சிறந்த (20) சிறுவர் புத்தகங்கள்

பிபிசி சமீபத்தில் சிறந்த சிறுவர் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க பலரையும் கேட்டு ஒரு பட்டியலைத் தொகுத்திருக்கிறது. டாப் நூறு புத்தகங்கள், அவற்றிலிருந்து ஒரு சிறிய பட்டியல் – டாப் 20 புத்தகங்கள்.

நான் மனதள்வில் சிறுவன்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. சிறுவர் புத்தகங்களை இன்னும் புரட்டியாவது பார்க்கிறேன். என் பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போது அவர்கள் படிக்கும் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்தப் பட்டியலில் உள்ள Where the Wild Things Are, Goodnight Moon போன்றவை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானவை. என் பெண்கள் அவற்றை ரசிப்பதை நானும் ரசித்திருக்கிறேன். அதனால்தான் இந்த மாதிரி பட்டியல்கள் என்னைக் கவர்கின்றன. இதில் உள்ள க்ளாசிக் என்று சொல்லக் கூடியவற்றை அனேகமாகப் படித்திருக்கிறேன்!

இவற்றில் நான் அனைவருக்கும் பரிந்துரைப்பவை; Alice’s Adventures in Wonderland, Little Prince, Hobbit, Matilda, Fairy Tales (Hans Christian Andersen), Harry Potter and the Philosopher’s Stone, Howl’s Moving Castle, Watership Down, Grimm’s Fairy Tales, BFG, Lord of the Rings, Panchatantra, Treasure Island, Wind in the Willows, One Thousand and One Nights, Haroun and the Sea of Stories.

இந்தப் பட்டியல்களில் இல்லாத மிகச் சிறந்த புத்தகங்கள் – Just So Stories, Jungle Book

வசதிக்காக டாப் 20 புத்தகங்ளின் பட்டியல் கீழே:

  1. Where the Wild Things Are (words and illustrations by Maurice Sendak, 1963)
  2. Alice’s Adventures in Wonderland (words by Lewis Carroll; illustrations by John Tenniel, 1865)
  3. Pippi Longstocking (words by Astrid Lindgren; illustrations by Ingrid Nyman, 1945)
  4. Little Prince (words and illustrations by Antoine Saint-Exupéry, 1943)
  5. Hobbit (words and illustrations by J.R.R. Tolkien, 1937)
  6. Northern Lights (Philip Pullman, 1995)
  7. The Lion, the Witch and the Wardrobe (words by C.S. Lewis; illustrations by Pauline Baynes, 1950)
  8. Winnie-the-Pooh (words by A.A. Milne; illustrations by E.H. Shepard, 1926)
  9. Charlotte’s Web (words by E.B. White; Illustrations by Garth Williams, 1952)
  10. Matilda (words by Roald Dahl; illustrations by Quentin Blake, 1988)
  11. Anne of Green Gables (L.M. Montgomery, 1908)
  12. Fairy Tales (Hans Christian Andersen, 1827)
  13. Harry Potter and the Philosopher’s Stone (J.K. Rowling, 1997)
  14. The Very Hungry Caterpillar (Eric Carle, 1969)
  15. The Dark is Rising (Susan Cooper, 1973)
  16. Arrival (Shaun Tan, 2006)
  17. Little Women (Louisa May Alcott, 1869)
  18. Charlie and the Chocolate Factory (Roald Dahl, 1964)
  19. Heidi (Johanna Spyri, 1880)
  20. Goodnight Moon (words by Margaret Wise Brown; illustrations by Clement Hurd, 1947)

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தொடர்புடைய சுட்டிகள்: டாப் 100 சிறுவர் புத்தகங்கள், டாப் 20 சிறுவர் புத்தகங்கள்

கல்கியின் “அலை ஓசை”

நண்பர் சுந்தரராஜன் அலை ஓசை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டிருந்தார். அதனால் மீள்பதித்திருக்கிறேன். மூலப்பதிவு இங்கே.


கல்கியின் அலை ஓசை நாவல் உயர்ந்த இலக்கியம் இல்லை. திடுக்கிடும் சம்பவங்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சி வைக்க வேண்டிய கட்டாயம், நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள், ஸ்டீரியோடைப் காரக்டர்கள் என்று எல்லா விதமான பலவீனங்களும் மலிந்து காணப்படுகின்றன. கதாநாயகி சீதா கல்கத்தாவில் மயங்கி விழுந்தால் அங்கே அவளைக் காப்பாற்றுவதற்காகவே அமர்நாத்-சித்ரா தம்பதியினர் அங்கே மாற்றல் ஆகிப் போயிருக்கிறார்கள். லாகூரில் மாட்டிக் கொண்டால் மவுல்வி சாஹிபும் ரசியா பேகமும் வந்து காப்பாற்றுகிறார்கள். இரவு 12 மணிக்கு யாரும் இல்லாத இரவில் தற்கொலை செய்து கொள்ளப்போனால் அம்மாஞ்சி சூர்யா வந்து தடுக்கிறான். நேரம்தான்!

