தமிழில் பெண் எழுத்தாளர்கள்

இந்தச் சுட்டிதான் இந்தப் பதிவை எழுதக் காரணம். தமிழில் பல பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்த குங்குமம் தோழிக்கு ஒரு ஜே!

ஆனால் இந்த ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்ற பிரிவே மிகவும் செயற்கையாகத்தான் தெரிகிறது. பெண்களைப் பற்றி ஒரு பெண் எழுதுவதைப் போல ஒரு ஆணால் எழுத முடியாது என்பதெல்லாம் முட்டாள்தனம். சாபவிமோசனத்தை, பொன்னகரத்தை விடவா ஒரு பெண்ணிய சிறுகதை?

வசதிக்காக பெண்(ணிய) எழுத்து என்று ஒன்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் எனக்கு ஒத்து வருவதில்லை. விகடன், குமுதம், கல்கியில் பெண்களின் துயரம் பற்றி பக்கம் பக்கமாக தொடர்கதைகள் வரும். அதைப் படித்து வெறுத்துப் போன ஒரு கோஷ்டி என் தலைமுறையில் இருக்கிறது. சின்ன வயதில் சிவசங்கரி மீது எக்கச்சக்க கடுப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று வயதான பிறகு மீள்பரிசீலனை செய்யும்போது சிவசங்கரி முயற்சி செய்திருக்கிறார், ஆனால் தோல்வி என்று தெரிகிறது. எப்பப் பார்த்தாலும் உயரமான வெள்ளை நிற ரிம்லெஸ் கண்ணாடி அணிந்த ஆண்கள் பற்றி வர்ணிக்கும் இந்துமதி எப்படித்தான் தரையில் இறங்கும் விமானங்கள் என்ற ஒரே ஒரு இலக்கியம் நயம் உள்ள கதையை எழுதினார் என்று நான் வியந்திருக்கிறேன். லட்சுமி, அனுராதா ரமணன், கமலா சடகோபன் போன்றவர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட். உரைநடையே இப்படி என்றால் கவிதையைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெண் கவிஞர், குட்டி ரேவதி, சல்மா, கனிமொழி என்றால் நான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடுவேன்.

உருப்படியாக எழுதியவர்கள் அவ்வளவு பிரபலம் ஆகாத கிருத்திகா (வாசவேஸ்வரம்), ஹெப்சிபா ஜேசுதாசன் (புத்தம் வீடு) மாதிரி சிலரே. நான் இது வரை விரும்பிப் படித்த ஒரே பெண்ணிய எழுத்தாளர் அம்பை மட்டுமே. ஓங்கி ஒலிக்கும் குரல்தான்; ஆனாலும் இலக்கியம்தான். வாசந்தியைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். வாசந்தி தவிர்த்த மற்றவர்களை நான் ஒரு இருபது வயதுக்கு அப்புறமே படித்திருக்கிறேன். இருபது வயதுக்கு மேல் அஞ்சலி எழுதவோ, இல்லை வேறு ஏதோ காரணத்துக்கோ சிவசங்கரியையும் இந்துமதியையும் படிக்கும்போது கடுப்பு அதிகம்தான் ஆகிறது.

இந்த prejudice-ஆல் நான் பொதுவாக பெண் எழுத்தாளர்களை தவிர்த்தே வந்திருக்கிறேன். அதிலும் ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள் அவ்வளவு மோசமில்லை என்று கேள்வி. இருந்தாலும் ஒரு தயக்கம். எனக்கு குங்குமம் தோழியின் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ளது. ஒன்று இரண்டு சிறுகதைகளைப் படித்துவிட்டு பிறகு முடிவு செய்து கொள்ளலாம்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

அலிஸ் மன்ரோவுக்கு நோபல் பரிசு

alice_munroஇந்த வருஷ இலக்கிய நோபல் பரிசை கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்ரோ பெறுகிறார்.

அலிஸ் மன்ரோவை நான் இன்னும் படிக்கவில்லை. எதையாவது படித்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன், கொஞ்சம் வேலை அதிகம், எப்போது முடியுமோ தெரியவில்லை. இப்போதைக்கு அ. முத்துலிங்கம் அவரை எடுத்த ஒரு பேட்டிக்கான சுட்டி.

நிறைய சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். யாராவது படித்திருந்தால் உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்!

நண்பர் அருணகிரி மன்ரோவின் 16 சிறுகதைகளுக்கான சுட்டி தந்திருக்கிறார். அவருக்கு நன்றி!


தொகுக்கப்பட்ட பக்கம்: பரிசுகள்

எட் எட்மோவின் சிறுகதை – முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில்

Muthukrishnan15000 வருஷங்களுக்கு மேல் இருந்த ஒரு அமெரிக்க செவ்விந்திய குடியிருப்பு 1957-இல் ஒரு புது அணை கட்டும்போது முழுகியது. நடந்த இந்த நிகழ்ச்சியை அமெரிக்க இந்திய எழுத்தாளர் எட் எட்மோ  After Celilo என்ற சிறுகதையாக எழுதி இருக்கிறார். <a href="“>முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் இந்தச் சிறுகதை சமீபத்தில் சொல்வனத்தில் வெளிவந்தது. வசதிக்காக கீழே கட்பேஸ்ட் செய்திருக்கிறேன். படித்துப் பாருங்களேன்!


ஸெலிலோவிற்கு பிறகு

நான் கிளம்பியதற்கு என்ன காரணமாகவிருந்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வாலிபத்தின் கிளர்ச்சியாக இருந்திருக்கலாம். அறிவையும், படைப்பூக்கத்தையும் குறித்த தேடல் காரணமென நான் நினைக்க விரும்புகிறேன். மின்னலை வழிகாட்டியாகவும், நிலவைப் பாதுகாவலனாகவும் கொண்டு, என் பெருவிரலை உலகத்தை நோக்கி நீட்டி, சாலை ஓரத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அது 1964ஆம் ஆண்டின் வசந்தம், கல்லூரியின் கைப்பந்து விளையாட்டில் கிடைத்த பெருமைகளெல்லாம் முடிந்து, ஒளியிழந்த எதிர்காலம் தான் என்னெதிரே நின்றது. கொலம்பியா ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு சென்றிருந்த பல சமயங்கள் நினைவிற்கு வந்தன. அந்த ஆறு, பதில் விருந்துபசாரத்தை எதிர்பார்க்காது, என்றும் வரவேற்கும் நண்பனாக இருந்தது.

celilo_fallsபேஸ் பால் தொப்பி, வைக்கோல் குல்லாய், இரும்புத் தொப்பி அணிந்து கொண்டு வரும் வெள்ளையர்களை ஸெலிலோ அருவி, சுற்றுலாப் பயணிகளாக ஈர்த்தது. அவர்களில் சிலர் வழுக்கைத் தலையர். சாரக்கட்டில் நின்று பழங்குடி இந்தியர்கள் மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க வந்தார்கள். வெயிலால் கன்றிச் சிவந்த கழுத்தில் கருப்புக் கண்ணாடியைத் தொங்க விட்டுக் கொண்டும், பெர்முடா கால்சட்டைக்கு கீழே வீங்கிய உருண்டை முழங்கால்களுமாக வரும் சுற்றுலாப் பயணிகள். அவர்களுடைய பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்வதற்காக எங்களுக்குக் கால் டாலர் கொடுப்பார்கள். சின்னஞ்சிறு வெள்ளைக்கார பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைப் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது நான் எட்டி அவளை இறுக்கமாகப் பிடித்துக் குலுங்கிச் சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது நிஜமாகவே பயம் தரும் அனுபவம் தானே! ஆறு அமைதி தருவதாயிருந்தது. நான் அதன் இதம் தரும் நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டே, வெள்ளி நிற அலைகளில் சூரியனின் பிரதிபலிப்பைக் காண்பேன்.

