பூமணி: கொம்மை

எனக்கு மகாபாரதம் என்றால் பித்து. பூமணி என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். மகாபாரதத்தை அவரது கோணத்தில் எழுதி இருப்பதை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.

புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. பூமணி மகாபாரதத்தை கொஞ்சம் கொச்சையான பேச்சுமொழியில் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான். உதாரணமாக அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் அச்சு, கிச்சு, கருத்த மச்சான், கருவாயா என்று அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றே போதும் என்று பூமணி நினைத்துவிட்டார். நாளைக்கு பாரதத்தை சென்னைத் தமிழில் கூட எழுதலாம். “நீ சுபத்ரையை டாவு கட்டி இஸ்துக்கினு ஓட்று” என்று கிஷ்டன் அர்ச்சுனுக்கு அட்வைஸ் கொடுப்பதாக எழுதலாம். அதில் என்ன தரிசனம், கவித்துவம், நயம் இருக்கிறது? சில இடங்களில் அபூர்வமாக அந்த மொழியின் “பொருந்தாத்தன்மை” சின்னப் புன்னகையை வர வைக்கிறது, அத்தோடு சரி.

நாட்டார் இலக்கியப் பாணியில் எழுத முயற்சித்தாரோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த கொச்சையான பேச்சுமொழியை விட்டுவிட்டால்; பொன்னருவி கதையை இணைத்திருப்பது (கர்ணனை சூதன் என்று அவமானப்படுத்தும் மனைவி, புகழேந்திப் புலவர் இந்த நாட்டார் கதையை அம்மானையாக எழுதி இருக்கிறார் என்று நினைவு), விதுரனின் அம்மாவின் கணவன் அந்தப்புர காவலன், அதனால் காயடிக்கப்பட்டான் என்ற கற்பனை, இந்திரப்பிரஸ்தத்துக்கு வரும் இடும்பி-கடோத்கஜன் அவமானப்படுத்தப்படுவது என்ற கற்பனை, காந்தாரி சகுனியை உன் மாதிரி சகோதரன் இருந்து என்ன பயன் என்று திட்டும் இடம் என்று வெகு சில இடங்களில்தான் அது தெரிகிறது.

பூமணி இந்த நாவலை மகாபாரத நாயகிகளை, அவர்களது உணர்வுகளை முன்வைத்து எழுதினாராம். சில இடங்களில் – குறிப்பாக இடும்பி, பாஞ்சாலி-சுபத்திரை உறவு, காந்தாரியின் மன உளைச்சல் என்று இருந்தாலும் பொதுவாக இது மகாபாரதக் கதையை அப்படியேதான் திருப்பிச் சொல்கிறது. குந்தியையும் திரௌபதியையும் கதாநாயகிகள் என்று சொல்லலாம். திரௌபதி துகிலுரியப்படும்போது மீட்பது கிருஷ்ணன் அல்ல; தன்னைத் தானே மீட்டுக் கொள்கிறாள்!

விதுரன் யுதிஷ்டிரனின் தந்தை; திருதராஷ்டிரன் பீமனின் தந்தை என்ற கற்பனைகளை வேறு இடங்களில் படித்திருக்கலாம்; சகுனி நகுல-சகதேவனின் தந்தை என்ற என் கற்பனையையும் படித்திருந்தால் நூறாண்டு வாழ்க! ஆனால் கிருபர் அர்ஜுனனின் தந்தை என்ற கற்பனையை இங்கேதான் முதல் முறையாகப் படித்தேன். நானும் அப்படி யோசித்திருக்கிறேன், ஆனால் பாண்டவர்களை எரிக்கச் சென்று உபபாண்டவர்கள் படுகொலையில் பங்கு கொள்ளும் கிருபரை அர்ஜுனனின் தந்தையாக வைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை. தன் பேரனை தானே கொல்பவரா கிருபர்?

