சுஜாதாவின் “மேற்கே ஒரு குற்றம்” (கணேஷ்-வசந்த்)

மாத நாவலாக வந்தபோது படித்திருக்கிறேன், it was delightful then. நண்பர் கூட்டம் எல்லாருமே சுஜாதா பக்தர்களாக மாறிக் கொண்டிருந்த தருணம் அது. மீண்டும் சமீபத்தில் படிக்க முடிந்தது. இப்போதும் பிடித்திருக்கிறது.

சிம்பிளான மர்மம்தான் என்றாலும் விறுவிறுப்புக்குக் குறைவில்லை. டென்ஷனோடு கணேஷைப் பார்க்க வரும் ஒரு பெண்ணை கோர்ட்டில் பிசியாக இருக்கும் கணேஷ் காத்திருக்கச் சொல்கிறான். கணேஷ் வருவதற்குள் போய்விடும் அந்தப் பெண் அன்றே ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்தல்ல, கொலை என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள். அவள் ஒன்றும் சொல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் சொல்லிவிட்ட மாதிரி நடிக்கிறார்கள். வில்லன்கள் இவர்களைக் கடத்தி கொள்ளப்போகும்போது அந்தப் பெண் செய்து தருவதாக சொன்ன காரியத்தை தாங்கள் முடித்துத் தருவதாக பேரம் பேசுகிறார்கள். ஜெர்மனிக்குப் போகிறார்கள். என்ன காரியம் என்று அவர்களுக்கே தெரியாது என்பதுதான் ஒரே பிரச்சினை. கணேஷிடம் இருக்கும் ஒரே க்ளூ அந்தப் பெண் கணேஷுக்காக காத்திருக்கும்போது வரைந்துவிட்டுப் போன doodles-தான். வட்ட வட்டமாக வரைந்திருக்கிறது. பிரச்சினையை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கதையில் எப்போதும் ஒரு மெல்லிய நகைச்சுவை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதுவும் வசந்த் பாத்திரம் அடிக்கும் கமெண்டுகள் சரியான அளவில் எல்லையைத் தாண்டுகின்றன. தமிழுக்கு உயர்தரமான த்ரில்லர். ஆங்கில த்ரில்லர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் படிக்கக் கூடிய த்ரில்லர்தான். ஒரு நல்ல ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் புத்தகம் அளவில் இருக்கிறது. இன்றைக்கும் யாரும் அந்த அளவுக்குக் கூட போகவில்லை என்பது சோகம்தான்.

கிழக்கு பதிப்பகம் மீண்டும் பதித்திருக்கிறது. விலை எழுபது ரூபாய்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

க.நா.சு. நூற்றாண்டு

காலச்சுவடு இணைய இதழில் பழ. அதியமான் என்பவர் க.நா.சு. எழுதிய நூல்களைப் பற்றி நிறைய விவரங்கள் தந்திருக்கிறார். அந்தக் கட்டுரையிலிருந்துதான் இது க.நா.சு. நூற்றாண்டு என்பதே தெரிந்தது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நான் படித்த முதல் க.நா.சு. புத்தகம் படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகம் தந்த மகிழ்ச்சிக்கு ஈடாக முதன் முதலாக திலீப்குமாரின் கடைக்குப் போனது, ஜெயமோகனோடு முதல் சந்திப்பு இரண்டையும்தான் சொல்லலாம். ஒத்த ரசனை என்பதெல்லாம் கூட இரண்டாம் பட்சம், தமிழில் அவணிக எழுத்துக்களைப் படித்துவிட்டு அவற்றைப் பற்றி பேச, எழுத, விற்க, பரிந்துரைக்க ஆள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது பெரிய சந்தோஷம். அதுவும் இணையம் வராத காலத்தில், இணையத்தில் தமிழ் பற்றி அவ்வளவாக தெரியாத காலத்தில் படித்திருக்கிறீர்களா புத்தகமும், திலீப்குமாரும் பாலைவனச் சோலைகள்தான். க.நா.சு. பரிந்துரைத்த புத்தகங்கள் அனைத்தும் பல வருடத் தேடலுக்குப் பிறகும் கிடைக்கவில்லை என்பது சோகமான விஷயம்.

படித்திருக்கிறீர்களா தந்த உற்சாகத்தில் அவர் பேரைப் பார்த்தால் புத்தகம் வாங்கத் தொடங்கினேன். நாவல் கலையாவது கொஞ்சம் பரவாயில்லை, இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (1984) எல்லாம் தினமணி மாதிரி பத்திரிகைகளில் படித்துவிட்டு தூக்கிப் போட வேண்டியவை. ஒரு ஐநூறு ஆயிரம் பேராவது புத்தகம் படியுங்கள் என்று கேட்டுக் கொள்வார் அவ்வளவுதான். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது பெரிய சோகம். அதை விடப் பெரிய சோகம் அவ்வளவு committed வாசகர்கள் கூட இல்லாமல் அவர் போன்றவர்கள் கஷ்டப்பட்டது.

அப்புறம் சுந்தரராமசாமியின் நினைவோடை சீரிஸில் அவரைப் பற்றிய ஒரு கோட்டுச்சித்திரம் கிடைத்தது. நினைவோடை சீரிஸ் பொதுவாகவே அருமையானது. இதில் க.நா.சு.வின் ஆளுமை நன்றாகப் புரிகிறது.

க.நா.சு.வின் மாப்பிள்ளை பாரதிமணி எழுதிய ஒரு நினைவுக் குறிப்பும் படிக்க வேண்டியது. படிப்பு, எழுத்து தவிர வேறு எதுவும் தெரியாத மனிதர். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். இன்னொரு நினைவுக் குறிப்பும் சுவாரசியமானது.

தஞ்சை பிரகாஷ் எழுதிய வாழ்க்கை வரலாறும் கிடைத்தது. கொஞ்சம் போர்.

