என் சிறு வயதில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, மரியாதைராமன் கதை என்று சில தொன்மக் கதைகள் கிடைக்கும். அனேகமாக ரத்தின நாயக்கர் சன்ஸ் பதித்திருக்கும். தஞ்சாவூர் ஓவியங்கள் பாணியில் ஓவியங்கள் இருக்கும். நம்மூர் ஆயிரத்தொரு இரவுகள். ஆனால் எழுபது எண்பதுகளிலேயே அவற்றின் மவுசு குறைந்து கொண்டிருந்தது.
கதைகளில் இளவரசிகள், ஜீவகசிந்தாமணி பாதியில் சகட்டுமேனிக்கு அந்த இளவரசிகளை மணக்கும் இளவரசர்கள், அவர்களுக்கு உதவும் மந்திரிகுமாரர்கள், பேய் பிசாசுகள், திடீர்திடீரென்று பிரசன்னமாகி வரம் தரும் சிவபெருமான் அல்லது காளி, நினைத்தைத் தரும் அலாவுதீன் விளக்கு போன்ற வஸ்துக்கள், கற்புக்கரசி மனைவிகள், ஏமாற்றும் மனைவிகள் எல்லாரும் வருவார்கள். அகோ வாரும் பிள்ளாய் பாணியில் பேசுவார்கள். ஆறு சாஸ்திரம், அறுபத்து நான்கு கலைகளை அறிந்திருப்பார்கள். அன்று சுவாரசியமாக இருந்தவை இன்று கொஞ்சம் அலுப்பு தட்டுகின்றன. ஆனால் ஆயிரத்தொரு இரவுகள் போலவே இவையும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
சுருக்கமாக கதை: குருவின் மகள் இளவரசன் மீது காமம் கொள்கிறாள், இளவரசன் மறுக்க அவன் மீது பொய்ப்பழி சாட்டி அவனைத் துரத்திவிடுகிறாள். இளவரசனும் மந்திரிகுமாரனும் தப்பிக்கிறார்கள். இளவரசன் ஒரு பெண்ணின் ஓவியத்தைக் கண்டு அவளை விரும்புகிறான். மந்திரி குமாரன் அவளைத் தேடிச் செல்கிறான். அவளை மணக்கும்படி சூழ்நிலையில் ஒரு சுமங்கலியை வைத்து அவளுக்கு தாலி கட்டுகிறான். உறவு கொள்வதைத் தவிர்க்க அவளுக்கு 12 இரவு 12 கதை சொல்கிறான். அப்புறம் உண்மையை சொல்லி, ராஜகுமாரனுக்கு மணம் செய்து வைத்து, ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்றி…
இந்தக் கதைகள் பழைய தொன்மக் கதைகளை தொகுக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டகம்தான். அதாவது 12 தொன்மக் கதைகளை மந்திரிகுமாரன் இரவில் சொல்கிறான், அவற்றை சொல்வதற்காக ஒரு சாக்குதான் கதையே. எத்தனை பழைய படங்களில் இந்தக் கதைகளின் கருக்கள் கையாளப்பட்டிருக்கின்றன என்பதுதான் வியப்பு. ஜெமினி தயாரித்து ரஞ்சன் நடித்த மங்கம்மா சபதம் (1943) மந்திரி குமாரன் இரவில் சொல்லும் ஒரு கதைதான். பி.யூ. சின்னப்பா நடித்த கற்புக்கரசி (1949) மந்திரி குமாரன் இரவில் சொல்லும் இன்னொரு கதைதான். ரம்பையின் காதல் (3 முறை தயாரிக்கப்பட்டது, கடைசியாக இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்று), மணாளனே மங்கையின் பாக்கியம், பாதாளபைரவி என்று பல திரைப்படங்களில் இந்தக் கதைகளின் கருக்கள் வருகின்றன. கிரீஷ் கார்னாட் எழுதிய் நாகமண்டலா நாடகம் மந்திரிகுமாரனால் இரவில் சொல்லப்படும் ஒரு கதைதான். 1941-இல் ஜெமினி தயாரிப்பில் மதனகாமராஜன் கதையே திரைப்படமாகவும் வந்தது.
இவை எல்லாம் கொஞ்சம் கிறுக்கர்களுக்குத்தான். ஆனால் கிரீஷ் கார்னாட் போல இவற்றை மறுவாசிப்பு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்
தொடர்புள்ள பக்கம்: தமிழ் இணைய நூலகத்தில் மின்பிரதி