நாவலை மீள்வாசிப்பு செய்தபோது எனக்கு அலைகள் ஓய்வதில்லை படம் நினைவு வந்துகொண்டே இருந்தது. என் பதின்ம வயதுகளில் வந்த படம் அது. பாட்டுகள் அமர்க்களமாக இருந்தன. கன்னாபின்னா என்று ஓடிற்று. பார்த்தவரெல்லாம் புகழ்ந்தார்கள். இரண்டு முறை படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு வழியாக டிக்கெட் கிடைத்துப் போய்ப் பார்த்தால் பாரதிராஜா சோகப்படுத்துகிறார். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி – கார்த்திக்கும் ராதாவும் ஓடுகிறார்கள், ஊரே துரத்துகிறது, தியாகராஜன் அவர்களை வெட்டப் போகிறார், திடீரென்று பாதிரியார் வந்து தடுக்கிறார். பாதிரியாரைப் பார்த்து நானும் என் நண்பர்களும் கொல்லென்று சிரித்துவிட தியேட்டரில் ரத்தக் களரி ஆகும் நிலை. பாதிரியார் எங்கிருந்து வந்தார்? சரியாக இங்கே மாட்டிக் கொள்வார்கள் என்று முன்னாலேயே கணித்து அங்கே வந்து ஒளிந்து கொண்டிருந்தாரா?

Deux ex machina – அதிசய தற்செயல் நிகழ்ச்சிகள் – கதையில் வரலாம். இங்கே Deux ex machina-வில் அவ்வப்போது கதை வருகிறது.

அப்புறம் அலை ஓசை என்று தலைப்பு வைத்துவிட்டோமே என்று பலவந்தமாக அந்த ஓசையை இழுத்து வருகிறார்.

ஆனால்: ஆயிரம் குறை இருந்தாலும் கதையில் கொஞ்சம் ஜீவன் இருக்கிறது. நிறைய சுவாரசியம் இருக்கிறது. சீதா இறக்கும்போது அங்கஹீனம் அடைந்த தாரிணியின் கோர சொரூபத்தைப் பார்த்து அக்கா என்ன அழகாக இருக்கிறாய் என்று வியக்கும் இடத்தில் கவிதை இருக்கிறது. சீதாவைக் கண்டு சுண்டு உட்பட எல்லாரும் கொஞ்சம் மயங்குவதில் உண்மை இருக்கிறது.

லலிதாவும் அவள் அத்தை மகள் சீதாவும் நெருங்கிய தோழிகள். நல்ல வேலையில் இருக்கும் ராகவன் தாரிணியை காதலிக்கிறான், ஆனால் அது கைகூடவில்லை. லலிதாவை பெண் பார்க்க வரும் ராகவன் சீதாவை விரும்பி மணம் செய்து கொள்கிறான். லலிதாவின் அண்ணன் சூர்யா காங்கிரஸ்காரன். அவன் தாரிணியை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சந்திக்கிறான். இருவரும் நெருங்குகிறார்கள். தாரிணியை மீண்டும் சந்திக்கும் ராகவன் அவளையும் மணக்க விரும்புகிறான். தாரிணி அவனை நிராகரிக்கிறாள். சீதா-ராகவன் வாழ்க்கை பரஸ்பர சந்தேகத்தால் நரகம் ஆகிறது. சில அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளால் சீதா-ராகவன் பிரிகிறார்கள், பிறகு சேர்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது சீதா பாகிஸ்தான் பக்கம் மாட்டிக் கொள்கிறாள். தாரிணி தன் சொந்த அக்கா என்று அவளுக்கு தெரிய வருகிறது. பல துன்பங்களுக்குப் பின்னால் ராகவனின் மடியில் அவள் இறக்கிறாள். தாரிணி கை இழந்து கண்ணிழந்து கோரமான உருவத்தோடு இருந்தாலும் சீதாவின் இறுதி ஆசைப்படி ராகவனும் அவளும் மணந்து கொள்கிறார்கள்.

கல்கியின் ஆதர்சம் டிக்கன்ஸ் ஆக இருக்க வேண்டும். இது ஒரு Dickensian நாவலே. ஆனால் டிக்கன்சின் பாத்திரப் படைப்பு எப்போதும் சிறப்பானது. இந்த கதையில் ஸ்கோப் இருந்தும் கல்கியின் கவனம் மெலோட்ராமா கதையில்தான் இருக்கிறது. சீதா, ராகவன், தாரிணி, சூர்யா, லலிதா எல்லாருமே நன்றாக வரக் கூடிய பாத்திரங்கள்தான். சுதந்திரப் போராட்டம் போராட்டம் என்கிறார்களே தவிர அது யாருடைய வாழ்க்கையையும் பெரிதாக பாதிப்பதாகத் தெரியவில்லை. (இத்தனைக்கும் ஜெயிலுக்கு போகிறார்கள், அடி வாங்குகிறார்கள்…) வழக்கமான காதல் கத்திரிக்காய் என்ற உலகத்தைத்தான் கல்கி காட்டுகிறார். இதை நல்ல இலக்கியம் ஆக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது.

கதையில் சீதாவைக் கண்டு சூர்யா, ராகவன், பட்டாபி எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். அது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. ஆனால் அத்தை மகளை சூர்யா விரும்புவது, காதலி தாரிணி சாயலில் உள்ளவளை ராகவன் விரும்புவதும், தனக்காக உழைத்த நாகரீகப் பெண்மணியை பட்டாபி விரும்புவதும் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளே.

ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின் படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?

ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

1956க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற நாவல்.  கல்கி இறந்த ஒரு வருஷத்தில் அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்கிறது.

இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம். மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இது ஒரு flawed, மெலோட்ராமா, மிகுகற்பனைக் கதையே. ஆனாலும் இந்தக் கதையில் எங்கோ சிறிய அளவில் ஜீவன் மறைந்து கிடக்கிறது. சுவாரசியம் இருக்கிறது. ஒரு காலத்தில் பெரிய வெற்றி பெற்ற நாவல். அதனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

தி.ஜா.வின் சொகுசான நாவல்: உயிர்த்தேன்

உயிர்த்தேனைப் படிப்பது இரவு நேரத்தில் மங்கிய நிலவொளியில் மொட்டை மாடியிலோ தென்னந்தோப்பிலோ நட்சத்திரங்கள் மேலே ஏறுவதைப் பார்த்துக் கொண்டு பி.பி. ஸ்ரீனிவாசையோ மகாராஜபுரம் சந்தானத்தையோ தலத் மெஹ்மூதையோ ப்ளூ டான்யூபோ கேட்கும் சுகம். நல்ல தாகமாக இருக்கும்போது இனிய இளநீரோ எலுமிச்சை சாறோ அருந்தும் சுகம். பவழமல்லி மரத்தடியிலோ முல்லைக் கொடி அருகிலோ அமர்ந்து மார்கழி மாதக் காலைப் பனியின் மெல்லிய குளிரில் திருப்பாவையை தெருவில் நல்ல குரல் உள்ள பெண்கள் பாடிக் கொண்டு போவதைக் கேட்கும் சுகம். சொகுசான நாவல்.

இத்தனைக்கும் தி.ஜா. காட்டுவது கனவுலகம் மட்டுமே. காந்தி கூட இப்படி செங்கம்மா/பூவராகன்/கணேசப் பிள்ளை மாதிரி சகமனிதர்கள் மீது அன்பைப் பொழிந்திருப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கனவுகள் சில சமயம் ஏதோ ஒரு எல்லையைத் தாண்டி மகத்தான மானிடக் கனவுகளாக மாறுகின்றன. உயிர்த்தேன் அப்படிப்பட்ட ஒரு கனவைத்தான் காட்டுகிறது.

1967-இல் ஆனந்த விகடனில் தொடராக வந்தது.

பிரமாதக் கதைப்பின்னல் உள்ள கதை எல்லாம் கிடையாது. பணம் நிறைய சம்பாதித்த பிறகு பூவராகன் தன் சொந்த கிராமத்துக்கு திரும்புகிறார். ஊரே சோம்பலில் தன்முனைப்பில்லாமல் மூழ்கி இருக்கிறது. அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என்று பேசுபவர்களால் ஒரு துரும்பைக் கூட இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகர்த்த முடியவில்லை. பூவராகன் கார்வார் கணேசப் பிள்ளையின் மனைவி அழகி/அறிவாளி/அன்பு நிறைந்த செங்கம்மாவை சந்திக்கிறார். அவரது அப்பாவின் கனவான கோவில் புனரமைப்பு வேலையை எடுத்து நடத்துகிறார். செங்கம்மாவின் தாக்கத்தில் ஊருக்கு நல்லது செய்கிறார், சொந்த செலவில் பாலம் கட்டுகிறார், எல்லாருடைய விவசாய நிலத்தையும் கொழிக்க வைக்கிறார். ஊருக்கு ரோஷம் வருகிறது, இவரது அருமை புரிகிறது. ஊர்த் தலைவராகுங்கள் என்று கேட்டுக் கொள்கிறது. பூவராகன் இதில் செங்கம்மாவின் பங்களிப்புதான் அதிகம் அவளைத் தலைவி ஆக்குங்கள் என்கிறார். ஊரே மாறினாலும் பழனிவேல் ஒத்துழைக்க மறுக்கிறான். அதற்குக் காரணம் செங்கம்மா மீது அவனுக்கு இருக்கும் ஆசை. எப்படி முடிகிறது என்பதுதான் கதை.

பழனிவேல் செங்கம்மாவை இழுத்து அணைத்துக் கொள்ளும் காட்சிதான் கதையின் உச்சக்கட்டம். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

பத்து பக்கத்திலேயே சூடு பிடித்துவிடுகிறது. பூவராகன் தன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு அழைக்கவில்லை என்று சண்டை போடும் பழனிவேல் செங்கம்மாவை கௌதமரை மணந்த அகலிகை என்று விவரிக்கிறான். யார் இந்திரன்? தஞ்சாவூர் அடிவெட்டுப் பேச்சு, கும்பகோணம் குசும்பு என்றெல்லாம் என் குடும்பத்தில் சொல்வார்கள், என் அப்பாவிடம் இது அவ்வப்போது தெரியும். (எங்கள் பூர்வீகமும் தஞ்சாவூர் ஜில்லாதான்). ஜானகிராமன் மொழியில் சூட்சுமமாகப் பேசி காலை வாருவது. அது அட்சர சுத்தமாக வந்திருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த வசனம் பூவராகனின் மாமா மகனும் நல்ல நண்பனுமான நரசிம்மன் பூவராகனையும் செங்கம்மாவையும் இணைத்துப் பேசிவிட்டு தவறாகப் பேசினோம் என்று உணர்வது. தன் மனைவியிடம் நீ நான் சொல்வதை நம்பவில்லையா என்று கேட்க அவள் நீங்களே நம்பலியே என்கிறாள்.