இப்படி அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்ததே தவிர, அவர் புத்தகம் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியில் பொய்த்தேவு (1946) கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. ஜெயமோகன் இதைத் தமிழின் ஆறாவது சிறந்த நாவலாக மதிப்பிடுகிறார். (மதிப்பீடு 2000-க்கு அப்புறம் வந்த நாவல்களை கணக்கில் கொள்ளவில்லை.) எஸ்.ரா.வும் இதைத் தமிழின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் இது எல்லாருக்கும் அப்பீல் ஆகும் என்று சொல்வதற்கில்லை. என்னடா சோமு பிறந்தான், வளர்ந்தான், பணம் சம்பாதித்தான், ஓட்டாண்டி ஆனான், பண்டாரம் ஆகிச் செத்தான், இதெல்லாம் ஒரு கதையா என்று நினைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. சோமுவின் தேடல் உங்களுக்குப் புரிந்தால் அது இலக்கியம். இல்லாவிட்டால் போர்தான். தோழி அருணா கூட இதுல என்ன இருக்கு ஆர்வி என்று கேட்ட ஞாபகம் வருகிறது. (எனக்கு காஃப்கா எழுதிய மெடமார்ஃபாசிஸ் கொஞ்சமும் அப்பீல் ஆவதில்லை. திடீரென்று கரப்பான் பூச்சி ஆனானாம், அதை என்னதான் metaphor என்று வைத்துப் படித்தாலும் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை)

இன்னும் படிக்க விரும்பும் புத்தகங்கள் இருக்கின்றன. அசுரகணம் (1959), ஒரு நாள் (1950). வேறு நாவல்கள் பற்றித் தெரியவில்லை. அவர் எழுதிய சிறுகதைகள் பற்றி சுத்தமாகத் தெரியவில்லை. ஜெயமோகன் அவரது தெய்வ ஜனனம் என்ற ஒரே ஒரு சிறுகதையை மட்டும் நல்ல தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா.வின் டாப் நூறு தமிழ் சிறுகதைகளில் க.நா.சு. எழுதிய எதுவும் இடம் பெறவில்லை.

புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கு அடுத்த வரிசைதான் என்றாலும் ஆய்வு செய்யத் தகுதியானவர். அதியமான் எழுதி இருப்பது முதல் படி. இன்னும் நிறைய வரவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
அதியமானின் கட்டுரை
காலச்சுவடு இதழில் சுகுமாரனின் கட்டுரை
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?
க.நா.சு. பற்றி பாரதி மணி – பகுதி I, பகுதி II, பகுதி III
சுந்தர ராமசாமியின் நினைவுகள் – நினைவோடை சீரிசிலிருந்து சில excerpts

2011-இன் 10 சிறந்த புத்தகங்கள் – நியூ யார்க் டைம்ஸ் தேர்வு

2011-இன் நூறு சிறந்த புத்தகங்கள் என்ற பதிவு நினைவிருக்கலாம். நூறு புத்தகங்களைப் படிப்பது இருக்கட்டும், நூறு புத்தகம் உள்ள லிஸ்டைப் படிப்பதே எனக்கெல்லாம் பெரிய கஷ்டம். இவ்வளவு பெரிய லிஸ்ட் எல்லாம் கொடுத்தால் ஏதாவது தெரிந்த பெயர் இருக்கிறதா என்று skim மட்டும்தான் செய்ய முடிகிறது. லிஸ்டில் ஒரு இருபது முப்பது சதவிகிதமாவது தெரிந்த பேர்கள் இல்லாவிட்டால் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதே இல்லை.

நியூ யார்க் டைம்ஸ்காரர்களுக்கும் இது புரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அந்த நூறிலிருந்து பத்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து (5 புனைவுகள், 5 அபுனைவுகள்) 2011-இன் 10 சிறந்த புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்துக்கும் சின்ன குறிப்பும் கொடுத்திருக்கிறார்கள். உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வசதிக்காக புத்தகங்களின் பேரை கீழே கொடுத்திருக்கிறேன்.

புனைவுகள்:

  1. Chad Harbach, Art of Fielding
  2. Stephen King, 11/22/63
  3. Karen Russell, Swamplandia
  4. Eleanor Henderson, 10000 Saints
  5. Tea Obreht, Tiger’s Wife

அபுனைவுகள்:

  1. Christopher Hitchens, Arguably
  2. Ian Brown, Boy in the Moon
  3. Manning Marable, Malcolm X
  4. Daniel Kahneman (எகனாமிக்ஸ் நோபல் பரிசு வென்றவர்), Thinking: Fast and Slow
  5. Amanda Foreman, A World on Fire

தொடர்புள்ள சுட்டி: 2011-இன் நூறு சிறந்த புத்தகங்கள்

நூலகம் தளம் – இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

நூலகம் என்ற தளத்தை சமீபத்தில் பார்த்தேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி எழுதிய Dance of Siva போன்ற ஆங்கிலப் புத்தகங்களும் pdf வடிவில் கிடைக்கின்றன. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பொதுவாக தமிழகத்து தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. நான் ஓரளவாவது படித்திருப்பது அ. முத்துலிங்கத்தை மட்டுமே. படிப்பதை விடுங்கள், எனக்கு தெரிந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் – அ. முத்துலிங்கம், மு. தளையசிங்கம், டொமினிக் ஜீவா, ஷோபா சக்தி, தேவகாந்தன். (தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் ஓரளவு எழுதி இருக்கிறார். சிறு வயதில் குமுதத்தில் டொமினிக் ஜீவாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஷோபா சக்தி எழுதிய கொரில்லா புத்தகம் சமீபத்தில் நிறைய பேசப்பட்டது. தேவகாந்தன் கதாகாலம் என்ற மகாபாரதப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறாராம்.) சராசரிக்கு சற்று மேம்பட்ட வாசகனான, படிப்பில் மோகம் மற்றும் தேடல் உள்ள என் கதியே இதுதான்.

