மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

அனேகமாக ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாகிறதாம்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கு.ப.ரா.வின். வீரம்மாளின் காளை சிறுகதையையும் கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

மணிக்கொடி சதஸ்

ஒரு புகைப்படம் இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. வேறு பீடிகை இல்லாமல்.

லா.ச.ரா.வின் சிந்தாநதியிலிருந்து:

நாற்பத்தைந்து, நாற்பத்தேழு வருடங்களுக்கு முன் கூடவே இருக்கலாமோ? ஆனால் ஐம்பது ஆகவில்லை.

உங்களை மெரினாவுக்கு அழைத்துச் செல்கிறேன்.

சொல்லத் தேவையில்லையானாலும் கண்ணகி சிலை இல்லை.

ஸப்வே இல்லை. மூர்மார்க்கெட், பின்னால் வந்த பர்மா பஜார் போல் எல்லாப் பொருள்களும் வாங்கக்கூடிய சந்தையாக மெரினா மாறவில்லை. இத்தனை ஜனமும் இல்லை.

மாலை வேளை, வானொலியின் ஒலி பெருக்கிகளை மாட்டியாகிவிட்டது. அங்கேயே சுட்டு அப்பவே விற்கும் பஜ்ஜியின் எண்ணெய் (எத்தனை நாள் Carryover-ஓ?) புகை சூழவில்லை. நிச்சயமாக இப்போதைக் காட்டிலும் மெரினா ஆசாரமாகவும், சுகாதாரமாகவும், கெளரவமாகவும், காற்று வாங்கும் ஒரே நோக்கத்துடனும் திகழ்ந்தது. பூக்கள் உதிர்ந்தாற்போல், இதழ்கள் சிதறினாற்போல், எட்ட எட்ட சின்னச் சின்னக் குடும்பங்கள். நண்பர்களின் ஜமா. அமைதி நிலவுகிறது.

இதோ மணலில், வடமேற்கில் ப்ரஸிடென்ஸி கல்லூரி மணிக் கோபுரத்துக்கு இலக்காக அக்வேரியம் பக்கமாக என்னோடு வாருங்கள். ஆ, அதோ இருக்கிறார்களே, ஏழெட்டுப் பேர் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உஷ் – மணிக்கொடி சதஸ் கூடியிருக்கிறது. அதன் நடு நாயகமாக- அப்படியென்றால் அவர் நடுவில் உட்கார்ந்திருக்கவில்லை. எல்லாருமே சப்தரிஷி மண்டலம் போல் வரிசை இல்லாமல்தான் அமர்ந்திருப்பார்கள். நாயகத் தன்மையை அவருடைய தோற்றம் தந்தது.

அந்நாளிலேயே அவரைத் தென்னாட்டுத் தாகூர் என்று அந்த வட்டம் அழைக்கும். அந்த ஒப்பிடலுக்குப் பொருத்தமாகத்தான் இருந்தார். நடு வகிடிலிருந்து இருமருங்கிலும் கரும்பட்டுக் குஞ்சலங்கள் போலும் கேசச் சுருள்கள் செவியோரம் தோள் மேல் ஆடின. கறுகறுதாடி மெலிந்த தவ மேனி. ஆனால் அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் மெலிந்த உடல்தான். சிதம்பர சுப்ரமணியனைத் தவிர, அவர் பூசினாற் போல், இரட்டை நாடி. க.நா.சு, சிட்டி சாதாரண உடல் வாகு.

ந. பிச்சமூர்த்தியின் அழகுடன் சேர்ந்த அவருடைய தனித்த அம்சம் அவருடைய விழிகள். ஊடுருவிய தீக்ஷண்யமான பார்வை. அதன் அற்புதக்ரணத் தன்மை அவருக்குக் கடைசிவரை இருந்தது. உயரத்தில் சேர்த்தி அல்ல. அவரிடம் மற்றவர்கள் காட்டின மரியாதையும், அவர் பேச்சுக்குச் செவி சாய்த்த தனிக் கவனமும், என்றும் சபாநாயகர் அவர்தான் என்பதை நிதர்சனமாக்கியது.

எத்தனைக்கெத்தனை பிச்சமூர்த்தி ஒரு பர்ஸனாலிட்டியாகப் பிதுங்கினாரோ அத்தனைக்கத்தனை அவர் எதிரே உட்கார்ந்திருந்த கு.ப.ரா. தான் இருக்குமிடம் தெரியாமலிருப்பதே கவனமாயிருந்தார் எனத் தோன்றிற்று. பிச்சமூர்த்தியைக் காட்டிலும் குட்டை. அவருடைய கனத்த மூக்குக் கண்ணாடி இல்லாவிட்டால் அவர் பாடு திண்டாட்டம்தான். பேசும்போது அவர் குரல் அவருக்குக் கேட்டதா என்பது என் சந்தேகம்.

பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுத்தில் கையாள எடுத்துக்கொண்ட விஷயம், பாணி தனித்தனி, ஆனால் ஏன் இவர்களைச் சிறுகதை இரட்டையர்கள் என்று குறிப்பிட்டார்கள்? எனக்குப் புரியவில்லை.

புதுமைப்பித்தனை மனதில் கூட்டுகையில், பளிச்சென்று நினைவில் படுவது அவருடைய உயர்ந்த dome like நெற்றியும் வெடிப்பான உரத்த சிரிப்பும்தான். அடிக்கடி சிரிப்பார்.

எனக்கு நினைவு தெரிந்தவரை, பி.எஸ். ராமையா எப்பவுமே உற்சாகமான பேர்வழி, நிமிர்ந்த முதுகும் வரித்த கழி போன்ற உடலுக்கு உறையிட்டாற் போல், ஜிப்பாவும், தரையில் புரளும் வேட்டியும் அவரை உயரமாகக் காட்டின. கைகளை உற்சாகமாக ஆட்டி உரக்கப் பேசுவார்.

இந்தக் கூட்டத்தை நான் உங்களுக்குப் பரிச்சயம் பண்ணும் சமயத்தில் கலைமகளில் சக்ரவாகம் என்கிற அவர் கதை வெளியாகி அதன் வெற்றிப்ரபை சிதம்பர சுப்ரமணியனைச் சூழ்ந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவரிடம் விஷயம் நிறைய இருந்தது. ஆனால் சங்கோஜி. அப்படியே அபிப்ராயமாக ஏதேனும் அவர் சொல்ல ஆரம்பித்தாலும் சரியாக முடிக்காமல், சிரிப்பில், பலமான தலையாட்டலில் மழுப்பிவிடுவார். நுண்ணிய முக அங்கங்கள். அலைபாயும் க்ராப்.

தி.ஜ.ர. முழங்கால்களைக் கட்டியபடி குந்திட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு செளகர்யமான போஸ்ட்சர். தலையை அழுத்த வாரி, உடனேயே மெனக்கெட்டுத் தானே கையை உள்ளே விட்டுக் கலைத்துக் கொண்டாற்போல் குட்டையாக வெட்டிய க்ராப் விரைத்துக் கொண்டிருக்கும். அவர் தோற்றத்தில் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தியிருந்தால் அழகான மனிதனாகவே வெளிப்படுவார் என்பது என் கருத்து. செதுக்கினாற் போன்ற மூக்கு, வாய், வரிசையான முத்துப் பற்கள். சிரிக்கும்போது அவர் முகத்தில் ஐந்தாறு வயதுகள் உதிரும்.

சிட்டி, சி.சு. செல்லப்பா, க.நா.சு. இவர்களின் படங்களைச் சமீபமாகப் பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள். அன்றைக்கு இன்று வருடங்கள் இவர் தோற்றங்களை அதிகம் பாதித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஒருவர், இருவர் அல்லது இருவர் மூவர். கூட்டத்தில் சேரலாம். குறையலாம். ஆனால் மாலை, இந்த வேளைக்கு இந்த இடத்தில் இந்த ஏழு பேர் நிச்சயம்.