1957இல், அரசாங்கம் த டால்ஸ் அணையைக் (The Dalles Dam) கட்டி, பாரம்பரியமாக இநதியர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி எங்களை வெளியேற்றியது. அப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை ஆனால் அவர்கள் அதை வளர்ச்சி என அழைத்தார்கள். எங்கள் மக்களின் வீடுகளில் அவர்கள் கூட்டங்கள் நடத்தியது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த நேரத்தில் எங்களுடைய எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டு, நமக்கும் என்ன ஆகுமோ என யோசிப்போம்.

என் அப்பா த டால்ஸ் வர்த்தகக் குழுமத்தில் திட்ட வரைபடங்களைப் பார்த்திருந்தார், அதனால் ஸெலிலோவின் மக்களை எச்சரிக்க முயன்றார். ஆனால் அவர்கள் என் அப்பாவை கிழட்டுச் சீனாக்காரன் எனக் கேலி செய்தார்கள், ஏனென்றால் அவர் மற்ற கிராமத்தினரைப் போலத் தலைமுடியைப் பின்னிக் கொள்வதில்லை. பொறியாளர்கள், யூனியன் பாஸிஃபிக் ரயில் நிறுவனத்தின் புது ரயில்பாதைக்காக பூமியைத் தகர்த்துச் சமன்படுத்த ஆரம்பித்த பிறகே, கிராமத்து இந்தியர்கள் அரசாங்கம் தன் திட்டங்களைச் செயல்படுத்த முனைப்பாயிருக்கிறது என்பதை அறிந்தார்கள். 1930களில் போனெவில் அணை கட்டப்பட்ட போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஹெர்மென் நீரோடைப் பகுதி இந்தியர்களின் அழிக்கப்பட்ட மீன் பிடிப் பகுதிகளுக்கோ, வீடுகளுக்கோ இழப்பீடு ஏதும்கொடுக்கப்படவில்லை என்பதைப் பலர் மறுபடி நினைவு கொண்டனர்.

என் அப்பா ஸெலிலோ கிராமத்தாரை ஒருங்கிணைத்து, அவர்கள் தொடர்ந்து கூடிப் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். அரசாங்கம் எங்களைச் சட்டை செய்யாமல் வெளியேற்றி விட்டு, மீன் பிடிக்கும் தொழிலுக்கும், வீடுகளுக்கும் இழப்பீடு தராமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்கக் கூட்டரசின் மக்களவையின் உயர் மன்றத்தில், ஓரெகன் மாநிலத்தின் செனட்டரான நியூபெர்கருக்கு அப்பா கடிதம் எழுதினார். அவரும் மக்களவையில் அரசாங்கம் எங்கள் மீன்வளங்களுக்கு இழப்பீடு கொடுப்பதோடு, புது வீடுகளும் கட்டித் தர வேண்டும் என்று கோரும் ஒரு மசோதாவை முன்வைத்தார். அந்த நேரத்தில் இழப்பீட்டு தொகை குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. எங்கள் சமூகத் தலைவரின் மகன், “எங்களுடைய உலர்த்தும் கூடத்தில் உள்ள ஒவ்வொரு பலகைக்கும் நீங்கள் 50 டாலர் இழப்பீடாகக் கொடுக்க வேண்டும், ஏனென்றால் இது எங்களுடைய வாழ்க்கை முறை,” என்று கூறினான். அரசாங்கத்து மனிதனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அவர்கள் கொடுக்க வரும் “நியாயமான” தொகையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் அல்லது வாஸ்கோ மாவட்ட நீதிபதியிடம் போய் எங்களுடைய பூமியைப் புறம்போக்கு நிலமாக அறிவிக்கச் சொல்லி, எந்த இழப்பீடும் கொடுக்காமல் எல்லாவற்றையும் புல்டோஸர் வைத்து தரை மட்டமாக்கி விடுவோம் என இந்தியர்களாகிய எங்களிடம் சொன்னான்.

வேலையாட்கள் ஒரு நாளின் நில அளவைச் செய்து முடித்தவுடன், எங்களில் சில பையன்கள் அளவைக்குப் பயன்படவெனப் புதைக்கப்பட்ட சிறு கம்புகளை பூமியில் இருந்து உருவி எடுத்து விட்டு, அந்தக் குழிகளை மூடிவிட்டு, குச்சிகளைப் பற்ற வைத்து சிறு தீயில் எரிய விடுவோம். மற்றவர்கள் முகடுகளில் ஏறி சிறு குழலுள்ள துப்பாக்கிகளால் மண்ணைச் சுமந்து செல்லும் பெரிய லாரிகளை நோக்கி சுடுவார்கள். ஏதாவது ஒரு ஓட்டுனர் லாரியை நிறுத்தினால் நாங்கள் மகிழ்ந்து சிரிப்போம். எங்களுக்கேயான சிறு வழிகளில், அணை கட்டுவதை நிறுத்த முயன்றோம்.

இறுதியில், நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, எங்களுடைய வீடுகளை நாங்கள் எரிக்க வேண்டி வந்தது. நான் எதை எடுத்துச் செல்வது, எதை எரிய விட்டுச் செல்வது என முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அப்பா தீயைப் பற்ற வைக்கப் போகும் கடைசி நேரத்தில் வீட்டிற்குள் மறுபடியும் ஓடிச் சென்று படுக்கையருகில் இருந்த இழுப்பறை மேஜையை எடுத்து வந்தேன். அது பழைய பாணி அலங்காரப் பெட்டி. பின்னாளில் நான் அதை புதுப்பித்த பின், அது மதிப்பு வாய்ந்த பழம்பொருளானது. மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த மனதோடு வீடு எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு ஆற்றின் மறு பக்கத்தில் வேறு புது வீடு கிடைக்கவிருந்தது.

முழுதும் வெள்ளையர்கள் மட்டுமே வாழும் சமூகத்திற்கு – வாஷிங்டன் மாநிலத்தின் விஷ்ரம் என்ற ஊருக்கு– நாங்கள் குடி மாறிப் போனோம். ஒரு வருடப் போராட்டத்திற்கு பின் நானும், என் சகோதரனும் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டோம். ஒரு சமயம், வெள்ளைக்காரச் சிறுமி ஒருத்தி, ஏதோ காரணத்திற்காக என்மேல் மிகவும் கோபம் கொண்டாள். என் மேல் துப்பிவிட்டு, என்னை முன்பிருந்த இடத்திற்கே திரும்பிப் போய் விடுமாறு சொன்னாள். என் என்னால் அப்படித் திரும்பிப் போயிருக்க முடியாது ஏனென்றால் என் வீடு முன்னமிருந்த இடத்தில் அப்போது ஒரு நெடுஞ்சாலை இருந்தது. . அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என எனக்குப் புரியவில்லை.


நான் கொலம்பியா நதியின் வட கரையில் நின்ற நேரம், பிரகாசமான சூரிய அஸ்தமனமாகவிருந்தது. அப்போது ஒரு நீலநிறக் கார் அருகில் வந்து நின்றது.

“எவ்வளவு தூரம் போகணும்?” வாலிபன் கேட்டான்.

“போர்ட்லாண்ட்”, நம்பிக்கையோடு கூடிய எதிர்பார்ப்புடன் கூறினேன்.

“ஏறிக் கொள்,” என்றான் அவன்.

சிகரெட் ஒன்றை என்னிடம் கொடுத்தான். அந்தப் பயணம் முழுக்க அரட்டையும், அமெரிக்க தென் மாநிலங்களின் நாட்டுப்புற மரபிசையும், சமகாலத் திரளிசையுமாகக் கழிந்தது. ஹூட் ஆற்றுப் பாலத்தைக் கடந்து, மேற்கு நோக்கிப் பயணித்தோம். கேஸ்கேட் லாக்ஸ் நகர் வரை மட்டுமே தான் பயணிப்பதாக அவன் கூறினான். அந்த இலவசப் பயணத்திற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததைச் சொன்னேன். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும் இடத்தில் என்னை இறக்கி விட்டான்.

