சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள்


சுரேஷ்குமார இந்திரஜித் நான் அவ்வளவாகப் படிக்காத எழுத்தாளர். இணையத்தில் அங்கும் இங்கும் கிடைத்த சிறுகதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஜெயமோகன், எஸ்ரா முறையே பரிந்துரைத்த விரித்த கூந்தல், மறைந்து திரியும் கிழவன் போன்ற சிறுகதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. அதனால் புத்தகங்களையும் வாங்கவில்லை, இணையத்தில் கிடைத்த பிற சிறுகதைகளையும் படிக்காமல் தவிர்த்துக் கொண்டே இருந்தேன்.

ஆனால் இந்திரஜித் இரண்டு வகையான சிறுகதைகளை எழுதுகிறார் என்று தோன்றுகிறது. ஒன்று எனக்குப் புரியக் கூடிய, நெகிழ்வான, உறவுகளின், பந்தங்களின் சிறுகதைகள். இரண்டாவதாக ஜெயமோகன், எஸ்ரா போன்ற வேற லெவல் வாசகர்களுக்கான மாஜிகல் ரியலிசம் கலந்த சிறுகதைகள். முதல் வகை சிறுகதைகள் இரண்டு – பெரியம்மை, செம்பொன் சிலை – அழகானவை.

பெரியம்மை நெகிழ்வான கதை. அண்ணன் தம்பி உறவை அழகாக விவரிக்கிறது. அதுவும் பெரியப்பா பாட்டு பாடுவது, கதை பெரியப்பாவை சுற்றிச் சுழன்றாலும் தலைப்பு பெரியம்மை என்று இருப்பது எல்லாம் நல்ல டச்! படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

செம்பொன் சிலை இன்னொரு நெகிழ்வான கதை. வேலை இல்லாத இளைஞன், பக்கத்து வீட்டுப் பெண், அப்பாவின் இன்னொரு மனைவி, அமிர்தாஞ்சனம் தடவிக் கொள்ளும் அம்மா என்று அருமையான பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

அங்கயற்கண்ணி சிறுகதையை அவரது தமிழுக்காகவே படிக்க வேண்டும். தமிழுக்காகத்தான் படிக்க வேண்டும், வேறு ஒன்றுமில்லை. ஆனால் அருமையான தமிழ்.

மறைந்து திரியும் கிழவன் போன்ற கதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. பொதுவாக இது போன்ற மாஜிகல் ரியலிசம் கதைகள் நான் ரசிப்பது அபூர்வமே. சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், விரித்த கூந்தல் சிறுகதைகளும் எனக்கு சுமார்தான்.

ஜெயமோகன் விரித்த கூந்தல், பிம்பங்கள் சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். எஸ்ரா மறைந்து திரியும் கிழவன் சிறுகதையை தன் 100 சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

அடுத்த முறை ஊருக்குப் போகும்போது இவரது சிறுகதைத் தொகுப்பு எதையாவது வாங்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

அஜிதனின் சில சிறுகதைகள்

அஜிதனை அனேகமாக ஜெயமோகனின் மகன் என்றுதான் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவ்ர் தன்னளவில் ஒரு சுவாரசியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அடர்த்தியான, நுண்விவரங்கள் நிறைந்த எழுத்து பாணி. சில சமயம் இத்தனை விவரம் தேவையா என்று தோன்ற வைத்துவிடுகிறார்.

ஆனால் படுசுமாராக எழுதும் எனக்கே என் கதைகள் பெரிய வெளியாக, பெரிய காட்சித் தொகையாக இருக்கின்றன. என் திறமை குறைவாக இருப்பதால் எதை சொல்ல வேண்டும் எதை விட்டுவிட வேண்டும் என்பது சரியாகக் கை வரவில்லை. மனதில் தெரிவதில் நான் பத்து சதவிகிதத்தை எழுதினால் அதிகம், அதுவும் அனேகமாக உரையாடல் மூலம்தான் சொல்ல முடிகிறது. அஜிதனால் மனதில் தெரிவதை பெருமளவு எழுதி விட முடிகிறது என்று நினைக்கிறேன்.

போர்க் ரோஸ்ட் சிறுகதையை எடுத்துக் கொள்ளுங்கள். பன்றிக்கறி சமைப்பதை விலாவாரியாக விவரிக்கிறார். இத்தனை விவரங்கள் இருப்பதால், அவை தன்னளவில் முழுமையாக இருப்பதால் கதையை இறக்கும் நிலையில் இருக்கும் பாட்டியின் தீனி ஆசை என்றே கூட படித்துவிடலாம். ஆனால் லேய் உந்தாத்தா இருக்காம்லா என்ற அரை வரிதான் கதை. குறைந்த பட்சம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அப்படிப் படித்தால் கதை வேறு ஒரு தளத்துக்குப் போகிறது. பெரிய லட்டில் புதைந்திருக்கும் ஒரு முந்திரியை தவற விடுவது போல இந்த வரியை தவற விடலாம். அதனால்தான் கொஞ்சம் அடர்த்தி குறைவாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

1134 கப்பல்கள் சிறந்த சிறுகதை. சிறுவனின் வளர்ச்சி என்று சுருக்கிவிடலாம். ஆனால் நுண்விவரங்கள், விவரிப்புகள், கப்பலோட்டிய சிறுவன், ஆசிரியையை வெட்டுவேன் என்று கிளம்பும் அப்பா, நாய் குட்டன், இட்லிப்பூவிலிருந்து தேன் குடிப்பது, எல்லாவற்றையும் விட முக்கியமாக தங்கை பாப்பு – கலக்கிவிட்டார். வாழ்க! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நங்கேலி என் கண்ணில் எளிமையான கதை. ஆனால் ஒரு தொன்மத்தின் கவர்ச்சி இருக்கிறது. ராதிகாவின் வேர்கள் என்னவாக இருக்கும் என்று அஜிதன் கோடி காட்டி இருப்பதுதான் எனக்கு இதை சிறுகதை ஆக்குகிறது.

மூன்று குறுங்கதைகளில் இரண்டாவது எட்கர் ஆலன் போவை நினைவுபடுத்தியது.

நிலைவிழி சிறுகதையில் இறக்கப் போகும் பெண்ணின் மன ஓட்டங்களை நன்றாக சித்தரிக்கிறார். ஆனால் கதையின்  முத்தாய்ப்பு எனக்கு கதையோடு ஒட்டாத மாதிரி இருந்தது.

அஜிதனை நான் பார்த்ததில்லை. என்றாவது சந்திக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

திராவிட இயக்க எழுத்து 2

திராவிட இயக்க எழுத்தாளர்கள் பதிவை எழுதிய பிறகு திராவிட இயக்க எழுத்து என்றால் என்ன என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். திராவிட இயக்கத்தின் கருத்துக்களை பின்புலமாகக் கொண்டவை, அவற்றை பிரச்சாரம் செய்பவை என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் திராவிட இயக்கத்தின் முக்கியக் கருத்துக்கள்தான் என்ன?

எனக்குத் தோன்றுபவை:

1. ஆரியர்-திராவிடர் வேறுபாடு; திராவிடர் தென்னிந்தியாவின் – குறிப்பாக தமிழகத்தின் பூர்வ குடியினர், அவர்களை வந்தேறி ஆரியர்கள் பண்பாட்டு ரீதியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஆதிதிராவிடர்களை திராவிட வந்தேறிகள் அடக்கி ஆண்டார்களா என்று கேட்கக் கூடாது.

இது நாசூக்கான வடிவம். நடைமுறையில் இது பார்ப்பனர்-“இடைநிலை” ஜாதியினர் வேறுபாடு. தமிழன் கேனையன், ஊருக்கு புதிதாக வந்த ஓரிரண்டு பார்ப்பான் நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்றால் அட ஆமாம் என்று மூவேந்தரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உள்கருத்து. “உயர்ந்த” ஜாதியினர் என்பதால் பிராமணர் சமூகத்தில் அனுபவித்த சலூகைகளை விட பிராமணர்கள் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்க காலத்தில் அரசு வேலைகளிலும் வக்கீல் தொழிலிலும் கொழித்ததுதான் முக்கிய காரணி.