கொம்மை என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பினேன். நல்ல வேளையாக அவரே அதன் பல அர்த்தங்களை நாவலின் ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டார். கொம்மை என்றால் “திரண்ட”, “குமிழ் போன்ற” என்று பொருளாம். கொம்மை முலை என்றெல்லாம் வார்த்தை பிரயோகம் உண்டாம். ஒரு வேளை பெண்மையைக் குறிக்கும் விதமாக கொம்மை என்று பேர் வைத்தாரோ என்னவோ.

தீவிர மகாபாரதப் பிரியர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைப்பேன்.

பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதிய பிறகு நண்பர் ரெங்கசுப்ரமணி இதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்த்தேன். அவர், கேசவமணி, நான் மூவருக்கும் ஏறக்குறைய ஒரே அலைவரிசை. (கேசவமணி இப்போதெல்லாம் எழுதுவதை நிறுத்திவிட்டாரோ?) கொம்மையைப் பற்றி எனது கருத்துக்கள்தான் அவருக்கும்

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம், மகாபாரதப் பக்கம்

தொடர்புடைய சுட்டி: கொம்மை பற்றி ரெங்கா

அசுரன் – பாட்ஷாவின் மறுவடிவம்

என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா வகை பதிவு. அது சரி அவார்டா கொடுக்கறாங்க என்ற தளத்தில் பழைய சினிமாவுக்கு மட்டுமே இரண்டு மூன்று வருஷம் விமரிசனம் எழுதி இருக்கிறேனே! இந்தத் திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் மட்டுமே கழிந்திருக்கின்றன…

வெக்கை குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது என்று கேள்விப்பட்டதாலும், வெற்றிமாறன்+தனுஷ் திரைப்படம் என்பதாலும் நானும் என் மனைவியும் திரை அரங்கிலே போய்ப் பார்த்தோம்.

திரைப்படம், நாவல் இரண்டுக்குமான தளமே வேறு.

நாவலின் அடிநாதம் அன்பு, பாசம், பிரியம். அப்பாவுக்கும் மகனுக்கும் அண்ணனுக்கும் தம்பிக்கும் சித்தப்பாவுக்கும் மகனுக்கும் அத்தைக்கும் மருமகனுக்கும் பங்காளிகளுக்குள்ளும் சாதி சனத்துக்கும் இடையே இருக்கும் அழிந்து போகாத அன்பு. ஒரு வன்முறை சம்பவத்தை முன்னால் வைத்து அதன் பின்புலமாக அன்பை காட்டுவதுதான் பூமணியின் சாதனை.

திரைக்கதை பல காலமாக பார்த்த பாட்ஷா திரைப்படத்தின் உல்டாதான். பாட்ஷாவே ஒரு ஹிந்தி திரைப்படத்தின் – ஹம் – உல்டா. ஹம் திரைப்படமும் ஏதாவது திரைப்படத்தின் உல்டாவாகத்த்தான் இருக்க வேண்டும். நாயகன் பெரிய ஹீரோவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக வடிவமைக்கப்பட்ட திரைக்கதை. இதில் இயக்குனரின் சமூகப் பிரக்ஞை தெரியவேண்டும் என்பதற்காக கீழ்வெண்மணி, வெக்கை எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.

தனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் “மாஸ்” காட்டாமல், ஒரே ஆள் இருபது முப்பது பேரை அடிப்பதாகக் காட்டாமல், பூமணியின் கதையையே படமாக எடுத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தை தவிர்க்கமுடியவில்லை.

கொரோனா நேரம், நெட்ஃப்ளிக்சிலோ இல்லை அமேசான் ப்ரைமிலோ இருக்கும். கண்ட குப்பைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்(றேன்), இதை நிச்சயமாகப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

அசுரன் திரைப்படத்தின் அடிப்படை – பூமணியின் “வெக்கை”

(மீள்பதிப்பு)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் அசுரன் திரைப்படம் வெக்கையை அடிப்படையாகக் கொண்டதாம். அதனால்தான் இந்த மீள்பதிவு.