“நல்லது நடக்கட்டும்,” எனக் கூவினான்.

“நன்றி ஐயா,” எனப் பதில் கூறினேன்.

சூரியன் முழுவதுமாக இறங்கி அனேகமாக இருட்டாகி விட்டது. நான் பயப்பட ஆரம்பித்தேன். ஏதாவது போலிஸ்காரன் சிற்றூரிலிருந்து ஓடிப் போன இளைஞனைத் தேடிக் கொண்டிருக்கலாம்.

முகப்பு விளக்குகளின் ஒளி என் மேல் பட ஒரு கார் அருகில் வந்து நின்றது. அது சாமான்களை ஏற்றிச் செல்லும் சிறு ட்ரக் வண்டி. அதன் பக்கவாட்டில் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தேன். ஓட்டுனர் இடத்தில் உயரமான கருப்பு மனிதன் உட்கார்ந்திருந்தான்.

“உள்ளே ஏறிக் கொள், சின்னப் பையா,” என ஆணையிடுவது போல கூறினான்.

நான் தயங்கினேன். ஆனால் அவன் சலிப்போடு கேட்டான், “உனக்கு சவாரி வேண்டுமா, இல்லையா?”

நான் ஏறிக் கொண்டேன், பிறகு போர்ட்லாண்டை அடையும் வரையில் சிறிது பேசிக் கொண்டோம். பர்ன்ஸைட் பாலத்தின் கிழக்குப் பகுதி வரை என்னை கூட்டிச் சென்று – அங்கு தான் வீடற்றவர்களும், ஊர் சுற்றிகளும் தங்குவார்கள் – இறக்கி விட்டான்.

“பாலத்தைக் கடந்து செல் பையா, உன்னுடைய மனிதர்களை அங்கு காண்பாய்,” எதார்த்தத்தைச் சுட்டும் தொனியில் சொன்னான்.

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பாலத்தைக் கடப்பதற்காக நடக்க ஆரம்பித்தேன்.


ed_edmoபதிப்பாசிரியர் குறிப்பு: எட் எட்மோ (1946- ) ஷோஷான் – பான்னாக் சமூகக் குழுவைச் சேர்ந்த அமெரிக்கப் பழங்குடியினர். அனேக அமெரிக்கப் பழங்குடியினத்து எழுத்தாளர்களைப் போலவே இவரும் தம் மக்களின் அழிந்து வரும் சமூகப் பழக்கவழக்க்ங்கள், பண்பாட்டின் அரிய தன்மைகள் பற்றி எழுதவும், பேசவும் செய்கிறார். குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் தத்தமது சமுதாயங்களின் தொன்மை மேலும் அருமை பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க முயல்கிறார். இங்கு மொழி பெயர்க்கப்பட்ட கதை ‘Talking Leaves: Contemporary Native American Short Stories- An Anthology’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ‘After Celilo’ என்கிற இக்கதை 1991 ஆம் வருடம் எழுதப்பட்டது. இந்தத் தொகுப்பு வெளியான வருடம் 1991. பிரசுரகர்த்தர் டெல் பப்ளிஷிங்.


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பக்கம், எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: வைகை அணையில் முழுகிய கிராமம் ஒன்றைப் பற்றிய வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்

கேணி இலக்கிய சந்திப்பில் கண்மணி குணசேகரன்

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் இந்த மாதம் நடக்க இருக்கும் கேணி இலக்கிய சந்திப்பில் பங்கேற்க இருக்கிறார்.

விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்து கழகப் பணிமனையில் தொழிலாளியாகப் பணியாற்றுகிறார். பிறந்த ஊர் மணக்கொல்லை. கவிஞராக எழுதுவதைத் துவங்கினார். 93-லிருந்து எழுதுகிறார். தலைமுறைக் கோபம், காட்டின் பாடல் (கவிதை), உயிர்த் தண்ணீர், வெள்ளெருக்கு (சிறுகதைகள்), கோரை, அஞ்சலை, நெடுஞ்சாலை (நாவல்), ஆதண்டார் கோயில் குதிரை (சிறுகதைகள்), காற்றின் பாடல் (கவிதைகள்) ஆகிய படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். இவருடைய நடுநாடுச் சொல்லகராதி தமிழக அரசு விருது பெற்றுள்ளது.

அன்புடன் அழைப்பது,
ஞாநி & பாஸ்கர் சக்தி.

தேதி: அக்டோபர் 13
நாள்: ஞாயிறு
நேரம்: மாலை 4 மணி.
இடம்: 39 , அழகிரிசாமி சாலை கலைஞர் கருணாநிதி நகர் சென்னை 78.


தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், கண்மணி குணசேகரன் பக்கம்

எரிமலை வளாகங்கள் – 1

முத்துகிருஷ்ணன் சமீபத்தில் ஊர் சுற்றிய அனுபவங்கள் இங்கே.

Lassen-1கோடை காலத்தின் வெப்பத்தை அனுபவிக்க கிடைக்கும் கடைசி சந்தர்ப்பமாக அமைவது லேபர் நாள் விடுமுறை மட்டுமே. இந்த முறை சான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கே செல்லலாம் என ஒரு மாதத்திற்கு முன்பே முடிவெடுத்தாகி விட்டது. முன்பு வேலை பார்த்த இடத்தில் பழக்கமாகி, பின்பு ஒரே நாளில் இருவருக்கும் வேலை போய் இன்னும் நெருக்கமான நட்பாகி போன நண்பன, அவனுடைய மனைவி, நான் என மூன்று பேர் இறுதியில் கிளம்பலாம் என முடிவானது. எப்போதும் போல பொறுப்பாக பராக்கு பார்த்துக் கொண்டே வருவது என்னுடைய பழக்கம் என்பதால் அவர்கள் இருவரும் பயணத் திட்டத்தை வகுத்தார்கள். நான் எல்லாவற்றிற்கும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினேன். என் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட ஒரே கோரிக்கை – கலிஃபோர்னியாவின் எல்லையை தாண்டி ஒரு இடத்திற்கு சென்று வரவேண்டும் என்பதே. காரில் செல்லாம் என்று முடிவெடுத்திருந்ததால் மற்றொரு மாநிலத்தில் நுழைய கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.

Lassen-2ஏதோவொரு திட்டத்தை வகுத்து என்னிடம் சொன்னார்கள் அதில் கிரேட்டர் ஏரி, ஷாஸ்தா மலை, ஓரிகன் மாநிலம் என்ற மூன்று சொற்களைக் கேட்டவுடன் உடனே ஆமோதித்து விட்டேன். வேறெதுவும் தெரியாது, அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. 10 மணிநேரம் சாலையில் மாறும் நிலவெளிகளினூடே ஒரு பயணம் என்ற எண்ணம் மட்டும் உற்சாகத்தைக் கொடுத்தது.

