டோபா டேக் சிங் (உருதுக் கதை)

இன்று உருதுவில் எழுதப்பட்ட ஒரு கதையை மொழிபெயர்த்திருக்கிறேன். எழுதியவர் சாதத் ஹாசன் மாண்டோ. மாண்டோ உருதுவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று கருதப்படுபவர். இந்தியாவில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குப் போனவர். பிரிவினையைப் பற்றி பல கதைகள் எழுதி இருக்கிறார்.

டோபா டேக் சிங் அவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது. என் கண்ணில் பல குறைகள் தென்படுகின்றன, நான் இதை என் anthology-இல் சேர்க்கமாட்டேன். ஆனாலும் நல்ல கதை, படிக்க வேண்டிய கதை என்று கருதுகிறேன். பிரிவினை எப்பேர்ப்பட்ட அடி என்பதை அவர் கதைகளில் உணர முடிகிறது. ஆனால் கலைத்தன்மை என்பது குறைவுதான். குரூரம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில் வெளிப்பட்டதை நேரடியாக காட்டுகிறார், அவ்வளவுதான். குறிப்பாக தண்டா கோஷ்ட் கதையில். அவரது Wages of Labor நல்ல denouement உள்ளது. க

எனக்கு மொழிபெயர்ப்பதில் – குறிப்பாக ஹிந்தி/பஞ்சாபி வார்த்தைகளை மொழிபெயர்ப்பதில் கொஞ்சம் ததிங்கினத்தோம்தான். லால்டீன் என்றால் என்ன என்று தெரியவில்லை சிவப்பு நிறம் என்று எழுதி இருக்கிறேன். 🙂 மூங் தாலுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை, உளுத்தம்பருப்பு என்று எழுதி இருக்கிறேன். உரத் தால்தான் உளுத்தம்பருப்பு. பாசிப்பருப்பு. பேசாமல் ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்கிறோம் என்பவர்களுக்காக இந்த சுட்டி. (எனக்கு உருது எல்லாம் தெரியாது, உருதுவிலிருந்து யாரோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், அதைத்தான் நான் தமிழில்)

பில்டப் போதும் என்று நினைக்கிறேன். கதை கீழே.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இரண்டு மூன்று வருஷத்துக்குப் பிறகு இரு அரசுகளும் கைதிகளை மாற்றிக் கொண்டது போல பைத்தியக்காரர்களையும் மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. அதாவது இந்திய பைத்தியக்கார மருத்துவமனைகளில் உள்ள முஸ்லிம் பைத்தியக்காரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாகிஸ்தானிய பைத்தியக்கார மருத்துவமனைகளில் உள்ள ஹிந்து மற்றும் சீக்கிய பைத்தியக்காரர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானித்தன.

இது புத்திசாலித்தனமான முடிவா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. எப்படி இருந்தாலும் இந்த பைத்தியக்காரர் மாற்றம் நடைபெற வேண்டிய தேதியை இரு தரப்பு உயர் அதிகாரிகளும் முடிவு செய்துவிட்டார்கள். எல்லா விவரங்களையும் தீர்மானித்து விட்டார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம் பைத்தியக்காரர்களுக்கு இந்தியாவிலேயே யாராவது உறவினர் இருந்தால் அவர்கள் அங்கேயே தங்கலாம். அப்படி இல்லை என்றால் போயாக வேண்டும். இங்கே பாகிஸ்தானில் இருந்து அனேகமாக எல்லா ஹிந்துக்களும் சீக்கியர்களும் போய்விட்டார்கள், எனவே இந்த உறவினர் என்ற கேள்வியே எழவில்லை. எல்லாரையும் அனுப்ப வேண்டியதுதான்.