எல்லாருக்கும் அனேகமாகப் பிடிக்கும் பாத்திரங்கள் சிற்பி ஆமருவி, செங்கம்மாவை முழுதாகப் புரிந்து கொண்ட அவள் கணவர் கார்வார் கணேசப் பிள்ளை. அவரை விடவும் ஒரு மாற்று அதிகமாக எனக்குப் பிடித்த பாத்திரம் பூவராகனின் மனைவி ரங்கநாயகி. கோட்டோவியம்தான் வரைந்திருக்கிறார், ஆனால் அருமையாக வந்திருக்கிறது. செங்கம்மாவின் ஆடிப் பிம்பமான அனுசூயாவின் நீட்சிதான் மரப்பசுவின் அம்மணி. பழனிவேலும் நம்பகத்தன்மை உள்ள பாத்திரம்.

இது என்னடா ஜெயமோகனின் நாவல் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறவில்லையா என்று மீண்டும் தேடிப் பார்த்தேன். அவர் கண்ணில் இது தி.ஜா.வின் “மிகச் சுமாரான நாவல்களில் ஒன்று.” அவர் வார்த்தைகளில்:

ஜானகிராமனின் கதாபாத்திரங்களிலேயே பலவீனமானது செங்கம்மாதான் என்று கூடச் சொல்லலாம். அக்கால ஆர்வி, எல்லார்வி பாணி கதாபாத்திரம். ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள் எதுவுமே இலக்கியத்திற்குரிய நுட்பத்துடனும் கூர்மையுடனும் சொல்லப்படவில்லை. வணிகக், கேளிக்கை எழுத்துக்குரிய மேலோட்டமான சித்திரங்களே உள்ளன. ஒப்புநோக்க இதேகாலத்தில் ஏறத்தாழ இதேபோல எழுதப்பட்ட எல்லார்வியின் கிராம மோகினி சுவாரசியமான படைப்பு.

…பழனி, அவனுடைய ரகசியக்காதலை அவன் வெளிப்படுத்தும் உச்சத் தருணம், அதன் பின் செங்கம்மாவின் மாற்றம் எல்லாமே அகிலன் நாவலின் பாணியில் உள்ளன

ஜெயமோகனின் ரசனையோடு நான் அபூர்வமாக வேறுபடும் தருணம். “ஆறுகட்டி ஊரின் நிலவியல், சமூக அமைப்பு, சாதியச் சிக்கல்கள்…” இவற்றைப் பேசியே ஆக வேண்டும் என்று அவர் நினைப்பது எல்லா நேரமும் பாயசம், பச்சடி என்று சம்பிரதாயமான விருந்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கிறது. எனக்கு செங்கம்மாவும் (கொஞ்சம் குறைவாக அனுசூயா, பூவராகன், ஆமருவி, நரசிம்மன், கார்வார் கணேசப் பிள்ளை, ரங்கநாயகி எல்லாரும் காட்டுவது) எல்லாரையும் அவர்கள் குறைநிறைகளோடு ஏற்றுக் கொள்ளும் அன்பு. ஏற்றுக் கொள்வதோடு நின்றுவிடாமல் அவர்களை சரியான திசையில் செலுத்தும் சிறு உந்துதல்களைத் தரும் அன்பு. அது ஒரு மாபெரும் மனிதக் கனவு. இந்தக் கனவைத்தான் ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் காட்டுகிறார். அந்த நாவலில் நாயகனின் அப்பா-அம்மா காதலை இன்னும் விரிவாகக் காட்டவில்லை என்று குறை சொல்வது போலத்தான் ஜெயமோகனின் விமர்சனம் எனக்குப் படுகிறது.

அதே நேரத்தில் இலக்கியம் என்று பார்த்தான் ஜேகே ஒரு படி மேலேதான் இருக்கிறார் என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். இதே கனவைத்தான் பாலகுமாரனும் சிவசு பாத்திரம் மூலமாக அகல்யா நாவலில் முன் வைக்க முயற்சிக்கிறார். செங்கம்மாவோடு ஒப்பிட்டால் சிவசு எத்தனை செயற்கையாகத் தெரிகிறான்?

நாவலைப் பற்றி எனக்கும் விமர்சனங்கள் உண்டு. தி.ஜா.வுக்கு பெண் மேல் obsession என்பதே ஒரு obsession ஆக இருக்கிறது. செங்கம்மாவுக்கும் பூவராகனுக்கும் ஊடாக இருக்கும் காமம் என்பது என் கண்ணில் சரியாக வரவில்லை, வலிந்து புகுத்தப்பட்ட மாதிரி இருக்கிறது. ஆனால் செங்கம்மா-பழனிவேல், செங்கம்மா-கணேசப் பிள்ளை காமம்/உறவு என்பது இயற்கையாக இருக்கிறது. கட்டற்ற பாலியல் உறவு என்பது தி.ஜா.வுக்கு ஒரு fantasy-யோ என்று தோன்றுகிறது. அனுசூயாவுக்கு கதையில் என்ன தேவை? கதையில் இரண்டு முடிச்சுகளைப் போட நினைத்திருக்கிறார்; பழனிவேலின் obsession என்ற முடிச்சு நன்றாக விழுந்திருக்கிறது, ஆனால் பாலியல் உறவு என்று அந்தப் பக்கமும் போகாமல் இந்தப் பக்கமும் போகாமல் பூவாரகனும் ஏன் ஊரில் உள்ள எல்லாருமே அல்லாடுவது என்னவோ கனவிலும் பெண்ணோடு கூடாமல் சுயஇன்பம் செய்து கொள்வது போல இருக்கிறது, சரியாக வரவில்லை.

