சுபா

எனக்கு டைம்பாஸ் படிப்பு என்றால் அனேகமாக pulp fiction , த்ரில்லர்கள்தான். சிறு வயதில் இரும்புக்கை மாயாவியிலிருந்து ஆரம்பித்த பழக்கம் இன்னும் விடவில்லை. ஏறக்குறைய மூளையை ஆஃப் செய்துவிட்டு டிவி பார்ப்பது போல. நாஸ்டால்ஜியா இன்னும் நிறைய இருக்கிறது.

தமிழில் pulp fiction பாரம்பரியம் வடுவூரார் காலத்திலிருந்து இருக்கிறது. ஆனால் முக்கால்வாசி நேரம் இவற்றைப் படித்தது ஏமாற்றம்தான் அடைந்திருக்கிறேன். தமிழின் சிறந்த த்ரில்லர் எழுத்தாளர் என்று சுஜாதாவைத்தான் – குறிப்பாக கணேஷ்-வசந்த் கதைகளைத்தான் – கருதுகிறேன். ஆனால் அவர் கதைகளையும் இன்று படிக்கும்போது நிறைய சொதப்பி இருப்பது தெரிகிறது. நல்ல ஆக்ஷன் சீன் உள்ள சிறுகதை என்றால் ஜெயமோகனின்அவதாரம்” நினைவு வருகிறது. அருமையான ஒரு சண்டைக் காட்சியை சித்தரித்திருப்பார்.

இப்போது இந்த மார்க்கெட்டின் ராஜா யார் என்று தெரியவில்லை. ராஜேஷ்குமாரா? ஆனால் சுபா என்ற பேரில் எழுதும் இந்த இரட்டையர்களுக்கு பெரிய மார்க்கெட் இருந்தது. அனேகமாக இப்போதும் இருக்கலாம். இவ்வளவு பாப்புலராக இருக்கிறார்களே, இவர்கள் எழுத்தை என்றாவது சாம்பிள் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் சில புத்தகங்கள் கிடைத்தன. இவர்கள் என்னை ஏமாற்றவில்லை, நான் படித்த டஜன் கதைகளும் வேஸ்ட். 🙂 நான் படித்த வரையில் இவர்கள் நல்ல pulp fiction-ஐ இது வரை எழுதவில்லை. ஒரு குழந்தைத்தனமான மர்மம், “கிளுகிளுப்புக்கு” வைஜயந்தி என்ற ஒரு பெண் என்று ஒரு ஃபார்முலாவை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிறகு எதற்கு இந்தப் பதிவு என்கிறீர்களா? மூன்று காரணங்கள். ஒன்று, தமிழில் நீங்கள் படித்த நல்ல த்ரில்லர்கள் ஏதாவது உண்டா என்று தெரிந்துகொள்ள. இரண்டாவது, சிலிகான் ஷெல்ஃப் ஆரம்பித்த பிறகு படித்ததை எல்லாம் அனேகமாக பதிவு செய்யும் பழக்கம் வந்துவிட்டது. மூன்றாவது, மொக்கை எழுத்தைப் பற்றி எல்லாம் பதிவு போடும் வத்தலகுண்டு பித்தன் என்ற பேரை எப்படி தக்க வைத்துக் கொள்வது? 🙂

வாசகர்களை இவர்கள் அநியாயத்துக்கு குறைத்து மதிப்பிடுகிறார்கள். உதாரணமாக அன்புள்ள அச்சமே என்ற கதையில் கணவன் பணக்கார மனைவியை ஆவி கீவி என்று பயமுறுத்தி பைத்தியம் பிடிக்க வைக்கிறான். அடுத்த நாளே மாமனாரின் ஆவி வருகிறது. அதைப் பார்த்து இவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது. இந்த மாமனாரின் ஆவி ஒரு நாலு நாள் முன்னால் வந்திருந்தால் தன் பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாமே!

சில கதைகளில் potential தெரிந்தது. உதாரணமாக நிலா வரும் நேரம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. திருமணமான பெண்களின் செக்ஸ் வேட்கைகளைப் பற்றி நிறைய எழுதி இருந்தார். கடைசியில் அதை க்ரைம் நாவலாக முடிக்க வேண்டிய கட்டாயம், கதை சொதப்புகிறது.

