ஒசாமா பின் லாடனைப் பற்றி பீட்டர் எல். பெர்கன்

peter_l_bergenஒசாமாவை பேட்டி எடுத்த ஒரே மேலை நாட்டுப் பத்திரிகையாளர் பீட்டர் எல். பெர்கன்தான். பேட்டி 9/11க்கு முன்னால் எடுக்கப்பட்டது. ஒசாமாவைப் பற்றி 5 புத்தகம் எழுதி இருக்கிறார்.

osama_bin_ladenமுதல் புத்தகமான Holy War, Inc. (2001) ஒசாமாவின் வாழ்க்கை, அல் கேடாவின் செயல்கள் ஆகியவற்றை விவரிக்கிறது. ஒசாமாவை தீவிரவாத குவியமாக ஆனதின் ஆரம்பப் புள்ளி சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானை 1980-இல் ஆக்கிரமித்ததுதான்.  ஒசாமாவை தீவிரவாதி ஆக்கியதில் அமெரிக்காவின் பங்களிப்பு முக்கியமானது. சோவியத் யூனியன் படைகளுக்கு எதிரான கொரில்லா போரில் ஒசாமாவை ஒரு தலைவராக வளர்த்துவிட்டார்கள். ஒசாமா ஜிஹாத் என்ற கனவைக் காட்டி ஆள் சேர்க்கலாம், சுகமான வாழ்வை விட்டுவிட்டு கூட தன்னுடன் சேர ஆள் இருக்கிறது என்று புரிந்து கொண்டார். அவருக்குள் எப்போதும் அமெரிக்கா மீது இருந்த வெறுப்பு – சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் தாக்கத்தால் ஏற்பட்டது – வளர்ந்தது. அவரோடு சேராதவர்களுக்கும் அவர் மீது மதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. அல்-கேடா மெதுமெதுவாக அமெரிக்காவையே எதிர்க்கும் தீவிரவாத குழுவாக உருவானது.

ஒசாமாவுக்கு  முஸ்லிம்களிடம் இருந்த மதிப்பு மரியாதைதான் பிரச்சினையின் அடிப்படை காரணம் என்று தோன்றுகிறது. தீவிரவாதத்தில் ஈடுபடாதவர்களுக்கும் அவர் மீது மரியாதை ஏற்பட்டுவிட்டது, அவர் ஒரு நாயகன் ஆக மாறிவிட்டார். அதிபலசாலியான ஒரு எதிரிக்கு தண்ணி காட்டும் போராளி என்ற பிம்பத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. என் உணர்வுகளை கழற்றி வைத்துவிட்டு வெறும் மூளையால் மட்டும் யோசித்தால் பகத் சிங்குக்கும் பிரபாகரனுக்குக்கும் பிந்த்ரன்வாலேவுக்கும் அதே கவர்ச்சிதான். இன்றும் இந்தியா விடுதலை அடையாமல் ஆங்கிலேயர் ஆட்சி செய்து கொண்டிருந்தால் பகத் சிங்கும் தீவிரவாதியாகத்தான் சித்தரிக்கப்பட்டிருப்பாரோ என்னவோ.

The Osama bin Laden I Know (2006) ஒசாமாவின் வாழ்வை இன்னும் பல நுண்விவரங்களுடன் சித்தரிக்கிறது. உதாரணமாக அல்-கேடாவை உருவாக்க திட்டமிட்ட meeting notes, 9/11 தாக்குதல் பற்றி அல்-கேடாவுக்குள்ளே இருந்த கருத்து வேறுபாடுகள் போன்றவை இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்களை சேர்க்க பெர்கன் எடுத்துக் கொண்டிருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. ஒசாமாவுக்கு வன்முறையை அதிகரித்துக் கொண்டே போவதைத் தவிர வேறு வழியே இல்லை, வேறு என்ன செய்தாலும் அவரது அமெரிக்காவுக்கு தண்ணி காட்டுபவர் என்ற பிம்பம் தகர்ந்துவிடும் என்கிறார். அது சரியே என்று தோன்றுகிறது.

Longest War (2011) 9/11 தாக்குதல், அதற்கு பிறகு ஒசாமாவை பிடிக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகள், கடைசியாக ஒசாமாவை கொன்றது ஆகியவற்றை விவரிக்கிறது. ஆஃப்கானிஸ்தான் குகைகளிலேயே ஒசாமாவை பிடிக்காமல் கோட்டை விட்டதை திறமையின்மை என்று வர்ணிக்கிறார். 9/11 தாக்குதலுக்கு பிறகு ஒசாமா ஒளிந்து வாழ வேண்டி இருந்தது, ஒசாமாவுக்கு வன்முறையை இன்னும் அதிகரிக்க முடியாத நிலை, ஜிஹாத் என்ற பேரில் முஸ்லிம்களும் கொல்லப்படுவது போன்றவை ஒசாமாவுக்கு இருந்த ஆதரவை குறைத்தது என்கிறார்.

Manhunt (2012) ஒசாமாவைக் கொல்ல அமெரிக்கா எடுத்த முயற்சிகளைப் பற்றி. முடிவெடுக்கும் கூட்டங்களில் யார் என்ன சொன்னார், யார் பாகிஸ்தானைப் பற்றி கவலைப்பட்டது (ராபர்ட் கேட்ஸ்), யார் பாகிஸ்தானாவது மயிராவது போட்டுத் தாக்கு என்று சொன்னது (ஹில்லரி க்ளிண்டன்) என்ற அளவுக்கு நுண்விவரங்கள். அந்தத் தனி வீட்டில் ஒளிந்து வாழ்வது ஒசாமாதானா என்று ஒசாமா மாதிரி இருக்கும் ஒரு தாடிக்கார ஆளை ஒரு நாள் இரவில் கொல்லும் வரை அமெரிக்கர்களுக்குத் உறுதியாக தெரியவில்லை. அனேகமாக ஒசாமா, ஒசாமாவாக இருக்க 50-50 வாய்ப்பு (அல்லது 40-60, 70-30 – யாரைக் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து), இதற்காக பாகிஸ்தானை சீண்டலாமா என்று வாதப்பிரதிவாதங்கள். சுவாரசியமாக எழுதப்பட்ட புத்தகம்.