இந்தியாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே லாகூர் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு விஷயம் தெரிந்தபோது அங்கே தங்கி இருந்த பைத்தியங்கள் எல்லாம் இந்த செய்தியை காரசாரமாக விவாதித்தன. அங்கே இருந்த ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர் பனிரண்டு வருஷமாக தவறாமல் “ஜமீந்தார்” செய்தித்தாள் படிப்பவர். அவரது நண்பர் ஒருவர் அவரைக் கேட்டார்: “மவுல்வி சாஹேப்! இந்த பாகிஸ்தான் என்பது என்ன?” ஆழ்ந்து யோசித்த பிறகு மவுல்வி சாஹேப் சொன்னார் – “அது இந்தியாவில் ஷேவிங் ரேசர் செட் உற்பத்தி செய்யும் ஒரு இடம்.”

அந்த பதிலைக் கேட்டதும், மவுல்வி சாஹபின் நண்பர் திருப்தி அடைந்தார்.

ஒரு சீக்கியப் பைத்தியக்காரர் இன்னொரு சீக்கியப் பைத்தியக்காரரைக் கேட்டார்: “சர்தார்ஜி, நம்மை எதற்கு இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்? நமக்கு அங்கே பேசப்படும் பாஷை கூடத் தெரியாது.”

அந்த சர்தார்ஜி புன்னகையோடு சொன்னார்: “எனக்கு இந்திய பாஷை புரியும். இந்தியர்கள் எல்லாரும் திமிர் பிடித்த சைத்தான்கள்.”

குளிக்கும்போது ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர் மிகுந்த உத்வேகத்தோடு “பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” என்று கத்தினார். உத்வேகம் மிக அதிகமாக இருந்ததால் கத்தும்போதே தரையில் வழுக்கி விழுந்து மயக்கமானார்.

மருத்துவமனைகளில் இருந்த சிலர் உண்மையில் பைத்தியங்கள் இல்லை. அப்படிப்பட்ட போலிப் பைத்தியங்களில் அநேகமானவர்கள் கொலைகாரர்கள். அவர்களது குடும்பங்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை பைத்தியம் என்று அறிவித்து தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றி இருந்தன. அவர்களுக்கு ஓரளவு இந்தியா ஏன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, பாகிஸ்தான் என்றால் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா விவரங்களும் தெரியவில்லை. செய்தித்தாள்களில் எல்லா விவரங்களும் வரவும் இல்லை. அவர்களை காவல் காத்தவர்கள் அனேகமாக படிப்பறிவில்லாதவர்கள், அவர்களுக்கும் நிறைய விவரங்கள் தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காயிதே-ஆஜம் முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்பதுதான். அந்த பாகிஸ்தான் எங்கே இருக்கிறது, அதன் எல்லைகள் என்ன என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் இந்த போலிப் பைத்தியங்களும் தாங்கள் இப்போது இருப்பது இந்தியாவா பாகிஸ்தானா என்று தெரியாமல் குழம்பினார்கள். இப்போது இருப்பது இந்தியாதான் என்றால் பாகிஸ்தான் எங்கே இருக்கிறது? இப்போது இருப்பது பாகிஸ்தான் என்றால், அதை எப்படி இரண்டு மூன்று வருஷம் முன்னால் கூட இந்தியா என்று அழைத்தார்கள்?

ஒரு பைத்தியக்காரர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி யோசித்து யோசித்து இன்னும் குழம்பிப் போனார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இரண்டு மணி நேரம் மூச்சு விடாமல் பிரிவினையின் சாதக பாதகங்களைப் பற்றி உரையாற்றினார். மருத்துவனமனைக் காவலர்கள் அவரைக் கீழே வரும்படி சொன்னபோது அவர் இன்னும் மேலே ஏறிக்கொண்டார். அவர்கள் அவரை பயமுறுத்த ஆரம்பித்தபோது அவர் சொன்னார்: “நான் இந்தியாவிலும் வாழ மாட்டேன், பாகிஸ்தானிலும் வாழ மாட்டேன். இந்த மரத்தில்தான் வாழப் போகிறேன்!” மிகவும் கஷ்டப்பட்டு அவரைக் கீழே இறக்கினார்கள். கீழே வந்ததும் அவர் தன் ஹிந்து, சீக்கிய நண்பர்களை கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார். அவரால் அந்த நண்பர்கள் அவரை விட்டு பிரிந்து போகப் போகிறார்கள் என்ற எண்ணத்தைத் தாங்க முடியவில்லை.