இந்தத் தளத்தை வைத்துக் கொண்டாவது இலங்கைப் படைப்புலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

பிற்சேர்க்கை: ராஜ்சந்திராவும் சித்திரவீதிக்காரனும் சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களைக் கவர்ந்த, உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் புத்தகங்களை மறக்காமல் குறிப்பிடுங்கள்!

தொடர்புடைய சுட்டி: நூலகம் தளம்

ஜேம்ஸ் எம். கெய்னின் இரண்டு நாவல்கள்

ஜேம்ஸ் எம். கெய்ன் பல நாவல்கள் எழுதி இருந்தாலும் போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ் (Postman Always Rings Twice), மற்றும் டபிள் இன்டெம்னிடி (Double Indemnity) இரண்டும் புகழ் பெற்றவை. பல விமர்சகர்கள் அவற்றை த்ரில்லர் என்ற genre-ஐத் தாண்டிய இலக்கியம் என்று கருதுகிறார்கள்.

எனக்கு இவை இலக்கியம் இல்லை. இரண்டும் சிறந்த திரைப்படங்களாக வெளிவந்தன. அது இந்தப் புத்தகங்களின் பிரபலத்தை, ஸ்டேடசை, அதிகரித்துவிட்டன என்று நினைக்கிறேன். இரண்டு புத்தகங்களையும் நான் பிரமாத த்ரில்லர் என்று கூட சொல்லமாட்டேன். ஆனால் முப்பதுகளின் பிற்பாதியில் இருந்த அமெரிக்க சமூகத்தை, அதுவும் குற்றங்களின் ஓரத்தில் நடமாடும், ஒயிட் காலர் வேலைக்குப் போகும், சிறுதொழில் செய்யும் மத்தியதர வர்க்கத்தை உண்மையாகப் படம் பிடிக்கின்றன. Great Depression அப்போதுதான் நீர்க்க ஆரம்பித்திருந்தது. அற உணர்வுகள் மழுங்கிப் போன, பணமே பிரதானம் என்று நினைக்கும் ஒரு சூழல். பெண்கள் தனியாக வாழ, வேலைக்குப் போக ஆரம்பித்திருந்த சூழல். அங்கீகரிக்கப்பட்ட உறவுகளுக்கு வெளியே செக்ஸ் என்பது நகர்ப்புறங்களில் புருவத்தைத் தூக்க வைக்காத ஒரு நிகழ்ச்சி. அந்த ambience-ஐ, கசடுகள் நிறைந்த ஒரு சமூகத்தை கெய்ன் உண்மையாகச் சித்தரிக்கிறார். அதுதான் அவரது பலம். குற்றம் எப்படி நடக்கிறது என்பதை விட குற்றவாளிக்கு எப்படி தண்டனை கிடைக்கிறது என்பதுதான் முக்கியமாக இருக்கிறது.

நாவல்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:

போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ் (1934): சாலையின் ஒதுக்குப்புறமான இடத்தில் ஒரு சின்ன ஹோட்டல். ஹோட்டல் முதலாளி நிக். நிக்கின் மனைவி கோரா. ஃப்ராங்க் அங்கே தற்செயலாக வந்து சேர்கிறான். கோராவுக்கும் ஃப்ராங்க்குக்கும் உறவு ஏற்படுகிறது. நிக்கைக் கொன்றுவிட்டு ஹோட்டலை நடத்தத் திட்டம். நிக்கைத் தலையில் அடித்துக் கொன்றுவிட்டு விபத்து என்று செட்டப். கொலையில் அனேகமாக மாட்டிக் கொள்கிறார்கள், ஆனால் தண்டனையிலிருந்து தப்புகிறார்கள். ஆனால் அதே போன்ற ஒரு விபத்தில் கோரா இறக்கிறாள். ஃப்ராங்க் இந்த முறை குற்றம் செய்யாவிட்டாலும் சுலபமாக மாட்டிக் கொண்டு தண்டனை அடைகிறான்.
கவுரவம் திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன் இப்படித்தான் முதல் முறை தப்பித்துக்கொண்டு இரண்டாவது முறை செய்யாத கொலைக்கு தண்டனை அடைவார். இங்கிருந்து திருடிய ஐடியாதான். 🙂

டபிள் இன்டெம்னிடி (1936): இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வால்டர் நெஃப் ஃபைலிசொடு சேர்ந்து பயங்கரத் திட்டம் போட்டு ஃபைலிசின் கணவனைத் தீர்த்துக் கட்டுகிறான். விபத்து என்றுதான் போலீஸ் நினைக்கிறது. இன்ஷூரன்ஸ் பணம் வரக் காத்திருக்கிறார்கள். ஆனால் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்த கெயெஸ் இது கொலை என்று யூகிக்கிறான். நெஃப்புககு தான் கொன்றவனின் பெண் லோலாவோடு காதல் வேறு உண்டாகிறது. கெயெஸ்-நெஃப் இருவருக்கும் நடுவில் உள்ள டென்ஷன்தான் கதையில் சிறந்த பகுதி.