Rise and Fall of Osama bin Laden (2021) என்று ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார். நான் படிக்கவில்லை, அலுப்பு தட்டிவிட்டது.

Zero Dark Thirty (2012) திரைப்படமும் ஒசாமாவை வேட்டையாடுவதைப் பற்றித்தான். ஒரே ஒரு CIA பெண் ஒற்றன் ஒரு துப்பைப் பல வருஷங்கள் விடாமல் பின்தொடர்ந்து ஒசாமாவைப் பிடித்ததைப் பற்றி. நல்ல திரைப்படம்.

பெர்கனின் புத்தகங்கள் ஒசாமாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான். எனக்கு ஒரே ஒரு கேள்விதான் எஞ்சுகிறது. தீவிரவாதத்தை ஒரு அரசே வளர்த்துவிடும்போது – இந்தியாவுக்கு பிரச்சினை தர காஷ்மீர் தீவிரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்துவிடுவது, அகாலி தல்லுக்கு பிரச்சினை தர பிந்த்ரன்வாலேக்கு ஜெயில் சிங் கொம்பு சீவிவிட்டது, பிரபாகரனுக்கு ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆதரவு, ஒசாமா, ஹமஸ்… – அது மீண்டும் மீண்டும் வளர்த்தவன் மேலேயே பாய்கிறது. ஆனாலும் ஏன் இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது?

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: பீட்டர் எல். பெர்கன் பற்றிய விக்கி குறிப்பு

இந்திய விடுதலையின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த அட்லி

(மீள்பதிவு, மூலப்பதிவு இங்கே)
க்ளமெண்ட் அட்லி 1945-1951 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் சிறந்த பிரதமர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் லேபர் கட்சித் தலைவர், பொதுவாக லேபர் கட்சியினர் காலனிய ஆதிக்கம் தவறு என்று நினைப்பவர்கள். அட்லியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிற்கு விடுதலை தந்தே ஆக வேண்டும் என்று கருதினார் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. அவரது சுயசரிதை அதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது. To put it uncharitably, தான் பிரதமரானதும் இந்தியாவை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டும் என்று கருதினார் என்றும் சொல்லலாம்.

அட்லியின் சுயசரிதையைப் – As It Happened – படிக்கும்போது நான் வியந்த விஷயம், என் takeaway, ஒன்றுதான். இந்தியா ஆங்கிலேயருக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெரிகிறது. 250-300 பக்க சுயசரிதையில் காந்தி ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்படுகிறார். ஜின்னா இரண்டு முறை, ஒரே பக்கத்தில். ஸ்டாஃபோர்ட் க்ரிப்ஸ் கூட அவர் ராடாரில் சில படிகள் மேலே இருக்கிறார். ஜாலியன்வாலாபாக்? ஜெனரல் டயர்? அவருக்கு இவை எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இத்தனைக்கும் அட்லி 1920களிலிருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். 1927-இன் சைமன் கமிஷனின் உறுப்பினராக இந்தியா வந்திருக்கிறார். சைமன் கமிஷன் போராட்டத்தில் இறந்த லஜ்பதி ராய், அதன் பின்விளைவாக இந்தியர்களின் பெரும் நாயகனாக மாறிய பகத் சிங் பற்றி எல்லாம் பேச்சு மூச்சே இல்லை. அவர் துணைப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 1942-இன் Quit India இயக்கம், 1943-இன் பெரும் பஞ்சம் போன்றவை கூட அவர் கண்ணில் படவில்லை. காமன்வெல்த் நாடு ஒன்றின் பிரதமராக ஆன பிறகுதான் நேரு அவர் கண்ணில் தென்பட்டிருக்கிறார். படித்த, மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த, இடதுசாரி சார்புடைய, காலனிய ஆதிக்கத்தை தவறு என்று நினைக்கும், சைமன் கமிஷனுக்காக இந்தியாவிற்கு சுற்றிப் பார்க்க வந்த லேபர் கட்சி தலைவருக்கு துணைப்பிரதமராகவும் இந்திய விடுதலை காலத்தில் பிரதமராகவும் இருந்த காலத்தில் கூட – இந்தியாவைப் பற்றிய பிரக்ஞை இவ்வளவுதான் என்றால் சாதாரண ஆங்கிலேயனுக்கு என்ன அக்கறை இருந்திருக்கும்?

அட்லி இளமையிலேயே இடதுசாரி சார்பு நிலை எடுத்திருக்கிறார். அப்போதுதான் ஆரம்பித்திருந்த லேபர் கட்சியில் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக கட்சியில் வளர்ந்திருக்கிறார். கட்சி பலம் பெறுவதில் வழக்கமான பிரச்சினைகள். அவற்றை தாண்டி கட்சியின் தலைவராக பரிணமித்திருக்கிறார். சர்ச்சில் எல்லா கட்சிகளையும் சேர்த்து இரண்டாம் உலகப் போரில் தேசிய அரசை அமைத்தபோது துணைப் பிரதமராக இருந்திருக்கிறார். உலகப்போரிற்கு பிறகு நடந்த தேர்தலில் சர்ச்சிலை தோற்கடித்து பிரதமராகி இருக்கிறார். வெற்றிக்கு பெரும் விலை கொடுத்த இங்கிலாந்தை மீட்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

சர்ச்சிலின் தலைமைப் பண்புகளை விதந்தோதுகிறார். போர்க்காலத்தில் அவரை விட சிறந்த தலைவர் இருந்திருக்க முடியாது என்று கருதுகிறார்.