அத்தனை பேரும் கதராடை.

இவர்களை விழுங்கும் விழிகளால் பார்த்துக்கொண்டு இவர்கள் பேச்சைச் செவியால் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பதில் எனக்கு அலுப்பே இல்லை.

இலக்கிய ஆர்வம் மிக்க என் நண்பன் குஞ்சப்பாவும் நானும், எங்கள் மரியாதையில், இயற்கையான வயதின் அச்சத்தில் இவர்களுக்கு நாலு அடி எட்ட உட்கார்ந்திருப்போம்.

நான் அப்போத்தான் மொக்கு கட்டியிருந்த எழுத்தாளன். எஸ்.எஸ்.எல்.சி. குட்டெழுத்து தட்டெழுத்துப் பரீட்சைகள் தேறிவிட்டு வேலைக்கு அலைந்து கொண்டிருந்தேன். தேடினால் கிடைத்துவிடுகிறதா? பறித்து எடுத்துக்கொள் என்கிற மாதிரி அப்பவே, வேலை ஒண்ணும் காய்த்துத் தொங்கவில்லை. அந்த ரோசம், அதனால் படும் கவலை சமயங்களில் தவிர, சிந்தனைக்கும் இலக்கியச் சிந்தனைக்கும் வயது காரணமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஆக்கக் கனல் வெளிப்பட வழி காணாது, உள் புழுங்கவும் வேண்டிய நேரம் இருந்த அந்தப் பருவத்தில் என்னை என்னிலிருந்து மீட்டு எனக்குத் தருவதற்கு இந்தக் கடற்கரைக் குழுவின் பாதிப்பு தன் பங்கைச் செய்தது என்றால் மிகையில்லை.

மஞ்சேரி எஸ்.ஈஸ்வரன் ஆசிரிமையில் வெளி வந்து கொண்டிருந்த ‘ஷார்ட் ஸ்டோரி’ ஆங்கில மாதப் பத்திரிகையில் என் கதைகள் இரண்டு பிரசுரமாகியிருந்தன, அடுத்து மணிக்கொடி (ஆசிரியர் ப.ரா) யில் மூன்று கதைகள், ஹனுமான் வாரப் பத்திரிகையில் ஒன்று. உம், ஆமாம்.

“ஏண்டா, அங்கே தனியா உட்கார்ந்திண்டிருக்கே, இங்கே வாயேன்!”

தி.ஜ.ர, அழைப்பார். அப்படியே நகர்ந்து, அவருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே (என் நினைப்பில்) அவர்கள் பாதுகாப்பில் இடுங்குவேன். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நான் என்னைப் பாவித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் இது மாதிரி நேர்ந்தால் வலிக்குமா? ஆனால் இங்கே வாய் திறக்க எனக்கு தில் கிடையாது. போயும் போயும் இங்கே றாபணாவா? என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்போதெல்லாம் யார் சொல்வதையும் கவனமாகக் கேட்டுக் கொள்ளும் பங்குதான் என்னுடையது.

என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார்தட்டல் கிடையாது. வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை. இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சிப் பிரசாரம் கிடையாது. உலக இலக்கிய கர்த்தாக்களின் சிருஷ்டிகள் நடமாடின. அவர்கள் பெயர்களைச் சொல்லிச் சுவைக்க எனக்கு ஆசைதான். ஆனால் ஏதோ வெறும் பெயர்களை உதிர்த்து அதில் பெருமை அடையப் பார்க்கிறேன் எனும் சந்தேகத்துக்குக்கூட நான் ஆளாக விரும்பவில்லை. அந்த மாதிரிப் பெருமையால் எனக்கு இனி ஆக வேண்டியது ஏதுமில்லை. தவிர அப்போதேனும் மாப்பஸான், மாம், செக்கோவ் என்று எழுத்தாளர்கள் முனகினார்கள். Chase, Robbins, Maclean என்று இடத்தைப் பிடித்துக்கொண்டு, எழுத்து ஒரு ஃபாக்டரியாக மாறியிருக்கும் இந்நாளில் நாங்கள் பழகிய பெயர்கள், அந்த எழுத்துக்களின் சத்தியங்கள் எடுபடா.

பிச்சமூர்த்தியின் வெளிப்பாட்டில் விஷயம் நிறைய இருக்கும். அபூர்வமான விதானங்கள் தட்டும். இத்தனைக்கும் பேச்சில் சிங்காரங்கள், நகாசுகள் effect உண்டாக்க வேண்டும் எனும் தனி முயற்சி இல்லை. உள்ளது உள்ளபடி அவர் கண்டபடி. ஆனால் எப்படியும் கவிஞன் மனம் இல்லையா? லேசாக நடுக்கம் கொடுத்த குரலில் வார்த்தைகள் வெளிப்படுகையில், பிசிர்கள் கத்தரிக்கப்பட்டு, சொல்லும் பொருளும் சுளை சுளையாக விழுவது போலத் தோன்றும். ரத்னச் சுருக்கம். இதற்குள் முடிஞ்சு போச்சா? இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா?

“ராஜகோபாலா! சிட்டி! செல்லப்பா!” என்று அழைக்கையில் அந்தக் குரல் நடுக்கத்தில் ததும்பிய இனிமை, பரஸ்பரம் யாரிடம் இப்போ காண முடிகிறது? அவர் பார்வையே ஒரு ஆசீர்வாதம்.

இலக்கிய விழாக்கள் இந்நாளில் கொண்டாடப்படுகின்றன. கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. டி.வி., வானொலி வழி வேறு: பேட்டிகள், சந்திப்புகள், மோஷியாரா, ஸம்மேளனம்.., எந்தச் சாக்கிலேனும் மேடை.

ஆனால் கடற்கரையில் மாலை அந்த இரண்டு, இரண்டரை மணி நேரம் இந்த ஏழெட்டுப் பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, அதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.

இத்தனை வருடங்களின் பின்னோக்கில் எனக்கு இன்னும் வேறு ஏதேதோ உண்மைகள் புலப்படுகிறாப் போல் ஒரு உணர்வு.

ஏதோ ஒரு வகையில், இவர்கள் எழுத்துக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட பிக்குகள்.

இந்த ஏழெட்டுப் பேரில் நாலுபேர் இப்போது நம்முடன் இல்லை. இவர்களில் மூவரேனும் எழுத்துக்கே பலியானவர்கள்.

அந்த மஹாராஜியைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவள் மோஹினி. மிக்க அழகி. இரக்கமற்றவள். Medusa “வா, வா. என்னைப் பார். என் அழகைப் பார்!”

அவன் நெஞ்சை நீட்டுகிறாள். உள் உள்ளேயே பாடுகிறாள்.

கொல் இசை.

சிந்தா நதி மேல் கவிந்த ஒரு பனிப் படலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

சி.சு. செல்லப்பா சிறுகதைகள்: சரசாவின் பொம்மை

வாடிவாசல் அளவுக்கு செல்லப்பாவின் பிற படைப்புகள் பேசப்படுவதில்லை. நானும் அதிகம் படித்ததில்லை, கிடைப்பதும் இல்லை. வாடிவாசல் அளவுக்கு பிற படைப்புகள் இருக்காது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

சரசாவின் பொம்மை என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு (1942) கிடைத்தது. எண்ணம் இன்னும் உறுதிப்பட்டது. நேரடியான சிறுகதைகள். வாழ்வின் ஒரு தருணத்தை காட்ட மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார், சில பல சமயம் வெற்றியும் பெறுகிறார். ஆனால் எந்தச் சிறுகதையும் தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் இடம் பெறாது.