அம்மா வந்தாளை விட சிறந்த நாவலை தி.ஜா. எழுதவில்லை. மோகமுள்ளுக்குத்தான் இரண்டாம் இடம் கொடுப்பேன். இந்த நாவலின் சிறப்பு ஒரு மகத்தான கனவைக் காட்டுவதுதான். ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலும் அப்படிப்பட்ட மகத்தான மானுடக் கனவைத்தான் காட்டுகிறது, ஆனால் இதை விடவும் சிறப்பாக எழுதப்பட்டதும் கூட, இன்னும் நம்பகத்தன்மை அதிகம் உள்ளதும் கூட. அதனால் என்ன? ரஃபியும் கிஷோரும் தலத்தை விட சிறப்பாக, அதிகமான பாடல்களைப் பாடி இருக்கிறார்கள்தான், ஆனாலும் தலத்துக்கு மனதில் இடம் இல்லாமல் போய்விடுகிறதா?

அதிசயமாக நண்பர் ரெங்காவும் இந்த நாவலை சுமார் என்றே  மதிப்பிடுகிறார். எங்கள் ரசனை வேறுபடும் ஒரு அபூர்வமான தருணம். அவர் பழனியின் முடிவு நாடகத்தனமானது என்று சொல்வது எனக்கும் சரியே. ஆனால் அது எனக்கு சிறு குறையாகத் தெரிகிறது, அவருக்கு பெரிதாக உறுத்துகிறது. எனக்கு நாவலில் நினைவிருக்கப் போவது அனைவரையும் ஏற்றுக் கொள்வது என்ற கனவு மட்டும்தான். அதைத்தான் தி.ஜா. சொகுசான, இனிய வாசிப்பு அனுபவமாக வடித்திருக்கிறார் என்று கருதுகிறேன். அது ரெங்காவுக்குப் பெரிதாகத் தெரியவில்லை போலும்.

நாவலில் வரும் ஒரு பாசுரத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை
கலியும் கெடும் கண்டு கொண்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி
ஆடி உழி தரக் கண்டோம்
கண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக்கினியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்…

இந்த உணர்வுதான் படிக்கும்போது ஏற்பட்டது, கண்ணுக்கினியன கண்டோம், வேறென்ன சொல்ல!

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்:
மாற்றுக் கருத்துகள் – ஜெயமோகனின் காட்டமான விமர்சனம், ரெங்கசுப்ரமணி விமர்சனம்
தமிழ் விக்கியில்

PS 2

இது திரைப்படத்தைப் பற்றிய பதிவு அல்ல.

கண்ணன் மகேஷ் எழுதிய நீலமதியின் காதல் என்ற புத்தகத்தைப் படித்தேன். புத்தகம் சுமார்தான். சுவாரசியமாக இருந்தது ஒரே விஷயம்தான். பொன்னியின் செல்வனை அப்படியே 60 வருஷத்துக்குப் பிறகு நடந்த வரலாற்றுக் கதையாக நகல் எடுத்து எழுதியது போலிருந்தது.

கதை ராஜராஜ சோழனின் பேரனும் ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜாதிராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் நடைபெறுகிறது. ராஜாதிராஜ சோழனின் தம்பி இரண்டாம் ராஜேந்திரன் பட்டத்து இளவரசன். இன்னொரு தம்பி வீரராஜேந்திரனுக்கு ஆதித்த கரிகாலன் போல முறிந்துபோன காதல். நந்தினி எதிரி வீரபாண்டியனைத் தன் கணவன் என்கிறாளா, இங்கே காதலி சங்கபை எதிரி சோமேஸ்வர சாளுக்கியனுக்கு ராணி.

முதல் காட்சியில் நாயகன் பூரணசந்திரன் – அதாவது வந்தியத்தேவன் – காஞ்சியிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருக்கிறான். நடுவில் கடம்பூரில் ஒரு நாள் இரவு தங்குகிறான். அங்கே சிற்றரசர்கல் இரண்டாம் ராஜேந்திரனுக்கு பதிலாக ராஜாதிராஜனின் மகன் விஜயாலயனை மன்னனாக்க வேண்டும் என்று சதி செய்வதைத் தெரிந்து கொள்கிறான். ரவிதாசன் முதலான ஆபத்துதவிகள் நாடு முழுதும் ஊடுருவி இருப்பதைப் போல இங்கே சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனின் ஆட்கள் ஊடுருவி இருக்கிறார்கள். குடந்தையில் ஒரு ஜோதிடர் கூட இருக்கிறார். அருண்மொழிவர்மன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டுவதைப் போல இரண்டாம் ராஜேந்திரன் த்ன் பதவியைத் துறந்து விஜயாலயனை பட்டத்து இளவரசனாக்குகிறான். ஆதித்த கரிகாலனின் இறப்பு போல இங்கே விஜயாலயனின் தம்பி கொல்லபப்டுகிறான். அந்தப் பழியை கங்கவரையர் ஏற்றுக் கொள்கிறார். நடந்த வரலாற்றை விடமுடியவில்லை, அதனால் ராஜாதிராஜன், விஜயாலயன் இருவரும் போரில் இறந்து இரண்டாம் ராஜேந்திரன் அரசனாகிறார்.

