கல்கி vs தேவன் – அசோகமித்ரன் ஒப்பீடு

சில வருஷங்களுக்கு முன்னால் அசோகமித்திரன் கல்கியையும் தேவனையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரைக்கு சுட்டி கொடுத்திருந்தேன். மேலோட்டமான கட்டுரை என்று குறையும் பட்டிருந்தேன். அது அவர் காதில் பட்டதோ என்னவோ தெரியாது, நல்ல ஒப்பீடு ஒன்றை எழுதி இருக்கிறார். பசுபதி சாருக்கு நன்றி!

குறிப்பாக இந்தக் கருத்துக்களை நானும் (அனேகமாக) வழிமொழிகிறேன்.

கல்கி திடுக்கிடும் திருப்பங்களிலும் நாடகத்தனமான திருப்பங்களிலும் அவரது கதைகளை விரித்துச் சென்றார். அவருடைய பாத்திரங்கள் ஸ்டீரியோடைப்ஸ் என்ற பிரிவில் வரக் கூடியவை. அவற்றின் மேன்மை, சிறுமை, கயமை எல்லாமே ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. உயர்ந்த மதிப்பீடுகளையும் இலக்குகளையும் வைத்து எழுதினார் என்றாலும் கூட அவருடைய பாத்திரங்கள் பொம்மைத்தனம் கொண்டவை. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் வாசகர் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிவகாமி, நாகநந்தி போன்ற பாத்திரங்கள் வாசகர்களால் விரிவாக்கப்பட்டவை. கல்கியின் நிறையப் பாத்திரங்கள் அவருடைய பல இதரப் பாத்திரங்களை ஒத்திருக்கும். அவருக்கு முன்மாதிரியாக ஆங்கில, ஃப்ரெஞ்சு ஆசிரியர்களில் கூற வேண்டுமானால் வால்டர் ஸ்காட் மற்றும் அலெக்சாண்டர் டூமாசைக் கூறலாம்.

தேவன் கல்கியின் சமகாலத்தவரானாலும் இலக்கிய உத்திகளில் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். சாகசப் பார்வை தவிர்த்து யதார்த்தப் போக்கில் உலகையும் பாத்திரங்களையும் சித்தரிக்க முயன்றவர். இதனால் தேவனால் ஏராளமான பாத்திரங்களை படைக்க முடிந்தது. எல்லாப் பாத்திரங்களும் தனித்தனியானவை. தனித்தன்மை கொண்டவை. பழக்க வழக்கங்கள், பேச்சு முதலியவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுபவை. இலக்கிய ரீதியாக கல்கியை விட உயரிய இடம் தேவனுக்கு அளித்தேயாக வேண்டும். கல்கி அளவுக்கு அவர் பிரபலம் அடைய முடியவில்லை என்றால் கல்கியின் கதைகள் இருந்த மயக்க அம்சம் (fantasy) தேவன் கதைகளிலும் பாத்திரங்களிலும் கிடையாது. கல்கியின் தொடர்கதைகளைப் படித்துவிட்டு சிவகாமி, விக்கிரமன், நந்தினி, நாகநந்தி என்று பலர் புனைபெயர் வைத்துக் கொண்டார்கள். சாம்பு என்றும் சந்துரு என்றும் ஜகன்னாதன் என்றும் சுதர்சனம் என்றும் யாரும் தன்னைப் புது நாமகரணம் செய்து கொள்ளவில்லை. இந்த விதத்தில் தேவன் சார்லஸ் டிக்கன்ஸ் வகை எனலாம்.

கல்கி, தேவன் இருவருக்கும் நிறைய நகைச்சுவை உண்டென்பார்கள். கல்கியுடையது கிண்டல் வகையைச் சார்ந்தது. தேவனுடையது மனித இயல்பின் வினோதங்களைச் சித்தரிப்பது.

அசோகமித்திரன் சொல்லும் குறைகளை எல்லாம் – பொம்மைத்தனம் உள்ள பாத்திரங்கள் இத்யாதி – கல்கி பொன்னியின் செல்வனில் தாண்டி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அலை ஓசையிலும் தாண்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது 99 சதவிகிதம் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் தியாகபூமியிலும் கள்வனின் காதலியிலும் பார்த்திபன் கனவிலும், ஏன் சிவகாமியின் சபதத்திலும் கூட வரும் பாத்திரங்கள் பொம்மைத்தன்ம் உள்ளவையே. சி. சபதத்தில்தால் அவர் தனது எல்லைகளைத் தாண்ட முயற்சித்திருக்கிறார். பொ. செல்வனில் வெற்றி அடைந்திருக்கிறார்.

தேவனின் பாத்திரங்களிலும் அனேக ஸ்டீரியோடைப்கள் உண்டு. மிஸ்டர் வேதாந்தத்தின் சுவாமிக்கும் ஸ்ரீமான் சுதர்சனத்தின் முதலாளிக்கும் என்ன வித்தியாசம்? கோமதியின் காதலனில் இல்லாத ஸ்டீரியோடைப்பா? அவர் அனேகமாக எழுதியது வாரப் பத்திரிகை தொடர்களே, வணிக இலக்கியமே. சில சமயங்களில் வணிக எழுத்து இலக்கியமாகி விடுகிறது – துப்பறியும் சாம்புவைப் போல, ஸ்ரீமான் சுதர்சனத்தைப் போல. கல்கிக்கும் அதேதான். இருவருமே வணிக எழுத்தைத்தான் எழுத விரும்பினார்கள், பிரபலமாக இருக்க வேண்டும், நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். ஆனால் வாரப்பத்திரிகை எழுத்தின் தடைகளை, எல்லைகளை மீறி அவர்களது திறமை இலக்கியமாகப் பரிமளிக்கிறது என்றுதான் கருதுகிறேன்.

அக்கப்போர் வேண்டுமென்பவர்களுக்காக: கல்கி இருந்த வரை தேவன் விகடனில் தொடர்கதை எதுவும் எழுதவில்லையாம். தேவனின் பேர் இல்லாமல்தான் அவரது நிறைய எழுத்து வருமாம். விகடனில் வேலை செய்த பலருக்கும் கல்கி ஆசிரியராக இருந்தபோது சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை, தேவன் காலத்திலும் இது தொடர்ந்ததாம்.

அசோகமித்திரனின் ஒப்பீட்டை கட்டாயம் படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், தேவன் பக்கம், கல்கி பக்கம்

சிறுவர் புத்தகம் – ‘Winnie the Pooh’

Winnie the Pooh மற்றும் The House at Pooh Corner. Delightful. உங்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டுங்கள் என்பதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்