இந்தப் புத்தகத்தை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேயர்களுக்க் பெரும் தலைவலியாக இருந்தார்கள் என்ற பிம்பத்தை இது உடைக்கிறது. எங்கேயோ தொலைதூரத்துப் பிரச்சினை என்றுதான் சராசரி ஆங்கிலேயன் கருதி இருப்பான் என்று தெளிவாகத் தெரிகிறது. காஷ்மீரில் பிரச்சினை என்பதைப் பற்றி சராசரி தமிழனுக்கு என்ன பிரக்ஞை இருக்குமோ அதுதான் சராசரி ஆங்கிலேயனுக்கும் இருந்திருக்க வேண்டும்

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

தக்காளியின் அரசியல்

(மீள்பதிவு)

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டுக்கான தளம் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி வடிவம் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய நிறுவனங்கள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய வழக்காகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, வடிவம், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய நிறுவனங்கள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய நிறுவனங்கள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இந்தியத் தக்காளிகளின் நிலை எப்படி? யாருக்காவது தைரியம் இருந்தால் கீழே போட்டு உடைகிறதா என்று பாருங்கள்!

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய நிறுவனங்கள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

இந்திய விடுதலையின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த அட்லி

க்ளமெண்ட் அட்லி 1945-1951 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர். இங்கிலாந்தின் சிறந்த பிரதமர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் துணைப் பிரதமராக இருந்தவர். அவர் லேபர் கட்சித் தலைவர், பொதுவாக லேபர் கட்சியினர் காலனிய ஆதிக்கம் தவறு என்று நினைப்பவர்கள். அட்லியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிற்கு விடுதலை தந்தே ஆக வேண்டும் என்று கருதினார் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. அவரது சுயசரிதை அதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது. To put it uncharitably, தான் பிரதமரானதும் இந்தியாவை எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கைகழுவிவிட வேண்டும் என்று கருதினார் என்றும் சொல்லலாம்.

அட்லியின் சுயசரிதையைப் – As It Happened – படிக்கும்போது நான் வியந்த விஷயம், என் takeaway, ஒன்றுதான். இந்தியா ஆங்கிலேயருக்கு ஒரு பொருட்டே அல்ல என்று தெரிகிறது. 250-300 பக்க சுயசரிதையில் காந்தி ஒரு முறை மட்டுமே குறிப்பிடப்படுகிறார். இத்தனைக்கும் அட்லி 1920களிலிருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கிறார். 1927-இன் சைமன் கமிஷனின் உறுப்பினராக இந்தியா வந்திருக்கிறார். அவர் துணைப் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 1942-இன் Quit India இயக்கம், 1943-இன் பெரும் பஞ்சம் போன்றவை கூட அவர் கண்ணில் படவில்லை. நேரு அவர் கண்ணில் காமன்வெல்த் நாடு ஒன்றின் பிரதமராக ஆன பிறகுதான் அவருக்கு தென்பட்டிருக்கிறார். படித்த, மேல்தட்டு குடும்பத்தை சேர்ந்த, இடதுசாரி சார்புடைய, காலனிய ஆதிக்கத்தை தவறு என்று நினைக்கும், சைமன் கமிஷனுக்காக இந்தியாவிற்கு சுற்றிப் பார்க்க வந்த லேபர் கட்சி தலைவருக்கு துணைப்பிரதமராகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் கூட இந்தியாவைப் பற்றிய பிரக்ஞை இவ்வளவுதான் என்றால் சாதாரண ஆங்கிலேயனுக்கு என்ன அக்கறை இருந்திருக்கும்?

அட்லி இளமையிலேயே இடதுசாரி சார்பு நிலை எடுத்திருக்கிறார். அப்போதுதான் ஆரம்பித்திருந்த லேபர் கட்சியில் சேர்ந்திருக்கிறார். மெதுமெதுவாக கட்சியில் வளர்ந்திருக்கிறார். கட்சி பலம் பெறுவதில் வழக்கமான பிரச்சினைகள். அவற்றை தாண்டி கட்சியின் தலைவராக பரிணமித்திருக்கிறார். சர்ச்சில் எல்லா கட்சிகளையும் சேர்த்து இரண்டாம் உலகப் போரில் தேசிய அரசை அமைத்தபோது துணைப் பிரதமராக இருந்திருக்கிறார். உலகப்போரிற்கு பிறகு நடந்த தேர்தலில் சர்ச்சிலை தோற்கடித்து பிரதமராகி இருக்கிறார். வெற்றிக்கு பெரும் விலை கொடுத்த இங்கிலாந்தை மீட்பதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்.

சர்ச்சிலின் தலைமைப் பண்புகளை விதந்தோதுகிறார். போர்க்காலத்தில் அவரை விட சிறந்த தலைவர் இருந்திருக்க முடியாது என்று கருதுகிறார்.

இந்தப் புத்தகத்தை நான் எல்லாருக்கும் பரிந்துரைக்கமாட்டேன். ஆனால் காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேயர்களுக்க் பெரும் தலைவலியாக இருந்தார்கள் என்ற பிம்பத்தை இது உடைக்கிறது. எங்கேயோ தொலைதூரத்துப் பிரச்சினை என்றுதான் சராசரி ஆங்கிலேயன் கருதி இருப்பான் என்று தெளிவாகத் தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

சுவாரசியமான கட்டுரை

ராபர்ட் காரோ முன்னாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன் பற்றி சிறந்த புத்தகங்களை (Master of the Senate, Passage to Power) எழுதியவர். குறிப்பாக ‘Passage to Power’ மிகச் சிறப்பான புத்தகம். புத்தகங்களை எழுத கடுமையாக உழைப்பவர், தரவுகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிடுவார்.

இந்தக் கட்டுரையில் தனக்கு இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்பதையும் ஜான்சனின் அதிகாரக் கைப்பற்றலில் ஒரு முக்கியமான படிக்கல்லையும் விவரிக்கிறார். ஜூனியர் காங்கிரஸ்மான் ஜான்சன் திடீரென்று – கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்குள் – ஒரு அதிகார மையமாக மாறிவிடுகிறார். ஒரே மாத அவகாசத்தில் இது நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஏன், எப்படி இது நடந்தது என்பதை விடாமல தேடிப் பிடித்து கண்டுபிடித்திருக்கிறார்.