செப்டம்பர் 1 அதிகாலை கிளம்பி லாஸென் எரிமலை தேசியப் பூங்காவிற்கு செல்வது என முடிவெடுத்தோம். சான் ஹோஸே விமான நிலையத்திலிருந்து வாடகைக்கு கார் எடுத்து விட்டோம். முந்தைய நாள் இரவு கிளம்பி நண்பனின் வீட்டிற்கு போய் விட்டேன். படுப்பதற்கு 12 மணி ஆகி விட்டது. காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கண் எரிய குளித்து, பிஸ்கட், டீ குடித்துவிட்டு 4 மணி வாக்கில் கிளம்பி விட்டோம். எப்போதும் போல நான் பின்னால் உட்கார்ந்து கொண்டு இருட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

Lassen-3கார் எதன் மீதோ ஏறியபோது உண்டான அதிர்வில் எழுந்தேன். நெடுஞ்சாலை எண் 5 இல் வடக்கு நோக்கி வளைகுடா பகுதியின் குன்றுகள் சூழ்ந்த நிலங்களிலிருந்து விடுபட்டு வெட்டவெளியில் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். கீழ் திசையில் சூரிய உதயத்தின் நீல நிற வானம் உருவாகிக் கொண்டிருந்தது. கடைசியாக சூரிய உதயத்தை எப்போது பார்த்தேன் என்ற ஞாபகம் இல்லை, பார்த்திருக்கவே வாய்ப்பிலை என்றுதான் தோன்றுகிறது. தூக்கம் கலைந்து விட்டது. பக்கத்தில் பூனைக் குட்டியை போல் காமிரா இருந்தது. வலது பக்கமாக திரும்பி கண்ணாடிக்கு அருகில் முகத்தை வைத்துக் கொண்டு – கண்ணாடியில் படர்ந்த மூச்சு காற்றின் ஆவியை துடைத்துக் கொண்டே – எழப் போகும் சூரியனின் திசையை பார்த்துக் கொண்டே இருந்தேன். Lassen-4தெளிந்த வானம் என்றாலும் அடி வானில் மெல்லிய நீரோட்டம் போல மேகங்கள் இருந்தன. நிலப்பரப்பின் அடியிலிருந்து வரும் விடி வெள்ளியின் வெளிச்சம் மஞ்சள் நிறமாவதற்கு முன்னாலேயே மேகங்களால் கீறப்பட்டு வெவ்வேறு அடர்த்தியுடன் கூடிய நீல கோடுகளாக வெளிவந்தது. காமிராவால் உள்ளிழுக்க முடியாத அளவு மெல்லிய நிற பேதங்களுடைய கிரணங்களாக நீல வானம் சில நிமிடங்கள் இருந்தது. ஒரு விளையாட்டு போல அந்த கிரணங்களை கண்களை சிறுத்து நோக்கினால் காணாமல் போகும் ஆனால் எதையும் குறிப்பிட்டு கவனிக்காமல் மொத்தமாக கிழக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவை தம்மை வெளிக்காட்டும். சில நிமிடங்களில் மஞ்சள் ஒளி சூழ சிகப்பு நிறத்தில் சூரியன் உதயமானது. காமிராவை கொண்டு பல புகைப்படங்களை எடுத்தேன். ஓடும் வாகனத்தில் இருந்து குறைந்த ஒளியுள்ள ஒன்றை படம் பிடிக்க விலைகூடிய லென்ஸ் தேவைப்படுவதால் சகிக்கக் கூடிய தரத்தில் ஒன்றிரண்டு புகைப்படங்கள் மட்டுமே சாத்தியப்பட்டது.

நண்பன் பெங்களூரில் பிறந்து, வளர்ந்தவன். ராக், டிரான்ஸ், மெட்டாலிக்கா என்று பெரிய தொகுப்பை காரில் ஓட விட்டுக் கொண்டிருந்தான். காலை சாப்பாட்டிற்காக ரெட் பிளஃப் என்ற சிற்றூரின் உணவு விடுதிக்கு சென்றோம். அது மாதிரி அமெரிக்க சிற்றூரின் உணவு விடுதி. சமைப்பவரும், பரிமாறுபவரும், சாப்பிட வருபவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். பேர் சொல்லி கூப்பிட்டு பேசிக் கொண்டார்கள். மூன்று இந்தியர்கள் நுழைந்தவுடன் சில தலைகள் திரும்பின, ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு தம் வேலைகளுக்கு திரும்பிச் சென்றன. பான் கேக், காபி, ஆம்லெட் என சிற்றுண்டியை முடித்துவிட்டு லாசென் எரிமலைப் பூங்காவை 10 மணி அளவில் அடைந்தோம்.

Lassen-6Lassen-7லாஸெனின் முகப்பை அடைவதற்கு பல மைல்களுக்கு முன்பே மலைகள் சூழ்ந்த இடங்களுக்குள் வந்து விட்டோம். நூற்றாண்டுகளாக பொங்கி, வெடித்த எரிமலையிலிருந்து வீசப்பட்ட எரியும் கற்கள் சாலையின் இரு புறங்களிலும் குளிர்ந்து, கருமை நிறம் கொண்ட பாறைகளாக சிதறிக் கிடந்தன. பல மைல்களுக்கு சீரான இடைவெளியில் கிடப்பதைப் காணும் பொழுது அவை வீசி எறியப்பட்ட இடம் வெகு தொலைவில் உள்ளது என புலப்பட்டது. இள மஞ்சள் நிறத்திற்கு மாறிப் போன புற்களும் சிறு தாவரங்களும் அந்த பாறைகளை மூடியிருந்தன.

Lassen-8லாஸென் பூங்காவின் அதிகாரப்பூர்வமான முகப்பில் வந்து அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தோம். கூடாரமிட்டு இரவைக் கழிப்பதற்கான எல்லா இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டன என்று அறிவிப்பு பலகையில் இட்டிருந்தார்கள். நாங்கள் வாகனம் செல்லும் சாலையினூடே லாஸெனைக் கடந்து செல்வதாக மட்டுமே திட்டமிட்டிருந்தோம். நல்ல பனிப் பொழிவு ஏற்படும் இடம் என்றாலும் கூட கோடை வெயில் உக்கிரமாக இருந்தது.

Lassen-9சாலையின் வழியே கடக்கும் போது லாஸெனில் காணக் கிடைப்பது ஏரிகளும், பள்ளத்தாக்குகளும்தான். அனுபவமின்மையால் முதலில் எதிர்கொண்ட ஏரியை காண இறங்கி விட்டோம். அதன் பெயர் எமரெல்ட் ஏரி. பெயருக்கு ஏற்றாற் போல பளிங்கு பச்சை நிறமுடைய நீரினாலமைந்த ஏரி அது. அதே நேரம் பெயருக்கு பொருத்தம் இல்லாத ஒரு குளம் மட்டுமே. அரை வட்ட வடிவில் எழுந்திருந்த சிறு மலைகளை சுவர்களாக கொண்டு அவற்றிலிருந்து உருகும் பனியால் நிரம்பிய மரகத ஏரி. அந்த இடத்தின் தனியியல்பு என்பது காட்சி அல்ல, அங்கிருந்த நிசப்தமே. காற்றின் சலனங்கள் ஏதுமில்லால் நீர் நின்று கொண்டிருப்பது போலிருந்தது. நாங்கள் யாரும் இயல்பாகவே பேசவில்லை. நான் காமிராவைக் கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் கழித்து, செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமானதால் அவர்கள் போகலாம் என சொன்னார்கள்.

Lassen-10அடுத்தது. சில மைல்களுக்குள்ளேயே ஹெலன் ஏரியை அடைந்தோம். முந்தையது போலில்லாமல் இது ஒரு ஏரி என்று சொல்லத் தக்க வண்ணம் விரிந்து கிடந்தது. சாலை ஏரியைச் சுற்றி மேலே செல்வதால் அதை பார்த்துக் கொண்டே சென்றோம். எமெரெல்ட் ஏரியில் செலவழித்த நேரத்தை இங்கே சேமித்துக் கொள்ளலாம் என்று இறங்கவில்லை. ஹெலன் ஏரியைச் சுற்றி மரங்களற்ற மலைச் சுவர்கள் மட்டுமே இருந்த காரணத்தாலோ என்னவோ அது ஒற்றை நீல நிறமோடு இருந்தது. ஹெலனை கடக்கும் பொழுது துணுக்குற செய்யும் காட்சி சாலையின் மறு பக்கத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் மலைகள்தான். சாலையிலிருந்து ஆரம்பிக்கும் மலைகளில் ஒரு செடி கூட வளரவில்லை. மொத்த மலையும் உடைக்கப்பட்ட பல லட்சம் பெரும் கற்குவியல்களால் உருவாகியுள்ளது. வானத்திலிருந்து இறங்கி வந்த பெருந்தச்சன் எதையோ கட்டி எழுப்ப ஆயுத்தமாகி பிறகு கைவிட்டு சென்ற கதையின் சான்றுகள் போல அவை பல மைல்களுக்கு கொட்டிக் கிடந்தன. இன்னும் ஒரு மாதத்தில் இவையனைத்தும் பனியின் அடியில் புதைந்து விடும். அப்போது இந்த இடம் மேலும் அழகாக தோன்றலாம் ஆனால் இந்த பிரம்மாண்டம் மிச்சமிருக்குமா என்பது சந்தேகமே.