இரண்டு நாவல்களுமே படிக்கலாம் ரேஞ்சில்தான் மதிப்பிடுவேன். ஆனால் அமெரிக்க crime noir-இல் ஆர்வம் உள்ளவர்கள் மிஸ் செய்யக் கூடாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஜேம்ஸ் எம். கெய்ன் விக்கி குறிப்பு
ஐஎம்டிபி தளத்தில் போஸ்ட்மன் ஆல்வேஸ் ரிங்க்ஸ் ட்வைஸ்
ஐஎம்டிபி தளத்தில் டபிள் இன்டெம்னிடி

ஜெயகாந்தனின் “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்”

புதுமைப்பித்தன், அசோகமித்திரன் மாதிரி பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் அவர்களது எழுத்துகளால் மட்டும்தான் அறியப்படுகிறார்கள். ஜெயகாந்தனோ ஹீரோ. சுந்தரராமசாமி ஜெயகாந்தன் ஒரு பொது மேடையில் மந்திரிகள் எதிரில் (காமராஜும் இருந்தாரோ என்னவோ நினைவில்லை) கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்ததை நினைவு கூர்கிறார். அண்ணாதுரை இறந்து தமிழ்நாடே அழுது புலம்பும் வேளையில் நேற்று வரை விமர்சித்தவர் இன்று இறந்துவிட்டதால் பொய்யாகப் பாராட்டிப் பேச முடியாது என்று முழங்கியவர் அவர். விகடனும் குமுதமும் அவர் எழுத்துக்களை விரும்பிப் பதித்தன. அக்னிப்பிரவேசம் போன்ற ஒரு சிறுகதையை விகடனில் பதிப்பதற்குத் தர துணிச்சல் வேண்டும். இன்றும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.

அவருடைய ஆளுமை என்பது என் தலைமுறைக்காரர்களுக்கே அவ்வளவாகத் தெரியாத விஷயம். ஆனால் எழுத்தை மீறிய ஆளுமை உண்டு என்று தெரிந்திருக்கும். இந்தப் புத்தகம் அதை ஓரளவு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

1945-75 காலகட்ட அனுபவங்களை இதில் எழுதி இருக்கிறார். எனக்கு விசேஷமாகத் தெரிவது அவர் உண்டாக்கிக் கொண்ட உறவுகள், சமரசம் அற்ற நேர்மை, தன நிறைகுறைகளை, நெருங்கிப் பழைய நண்பர்களின் குணங்களை மறைக்காமல் பேசும் தைரியம்.

சிறு வயதிலேயே கலை உலகத் தொடர்பு துவங்கிவிட்டது. சின்னச் சின்ன வேஷம் போட்டுப் பார்த்திருக்கிறார். சிறு வயதினருக்கே உரிய naivete இருந்திருக்கிறது. நல்லதம்பி திரைப்படத்தில் மதுவிலக்கைப் பற்றி ஆயிரம் பேசிவிட்டு வீட்டுக்குள் தண்ணி அடிக்கும் பிரமுகர்களை (என்எஸ்கே, அண்ணா?) பேர் சொல்லாமல் சாடுகிறார். தமிழ் ஒளியுடன் நண்பராக இருந்து அவர் போட்ட வேஷத்தை வெளிப்படையாக விவரிக்கிறார். விந்தன், சந்திரபாபு போன்றொரு இருந்த நட்பைப் பற்றி பேசுகிறார். திரைப்படம் இயக்கியது, வெற்றி/தோல்வி அடைந்த படங்கள், செலவு, கதைகளை கொடுத்த அனுபவங்கள், பீம்சிங், சில நேரங்களில் சில மனிதர்கள் என்று பல அனுபவங்களை எழுதி இருக்கிறார். தான் இயக்கிய “யாருக்காக அழுதான்” படத்தையே கிழிகிழி என்று கிழிக்கிறார்.

தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி! படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன். பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்.

புத்தகத்தின் சிறந்த பகுதி என்று சந்திரபாபுவின் நட்பைப் பற்றிப் பேசும் பகுதியைத்தான் சொல்வேன். இரண்டு சுவாரசியமான ஆளுமைகளின் நட்பு அனுபவங்கள் சுவாரசியமாக இருக்கக் கேட்பானேன்? சினிமா ஆசையால் நீர்த்துப் போனவர் என்று விந்தனைப் பற்றி குறிப்பிடுகிறார், அது உண்மைதான் என்று நினைக்கிறேன்.

வேறு சில titbits: விந்தனின் “அன்பு அலறுகிறது” என்ற புத்தகத்தின் முதல் இரண்டு சாப்டர் மட்டும்தான் அவர் எழுதினாராம், மிச்சத்தை எழுதியது ஜெயகாந்தன்தானாம். திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் “பாட்டும் நானே பாவமும் நானே” பாடலை எழுதியது கா.மு. ஷெரிஃப், பேரை வேறு யாரோ தட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்று இவர் எழுத, கண்ணதாசன் தான்தான் எழுதினேன் என்று மறுத்திருக்கிறார்.

எனக்கு நா.பா.வின் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவரது கனவு இப்படிப்பட்ட ஒரு மனிதனாக வாழ்வதுதான் என்று சமுதாய வீதி புத்தகத்திலிருந்து யூகிக்கிறேன்.

முக்கியமான ஆவணம். சுவாரசியமும் இருக்கிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன், சினிமா

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயகாந்தனும் சினிமாவும்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – சாரதா விமர்சனம்
சில நேரங்களில் சில மனிதர்கள் பக்சின் விமர்சனம், ஆர்வியின் விமர்சனம், சாரதாவின் விமர்சனம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – திரைப்படம்
ஜெயகாந்தனின் ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’
அம்ஷன்குமார் எழுதிய கட்டுரை

காவல்கோட்டம் நாவலுக்கு சாஹித்ய அகாடமி பரிசு

சு. வெங்கடேசனின் காவல்கோட்டம் நாவலுக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்த விஷயம் நண்பர் விமல் மூலம்தான் முதலில் தெரிந்தது. படிக்க விரும்பும் நாவல்களில் ஒன்று. ஓரளவு ஒத்த ரசனை உள்ள ஜெயமோகன் சிலாகிக்கும் புத்தகம், எனக்கும் அநேகமாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்!