சுவாரசியமான கட்டுரை, படியுங்கள் என்று பரிந்திரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: Master of the Senate, Passage to Power

யூக்ளிடின் ஜன்னல் (Euclid’s Window)

(மீள்பதிப்பு, மூலப்பதிப்பு அக்டோபர் 12, 2010-இல்)

லியனார்ட் ம்ளோடினோ (Leonard Mlodinow) அறிவியல் கருத்துக்களை அறிவியலில் வலுவான அடிப்படை இல்லாதவர்களும் சுலபமாகப் புரிந்து கொள்வதற்காக புத்தகங்கள் எழுதுபவர். இந்தத் துறையில் தமிழில் மிகச் சிறப்பாக எழுதியவர் சுஜாதாதான். ஒரு காலத்தில் பெ.நா. அப்புசாமி எழுதிய புத்தகங்களைப் படித்து எனக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்பட்டது/பெருகியது. இன்று யாராவது முயற்சிக்கிறார்களா என்று கூடத் தெரியவில்லை.

இந்தப் புத்தகம் வடிவகணிதத்தின் (geometry) அடிப்படைகளை விளக்குகிறது. வடிவகணிதம் என்றால் ஓடுபவர்கள் கூடப் புரட்டிப் பார்க்கலாம். அத்தனை தெளிவாக எழுதப்பட்டது.

யூக்ளிட் என்ற மனிதரைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அவர் ஆண் என்பது கூட வெறும் யூகம்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் எழுதிய Elements புத்தகம்தான் ஐரோப்பிய அறிவியலின் மூல நூல். கணிதத்தின் இன்றைய rigor – அதாவது மிக தெளிவாக தேற்றங்களை (theorems) நிரூபிப்பது – பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் இருப்பது பெரிய அதிசயம். (இந்திய கணிதத்தில் பொதுவாக இந்த rigor குறைவு)

Elements புத்தகம் இப்படி ஆரம்பிக்கிறது. புள்ளி (point) என்றால் என்ன, கோடு (line) என்றால் என்ன மாதிரி சில வரையறைகள் (definitions), நிரூபிக்கத் தேவை இல்லாத சில அடிப்படை முடிவுகள் (postulates) – இரண்டு புள்ளிகளை ஒரு கோட்டால் இணைக்கலாம் மாதிரி – தெளிவாக வைக்கப்படுகின்றன. பிறகு இந்த முன் முடிவுகளின் அடிப்படையில் சில தேற்றங்கள், அந்த தேற்றங்களின் வைத்து வேறு சில தேற்றங்கள் என்று போகிறது. வீடு கட்டும்போது அஸ்திவாரம், பிறகு வீடு, பிறகு முதல் மாடி என்று போவதில்லையா? அந்த மாதிரி.

இந்த அடிப்படை முடிவுகளில் ஐந்தாவது அடிப்படை – the famous fifth postulate – ஒரு தேற்றமாக இருக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக எல்லாருக்கும் ஒரு நினைப்பு இருந்தது. அதை ஆங்கிலத்திலேயே தருகிறேன். – Given any straight line and a point not on it, there “exists one and only one straight line which passes” through that point and never intersects the first line, no matter how far they are extended. தமிழில் சொன்னால்: ஒரு கோடு, அந்த கோட்டில் இல்லாத ஒரு புள்ளி. அந்த புள்ளியின் மூலம் முதல் கோட்டை வெட்டாத ஒரே ஒரு கோடுதான் வரைய முடியும். இன்னும் சுலபமாக சொன்னால் ஒரு கோடு, ஒரு புள்ளி. அந்த புள்ளியின் மூலம் ஒரே ஒரு இணைகோடுதான் (parallel line) வரைய முடியும்.

ஆனால் parallel என்றால் என்ன? நம் எல்லாருக்கும் இது புரிகிறது, ஆனால் கணிதத்தில் இதை எப்படி சொல்வது? அதைத்தான் “வெட்டாத ஒரு கோடு” என்கிறார். நீங்கள் ஒரு காகிதத்தில் ஒரு கோட்டை வரைந்து, கொஞ்சம் தள்ளி ஒரு புள்ளியை வைத்தால் அட ஆமாம், இந்தப் புள்ளியை உள்ளடக்கி ஒரே ஒரு இணைகோடுதான் வரைய முடியும் என்று சொல்வீர்கள்.

பல நூற்றாண்டுகளாக கணித வல்லுனர்கள் பலருக்கும் இது அடிப்படை முன்முடிவாக இருக்க வேண்டாம், இது நிரூபிக்கக் கூடிய தேற்றம்தான் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. இதைத் தேற்றமாக நிரூபிக்க பலரும் படாத பாடுபட்டனர். ஆனால் பப்பு வேகவில்லை. ஏனென்றால் இது சில வடிவகணிதத்தில்தான் பொருந்தும்! காகிதத்துக்கு பதிலாக ஒரு பந்தில் ஒரு “கோடு” போடுங்கள். இந்த கோடு உண்மையில் ஒரு வட்டம் – பந்தை சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திலேயே முடியும் இல்லையா? இதை வெட்டாத இன்னொரு “கோடு”, ஆனால் பார்த்தாலே இணையாக ஆக இல்லாத கோடு வரைய முடியாதா? இந்த படத்தில் இருக்கும் சிவப்பு “கோடும்” பச்சை “கோடும்” இணையானவை என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால் அவை ஒன்றை ஒன்று வெட்டுவதில்லை!

ஒன்றும் புரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். என்னை விட ம்ளோடினோ நன்றாக எழுதி இருக்கிறார், அது புரிந்துவிடும். கணிதம் எவ்வளவு சுவாரசியமானது என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட வடிவகணிதத்தை அடிப்படையாக வைத்துதான் ஐன்ஸ்டீன் தன் ரிலேடிவிட்டி தியரியை உருவாக்க முடிந்தது என்று நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: பி.ஏ. கிருஷ்ணன் இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நல்ல அறிமுகத்தை எழுதி இருக்கிறார் – அ. முத்துலிங்கம் தொகுத்த கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது என்ற புத்தகத்தில் படிக்கலாம்.