செல்லப்பாவின் வெற்றி கதை நிகழ்ச்சிகள் நாம் சர்வசாதாரணமாக பார்க்கும் நிகழ்ச்சிகளாக இருப்பதுதான். நிகழ்ச்சியின் சூழ்நிலையை கதை முழுவதும் விஸ்தாரமாக விவரிப்பார். கடைசியில் ஒரு முத்தாய்ப்பு. அனேகமாக புன்னகை வருகிறது. கதைகளின் எளிமை மற்றும் நம்பகத்தன்மை, சரளமான நடை இந்த உணர்வை அழுத்தமாக ஏற்படுத்துகின்றன. மறைந்துபோன அந்தக் காலம் – 11-12 வயதில் திருமணம், 15-16 வயதில் கணவன் வீட்டுக்குச் செல்லும் சிறுமிகள் – கதைகளில் தெரிவது இவற்றின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

சரசாவின் பொம்மை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஆறு வயது சிறுமியுடன் என்னை கல்யாணம் செய்து கொள் என்று விளையாட்டுப் பேச்சு பேசும் இளைஞன்; சிறுமி வளர்கிறாள், அப்படி விளையாடுவது நின்றுவிடுகிறது. அந்த விளையாட்டுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் தனக்கு சிறுமி விளையாட்டு பொம்மை அல்ல, சிறுமிக்குத்தான் தான் விளையாட்டு பொம்மை என்று உணர்வது நல்ல தரிசனம். ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் இடம் பெறுகிறது.

மூடி இருந்தது சிறுகதை கவித்துவமானது. சிறையிலிருந்து விடுதலை அடையும் நாயகன். கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கின்றன. வெளியே வந்து பார்க்கிறான். தொடுவானத்துக்கு அப்பாலும் அவனுக்கு ஒரு கதவு தெரிகிறது.

வாழ்க்கை சிறுகதை ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி சிறுகதையை நினைவுபடுத்துகிறது. சாவும் பிணமும் வெட்டியானுக்குத் தொழில்தானே! விரிவாக இங்கே.

ஆறுதல் இன்னொரு நல்ல சிறுகதை. குழந்தையை தற்செயலாக தள்ளிவிடும் அப்பா; குழந்தை கோபித்துக்கொண்டு அப்பாவிடம் வர மறுக்கிறது. குழந்தை தூங்கும்போது அவளுக்கு முத்தம் தரும் அப்பன், தூங்கும் குழந்தை முரண்டு பிடிக்காது என்று எண்ணம் ஓடுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் ஒரு நல்ல சிறுகதை. நகரத்தில் இளசுகள் குடித்தனம். மனைவி பகட்டாக அலங்காரம் செய்து கொள்கிறாள். ஊரிலிருந்து மைத்துனன் வந்ததும் கிராமப் பெண் போலவே மாறிவிடுகிறாள், எங்கே தன்னைப் பற்றி கிராமத்தில் போய் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற கூச்சம். மைத்துனன் ஊருக்குப் போகிறான். அண்ணனுக்கு அனுப்பவே மனசில்லை. ரயில் ஏற்றிவிட்டு திரும்பி வந்தால் மனைவி அலங்காரபூஷணியாக நிற்கிறாள். சுடுசொல். இதை சிறப்பாக எழுதி இருக்கிறார்.

முறைமைப்பெண் இன்னொரு நல்ல சிறுகதை. அண்ணனுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம் முற்றிப் போய் கேஸ் நடக்கிறது. அண்ணன் சிறைக்குப் போகும் நிலை. தீர்ப்பு சொல்லும்போது தங்கை வேண்டாம் என்று சொல்ல வாயெடுக்கிறாள், ஆனால் கோர்ட்டில் பேசாதே என்று அடக்கிவிடுகிறார்கள். இதே கதையை விவரித்து ஒரு நாடகமாகவும் எழுதி இருக்கிறார். என்னைக் கவர்ந்தது சிறுகதைதான்.

ஞாபகம் கொஞ்சம் subtle ஆன சிறுகதை. இறந்துபோன தங்கை, மறுமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை, தங்கையின் மகளை ஒரு திருமணத்தில் சந்திக்கும் வாய்ப்பு. அண்ணனின் மனநிலையை சிறப்பாக காட்டுகிறார்.

பாத்தியதை மிக எளிமையான, ஆனால் உண்மையான கதை. நேற்று வரை வீட்டில் தன்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த தங்கையை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அண்ணன்.

குருவிக்குஞ்சு, நொண்டிக்குழந்தை இரண்டும் கதை என்ற அளவில் சுமார்தான். ஆனால் குழந்தைகள் உலகத்தை நன்றாகவே காட்டுகின்றன.

பந்தயம் எளிமையான சிறுகதை. ஊர் முரடன் பெரும் கல்லைத் தூக்கி நாடோடிப் பெண்ணை மணக்கிறான். முரடனை முதலில் அறையும் அந்தப் பெண் அவனது வீர சாகசத்தால் ஈர்க்கப்படுவது நன்றாக வந்திருக்கும்.

முதல் கடிதமும் அப்படித்தான். மனைவிக்கு கடிதம் எழுதும் கணவன். என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் எதையோ எழுதி அனுப்பும் 12 வயது மனைவி. அது அவனுக்கு பெரும் புதையலாக இருக்கிறது.

செல்லப்பா நிச்சயம் படிக்கக் கூடிய எழுத்தாளர். அவர் புதுமைப்பித்தனோ, ஜெயமோகனோ அல்லர். அவரது குரல் மெலிதாகவே ஒலிக்கிறது. பெரும் போராட்டங்களோ, உணர்ச்சிக் கொந்தளிப்புகளோ, மாபெரும் மானிட தரிசனங்களோ அவரது சிறுகதைகளில் தென்படவில்லை. சுப்ரபாரதிமணியன் போல வாழ்வின் சில தருணங்களைத்தான் காட்ட முயற்சிக்கிறார். அவற்றில் அசோகமித்திரன் போல பெரும் மானுட தரிசனங்கள் தெரிவதில்லை. (அசோகமித்திரனின் கசப்பும் இல்லை.) அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

சுதந்திரப் போராட்ட நாவல்கள்

மீள்பதிவு. இன்னும் நிறைய இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.ஆனால் இரண்டு வருஷத்துக்கு முன்னால் போட்ட பட்டியலில் இன்றும் பெரிதாக மாற்றமில்லை. உங்களுக்கு நினைவு வருவதை சொல்லுங்களேன்!

ரொம்ப நாளாச்சு ஒரு பட்டியல் போட்டு. ஆகஸ்ட் 15 வேற. போட்டுடுவோமே!

கண்ணதாசன்: ஊமையன் கோட்டை (ஊமைத்துரை)
கமலப்ரியா: கொங்குத் தங்கம் (தீரன் சின்னமலை பற்றிய நாவல்)
கல்கி: அலை ஓசை, தியாகபூமி, மகுடபதி
கா.சி. வேங்கடரமணி: முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன்
கு. ராஜவேலு: 1942
கோவி. மணிசேகரன்: மறவர் குல மாணிக்கங்கள்
சாண்டில்யன்: புரட்சிப் பெண்
சி.சு. செல்லப்பா: சுதந்திர தாகம்
சிதம்பர சுப்ரமணியன்: மண்ணில் தெரியுது வானம்
சுஜாதா: ரத்தம் ஒரே நிறம்
நா.பா.: ஆத்மாவின் ராகங்கள்
ப. சிங்காரம்: கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி
ர.சு. நல்லபெருமாள்: கல்லுக்குள் ஈரம்

இவற்றில் ஊமையன் கோட்டை, கொங்குத் தங்கம், மகுடபதி, மறவர் குல மாணிக்கங்கள், புரட்சிப் பெண் ஆகியவற்றை தவிர்த்துவிடலாம். அலை ஓசை, தியாகபூமி, முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், மண்ணில் தெரியுது வானம், கல்லுக்குள் ஈரம் எல்லாம் சுமார் ரகம். 1942, ஆத்மாவின் ராகங்கள், கடலுக்கு அப்பால்/புயலிலே ஒரு தோணி, சுதந்திர தாகம் இவற்றை நான் படித்ததில்லை.