தமிழுக்கான ஜூரி உறுப்பினர்கள் என்று தமிழ்நாடன், பேராசிரியர் செல்லப்பன், குறிஞ்சிநாடன் குறிஞ்சிவேலன் என்று மூன்று பேரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தகுதி உள்ள படைப்பைத் தேர்ந்தெடுத்ததற்காக மூவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு சின்ன ஆதங்கம். அது என்ன மூன்று பேரில் ஒருவர் கூடவா எழுத்தாளராக இருக்கக் கூடாது? ஒரு இ.பா., கி.ரா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், சா. கந்தசாமி, நாஞ்சில்நாடன் எல்லாரும் இருக்கும்போதே இப்படியா?

போன வருஷம் நாஞ்சில், இந்த முறை காவல்கோட்டம். சாஹித்ய அகாடமியின் போக்கில் ஒரு மாற்றம் தெரிகிறதே! இது தொடர வேண்டும்…

பரிசு பெற்ற படைப்புகளில் நான் படித்து ரசித்த இன்னொன்று ராமச்சந்திர குஹா எழுதிய “இந்தியா ஆஃப்டர் காந்தி“. நல்ல தேர்வு.

கன்னடத்தில் கோபாலகிருஷ்ண பை எழுதிய “ஸ்வப்ன சரஸ்வதா“, ஹிந்தியில் காசிநாத் சிங் எழுதிய “ரெஹான் பர் ரெக்கு“, மலையாளத்தில் எம்.கே. சானு எழுதிய “பஷீர்: ஏகாந்த வீதியில் அவதூதன்” என்ற வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்கும் விருது. யாராவது படித்திருந்தால் சொல்லுங்களேன்!

முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
2011-இல் விருது பெற்றவர்களின் லிஸ்ட்
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் பகுதி I, பகுதி II
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் படைப்புகள் – லிஸ்ட்
சாகித்ய அகாடமி தளம்

வைரமுத்துவின் “கள்ளிக்காட்டு இதிகாசம்” – விருதா புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகம். விருதுகள் கவுரவம் இழப்பதற்கு இது போன்ற புத்தகங்கள்தான் காரணம்.

வைரமுத்துவுக்கு இலக்கியம் படைக்கும் ஆசை இருக்கிறது. அதற்கு வேண்டிய சொந்த அனுபவம் இருக்கிறது. நல்ல களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால் ஒரு சாதாரணக் கதையைத்தான் எழுத முடிந்திருக்கிறது.

பேயத்தேவரின் சிரமமான வாழ்க்கை என்று சுருக்கமாகச் சொல்லலாம். மனைவி, “கீழ்” ஜாதியைச் சேர்ந்த பழைய காதலி, சண்டியர் மகன், அப்பனை கஷ்டப்படுத்தி பணம் பிடுங்கியாவது வாழத் துடிக்கும் மகள், மகளின் முதல் கணவன் வழிப்பேரன் என்று சில பாத்திரங்கள். வைகை அணை கட்டி சில பல கிராமங்கள் முழுகியதுதான் கதையின் உச்சகட்டமாக வைத்திருக்கிறார். போரடிக்கும் ஃபார்முலா கதை. பேயத்தேவருக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வந்துகொண்டே இருப்பது அலுப்பைத் தருகிறது. செயற்கையாக, மெலோடிராமாவாக இருக்கிறது. தேவர் சோதனை மேல் சோதனை என்று பாடாததுதான் பாக்கி. இவர் பூமணியின் “பிறகு” போன்ற நாவல்களைப் படித்தாவது சிரமமான வாழ்க்கையை எப்படி படைப்பில் கொண்டு வருவது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

கதையின் ஒரே பலம் வார்த்தைப் பிரயோகங்களும், நுண்விவரங்களும்தான். “வருச நாட்டு யானையே கோமணம் இல்லாம அலையுது”, மாடுகளின் ஏறுபூரான் சுழி, இறங்குபூரான் சுழி என்றெல்லாம் நிறைய எடுத்துவிடுகிறார். சிவசங்கரியின் “பாலங்கள்” புத்தகத்தை நினைவுபடுத்தியது. அதிலும் நுண்விவரங்கள், preparation எல்லாம் உண்டு, ஆனால் அவரும் வெற்றி அடையவில்லை.

இங்கே மின்நூலாகக் கிடைக்கிறது.

படிக்கலாம். சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்காவிட்டால் (ஒரு வேளை “வாங்கி” இருக்காவிட்டால்) இவ்வளவு கோபம் வராது. தோல்வி அடைந்த, ஆனால் sincere ஆன முயற்சி என்று குறிப்பிட்டிருப்பேன். இப்போது இந்த விருதா புத்தகத்துக்கெல்லாம் ஒரு விருதா (வைரமுத்துவைப் பற்றி எழுதினால் வாலி பாணி சிலேடை வருகிறதே!) என்ற கடுப்புதான் முன்னே நிற்கிறது.

இதே template-ஐ வைத்து எழுதப்பட்ட இன்னொரு புத்தகம் ‘கருவாச்சி காவியம்‘. ‘பத்தினிக்கு இன்னல் வரும் தீரவே தீராது” என்பதுதான் கதைச்சுருக்கம். இந்த நாவலை விட எக்கச்சக்க நுண்விவரங்கள். கருவாட்டுக் குழம்பு எப்படி வைப்பது, கள்ளிப் பழத்தை எப்படி பறிப்பது என்று நுண்விவரங்களை கொட்டி இருக்கிறார். ஆனால் அவை புகுத்தப்பட்டிருப்பது செயற்கையாக இருக்கிறது. தட்டையான கதாபாத்திரங்கள், cliche-க்கள் நிறைந்த கதை, வலிந்து புகுத்தப்பட்ட நுண்விவரங்கள் என்று பல குறைகள் இருந்தாலும் நுண்விவரங்களுக்காகப் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், விருதுகள்

எனக்கு எது இலக்கியம்?