பின்பின்குறிப்பு: கணிதம், வடிவகணிதம், இணைகோடு என்பதற்கெல்லாம் இன்னும் நல்ல தமிழ் வார்த்தைகள் இருக்கின்றனவா? எனக்கு வடமொழி வார்த்தைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை, (இணைகோடு வடமொழி இல்லை என்றுதான் நினைக்கிறேன்) ஆனால் நல்ல தமிழ் வார்த்தையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும், பழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக இருந்தால் உத்தமம். கணிதம், வடிவகணிதம் என்பதெல்லாம் பழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் என்று தோன்றவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணிதம்

தொடர்புடைய சுட்டிகள்:
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது தொகுப்பு பற்றி அ. முத்துலிங்கம்
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது புத்தகம் வாங்க

ட்ரம்ப் வென்றது எப்படி? – காதரின் ஈடின் எழுதிய ‘$2.00 A Day’

kathryn_edinஅமெரிக்கா பணக்கார நாடு என்றுதான் உலகம் முழுவதும் இருந்து இங்கே குடியேறிவிட ஆசைப்படுகிறோம். ஆனால் அமெரிக்காவில் ஏழ்மை என்பது அதிசயம் அல்ல.

காதரின் ஈடின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக்ப் பேராசிரியர். அவரது கணக்குப்படி பதினைந்து லட்சம் குடும்பங்கள் அமெரிக்காவில் படு பயங்கர ஏழ்மையில் வாடுகின்றன. (அமெரிக்காவில் குத்துமதிப்பாக பத்து கோடி குடும்பங்கள் இருக்கின்றன, முப்பத்து கோடி மக்கள் தொகை). ஒரு நாளைக்கு இரண்டு டாலர் வருமானம் இருந்தால் அதிகம். பலருக்கு ஆனால் இருக்க வீடு உண்டு. நகரங்களில் குடியிருப்பவர்களை வெளியேற்றுவது சிரமம். Rent Control உங்களுக்கு ஓரளவு பாதுகாப்பு தரும். ஆனால் தங்க இடம் இல்லாவிட்டால் பெரும் கஷ்டம். சாப்பாட்டுக்கு Food Stamps-ஐ அரசு தருகிறது. (இதை வைத்து உணவுப் பொருட்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.) ஆனால் காசு இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? வீட்டுக்கு மின்சாரத்துக்கு, அலைபேசிக்கு, பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் வேலை தேட முடியுமா? அதிலும் இந்தக் குடும்பங்களில் அனேகருக்கு குழந்தைகள் உண்டு. அவர்களுக்கு ஷூ வாங்க வேண்டாமா?

ஈடின் இவர்களைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். இவர்களுக்கு வேலை செய்ய விருப்பம் இருந்தும் வாய்ப்புகள் இல்லை என்கிறார். அதுவும் டெக்னாலஜி வளர வளர ஆரம்ப நிலை வேலைகள் கிடைப்பது கஷ்டமாகிக் கொண்டே போகிறது. ஒரு காலத்தில் கிடைத்த தொழிற்சாலை வேலைகள் இப்போது கிடைப்பதில்லை. இவர்கள் எப்படித்தான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்?

Food Stamps-ஐ விற்பது சட்ட விரோதம், ஆனால் விற்கிறார்கள். ரத்தத்தை விற்கிறார்கள். உடலை விற்கிறார்கள். தெருவில் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். ஒரு பெண் தினமும் காலை உணவுக்காக மக்டோனல்ட்ஸில் காஃபி சாப்பிடுகிறாள், அதில் ஆறு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொள்வாள். பண்டமாற்று செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்.

அரசு ஒரு காலத்தில் கொஞ்சம் பணம் கொடுத்தது. இப்போது பணம் கொடுப்பதில் பல கட்டுப்பாடுகள், அனேகருக்கு பணம் கிடைப்பதில்லை. அதுவும் ரிபப்ளிகன் அரசு அமைந்தால் இது மேலும் சிரமம். வேலை தேடிக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தருகிறது. ஆனால் கொஞ்சமாவது காசு இல்லாமல் – பஸ்ஸுக்கும் அலைபேசிக்கும் காசு இல்லாமல் – இந்த நாட்களில் வேலை கிடைப்பது மகா கஷ்டம்.

ஈடின் இந்தப் புத்தகத்தை anecdotes-களால் நிரப்பி இருக்கிறார். ஒவ்வொரு சம்பவமும் நம்மை உச்சுக் கொட்ட வைக்கிறது. ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை என்று தெரியவில்லை. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நான் அலுவலகத்துக்கு நடக்கும் ஒரு மைல் தூரத்தில் பத்து வீடற்ற, நடைபாதைவாசிகளைப் பார்க்கலாம். மழை கொட்டும் நாட்களில் மனம் வருந்தத்தான் செய்யும், ஆனால் இது எத்தனை பெரிய பிரச்சினை, சான் ஃப்ரான்சிஸ்கோவில் இப்படி எத்தனை நடைபாதைவாசிகள் இருக்கிறார்கள், நூறு பேரா, ஆயிரம் பேரா, பத்தாயிரம் பேரா என்று தெரிவதில்லை. அவர் கொடுக்கும் data பதினைந்து லட்சம் குடும்பம் என்பதுதான். அது அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம், ஒன்றரை சதவிகிதம் இருக்கலாம். அது உண்மையாக இருந்தால் அமெரிக்க சூழலில் இது பெரிய பிரச்சினைதான்.