ஒரு பைத்தியக்காரர் நிறைய படித்த ரேடியோ எஞ்சினியர். அவர் எப்போதும் பிற பைத்தியக்காரர்களிடமிருந்து தள்ளியே இருப்பார். தோட்டத்தில் இருந்த ஒரு ஒற்றையடிப் பாதையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருப்பார். இந்த செய்தியைக் கேட்டதும் அவர் தன் துணிகளை எல்லாம் கழற்றி ஒப்படைத்துவிட்டு மருத்துவமனை முழுதும் நிர்வாணமாக ஓடினார்.

சிநியோட் நகரத்திலிருந்து முற்காலத்தில் முஸ்லிம் லீக்கின் பெரும் ஆதரவாளராக இருந்த ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர் வந்திருந்தார். நல்ல குண்டு. அவர் ஒரு நாளைக்கு பதினைந்து பதினாறு முறை குளிப்பவர். இந்த செய்தி கிடைத்ததும் குளிப்பதை நிறுத்திவிட்டார். அவர் பெயர் முகமது அலி. ஒரு நாள் அவர் தான்தான் காயிதே-ஆஜம் முகமது அலி ஜின்னா என்று அறிவித்தார். இதைக் கேட்டதும் அங்கிருந்த ஒரு சீக்கியப் பைத்தியக்காரர் தான்தான் மாஸ்டர் தாராசிங் என்று அறிவித்தார். ரத்த ஆறு ஓடி இருக்கும், நல்ல வேளையாக டாக்டர்கள் இருவரையும் அபாயகரமான பைத்தியக்காரர்கள் என்று முடிவு செய்து இரண்டு பேரையும் வேறு வேறு கட்டடங்களுக்கு மாற்றிவிட்டனர்.

லாஹூரின் ஒரு இளம் ஹிந்து வக்கீல் காதல் தோல்வியால் பைத்தியமானவர். அமிர்தசரஸ் இப்போது இந்தியாவில் இருக்கிறது என்று கேட்டதும் அவர் மிகவும் துக்கம் அடைந்தார். ஏனென்றால் அவர் காதலித்த ஹிந்துப் பெண் அமிர்தசரஸ்காரி. அவள் அவரை நிராகரித்திருந்தபோதும் அவர் அவளை இன்னும் மறக்கவில்லை. தன்னையும் தன் காதலியையும் வேறு வேறு நாட்டுக்காரர்களாக ஆக்கிய முஸ்லிம் தலைவர்களை அவர் சபித்துக் கொண்டே இருந்தார்.

இப்போது இந்த பைத்தியக்காரர் மாற்றம் செய்தி வந்ததும் பல பைத்தியங்களும் அவருக்கு நீங்கள் இந்தியாவுக்குப் போய்விடலாம் என்று தேறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அந்த வக்கீல் பைத்தியம் லாஹூரிலிருந்து போக விரும்பவில்லை. அமிர்தசரசில் தான் வக்கீலாக வெற்றி பெற முடியுமா என்று அவருக்கு அச்சம்.

ஐரோப்பிய வார்டில் இரண்டு ஆங்கிலோ-இந்திய பைத்தியங்கள் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை தந்துவிட்டு போய்விட்டார்கள் என்று தெரிந்து மிகவும் கவலைப்பட்டார்கள். தாழ்ந்த குரலில் தங்கள் நிலை எப்படி எல்லாம் மாறுமோ என்று அவர்கள் விவாதித்துக் கொண்டார்கள். ஐரோப்பிய வார்ட் என்று ஒன்று இருக்குமா இருக்காதா? இங்கிலீஷ் காலை உணவு கிடைக்குமா கிடைக்காதா? காலையில் ப்ரெட்டுக்கு பதிலாக எழவெடுத்த சப்பாத்தியை சாப்பிட வேண்டி வருமா?