தரையில் இறங்கும் விமானங்கள் எனக்கு இலக்கியமே என்று சொன்னதைக் கண்டு ரமணன், ராஜ்சந்திரா, எஸ்செக்ஸ் சிவா வியப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் ரியாக்ஷன் எனக்கு எது இலக்கியமாகத் தெரிகிறது என்று என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.

எனக்கு வணிக எழுத்து, சீரிய எழுத்து போன்ற பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லை. வசதிக்காக சில சமயம் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன், அவ்வளவுதான். இலக்கியம், இலக்கியம் இல்லை என்ற பாகுபாடுதான் எனக்கு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. எழுதியது விற்கிறதா இல்லையா என்பதை வைத்து அதன் தரத்தை நிர்ணயிப்பதில் எனக்கு சம்மதமில்லை. ஜெயகாந்தனும் அசோகமித்ரனும் விகடனில், குமுதத்தில் எழுதியது இலக்கியமே. சாண்டில்யன் கணையாழியில் எழுதி இருந்தாலும் அது எனக்கு இலக்கியம் ஆகாது. ராஜேஷ்குமார் டைப் எழுத்துகளை சுலபமாக அடையாளம் காட்டும் ஒரு பேர்தான் எனக்கு வணிக எழுத்து.

யோசிக்க வைக்கும் படைப்புகள்; சித்தாந்தங்கள்+பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை அசைக்கும் படைப்புகள்; உண்மையான மனிதர்கள், உணர்ச்சிகள், சூழல்களின் சித்தரிப்பு; மனிதர்களின் உயர்வுகளை, தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுவது; அபூர்வமாக, ஒரு அருமையான framework, அதை விவரிக்கும் படைப்புகள்; மனிதர்களின் பண்பாட்டை, அனுபவங்களை சில வரிகளில் காட்டும் கவிதைகள் இவை எல்லாம் எனக்கு இலக்கியமாகத் தெரிகின்றன. இவை எல்லாம் எனக்கு மன எழுச்சியைத் தருகின்றன, இல்லாவிட்டால் யோசிக்க வைக்கின்றன, இல்லாவிட்டால் நுணுக்கங்கள், நுட்பங்கள் நிறைந்த படைப்பாக இருக்கின்றன. மன எழுச்சியைத் தருபவற்றை நான் அனேகமாக மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறேன். என்னை யோசிக்க (மட்டும்) வைக்கும் படைப்புகளுக்கு அனேகமாக இரண்டாம் வரிசை. என் இதயம், புத்தி இரண்டையும் தொடாமல் என் ரசனை, அழகுணர்ச்சி வரை மட்டுமே வரும் படைப்புகளுக்கு அனேகமாக மூன்றாவது இடம் அளிக்கிறேன். இந்த மூன்றாவது வரிசையில் உட்காரும் படைப்புகளில் அனேகமாக நுட்பம், நுணுக்கம், framework என்று ஏதாவது ஒன்று இருக்கும். இன்னொரு விதமாகச் சொன்னால் நுட்பம், நுணுக்கம் இத்யாதியை நான் craft என்ற அளவில் மதிக்கிறேன். மன எழுச்சியைத் தூண்டுபவை எனக்கு art.

சுருக்கமாகச் சொன்னால் நான் இலக்கியம் என்று கருதும் எல்லாப் படைப்புகளுமே என் அழகுணர்ச்சி, ரசனை போன்றவற்றுக்கு அப்பீல் ஆக வேண்டும். அதோடு நின்றுவிடாமல் என் புத்தி வரைக்கும் போய் மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைக்கும் படைப்புகள், எனக்கு மன எழுச்சியைத் தரும் படைப்புகளுக்கு இன்னும் உயர்ந்த இடம் தருகிறேன்.

அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் இருக்கக்கூடிய அருமையான உறவைக் காட்டும் To Kill A Mockingbird எனக்கு உயர்ந்த இலக்கியம். ஒவ்வொரு முறை படிக்கும்போது நான் மன எழுச்சி அடைகிறேன். இது எனக்குப் பெண்கள் பிறப்பதற்கு பல வருஷங்கள் முன்னாலேயே ஆரம்பித்த விஷயம். ஒரு காலத்தில் என் உறவினர்கள், நண்பிகள், நண்பர்களின் மனைவிகள் எல்லாரும் கர்ப்பம் ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பேன். என் தங்கைகள் உட்பட யாரும் படித்ததில்லை. 🙂 ஆனால் அது ஆய்வாளர்களின் லிஸ்டில் அநேகமாகத் தென்படுவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் அதை சீந்தக் கூட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அப்படி சீந்தாவிட்டால் அது ஜெயமோகனின் குறைபாடு என்றும் நினைக்கிறேன்.) Mockingbird மட்டுமல்ல, போரின் தேவையற்ற தன்மையை விவரிக்கும் All Quite on the Western Front, இரண்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத விஷ்ணுபுரம், அமைப்புகளின் குரூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பின் தொடரும் நிழலின் குரல், புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள், புரியும்போதெல்லாம் டங்கென்று மண்டையில் அடிக்கும் அசோகமித்ரனின் பல படைப்புகள், அறம் சீரிஸ் சிறுகதைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை என் ரசனை வழியாக என்னைத் தாக்குகின்றன என்றே சொல்லலாம். இந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது எனக்கு பல முறை லிட்டரலாக ஜிவ்வென்று மண்டையில் ஏறும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பல முறை அப்படியே உட்கார்ந்து படித்ததை அசை போடத் தோன்றும். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற வரியைப் படித்த கணத்தில் பல காலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த கற்பு, ஆண்-பெண் உறவு கருத்தாக்கங்கள் சுக்குநூறாக உடைந்தன, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். எனக்கு மன எழுச்சியும் தந்து சிந்தனையையும் தூண்டிய படைப்பு இது. இது போன்ற படைப்புகளைத்தான் முதல் இடத்தில் வைக்கிறேன்.