இத்தனைதான் ஞாபகம் இருக்கிறது. நிச்சயமாக இன்னும் வந்திருக்க வேண்டும், உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

பிரமிள் தேர்வுகள்

பிரமிளின் இந்தக் கட்டுரை 1987-இல் அரும்பு என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது. தி.ஜா. ஃபேஸ்புக் குழுமத்தில் பார்த்தேன். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். அவர்களுக்கு நன்றி!


முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூக நிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்று கூட வீர்யம் குன்றாதவை.

இந்த ஆரம்பங்களை, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டு புறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல்களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகைபுலத்தை உபயோகிக்கிறபோது கூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ்வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத் தக்க எழுத்தையும் கூட படைத்தவர்கள் தி. ஜானகிராமனும் த. ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களை விட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.

இடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாக மட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித்துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.

நாவலை ஒரு கலைப் படைப்பாக சிறப்பிக்கக் கூடிய மனம் சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்பு தராது. வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒரு சில பக்கங்களுக்குள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம் இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப் போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக்குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த்தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா. சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்…

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். சுஜாதா பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விசேஷமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா?

மோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டு நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினைகளின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எந்த விதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங்களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடுகளின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.

உலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’ கூட ஜே.ஜே.யில் இல்லை. ஏனெனில், தன்னளவில் தர்க்கபூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வு நாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வு நாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வு நாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.

பின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும். (கீழுள்ள வரிசைக்கிரமத்துக்கு விசேஷ அர்த்தம் இல்லை.)

1. கமலாம்பாள் சரித்திரம்பி. ஆர். ராஜமையர்
2. பொய்த்தேவுக. நா. சுப்ரமண்யம்
3. நாகம்மாள்ஆர். ஷண்முகசுந்தரம்
4. ஒரு நாள்க. நா. சுப்ரமண்யம்
5. வாழ்ந்தவர் கெட்டால்க. நா. சுப்ரமண்யம்
6. அசுரகணம்க. நா. சுப்ரமண்யம்
7. ஜீவனாம்சம்சி.சு. செல்லப்பா
8. வாடிவாசல்சி.சு. செல்லப்பா
9. மோகமுள்தி. ஜானகிராமன்
10. புத்தம்வீடுஹெப்ஸிபா ஜேசுதாசன்
11. நிழல்கள்நகுலன்
12. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்த. ஜெயகாந்தன்

பொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

வ.ரா. பற்றி வெங்கட் சாமிநாதன்

va_raaஇந்தக் கட்டுரையையும் விக்கிமூலத்தில்தான் பார்த்தேன். “ஆ” என்ற எழுத்து மீது என்ன கோபமோ, அது எப்போதும் வெட்டப்பட்டுவிடுகிறது. உறுத்துகிறது…

விக்கிமூலக் குழுவினருக்கு நன்றி! (அங்கும் திருத்திவிட்டேன்.)

மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும். இருந்தாலும் வெ.சா.வின் எழுத்துக் கூர்மை தெரிகிறது.

கட்டுரை 1989-இல் எழுதப்பட்டது என்று தெரிகிறது. வ.ரா.வின் பல பரிமாணங்களை வெ.சா. நமக்குப் புரிய வைக்கிறார். ஆனால் பாரதிக்கு சமமான ஆகிருதி என்பது எனக்கு உயர்வு நவிற்சியாகத்தான் தெரிகிறது. அவரைப் போலவே சீரான நடை கொண்டவர்களாக திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, கல்கி என்று பலர் இருந்திருக்கிறார்கள்.

வ.ரா.வின் “நடைச்சித்திரம்” புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மஹாகவி பாரதியார் என்ற புத்தகமும் அருமையான ஒன்று. இணையத்தில் கிடைக்கிறது.


வ. ரா. வின் நூற்றாண்டு நினைவில்

வெங்கட் சாமிநாதன்

தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான துர்ப்பாக்கியம், கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுதுமையே ஆக்கிரமித்துக் கொண்டு அதை தம் தரங்கெட்ட செல்வாக்கினால் கெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும்தான். இந்த இரண்டு சக்திகளும் விளைவித்திருக்கும் கலாச்சார, அறிவார்த்த சீரழிவை தமிழ் மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்று வருகிறார்கள். வருடங்கள் கழிகின்றன. சீரழிவும் நாளுக்கு நாள் பெருக, அதற்கேற்ப மக்களின் இன்னும் அதிக உற்சாகத்தோடு அதை வரவேற்று மகிழ்கின்றனர்.

இந்த இரண்டு சக்திகளும் நாட்டைக் கெடுக்கின்றன. தம் சுயநலத்தைப் பேணுவதும் தம் பிம்பத்தைப் பூதாகாரமாக வளர்த்துக் கொள்வதுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கம் கலப்படமற்றது. இவர்கள் நாட்டைச் சுரண்டுகிறார்களே தவிர சமூகத்திற்கு இவர்கள் ஏதும் கொடுப்பதில்லை. பாமரத்தனமும் இரைச்சலிடும் ஆபாசமும் நிறைந்த இந்த சமயத்தில், தன் அறிவார்த்த தைரியத்திற்கும், எந்த அபத்தத்தையும் எக்காரணம் தொட்டும் சகித்துக் கொள்ளாத புரட்சியாளனுமான, 1889-ல் பிறந்த வ.ரா. என்னும் எழுத்தாளனின் நூறாண்டு நினைவு தினம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், யாராலும் கொண்டாடப்படாமலும் வந்த சுவடு தெரியாமல் கழிந்துவிடும். இன்றைய தமிழ் சமூகத்தின் குணத்தை நாம் நன்கறிந்திருப்போமானால், வ.ரா. வை தமிழ் சமூகம் நினைவு கொண்டிருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்படவேண்டியிருக்கும்.

சுப்பிரமணிய பாரதியை ஒரு கவிஞராக மட்டுமே அவரது நெருங்கிய நண்பர்கள் அறிந்திருந்த காலத்தில், வ.ரா. பாரதியை வியந்து போற்றியவர். பாரதி இந்த நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் புதுச்சேரியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ்ந்து கொண்டிருந்தபோது, பாரதிக்கு உதவியாயிருந்த இளைஞர் அப்போதைய வ.ரா. பாரதியையின் வாழ்க்கையை எழுதிய முதல் புத்தகமே வ.ரா.வினதுதான். அது வெற்று வரலாறோ விமர்சனமோ அல்ல. பாரதி என்ற ஆதர்சத்தின் மதுவுண்ட பரவசம் அது. பாரதியின் தேச பக்திப் பாடல்களுக்காகவே கவி என்ற இடத்தை அவருக்குக் கொஞ்சம் யோசனையோடு பாரதியை சிலர் அங்கீகரித்த காலம் அது. அந்தச் சூழலில் வ.ரா. பாரதி என்னும் கவிஞருக்காகப் போராடியதும் விவாதித்ததும் தேவையான ஒன்றாகத்தான் இருந்தது. எனவே அது உணர்ச்சிவசப்பட்டது. சண்டைத் தொனி மேலோங்கியது. வ.ரா. பேசக் கிடைத்த மேடைகளில் எல்லாம், இருபதாம் நூற்றாண்டின் மகா கவி பாரதி என ஸ்தாபிப்பதில் தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையாயிருந்ததா என்று ஆச்சரியப்படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்.