பொன்னியின் செல்வனுக்கு தமிழகத்தில் இருந்த தாக்கத்தைக் கண்டு வியப்பாக இருக்கிறது. அனுஷா வெங்கடேஷ் (காவிரிமைந்தன்), விக்ரமன் (வந்தியத்தேவன் வாள்), பாலகுமாரன் என்று பலரும் பொ.செ.வை. வரலாறாகவே கொண்டு அதை நீட்டித்திருக்கிறார்கள். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதைத் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். என் தலைமுறையைக் கூட அது கட்டிப் போட்டிருந்தது, ஐம்பதுகளின் வாசகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். இன்றைய இளைஞர்களும் திரைப்படத்தின் தாக்கத்தினால் அதை மீண்டும் படிக்க வாய்ப்பிருக்கிறது. மிக அதிகமாக விற்ற தமிழ் நூல் இதுதான் என்று எங்கோ படித்தேன்.

பொ. செல்வன் நல்ல நாவல்தான்; என் கண்ணில் இலக்கியம்தான் (நான் மதிக்கும் வாசகர்கள் பலர் இதை வணிக நாவல் மட்டுமே என்றுதான் மதிப்பிடுகிறார்கள்.) ஆனால் புதுமைப்பித்தனுக்கும் அசோகமித்ரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக்கும் இல்லாத தாக்கம் எப்படி இந்த நாவலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று புரியவில்லைதான். குறிஞ்சி மலர் பத்து பதினைந்து வருஷம் பொதுப் பிரக்ஞையில் இருந்திருக்குமா? மு.வ. ஒரு பத்து வருஷம் தாக்குப் பிடித்திருப்பாரா? ஏன் சுஜாதா கூட 20-25 வருஷம்தான் என்று நினைக்கிறேன். ஆனால் இதன் தாக்கம் ஐம்பது அறுபது வருஷமாக நீடிக்கிறது…

கண்ணன் மகேஷ் என்ற பேரை நான் ஜெயமோகனின் வணிக நாவல் பரிந்துரைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். வாழ்வென்னும் மகாநதி என்ற நாவலை ஜெயமோகன் பரிந்துரைத்திருக்கிறார். எனக்கு கண்ணன் மகேஷைப் பற்றி அதிகம் தெரியவில்லை, இவரது புகைப்படமும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

சோ ராமசாமி: யாருக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை சோ எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்று. பெர்னார்ட் ஷா தரத்திலிருந்து வெகு தூரம்தான்; ஆனால் ஷாவை நினைவுபடுத்தும் படைப்பு.

சோவுக்கு ஒரு எளிய சூத்திரம் உண்டு. ஒரு சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொள்வார். இதில் விபச்சாரம். வேசித் தொழில் செய்பவள், அதில் நுழைய காரணமாக இருந்தவன், அவளுக்காக வாதிடும் வக்கீல், கொஞ்சம் அசட்டுத்தனமாக குடும்பத் தலைவர். தான் நடிக்க சவடாலும் நக்கலும் உள்ள ஒருவர்; நியாய உணர்ச்சி உள்ள குடும்பத் தலைவி. அவ்வளவுதான் நாடகம் தயார்!

கேசே இல்லாத வக்கீல் விபச்சார வழக்கில் மாட்டிக் கொண்ட பெண்ணைத் தன் வீட்டில் தங்க வைக்கிறான். (ஏன் என்றெல்லாம் கேட்கக் கூடாது). வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன் (தொழில் விஷயமாக வெளியூர் போயிருக்கிறான்), குடும்ப நண்பர், வழிகாட்டி, குடும்பத்தின் மனசாட்சி ராவுத்தர். வீட்டுக்கு வரும் பிரமுகர் வெளிப்படையாக இவள் அந்த மாதிரி பெண்ணாயிற்றே, எனக்கே பழக்கம் உண்டே என்கிறார். அவளை ஏமாற்றி இப்படிப்பட்ட ஒரு நிலைக்குத் தள்ளியதே அண்ணன்தான் என்று தெரிகிறது. ராவுத்தர் அவளை அண்ணனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். அம்மாவுக்கு அதில் உள்ள நியாயம் புரிகிறது, ஆனால் தவிக்கிறாள். அண்ணன் இவள் கேடுகெட்டவள் என்கிறான். அவ்வளவுதான் நாடகம்.

சோ வேறு ஒரு பெண்ணை(ஆணை) பார்த்து ஒரு கணம் ஆசைப்பட்டாலும் – ஆசையை விடுங்கள், அவள்(ன்) அழகாக இருக்கிறான் என்று நினைத்தாலே அது விபச்சாரம்தான் என்று வாதிடுகிறார். ஏறக்குறைய ஜமதக்னி-பரசுராமரின் சட்டதிட்டம். அது அதிகப்படியாக இருந்தாலும் விபச்சாரத்தில் பெண்ணை மட்டும் தண்டிப்பது தவறு, போலித்தனம் என்று அவர் வாதிடுவது நன்றாகத்தான் இருக்கிறது.

தன்னை விசாரிக்கும் நீதிபதி வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று நாயகி மறைமுகமாகச் சொல்லும் காட்சி அருமை.

நாயகி வேசி, எனக்கே பழக்கம் உண்டு என்று வீட்டுக்கு வந்தவர் சொன்னதும் அவளை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவரிடம் இன்னும் ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உபசரிக்கும் காட்சியும் நன்றாக இருக்கிறது.

நாடகத்தில் எக்கச்சக்க ஆங்கிலம். 50 வருஷங்களுக்கு முன்பே ஏன் இத்தனை பீட்டர் என்று தெரியவில்லை.

ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், சிவகுமார் நடித்து சோ இயக்கத்தில் திரைப்படமாகவும் (1975) வந்தது.