இதன் இன்னொரு கிளை புராணங்களும், கடவுள் பற்றி சங்க இலக்கியங்களில் வரும் குறிப்புகளும் எல்லாமே பிராமணரின் பம்மாத்து வேலை என்ற கருத்து.

திராவிட இலக்கிய எழுத்துக்களில், குறிப்பாக அண்ணாதுரையின் எழுத்துகளில் இது மீண்டும் மீண்டும் பார்ப்பன பாத்திரங்களை அற உணர்வே அற்ற வில்லன்களாகவும், இடைநிலை ஜாதியினரை, குறிப்பாக வயதில் மூத்த முதலியார்களை இப்படிப்பட்ட அயோக்கியர்களிடம் சுலபமாக ஏமாறுபவர்களாகவும், இளைய தலைமுறையினர் எதிர்ப்பதாகவும் காட்டுவதில் வெளிப்படுகிறது.

2. தமிழ் மிகப் பழைய மொழி – குறிப்பாக சமஸ்கிருதத்திற்கு சமமான அளவுக்காவது பழமையானது. அந்தக் காலத்திலேயே தமிழ் சமுதாயம் உயர்ந்த நாகரீக நிலையை அடைந்திருந்தது. சேரன் செங்குட்டுவன் கனக விஜயரை கல் சுமக்க வைத்தான், ரோமாபுரியில் தமிழர் தேரோட்டினர் என்று தமிழனின் வீரம், வாணிகத் திறமை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினர். சுருக்கமாகச் சொன்னால் முற்காலம் பொற்காலம்.

இதன் தொடர்ச்சியாக லெமூரியா, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று ஒரு கிளை உண்டு. கன்னடத்திற்கும் களிதெலுங்கிற்கும் மலையாளத்திற்கும் தமிழே தாய்மொழி என்றும் ஒரு கிளை உண்டு. கன்னடர்களும் தெலுங்கர்களும் தமிழ் மூலமொழி என்று நினைக்கிறார்களா என்று யாரும் கேட்கக் கூடாது.

இந்தக் கருத்துக்கள் உருவாக்கிய அரசியல் மாற்றங்கள், ஏன் பண்பாட்டு மாற்றங்களைக் கூட நான் இங்கே பேசவில்லை. அவை புனைவுகளிலும் ஆய்வுகளிலும் எப்படி வெளிப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமே இங்கே பேசுபொருள்.

அண்ணா இந்தக் கருத்துக்களை முன்வைத்து தொடர்ச்சியாக புனைவுகளை எழுதினார். சிறுகதைகளை விட, நாவல்களை விட, அவரது நாடகங்களில்தான் – குறிப்பாக ஓரிரவு நாடகம் – சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. அவரே திராவிட இயக்கத்தின் கருத்துக்களை முன் வைத்த எழுத்தாளர்களில் தலை சிறந்தவர், ஆனால் அவரது திறமை அனேகமாக விரயம்தான் ஆனது. நாடகங்களை மட்டுமே வைத்துப் பார்த்தால் கூட தமிழில் நல்ல நாடகங்கள் அபூர்வம், அதனால்தான் அவருக்கு எழுத்தாளர் பட்டியலில் ஒரு இடம் இருக்கிறது.

கருணாநிதி அண்ணாவின் படுசுமாரான நகல். அவரது எழுத்து சிறப்பாக வெளிப்பட்டிருப்பது அவர் மனோகரா, பராசக்தி, மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்களில்தான். குறளோவியத்துக்கு அவர் எழுதிய உரையை நான் பெரிதாக ரசிக்கவில்லை, ஆனால் அவரது தேர்வுகள் அருமை.

பாரதிதாசன், தென்னரசு முதலான பலரும் புனைவுகளை, நாடகங்களை எழுதி இருக்கிறார்கள். நான் இது வரை எந்த நல்ல புனைவையும் படித்ததில்லை. குறிப்பாக பாரதிதாசன் எழுதிய இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தைப் போல மோசமான எழுத்தை நான் அபூர்வமாகவே பார்த்திருக்கிறேன். ஓரளவு படிக்கக் கூடியது சி.பி. சிற்றரசின் விஷக்கோப்பை நாடகம் மட்டுமே.

கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு கவிதை அலர்ஜி. நான் ஓரளவு படித்திருப்பது பாரதிதாசனை மட்டுமே. பாரதிதாசனின் பலம் சந்தம். ஆனால் என் மனம் கவர்ந்த மாதிரி அவர் ஒரு கவிதையையும் எழுதவில்லை.

தமிழ் ஆய்வுகளில் திராவிட இயக்கத்தினர் முக்கியமான பங்காற்றி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு தமிழ் ஆய்வுகளைப் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவும் ஆர்வமும் கிடையாது. ஆனால் மு.சு. பூரணலிங்கம் பிள்ளையிலிருந்து தேவநேயப் பாவாணர் வரை தமிழில் ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்ன, அவர்களது திராவிட இயக்க சார்பு அவர்களை சில முன்முடிவுகளுக்கு அழைத்து செல்கிறது. அந்த முன்முடிவுகளை தங்கள் ஆய்வுகளில் அவர்கள் வலிந்து புகுத்துவது சில சமயம் கேலிக்கூத்தாக முடிகிறது.

திராவிட இயக்கத்தினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் பல தமிழறிஞர்கள் அவர்களோடு சில பொதுவான விஷயங்களில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பாரதியாரேபேராசைக்காரனடா பார்ப்பான் – ஆனால் பெரிய துரை என்றில் உடல் வேர்ப்பான்” என்று எழுதி இருக்கிறார். திரு.வி.க. போன்ற காந்தியர்கள், மறைமலை அடிகள் போன்ற தீவிர சைவர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்களை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இமையத்தின் எழுத்துக்கும் இந்தக் கருத்துகளுக்கும் ஸ்னானப் பிராப்தி கூட கிடையாது. அவர் எழுத்தாளர், திராவிட இயக்க எழுத்தாளர் என்று அவர் சொல்லிக் கொள்வது அவரது தனிப்பட்ட சார்பு நிலையை மட்டுமே.

திராவிட இயக்கத்தின் இலக்கிய ரீதியான பங்களிப்பு என்பது தமிழ் மொழி பற்றிய பெருமிதத்தை பரவலாக்கியதும், நல்ல தமிழை இரண்டு தலைமுறைக்காவது கொண்டு வந்ததும்தான். கறாராகப் பார்த்தால் அண்ணாதுரையின் 3 நாடகங்களைத் தவிர மிச்ச அனைத்தும் ஒரு அடிக்குறிப்பு அளவுக்கு வந்தால் அதிகம். கருணாநிதி அதிகார பீடத்தில் இருந்ததாலும் பாரதிதாசன் உருவாக்கிய வானம்பாடி பரம்பரையின் எச்சங்கள் இன்னும் அழிந்துவிடாதாதலும் அவர்கள் இருவரும் கொஞ்சம் நினைவு கூரப்படுவார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: திராவிட இயக்க எழுத்தாளர்கள்

அஞ்சலி: எழுத்தாளர் ராஜேந்திர சோழன்

எழுத்தாளர் ராஜேந்திர சோழன் மறைந்தார். அஸ்வகோஷ் என்ற பேரிலும் எழுதி இருக்கிறார்.

அஞ்சலி என்பது அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதுதான். அதனால் இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

ராஜேந்திர சோழனின் எழுத்தை நான் intriguing, but not a must-read என்றே மதிப்பிடுகிறேன். அவரது பலம் போலித்தனம் அற்ற அடிமனத்து உணர்வுகளை நேர்மையான, வெளிப்படையான எழுத்தில் கொண்டு வருவது. அவரது பலவீனமும் அதேதான் என்று கருதுகிறேன். அவர் காட்டும் மானுட தரிசனங்கள் எதுவும் அட! என்று வியக்க வைக்கவில்லை. புதிதாக எந்த ஜன்னல்களையும் எனக்குத் திறக்கவில்லை. அதனால் அவரது எழுத்தை இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தினாலும் படித்தே ஆக வேண்டிய எழுத்தாளர் என்ற உணர்வை ஏற்படுத்தவில்லை.

