சாண்டில்யன்

பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு சாண்டில்யன் நாவலை – ஜலமோகினி – மீண்டும் படித்தேன். எளிய நாவல்தான், ஆனால் சிறு வயதில் படிக்க ஏற்றது. கனோஜி ஆங்கரேயின் ஒரு உபதலைவன் ஜஞ்ஜீரா சித்திகளின் ஒரு உபதலைவனை கொஞ்சம் ஏமாற்றி வெல்கிறான். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சாயல் தெரியும்.

அவர் நாவல்களை மறக்க இன்னும் இருபது முப்பது வருஷம், ஒன்றிரண்டு தலைமுறை ஆகும் என்று பத்து வருஷம் முன்னால் மதிப்பிட்டிருந்தேன். இப்போதே மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. புத்தகத்தைப் படிக்கும்போது சாண்டில்யனுக்கு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இருந்த வரவேற்பும் இன்று அவர் அனேகமாக மறக்கப்பட்டிருப்பதும்தான் மண்டையில் ஓடிக் கொண்டே இருந்தது.

அவர் எளிய சாகசக் கதைகளைத்தான் எழுதினார், ஆனால் அவருடைய அடுத்த தொடர்கதைக்காக காத்திருந்த கூட்டம் எல்லாம் இன்று எங்கே போயிற்று? தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று இருந்த நிலை இருபது முப்பது வருஷத்திற்குள் மாறிவிட்டதே! இத்தனை பிரபலமாக இருந்த நட்சத்திர எழுத்தாளரை எப்படி அதற்குள் மறந்தோம்? அந்தத் தலைமுறையே இறந்துவிட்டதா? ஐம்பது அறுபது வயதுக்காரர்களுக்குக் கூட அவர் நினைவிருப்பதாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் கடல்புறா, யவனராணி, மலைவாசல், மன்னன் மகள், ராஜமுத்திரை, கன்னிமாடம் போன்றவை இன்றும் சுவாரசியமான, படிக்கக் கூடிய நாவல்கள்தான்.

மேலை உலகில் அவருக்கு சமமாக சொல்லக் கூடிய வால்டர் ஸ்காட்டோ, அவருக்கு சில படிகள் மேலே இருக்கும் அலெக்சாண்டர் டூமாசோ, இன்னும் மறக்கப்படவில்லை. சுமாரான சரித்திர நாவல் எழுத்தாளரே அபூர்வமாக இருக்கும் தமிழ்நாட்டில் அவரை மறந்துவிட்டோம்!

இன்று இருந்தால் அவருக்கு 112 வயது. அவரது நூற்றாண்டை என்னைத் தவிர வேறு யாரும் நினைவு கூர்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

யார் மறந்தால் என்ன, என் வாழ்க்கையின் இரண்டாவது நட்சத்திர எழுத்தாளர் அவர்தான் (முதல்வர் வாண்டு மாமா.) முதன்முதலாக நான் விரும்பிப் படித்த பெரியவர் புத்தகங்கள் சாண்டில்யன் எழுதியவைதான். ஏழெட்டு வயதில் படிக்க ஆரம்பித்தவன் இரண்டு வருஷமாவது முழுமூச்சாக நூலகங்களில் கிடைத்த அத்தனை புத்தகங்களையும் படித்தேன், அனேகமாக அவர் எழுதிய எல்லாவற்றையுமே படித்தேன். பலவும் எனக்கு மிகவும் விறுவிறுப்பாக இருந்தன, படிப்பில் வெறி ஏற்பட அவரும் ஒரு காரணம்.

பத்து வயது வாக்கில் அவரைக் கடந்துவிட்டேன், ஆனால் அது புரியவே இன்னும் இரண்டு வருஷம் ஆயிற்று. இரண்டு மூன்று வருஷங்களில் அலுத்துவிட்டார்.  ஒரே சூத்திரத்தை வைத்து எழுதுவது புரிந்த பிறகு ஈர்ப்பு குறைந்துவிட்டது.

அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பிரபலமாக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள். அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு சாகசம் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.

அவர் மூலமாக நான் தெரிந்து கொண்ட வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து தெரிந்து கொண்டதை விட அதிகம். பாடப் புத்தகத்தில் படித்தது பரீட்சை எழுதியதும் மறந்துவிட்டது, இவர் காட்டிய வரலாறு இன்னும் மனதில் நிற்கிறது. இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலைவாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்கரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.