அந்த சாலையின் அதிகபட்ச உயரமான 8500 அடி வரை சென்று கீழிறங்கினோம். அடுத்ததாக லாஸென் எரிமலை சிகரத்தை பார்த்து உருவாகியிருந்த ஸம்மிட் ஏரியில் என்று இறங்கினோம். 7000 அடி உயரத்தில் அமைந்திருந்த அந்த ஏரி 10,000 அடி உயரத்தை கொண்ட லாஸென் சிகரத்தை பார்த்துக் கிடந்தது. அடர்ந்த ஆஸ்பென் மற்றும் பைன் மரங்களால் சூழப்பட்ட கரையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு செய்தவர்கள் கூடாரமிட்டிருந்தார்கள். சிலரை பார்க்க முடிந்தது, மற்றவர்கள் முதுகில் பைகளைய்க் கட்டிக் கொண்டு மலைகளினூடே நடக்க சென்றுவிட்டார்கள். வெயில் உச்சிக்கு ஏறிவிட்டிருந்தமையால் கண் கூசும் அளவிற்கு ஏரி மிளிர்ந்து கொண்டிருந்தது. வெறும் மரங்களினால் ஆன கரையும், மலையும், வீசிக் கொண்டிருக்கும் காற்றும் சேர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் பச்சை நீறமாக ஸம்மிட் ஏரி இருந்தது. சுற்றளவில் பெரிதாக இருப்பினும் ஆழமற்ற ஏரி அது. நான்கடி உயரமுடைய பாறைகளும், சரிந்து கிடக்கும் மரங்களும் ஏரியின் நடுவே நீர் மட்டத்தை தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. முகப்பில் வாங்கிய வரைபடத்தில் போட்டிருந்தபடி, லாஸெனின் மிகச் சிறந்த இடங்களை ( ஓவிய மணற்குன்று, ஸல்ஃபர் கரைகள்) காண பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். மறுபடியும் அனுபவமின்மையால் குடி தண்ணீர் நாங்கள் வைத்திருக்கவில்லை. கொஞ்ச நேரம் ஏரி கரை வழியே அதைச் சுற்றி வந்தோம். பிறகு அதிகரித்துக் கொண்டேயிருக்கும் வெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் காட்டிற்குள் அதிகம் நடக்க வேண்டாம் என வேண்டா வெறுப்பாக முடிவெடுத்துவிட்டு திரும்பினோம்.

Lassen-12லாஸென் எரிமலை கடைசியாக 1915இல் மிகப் பெரிதாக வெடித்தது. அதிலிருந்து வெளிவந்த புகையும், சாம்பலும், எரியும் கற்களும் மலையின் வடக்கு நிலவெளியை முழுவதுமாக அழித்து விட்டன. அடுத்த 100 ஆண்டுகளில் சிறிது சிறிதாக மண்ணும், தாவரங்களும் தங்களை புதுப்பித்து மலைச்சரிவை சுற்றி வளர ஆரம்பித்துள்ளன. அந்த பேரழிவின் காரணமாக சம்மிட் ஏரிக்கு வடக்கே உள்ள நிலப்பகுதிக்கு “அழிக்கப்பட்ட இடம்” என்ற பெயரிட்டுள்ளார்கள். மலைப்புறம் முழுவதும் ஸெடர், பைன், ஆஸ்பென் மரங்களால் சூழப்பட்ட சாலையில் பயணித்து பூங்காவின் முடிவில் இருந்த மன்ஸானிடா ஏரியை அடைந்தோம். வருகிற பாதை முழுவதும் பல்வேறு சிறு ஓடைகளையும், ஏரிகளையும் பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த ஏரியை பார்ப்பதை விட வயிற்று பசி முக்கியமாக இருந்தது. விருந்தினர் கூடத்தில் வழி கேட்டு முக்கிய சாலையில் இருந்து பிரிந்து அரை மைல் தூரத்தில் இருந்த ஓய்வெடுக்கும் பகுதிக்கு சென்றோம். பெரும் ராட்சஸர்கள் போல் வளர்ந்திருந்த மரங்களுக்கு மத்தியில் மரத்தாலான வீடுகளும், பெட்றோல் கிடங்கும், ஒரு உணவு விடுதியும் கொண்ட ஓய்வு பகுதியில் பிஸ்ஸாவுடன் மதிய சாப்பாடு முடிந்தது.

Lassen-13எல்லா இடங்களிலும் குளியலறையும், கழிப்பறையும் மிக சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். இந்தியர்களும், சீனர்களும்தான் பார்த்துவிட்டு நகரும் சுற்றுலா பயணிகளாக இருந்தனர். அமெரிக்கர்கள் அல்லது வெள்ளையர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வண்டியோடு ஒரு வீட்டையும் வைத்து இழுத்து வந்து அங்கு தங்குவதற்காக வருகிறார்கள். பெரிது, சிறிது, வெள்ளை, பழுப்பு என எல்லா விதங்களிலும் நாய்களை அவர்களுடன் காண முடிந்தது.

Lassen-19காரில் பெட்ரோல் நிரப்பி விட்டு அடுத்ததாக லாவா படுகைகளை நோக்கி கிளம்பினோம். லாஸெனில் இருந்து ஓரிகனை நோக்கி செல்லும் நெடுஞ்சாலை 139இல் இருந்து மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் மோடாக் இயற்கை பூங்காவின் உள்ளே லாவா படுகைகள் அமைந்துள்ளன. மோடாக் என்பது ஒரு செவ்விந்திய குழுவின் பெயராகும். காலம்காலமாக அவர்களுடைய காலச்சாரத்தின் பகுதியாக இங்கிருக்கும் லாவா படுகைகளும், நிலத்தடி குகைகளும் இருந்து வந்துள்ளன. எழுதப்பட்ட வரலாறு உருவான காலத்திற்கு முன்பே கற்கால மனிதர்களின் உறைவிடமாகவும் இந்த பகுதி இருந்துள்ளது. 139இல் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் பொழுது அப்படி ஒரு இடத்திற்குதான் நாம் செல்கிறொம் என்று உள்ளுணர்வில் தோன்றுகிறது . ஒரு வாகனம் மட்டுமே போககூடிய அளவு குறுகிய, உடைந்த சாலை, சுற்றிலும் மஞ்சள் பூக்கள் கொண்ட இரண்டடி புதர்களால் சூழப்பட்டு, புரியாத வடிவில் எழுந்திருக்கும் சிறு குன்றுகள், அவற்றைத் தாண்டி வானமும் மண்ணும் தொடும் தூரம் வரை விரிந்து கிடக்கும் வெளி, அதில் எதையோ பார்த்துக் கொண்டு நிற்கும் தூரத்து ஒற்றை மலைகள் என 15 மைல்களுக்கு மனித நாகரிகத்தை விட்டு விலகி விலகிச் செல்வது போன்ற ஒரு பயணம். விருந்தினர் கூடத்தின் கூரையை பார்ப்பது வரை நாங்கள் செல்வது சரியான பாதைதானா என்ற குறுகுறுப்பு மனதில் இருந்தது. அப்போது நேரம் மாலை 4:30 மணி. 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் நுழைவுச் சீட்டை வாங்கிவிட்டு விசாரித்தோம். அங்கிருக்கும் குகைகளை எப்போதும் போய் பார்க்கலாம் ஆனால் அவர்றை பார்க்க கட்டாயம் கைவிளக்குகள் வேண்டும். அந்த அலுவலகத்தில் விளக்குகளை மாலை 5 மணி வரை வாடகைக்கு தருகிறார்கள். மறுபடியும் அனுபவமின்மையால் ஒரு குகையை பார்க்க வருகையில் கை விளக்கை கொண்டு வர வேண்டும் என்ற அறிவு எங்களுக்கு இல்லை. ஆனால் சிரத்தையுடன் பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை தேவைக்கு ஏற்றவாறு கொண்டு வந்திருந்தோம். வேறு வழியில்லை கிரேட்டர் ஏரியிலிருந்து திரும்புகையில்தான் குகைகளை பார்க்க இயலும் என்பது தெளிவானது. மிக சொற்ப எண்ணிக்கையில்தான் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அங்கு வேறென்ன பார்ப்பதற்கு உள்ளது என விசாரித்ததில், குகைகள் தவிர லாவாவால் உருவான எரிமலை பள்ளம், புகைபோக்கி போன்ற பாறை உருவாக்கங்கள் மற்றும் பல லட்சம் ஆண்டுகளாக பொழிந்து வடிந்து போன தீக் குழம்புகளை கண்டவாறே செல்லக் கூடிய ஒரு சுற்றுச் சாலை போன்றவற்றைக் குறித்த தகவல்கள் கிடைத்தன.

