கி.ரா.வுக்கு எழுபது வயதில், 1991-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது. (அப்படி என்றால் இப்போது அவருக்கு கிட்டத்தட்ட தொண்ணூறு வயதா! சீக்கிரம் பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஏதாவது கொடுங்கப்பா!) அப்போது அவர் விகடனுக்கு அளித்த பேட்டி. நன்றி, விகடன்!
ரசிகமணி டி.கே.சி.யின் கடைசி காலத்து சீடரான கி.ரா.வின் முழுப் பெயர் ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதுவை பல்கலைக்கழகம் நாட்டுப் புறக்கதைகளைத் தொகுத்துக் கொடுக்கச் சொல்லி அழைக்க, அதற்காகப் புதுவை வந்தவர் அப்படியே தங்கிவிட்டார். 70 வயதிலும், தனது 60 வயது மனைவி கணவதி அம்மாளுடன் புதுவை நேரு வீதியில் கலகலப்பான மூடில் ஷாப்பிங் வருவார் கி.ரா.!
முந்தா நாள் (18.12.91) ராத்திரி ஏழரைக்கு டி.வி. தமிழ் நியூஸ்லே எனக்குச் சாகித்ய அகாடமி பரிசு கிடைச்சிருக்குன்னு சொன்னவுடனே, பெரிய குதூகலம் ஏதும் இல்லே. மாறா, அவ்ளோ தூரம் டெல்லிக்குப் போய் பரிசை வாங்கணுமேங்கிற மலைப்புதான் ஏற்பட்டுச்சு! ஏன்னா, பயணம்னாலே எனக்கு ஒரு பயம், தயக்கம், அலுப்பு, சலிப்பு!
இந்தப் பரிசு, விகடனில் நான் எழுதின கோபல்லபுரத்து மக்களுக்காகக் கிடைச்சதுலே எனக்குத் திருப்திதான் என்றாலும், 1976-லே சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட என்னோட நாவலான கோபல்ல கிராமத்துக்கே இது கெடைச்சிருக்கணும்.
ஆனா, இப்போ கிடைச்சதிலே ஒரு சந்தோஷம் என்னன்னா, அப்போ சாகித்ய அகாடமி பரிசுத் தொகை 5,000 ரூபாய்; இப்போ 25,000 ரூபாய்ங்கறதுதான்!
ஆந்திராவிலிருந்து இருநூறு வருஷங்களுக்கு முன்னாலே எங்களோட கரிசல் பாலைவனத்துலே தங்கி, அதை ஊராக்கிய கம்மா நாயுடு பரம்பரையினரைப் பத்தின இந்த நாவல்ல, அந்த மக்களின் பிரச்னைகள், வாழ்க்கை முறைகளைச் சொன்னாலும், எனக்கும் முந்தி இப்படிக் கரிசல் சொன்னவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமிதான்.
அழகிரிசாமி கரிசல் இலக்கியம் தொடங்கினார். ‘இதோ, இதுதான் கரிசல் இலக்கியம்’ என அதற்கு ஒரு முழுமை கொடுத்தவன் நான். மேலும், அழகிரிசாமி கரிசல் மட்டும் சொல்லாமல், எல்லாவற்றையும் எழுதினார். ஆனால், நானோ அதை மட்டுமே சொன்னேன்; சொல்கிறேன்; சொல்வேன்!
கணையாழி காலம்கிற மாதிரி அப்போ சரஸ்வதி (இதழ்) காலம். விஜயபாஸ்கரன் அதோட ஆசிரியர். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமியெல்லாம் அதிலேயிருந்துதான் பொறந் தாங்க. நானும் அப்போ கம்யூனிஸ்ட்டா? அதால, ஜெயகாந்தன் மூலமா ‘சரஸ்வதி’க்கு நான் அறிமுகம் ஆனேன். அதுலே எழுதத் தொடங்கினேன். நானும் அங்கேதான் பொறந்தேன். முன்னே, 1971-ல் தமிழக அரசின் ஆயிரம் ரூபாய் பரிசு எனக்குக் கிடைச்சுது. அதற்கு அப்புறமும் தமிழக அரசோட மற்ற பரிசுகளும் கிடைச்சிருக்கு.
ஆனா, இப்போ – அப்போன்னு எப்பவுமே, எந்தக் காலத்திலுமே எனக்கு இலக்கிய தாகம், லட்சியம் என்கிறதெல்லாம் கொஞ்சமும் கிடை யாது. பார்க்கிறேன்; கேட்கிறேன்; சிந்திக்கிறேன்; எழுதறேன். அவ்ளோதான்! அப்படி என் மக்களைப் பற்றி எழுத ஆசைப்பட்டேன்; எழுதுகிறேன். அவை பிரசுரமாகின்றன. அவ்ளோதான்! இதற்குப் பணமும் கிடைக்கிறதே, அப்புறம் என்ன!
– மகிழ்ச்சியாய்க் கூறிய ராஜநாராயணன், தொடர்ந்தார்…
பணத்துக்காகச் சும்மாவேனும் எழுதிக் குவிப்பது, கொட்டுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. நிதானமா எழுதணும்; அதனால அது சிறப்பா இருக்கணும்னு விரும்பறேன்.
முதல்ல நிறைய நாட்டுப்புறக் கதைகளைத் திரட்டி, சேகரிச்சுப் பின்னால எழுதப்போறேன். அதுலயே இனிமே முழுசா கவனம் பண்ணணும்னு நெனச்சிட்டிருக்கேன். இந்த நிதானத்துக்குக் காரணம் சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையிலே ஏராள ஈடுபாடு; அதுதான் பாட்டு கத்துக்கிட்டேன்; தொண்டையிலே கட்டி வந்து நின்னுபோச்சு. பின்னாலே வயலின் கத்துக்கப் போனேன்; அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை!
சின்ன வயசிலே இடைசெவலில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் காருகுறிச்சி அருணாசலம் மாப்பிளெ ஆனார். அவர் நாதஸ்வர வித்வான் என்கிறதைவிட, ரொம்பவும் சிறந்த பாடகர். மாமனார் வீட்டுக்கு வந்து அங்கே சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு நேரே எங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து பாட ஆரம்பித்து விடுவார். நான் அவரோட பாட்டின் பரம ரசிகன்.
எனக்குள் ஒரு வேடிக்கை உண்டு. ஒரு தச்சு ஆசாரி அழகா நாற்காலி செஞ்சா, அதைச் செய்யணும்னு எனக்கும் தோணும். சவத்துக்கு அடிக்கிற மோளத்திலே லயிச்சு, அப்படி வாசிக்க நினைப்பேன். எட்டாவது வரை ஸ்கூலுக்குப் போனேன்; ஆனா படிக்கல; ஸ்கூல்ல எதுவுமே படிக்கல. நான் படிச்சதெல்லாம் வெளியிலே இந்தப் பரந்த உலகத்திலேதான். எல்லாத்துக்கும் ஆசைப்பட்டேன்; எல்லாத்திலேயும் லயிச்சேன்; கடைசியிலே எதுவுமே நிக்கலே. அதான் எழுத ஆரம்பிச்சுட்டேன்!
என்று குற்றால அருவி போலக் கலகலவென பொழிகிறார் கி.ரா.