சாண்டில்யன் கிளுகிளு எழுத்தாளரும் கூட. ஆனால் அவர் எழுதுவது porno அல்ல, boreனோ. சும்மா சும்மா கவர்ச்சி பிரதேசம், விம்மி நின்றது, உராய்ந்தார்கள் என்று எழுதினால் யார் படிப்பது? குமுதத்தில் தொடர்கதையாக வந்த விஜயமகாதேவி நாவலில் இது ஆழம், உள்ளே சுலபமாகப் போகும் இல்லை போகாது என்றெல்லாம் காதலனும் காதலியும் பேசுவதாக எழுதி இருந்தார். காதலன் கப்பலையும் கடலையும் பற்றி பேசுகிறான் என்று தாமதமாக உணர்ந்த காதலி வெட்கப்பட்டாள், நீங்கள் கப்பலைப் பற்றியா பேசினீர்கள் என்று கேட்டாள் என்று முடிப்பார். பதின்ம வயதில் காலத்தில் இதைப் படித்துவிட்டு சிறுவர்கள் படிக்கும், குடும்பங்களில் வாங்கப்படும் பிரபல பத்திரிகையில் இந்த மாதிரி பச்சை பச்சையான எழுத்து எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று வியந்திருக்கிறேன்.

எட்டு ஒன்பது வயதில் அவரது கிளுகிளு எழுத்து எனக்கு போரடித்தது, கிடுகிடுவென்று பக்கங்களைப் புரட்டிவிடுவேன். கிளுகிளு எழுத்தில் எனக்கு ஆர்வம் ஏற்பட்ட பிறகு – 12, 13 வயதில் – அவரைப் படித்தால் ஒரு கிளுப்பும் ஏற்படவில்லை என்பது கொஞ்சம் சோகம்.

சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் போன அத்தியாயத்தில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, நாயகியின் உடல் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.

சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் நாயகன். நாயகன் தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான். 🙂

சாண்டில்யனின் புத்தகங்களில் யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜலதீபம் (இரண்டாம் பாகம் சுத்த தண்டம் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவபூமி, அவனிசுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜலமோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, நாகதீபம் ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி போன்றவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.

அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். நங்கூரம், செண்பகத் தோட்டம், மனமோகம், மதுமலர் போன்ற சில சமூக நாவல்கள் ஐம்பதுகளில் பத்திரிகை தொடர்கதையாக வெற்றி பெற்றிருக்கும்.

அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthan-இலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.

ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.

அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன். சிறப்பான memoirs. குறிப்பாக அவர் பத்திரிகை நிருபராக இருந்த காலகட்டத்தை சிறப்பாக சித்தரித்திருக்கிறார். என் வீடு என்ற திரைப்படத்திலும் பங்காற்றி இருக்கிறார், அதைப் பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். என் வீடு திரைப்படத்தை தயாரித்தவர் சித்தூர் வி. நாகையா. நாகையாவும் சாண்டில்யனும் அப்போது நெருங்கிய நண்பர்கள். ராண்டார்கை  ஒரு கட்டுரையில் சாண்டில்யனும் சாண்டில்யனின் நெருங்கிய நண்பர் சித்தூர் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களை historical romances-இன் முதல் பட்டியலிலும் ஜலதீபம், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜமுத்திரை ஆகிய நாவல்களை historical romances-இன் இரண்டாம் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்.

கறாராகப் பார்த்தால் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. பொழுதுபோக்கு சாகச நாவல்கள் மட்டுமே. தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் தமிழர் பிரக்ஞையில் சரித்திர நாவல் ஆசிரியர் என்றால் இன்று கூட சாண்டில்யன்தான். அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் தரத்தில் அன்றைய பிரபல சரித்திர நாவலாசிரியர்கள் எவரும் – அகிலன், ஜெகசிற்பியன்… –  எழுதவில்லை.  2008-இல் அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்க தமிழக அரசு முன்வந்தபோது அவரது வாரிசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். அப்போது விற்றிருக்க வேண்டும். 15 வருஷங்கள் ஓடிவிட்டன, இப்போதும் விற்கின்றனவா என்று தெரியவில்லை. ஹரன் பிரசன்னா போன்றவர்களைத்தான் கேட்க வேண்டும்.