ஒரு சீக்கியப் பைத்தியம் பதினைந்து வருஷமாக அங்கே இருந்தவர். அவர் தனக்கே உரிய ஒரு விசித்திர மொழியில் பேசிக் கொள்வார். அடிக்கடி இப்படி சொல்வார் – “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனிக்கவில்லை பாசிப்பருப்பு சிவந்தது!” அவர் தூங்குவதே இல்லை. காவலர்கள் அவர் பதினைந்து வருஷத்தில் ஒரு நொடி கூட தூங்கியதில்லை என்று சொல்வார்கள். அபூர்வமாக அவர் சில சமயம் ஒரு சுவரில் சாய்ந்துகொள்வார்.

எப்போதும் நின்றுகொண்டே இருப்பதால் அவரது கால்களும் பாதங்களும் வீங்கிக் கிடக்கும். ஆனாலும் அவர் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ள மறுத்துவிடுவார். எப்போது பைத்தியக்காரர்கள் மாற்றம் பற்றி பேச்சு எழுந்தாலும் நின்று அதை கவனிப்பார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இவரை யாராவது கேட்டால் “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனிக்கவில்லை பாசிப்பருப்பு பாகிஸ்தான் கோர்னமென்ட்” என்று சொல்வார்.

கொஞ்ச நாள் கழித்து “பாகிஸ்தான் கோர்னமென்ட்” என்று சொல்வதற்கு பதிலாக “டோபா டேக் சிங் கோர்னமென்ட்” என்று சொல்ல ஆரம்பித்தார். சக பைத்தியங்களிடம் டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது, இந்தியாவிலா, பாகிஸ்தானிலா என்று கேட்க ஆரம்பித்தார். யாருக்கும் தெரியவில்லை. இதைப் பற்றி பேச ஆரம்பித்தால் குழப்பம் இன்னும் அதிகரித்தது. ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்த சியால்கோட் இன்று பாகிஸ்தானில் இருக்கிறதாம். இன்று பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் நாளை இந்தியாவுக்குப் போகக் கூடும். ஒரு வேளை இந்தியா முழுவதும் பாகிஸ்தானாக மாறிவிடலாம். நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் இருக்கும் என்று யார் உறுதி தர முடியும்?

இந்த சீக்கிய பைத்தியத்தின் தலைமுடி சரியாக வராமல் உதிர்ந்து கொண்டிருந்தது. அபூர்வமாகவே தலைக்கு குளிப்பதால் தலை முடியும் தாடியும் சிக்குப் பிடித்து பார்க்கவே கொஞ்சம் பயங்கரமாக இருந்தார். ஆனால் உண்மையில் அவரால் யாருக்கும் எந்த அபாயமும் இல்லை. பதினைந்து வருஷத்தில் அவர் யாருடனும் சண்டை போட்டதே இல்லை.

மருத்துவமனை காவலர்களுக்கு டோபா டேக் சிங் என்ற பிரதேசத்தில் அவருக்கு நிலம் இருந்தது என்று தெரிந்திருந்தது. அங்கே பணக்கார மிராசுதாராக இருந்தவருக்கு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டது. அவரது உறவினர்கள் அவரை கனத்த சங்கிலிகளில் பிணைத்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்.

அவரது குடும்பம் மாதாமாதம் அவரை பார்க்க வந்துகொண்டிருந்தது. அவரது உடல் நிலை நன்றாக இருக்கிறது என்று உறுதிப்படுத்திக்கொண்டு போவார்கள். பல வருஷங்களாக இது நடந்து கொண்டிருந்தது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைகள் ஆரம்பித்ததும் அவர்களின் வருகை நின்றுவிட்டது.

அவர் பெயர் பஷான் சிங். ஆனால் எல்லாரும் அவரை இப்போது டோபா டேக் சிங் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அவருக்கு நேரத்தைப் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாவிட்டாலும் அவருக்கு தன் உறவினர்கள் வரும் நேரம் எது என்று ஒரு மாதிரி தெரிந்தது. தன்னைப் பார்த்துக் கொள்பவரிடம் தன் உறவினர்கள் வரும் நேரம் என்பார். சரியாக அந்த நாளில் குளித்து, தலைக்கு எண்ணெய் தடவி தலை சீவி, நல்ல உடைகளை அணிந்து தன் உறவினர்களை சந்திப்பார்.

