சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு

(விரிவுபடுத்தப்பட்ட மீள்பதிப்பு)

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு பல்லாயிரத்தாயிரம்!

ChoRamaswamyசோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல், நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், திரைப்படக் கதாசிரியர், அரசியல் இதழியலாளர் என்று.

thuglaqஎன்னைப் பொறுத்த வரை அவரது அதிமுக்கியமான முகம் இதழியல் முகம்தான். துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். அந்தக் காலகட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறது. He made Thuglaq an institution! நல்ல உதவி ஆசிரியர்கள் இருந்தும் அவருக்கு பிறகு துக்ளக் வராது என்று நினைக்கிறேன், வருத்தமாக இருக்கிறது.

துக்ளக் 45 ஆண்டுகளாக வெளிவருகிறது என்று நினைக்கிறேன். குறைந்தது முப்பது வருஷமாவது அது இளைஞர்களுக்கு அரசியலை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் குரலாக இருந்திருக்கிறது. தனக்கென்று ஒரு value system, அந்த விழுமியங்களை வைத்து அரசியலை, அரசியல் தலைவர்களை கறாராக எடை போட்டிருக்கிறது.

தனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர் என்று தயவு தாட்சணியம் பார்த்ததில்லை. (‘பாபர்’ மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக்கின் அட்டைப்படம் வெறும் கறுப்பு அட்டை. அத்வானி மீது இருந்த மதிப்பு மரியாதையால் அவர் ஜகா வாங்கிவிடவில்லை.) தனக்கு நஷ்டம் வரும் என்று போகும் பாதையை மாற்றிக் கொண்டதில்லை. (அறுபதுகளின் கடைசி ஓரிரு ஆண்டுகளில் எம்ஜிஆர் படங்களில் நாகேஷின் இடத்திற்கு சோ வந்துவிட்டார். துக்ளக் ஆரம்பிக்கப்பட்டபோது எம்ஜிஆர் இவரை பத்திரிகை எல்லாம் வேண்டாமே என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். இவர் கேட்கும் ஜாதி இல்லையே! அதற்குப் பிறகு ஒரு எம்ஜிஆர் படத்தில் கூட சோ நடித்ததில்லை) தன் கருத்துக்களுக்கு எத்தனை தூரம் மக்களிடம் எதிர்ப்பு இருக்கும் என்பது அவரது நிலைப்பாடுகளை மாற்றியதே இல்லை. எண்பதுகளில் பிரபாகரனையும் புலிகளையும் எதிர்த்துப் பேசிய ஒரே குரல் அவருடையதுதான். இவ்வளவு ஏன், அடி விழுமோ என்று கூட அஞ்சியதும் இல்லை. மிசா காலத்தில் மொரார்ஜிக்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்குமே ஜெயில், கருணாநிதி பையன் என்ற ஒரே காரணத்தால் ஸ்டாலினுக்கு அடி-உதை, எம்.பி.யாக இருந்த சிட்டிபாபு அடி வாங்கியே செத்தார் என்பதெல்லாம்ம் தெரிந்திருந்தும் அடக்கி வாசிக்க மறுத்தார். மிசாவை எதிர்த்து குரல் கொடுத்ததுதான் அவரது இதழியல் வாழ்வின் உச்சம்.

துக்ளக்கில் அவரது கேள்வி-பதில் கடைசி வரை விரும்பிப் படிக்கப்பட்டது. ஒண்ணரை பக்க நாளேடு மிகவும் பாப்புலர்.

அரசியல் விளைவுகளை அனேகமாக ஊகித்துவிடுவார். அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று. ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது மாதிரி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெ வெல்வார் என்று சொன்னது மட்டும் தவறாகிவிட்டது.

அவரது கருத்துக்கள் மாறுவதே இல்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. இவற்றை எப்போதும் மறுபரீசீலனை செய்யமாட்டார், வறட்டுப் பிடிவாதம் தெரியும். ஆனால் நேர்மையாகவே நல்ல நகைச்சுவையுடன் தன் அபிப்ராயங்களை வெளிப்படுத்துவார், இதை வெளியே சொன்னால் நம்மை பிற்போக்கு என்பார்கள் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல.