அவரது இன்னொரு பலம், தன் இடதுசாரி சார்பை தன் எழுத்தில் துருத்திக் கொண்டு நிற்காமல் பார்த்துக் கொள்வது. செயற்கையான “முற்போக்கு”, “இடதுசாரி”, பணக்காரனின் அடக்குமுறை சிறுகதைகளை அவர் எழுதவில்லை. (நீதி என்ற சிறுகதை ஒரு விதிவிலக்கு). அவர் எழுதுவது வெளிப்படையான, போலித்தனம் அற்ற அடிமனத்து உணர்வுகளை. அது தற்செயல் சிறுகதையின் காமம் ஆகட்டும், பொழுது சிறுகதையில் சூதாட்டத்தின் ஈர்ப்பு ஆகட்டும், நண்பனுக்கு வேலை கிடைத்துவிட்டதால் ஏற்படும் resentment ஆகட்டும்.

ஜெயமோகன் ராஜேந்திர சோழனின் பாசிகள், புற்றில் உறையும் பாம்புகள், வெளிப்பாடுகள் ஆகிய சிறுகதைகளை தன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். புற்றில் உறையும் பாம்புகளை பாலியல் வழியாக மனித தரிசனங்களைத் தரும் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். எஸ்ராவும் புற்றில் உறையும் பாம்புகளை தமிழின் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதுகிறார்.

புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதே கருவை வைத்து அழகிரிசாமி இன்னும் அருமையான கதை ஒன்றை எழுதி இருக்கிறார் என்று நினைவு. சிறுகதையின் பெயர்தான் நினைவு வரவில்லை.

ஜெயமோகன் புற்றில் உறையும் பாம்புகள் சிறுகதை பாலியல் சித்தரிப்பு எழுத்தின் திருப்புமுனை, எழுதப்பட்ட காலத்தில் பெரிய விவாதங்களை உருவாக்கியது என்கிறார். இன்னொரு இடத்தில் ராஜேந்திர சோழனின் கதைகள் “அப்பட்டமான யதார்த்தத்தைச் சொன்னபடி காமத்தின் நுண்ணிய அக இயக்கங்களுக்குள் சென்ற படைப்புகள்” என்றும் சொல்கிறார். அப்பட்டமான யதார்த்தம் என்பது உண்மைதான் – குறிப்பாக தற்செயல் போன்ற சிறுகதைகளில். ஆனால் அப்படி திருப்புமுனையாக எனக்கு எதுவும் தெரியவில்லை. அவரது வார்த்தைகளில்:

தமிழில் பாலியல் சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய புற்றில் உறையும் பாம்புகள் போன்ற சிறுகதைகளையும் சிறகுகள் முளைத்து என்னும் சிறிய நாவலையும்… சுட்டிக் காட்டலாம். அவை அக்காலகட்டத்தில் ஆழமான விவாதங்களை உருவாக்கியவை. ஒழுக்க நெறிகளுக்கு அப்பால் பாலுறவுத் தளத்தில் நிகழும் நுட்பமான சுரண்டலை ஆழமாகச் சித்தரித்தவை அவரது ஆக்கங்கள்.

பகை என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம். சிறுவன் சுற்றி இருக்கும் காமத்தை எதிர்கொள்ளும்விதம்.

தற்செயல் என்ற சிறுகதைத் தொகுதியையும் படித்திருக்கிறேன். அதில் படித்தே ஆக வேண்டிய சிறுகதை என்று எனக்கு பட்டது இழை என்ற சிறுகதை மட்டுமே. நொய் நொய் என்று குறை சொல்லிக் கொண்டே இருக்கும் மனைவி மிக இயல்பாக கலவியில் ஈடுபடுகிறாள். இதே கருவை தனபாக்கியத்தோட ரவ நேரம் சிறுகதையிலும் பயன்படுத்தி இருக்கிறார், ஆனால் முற்றிலும் வேறாக இருக்கிறது. மற்றவற்றில் ஊற்றுக்கண்கள் என்ற சிறுகதை வேலைக்குப் போகும் நண்பன் மீது இருக்கும் resentment மாறுவது இரண்டும் ஓரளவு நன்றாக இருந்தது. மகாலட்சுமி சிறுகதையையும் படிக்கலாம். சிறு வயதிலிருந்தே ஆன்மீகம், துறவறத்தில் நாட்டம் என்று மனம் சென்றாலும் காமம் இறக்கவில்லை என்பதைக் காட்டும் ஒரு பெண் சித்திரம். இசைவு என்ற சிறுகதையும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. முறை தவறிய உறவு ஒன்றை விவரிக்கிறது. கடைசி வரி – கணவனுக்கும் தன் அம்மாவுக்கும் உள்ள உறவை மனைவி எதிர்கொள்வது – கதையை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.

ஆபீதின் தற்செயல் சிறுகதையை தன் தளத்தில் பதித்திருக்கிறார்.

நண்பர் சுந்தர்எதிர்பார்ப்புகள்” என்ற சிறுகதையைக் குறிப்பிட்டிருந்தார். அது அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்ல சிறுகதை. அத்தனை பலங்களும் பலவீனங்களும் வெளிப்படுகின்றன. நேர்மையான, போலித்தனமற்ற சிறுகதை, ஆனால் அது காட்டும் மானுட தரிசனம் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. சுந்தரின் வார்த்தைகளில்:

ஒரு வீட்டில் அம்மாவும், பிள்ளையும் குடியிருப்பார்கள். வீட்டிலுள்ள போர்ஷனில் ஒரு கணவன் மனைவி, குழந்தையுடன் குடியிருப்பார்கள். பிள்ளை அந்தப் பெண்மீது மோகம் கொண்டு, அவள் நமக்குப் படிய மாட்டாளா என்ற எதிர்பார்ப்பில், அவள் போர்ஷனுக்குச் சென்று, அவள் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி, விளையாட்டுக் காட்டுவான். இது தினமும் நிகழும். அவள் தனக்கு படிய மாட்டாள் என்று நிச்சயமானதும் அவன் அங்கு செல்வதை நிறுத்திவிடுவான். அவனது அம்மா, “ஏண்டா தினமும் அவ குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவியே. இப்பவெல்லாம் ஏன் குழந்தையைத் தூக்கறதில்லே” என்று கேட்பாள். அதற்கு அவன், “ஆமா, இவ குழந்தைய தூக்கிக் கொஞ்சணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? வேறே வேலைவெட்டி இல்லே எனக்கு?” என்று பதில் சொல்வான். இதுதான் “எதிர்பார்ப்புகள்” சிறுகதை.

சுழல்காற்றும் சருகுகளும் நம்பகத்தன்மை உள்ள நெகிழ வைக்கும் கதை. பிரேம்சந்தை நினைவுபடுத்தியது. மனிதர்களுக்கு பந்தம் என்பது எத்தனை முக்கியம் என்பதை உணர்த்துகிறது. “நீயும் என்னை விட்டு போயிடுவியா” என்று அழும் பாட்டியும், இறந்து போன பாட்டிக்காக காத்திருக்கும் சிறுவனும் ஒரு துளி தப்பினாலும் மிகை உணர்ச்சிக் கதையாக மாறி இருக்கும்…

கிட்டுதல், வன்மம், உளைச்சல், பெண் என்று சொல்லிடிலோ, நாய் வேஷம், அன்பின் வழியது, கழுதையின் வாயில் சிறுகதைகள் சுமாரானவைதான். காணிக்கை சிறுகதை பொன்னகரத்தின் படுசுமாரான நகல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

கோவி. மணிசேகரன்: குற்றாலக் குறிஞ்சி

பல ஆண்டுகளுக்கு முன் தமிழில் சரித்திர நாவல்கள் என்று நாலைந்து பதிவுகளை எழுதினேன். அதில் கோவி. மணிசேகரனைப் பற்றியும் நாலு வரி – அதுவும் குற்றாலக் குறிஞ்சி நாவலைப் பற்றி நாலு வரி எழுதி இருந்தேன். அதைப் படித்த ஜெயமோகன் பூரித்துப் போய்

குற்றாலக் குறிஞ்சியை எல்லாம் அவர் வாசித்திருப்பது மன்னிக்க முடியாதது

என்று சொன்னார். அவர் சொன்னதில் தவறே இல்லை. நானே எழுதிய மாதிரி இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் அந்த அத்தியாயத்தில் படிக்கக் கூடியவை.