அவர்கள் அவரை ஏதாவது கேட்டால் அவர் பதில் சொல்லமாட்டார். அப்படி சொன்னால் அது – “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு சிவப்பு.”

பஷான் சிங்குக்கு ஒரு பதினைந்து வயதுப் பெண் இருந்தாள். மாதாமாதம் ஒரு விரல் அளவுக்கு உயரமாவாள். அவள் யாரென்று பஷான் சிங்குக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சிறு குழந்தையாக இருந்தபோது அப்பாவைப் பார்க்கும்போது அவள் அழுவாள். இப்போது ஓரளவு பெரியவள் ஆன பிறகும் அவள் அழுகை தொடர்ந்தது.

பிரிவினைப் பிரச்சினைகள் தொடங்கியபின் பஷான் சிங் சக பைத்தியங்களை டோபா டேக் சிங் பற்றி கேட்க ஆரம்பித்தார். யாராலும் அவருக்கு திருப்தி தரும் பதில்களைத் தர முடியவில்லை. அவர் கவலை அதிகரித்துக் கொண்டே போனது.

அவரது உறவினர்களும் அவரைப் பார்க்க வருவதை நிறுத்தி விட்டார்கள். முன்பெல்லாம் அவர்கள் எப்போது வருவார்கள் என்று அவரால் சரியாக யூகிக்க முடிந்தது. இப்போதோ அவருக்கு உள்ளே இருக்கும் குரல் அமுக்கப்பட்டுவிட்டது என்று தோன்றியது. தனக்காக பூ, துணிமணிகள், இனிப்பு வகைகள் கொண்டு வந்து தனக்கு ஆறுதலாகப் பேசும் அந்த மனிதர்களைப் பார்க்க அவர் துடித்தார். நிச்சயமாக அவர்களால் டோபா டேக் சிங் இந்தியாவில் இருக்கிறதா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறதா என்று சொல்ல முடியும். அவர்கள் டோபா டேக் சிங்கிலிருந்து வருகிறார்கள் என்றே அவர் நினைத்திருந்தார்.

மருத்துவமனையில் தன்னைக் கடவுள் என்று நினைத்துக் கொண்ட இன்னொரு பைத்தியம் இருந்தார். ஒரு நாள் பஷான் சிங் அவரை டோபா டேக் சிங் இந்தியாவில் இருக்கிறதா பாகிஸ்தானில் இருக்கிறதா என்று கேட்டார். வெடிச்சிரிப்போடு அவர் சொன்னார்: “இரண்டு இடத்திலும் இல்லை, ஏனென்றால் நான் அதை எங்கே வைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை!”

பஷான் சிங் இந்த “கடவுளை” டோபா டேக் சிங்கைப் பற்றி ஒரு முடிவெடுத்து தன் குழப்பத்தைத் தீர்க்கும்படி கெஞ்சினார். ஆனால் “கடவுள்” வேறு வேலைகளில் மும்முரமாக இருந்ததால் பஷான் சிங்கின் வேண்டுகோளை கவனிக்க மறுத்தார். ஒரு நாள் பஷான் சிங் கோபம் அடைந்து கத்தினார்: “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு வாஹே குருஜி கால்சா வாஹே குருஜி! ஜோ போலே சோ நிஹால் சத் ஸ்ரீ அகால்!”

அவர் இப்படி சொல்ல நினைத்திருக்கலாம்: “நீ முஸ்லிம்களின் கடவுள், சீக்கியக் கடவுளாக இருந்திருந்தால் எனக்கு உதவி செய்திருப்பாய்.”