வ.ரா. பிறந்தது ஒரு பிராமணக் குடும்பத்தில். அதிலும் மற்ற பிராமணர்களை விட தாம் தான் உயர்ந்தவர் என்று தீவிரமாக நம்பும் வைஷ்ணவ குலத்தில் பிறந்தார் அவர். ஆனால் அவர் ஆஸ்திகரும் அல்ல. நாஸ்திகரும் அல்ல. அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கு உள்ளவர். சாதி, மத வித்தியாசங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே முள்ளம்பன்றி சிலிர்த்தெழுவது போல சீற்றம் கொள்பவர்.

நாற்பதுக்களில், தீவிர நாஸ்திக பிரச்சாரமும், பிராமண எதிர்ப்பு சாதி ஒழிப்புப் பிரசாரமும் செய்து வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பாராட்டி ஒரு சிறு புத்தகமும் வ.ரா. எழுதினார். அது பிராமணர்களிடையே மட்டுமல்லாது, உயர்ஜாதி ஹிந்துக்கள் பெரும்பான்மையினரது கசப்பையும் எதிர்ப்பையும் அது சந்திக்க வேண்டி வந்தது. தமிழ்நாட்டுப் பெரியார்கள் என்ற தனது புத்தகத்தில் ஈ.வே.ரா.வையும் தமிழ் நாட்டுப் பெரியார்களின் வரிசையில் சேர்த்துப் பாராட்டி எழுதினார். இப்புத்தகம் எழுதப்பட்டது 1945-46-ல். அப்போது ஈ.வே.ரா.வின் திராவிட இயக்கம் காங்கிரஸை எதிர்த்தது, பிரிட்டீஷ் அரசாங்கத்தை ஆதரித்தது. பின் வருடங்களில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த பலத்த வரவேற்பு அப்போது இருக்கவில்லை. திராவிட இயக்கத்திற்கு அப்போது தமிழ் நாட்டில் தீவிர எதிர்ப்பு இருந்தது. வ.ரா.வுக்கும் ஈ.வே.ரா.வுக்கும் இடையே காணக் கூடும் ஒரு பொது நோக்கு சாதியை எதிர்த்த சமூக சீர்திருத்தமும் பழமைவாத எதிர்ப்பும்தான். இவற்றை மட்டும் பார்த்த வ.ரா.வுக்கு ஈ.வே.ரா.வின் வசைகளும். அவரது வாதங்களின் தரமற்ற குணமும், பிராமணர்களை மாத்திரம் குறி வைத்த, பார்வை குறுகிய ஜாதி எதிர்ப்பு, நாஸ்திகம் போன்ற எதையும் பார்க்கத் தவறினார். நடைமுறையில் ஈ.வே.ரா.வின் ஜாதி எதிர்ப்பும் நாஸ்திகப் பிரசாரமும் பிராமண எதிர்ப்பு என்ற அளவிலேயே இருந்தது. அவரது நோக்கமே அந்த அளவில் குறுகியதுதான். வ.ரா.வுக்கு அறுபதாண்டு நிறைந்ததை ஒட்டி, அவர் தம் வாழ்நாளில் தமிழ் இலக்கியத்திற்கும், சிந்தனைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழாவைப் பற்றி, ஈ.வே.ரா.வின் பிரசார தின இதழான விடுதலை அதைக் கிண்டல் செய்து தாக்கி நீண்ட தலையங்கமே எழுதியது ஈ.வே.ரா.வின், அவரது திராவிட இயக்கத்தின் சாரமான குணாம்சத்தைத்தான் வெளிப்படுத்தியது.

வ.ரா. நாவல்கள் எழுதினார். வாழ்க்கையின் எல்லா தரப்பு, தரத்து மக்களை பற்றியும், வீட்டு வேலைக்காரிகள் முதல், அமைச்சர்கள் வரை அத்தனை பேரைப் பற்றியும் நடைச்சித்திரங்கள் என ஒரு புது வகை வடிவத்தைக் கையாண்டார். அவற்றில் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தன் பார்வையை, விமர்சனத்தையும் தன் சிந்தனைகளையும் வெளிப்படுத்தினார். அவரை ஒரு சிருஷ்டி எழுத்தாளர் என்பதை விட சிந்தனையாளர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர் ஒரு கோபக்கார மனிதராக இருந்தார். அவரது கோபம் சமூகத்தின் மீதும், அவரைச் சுற்றியிருந்த மனிதர்கள் மீதும், அவர்கள் கொண்டிருந்த பழமையாகிப் போன வாழ்க்கை மதிப்பீடுகள் எல்லாம் மீதுமாக இருந்தது. அவர் காலத்திய மனிதர்கள் தம் மூதாதையர்களிடமிருந்து பெற்ற எதையும் கேள்வியற்று, அவற்றைப் பற்றி சிந்திக்காது அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கண்டு கோபம் கொண்டார். அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்ட பழம் மதிப்புகளும், நடைமுறைகளும் எவ்வளவு கொடுமையானவை, நியாயமற்றவை என்பது பற்றி அவர்கள் சிந்திக்காதது கண்டு கோபம் கொண்டார். அவர் நாவலோ, நடைச்சித்திரமோ எதை எழுத ஆரம்பித்தாலும், அவர் கோபம்தான் பொங்கி எழுந்து அதை அவர் கருத்துக்களுக்கான மேடையாக்கிவிடும்

சிந்தனையாளராக, அவர் தமிழ் மண்ணில் தனித்துத் தன் பாதையில் செல்பவராக இருந்தார். அவருடைய புரட்சிகரமான, வழக்கத்துக்கு மாறான கருத்துக்களை மற்றவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது மற்றி அவர் கவலைப்பட்டவரில்லை. அவர் கருத்துக்களைச் சொல்ல அவர் கையாண்ட தமிழ் நடை, சின்னச் சின்ன அலங்காரமற்ற, எதையும் நேராக மனத்தில் உடனே பதிய வைக்கும் எளிய ஆனால் சக்தி வாய்ந்த நடை. சீண்டி விடப்பட்ட முள்ளம்பன்றி தன் உடல் சிலுப்பி முட்களை விரித்துத் தாக்கத் தயாராவது போலத்தான், வ.ரா.வின் சொற்கள் அம்புகளாகப் பாயும். அவர் எழுத்துக்களைப் பற்றிச் சொன்ன இந்த குணச்சித்திரம் வ.ரா. என்ற மனிதரைப் பற்றிச் சொன்னதாக எடுத்துக் கொண்டாலும் அதில் தவறு ஏதும் இராது. அவர் தன் எழுத்துக்களில் தன்னைத் தான் தன் சீற்றத்தைத் தான் கொட்டி அமைதி அடைந்தார். அவர் வெகு எளிதாக, அநாயாசமாக, வார்த்தைகளைத் தேட வேண்டாது, கருத்துக்களைச் சொல்வதில் சிரமமில்லாது, தயக்கம், யோசனை என்ற தடங்கல்கள் ஏதும் இன்றி ஒரு அடித்தல் திருத்தல் இல்லாது எழுதிவிடுவார். அவர் எழுத்தின் எளிமைத் தோற்றம் ஏமாற்றும். அவர் நிறைய எழுதிய இந்த நூற்றாண்டின் இருபது முப்பதுகளில், தமிழில் இவ்வளவு சாதாரண அன்றாட புழக்கத்தின் வார்த்தைகளைக் கொண்டு இவ்வளவு சக்தி வாய்ந்த வெடித்துச் சிதறும் எழுத்து சாத்தியமா என்று நினைத்துப் பார்க்கவில்லை யாரும். தன் எளிய வார்த்தைகளுக்கு அத்தகைய சக்தியை அளித்ததும் சிருஷ்டி சார்ந்த செயல்தான். இன்னும் சில விஷயங்களிலும் அவரது சிருஷ்டிகர ஆளுமை வெளிப்பட்டது. முப்பது நாற்பதுகள் நவீன தமிழ் இலக்கியத்தின், கலைகளின் மறுமலர்ச்சி காலம் என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் மலர்ந்த எழுத்தாளர் பெரும்பாலோருக்கு (எல்லோருக்கும் என்று கூட சொல்லத் தோன்றுகிறது) அவர் தந்தை ஸ்தானம் பெற்றவராக இருந்தார். அந்த மறுமலர்ச்சி கால கட்டத்தில் தோன்றிய சிருஷ்டி எழுத்தாளர் கூட்டம் முழுதுக்குமே அவர் வழிகாட்டியாக, ஆதர்ச புருஷராக, தரவாளராக, அவர்களில் சிலரை அவரே கண்டெடுத்தவராக இருந்தார். இப்படி எழுத்துத் திறன்களை அவர் கண்டு வெளிக்கொணரும் ஒவ்வொரு சமயமும் அவர் காட்டும் உற்சாகமும் சொரியும் புகழுரைகளும் தன்னையறியாது வெளிவருவனவாக, இயல்பான ஒன்றாக இருந்த போதிலும் அதில் ஒரு நாடக பாவம் மேலோங்கியிருக்கும். நேரிலும் சரி, கடித பரிமாற்றத்திலும் சரி. இவ்வாறு நல்ல எழுத்துத் திறன் கொண்ட ஒருவரை வ.ரா. அறிய நேர்ந்து, அவரது எழுத்துத் திறன் மலர தடங்கலாக வேறு ஏதும் வேலையில் ஈடுபட்டவராக இருப்பின், அவரை அந்த வேலையை விட்டு சென்னைக்கு வந்து எழுத்திலேயே முழு நேரமும் ஈடுபடும்படி சொல்வார், வலியுறுத்துவார்.