புத்தகம் தரும் அனுபவத்தை கெடுத்துவிடுவார்களோ என்று கொஞ்சம் பயம் இருந்தாலும், இந்த மாதிரி முயற்சிகளை வரவேற்கத்தான் வேண்டும். வெற்றிமாறனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெக்கை எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று.

ஒரு கொலையோடு ஆரம்பிக்கிறது கதை. ஒரு சிறுவன் தன அண்ணனைக் கொன்ற ஒருவனை போட்டுத் தள்ளுகிறான். அப்புறம் கதை பூராவும் அவனும் அவன் அப்பாவும் ஓடி ஒளிவது மட்டும்தான். கதையில் வேறு ஒன்றுமே கிடையாது.

ஆனால் கதை பூராவும் தெரிவது அன்பு. அப்பாவுக்கும் பையனுக்கும், பையனுக்கும் அண்ணனுக்கும், சித்திக்கும் பையனுக்கும், மற்ற உறவினர்களுக்கும் எல்லாருக்கும் இடையில் இருக்கும் பந்தம் மட்டுமே பெரிதாகத் தெரிகிறது. குடும்பம், சுற்றம், உறவினர்கள், பங்காளிகள், சாதி சனம் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவு; வாழ்க்கையின் தவிர்க்க முடியாத சமரசங்களின் ஊடாகவும் தெரியும் அன்பு. ஒரு கொலை, பழி வாங்குதலை foreground-இல் வைத்து அதில் அன்பை மட்டும் காட்டி இருப்பது பூமணியின் சாதனை.

சுவாரசியத்துக்கும் குறைவே இல்லை. கதை பூராவும் ஒளிந்து வாழும்போது என்ன சாப்பிடுகிறார்கள், என்ன சமைக்கிறார்கள் என்றுதான் – ஆனால் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாது.

தமிழின் சாதனைகளில் ஒன்று. இதை மொழிபெயர்ப்பது கஷ்டம், ஆனால் சரியானபடி மொழிபெயர்த்தால் உலகம் முழுதும் பேசப்படும்.

ஜெயமோகன் இந்த நாவலை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

பூமணி தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். தலித் எழுத்தாளர் என்று நினைக்கிறேன். அவருடைய தலித்தியம் பிரச்சார நெடி அடிக்காத தலித்தியம். அவருடைய பிறகு நாவல் இன்னொரு குறிப்பிட வேண்டிய படைப்பு. (எனக்கு வெக்கைதான் டாப்.)

கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம்

2017 பரிந்துரைகள்

2017-இல் நான் படித்தவற்றில், மீண்டும் படித்தவற்றில், நினைவு கூர்ந்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே.

தமிழ்:


ஆங்கிலம்:


கவிதைகள்:


காமிக்ஸ்:

  • அப்போஸ்டோலோஸ் டோக்சியாடிஸ்: Logicomix
  • ஆஸ்டரிக்ஸ் காமிக்ஸ்: Asterix and the Goths, Asterix the Gladiator, Asterix and the Banquet, Asterix the Legionary, Asterix and the Chieftain’s Shield, Asterix and the Olympic Games, Asterix and the Cauldron, Asterix and the Roman Agent, Asterix and the Laurel Wreath, Asterix and the Soothsayer, Obelix and Co., Asterix and the Golden Sickle, Asterix and Cleopatra, Asterix and the Big Fight, Asterix in Britain<, Mansions of the Gods, Asterix and the Caesar’s Gift, Asterix and the Great Crossing<, Asterix in Belgium, Asterix and the Great Divide, Asterix and the Black Gold
  • பில் வாட்டர்சன்: கால்வின் அண்ட் ஹாப்ஸ்
  • மதன் ஜோக்ஸ்

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

  1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
  2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
  3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
  4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
  5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
  6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
  7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
  8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
  9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
  10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
  11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
  12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
  13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
  14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
  15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
  16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
  17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
  18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
  19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