இப்போது நண்பர்கள் இருவரும் என்னை ஓட்ட சொல்லிவிட்டார்கள். குதிரை போன்று இருந்த க்ரைஸ்லர் காரில் தார் போடப்படாத ரோட்டில் பின்னால் பார்க்க முடியாத அளவிற்கு புழுதியை கிளப்பிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தோம்.

Lassen-20விருந்தினர் விடுதியை விட கூடுதல் ஆளரவமற்ற பகுதியில் “Mammoth Crater” என்ற இடத்தை தேடிச் சென்றோம். கிரைஸலரின் அகலத்தில் முக்கால் பகுதியே பொருந்தும் ரோட்டில் சென்று அடைந்தோம். உண்மையில் அது ஒரு பெரிய ராட்சஸனின் திறந்த வாய் போலிருந்தது. சிறு எரிமலையின் விளிம்பிலிருந்து நடுவே பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அந்த பள்ளம் உண்டாக்கியது. விளிம்பிலிருந்து பள்ளத்தை அருகில் சென்று பார்க்க தடுப்பு கம்பிகளுடன் சிறு படிக்கட்டு அமைத்திருக்கிறார்கள். பராமரிப்பு அற்று அது பாதியில் உடைந்திருந்தது. ஆனாலும் அதன் வழியே இறங்கி போய் பார்வையாளர் இடத்திலிருந்து பள்ளத்தைப் பார்த்தோம். மூன்று பக்கங்களிலிருந்தும் பெரும் மணல் சரிவைப் போல நிலம் சரிந்து விழுந்து கிடந்தது. அதன் சுற்றளவு நிச்சயமாக ஒரு மைலுக்கு கூடுதலாகவும், ஆழம் பத்து மாடிக் கட்டடம் அளவிற்கும் இருக்கலாம். அந்த சரிவில் பல மரங்கள் வளர்ந்திருந்தன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இங்குதான் பூமி விலகி லாவா அருவியாக இந்த பகுதி முழுவதும் எரிந்து ஓடியிருக்கிறது. இன்று எல்லாம் அடங்கி தொல்லைத் தரக்கூடிய அமைதியும், ஆழத்தையும் தன்னில் வைத்துக் கொண்டு வாய் பிளந்து கிடக்கிறது. ஆழத்தையும், விரிவையும் ஒரு சேர கண்களாலும், மனதாலும் உள்வாங்க இயலவில்லை. ஒன்றை பார்க்கையில் மற்றொன்று சிறிதாகி விடுகிறது. இதைப் போன்ற இடங்களில் மனது இங்கும் அங்கும் ஓடுவது போல தோன்றுவது உண்டு, அது அங்கிருக்கும் அமைதியால் கூட இருக்கலாம். நெற்றியில் அடிக்கும் சூரிய ஒளியால் அந்த ஆழத்தை ஒரு புகைப்படம் கூட சரியாக உள்வாங்கவில்லை.

அடுத்ததாக சுற்றுச் சாலையை பிடிக்கும் வழியில் இருந்த லாவா புகைபோக்கிகளை பார்வையிட்டோம். சம வெளியில் எரிமலைக் குழம்பு வெடித்து வெளிவருகையில் அது சிறு குன்றுகளாக உறைந்து விடும். அது சில காலங்களில் ஒரு கட்டுமானமாக மாறி அதன் நடுவில் உள்ள குழிகளின் வழியே லாவா வழிந்து கொண்டேயிருக்கும். நாளடைவில் வெளியிலிருந்து பார்ப்பதற்கு அவை இயற்கையாக உருவான பிரம்மாண்ட புகைபோக்கிகளாக மாறிவிடும். அப்படி உருவான மூன்று புகைபோக்கி சகோதிரிகள் அங்கிருந்தனர். அந்த குன்றுகள் இறுகிப் போன கூர்மையான முனைக் கொண்ட கருப்பு களிமண் பாறைகளை போல இருந்தன. எனக்கு அவற்றை பார்த்த போது ஜுராஸிக் பார்க் படத்தில் டைனோசரின் சாணத்தை பிரம்மண்டமாக்கி அங்கு வைத்திருப்பது போல தோன்றியது. ஒவ்வொன்றிற்கும் நடுவே மேலெழும் குழாய் போன்ற அமைப்பு உருவாகியிருந்தது. ஒன்றில் மட்டுமே துளை இருந்தது மற்றவைகள் மூடிவிட்டன. அந்த சிறு துளையைச் சுற்றி கம்பிகளால் ஆன வேலி போட்டிருந்தார்கள். ஒரு தடுப்பு கம்பியை மட்டும் மேல் நோக்கி நகர்த்திக் கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதை தூக்கிவிட்டு நெஞ்சு வரை உள்ளே நுழைத்து பூமியின் ஆழத்திற்கு குடைந்து போகும் துளையை செங்குத்தாக கண்டேன், படம் பிடித்தேன், ஆ,ஓ என கத்தி எதிரொலித்தேன்.

அடுத்ததாக ஓரிகன் செல்லும் நெடுந்சாலையை அடையும் சுற்றுச் சாலையில் பயணம் தொடங்கியது. மடாக் இயற்கை காட்டில் வழியே அமைந்திருந்த சாலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை போன்ற நிலம் மாறி செழிப்பான நிலம் எங்களை எதிர் கொண்டது. எரிமலை சாம்பல்களும், பாறைகளும் குளிர்ந்த பிறகு அவ்விடம் செழிப்படையும் என்பது கண்முன்னே தெரிந்தது. இங்கு நடந்தது எரிமலை வெடிப்பு அல்ல, மாறாக சம வெளியிலும், சிறு மலைகளிலும் பூமி பிரிந்து உருவான லாவாவின் பிரம்மாண்ட ஒழுக்கு. அந்த சாலை “சாத்தானின் வளாகம்” என்ற பெயரிடப்பட்ட லாவா ஒழுக்கை அறுத்துச் சென்றது. சாலையில் இடது பக்கம் ஆயிரம் அடி உயரமான மதிலைப் போன்று சீரான மலை, வலது பக்கம் சம வெளி. மலையிலும், சமவெளியிலும் மஞ்சள் நிறத்தில் காய்ந்து போன நெடும் புற்கள். ஆனால் அவற்றின் இடையில் மலையின் மறு பக்கத்திலிருந்து நிரம்பி வடிந்ததைப் போல பல மைல்களுக்கு சாய்வாக வரி வரியாக கருப்பு பாறைகள். சம வெளியில் அவையெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் சுனையைப் போல ஓடி, உறைந்து போனதற்கான சான்றுகள் கொத்திப் போடப்பட்ட நிலம் போல மஞ்சள் புல்வெளியின் நடுவே பெரும் வளாகமாக கிடந்தது.