என்னளவில் முக்கியமான எழுத்தாளர்தான். யவனராணி, கடல்புறா என்று ஆறேழு புத்தகங்களாவது இன்றும் சுவாரசியமாகத்தான் இருக்கும். ஆனால் கறாராகப் பரிந்துரைத்தால் அவரது போராட்டங்கள் என்ற நினைவுக் குறிப்புகளை மட்டுமே பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சாண்டில்யன் நூற்றாண்டு

இது சாண்டில்யனின் நூற்றாண்டாம். வாண்டு மாமாவைக் கடந்து வந்தபோது என்னைக் கவர்ந்த ஸ்டார் எழுத்தாளர் அவர். பத்து வயது வாக்கில் அவரைக் கடந்து வந்துவிட்டாலும், யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னி மாடம் போன்ற நாவல்கள்தான் நான் முதன்முதலாக விரும்பிப் படித்த பெரியவர்களுக்கான புத்தகங்கள். மிகவும் த்ரில்லிங்காக இருந்தன. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட வரலாறு பள்ளிகளில் கற்றுக் கொண்டதை விட நன்றாக நினைவிருக்கிறது. இந்திய சரித்திரத்தின் சில பகுதிகளை அவர் மிகவும் கவர்ச்சிகரமாக அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு இன்றும் ஸ்கந்த குப்தனை பற்றி தெரிந்ததெல்லாம் மலைவாசல் புத்தகத்தில் படித்ததுதான். ஹூணர்கள், ராஜபுதனம், கனோஜி ஆங்க்ரே பற்றி முதலில் தெரிந்து கொண்டதெல்லாம் சாண்டில்யனின் கதைகள் மூலம்தான்.

ஆனால் சீக்கிரத்திலேயே அலுத்துவிட்டார். ஒரே ஃபார்முலா வைத்து எழுதுவார். என் கருத்தில் அவர் நாவல்களை இன்னும் ஒன்றிரண்டு ஜெனரேஷன்களில் மறந்துவிடுவார்கள்.

அவரது சரித்திர நாவல்கள் தமிழ் நாட்டில் மிக பாப்புலராக இருந்தன. குமுதம் பல வருஷங்களாக அவரது சரித்திர நாவல்களை தொடர்கதையாக வெளியிட்டது. யவன ராணி, கடல் புறா ஆகியவை அவரது மாஸ்டர்பீஸ்கள். அவருக்கு வால்டர் ஸ்காட், டூமாஸ் ஆகியோரை விட ரஃபேல் சபாடினி போன்றவர்கள்தான் ரோல் மாடல் என்று நினைக்கிறேன். அவருடைய நாவல்களில் பேச்சு இருக்கிற அளவுக்கு ஆக்ஷன் இருக்காது. உதாரணமாக மன்னன் மகள் நாவலில் முக்கால் நாவல் முடிந்த பிறகுதான் கதை நகரவே ஆரம்பிக்கும.

சாண்டில்யனின் பெரிய குறையே வளவள என்று எழுதிக் கொண்டே போவதுதான். பேப்பருக்கு பிடித்த கேடு. ஒவ்வொரு சாப்டரிலும் போன சாப்டரில் என்ன நடந்தது என்று ஒரு சுருக்கத்தோடு ஆரம்பிப்பார். பத்திரிகையில் தொடர்கதையாக படிக்கும்போது அது உபயோகமாக இருக்கலாம். நாவலாக படிக்கும்போது எரிச்சல் ஊட்டுகிறது. இயற்கை வர்ணனை, ஹீரோயின் வர்ணனை ஆகியவற்றை எடுத்துவிட்டால் புத்தக கனம் பாதியாக குறைந்துவிடும்.

சமயத்தில் அவர் சரித்திரத்தை மாற்றவும் தயங்குவதில்லை. பல்லவ அரசனான தந்திவர்மன் ராஷ்டிரகூடர்களால் தோற்கடிக்கப்பட்டான். பல்லவ திலகம் கதையில் தந்திவர்மன் ஹீரோ. ஹீரோ தோற்கக் கூடாது, அதனால் அவர் ராஷ்டிரகூடர்களை வெல்வான். பிறகு நான் வென்றாலும் உன்னிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுவான். 🙂

சாண்டில்யனின் புத்தகங்களில் யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம் ஆகியவை சுவாரசியமானவை. ஜலதீபம் (இரண்டாம் பாகம் சுத்த வேஸ்ட் – இந்த பகுதி பூராவும் ஒரு வெள்ளைக்காரி ஹீரோவை மயக்க முயற்சிப்பாள், அவ்வளவுதான்), ஜீவபூமி, அவனிசுந்தரி, பல்லவ திலகம், மூங்கில் கோட்டை, ஜலமோகினி, கவர்ந்த கண்கள், மஞ்சள் ஆறு, நாகதீபம் ஆகியவை படிக்கலாம். பாண்டியன் பவனி, ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி, ராணா ஹமீர், துறவி போன்றவை எல்லாம் வேஸ்ட்.