  1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
  2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
  3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
  4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

  1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

  1. ‘கவிதை’ – Jabberwocky
  2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

  1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
  2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
  3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
  4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
  5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
  6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
  7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பிடித்த சிறுகதை – பூமணியின் ‘ரீதி’

Poomaniஎன்று ‘வெக்கை‘ நாவலைப் படித்தேனோ அன்றிலிருந்தே பூமணி என் மனதில் சம்பிரமமாக உட்கார்ந்துவிட்டார். கிராமத்தின், ஜாதி பின்புலத்தை, நுண்விவரங்களோடு கதையோடு பிணைத்துவிடுவதில் அவர் கில்லாடி. அந்த கில்லாடித்தனம் வெளிப்படும் இன்னொரு பிரமாதமான சிறுகதை ரீதி. ‘புளிச்ச தண்ணி’ கூட கிடையாது என்று விரட்டிவிடும் அம்மா, படிக்கப் போன இடத்தில் சோறு இல்லாமல் திரும்பி வரும் அண்ணன், அணிலைத் தின்று ஒரு வேளையை ஓட்டும் சிறுவர்கள் என்று ஒரு பிரமாதமான ஓவியத்தையே தீட்டிவிடுகிறார்.

புரியாத விஷயம் ஒன்றுண்டு – அது என்ன தலைப்பு, ‘ரீதி’ என்று? தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பு?

எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் ரீதி இடம் பெறுகிறது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம்

பூமணிக்கு 2014 சாஹித்ய அகாடமி விருது

Poomaniஅஞ்ஞாடி” நாவலுக்காக பூமணிக்கு சாஹித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டுள்ளது. நாஞ்சில், ஜோ டி க்ரூஸ், பூமணி – பரவாயில்லையே, நல்ல எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்து தங்களை உயர்த்திக் கொண்டுள்ளார்கள். (இந்த முறை பரிந்துரைத்த குழுவில் இருந்தவர்கள் சிவசங்கரி, புவியரசு, ஈரோடு தமிழன்பன்.)

என்று “வெக்கை” நாவலைப் படித்தேனோ அன்று முதலே பூமணி என் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்தான். இன்றும் “வெக்கை”யைத்தான் நான் அவரது சிறந்த நாவலாக மதிப்பிடுகிறேன். – “பிறகு” நாவலை விட.

இது வரையில் தகுதி உள்ளவர்களுக்கே கொடுக்கப்பட்டு வரும் விஷ்ணுபுரம் விருது அவருக்கு 2012-ஆம் வருஷம் வழங்கப்பட்டிருக்கிறது.

“அஞ்ஞாடி”யை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நான் நல்ல வாசகர்கள் என்று எண்ணும் சிலர் அதைக் குறையுள்ள நாவலாகவே கருதுகிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறேன்.

என் கண்ணில் சாஹித்ய அகாடமி விருது, ஞானபீட விருது ஆகியவை முக்கியமானவை. நல்ல தமிழ் எழுத்தாளர்களை பிற மாநிலத்தவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வார்கள்? எனக்குத் தெரிந்த பிற இந்திய மொழி எழுத்தாளர்கள் அனேகமாக இப்படி ஏதாவது விருது பெற்றவர்களே. அதனால் பூமணி போன்றவர்கள் விருது பெறும்போது நான் உண்மையிலேயே பூரிக்கிறேன். அகிலனுக்கு ஞானபீடம் என்றால் தலை குனிய வேண்டியிருக்கிறது.

விருது பெற்றவர்களின் முழு பட்டியலை இங்கு காணலாம்.