யோசிக்க மட்டும் வைக்கும் படைப்புகள் என்பது பல முறை SF-இல் எனக்கு நேர்கிறது. உர்சுலா லே க்வின் எழுதிய ஒரு கதையில் மனிதர்களுக்கும் ஒரு சீசனில் மட்டும்தான் செக்ஸ் உணர்வுகள் வரும், அப்போது அவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இஷ்டம் போல மாறிக் கொள்ளலாம். அவர் எழுதியது கொஞ்சம்தான், ஆனால் எனக்கு அம்மா, அப்பா, குடும்பம், இதெல்லாம் இந்த செட்டப்பில் எப்படி இருக்கும் என்று நிறைய யோசனை வந்தது. பைரப்பாவின் பர்வா, தாண்டு, அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்று SF தவிர்த்தும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பர்வா, தாண்டு, அசோகமித்திரன் படைப்புகள் எனக்கு மன எழுச்சியையும் தருகின்றன என்பதால் அவை முதல் வரிசைக்குப் போய்விடுகின்றன.

ரசனைக்கு மட்டும் அப்பீல் ஆகும் கதைகள் என்று ஷெர்லாக் ஹோம்ஸ் (சுவாரசியம்), பொன்னியின் செல்வன் (கதைப்பின்னல் என்ற தொழில்நுட்பம்), வாசவேஸ்வரம் (உண்மையான சித்தரிப்பு), நிர்வாண நகரம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவை Strand பத்திரிகையில், கல்கியில், சாவியில் வந்தவை என்பதால் மட்டுமே வணிக எழுத்து ஆகிவிடாது. இவற்றில் பலவற்றை நான் minor classic என்று வகைப்படுத்துவேன். அவற்றின் சாதனை ஒரு புதுமைப்பித்தனை விட குறைவு, அவ்வளவுதான். ஐம்பது செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் அளவுக்கு குண்டப்பா விஸ்வநாத் சாதிக்கவில்லை என்பதால் அவர் மோசமான பாட்ஸ்மன் ஆகிவிடுவாரா என்ன?

த.இ. விமானங்கள் எனக்கு மூன்றாவது வகை இலக்கியம். Minor classic. உண்மையான மனிதர்கள், சித்தரிப்பு, மனதைத் தொடும் சில சீன்கள் இருக்கின்றன. கதைக்கு யூனிவர்சல் அப்பீல் இருக்கிறது. இந்தக் கதை போலந்தில் ஒரு யூதக் குடும்பத்தில், என் பக்கத்து வீட்டில் ஒரு மெக்சிகன் குடும்பத்தில், தாய்லாந்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் நிகழலாம், நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அது விகடனில் வந்தது, இந்துமதி எழுதியது போன்ற சாரமற்ற காரணங்களுக்காக என்னால் நிராகரிக்க முடியாது.

நேரடியாகச் சொல்லப்படும் கதைதானே, அது எப்படி இலக்கியம் ஆகும் என்று சிலர் யோசிக்கலாம். ஜெயமோகன் போன்ற நான் மிகவும் மதிக்கும் விமர்சகர்கள் சில சமயம் நேரடியாகச் சொல்லப்படுவதை ஒரு குறையாகச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. நேரடியாகக் கதை சொல்லுவது, subtle ஆக சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் ஒரு லிடரரி டெக்னிக். ஒரு டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாகாது.

மன எழுச்சி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடத்தான் செய்யும். அது subjective விஷயம். எனக்கு மன எழுச்சி தரும் படைப்பு உங்களுக்கு வெட்டியாகத் தெரியலாம். அதனால் இலக்கியமா இல்லையா என்று எப்படி பொதுவாக நிர்ணயிப்பது என்ற கேள்வி எழலாம். அது அர்த்தம் இல்லாத கேள்வி. ரசனைதானே தரம் பிரிப்பதன் அடிப்படை? இரட்டைப் பிறவிகளுக்கு கூட ரசனை நூறு சதவிகிதம் ஒத்துப் போகாது! காலப்போக்கில் தானாக அவ்வளவு தரம் இல்லாத, ஆனால் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நூல்கள் மறக்கப்படுகின்றன. அந்த ஜனநாயக முறையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

உணர்ச்சிகளைத் தூண்டும் படைப்புகள் எல்லாம் மன எழுச்சி தரும் படைப்புகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். என்னால் சிம்பிள் கதையான லவ் ஸ்டோரி-யின் கடைசி பக்கங்களை கண்ணில் நீர் வராமல் படிக்க முடிந்ததே இல்லை. அப்பா-பிள்ளை சீன் வந்துவிட்டால் ஒரு வேளை நான் உணர்ச்சிவசப்படுகிறேனோ என்னவோ. அதை நான் மன எழுச்சி லிஸ்டில் சேர்ப்பதில்லை. மூன்றாவது பட்டியலில்தான் சேர்ப்பேன்.

எது இலக்கியம் என்று என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எது நூறு ஆண்டுகளுக்கு மேல் நிற்கும், எது காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும் என்று கண்டுபிடிக்க ஃபார்முலா உண்டா என்று தேடி இருக்கிறேன். இதைப் பற்றிய எனது எண்ணங்கள் எதுவும் இறுதியானவை இல்லை. ஆனால் இந்தப் பதிவில் காலம் தாண்டி நிற்கும் இலக்கியம் என்பதை எல்லாம் அடையாளம் காண நான் முயற்சிக்கவில்லை. இன்று நான் எதை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக்க மட்டும்தான் முயற்சி செய்திருக்கிறேன்.