தண்ணீர் தொட்டியிலிருந்து ததும்பி வடியும் நீரை தரையிலிருந்து எறும்பு காண்பதைப் போல, பல லட்சம் வருடம் முன்பு இங்கு நடந்த இயற்கையின் தாண்டவத்தின் மௌன சாட்சிகளை இருபக்கங்களிலும் பார்த்துக் கொண்டே பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த பகுதியை கடந்தவுடன் முழுவதுமாக பாறைகளும், மலைகளும் பின்வாங்கி, புல்வெளிகளும், டூலே ஏரியின் நீண்ட கரையும் ஆரம்பித்து விட்டது. டூலே ஏரியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த பறவைகளை காணும் இடத்தில் நின்று ஏரியையும், அங்கு வந்து இறங்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவை என்ன பறவைகள் என தெரியவில்லை. குருவிகளைப் போல வெடுக்கென்று திசை திருப்பி பறந்து கொண்டிருந்தன. நண்பன் அதன் பெயர் “Swallow” என்று கூறினான். அதைத் தவிர காடைகளை அடையாளம் காண முடிந்தது. அங்கிருந்து ஏரியின் மறுபுறம் அமைந்த சிறு மலையும், விளைச்சல் நிலங்களும், தானிய கிடங்குகளும், அந்த நேரம் கடந்து சென்று கொண்டிருந்த ரயில் வண்டியும் கார்ட்டூனில் வரும் பொம்மைகளைப் போல தெரிந்தன.

லாவா மலைகளின் மறுபக்கம் நடைபெறும் சூரிய அஸ்தமனத்தை காண இயலாது என்பதால் மேலும் காத்திருக்காமல் ஓரிகனை நோக்கி கிளம்பி விட்டோம். ஓரிகனுக்கான பயணம் நெடுஞ்ச்சாலை 111இல் வலது பக்கம் விளைச்சல் நிலங்களும், இடது பக்கம் சரி சமமாக வரும் ரயில் தண்டாவளங்களுடன் சென்றது. எல்லா விளைச்சல் நிலங்களும் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டன. அவற்றில் குறைந்தபட்சம் 4 தானிய கிடங்குகளும், தானியங்களை பொதிவதற்கான கருவிகள் கொண்ட கட்டடங்களும் இருந்தன. வளைகுடா பகுதியிலிருந்து இதை முதலில் பார்த்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்போம், லாவா மலையிலிருந்து வந்து இதைப் பார்த்த போது ஆரம்பத்திலிருந்த ஆச்சரியம் சலிப்பாக மாறிவிட்டது.

இரவு 8:30 மணிக்கு க்ளாமத் அருவி நகரில் தங்கும் விடுதியை அடைந்தோம். க்ளாமத் அருவி பெரிய ஊர் என சொல்லி விட இயலாது. 9 மணிக்கு எரியும் பசியுடன் மறுபடியும் ஊருக்குள் சென்ற போது ஆள் நடமாட்டம் அற்று இருந்தது. இணையத்தில் பார்த்து வைத்திருந்த கடைகள் எல்லாம் 9 மணிக்கு மூடி விட்டார்கள். நம்பகத்தன்மையோடு கூடிய ருசியுடன் சாப்பிட டென்னிஸ் தொடர் சங்கிலி உணவு விடுதிக்கு 10:30 மணி வாக்கில் சென்றோம். அடுத்த நாள் கிரேட்டர் ஏரிக்கு காலை 9 மணிக்கு கிளம்பலாம் என்று முடிவானது. அதற்கு பின், இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கலாம் என நோட் புத்தகத்தை எடுத்து வைத்து படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்த ஞாபகம் உள்ளது.


தொகுக்கப்பட்ட பக்கம்: பயணங்கள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம் – தொடச்சியாக நூறு இந்தியப் படங்கள் திரையிடல்…

சென்னை நண்பர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ராஜா ஹரிச்சந்திராவுக்கெல்லாம் பிரிண்ட் இருக்கும் என்று நினைத்ததில்லை.

தொடங்கி வைப்பவர்: இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

நாள்: 05-10-2013, சனிக்கிழமை.
இடம்: ட்ரீம்ஸ் இந்திய, சர்குலர் ரோட், கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் பூங்கா அருகில்)
நேரம்: மாலை 5 மணி.

நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ சார்பாக தொடர்ந்து நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. இந்நிகழ்வை கோடம்பாக்கத்தில் உள்ள ட்ரீம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து தமிழ் ஸ்டுடியோ நடத்துகிறது. தினமும் மாலை 7 மணியளவில் திரையிடல் தொடங்கும். 5ஆம் தேதி (சனிக்கிழமை) மட்டும், தொடக்கவிழா மாலை 5 மணியளவில் தொடங்கவிருக்கிறது.

இதில் திரையிடப்படும் முதல் கட்டப் படங்கள்: (பட்டியலை தொடர்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இங்கே வெளியிடுகிறேன். இப்போதைக்கும் முதல் பத்து நாட்களுக்கான படங்களின் பட்டியலை மட்டுமே வெளியிடுகிறேன்).

  1. 05-10-2013 சனிக்கிழமை – The Great Train Robbery & ராஜா அரிச்சந்திரா (மௌனத் திரைப்படம், இந்தியாவின் முதல் திரைப்படம்)
  2. 06-05-2013 ஞாயிறு – தோ பிகா ஜமீன் (Do Bigha Zamin), இந்தியாவில் இருந்து முதல் முறையாக வெளிநாட்டு விருதை வென்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற திரைப்படம். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகளை எவ்வித ஜோடனைகளும் இன்றி, எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் திரைப்படம்)
  3. 07-10-2013 திங்கள் – அவன் அமரன் (தமிழில் வெளிவந்த முதல் கம்யூனிசத் திரைப்படம்)
  4. 08-10-2013 செவ்வாய் – மர்மயோகி (தமிழின் முக்கியமான இயக்குனரான கே. ராம்நாத்தின் திரைப்படம், இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
  5. 09-10-2013 புதன் – திக்கற்ற பார்வதி ( சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் முதல் திரைப்படம் இது. தமிழக முதல்வர் ராஜாஜி அவர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம்)
  6. 10-10-2013 வியாழன் – ஒரே ஒரு கிராமத்திலே (தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடை விதித்த திரைப்படம், இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை வாலி எழுதியிருந்தார்)
  7. 11-10-2013 வெள்ளி – சாசனம் (இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் நிதியுதவி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். கந்தர்வனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்)
  8. 12-10-2013 சனிக்கிழமை – யாருக்காக அழுதான் (எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய திரைப்படம், நாகேஷின் பிரமாதமான நடிப்பிற்காகவே போற்றப்பட்ட திரைப்படம்)
  9. 13-10-2013 ஞாயிறு – ஏழை படும் பாடுகே. ராம்நாத் இயக்கிய இந்த திரைப்படம் தமிழின் முக்கியமான திரைப்படம். லெஸ் மிசரப்லஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்.
  10. 14-10-2013 திங்கள் – ஓர் இரவு – அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.
  11. 15-10-2013 செவ்வாய் – மதன காமராஜன் (நிகழ்கால பார்வையாளர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த திரைப்படம், பழங்கால வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ள உதவும்.
  12. 16-10-2013 புதன் – நந்தனார் – நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம்.எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் அதிர்வை ஏற்படுத்திய திரைப்படங்கள். எல்லாருக்கும் பரிச்சயமான, எப்போதும் பார்க்க கிடைக்கக் கூடிய திரைப்படங்களை இந்த திரையிடலில் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறோம். சில அரிய திரைப்படங்கள், சர்ச்சைக்குரிய திரைப்படங்கள் என இந்த பட்டியல் எல்லாரும் அவசியம் பார்த்தாக வேண்டும் என்பதை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த பட்டியல் விரைவில்.