ஆயிஷா புகழ் இரா. நடராசனுக்கு “விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் புத்தகத்துக்காக பால புரஸ்கார் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. யுவ புரஸ்கார் விருது ஆர். அபிலாஷுக்கு “கால்கள்” என்ற புத்தகத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் இமையம் இந்தப் புத்தகத்தைப் பற்றி இங்கே எழுதி இருக்கிறார். மொழிபெயர்ப்புக்கான விருது இறையடியானுக்கு – கன்னடத்தில் சங்கர் மோகாஷி புனேகர் எழுதிய அவதேஸ்வரி என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் – கிடைத்திருக்கிறது. அவதேஸ்வரியும் சாஹித்ய அகாடமி விருது பெற்ற நாவலே. மலையாளத்தில் திருவாசகத்தை மொழிபெயர்த்த உள்ளூர் எம். பரமேஸ்வரனுக்கும், அப்துல் கலாமின் “அக்னிச் சிறகுகள்” புத்தகத்தை மணிபுரியில் மொழிபெயர்த்த இபோசா சொய்பாமுக்கும் மொழிபெயர்ப்பு விருதுகள் கிடைத்திருக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், பூமணி பக்கம்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

மூன்று வருஷங்களுக்கு முன் – என் டாப் டென் தமிழ் நாவல்கள், தமிழ் எழுத்தாளர்கள்

மூன்று வருஷங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு பதிவு சமீபத்தில் கண்ணில் பட்டது. சுஜாதாவையும், பாலகுமாரனையும், கல்கியையும் அப்போது தி.ஜா.வுக்கும் அழகிரிசாமிக்கும் மேலாக மதிப்பிட்டிருந்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

கல்கியின் பேரைச் சொல்லப் போகும் ஒரே புத்தகம் பொன்னியின் செல்வன். அதுவும் இப்போது எனக்கு மூன்றாம் படியில் இருக்கும் இலக்கியமே. இதை எழுதும்போது எனக்கு எக்கச்சக்க நாஸ்டால்ஜியாவாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று வார காலகட்டத்தில் பாலகுமாரனின் ஆறேழு சிறந்த புத்தகங்களைப் – பந்தயப்புறா, ஆனந்த வயல், கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், அகல்யா என்று சில – படித்த நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் எழுதப்பட்ட பதிவாக இருக்க வேண்டும். 🙂 இப்போது நன்றாகவே தெரிகிறது – பாலகுமாரன் அழகிரிசாமி, தி.ஜா. அருகே நிற்கக் கூட முடியாது.

சுஜாதா நிற்கலாம். 🙂 இந்த லிஸ்டைப் போடும்போது சுஜாதா சொதப்பிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை – இல்லை, இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும். வாரப் பத்திரிகை எழுத்துகளில் சுஜாதாவின் தரம் மிகவும் உயர்ந்தது, அதனால் அவரது குறைகள் ரெஜிஸ்டர் ஆகவே இல்லை. மீண்டும் அவர் புத்தகங்களை புரட்டும்போதுதான் குற்றம் குறை எல்லாம் தெரிகிறது. சில சமயம் எழுத்தின் தரம் மட்டும் இல்லை, அதன் தாக்கமும் இந்த மாதிரி லிஸ்ட்களில் இடம் பெற ஒரு முக்கியமான காரணி. அப்படித்தான் சுஜாதா has sneaked in. இன்றும் டாப் டென் என்று ஒரு லிஸ்ட் போட்டால் சுஜாதா எப்படியாவது முண்டியடித்து உள்ளே வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

மேலும் இந்தப் பதிவை எழுதும்போது நான் காடு, வாசவேஸ்வரம், ஆழிசூழ் உலகு, பொய்த்தேவு மாதிரி பல புத்தகங்களைப் படிக்கவில்லை. இன்று டாப் டென் நிறைய மாறி இருக்கும். இன்றளவு படிக்காதபோதே பத்துக்குள் அடக்கமுடியவில்லை என்றால் இன்று மிகவும் கஷ்டம், அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. என் ரசனை கொஞ்சம் முன்னேறி, சரி வேண்டாம் மாறி இருப்பதற்கு ஜெயமோகனின் பழக்கம், பரிந்துரைகள், அவர் இங்கு வந்தபோது பரிச்சயமான நண்பர்கள் ஒரு முக்கிய காரணம். அவரது பரிந்துரைகள், விளக்கங்கள் பல புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தன (ஆழிசூழ் உலகு…), சில புத்தகங்களை மீண்டும் படிக்க வைத்தன (பதினெட்டாம் அட்சக் கோடு…) அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்வதில் அர்த்தமில்லை; இருந்தாலும் நன்றி!