சோவை நான் (அனேகமாக நான் மட்டும்தான்) தமிழின் சிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவராக மதிப்பிடுகிறேன். அதற்கு இந்த நாடகமும் ஒரு காரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

முன்னோடி பெண் எழுத்தாளர்: கு.ப. சேது அம்மாள்

பெண் எழுத்தாளர், தலித் எழுத்தாளர் மாதிரி பாகுபாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லைதான். ஆனால் லக்ஷ்மி வரிசை எழுத்தாளர்களை வசதிக்காக அப்படி சில சமயம் வகைப்படுத்துவதுண்டு. சேது அம்மாள் அந்த வரிசை எழுத்தாளர்தான். அவரது எழுத்து கலைமகளிலும் கல்கியிலும் ஐம்பதுகள் வரையிலான விகடனிலும் வரலாம், ஆனால் குமுதத்தில் வந்திருக்காது.

சேது அம்மாள் கு.ப.ரா.வின் சகோதரியும் கூட. இவரது படைப்புகள் 2002-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. நாட்டுடமை ஆன சில நாட்களிலேயே இறந்துவிட்டாராம். (94 வயது)

சேது அம்மாளின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று – உயிரின் அழைப்பு (1966) – தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது. சுமாரான சிறுகதைகள். நேரடியாகப் படிக்க குலவதி, மனமும் மணமும் என்ற சுமாரான சிறுகதைகளும் புயல் ஓய்ந்தது என்ற இன்னொரு படுசுமாரான சிறுகதையும் கிடைக்கிறது. சமீபத்தில் ஜெயமோகன் தளத்தில் இவரைப் பற்றி ஒரு குறிப்பைப் பார்த்தேன், சரி புரட்டித்தான் பார்ப்போமே என்று முயற்சித்தேன்.

அவரது எழுத்தின் பலம் என்று யோசித்தால் மறைந்து போன ஒரு காலகட்டத்தின் குடும்பச் சூழலை – அதுவும் பெண்களின் பூசல்கள், பிணக்குகளை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். சுலபமான, இன்னும் காலாவதி ஆகாத நடை. அவ்வளவுதான் தெரிகிறது.

ஆனால் இந்த மாதிரி படைப்புகளுக்கு தேவை இருந்திருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்த பல எழுத்தாளர்களில் ஒருவர், முன்னோடி (பெண்) எழுத்தாளர். அதைத் தவிர சொல்வ வேறு ஒன்றும் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: (தமிழ்) பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

கணேஷ்-வசந்த்: வசந்தின் முதல் தோற்றம் (மாயா)

(மீள்பதிவு)

நாவலை மீண்டும் புரட்டியதால் மீள்பதித்திருக்கிறேன். இன்று நாவலைப் படிக்கும்போது அன்றைய நாகரீக எழுத்தின், வணிக எழுத்தின் எல்லைகளைத் தாண்டுவதில் சுஜாதாவுக்கும் (சாவிக்கும்) இருந்த ஆர்வம்தான் வியப்பூட்டுகிறது. பெண்ணின் அந்தரங்க ரோமத்தைப் பற்றி இளைஞர்கள் படித்துக் கொண்டிருந்த ஒரு வணிக இதழில் ஒரு வரி வருவது அன்று எத்தகைய எதிர்விளைவுகளை உருவாக்கி இருக்கும்? முன்னால் எழுதியதைப் போலவே அன்றைய மஞ்சள் பத்திரிகைகளின் எல்லையும் இந்த அளவில்தான் இருந்திருக்க வேண்டும். இந்தக வரி இல்லாமலும் இதே நாவலை எழுதி இருக்கலாம், ஆனால் இந்த வரி அன்றைய தினமணி கதிரின் விற்பனையை அதிகரித்திருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

இந்தக் குறுநாவலுக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. வசந்த் இதிலேதான் அறிமுகம் ஆகிறான். தன் ஜூனியர் ஒரு ரத்தினம் என்று கணேஷ் வியந்து கொள்கிறார். அறிமுகப் புத்தகத்திலேயே வசந்த் பெண்களைக் கண்டு ஜொள்ளு விட்டாலும் வசந்தின் பாத்திரம் இன்னும் முழுதாக உருவாகவில்லை. கணேஷே இன்னும் ஜொள்ளு விடுவதை நிறுத்தவில்லை.


sujathaமாயா 72-73 வாக்கில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். தினமணி கதிரில் தொடராக வந்தது. வந்த காலத்தில் – குறிப்பாக இளைஞர்கள் நடுவில் – பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும். என்ன, மறைத்து வைத்துப் படித்திருப்பார்கள் 🙂

இன்று படிக்கும்போது sensational ஆக – குறிப்பாக பாலியல் பற்றிய அந்தக் கால வணிக எழுத்தின் எல்லைகளை மீறி எழுதும் ஆர்வம்தான் இந்த குறுநாவலில் பிரதான நோக்கமாகத் தெரிகிறது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகளை நான் படித்ததில்லை. ஆனால் அந்த மஞ்சள் பத்திரிகை எழுத்துக்கும் இதற்கும் அப்போது பெரிய வித்தியாசம் இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. அப்போது கதிர் ஆசிரியராக இருந்த சாவியும் இப்படிப்பட்ட எழுத்தைப் பிரசுரிப்பதில் விருப்பம் உள்ளவர். சாவி புஷ்பா தங்கதுரை எழுதிய “என் பெயர் கமலா” என்ற தொடர்கதையை தினமணி கதிரில் தொடராக வெளியிட்டதுதான் செக்ஸ் பற்றிய ஐம்பது-அறுபதுகளின் பத்திரிகை எழுத்தின் எல்லைகளை உடைத்த முதல் நாவல் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொல்வார். என்னை விட கிழவர்கள் யாராவது இதைப் படித்திருந்தால் சொல்லுங்கள்!