பிறகு எதற்காக ஒரு பதிவை விரயம் செய்கிறேன்? நம் தலையெழுத்து, இந்த நாவல் 1992-இல் சாஹித்ய அகடமி விருது பெற்றது. சாஹித்ய அகடமி விருது பெற்ற ஒவ்வொரு நாவலையும் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை. ஆனால் ஒன்று நிச்சயம். விருது பெற்ற நாவலாயிற்றே என்று இந்த நாவலை வேறு மொழிகளில் மொழிபெயர்த்தால் தமிழன் மானம் போகும்.

கோவிக்கு புனைவு என்றால் என்ன என்று தெரியவில்லை என்றேதான் சொல்ல வேண்டும். அவருக்குத் தெரிந்தது அலங்காரத் தமிழ். அவள் கையை ஓங்கினாள், அவன் கன்னம் வீங்கினான் என்ற பாணியில் எழுதுவார். விரிந்து பரந்த வீரர்களின் மார்பு, விம்மித் ததும்பும் அழகிகளின் மார்பு என்று வர்ணித்துத் தள்ளுவார். அதற்கான காலம் மனோகரா திரைப்படத்தோடு மலையேறிவிட்டது என்பதை அவர் உணரவே இல்லை.

இந்த நாவலின் காலம் 1800களின் முற்பகுதி என்று வைத்துக் கொள்ளலாம். நாயகி குறிஞ்சி. தாழ்ந்த ஜாதி, புலைச்சி. ஆனால் சங்கீதத்தை கரைகண்டவள்.  நிறைய உண்மை மனிதர்கள் வருகிறார்கள். தஞ்சையில் “அரசாண்ட” சரபோஜி ராஜா, முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதியார், அபிராமிபட்டர் என்று ஒரு பட்டியல் போடலாம். எல்லாருக்கும் ஒரே வேலைதான். குறிஞ்சியின் பாட்டைக் கேட்டு மெய்மறந்து போவது. கற்பனைப் பாத்திரமான கொள்ளைக்கார ராஜகாந்தியும் அதே போல மெய்மறக்கிறான். குறிஞ்சியை அடையத் துடிக்கும் ஒரு நீண்ட பட்டியல். அவளுடைய பிராமண காதலன், சக பாடகனை அவர்களில் ஒருவன் கொன்றுவிடுகிறான். அப்புறம் அவளும் இறக்க, நல்ல வேளையாக நாவல் முடிந்துவிடுகிறது.

கோவி இசையை முறையாகக் கற்றவர். சித்தூர் சுப்ரமணியப் பிள்ளையின் மாணவர். மதுரை சோமு இவரது சக மாணவர். இதுதான் சாக்கு என்று சுத்த மத்திமம் பிரதிமத்திமம் தைவதம் என்று போட்டுத் தாக்குகிறார்.

எனக்குத் தெரிந்து இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கும் ஒரே ஆள் கோவை ஞானி!

அவர் பாணியிலேயே சொன்னால் கோவிக்கு கிடைக்கவில்லை புனைவெழுத்தின் சாவி; அதனால் அவர் எடுப்பது நமது ஆவி; அவருக்கு விருது கொடுத்தவன் எல்லாம் மகாபாவி!


இன்னும் ஒரு கொடுமையும் உண்டு. கோவி தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்று கணக்கு போடுகிறார்.

அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. அந்த ஒரு காரணம்தான் எனக்கு இதை கொஞ்சமாவது சுவாரசியப்படுத்தியது. உதாரணமாக பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இதே புத்தகத்தை சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வெளியிட்டிருக்கிறார்.


இவருக்கு எப்படி சாஹித்ய அகாடமி விருது? அந்த வருஷம் தேர்வுக் குழுவில் இருந்த அயோக்கியர்கள் யார் யார்? இந்த ஒரு கேள்விதான் மிஞ்சுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

எஸ்விவி

எஸ்விவியின் பலம் அன்றைய மேல் வர்க்க பிராமணக் குடும்பங்களின் இயல்பான சித்தரிப்பு; குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை நயமாக விவரித்தல்; சரளமான நடை. அவரது conservative அணுகுமுறையை மீறி அங்கங்கே தெரியும் சிறு புரட்சிகள். பலவீனம் வணிக எழுத்து என்ற நிலையைத் தாண்டாதது. அன்றிருந்த சுவாரசியம் காலாவதி ஆகிக் கொண்டே போவது.

உல்லாச வேளை நாவலை க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா? பட்டியலில் பரிந்துரைத்திருக்கிறார். 22-23 வயதில் படித்தபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று காலாவதி ஆகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் விக்கி அவரது சம்பத்து புத்தகத்தைப் பரிந்துரைக்கிறது. தேடிப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்வது:

“சம்பத்து” கதை எஸ்.வி.வியின் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. சராசரி ஆண் மனதின் எண்ணவோட்டங்களை சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார் எஸ்.வி.வி. ஜனகம், லலிதா, பக்கத்து வீட்டு ஐயங்கார் பெண் சம்பகா, லலிதாவின் தோழி சாரு என பல தரப்பட்ட பெண் பாத்திரங்களைப் படைத்து சம்பத்துவின் எண்ணவோட்டங்களை மையமாக வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அவரது வேறு சில படைப்புகளைப் பற்றி:

ராஜாமணி சுமாரான வணிக நாவல்தான். ஆனால் சிறப்பான இலக்கியமாக வந்திருக்கக் கூடிய கரு. நாயகனுக்கு மாமா பெண் வசந்தாவிடம் ஈர்ப்பு. தெருவில் உள்ள இன்னொரு பெண்ணுக்கு இவன் மேல் ஈர்ப்பு. வசந்தா ஊருக்குப் போனதும் இவனுக்கும் தெருப் பெண்ணிடம் ஈர்ப்பு உண்டாகிறது. கொஞ்ச நாளில் அந்தப் பெண் வேறொருவனை சைட்டடிக்கிறாள். இப்படி பதின்ம வயதினருக்கு உண்டாகும் சாதாரண ஈர்ப்பு கூட நம்மூர் வணிக நாவல்களில் தெய்வீகக் காதலாகிவிடும். அப்படி இல்லாமல் சகஜமான உணர்ச்சியாக சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் இந்த நாவலின் சிறப்பு. ஆனால் ஜோடிகள் மாறிக் கொண்டே இருப்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

புது மாட்டுப்பெண் நிச்சயமாக அந்த நாளுக்கான குறுநாவல். வீட்டுக்கு வரும் cool மருமகள் அன்பாலும் கிண்டலாலும் எல்லாரையும் வழிக்குக் கொண்டு வருகிறாள். நாவல் வந்த காலத்தில் வெற்றி பெற்றிருக்கும் – அதுவும் விகடன், கல்கி, கலைமகளில் தொடர்கதையாக வந்திருந்தால் பெருவெற்றிதான். நான் ரசித்தது மறைந்துபோன பழக்கங்களைப் பற்றி பேசுவதும், அய்யங்கார் பாஷையும்தான். துரைச்சா என்ற பேரால் யாரையாவது அழைத்துப் பார்த்திருக்கிறீர்களா? பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ‘ப்ரைவேட்’ வைப்பது என்றால் என்ன என்று தெரியுமா? தளிகை, சாத்தமுது போன்ற வார்த்தைகளைக் கேட்டே எத்தனையோ வருஷமாயிற்று.