இதைப் பற்றி எல்லாம் எழுதுவதின் ஒரே பயன் கருத்துப் பரிமாற்றம்தான். என் வரையறை உங்களுக்கு சரிப்படாமல் போகலாம். மன எழுச்சியாவது மயிராவது என்று நீங்கள் நினைக்கலாம். மேலே பேசுவோமே! இலக்கியத்துக்கு உங்கள் வரையறை என்ன? மறுமொழியிலோ இல்லை உங்கள் ப்ளாகிலோ எழுதி சுட்டி கொடுங்கள்!

அனுபந்தம்

சிரில் அலெக்சின் வரையறை:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

எது காலத்தை வெல்லும் இலக்கியம் பதிவுக்கு எழுதிய மறுமொழியில் ஜெயமோகன் சொன்னது:

நூறாண்டு தாங்கும் படைப்பு எது? இதுவரை தாங்கிய படைப்புகளை வைத்து இப்படிச் சொல்லலாம்.

  1. தொன்மமாக மாறும் படிமத் தன்மை கொண்டது
  2. கலாச்சாரம் சம்பந்தமான பேச்சுகளில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது
  3. எளிதில் வாயால் சொல்லத்தக்கது
  4. நடை, உத்தி போன்றவற்றை நம்பாமல் பண்பாட்டின் சாராம்சமான ஒன்றை வரையறுத்து கூறும் கருவாலேயே நிலைநிற்கும் படைப்பு

தொடர்புள்ள சுட்டிகள்:
ஏன் படிக்கிறேன்?
எது நல்ல இலக்கியம்?சிரில் அலெக்ஸ்
எது காலத்தை வெல்லும் இலக்கியம்?

தெலுங்கு புத்தக சிபாரிசுகள்

கொல்லப்புடி மாருதி ராவ் – தெலுங்கு எழுத்தாளர், நடிகர் – படிக்க வேண்டிய தெலுங்கு புத்தகங்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் இப்படி ஒரு லிஸ்ட் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாஸ்டன் பாலாவின் தளத்தில் லிஸ்ட் இருக்கிறது.

சாதாரணமாக லிஸ்டுக்கு குறிப்புகள் எழுதுவேன். இந்த முறை படித்திருப்பது ரொம்ப கொஞ்சம், அதனால் குறிப்பு கிறிப்பு எல்லாம் இல்லை. படித்திருக்கும் இரண்டு புத்தகங்கள் பற்றி கீழே:

குருஜாதா அப்பாராவ் எழுதிய கன்யா சுல்கம் – செகந்தராபாதில் வாழ்ந்தபோது கேள்விப்பட்ட ஒரே தெலுங்கு புத்தகம் இதுதான் கன்யா சுல்கம் ஒரு க்ளாசிக். இப்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் படிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வரும்.

கொடவகண்டி குடும்பராவ் எழுதிய சதுவு தமிழ் மொழிபெயர்ப்பு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும். தமிழில் இதன் பெயர் படிப்பு. சாஹித்ய அகாடமி வெளியீடு. 1910-35 கால கட்டத்தில் ஒரு மத்திய தர குடும்பம், ஸ்கூல் படிப்பு, சுதந்திர போராட்ட பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது. பின்புலம் நன்றாக வந்திருக்கும், ஆனால் கதையில் என்ன பாயின்ட் என்று எனக்கு தெளிவாகவில்லை.

மற்ற இந்திய மொழி எழுத்தாளர்களை பற்றி நாம் அவ்வளவாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது, அப்படியே படித்தாலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலமே தெரிந்து கொள்வது நம் துரதிருஷ்டம். இது போன்ற லிஸ்டுகள் கொஞ்சமாவது உதவுகின்றன.

கொல்லப்புடி குறிப்பிடும் மற்ற புத்தகங்கள்

  1. விஸ்வநாத சத்யநாராயணாவின் ஏகவீரா
  2. புச்சி பாபுவின் சிவரகு மிகிலேதி
  3. ரா. விஸ்வநாத சாஸ்திரியின் அல்பஜீவி
  4. ஸ்ரீ ஸ்ரீயின் மஹாப்ரஸ்தானம்
  5. ஸ்ரீபாதா சுப்பிரமணிய சாஸ்திரியின் அனுபவாலு-ஞாபகாலு
  6. கல்லகூரி நாரயணராவின் வரவிக்ரயம்
  7. கொல்லப்புடி மாருதிராவின் கள்ளு, சாயங்காலாமாயிந்தி
  8. வத்தேரா சண்டிதாசின் ஹிமஜ்வாலா
  9. த்ரிபுரனேனி கோபிசந்தின் கதைகள்
  10. தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் கெயிஷ்ன பக்ஷம்

அல்பஜீவி ஜெயமோகனும் “சிபாரிசு” செய்யும் நாவல். தெலுங்கில் எதுவுமே தேறவில்லை, இருப்பதில் இதுதான் பெஸ்ட் என்று அலுத்துக் கொண்டே பரிந்துரைக்கிறார். நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட முக்கியமான தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிற மொழிப் புத்தகங்கள் என்ற லிஸ்டில் அவர் குறிப்பிடும் தெலுங்குப் புத்தகங்கள்:

  1. அவன் காட்டை வென்றான், ஆர். கேசவ ரெட்டி, தமிழாக்கம் எதிராஜுலு
  2. கடைசியில் இதுதான் மிச்சம், ஆர். புச்சிபாபு, தமிழாக்கம் பி.வி. சுப்ரமணியம்
  3. கறுப்பு மண், பாலகும்மி பத்மராஜு, தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்
  4. யாகம், காலிபட்டினம் ராமராவு, தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்
  5. ஏமாற்றப்பட்ட தம்பி, பலிவாடா காந்தாராவ், தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்
  6. காகித மாளிகை, முப்பால ரங்கநாயகம்ம, தமிழாக்கம் பா. பாலசுப்ரமணியம்

தொடர்புடைய சுட்டிகள்: கொல்லப்புடி பற்றி விக்கியில்