பின்னாட்களில் புகழ் பெற்ற, தமிழ் இலக்கியத்தில் தம் பெயர் ஸ்தாபித்த எத்தனையோ எழுத்தாளர்கள், தம்மிடம் மறைந்திருந்த எழுத்துத் திறனைக் கண்டுபிடித்ததும், அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்து உற்சாகப்படுத்தியதும் வ.ரா.தான் என்று தம் நினைவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். தாம் முன்னிருந்த வேலையை விட்டு வரமுடியாத, எழுத்தை நம்பி மேற்கொள்ள இயலாது இருந்த சூழ்நிலையில் வ.ரா.வின் அயராத தூண்டுதலும், கொடுத்த உற்சாகமும்தான் அவர்கள் எழுத்துத் துறைக்கு வர காரணமாக இருந்ததென்று சொல்லியிருக்கிறார்கள்.

உப்பு சத்தியாக்கிரஹத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர் கொஞ்ச காலம் அரசியல் கைதியாக அலிப்பூர் சிறை வாசம் அனுபவித்தார். சிறைவாசம் கழிந்து வெளியே வந்ததும், இன்றைய தமிழ் இலக்கியத்தின் நவீனத்வத்திற்கு காரணமாக இருந்த, உருவாக்கிய மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராகச் சேர்ந்தார். மணிக்கொடி பத்திரிகை தமிழ் மக்களிடையே தேசீய சுதந்திர உணர்வைப் பேணுவதற்கு என்று ஒரு அரசியல் மேடையாகத்தான் அது திட்டமிடப்பட்டது, தொடங்கப்பட்டது. ஆனால் வ.ரா. அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றதும், தேசிய உணர்வும் சுதந்திரப் பிரக்ஞையும், வெடித்துச் சிதறி அதன் தீக்கங்குகளை, சமூகம், இலக்கியம், கலை என எல்லாத் தளங்களிலும் வீசி பொறி பற்றச் செய்தது. இது வரை காணாத திசைகளில் எல்லாம், அப்பொறி பற்றியது. அவ்வாறு பொறி தெரித்து விழுந்தது சிருஷ்டி இலக்கியத்திலும்.

பின்னர் இது மணிக்கொடி காலம் என்றே அறியப்பட்டது. 1910-20 இருபதுகளில் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் பாரதியின் கவிதா மண்டலத்தில் தான் கண்ட பாரதிதாசன் என்னும் அப்போது மலர்ந்து வந்த கவிஞனை தன் வழக்கமான சுபாவத்திற்கேற்ப, சென்னைக்கு வரத் தூண்டி அவரை மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, மணிக்கொடியில் அவர் கவிதைகளையும் வெளியிட்டார். பின் வருடங்களில் பாரதிதாசன், திராவிட கழகப் பிரசாரகராக மாறி பிராமணரையும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து பிரசார கவிதைகள் எழுதினார் என்பது தனிக்கதை. இருப்பினும் வ.ரா. தன் பார்வையிலும் நம்பிக்கைகளிலும் உறுதியாகவே இருந்தார். தளர்ந்தவரில்லை. தன் கருத்துக்களுக்குத் தானே பொறுப்பேற்றார். அவர் எவரிடமிருந்தாவது ஆதர்சம் பெற்றார் எனில் அவர் பாரதியைத்தான் சொல்வார். அவரது பார்வையும் கருத்துக்களும் அவரதே.

தமிழ் நாட்டில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாகத் தம் பங்களிப்பைத் தந்தவர்கள் என்று பொது வாழ்க்கையில் கண்ட பத்துப் பேரைப் பற்றிய வ.ரா.வின் மதிப்பீடுகள் கொண்ட ஒரு புத்தகம் தமிழ் நாட்டுப் பெரியார்கள். இது வெளிவந்தது நாற்பதுகளில். இது என்ன அவ்வளவு சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமா என்று தோன்றலாம். விஷயம் என்னவென்றால், வ.ரா. வின் பெரியார்கள் என்ற மதிப்பீட்டில் ஒருவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர். திராவிட கழத்தைத் தோற்றுவித்த அக்கழகத்தின் தலைவர். தமிழ் நாடு முழுதும் தேசீய உணர்வு பெருகிப் பொங்கி எழுந்த கால கட்டத்தில், வேண்டாத ஒரு உறுத்தலாக இருந்தவர். என்.எஸ். கிருஷ்ணன் என்ற சினிமா நகைச்சுவை நடிகர். கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்த பஃபூன் என்ற சித்திரம்தான் அக்காலத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பற்றி எழுந்திருக்கும். கே.பி. சுந்தராம்பாள் இன்னொருவர். நாடகங்களில் பாட ஆரம்பித்து சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த நடிகை. எவரிடமும் சிட்சைஷயின்றி தானே சங்கீதம் கற்றவர். உச்ச ஸ்தாயியில் ஆயிரம் பேர் கேட்க பிசிறில்லாமல் பாட வல்லவர். சுதந்திரத்திற்கு முந்திய அக்கால காங்கிரஸ் கட்சியின் பிரசார மேடைகளில் தேசீய பாடல்களைப் பாடுபவர். இன்று கூட, கே.பி.சுந்தராம்பாள், என். எஸ். கிருஷ்ணன் போன்றாரை தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்று சொல்வதா என்று கேட்பவர்கள் கட்டாயம் இருப்பார்கள். ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் வ.ரா. அவர்களைத் தமிழ் நாட்டுப் பெரியார்களாக கணித்து அது பற்றி எழுதவும் செய்தார். அதுதான் வ.ரா.

இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு பத்துக்களில் பாரதி பெரிய இலக்கிய சக்தியாகத் திகழ்ந்தார் என்றால், அடுத்த இரண்டு பத்துக்களில் பாரதிக்கு வாரிசாகக் கருதப்படவேண்டியவர் வ.ரா. கலாச்சாரத்தின் எல்லாத் துறைகளிலும் அவர் ஒரு தூண்டும் சக்தியாக இருந்தார். தமிழ் நாடு அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தமிழ் நாட்டின் பாச கலாச்சாரச் சீரழிவில், வ.ரா.வின் முக்கியத்துவமோ, தமிழ்நாடு அவருக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறது என்பதோ அது அறிந்திருக்கவில்லை. இரைச்சலிடும் சுவர் வாசகங்களும், சினிமா சுவரொட்டிகளுமாகக் காட்சியளிக்கும் தமிழ் நாட்டிற்கு அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும்தான் தெய்வங்கள்.

வ.ரா. 1951-ல், தனது 62வது வயதில் இறந்து விட்டார். அவர் கண்டெடுத்த வளர்த்த எழுத்தாளர்களில் இருவர்தான் இப்போது நம்மிடையே உள்ளார்கள். சிட்டி என்று அறியப்படும், பெ.கொ.சுந்தரராஜனும், சி.சு. செல்லப்பாவும். தமது எழுபதாவது வயதை எட்டியுள்ள இவர்கள் இருவரும்தான் வ.ரா.வின் இந்த நூற்றாண்டு தினத்தில் அவரை நினைவு கொள்பவர்கள், அவரோடு பழகியவர்கள். இவர்களுக்குப் பின் வ.ரா.வின் பெயரை யாரும் கேட்கப் போவதில்லை.

ஈ.வே.ரா வின் வழிவந்தவர்கள், அவர்கள் சொல்லிக் கொள்ளும் கொள்கைகளுக்கு உண்மையாகவிருப்பின், வ.ரா.வை தமிழ் நாடு மறக்காது நினைவுபடுத்துவர்களில் முன்னிற்பவர்களாக இருந்திருக்க வேண்டும். வ.ரா வின் எழுத்துக்களை வரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்பவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் திராவிடக் கழகத்தினரும் அல்லது அதிலிருந்து பிரிந்துள்ள மற்ற கழகத்தினரும் ஜாதி வேற்றுமைகளையும் பிராமணப் பழமை வாதத்தையும் எதிர்த்த அளவு வ.ரா.வும் எதிர்த்துக் கண்டனம் செய்தவர்தான். திராவிட கழகத்திலிருந்து பிரிந்த கழகங்களில் ஒன்றல்லது மற்றது 1967 லிருந்து தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் கழகங்கள் எதிர்த்த ஜாதீயம் பிராமணர்களை மாத்திரம் குறி வைத்ததுதான். உயர்ஜாதி ஹிந்து வகுப்பினரின் ஜாதீயம் பற்றி யாருக்கும் நினைப்பில்லை அது தொடப்படாமலேயே இன்று வரை சீரும் சிறப்புமாக வளர்ந்துள்ளது. இன்று வ.ரா.வின் ஜாதீய எதிர்ப்பையும் ஆஸ்திக எதிர்ப்பையும் நினைவு கொள்வது சங்கடமான காரியம். ஏனெனில், வ.ரா. ஒரு பிராமணராகிப் போனது; அவர் ஒரு கலைஞனின் அறிஞனின் மொழியில் பேசியது.

ஆங்கிலம்: A Rebel against Orthodoxy: Patriot, New Delhi 15.10.1989.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் – சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் நான் மீள்பதிக்கும் பதிவு இது. யாராவது மாட்டுப் பொங்கல் கதைகளை கொடுப்பார்களா என்று பார்க்கிறேன், ஒருவரும் வரமாட்டேன் என்கிறீர்களே!

மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் என்ற குறுநாவல்தான் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்‘ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை என்பதும் ஒரு நல்ல ஜல்லிக்கட்டு சிறுகதை.

உங்களுக்கு நினைவிருக்கும் நல்ல மாட்டுப்பொங்கல், பொங்கல், ஜல்லிக்கட்டு கதைகள் பற்றி எழுதுங்களேன்!

பிற்சேர்க்கை:
இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது,

சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சமும் எனக்கு மிகப் பிடித்தது. வாடிவாசல் புற உலகில் வெற்றி கொள்ளும் ஒருவனின் எண்ணம் முற்றிலும் அவன் அக உலக ஓட்டத்தை ஒட்டியே இருக்கும். ஜீவனாம்சத்தில் புழக்கடையைத் தாண்டாத பெண்ணின் மனமும் செயலும் வீட்டிற்கு வெளியேயே எப்பொழுதும் சுற்றி வருகிறது. இரண்டையும் அடுத்தடுத்த நாட்களில் படித்த பொழுது ஒரு வேளை இதை அவர் திட்டமிட்டே ஒரு contrast ஆக எழுதினாரோ என எண்ணத் தோன்றியது.

அவரின் சரசாவின் பொம்மை சிறுகதையை நான் வெகு நாட்களாகத் தேடி வருகிறேன்.

மொழிபெயர்ப்பு நன்றாக வர வேண்டும் என வாழ்த்துவோம். நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


தொடர்புடைய சுட்டிகள்:
நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம்
வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்
வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன்

asokamithranஹிந்து பத்திரிகையில் அசோகமித்ரன் எழுதி இருக்கும் கட்டுரை. கட்டுரை அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை. பிறகு எதற்காக இந்தப் பதிவு என்கிறீர்களா?

சமீப காலமாக வாசிப்பு அனுபவம் என்பது அவரவருக்கு மட்டுமே புரியக் கூடியது, மற்றவர்களுக்கெல்லாம் புரிய வைத்துவிட முடியாது என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. இதில் என்ன இழவுக்காக சிலிகான் ஷெல்ஃபும் இன்னொன்றும், படித்தோமா, அத்தோடு விட்டுவிட வேண்டியதுதானே என்று அவ்வப்போது அலுத்துக் கொள்கிறேன். பாருங்கள், அசோகமித்ரன் மாதிரி மேதையே தன் வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர வைக்க முடியவில்லை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?

விமரிசனத்தின் குணமே அதுதானே? ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இன்னும் பல நூறு வருஷங்கள் படிக்கப்படும், நடிக்கப்படும். கோடி கோடிப் பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் நாடக விமர்சனங்களை யார் சீந்துவார்கள்? படைப்பு முக்கியம், விமரிசனம் என்பது சும்மா முதுகு சொரிவதுதான். தன் வாசிப்பு அனுபவத்தை மற்றவருக்கு சொல்ல வேண்டும் என்ற அரிப்புதான். அதன் முக்கியப் பங்களிப்பே நல்ல படைப்பு இது என்ற தகவலை அடுத்தவருக்கு சொல்லுவதுதான். அசோகமித்ரனின் இந்தக் கட்டுரையின் takeaway என்பது என்னைப் பொறுத்த வரையில் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது, தமிழ் படிக்கத் தெரியாத நண்பர்களுக்கு வாங்கித் தரலாம் என்பதுதான்.

ka.naa.su.படித்திருக்கிறீர்களா என்ற க.நா.சு. புத்தகத்தைப் பற்றி பல முறை குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு முன்னால் சாயாவனம், சில புதுமைப்பித்தன் கதைகள், சில ஜெயகாந்தன் நாவல்கள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றைப் படித்திருந்தாலும் க.நா.சு. பரிந்துரைகளைப் படிக்கும் முன்னர் தமிழில் நல்ல உரைநடை இலக்கியம் உண்டு என்று நான் உணர்ந்ததில்லை. அந்தப் புத்தகம் என் கண்களைத் திறந்தது. அதற்குப் பிறகுதான் நான் தமிழில் இலக்கியப் படைப்புகளைத் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினேன். ஆனால் க.நா.சு. குறிப்பிட்ட பல புத்தகங்கள் – இதய நாதம், நாகம்மாள், கரித்துண்டு – எனக்கு பெரும் இலக்கியப் படைப்புகள் அல்ல. அழகிரிசாமியின் சிறுகதைத் தொகுப்பில் நல்ல சிறுகதைகளைத் தேட வேண்டி இருக்கிறது. நான் அவரோடு முழுமையாக இசைவது புதுமைப்பித்தன் விஷயத்தில் மட்டும்தான். என்னை விடத் தேர்ந்த வாசகர் என்று நான் கருதும் க.நா.சு. பரிந்துரைக்கும் பல இலக்கியப் படைப்புகள் என்னைப் பொறுத்த வரையில் வெற்றி பெறாதவையே என்றால் அவரது படிப்பு அனுபவம் எனக்கு கைகூடவில்லை, என் படிப்பு அனுபவம் அவருக்கு கைகூடவில்லை என்றுதானே பொருள்?