சபாஷ் பார்வதியும் அதே மாதிரிதான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் பயந்து மனைவியை பொட்டை அதிகாரம் செய்யும் கணவனை மனைவி ஒரு கட்டத்தில் எதிர்த்து வீட்டில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறாள். கை மேல் பலன் குறுநாவலில் தன் கீழ் வேலை செய்பவனுக்கு அவனது நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பார்த்துக் கொள்ள விடுமுறையை மறுக்கும் அதிகாரி அதே நிலை தனக்கு வரும்போது தன் தவறை உணர்கிறான். சரோஜா குறுநாவலில் ஒரு பெண்ணை விரும்பும் இருவர், இயல்பாக பெண் தனக்குப் பிடித்தவனை மணக்கிறாள்.

ராமமூர்த்தி நாவலை அப்போதே நான் ரசிக்கவில்லை

தமிழில் நகைச்சுவை எழுத்து எப்படி பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எஸ்விவியைத் தவற விடக் கூடாது. ஆனால் கறாராகப் பார்த்தால் அவர் தமிழ் வணிக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி பக்கம்

வாசந்தியின் சில புத்தகங்கள்

(மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு)

வாசந்திக்கு இதழியலாளர் என்ற ஒரு முகமும் உண்டு. இந்தியா டுடே பத்திரிகையின் தமிழ்ப் பதிப்புக்கு சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் அருகாமையில் இருந்து பார்த்திருக்கிறார். அந்த நினைவுகளை வைத்து தமிழகத்தின் அரசியல் சூழலை Cutouts, Castes and Cine Stars (2006) என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார். அதைப் படித்ததால்தான் மூலப்பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.

Cutouts, Castes and Cine Stars சராசரி தமிழனுக்கு புதியதாக எதையும் சொல்லிவிடப் போவதில்லை. தினமும் நாளிதழ் படிக்கிறோம், பத்திரிகை பார்க்கிறோம், தொலைக்காட்சியில் செய்திகளை கேட்கிறோம். அவற்றை எல்லாம் ஒருங்கமைதியோடு தொகுத்து எழுதுவதைப் போலத்தான் இந்தப் புத்தகம் இருக்கிறது. ஆனால் மற்ற மாநில இந்தியர்களுக்கு நிச்சயமாக தமிழகத்தின் அரசியல் சூழலைப் புரிய வைக்கும். ஈ.வே.ரா.வின் தாக்கம், காங்கிரஸின் அழிவு, தி.மு.க. எப்படி குடும்பக் கட்சியாக மாறியது, கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற முக்கோணம், வெளிப்படையான ஜாதி அரசியல் எப்படி பா.ம.க.வோடு ஆரம்பிக்கிறது, தலித்கள் எப்படி “இடை ஜாதிகளால்” இன்னும் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை நன்றாக விவரிக்கிறது. இன்று கட்சி சார்பற்ற பொதுப்புத்தி இந்த நிகழ்ச்சிகளை எப்படிப் பார்க்குமோ, அதுதான் இந்தப் புத்தகம். தமிழர்களும் படிக்கலாம், ஆனால் பிற மாநில மனிதர்களுக்கு இன்னும் பயனுடையதாக இருக்கும்.

Vaasanthiஎழுத்தாளர் வாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.

ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.

வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.

மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.

எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.

மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.

சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.

கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.

ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.

யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.

டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.

தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.

தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

ராஜேஷ்குமார்: சுயசரிதை

நான் ராஜேஷ்குமார் புத்தகங்களை அதிகமாகப் படித்ததில்லை. அவரோ ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். நானும் கண்டதையும் படிப்பவன். தமிழ் வணிக எழுத்தில் ஆர்வம் உள்ளவன். குற்றப் பின்னணி நாவல்களை விரும்பிப் படிப்பவன். பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா சௌந்தரராஜன் எல்லாரையும் படித்திருக்கிறேன். அது என்னவோ ராஜேஷ்குமாரைப் படிப்பதில் மட்டும் ஒரு விசித்திரமான மனத்தடை. எப்படியும் எனக்குப் பிடிக்கப் போவதில்லை என்ற ஒரு நினைப்பு. படித்த வெகு சிலவற்றில் எதுவும் மனதில் நின்றதும் இல்லை. என்றாவது ஒரு நாள் ஒரு பத்து நாவல்களைப் படித்துவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், பார்ப்போம்.

ஆனால் அவரது சுயசரிதை – என்னை நான் சந்தித்தேன் – நிச்சயமாக சுவாரசியமாக இருக்கிறது. சாதாரண மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ராஜகோபால் வழக்கமான படிப்பு, அரசு வேலை என்றுதான் முயன்றிருக்கிறார். மிகத் துரதிருஷ்டமான நிகழ்ச்சிகளால் அரசு வேலை இரண்டு முறை தட்டிப் போகிறது. சிறுகதை எழுதிப் பார்க்கிறார். குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து தொழில் செய்கிறார். பத்திரிகைகள் – குமுதம், விக்டன் முதல் படியில், கல்கி, குங்குமம், இதயம், சாவி என்று பல அடுத்த நிலையில் – கொடி கட்டிப் பறந்த காலம். குமுதத்திற்கு 127 கதைகள் அனுப்பி இருக்கிறார், ஒன்று கூட பிரசுரம் ஆகவில்லை. ரா.கி. ரங்கராஜனை நேரில் சந்தித்து ஏன் என்று கேட்டிருக்கிறார். ரங்கராஜன் 127 கதைகளா என்று அதிர்ச்சி அடைகிறார். ஒரு கதை பிரசுரம் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பேர் கிடைக்கிறது. மாத நாவல் எழுதுகிறார். தொடர்கதைகள். எஸ்.ஏ.பி., சாவி, எஸ். பாலசுப்ரமணியன் மீது பெரிய மரியாதை தெரிகிறது. பாக்கெட் நாவல் அசோகனோடு தொடர்பு. அசோகன் இவருக்கென்றே தனியாக க்ரைம் நாவல் என்ற மாத இதழை ஆரம்பிக்கிறார். தமிழின் முதன்மை வணிக எழுத்தாளர்களில் ஒன்றாக உருவெடுக்கிறார்.

ராஜேஷ்குமாரின் உழைப்பு வியக்க வைக்கிறது. மாத நாவல்தானே, 60-70 பக்கம்தான் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு லட்சம் பக்கங்களாவது எழுதி இருக்க வேண்டும். பத்திரிகை உலகில் நுழைய, அங்கீகாரம் கிடைக்க, பெரிய நட்சத்திரம் ஆக உருவாக அவரது விடாமுயற்சியும், பத்திரிகைகளுக்கு என்ன வேண்டும், வாசகர்கள் எதை விரும்புவார்கள் என்று மீண்டும் மீண்டும் கணித்து அதை சரியாகத் தந்ததும்தான் காரணங்கள். எனக்குப் பிடிக்கப் போவதில்லை என்று நான் நினைப்பது பத்து நாவல் படித்துப் பார்த்த பிறகு ஊர்ஜிதம் ஆகலாம், ஆனால் அதில் அவருக்கு எந்தக் குறைவும் இல்லை. அது என் மனத்தடையாக இருக்கலாம், அவர் எனக்கான எழுத்தாளராக இல்லாமல் போய்விடலாம். ஆனால் அதெல்லாம் அவரது ஆகிருதியை எந்த விதத்திலும் குறைத்துவிடப் போவதில்லை.

யாரையும் குறையே சொல்லவில்லை என்று பார்த்தேன். கல்கி பத்திரிகைக்குள் நுழையவே முடியவில்லை போலிருக்கிறது. திரை உலகில் நிறைய ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை. இது 24 காரட் துரோகம் என்ற புத்தகமாக வந்திருக்கிறது.