நான் வாழும் கலிஃபோர்னியா பகுதியில் ட்ரம்ப் வெல்ல வாய்ப்பே இல்லை என்றுதான் எல்லாரும் நினைத்தோம். ஆனால் எங்களுக்கு இப்படிப்பட்ட அமெரிக்கா பழக்கமே இல்லை. இந்த ஏழைகள்தான் ஹில்லரி க்ளிண்டன் வேண்டவே வேண்டாம், நல்ல மாற்றமோ இல்லையோ ட்ரம்ப் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று நினைத்து அவருக்கு ஓட்டுப் போட்டிருக்க வேண்டும்…

படிக்கலாம். அமெரிக்காவின் இருண்ட பக்கங்களைப் பற்றி கொஞ்சம் புரிகிறது. ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

டா-நெஹிசி கோட்ஸ் எழுதிய Between the World and Me

ta_nehisi_coatesBetween the World and Me 2015-இல் எழுதப்பட்டது. நியூ யார்க் டைம்ஸ் அந்தப் புத்தகத்தை 2015-இன் பத்து சிறந்த புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருந்தது. ஆனால் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கக் காரணம் நியூ யார்க் டைம்சின் பரிந்துரை அல்ல, என் மகள் ஸ்ரேயாதான் காரணம்.

ஸ்ரேயா இளைஞி. அவளுக்கு சமூக அநீதிகளைக் காணும்போது கடுங்கோபம் வருகிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று பேச்சுவாக்கில் ஒரு நாள் சொன்னாள், அவளுக்கு முன்பாக நான் படித்துவிட்டேன்!

American Dream என்பதைத்தான் அமெரிக்கப் பண்பாட்டின் அடிப்படை என்றே சொல்லலாம். உன் உழைப்பால் நீ முன்னேறலாம், நீ அடையும் வெற்றிக்கும் தோல்விக்கும் நீயே முழுக் காரணம், அனைவருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க அரசாங்கத்தின் ஒரே தார்மீகத் தேவை என்று சுருக்கமாகச் சொல்லலாம். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’, அவ்வளவுதான். ஆனால் அமெரிக்காவின் வெற்றி செவ்விந்தியர்களை ஏமாற்றி, கறுப்பர்களை ஒடுக்கி அடையப்பட்டது. நியாயமாகவே எல்லாம் நடந்திருந்தால் அமெரிக்காவின் வளர்ச்சி இவ்வளவு பெரிதாகக் இருந்திருக்காது.

கோட்ஸ் முன்வைப்பது அமெரிக்கக் கனவின் அடிப்படை முரணை. அமெரிக்கக் கனவு என்பது அனேகக் கறுப்பர்களுக்கு எட்டாக் கனவுதான். ஒவ்வொரு தாயும் தகப்பனும் தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, அடிப்படை வசதிகள் வேண்டுமென்றுதான் முயற்சிக்கிறார்கள். ஆனால் கறுப்பர்களுக்கு – குறிப்பாக நகர்ப்புறங்களில், குற்றச் சூழலில் வாழும் ஏழைக் கறுப்பர்களுக்கு – அந்தக் கனவை அடைவதில் இன்னும் பல நடைமுறைச் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் நிறம் அவர்களுக்கு (ஏன் பல மாநிலங்களில் பழுப்பு நிற இந்தியர்களுக்குக் கூடத்தான்) பலவீனமாகத்தான் இருக்கிறது. வன்முறை கறுப்பர்களின் வாழ்வில் சகஜமாக இருக்கிறது. இந்த அடிப்படை முரணைத்தான் கோட்ஸ் மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்கிறார்.

இந்தப் புத்தகம் கோட்ஸ் தன் பதின்ம வயது மகனுக்கு எழுதும் கடிதங்கள் வடிவில் அமைந்திருக்கிறது. அந்தக் கடிதங்களை வடிவமைத்திருப்பதில் கோட்சின் எழுத்துத் திறமை வெளிப்படுகிறது. பல இடங்களில் இவர் சொல்வது நியாயம்தானே என்று தோன்றத்தான் செய்கிறது.

உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், நான் இந்தப் புத்தகத்தை பெரிதாக ரசிக்கவில்லை. கோட்சின் அடிப்படைக் கருத்து – அமெரிக்காவில் வெள்ளையர்களின் மேலாதிக்கம் ஒரு நாளும் மாறாது, அதனால் கறுப்பர்கள் எல்லாருக்கும் எதுவும் எப்போதும் நடக்கலாம் – எனக்கு ஏற்புடையதல்ல. என் வாழ்நாளிலேயே அபிராமணர்கள் என் உறவினர் வீடுகளில் நடத்தப்படும் விதத்தில் மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். அபிராமணர்கள் தண்ணீரை சீப்பிக் குடிக்காமல் தூக்கியே குடித்தாலும் அந்த டம்ளர் தனியாக கழுவி வைக்கப்படுவது ஒரு காலத்தில் என் உறவினர்கள் வீட்டில் சகஜமாக நடந்தது. வீட்டுக்கு வருபவன் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். இன்றோ பெரிதாக யாருக்கும் இதிலெல்லாம் அக்கறையில்லை. (அதற்காக வேற்று ஜாதிப் பெண்ணோடு திருமணம் என்றால் சுலபமாக ஒத்துக் கொண்டுவிடுவார்கள் என்பதில்லை.) எதுவுமே மாறாது என்றால் வாழ்வதிலேயே பொருளில்லை. மாற்றங்கள் வர நிறைய காலம் எடுக்கிறது என்பது மனதைத் தளர வைக்கக் கூடிய விஷயம்தான், ஆனால் அதற்காக எதுவும் நடக்காது என்று சோர்வடைவதில் அர்த்தமில்லை. ஒரு வேளை நான் கறுப்பனாக இருந்திருந்தால் எனக்கு வேறு விதமாகத் தோன்றி இருக்குமோ என்னவோ.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