ஆனால் கடைசி பத்து பதினைந்து வருஷத்தில் அவரது நடுநிலைமை போய்விட்டது. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார்.

என் கணிப்பில் என்று அவர் பா.ஜ.க. மத்தியில் அரசை அமைக்கக் கூடும் என்று உணர்ந்தாரோ அன்றிலிருந்து மெதுமெதுவாக ஒரு பக்கமாக சாயத் தொடங்கினார். ஒரு முறை சபாநாயகர் என்பவர் ஆளும் கட்சி தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்பவர் என்று வரையறுத்திருந்தார். அதைப் போல இவரும் பா.ஜ.க. தரப்பில் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்பவராக மாறத் தொடங்கினார். ஜெயலலிதாவின் ஊழல், குஜராத் கலவரங்கள் போன்றவை மோடியின் தனிப்பட்ட நேர்மை, வளர்ச்சித் திட்டங்கள், கருணாநிதியின் புலிகள் ஆதரவு போன்றவற்றை விட அவருக்கு மிகச் சிறிதாகத் தெரியத் தொடங்கின. கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்பினார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு soft corner இருந்தது. எழுபது-எண்பதுகளின் சோவுக்கு அப்படித் தெரிய வாய்ப்பே இல்லை.

நான் முதன்முதலாக வந்த பிரதியிலிருந்து கடைசிப் பிரதி வரை படிக்க வேண்டும் என்று விரும்பும் பத்திரிகைகள் இரண்டுதான். ஒன்று துக்ளக், இன்னொன்று சுபமங்களா.

அவரது இரண்டாவது முக்கிய முகமாக நான் கருதுவது அவரது எழுத்தாளர்/நாடக ஆசிரியர் முகம்தான். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பணபலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார்.

அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. எழுத ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை. சமூகப் பிரச்சினைகளை கருவாக வைத்து எழுதினாலும் சிரிக்க வைப்பதுதான் அவரது எழுத்துக்களின் முக்கிய நோக்கம் என்று தோன்றுகிறது. அதனால் நாடகங்களில் தனக்கென்று ஒரு கோமாளி பாத்திரத்தை படைத்துக் கொள்வார். சாத்திரம் சொன்னதில்லை போன்ற நல்ல நாடகங்களில் கூட இந்தக் கோமாளி பாத்திரம் செயற்கையாக புகுத்தப்பட்டிருப்பது உறுத்தும். அந்தக் கோமாளி பாத்திரங்களைத் தவிர்த்திருந்தால் பல நாடகங்கள் இன்னும் மிளிர்ந்திருக்கும். ஆனால் அவரது நாடகங்கள் நடத்தப்பட்ட அவரது பெருவெற்றிக்குக் காரணமே அந்த கோமாளி பாத்திரங்கள்தான்.

அவரது நாடகங்கள் சென்னை சபா வட்டங்களில் எனது பதின்ம வயதில் வெகு பிரபலமாக இருந்தன. ஆனால் அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். வந்தேமாதரம் பார்த்த நினைவிருக்கிறது. நேர்மை உறங்கும் நேரம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நினைவிருக்கிறது. தொலைக்காட்சியில் மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகம் பார்த்து ரசித்தது நினைவிருக்கிறது.

சில சமயம் Pygmalion (மனம் ஒரு குரங்கு), Tale of Two Cities (வந்தேமாதரம்) போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் கதையே இல்லாமல் சும்மா அரசியல் அடிவெட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள்/நாடகங்களை எழுதி இருக்கிறார்.

சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம்தான், ஆனாலும் தமிழின் சிறந்த நாடக ஆசிரியர்களில் அவரும் ஒருவர். என் கண்ணில் சாத்திரம் சொன்னதில்லை, முஹம்மது பின் துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை ஆகிய நாடகங்களும் சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகிய நாவல்களும் இலக்கியமே. அவசியம் படிக்க வேண்டியவை. இந்த நாடகங்களில்தான் கோர்வையான கதை இருக்கும்.

அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். சமகாலத்து அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணியில் நக்கல் அடிப்பார். அரிஸ்டோஃபனஸ், சோ இருவரிடமும் ஒரே பிரச்சினைதான். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் அன்றைய விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.