படித்ததில் பெஸ்ட் என்றால் தீர்க்க வேண்டிய கணக்குதான். ஒரு வரைபடத்தை (map) திருட வரும் இரண்டு பேரை ஏறக்குறைய வேட்டை ஆடுகிறார். ஆக்ஷன் சீன்கள்தான் பெரும்பாலும்.

இவர்களை முழுமையாக நிராகரிக்கிறேன்.ஆனால் இவர்களின் ஃபார்முலா வெற்றி பெற்றிருக்கிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை

படித்த கதைகளின் லிஸ்ட் கீழே.

  1. குளிர குளிர குற்றம்: தங்கையை கற்பழித்த நாலு பேரை பழி வாங்கும் அண்ணன். வேஸ்ட்.
  2. அன்புடன் உன் அடிமை: வேஸ்ட். ஒரு பெண்ணை கெடுத்த இரண்டு பேரை ஹீரோ கொல்கிறான். அதை பாராட்டும் ஒரு இன்ஸ்பெக்டர் பிறகு அவன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது காப்பாற்றுகிறார்.
  3. அடிபட்ட புலி: வேஸ்ட். கொஞ்சம் கொஞ்சம் Bound என்ற சினிமாவை நினைவுபடுத்துகிறது. மாஃபியா ஆள் வைப்பாட்டி, ஜெயிலிலிருந்து திரும்பி வரும் பக்கத்து வீட்டு திருடனால் கவரப்படுகிறாள். அவர்கள் திருடப் போடும் திட்டம்…
  4. திருப்பித் தாக்கு: மகா வேஸ்ட். காதலன், காதலி, பர்மிஷன் தர மறுக்கும் அப்பா. காதலி தற்கொலை செய்து கொள்கிறாள், காதலனை கிட்டத்தட்ட பைத்தியம் ஆக்குகிறார்கள்.
  5. தீர்ப்பு நாள்: (நரேந்திரன்) ஒரு திரைக்கதை காணாமல் போய்விடுகிறது. ஒரு சினிமா நடிகனின் மனைவி கடத்தப்படுகிறாள். நரேந்திரன் திரைக்கதை மனைவியின் கடந்த கால வாழ்க்கையை நினைவுபடுத்துகிறது என்பதை கண்டுபிடிக்கிறான்.
  6. என்னைத் தேடு: (நரேந்திரன்) வெட்டி. பறக்கும் தட்டு, வேற்று கிரக மனிதர்கள் என்று புரளி கிளப்பி ஒரு வீட்டில் இருக்கும் பல கோடி மதிப்புள்ள சிலையை திருடப் பார்க்கிறார்கள்.
  7. உயிர்மூச்சு: விஞ்ஞானி, செயற்கை முத்து செய்யும் ஃபார்முலா, நரேந்திரன்-வைஜயந்தி என்று போகும் கதை
  8. வசந்தம் வரும்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் தேறவில்லை.
  9. பனிமலையில்: அமைச்சரின் மகள் கடத்தப்படுகிறாள். அதை கண்டுபிடிக்கும் போலீஸ்.
  10. கொஞ்சுகிற கைதான் கொல்லும்: (நரேந்திரன்) ஒரு கால் கர்ளை கொலை செய்கிறார்கள். அவள் அப்போது ஒருவனுக்கு மனைவியாக இருக்கிறாள். கணவன் மீது சந்தேகம் விழுகிறது. கணவனின் உயிர் நண்பனின் பிணம் வேறு கிடைக்கிறது. பிறகு?
  11. ஈர உதடுகள்: கால் கர்ளை உண்மை தெரியாமலே காதலிக்கும் ஃபோட்டோகிராஃபர். நல்ல வாழ்க்கைக்கு திரும்ப நினைப்பவளை தடுக்கிறான் அவள் முதலாளி. முதலாளி கொலை, இவள் ஜெயில், இவன் காத்திருக்கிறான். வேஸ்ட்.
  12. பௌர்ணமிப் பாதை: கொள்ளை அடித்த பணத்தை மறைத்து வைத்திருக்கும் ரவுடிகளின் தலைவன், அதை கண்டுபிடிக்க முயலும் அவன் பெண், ஹீரோ.

தொடர்புடைய சுட்டிகள்:
பட்டுக்கோட்டை பிரபாகர்
இந்திரா சவுந்தரராஜன்