Phillipe Petit எழுதிய ‘A Walk in the Clouds’

philippe_petit_tightrope_mid-xlargeநியூ யார்க் நகரத்தின் இரட்டை கோபுரம் 2011-இல் அல் கேடா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அது எப்போது கட்டப்பட்டது என்று தெரியுமா? 1975-இல்தான். கட்டிடம் எழுந்த காலத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது. ஃபிலிப் பெடி தன் சாகசங்களை விவரிக்கிறார். (மோர்டிகாய் கெர்ஸ்டைன் ஒரு சிறுவர் புத்தகமாகவும் (Man Who Walked Between the Towers) இந்தச் சம்பவத்தை எழுதி இருக்கிறார்)

ஃபிலிப் பெடி ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே சர்க்கஸ் சாகசங்களில் ஈடுபாடு. குறிப்பாக கயிற்றின் மேல் நடப்பதில் ஈடுபாடு. பொதுவாக சர்க்கஸில் நடப்பவர்களுக்கு கீழே ஒரு வலைப்பின்னல் இருக்கும். விழுந்தால் பலத்த அடிபடாது, உயிருக்கு அபாயம் இல்லை. ஆனால் இவருக்கு உயரமான இடங்களில் கயிற்றைக் கட்டி எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் அதன் மேல் நடக்க வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியமே. அப்படி நடக்கும்போது விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? அதனால் அதிகாரபூர்வமாக அப்படி செய்ய இவருக்கு அனுமதி கிடைக்காது.

phillip_petit_notre_dameபல நாள் திட்டமிட்டிருக்கிறார். பிறகு ஒரு நாள் இரவு நண்பர்களின் உதவியோடு பாரிஸ் நோட் ரே தாம் சர்ச்சின் இரட்டை கோபுரங்களின் நடுவே ஒரு கயிற்றைக் கட்டி இருக்கிறார். அடுத்த நாள் காலை பாரிஸ் மக்கள் ஆவென்று பார்க்க, அந்த கயிற்றின் மீது நடை. அதற்காக (சின்ன அளவில்) தண்டனையும் கிடைத்திருக்கிறது.

ஒரு நாள் பல் வலி. மருத்துவரைப் பார்க்கப் போயிருக்கிறார். அங்கே ஒரு பத்திரிகை கிடந்திருக்கிறது. வலியை மறக்க பத்திரிகையைப் புரட்டும்போது நியூ யார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் கட்டப்படுவதைப் பற்றி படித்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் அந்தக் கட்டுரையைக் கிழித்துக் கொண்டு வந்துவிட்டார். அன்றிலிருந்து இரட்டைக் கோபுரங்களின் நடுவே கயிற்றின் மேல் நடப்பது பற்றித்தான் வாழ்வின் ஒவ்வொரு நிமிஷமும் சிந்தித்திருக்கிறார்.

நண்பர்கள் பலரும் உதவி இருக்கிறார்கள். இந்த முயற்சியில் உதவி செய்ய புது நண்பர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். காவலர்களை ஏமாற்றி கட்டிடத்தின் உள்ளே செல்லும் வித்தை எல்லாம் கை வந்த கலையாக இருக்கிறது. பல தடங்கல்களை மீறி ஒரு நாள் இரவு உள்ளே சென்றுவிட்டார். ஆனால் கயிற்றைக் கட்டுவதற்குள் உயிர் போய்விடுகிறது. எதிரே இருக்கும் கோபுரத்திலிருந்து வில்லை வைத்து இங்கே கயிற்றை அனுப்புகிறார்கள், ஆனால் அது கொஞ்சம் தள்ளி விழுந்துவிடுகிறது. எப்படியோ கயிற்றைக் கட்டிவிட்டார்.

காலை நியூ யார்க் நகரம் விழிக்கிறது. மேலே சிறு புள்ளியாக ஒரு உருவம். நடக்க ஆரம்பிக்கிறது. கீழே கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அந்தப் பக்கம் போனவர் பேசாமல் இறங்க வேண்டியதுதானே? கிடையாது, திருப்பி இந்தப் பக்கம் நடந்து வருகிறார். போலீஸ் வந்துவிடுகிறது. இறங்கிவிடு என்று மிரட்டுகிறார்கள், கெஞ்சுகிறார்கள். இவர் அப்போதுதான் கயிற்றின் மேல் உட்கார்கிறார், படுத்துக் கொள்கிறார், இல்லாத வித்தை எல்லாம் காண்பிக்கிறார். அவரை போலீஸ் கயிற்றின் மேல் நடந்து பிடிக்கவா முடியும்? பல முறை (ஆறா, எட்டா என்று சரியாகத் தெரியவில்லை) இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமும் அங்கிருந்து இங்கும் நடக்கிறார். ஒரு வழியாக இறங்கி வந்ததும் போலீஸ் கைது செய்கிறார்கள்.

என்ன தண்டனை? நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் ஒரு ஆறேழு அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி கொஞ்ச நேரம் சிறுவர்களுக்கு வித்தை காட்ட வேண்டும். தண்டனை விதித்த நீதிபதியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இரட்டை கோபுரங்கள் இருந்தபோது அங்கே செல்ல டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால் கட்டிடக் காவல்துறை அவருக்கு எப்போது வேண்டுமானாலும் வருவதற்கான அனுமதிச் சீட்டை அவருக்குத் தருகிறது. 🙂

திரைப்படமாக (Walk) வந்தது. பல மில்லியன்களை சம்பாதித்தது. ஆனால் பெடி பெரும் பணக்காரர் அல்லர். இந்த சாகசங்கள்தான் அவரது வாழ்வின் பொருள், அதனால் இப்படி உயிரைப் பணயம் வைத்தார். பணத்துக்காக அல்ல.

