ க்வினின் sexuality பற்றிய விஞ்ஞானக் கதைகள் – ஒரு கதையில் மனித இனத்துக்கும் ஒரு mating season உண்டு. அப்போது கிடைக்கும் stimuli-ஐ வைத்து நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ மாறலாம். சீசன் முடிந்த பிறகு நீங்கள் “பழைய நிலைக்கு” திரும்பிவிடுவீர்கள். இப்படி ஒன்று நடந்தால் மனித சமூகம் – குடும்பம், உறவுகள், காதல், கத்தரிக்காய் – எல்லாம் என்ன ஆகும்?

  • ஒரு புதிய உலகம் என் கண்ணால் முன்னால் விரியும்போது

மகாபாரதம், விஷ்ணுபுரம், ஹாரி பாட்டர், Lord  of  the  Rings, மோக முள், Atlas  Shrugged, One Hundred Years of Solitude, To Kill a Mockingbird மாதிரி புத்தகங்களை குறிப்பிடலாம். அந்த உலகத்தின் எழுதப்படாத விதிகள், அவர்கள் மனநிலை புரியும்போது, அதை ஒரு சித்திரமாக எழுத்தாளன் தீட்டும்போது, அதில் முழுமையாக ஆழ்ந்துவிடுகிறேன்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் – செயின்ட் எக்ஸுப்பரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த ஒரு tribal தலைவன் நீர்வீழ்ச்சி ஒன்றை பார்க்கும் அனுபவத்தை எழுதுகிறார் – அந்த தலைவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தானாம் – “I can’t understand this!” பாலைவனம், தண்ணீர் தட்டுப்பாடு என்பதை இதை விட அழகாக சொல்ல முடியாது. ஒரு வாக்கியத்தில் அந்த tribe-க்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துவிடுகிறது.
நுண்விவரங்கள் நிரம்பி இருந்தால் மீண்டும் மீண்டும் படிக்கவும் தோன்றுகிறது, ஒவ்வொரு முறை படிக்கும்போது மிஸ் செய்துவிட்ட நுண்விவரங்கள் தெரிகின்றன. ஹாரி பாட்டரில் கதையை விட, அதில் மாஜிகல் வாழ்க்கை முறையை காட்டும் விஷயங்கள் – நகரும் புகைப்படங்கள்+ஓவியங்கள், க்விட்டிச் விளையாட்டு, Marauder’s map, மாஜிக் செய்தித்தாள்கள், மாஜிக் tabloids – எல்லாம் சுவாரசியத்தை கூட்டுகின்றன.
இதில் ஒரு sub-category உண்டு. ஒரு தருணத்தை புகைப்படம் மாதிரி அருமையாக capture செய்யும் கதைகள். அசோகமித்ரன் இதில் நிபுணர். காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அந்த ஒரு நொடி பற்றிய ஒரு கதை என்று நிறைய சொல்லலாம்.

  • முடிச்சுகள் பர்ஃபெக்டாக அவிழும்போது

இது ஒரு கலை. பொன்னியின் செல்வன் மிக சிறந்த உதாரணம். பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில அகதா கிறிஸ்டி நாவல்களை சொல்லலாம்.

  • வாய் விட்டு சிரிக்கும்போது

வாய்விட்டு சிரிப்பது அபூர்வமாகிக் கொண்டே போகிறது. சாகியின் Open Window நினைவு வருகிறது. ஒரு காலத்தில் வுட்ஹவுஸ் எழுத்துகளைப் படித்துவிட்டு ரயிலிலும் பஸ் ஸ்டாண்டிலும் சிரித்துவிட்டு பிறகு எல்லாரும் என்னை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்து தலை குனிந்து படித்திருக்கிறேன். இப்போது வுட்ஹவுசைப் படித்தால் புன்முறுவல் வருவதே அபூர்வமாக இருக்கிறது.

  • சிறு வயதில் இருந்த ஒரு காரணம் இப்போது இல்லை. பகல் கனவு!

பகல் கனவு சந்தோஷம் தர காரணம் சிம்பிள். It strokes the ego. செயற்கரிய செயல் செய்வதாக fantasize செய்யும்போது ஒரு அற்ப பெருமை. ஆனால் பகல் கனவு என்பதெல்லாம் சின்ன வயதிலேயே போய்விட்டது. அதாவது சின்ன வயதில் இருந்த ஒரு காரணம் காலி.

உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். படிப்பதற்கு இன்னொரு prosaic காரணமும் இருக்கிறது. நிறைவு/சந்தோஷம் மட்டுமில்லை, பழக்கமும் மிக முக்கியமான காரணம் மனதும் கையும் பல சமயங்களில் அனிச்சையாக புத்தகத்தை நாடுகின்றன. சின்ன வயதில் வேர்க்கடலை சுற்றி வந்த பேப்பரை எல்லாம் கூட படிப்பேன். அப்போது எல்லா புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்ற ஒரு வெறி இருந்தது. பதின்ம வயதில் கணிசமான நேரத்தை என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்று லிஸ்ட் போடுவதில் செலவழித்தேன். முதல் முறையாக எங்கள் கிராம நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் கூட படிக்க முடியாது என்று ஒன்பது, பத்து வயதில் உணர்ந்தபோது ரொம்ப துக்கமாக இருந்தது. அப்போது ஆரம்பித்த பழக்கம் – சிலருக்கு சிகரெட் மாதிரி எனக்கு இது ஒரு addiction-தானோ என்று சில சமயம் தோன்றுகிறது.

எனக்கு இருக்கும் காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன காரணங்கள், என்னுடைய காரணிகளில் ஏதாவது உங்களுக்கும் பொருந்துமா என்று எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வாசிப்பு அனுபவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
யூத்ஃபுல் விகடனில் “ஏன் படிக்கிறேன்” பதிவு குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
ஏன் படிக்கிறேன்? – பாஸ்கர், பாஸ்கரின் பதிவு பற்றி நான்