நான் முகம் பார்த்த கண்ணாடிகள் என்ற புத்தகத்தில் அவர் சந்தித்த பெரும் தலைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். காமராஜரைப் பார்க்க மாணவர் அணி என்று கூட்டம் சேர்த்து இவரையும் அழைத்துப் போனார்களாம். காமராஜர் காலேஜை கட் அடித்துவிட்டு வந்தீர்களா என்று கண்டித்து திருப்பி அனுப்பிவிட்டாராம். அதை விட சுவாரசியம், 1960களில் ஆளுக்கு நூறு ரூபாய் தருகிறேன் என்று இவரை அழைத்துப் போயிருக்கிறார்கள். குறைந்தது 5000 ரூபாயாவது தன் கெத்தை காட்ட செலவழித்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. ஏது இத்தனை பணம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: ரெங்கசுப்ரமணி விமர்சனம்

ம.ந. ராமசாமி, யன்மே மாதா

நாலைந்து நாள் முன்னால் ஜெயமோகன் தளத்தில் ம.ந. ராமசாமி என்ற எழுத்தாளரைப் பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்தேன். மூத்த எழுத்தாளர், ஆனால் நான் கேள்விப்பட்டதே இல்லை.

ம.ந. ராமசாமி நாற்பது ஆண்டுகளுக்கு முன் யன்மே மாதா என்று ஒரு சிறுகதையை எழுதி இருக்கிறார், அது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. யன்மே மாதா என்பது அம்மாவுக்கு சொல்லப்படும் சிரார்த்த மந்திரம்.

யன்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம…

என்று இருக்கிறதாம். அதாவது என் அம்மா “ஒழுக்கம்” தவறி என்னைப் பெற்றிருந்தாலும் சரி, என் உயிரியல் ரீதியான அப்பா யாராக இருந்தாலும் சரி, என் அம்மாவை மணந்து கொண்டவர்தான் என் தந்தை. அவருக்கு இந்த பிண்டம் போய்ச் சேரட்டும் என்று பொருளாம். ஜெயமோகன் என் அம்மாவின் கணவர், என் அம்மாவோடு உறவு கொண்டவர்கள் அனைவருமே என் தந்தையர், அவர்கள் அனைவருக்குமே இந்தப் பிண்டம் போய்ச் சேரட்டும் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

என் அப்பாவுக்கு ஈமக்கடன்கள் செய்தபோது அங்கும் இங்கும் சில வார்த்தைகள் புரிந்தன. புரிந்த வரையில் அப்பா மற்றும் மூதாதையரே, நீங்கள் அனைவரும் நான் அளிக்கும் பிண்டத்தில் திருப்தி அடைந்து பிதுர்லோகம் போங்கள், இங்கே பேயாக சுற்றாதீர்கள் என்றுதான் இருந்தது. மூதாதையர் வாழ்பவர்களை பேயாக ஆட்டி வைக்கக் கூடாது என்ற பயம்தான் தெரிந்தது. ஏதோ தொன்மையான சடங்கு, பேய் பிசாசு என்ற பயம் அதிகமாக இருந்த காலத்தில் எழுதப்பட்டிருக்கும், அப்பாவிடம் என்ன பயம், அவர் நம்முடனே இருந்தால் நல்லதுதானே, அவரை இருக்க வேண்டாம், போ போ என்று பிரார்த்திக்கிறோமே என்று நினைத்துக் கொண்டேன். சிரார்த்த மந்திரங்கள் எல்லாம் இப்படித்தான் தொன்மையான அச்சங்களை பிரார்த்தனையாக வெளிப்படுத்தும் போலிருக்கிறது என்று தோன்றியது.

ஆனால் இப்படி ஒரு பிரார்த்தனையைப் படித்ததும் மனம் நிறைந்தது. "கற்பு நெறி", பாலியல் ஒழுக்கம் ஆகியவற்றில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. நான் வளர்ந்த காலகட்டத்தால் அவை புரிகின்றன, அவற்றை மீறுவது எனக்கு கஷ்டம்தான். ஆனால் தர்க்கரீதியாக யோசித்தால் அம்மா, அப்பா, குடும்பம், உறவுகள் எல்லாம் பாலியல் ஒழுக்கத்தை விட பல மடங்கு முக்கியம். அம்மா கொலையே செய்திருந்தாலும் பிள்ளைகளுக்கு அம்மாவோடு உறவு முறியக் கூடாது என்றே கருதுகிறேன், அப்படி இருக்கும்போது பாலியல் ஒழுக்கம் எல்லாம் ஜுஜுபி.  உயிரியல் ரீதியான தந்தையை விட பிள்ளைகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்தான் முக்கியம், அவர்தான் உண்மையான தந்தை. இத்தனை நெகிழ்வான அணுகுமுறை ஹிந்து மதத்தில் காலம் காலமாக இருப்பது பெரிய மகிழ்ச்சி!

நம் தொன்மங்களில் இப்படி நெகிழ்வுத்தன்மையை காட்டும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. யுதிஷ்டிரனுக்கும் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நகுல சகதேவர்களுக்கும் அப்பா பாண்டுதான். சத்யவதியின் அப்பா மீனவர் தலைவர் தசராஜன்தான். திருதராஷ்டிரனும் பாண்டுவும் விசித்ரவீரயனின் பிள்ளைகள்தான். கண்ணன் வசுதேவரின் மகன் மட்டுமல்ல, கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனுக்கும் குமரன்தான். ஆனால் கர்ணனைப் போன்ற அவலச்சுவை நிகழ்ச்சிகளும் இருக்கின்றனதான்.

ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு – சரியோ தவறோ – உயிரியல் ரீதியான தந்தையும் என் குடும்பம்தான், அவருக்கு பிண்டம் போய்ச் சேரட்டும் என்பதும் அருமை, கவித்துவமானது. குடும்பம் விரிவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! நந்தகோபர், வசுதேவர் இருவருமே அப்பா என்றால் யாருக்கு என்ன வருத்தம்?

நான் வடமொழி அறியேன், சிரார்த்த மந்திரத்தை சரியாக எழுதி இருக்கிறேனா என்பது நிச்சயமில்லை. குத்துமதிப்பாகத்தான் மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறேன். யாராவது வடமொழி தெரிந்தவர்கல் சரியாக மொழிபெயர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

யன்மே மாதா சிறுகதையை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. ம.ந. ராமசாமியின் சிறுகதையில் இந்த மந்திரம் என் தாயை இழிவு செய்கிறது, சிரார்த்தத்தில் இதை சொல்ல மாட்டேன் என்று போகிறதாம். அவரது அணுகுமுறையும் சரிதான். ஆனால் என் கண்ணில் இந்த மந்திரம் இன்னும் பெரிய சரி!

ராமசாமியின் சிறுகதை ஒன்று கிடைத்தது. புத்திசாலித்தனமான சிறுகதை. நாயகன் இளம் எழுத்தாளர். ஒரு சிறுவன் எந்த வரியைச் சொன்னாலும் அது எந்த நாவலில்/சிறுகதையில் இடம் பெறுகிறது என்று துல்லியமாகச் சொல்கிறான். ஏதோ அமானுஷ்ய சக்தியோ என்று எல்லாரும் திகைக்கிறார்கள். நாயகனின் சிறுகதையிலிருந்து ஒரு வரியை எடுத்துக் கொடுக்கிறார்கள். அவன் இது நதானியேல் ஹாதோர்ன் எழுதியது என்கிறான்!