பைத்தியக்காரர்கள் இட மாற்றத்துக்கு சில நாட்களுக்கு முன்னால் பஷான் சிங்கின் முஸ்லிம் நண்பர் ஒருவர் டோபா டேக் சிங்கிலிருந்து வந்தார். அவர் முன்னே பின்னே பைத்தியக்கார ஆஸ்பத்திரி பக்கம் வந்ததில்லை. அவரைப் பார்த்ததும் பஷான் சிங் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போக ஆரம்பித்தார். ஆனால் மருத்துவமனை காவலர் ஒருவர் அவரை நிறுத்தினார்.

“உன் நண்பன் ஃபஸ்லுத்தின் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஃபஸ்லுத்தினைப் ஓரக் கண்ணால் பார்த்து பஷான் சிங் ஏதோ முணுமுணுத்தார். ஃபஸ்லுத்தின் கொஞ்சம் முன்னால் போய் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். “உன்னைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நேரமே கிடைக்கவில்லை” என்று சொன்னார். “உன் உறவினர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு பத்திரமாகப் போய்விட்டார்கள். என்னால் என்னென்ன உதவி செய்ய முடியுமா அதை எல்லாம் செய்தேன். உன் பெண் ரூப் கவுர்…”

பஷான் சிங்குக்கு ஏதோ நினைவு வந்த மாதிரி இருந்தது. “பெண் ரூப் கவுர்” என்று சொன்னார்.

ஃபஸ்லுத்தின் கொஞ்சம் தயங்கினார். பிறகு சொன்னார்: ” அவளும்… அவளும் நன்றாக இருக்கிறாள். உன் உறவினர்களோடு போய்விட்டாள்.”

பஷான் சிங் மவுனமாக இருந்தார். ஃபஸ்லுத்தின் தொடர்ந்தார்: “நீ நன்றாக இருக்கிறாயா என்று என்னைப் பார்த்து வர சொன்னார்கள். இப்போது நீயும் இந்தியாவுக்குப் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். பல்பீர் சிங் அண்ணனுக்கும் வதாதா சிங் அண்ணனுக்கும் ஏன் வணக்கங்களை சொல்லு. இம்ராத் கவுர் அக்காவுக்கும்… பல்பீர் சிங் அண்ணனிடம் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லு. அவர் விட்டுப் போன இரண்டு பழுப்பு நிறப் பசுக்களில் ஒன்று குட்டி போட்டிருக்கிறது. இன்னொன்றும் குட்டி போட்டது, ஆனால் ஆறு நாளைக்கப்புறம் செத்துப் போய்விட்டது. அப்புறம்… ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சொல்லச் சொல்லு. நான் கட்டாயமாக செய்வேன். உனக்கு கொஞ்சம் இனிப்பு வாங்கி வந்திருக்கிறேன்.”

பஷான் சிங் இனிப்புகளை காவலரிடம் கொடுத்தார். “டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.

ஃபஸ்லுத்தின் அதிர்ந்தார். “டோபா டேக் சிங்? எங்கே இருக்கிறதா? இத்தனை நாள் எங்கே இருந்ததோ அங்கேயேதான்” என்று சொன்னார்.

“பாகிஸ்தானிலா இந்தியாவிலா?” என்று பஷான் சிங் விடாமல் கேட்டார்.

ஃபஸ்லுத்தின் மேலும் குழப்பம் அடைந்தார். “இந்தியாவில் இருக்கிறது. இல்லை இல்லை பாகிஸ்தானில்.”

பஷான் சிங் முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார்: “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு பாகிஸ்தான் ஹிந்துஸ்தான்!”

பைத்தியக்காரர்கள் இடமாற்றத்துக்கு வேண்டிய எல்லா முன் ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. இடம் மாற வேண்டிய பைத்தியக்காரர்கள் பட்டியல், என்று மாற வேண்டும் என்ற நாள் எல்லாம் முடிவு செய்யப்பட்டது.

அன்று மிகவும் குளிராக இருந்தது. லாஹூரின் ஹிந்து, சீக்கிய பைத்தியங்களை ட்ரக்குகளில் போலீஸ் மேற்பார்வையில் ஏற்றினார்கள். வாகா எல்லையில் பாகிஸ்தானி இந்திய அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து எல்லா ஏற்பாடுகளையும் முடித்தார்கள். அப்புறம் மாற்றம் தொடங்கியது. இரவு பூராவும் நடந்தது.