ஆனால் அதே நேரத்தில் படித்திருக்கிறீர்களா என்னைப் பொறுத்த வரையில் ஒரு seminal புத்தகம்தான். அந்தப் புத்தகத்திலிருந்து நான் பெரும் இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லைதான்; ஆனால் தமிழில் பெரும் இலக்கியங்கள் உண்டு என்று தெரிந்து கொண்டேன். சுஜாதாவின் இலக்கியப் பங்களிப்பு அவரது தாக்கத்தை விட பல மடங்கு குறைந்தது என்று திடீரென்று புரிந்தது. சாண்டில்யனும் அகிலனும் சிவசங்கரியும் வாசந்தியும்தான் பிற முக்கியத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது வெறும் டைம் பாஸ், சிலருக்கு சிகரெட், வெற்றிலை பாக்கு, எனக்கு தமிழ் புத்தகங்கள் என்ற இளக்காரப் பார்வை இந்தப் புத்தகத்தை சுப்ரபாரதிமணியன் நடத்திய செகந்தராபாத் புத்தகக் கண்காட்சியில் வாங்கி அங்கேயே கீஸ் பள்ளித் தாழ்வாரத்தில் உட்கார்ந்து புத்தகத்தை ஒரே மூச்சில் படித்தபோதே செத்துவிட்டது.

ஆனால் இந்தப் புத்தகம் எல்லாரிடமும் இதே விளைவை ஏற்படுத்துமா என்ன? நான் அன்றிருந்த மனநிலையில், எனக்கு ஏற்பட்ட வாசிப்பு அனுபவம் இந்தப் புத்த்கத்தை என் அளவில் உயர்த்துகிறது. இது எல்லாருக்கும் பொருந்த வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை.

என்றாவது, யாராவது ஒருவராவது, இந்தத் தளத்தின் மூலம் சில நல்ல புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன், அவற்றைப் படித்தேன் என்று சொன்னால் இந்தத் தளம் வெற்றி பெற்றிருக்கிறது என்று உணர்வேன்.

வாடிவாசல், அசோகமித்ரன் என்று ஆரம்பித்து படித்திருக்கிறீர்களா, க.நா.சு. சிலிகன் ஷெல்ஃப் என்று முடித்திருக்கிறேன். யாராவது எடிட்டர் இருந்தால் தலைப்பை மாத்துய்யா என்று கடிந்து கொள்வார். 🙂


தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புள்ள சுட்டிகள்:
வாடிவாசல் பற்றி ஆர்வி
படித்திருக்கிறீர்களா புத்தகம்
என் அலுப்புக்கு ஜெயமோகன் பதில்

தொடரும் அசோகமித்ரன் சிபாரிசுகள்

அசோகமித்ரன் சிபாரிசுகள் பதிவில் அவர் நவீனப் புனைவுகளிலிருந்து எதையுமே தேர்ந்தெடுக்காதது வியப்படைய வைத்ததைப் பற்றி எழுதி இருந்தேன். நண்பர் கோபி அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, டாக்டர் பாண்டுரங்கன் மூவரும் நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படைப்புகளைப் பற்றி ஒரு சுட்டி கொடுத்திருந்தார். இதில் பழந்தமிழ் இலக்கியத்தோடு நின்றுவிடாமல் பல நவீன உரைநடைப் படைப்புகளும் குறிப்பிடப்படுகின்றன.

அவரது முழு பதிவையும் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். இருந்தாலும் வசதிக்காக லிஸ்டை கீழே கொடுத்திருக்கிறேன். லிஸ்டையும் என் இஷ்டத்துக்கு வரிசை மாற்றி பதித்திருக்கிறேன். (வேறு ஒன்றுமில்லை, பழந்தமிழ் இலக்கியம், கவிதைகளை ஒரு பகுதியாகவும், நவீன உரைநடை நாவல்களை இன்னொரு பகுதியாகவும் போட்டிருக்கிறேன், எனக்குத் தெரிந்தவரை காலவரிசைப்படுத்தி இருக்கிறேன். தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், திருத்திவிடலாம்.)

பழந்தமிழ் இலக்கியம்+கவிதைகள்

  1. குறுந்தொகை
  2. கலித்தொகை
  3. புறநானூறு
  4. முல்லைப்பாட்டு – நப்பூதனார்
  5. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
  6. திருக்குறள்
  7. திருவாய்மொழி
  8. திருவாசகம்
  9. திருமந்திரம் – திருமூலர்
  10. சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்
  11. கம்ப ராமாயணம்
  12. பெரிய புராணம் – சேக்கிழார்
  13. சிவவாக்கியர்
  14. நந்தன் சரித்திர கீர்த்தனை – கோபால கிருஷ்ண பாரதி
  15. திருவருட்பா – ராமலிங்க சுவாமிகள்
  16. குயில் பாட்டு – பாரதியார்
  17. குடும்ப விளக்கு – பாரதிதாசன்

நாவல்+சிறுகதைகள்

  1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  2. பத்மாவதி சரித்திரம் – ஆ. மாதவையா
  3. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  4. தியாகபூமிகல்கி
  5. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
  6. பொய்த்தேவுக.நா.சு.
  7. வாடிவாசல் – சி.சு. செல்லப்பா
  8. மோகமுள் – தி. ஜானகிராமன்
  9. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
  10. சாயாவனம் – சா. கந்தசாமி
  11. வேருக்கு நீர் – ராஜம் கிருஷ்ணன்
  12. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  13. சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
  14. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி
  15. பதினெட்டாவது அட்சக்கோடுஅசோகமித்ரன்
  16. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி
  17. ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகம்மது மீரான்

இந்த சிபாரிசுகளில் குயில் பாட்டு எனக்குப் பிடித்த பாரதியார் கவிதைகளில் ஒன்று. (ஆனால் பதின்ம வயதில் படித்தது, மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.) மிச்ச கவிதை இலக்கியத்தைப் பற்றி பேசும் தகுதி எனக்கில்லை.

நவீன உரைநடை சிபாரிசுகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையே – தியாகபூமி, நாகம்மாள், குருதிப்புனல் தவிர. இவை மூன்றும் இந்த லிஸ்டில் இருக்கக் கூடாது என்பது என் கருத்து. என் டாப் டன்னுக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உண்டு, ஆனால் அவை ரசனை வேறுபாடுகள்.

தொடர்புடைய சுட்டிகள்:

  • அசோகமித்ரன் சிபாரிசுகள் Part 1
  • கோபியின் பதிவு
  • கோபி அப்பவே பதிக்கச் சொன்னார், எனக்குத்தான் தாமதம் ஆகிவிட்டது. கோபி மன்னிக்க வேண்டும்.