திரைப்படத்தையும் புத்தகத்தையும் பாருங்கள்/படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தக்காளியின் அரசியல்

இன்று உலகெங்கும் தக்காளி மிக அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. நன்றாகப் பழுத்த தக்காளியின் லேசான இனிப்பும் லேசான புளிப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக அதன் juicyness-ஐயும் விரும்பாதவர் யார்? காய்ந்த மிளகாயை நன்றாக அரைத்து அதனுடன் தக்காளியை வதக்கி தாளித்து சட்னி செய்தால் – அட அட அதன் சுவையை விவரிக்க நாஞ்சிலால் கூட முடியுமோ என்னவோ தெரியவில்லை. இது சாப்பாட்டு ப்ளாக் இல்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

barry_estabrookTomatoland பாரி எஸ்டப்ரூக் எழுதிய அபுனைவு. புத்தகம் அவர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டிச் செல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவருக்கு முன்னால் ஒரு லாரி, அது நிறைய தக்காளி. திடீரென்று சில தக்காளிகள் லாரியிலிருந்து விழுகின்றன. 70 மைல் வேகத்தில் ஒரு தக்காளி வந்து உங்கள் காரின் முன்பக்கக் கண்ணாடியில் அடித்தால் என்னாகும்? கண்ணாடி முழுவதும் சிவந்த தக்காளிச்சாறு, முன்னால் பார்க்க முடியாமல் விபத்து என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை. தக்காளி கான்க்ரீட் சாலையில் அந்த வேகத்தில் விழுந்தாலும் உடைவதில்லை. ஏறக்குறைய ஒரு சிவப்புக் கல் வந்து அடிப்பது போலத்தான் இருக்கிறது.

எஸ்டப்ரூக் வியந்து போகிறார். வீட்டுக்கு வந்து நாலு தக்காளியைத் தரையில் போடுகிறார். வீசி எறிகிறார். தக்காளி உடைவதே இல்லை. (இதைப் படித்துவிட்டு நானும் தக்காளியை கல் தரையில் போட்டுப் பார்த்தேன். உடையவில்லைதான், ஆனால் மெதுவாகத்தான் போட்டேன், எஸ்டப்ரூக் சொன்னதைக் கேட்டு வேகமாக வீசி எறிந்து அது தப்பித் தவறி உடைந்து போனால் வீட்டம்மாவிடம் யார் பேச்சு வாங்குவது?)

இன்று அமெரிக்காவில் – குறிப்பாக ஃப்ளோரிடாவில் விளையும் தக்காளிகள் அப்படி மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணுவிலேயே மாற்றம், கடினத்தோல் உடைய தக்காளியுடன் ஒட்டு என்று பல விதமாக இது நடந்திருக்கிறது. ஃப்ளோரிடாவின் தக்காளி வியாபாரிகள் சங்கம் அங்கிருந்து விற்பனைக்குப் போகும் ஒவ்வொரு தக்காளியும் இந்த அளவு கடினத்தோல், இந்த மாதிரி ஷேப் உள்ளவையாக இருக்க வேண்டும் என்று பல குணங்களை strict ஆக கடைப்பிடிக்கிறது.

ஆஹா ஓஹோ அமெரிக்கான்னா அமெரிக்காதான், என்ன மாதிரி தரக்கட்டுப்பாடு என்பவர்கள் அடுத்த பாராக்களை கட்டாயமாகப் படிக்க வேண்டும்.

தக்காளிக்கான விவசாயக் கூலிகள் அனேகமாக மெக்சிகோக்காரர்கள். அவர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பரதேசி படத்தில் வரும் கொத்தடிமைகளுக்கும் இந்தக் கூலிகளுக்கும் வித்தியாசமே இல்லை. வன்முறை கொஞ்சம் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான். தப்பிக்க முடியாது. வரும் பணம் இருக்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே சரியாகப் போய்விடும். தக்காளி விவசாயம் இன்று அனேகமாக பெரிய கம்பெனிகள் கையில். அவர்கள் மேஸ்திரிகளை வைத்து விவசாயம் செய்கிறார்கள். இருக்கும் இடம், சாப்பாடு இரண்டையும் தருவது மேஸ்திரிதான். கொடுமையான விஷம் உள்ள பூச்சி மருந்தை கையால் தெளிப்பது என்பதெல்லாம் சர்வசாதாரணம். இப்படி விஷத்தோடு நேரடி தொடர்பு இருப்பதால் குறையுள்ள குழந்தைகள் பிறந்து அது பெரிய கேசாகி இருக்கிறது.

எஸ்டப்ரூக் சொல்லும் இரண்டாவது விஷயம் – சுவை. இந்தத் தக்காளிகளில் சுவையே இருப்பதில்லை. நான் பெரிதாக இதையெல்லாம் கவனிப்பவன் இல்லை. ஆனால் கடைசியாக எப்போது ரசத்தில் அட தக்காளி இத்தனை சுவையாக இருக்கிறதே என்று சாப்பிட்டு பல மாதங்களாகிறது. தக்காளி அரைக்கப்பட்டால்தான் கொஞ்சமாவது ருசி தெரிகிறது. சுவையை விதி விதித்து கட்டுப்படுத்த முடியாது, ஷேப், தோல் பற்றி கவலைப்படாமல் தக்காளி விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளிடம்தான் சுவையான தக்காளி கிடைக்கிறது என்கிறார்.

மூன்றாவதாக அவர் சொல்வது தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்க் கொண்டிருப்பது. இப்படி ஒரேயடியாக சீரான தக்காளி என்று போனால காட்டுத் தக்காளியின் பல வகைகள் காணாமல் போய்விடுகின்றன. ஒட்டு விவசாயம் நடப்பது எதிர்காலத்தில் கஷ்டம். பல கல்லூரிகள் இன்று இந்தக் காட்டுத் தக்காளியின் விதைகளை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் பணம் வருவது பெரிய கம்பெனிகள் மூலம்தான், நாளை ஒரு தென்னமெரிக்க விவசாயி அவன் வீட்டு பக்கத்திலுள்ள மலையில் விளைந்து கொண்டிருந்த தக்காளி விதையை இந்தப் பெரிய கம்பெனிகள் தயவு வைத்தால்தான் பெறக் கூடிய நிலை உண்டாகலாம்.

இது தக்காளியின் அரசியல் மட்டுமல்ல, அமெரிக்காவின் விவசாயக் கூலிகளின் அரசியல்; விவசாயம் பெரிய கம்பெனிகள் கையில் போய்க் கொண்டிருப்பதின் அரசியல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்