திரையிடலுக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக.

நண்பர்கள், தங்களின் நண்பர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து, இந்த நூற்றாண்டை கொண்டாட்டத்தை வெற்றி பெறச் செய்யுங்கள்.

ஏற்பாடு: தமிழ் ஸ்டுடியோ மற்றும் ட்ரீம்ஸ் இந்தியா.


தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள்

பனியா காந்தி

என்னைப் பொறுத்த வரையில் நான் ஒரு இந்தியன் என்பது வெறும் விபத்து மட்டுமே. எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சைக் கேட்டால் மூச்சில் சக்தி பிறந்த வயதெல்லாம் போய் ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. நான் ஒரு இந்தியன், ஹிந்து, தமிழன், ஆண், ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்பதெல்லாமே வெறும் விபத்துக்கள்தான். இதில் பெருமைப்படவோ சிறுமையுறவோ ஒன்றுமில்லை.

ஆனாலும் சில விஷயங்களில் நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைக்கிறேன். பெரும் பண்பாட்டுப் புலம் என் பின்னால் இருக்கிறது. மஹாபாரதம் போன்ற காவியத்தை நான் அனுபவிக்கும் அளவுக்கு வேற்று நாட்டுக்காரன் அனுபவிக்க முடியாது. என் ஆன்மிகத்தை நானே நிர்ணயிக்கலாம் என்ற பிரக்ஞை நான் ஹிந்துவாகப் பிறந்திருக்காவிட்டால் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த விபத்துக்களில் பெருமைப்படவோ சிறுமையுறவோ எதுவுமில்லை என்று நான் இன்று நினைப்பதை பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று என் முப்பாட்டன் எனக்கு இன்றும் புரியும் மொழியில் பாடி இருப்பது நினைக்கும்போதெல்லாம் மகிழ்வு தரும் விஷயம். அப்புறம் காந்தி பிறந்த நாட்டுக்காரன்.

Gandhiஎப்படி சாத்தியமாயிற்று? லட்சக்கணக்கான படித்தவர்களும் படிக்காதவர்களும் பணக்காரர்களும் ஏழைகளும் பெண்களும் தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலைத் தாண்டி அடி வாங்கவும் ஜெயிலுக்குப் போகவும் சேரிகளில் வாழவும் மலம் அள்ளவும் எப்படித் தங்களைத் தயாராக்கிக் கொண்டார்கள்? இந்த ஒற்றை மனிதர் என்ன மாயம் செய்தார்?

காந்தியைப் பற்றி வேற்று நாட்டவரால் புரிந்து கொள்ள முடியாது என்பதில்லை. ஆனால் அவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். நான் வெளிநாட்டுக்கு வந்து எத்தனையோ வருஷம் ஆயிற்று. காந்தியைப் பற்றிய பிரக்ஞையே இல்லாதவர்கள் எக்கச்சக்கம். நம் ஊரிலோ spoonfeeding நடக்கிறது. கொஞ்சூண்டு முயற்சித்தால் போதும், காந்தி பற்றிய hagiography, வசைகள் இரண்டையும் சுலபமாகத் தாண்டி அந்த ஆளுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

காந்தி குறைகள் இல்லாத மனிதர் இல்லை. தவறுகளே செய்யாத அவதார புருஷர் இல்லை. அப்படி யாராவது சொன்னால் அதற்கு முதலில் சிரிக்கும் மனிதர் அவராகத்தான் இருப்பார். ஆனால் காந்தியை வசை பாடுபவர்களின் சிந்தனை ஓட்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை. கண்ணெதிரே நடந்து செல்லும் மாபெரும் கொம்பன் யானையை சின்ன சுண்டெலிதான் என்று எப்படி கூசாமல் சாதிக்கிறார்கள்?

காந்தியைப் பற்றிய பிரமிப்பு சிறு வயதிலேயே ஆரம்பித்துவிட்டது. பள்ளிக் காலத்தில் – ஒரு ஒன்பது பத்து வயதில் – முதல் முதலில் என்னை வியப்பில் ஆழ்த்திய புத்தகம் கே.ஏ. அப்பாஸ் எழுதிய “இன்குலாப்“. அதில் உப்புச் சத்தியாக்கிரக காலத்தில் சத்தியாக்கிரகிகள் வரிசையாக நின்று அடி வாங்கும் காட்சியில் அமெரிக்க நிருபருக்கு மட்டுமல்ல எனக்கும் மூச்சு நின்றேவிட்டது. அமைதியாக நின்று அடி வாங்கிக் கொள்ள ஒரு கூட்டத்தை எப்படி இந்த மனிதர் உருவாக்கினார் என்று என் அம்மாவும் நானும் பேசிப் பேசி வியந்திருக்கிறோம்.

அப்புறம் காந்தி திரைப்படம். அது இன்னும் நீளமாக இல்லை, நிறைய விஷயங்களைப் பேசவில்லை என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டாலும் அது spoonfeeding-க்கு அடுத்த கட்டத்துக்கு என்னைக் கொண்டு சென்றது.

எனக்கு பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி காந்தியைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவிய புத்தகம் “Freedom at Midnight“. 47இல் கல்கத்தாவில் ஒற்றை மனிதனால் பெரும் உயிர் சேதத்தைத் தடுக்க முடிந்தது என்பது கொஞ்சம் உயர்வு நவிற்சிதான். ஆனால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. பஞ்சாபில் பற்றி எரிந்தது அங்கே எரியவில்லையே! (46-இலேயே எரிந்துவிட்டது என்று ஹிந்துத்துவர்கள் சொல்வது உண்டு.)

gandhi_cartoon_by_abuஅதற்குப் பிறகு பல புத்தகங்கள், கட்டுரைகள் உண்டு. ஆனால் எல்லாப் புத்தகங்களும் கட்டுரைகளும் சினிமாவும் காந்தி என்ன செய்தார் என்பதுதான். அவர் ஏன் இப்படி செய்தார் என்பதைப் பற்றி இல்லை. காந்தியே விளக்கியவற்றில் சுவாரசியம் கம்மியாக இருந்தது, என்னால் ஊன்றிப் படிக்க முடியவில்லை.

jeyamohanஅதற்கு ஜெயமோகன் வர வேண்டி இருந்தது. காந்தியின் சிந்தனைகளை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னவர் ஜெயமோகன்தான். அவரது இன்றைய காந்தி புத்தகத்தை எல்லாருக்கும் பரிந்துரைக்கிறேன். அதை மொழிபெயர்த்துப் பிற மொழிகளுக்குக் கொண்டு சொல்ல வேண்டும்…

முழு புத்தகத்தையும் படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்கு இந்த ஒரு கட்டுரையைப் பரிந்துரைக்கிறேன் – காந்தி என்ற பனியா பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4.

பின்குறிப்பு: நான் சாதாரணமாக மகாத்மா காந்தி என்று எழுதுவது இல்லை. காந்திதான். புரட்சித் தலைவர்/தலைவி, பேரறிஞர், பெரியார், இனமானக் காவலர் என்று பட்டப்பெயர்கள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில் அவரையும் பட்டப்பெயர் வைத்து குறிப்பிடுவது அவரை இழிவுபடுத்துவதாகத் தெரிகிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்
தொடர்புள்ள சுட்டி: காந்திக்கு ஒரு தளம்