சோ இலக்கியம் படைத்திருக்கிறார் என்று கருதும் தமிழ் வாசகன் அனேகமாக நான் ஒருவன்தான். அரிஸ்டோஃப்னஸ் க்ளாசிக் எழுத்தாளராகக் கருதப்படும்போது அவருக்கு எந்த விதத்திலும் குறையாத சோ மீது என்ன இளக்காரம் என்று எனக்குப் புரிவதில்லை. ஒரு வேளை அரிஸ்டோஃபனஸ் 2500 வருஷங்களுக்கு முன்பு எழுதி இருக்காவிட்டால் அவரது நாடகங்களையும் இலக்கியம் என்று கருத மாட்டார்களோ என்னவோ.

சோவின் முக்கியமான மூன்றாவது முகம் அவரது அரசியல் முகம். அவரோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டாத தலைவரே இல்லை என்று சொல்லலாம். அதனால் தலைவர்களுக்கு நடுவே பாலமாக அவ்வப்போது இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர் என்பது ஊருக்கே தெரிந்ததுதான். போன தேர்தலில் ஜெ-விஜயகாந்த் கூட்டணிக்கு அச்சாரம் போட்டவர் இவர்தான். கருணாநிதி-மூப்பனார்-ரஜினிகாந்த ஓரணியாகத் திரள அஸ்திவாரம் போட்டதும் தெரிந்த விஷயமே. மொரார்ஜி காலத்தில் சரண்சிங் ஜனதாவை விட்டு விலகியபோது எம்ஜிஆர் மொரார்ஜிக்கு ஆதரவாக இருந்தார், அதற்கும் இவர்தான் மூலகாரணம். (மொரார்ஜி பதவி விலகியதும் எம்ஜிஆரும் சரண்சிங்குக்கு ஆதரவாக கட்சி மாறிவிட்டார்) அதற்கும் முன்னால் காங்கிரஸ் அனுதாபி. காமராஜ் காலத்தில் காங்கிரஸின் பிரச்சார நட்சத்திரங்களில் ஒருவர். (சிவாஜி, ஜெயகாந்தன், நா.பா. பிற நட்சத்திரங்கள்)

சினிமா உலகத்திலும் ஓரளவு வெற்றி பெற்றார். தனது நாடகங்களை திரைப்படமாக எடுத்தார், நாடகம் மாதிரியேதான் இருக்கும். புகழ் பெற்ற துக்ளக், மற்றும் யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன ஆகியவை ஓரளவு வெற்றியும் பெற்றன. மனம் ஒரு குரங்கும் திரைப்படமாக வந்தது. நான் பார்க்க விரும்புவது மிஸ்டர் சம்பத். ஆனால் பிரிண்டே இல்லையாம்.

அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு நாடகம்/திரைப்படம் கூட நினைவில்லை. அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி). எல்லா திரைப்படத்திலும் ஒரே ரோல்தான், சும்மா முட்டைக் கண்ணை வைத்து முழித்து முழித்துப் பார்ப்பார். ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். பொம்மலாட்டம் தவிர நீலகிரி எக்ஸ்ப்ரஸ், ஆயிரம் பொய், நிறைகுடம், நினைவில் நின்றவள் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதினார். நிறைகுடத்தில் நல்ல ஓ.ஹென்றி ட்விஸ்ட் வைத்திருப்பார். வந்தாளே மகராசி படத்தில் அவருக்கு ஜோடி ஜெயலலிதா!

வக்கீலாக அவர் வெற்றி பெற்றாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட முப்பது வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூரப்பட வேண்டியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
துக்ளக் உதவி ஆசிரியர்கள்
தமிழ் நாடகங்கள்
நானும் நாடகங்களும்
சாத்திரம் சொன்னதில்லை
சர்க்கார் புகுந்த வீடு

3 thoughts on “சோ ராமசாமி – ஒரு மதிப்பீடு

  1. கோமல் அவர்கள் ஆசிரியராக்கொண்டு வெளிவந்த 59 இதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு subamangala.in வலைத்தளத்தில் கிடைக்கிறது..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.