Curiosity value-வுக்காக மீள்பதித்திருக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

  1. பின் தொடரும் நிழலின் குரல்
  2. விஷ்ணுபுரம்
  3. பொன்னியின் செல்வன்
  4. என் பெயர் ராமசேஷன்
  5. கரைந்த நிழல்கள்
  6. சாயாவனம்
  7. கோபல்ல கிராமம்
  8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
  9. வெக்கை
  10. ஜேஜே சில குறிப்புகள்
  11. மோகமுள்

எனக்குப் பிடித்த டாப் டென் ஆசிரியர்கள்: (வரிசைப்படி அல்ல)

  1. ஜெயமோகன்
  2. சுந்தர ராமசாமி
  3. புதுமைப்பித்தன்
  4. அசோகமித்ரன்
  5. கல்கி
  6. சுஜாதா
  7. பாலகுமாரன்
  8. தி. ஜானகிராமன்
  9. கி. ராஜநாராயணன்
  10. கு. அழகிரிசாமி
  11. பூமணி
  12. சா. கந்தசாமி

எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. 🙂 ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.

ஜெயகாந்தனை இந்த லிஸ்டில் புகுத்த முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

விஷ்ணுபுரம் விருது விழா – டிசம்பர் 18 ஞாயிறு அன்று கோவையில்

என் தளத்தைப் படிப்பவர்கள் யாரும் ஜெயமோகன் தளத்தைப் படிக்காமல் இருக்கப் போவதில்லை, விஷயம் நிச்சயமாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும் இங்கேயும் போட்டு வைக்கிறேன். நாஞ்சில்நாடன், எஸ்.ரா., அவர்கள் அளவு அவ்வளவாக வெளியில் தெரியாத, ஆனால் பிரமாதமாக எழுதக்கூடிய யுவன் சந்திரசேகரும் பேசுகிறார்கள். கோவை சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மிஸ் செய்யாதீர்கள். முடிந்தால் ஜெயமோகனிடமும் கொஞ்ச நேரமாவது பேசிவிட்டு வாங்கள், அவரை போன்ற விஷயமுள்ள, பேசத் தெரிந்த ஆளுமைகள் அபூர்வம்.

பூமணி எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். ஜெயமோகன் எனக்குப் பிடித்த வாசகர்களில் முதன்மையானவர். ஜெயமோகனைச் சுற்றிச் சுழலும் விஷ்ணுபுரம் வட்டத்தினர் போன முறை ஆ. மாதவனையும் இந்த முறை பூமணியையும் விருதுக்கு தேர்ந்தெடுத்தது கண்டவர்களுக்கும் விருது கொடுக்கும் (அகிலனுக்கு ஞானபீடம், வைரமுத்துவுக்கும் கோவி. மணிசேகரனுக்கும் சாஹித்ய அகாடமி) நம் ஊரில் பெரிய ஆறுதல். விஷ்ணுபுரம் விருது மேலும் மேலும் உன்னதம் அடைய வாழ்த்துகிறேன்.

அரங்கசாமிதான் பொறுப்பெடுத்து செய்கிறார் என்று நினைக்கிறேன், அவருடன் நேரம் செலவழிக்க முடியாதது என் துரதிருஷ்டம். அவருக்கு ஒரு ஜே!

தொடர்புடைய சுட்டிகள்:
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
பூமணியின் “வெக்கை”