அவரது முதல் சமூக நாவலான பலாத்காரம் (புரட்சிப் பெண்) மிக அமெச்சூர்தனமாக எழுதப்பட்டது. அந்த நாவலின் ஒரே ஆச்சரியம் சத்தியமூர்த்தி இதை எப்படி இவ்வளவு சிலாகித்து ஒரு முன்னுரை எழுதினர் என்பதுதான். அவரது ராஜஸ்தானிய நாவல்கள் பல கொடுமையாக இருக்கும். கர்னல் டாட் எழுதிய Annals and Antiquities of Rajasthanஇலிருந்து ஒரு வரி எடுத்துக் கொள்வார். அதை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதுவார்.

ராஜயோகம், நிலமங்கை, சேரன் செல்வி என்ற மூன்றும் ஒரு trilogy மாதிரி வந்தது என்று நினைவு. இப்படி எழுதுவது தமிழில் அபூர்வம்.

சாண்டில்யன் கிளுகிளு எழுத்தாளரும் கூட. சமயத்தில் போர்னோ மாதிரி எழுதுவார். ஆனால் அவர் எழுதுவது porno அல்ல, boreனோ. சும்மா சும்மா கவர்ச்சி பிரதேசம், விம்மி நின்றது, உராய்ந்தார்கள் என்று எழுதினால் யார் படிப்பது? கிடுகிடுவென்று பக்கங்களை புரட்டிவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வாரப் பத்திரிகைகளில் இப்படி ஒருவர் பச்சை பச்சையாக எழுத முடிந்தது என்பது ஆச்சரியமே. ஒரு முறை குமுதத்தில் இது ஆழம், உள்ளே சுலபமாகப் போகும் இல்லை போகாது என்றெல்லாம் காதலனும் காதலியும் பேசுவதாக எழுதி இருந்தார். காதலன் கப்பலையும் கடலையும் பற்றி பேசுகிறான் என்று தாமதமாக உணர்ந்த காதலி வெட்கப்பட்டாள் என்று முடிப்பார். டீனேஜ் காலத்தில் இதைப் படித்துவிட்டு ஆச்சரியப்பட்டேன். (கதை பெயர் நினைவில்லை, கடைசி நாயக்கர் ராணி மீனாட்சியின் மகன் விஜயகுமாரன் கதாநாயகன், சந்தாசாஹிபை பழி வாங்குவதாக சபதம் செய்திருப்பான்.)

அவரது போராட்டங்கள் என்ற சுய வாழ்க்கை வரலாற்றை எல்லாருக்கும் சிபாரிசு செய்கிறேன். மிக அற்புதமான memoirs. அதில் அவர் என் வீடு திரைப்படத்தை பற்றி மிகவும் உருகி உருகி எழுதி இருப்பார். ராண்டார்கை இதை பற்றி எழுதி இருப்பது இங்கே. ராண்டார்கை சித்தூர் நாகையாவை பற்றி எழுதிய இந்த கட்டுரையில் சாண்டில்யனும் அவரது நெருங்கிய நண்பர் நாகையாவும் பிற்காலத்தில் சந்தித்த ஒரு நிகழ்ச்சியை பற்றி உருக்கமாக எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் யவனராணி, கடல்புறா, மன்னன் மகள் ஆகிய நாவல்களை historical romances-இன் முதல் பட்டியலிலும் ஜலதீபம், கன்னிமாடம், மூங்கில் கோட்டை, ராஜமுத்திரை ஆகிய நாவல்களை historical romances-இன் இரண்டாம் பட்டியலிலும் சேர்த்திருக்கிறார்.

விக்னேஸ்வரன் என்பவர் சில சாண்டில்யன் நாவல்களுக்கு விமர்சனங்கள் எழுதி இருக்கிறார். கடல் புறா, மன்னன் மகள், ராஜயோகம் ஆகியவற்றுக்கான விமர்சனங்கள் கிடைக்கின்றன.

என் கண்ணில் சாண்டில்யனின் புத்தகங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை இல்லை. இலக்கியத் தரம் இல்லை. தமிழ் உரைநடை வரலாற்றில் அவர் ஒரு footnote மட்டுமே. ஆனால் தமிழர் பிரக்ஞையில் சரித்திர நாவல் ஆசிரியர் என்றால் சாண்டில்யன்தான். அவர் ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி. அவர் மூலமாக நான் கற்றுக் கொண்ட சரித்திரம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவர் அளவுக்குக் கூட அகிலன், ஜெகசிற்பியன் போன்றவர்கள் எழுதவில்லை. அவரது புத்தகங்கள் இன்னும் விற்கின்றன. அவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்க தமிழக அரசு முன்வந்தபோது அவரது வாரிசுகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்