இந்த மாதிரி சிறுகதை எழுதத்தான் ஆசைப்படுகிறேன். 🙂 இன்னும் ஒரு விசித்திரம் – இதே கரு உள்ள கதையை ஆங்கிலத்தில் எங்கேயோ படித்த ஒரு நினைவு. அதாவது இந்தக் கதையே காப்பி அடித்ததாக இருக்கலாம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், ஹிந்து மதம்

தொடர்புடைய சுட்டிகள்:

எழுத்தாளர் ராஜாஜி

தலைவர் ராஜாஜியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவர். காந்தியின் சம்பந்தி. மகாபுத்திசாலி என்று பேர் வாங்கியவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரல், உள்துறை மந்திரி, சென்னை மாகாண முதல்வர் என்று பல பதவிகள் வகித்தவர். காந்தியின் அணுக்கர் என்றாலும் காந்திக்கு எதிரான அரசியல் நிலையை எடுக்கத் தயங்கியவரில்லை. அரசியல் எழுத்தும் பேச்சும் ஆகியவை அவரது வாழ்வில் நிறைய உண்டு என்பதை சொல்லவே தேவை இல்லை.

அவர் நிறைய எழுதியும் இருக்கிறார். தனக்கு தெரிந்தவற்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்பு – அதுவும் விடுதலைக்கு முன் நிறையவே – இருந்திருக்கிறது. விசாலமான படிப்பும் இருந்திருக்கிறது. இதிகாசங்கள் மற்றும் உபநிஷதங்களை தமிழில் கொண்டுவருதல், அறிவியல், தத்துவம் என்று பலவற்றையும் அறிமுகப்படுத்தி எழுதி இருக்கிறார். (அறிமுகக் கட்டுரைகள் பலவும் இன்று காலாவதி ஆகிவிட்டன.) பல வித விளக்கங்கள், புனைவுகள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகை நடத்துதல் என்று பலவும் முயற்சித்திருக்கிறார். கலைச்சொற்களை உருவாக்க பெரிதும் முயற்சித்திருக்கிறார்.

1922-இல் முதல் முறை சிறை சென்று மீண்ட பிறகு தன் முதல் புத்தகத்தை எழுதி இருக்கிறார் – சிறையில் தவம்.

கல்கி பத்திரிகை ஆரம்பித்தது அவருக்கு எழுத வசதியாக இருந்திருக்கும். அவரது பல புத்தகங்களும் கல்கியில் தொடராக வந்தவைதான். பல புத்தகங்கள் இன்னொரு சீடரான சின்ன அண்ணாமலை நடத்திய தமிழ்ப்பண்ணை பதிப்பகம் மூலம் வெளி வந்திருக்கின்றன.

வியாசர் விருந்து (மகாபாரதம்), சக்ரவர்த்தி திருமகன் (ராமாயணம்) இரண்டையுமே தமிழுக்கு அவரது முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறேன். இவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இரண்டும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, தலைவராக, முதல்வராக, அமைச்சராக அவரது பங்களிப்பு நாளை மறக்கப்படலாம். ஆனால் இந்தியாவுக்கு – ஏன் உலகத்துக்கே – அவரது மறக்க முடியாத கொடை இந்த இரண்டு புத்தகங்கள்தான். நான் என்ன, அவருமே அப்படித்தான் கருதி இருக்கிறார். அவரது வார்த்தைகளிலேயே:

நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றிலெல்லாம் வியாசர் விருந்தும் சக்ரவர்த்தி திருமகனும் எழுதி முடித்ததுதான் மேலான பணி என்பது என்னுடைய கருத்து.

இரண்டுமே கல்கி பத்திரிகையில் தொடராக வந்தன. பத்து பனிரண்டு வயதில் முதன்முதலாக வியாசர் விருந்தைப் படித்தது எனக்கு ஒரு பெரிய கண்திறப்பு. அதற்குப் பிறகு பல முறை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். எளிமையான ஆரம்ப கட்ட அறிமுகங்கள்தான், ஆனாலும் என் கண்ணில் மிக முக்கியமானவை.

அவர் இவற்றை எழுதுவதற்கு முக்கியக் காரணம் ஈ.வெ.ரா.தான் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு. என்னதான் நட்பு, பந்தம் என்றாலும் ஈ.வெ.ரா.வின் நயமும் நாகரீகமும் இல்லாத shrill பேச்சு முறை அவருக்கு எரிச்சல் மூட்டி இருக்க வேண்டும். நீ தமிழர்களை ராமாயணத்தை எரிக்கச் சொல்கிறாயா, நான் அவர்களை ராமாயணத்தை படிக்க வைக்கிறேன் என்று அவர் மனதில் தோன்றி இருக்கும். தனக்கு பணம் வராவிட்டால் பரவாயில்லை, குறைந்த விலையில் இவை இரண்டும் பதிக்கப்பட வேண்டும் என்று வானதி பதிப்பகம் திருநாவுக்கரசிடம் சொன்னாராம். இருவரில் யார் வென்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

1958-இல் சக்ரவர்த்தி திருமகனுக்காக அவருக்கு சாஹித்ய அகடமி விருது தரப்பட்டது. அது ஒரு மோசமான முன்னுதாரணம். அவர் ராமாயணத்தை மறுவாசிப்போ அல்லது மறுபடைப்போ (transcreation) செய்யவில்லை. வால்மீகிக்கும் கம்பனுக்கும் போக வேண்டிய விருதை அவர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவரை பின்னாளில் சாஹித்ய அகடமி ஃபெல்லோவாகத் தேர்ந்தெடுத்தது என் கண்ணில் சரியே. என்ன, க.நா.சு.வும், தி.ஜா.வும் அவருக்கு முன்னால் சாஹித்ய அகடமி ஃபெல்லோக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

தத்துவங்களை தமிழில் கொண்டு வர நிறைய முயற்சி செய்திருக்கிறார். உபநிஷதப் பலகணி, கண்ணன் காட்டிய வழி போன்றவை மிகச் சுருக்கமாக முறையே உபநிஷதங்களின், பகவத்கீதையின் சாரத்தை சொல்லும் முயற்சி. என் கண்ணில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அவை எழுதப்பட்ட காலத்தில் முக்கியமானவையாக இருந்திருக்கும். சிறையில் கூட வகுப்புகள் நடத்துவாராம், அவற்றைத்தான் எழுத்து வடிவமாக்கி இருப்பார் என்று நினைக்கிறேன். என்ன, அச்சமில்லை, பஜகோவிந்தம், ராமகிருஷ்ண உபநிஷதம் (1950, கல்கி தொடர்) போன்றவை எனக்கான புத்தகங்கள் அல்ல.

ஸோக்ரதர் (சாக்ரடீஸ் வாதங்களின் மொழிபெயர்ப்பு) குறிப்பிட வேண்டிய இன்னொரு புத்தகம்.

அவர் அறிவியலை எளிமைப்படுத்தி எழுதிய புத்தகங்கள் இன்று காலாவதி ஆகிவிட்டனதான். ஆனால் திண்ணை ரசாயனம் (1946-இல் புத்தகம், அதற்கு முன் கல்கி தொடர்) போன்ற புத்தகங்களை எத்தனை பாராட்டினாலும் தகும். தமிழில் வேதியியலின் முக்கிய கருத்துக்களை – அணு vs மூலக்கூறு (molecule – அவர் பயன்படுத்தும் தமிழ் வார்த்தை “புணர்பொருள்”), கரிம vs கனிம வேதியியல் (organic, inorganic chemistry – organic chemistry-க்கு மிக அழகான தமிழ் வார்த்தையை உருவாக்கி இருக்கிறார் – யாக்கை ரசாயனம்!) – மிக அருமையாக, ஆங்கில, மணிப்பிரவாள, தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி விளக்கி இருக்கிறார். அனலம் (ஆக்சிஜன்), வளிரம் (நைட்ரஜன்), நீரகம் (ஹைட்ரஜன்) என்று பல வார்த்தைகளை உருவாக்கி இருக்கிறார். யாக்கை ரசாயனம்/வேதியியலாவது வழக்கில் வந்திருக்கலாம். தாவரங்களின் இல்லறம் என்ற புத்தகத்தையும் குறிப்பிடலாம்.

அவரது அறிமுகக் கட்டுரைகள் பல இன்று காலாவதி ஆகிவிட்டன. ராஜாஜி கட்டுரைகள் என்ற தொகுப்பை இன்று தவிர்த்துவிடலாம்.

விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார். கல்கி உதவி ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. மதுவிலக்கு பிரசாரத்துக்காகவே எழுதி இருக்கிறார். கல்கி மதுவிலக்கு பிரச்சாரத்துக்கு என்று அரைத்த மாவையே அரைக்க வேண்டி இருக்கிறதே என்று அலுத்துக் கொண்டாராம். பத்திரிகை பத்து மாதம் நடந்ததாம், அப்புறம் ராஜாஜி சிறை சென்றார் என்று நினைவு, கல்கி இதுதான் சான்ஸ் என்று பத்திரிகையை இழுத்து மூடிவிட்டாராம்.

பல சிறுகதைகளும் உண்டு. விடுதலைக்கு முன் நிறையவே எழுதி இருக்கிறார். மணிக்கொடியில் கூட அவரது சிறுகதைகள் வந்திருக்கின்றனவாம். நாவல் எதுவும் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை.

ஒரு புனவெழுத்தாளராக அவருடைய பலம் கதைகளில் தெரியும் நம்பகத்தன்மை. அவரைத்தான் யதார்த்தவாத எழுத்தின், ஷண்முகசுந்தரம் போன்றவர்களின் முன்னோடியாகக் கருத வேண்டும். ஆனால் கதைகளில் எப்போதும் ஒரு வாத்தியார் மனப்பான்மை தெரியும். நீதிபோதனை இல்லாமல் அவரால் எழுதவே முடியவில்லை. அனேகமாக ஒவ்வொரு கதையையும் நல்லுபதேசம் செய்வதற்காகவே எழுதி இருக்கிறார். பொதுவாக நயம் குறைவு. அதனால்தான் அவர் முன்னோடி எழுத்தாளர், முன்னணி எழுத்தாளர் இல்லை.

தேவானை, திக்கற்ற பார்வதி போன்ற கொஞ்சம் நீளமான சிறுகதைகளில் அவரது பலம் நன்றாகத் தெரிகிறது. எந்த விதமான மிகை உணர்ச்சியும் இல்லாமல் கள் ஒரு விவசாய/நெசவுக் குடும்பத்தை எப்படி அழிக்கிறது என்பதை எழுதி இருக்கிறார்.

தேவானையில் நெசவுத் தொழில் நசித்துப் போவதால் நகரத்துக்கு செல்லும் அண்ணன்; அவனைத் தொடரும் குடும்பம்; வேலையில் சேரும் தங்கை தேவானை. அங்கே மேஸ்திரி மூலம் குழந்தை. பிறகு பிச்சை எடுக்கும் நிலை. இந்தக் கதையை உயர்த்துவது தேவானை ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்த குடும்பத்தை சேர்ந்த ராமநாதையர் அவளை கண்டுகொண்டு அவள் எங்கே என்று மீண்டும் மீண்டும் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் தேடும் சித்திரம்.

தி. பார்வதியின் முதல் வரி:

கறுப்பனை வேறே வைத்தார்கள்.

பதின்ம வயதில் வேறே வைத்தார்கள் என்றால் தனிக்குடித்தனம் என்று புரிந்து கொண்ட கணத்தில் இது அழகான சொற்பிரயோகம் என்று நினைத்தது நன்றாக நினைவிருக்கிறது.

குடியானவக் குடும்பத்து கறுப்பன் கள்ளிற்கு அடிமையாகி, கடன் வாங்கி, கடன் கொடுத்தவன் கறுப்பனின் மனைவி பார்வதி தொடர்பு வைத்துக் கொண்டு, கறுப்பன் அவனை வெட்ட, அவன் சிறை செல்ல, சோரம் போனவள் என்று குடும்பத்தார் ஒதுக்க, பார்வதி தற்கொலை செய்து கொள்கிறாள். இப்படி சுருக்கமாக எழுதினால் கதையின் பயங்கரம் விளங்கவே விளங்காது. முழுவதும் படிக்கத்தான் வேண்டும். அதிலும் வழக்கு காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.

திக்கற்ற பார்வதியை ஜெயமோகன் சிறந்த வணிக நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். ராஜாஜியின் மறைவுக்குப் பின் (1974) ஸ்ரீகாந்த், லட்சுமி நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது.

அன்னையும் பிதாவும், முகுந்தன், ஜகதீச சாஸ்திரிகள் கனவு, அறியாக் குழந்தை ஆகிய சிறுகதைகள் தீண்டாமையின் கொடுமையைப் பற்றி. இவற்றில் அறியாக்குழந்தை 4 வயது சிறுவனுக்கு தீண்டாமை புரியவில்லை என்பதை அழகாகக் காட்டுகிறது. முகுந்தனும் நல்ல சிறுகதை. ஜாதி ஆசாரம் பார்த்த தன் தாயே பறையர் ஜாதியில் மீண்டும் மறுபிறவி எடுத்திருப்பதாக உணரும் முகுந்தன். அன்னையும் பிதாவும் சிறுகதையும் நன்றாக எழுதப்பட்டது. தான் “பறையன்” என்பதை மறைக்கும் அர்த்தநாரி. இவை எல்லாமே படிக்கக் கூடிய சிறுகதைகள்.

பட்டாசுக்கட்டு நல்ல முடிச்சு உள்ளது. திருடும்போது தன் மகனுக்காக பட்டாசையும் சேர்த்து திருடும் அப்பன்.

தீபாவளியின் தேவதரிசனம் சுமாரான கதைதான். ஆனால் ராமனும் கண்ணனும் யுதிஷ்டிரனும் கையால் நூற்ற கதர்தானே கட்டி இருப்பார்கள் என்று கேட்பது நயமாக இருந்தது.

மதுவிலக்கை முன்னிறுத்தும் சிறுகதைகள் யாருக்காக எழுதப்பட்டவை என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. அதை தேவானையும் திக்கற்ற பார்வதியும் கறுப்பனும் படித்திருக்க மாட்டார்கள், மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜகதீச சாஸ்திரியும் முகுந்தனும் அர்த்தநாரியும் படித்திருக்கலாம். அவர்கள் படித்து என்ன பயன்?

புதுமைப்பித்தன் ரவா உப்புமா, போண்டா சாம்பார், ராஜாஜி சிறுகதைகள் ஆகியவற்ற தவிர்க்காவிட்டால் நோய்தான், பத்தியமாக இருக்க வேண்டும் என்று நக்கலடிப்பாராம். ஆனால் அவரே ராஜாஜியின் கதைகள் பிரச்சாரக் கதைகள்தான், இருந்தாலும் ராஜாஜி அவற்றை நயம்பட எழுதி இருக்கிறார் என்றும் சொன்னாராம்.

சபேசன் காப்பி அபூர்வமாக உபதேசம் இல்லாத ஒரு கதை. காப்பி நன்றாக விற்பதும், திடீரென்று மார்க்கெட் சரிவதும். வணிக எழுத்துதான், ஆனால் அழகாக இருக்கிறது. கூனி சுந்தரி “மரத்தை ம்றைத்தது மாமத யானை” என்ற வேதாந்தக் கருத்தை விவரிக்கிறது.

அவருடைய அரசியல் உரைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டிருக்கின்றன. Indian Communists போன்றவை இன்று சுவாரசியமாக இல்லை.

குறை ஒன்றும் இல்லை அவரது பிரபலமான சாஹித்யம். அதைத் தவிர வேறு ஏதாவது சாஹித்யத்தை எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.

ராஜாஜி அசோகமித்ரனோ ஜெயமோகனோ இல்லைதான், ஆனாலும் அவரும் இலக்கியவாதியே. வியாசர் விருந்தும் சக்ரவர்த்தி திருமகனும் அவாது புனைவுகளை மங்கவைத்துவிட்டன, அவரது சிறுகதைகளைத் தொகுத்துப் போடலாம். (60 சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம்.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எழுத்தாளர் ராஜாஜி பற்றி விகடனில்