பைத்தியங்களை இறக்கி எல்லையைக் கடக்க வைப்பது சுலபமாக இல்லை. சிலர் லாரிகளிலிருந்து இறங்கவே மறுத்தார்கள். வெளியே வந்தவர்கள் அங்கும் இங்கும் அலைந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நிர்வாணமாக சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு உடுத்திவிட காவலர்கள் முயற்சி செய்தார்கள். அப்படி உடுத்திவிடப்பட்ட துணிகளை அவர்கள் மீண்டும் கிழித்தெறிந்தார்கள். சிலர் திட்டினார்கள், சிலர் பாடினார்கள், சிலர் சண்டை போட்டார்கள். எல்லாரும் அழுதுகொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள், ஆனால் எதுவும் புரியவில்லை. பைத்தியக்காரப் பெண்கள் தனியாக கூக்குரல் போட்டார்கள். குளிரோ பற்களை நடுக்க வைத்துக் கொண்டிருந்தது.

முக்கால்வாசி பைத்தியங்களுக்கு இந்த இடமாற்றம் பிடிக்கவில்லை. எதற்காக தங்களை தெரியாத ஒரு இடத்துக்கு பலவந்தமாக அனுப்பவேண்டும் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில அரைப்பைத்தியங்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கூவினார்கள். இதைக் கேட்டு ஆத்திரப்பட்ட சில சீக்கியப் பைத்தியங்களோடு கைகலப்பு ஏற்பட்டது.

பஷான் சிங்கின் முறை வந்தபோது அவர் அங்கே இருந்த அதிகாரியிடம் கேட்டார்: “டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? இந்தியாவிலா பாகிஸ்தானிலா?”

அதிகாரி சிரித்தார். “பாகிஸ்தானில்” என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் பஷான் சிங் பாகிஸ்தான் பக்கம் ஓடினார். பாகிஸ்தானி காவலர்கள் அவரைப் பிடித்து மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் அவர் நகர மறுத்தார்.

“டோபா டேக் சிங் இங்கேதான் இருக்கிறது!” என்று கத்தினார். பிறகு உரத்த குரலில் கூவ ஆரம்பித்தார்: “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு டோபா டேக் சிங் பாகிஸ்தான்!”

அதிகாரிகள் டோபா டேக் சிங் இந்தியாவில் இருக்கிறது என்று அவரை நம்ப வைக்கப் பார்த்தார்கள். அங்கே இல்லை என்றால் உடனே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் அவர் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

அவரால் எதுவும் அபாயம் இல்லை என்பதால் காவலர்கள் அவரை விட்டுவிட்டு பிற வேலைகளைப் பார்த்தார்கள். அவர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இரவு முழுதும் அமைதியாக இருந்தார். காலை சூரிய உதயத்துக்கு முன் அவர் பெரிய குரல் கொடுத்தார். எல்லா அதிகாரிகளும் ஓடி வந்தார்கள். பதினைந்து வருஷமாக நின்றுகொண்டே இருந்தவர் இன்று தரையில் குப்புறப் படுத்துக் கிடந்தார். இந்தியா ஒரு முள் வெளிக்குப் பின்னால் ஒரு பக்கம் இருந்தது. பாகிஸ்தான் இன்னொரு வெளிக்குப் பின்னால் இன்னொரு பக்கம் இருந்தது. டோபா டேக் சிங் இரண்டுக்கும் நடுவில் பெயரற்ற மண்ணில் விழுந்து கிடந்தார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாதத் ஹாசன் மாண்டோ பற்றிய விக்கி குறிப்பு

டோபா டேக் சிங் – ஆங்கிலத்தில்
தண்டா கோஷ்ட் – ஆங்கிலத்தில்
இன்னொரு கதை – ஆங்கிலத்தில்