வணிக எழுத்தில் பாலியலைப் புகுத்துவது என்பதற்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூறு பக்கம் எழுதினால் அதில் எண்பது பக்கம் தாசிகள் வருவார்கள். ஜாவர் சீதாராமனுக்கு ரவிக்கை கிழிந்து கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் நகைச்சுவைப் பகுதி வருவது போல சாண்டில்யனுக்கு மேடு, மன்மதப் பிரதேசம் என்று ஒரு ட்ராக் வந்து கொண்டே இருக்கும், அதை எழுதுவதிலேயே பாதி புத்தகம் போய்விடும். ஆனால் இவை எல்லாமே செயற்கையாகத் தெரியும். சுஜாதாவும் பாலியலை வேண்டுமென்றேதான் புகுத்துகிறார் – என்றாலும் அது கதையின் போக்குக்கு முற்றிலும் அந்நியமாக இல்லை, அதில்தான் அவரது திறமை தெரிகிறது.

ganesh-vasanthகதையின் முடிச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை. ஒரு சாமியார் மீது ஒரு “பக்தை” பாலியல் புகார் கொடுக்கிறாள். கணேஷ் கேசை சுலபமாக உடைக்கிறார். கடைசியில் சுலபமாக யூகிக்கக் கூடிய ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட்.

இது வரை – ஜேகே நாவல் வரை – டெல்லியிலிருந்த கணேஷ் இப்போது சென்னையின் தன் புகழ் பெற்ற தம்புச்செட்டித் தெரு முகவரிக்கு வந்தாயிற்று. சுஜாதாவுக்கும் டெல்லியிலிருந்து மாற்றல் ஆகியிருந்த தருணம் என்று நினைக்கிறேன்.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் தவறவிடக் கூடாது. மற்றவர்கள் பஸ்ஸில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

நக்கலின் உச்சம்

கண்ணில் மீண்டும் பட்டது. இபோது வெடிச்சிரிப்பு இல்லைதான், ஆனால் புன்முறுவல் நிச்சயம் உண்டு.


நகுபோலியன்‘ எழுதிய ‘மழநாட்டு மகுடம்‘ சிறுகதையை எப்போது முதலில் படித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் படித்தபோது வாய்விட்டு வெடிச்சிரிப்பு சிரித்தேன் என்று நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் சாண்டில்யனும், ஜெகசிற்பியனும், நா.பா.வும் குறிப்பாக கோவி. மணிசேகரனும் எழுதிய பாணியை அநியாயத்துக்கு நக்கல் அடித்திருக்கிறார். அவர் எழுத்து வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி இருக்கிறேன், இது வரை கிடைத்ததில்லை.

கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தாராம்.

நகுபோலியனின் நிஜப் பெயர் பாலசுப்ரமணியனாம். டெல்லிக்காரராம். அவரது புகைப்படத்தை பசுபதி சாரின் தளத்தில் இருந்த ஒரு படத்திலிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன்.

வசதிக்காக சிறுகதையை இங்கே வெட்டி ஒட்டி இருக்கிறேன். தவறாமல் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒரிஜினல் பதிவை இங்கே படிக்கலாம். நகுபோலியனைப் பற்றி சில விவரங்களும் தருகிறார்.

மழநாட்டு மகுடம்
அத்தியாயம் 303

கோப்பெருந்தேவி எங்கே?

அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை – பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!

சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின் பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் – ”கோப்பெருந்தேவி எங்கே?”

கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ”கோப்பெருந்தேவி எங்கே?” – அந்தக் கஹனாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது; அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.

அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது – பீறிட்டுக் கொண்டு!

அது போகட்டும் – அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!

அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் – இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.

என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில், விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.

அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!

மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணபடுக்கையிலே கிடக்கிறான்! ”மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்” என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!

திருமழபாடியிலே திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (ததிகிட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ‘திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்’ என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!

(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான், இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)

சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ”முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்” இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ”முக்குடுமி கொண்ட முதுபல்லவன்” இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும், அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம், தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய், வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ‘எக்ஸ்’ போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே – சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? – சமணசுந்தரியேதான்!!)

அத்தியாயம் 305

திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம். (தொடரும்)

பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.

தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ”மழநாட்டு மகுடம்” – வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இது பற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ”அரபு நாட்டு அரசுரிமை”யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ”கடாரத்துக் கன்னி” என்றாவது மாற்றிப் போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்து கொண்டு அதற்காவன செய்வதுதான்.
தங்கள் ”நகுபோலியன்”

பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா, அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக்கீற்றும் நாமக்கீற்றும் சேர்ந்த (18-ஆம் புள்ளி ஆடுபுலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்குவிழி மங்கை படத்தையும் மறக்காமல் ‘லா.சு.ர.’ வைப் போடச் சொல்லுங்கள். – பாலு

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

பழைய நாடகம்: ஏகை சிவசண்முகம் பிள்ளை எழுதிய கண்டிராஜா

ஏகை சிவசண்முகம் பிள்ளை எழுதிய கண்டிராஜா என்ற வரலாற்று நாடகம் அன்று எல்லா நாடக சபையாராலும்‌ பல முறை மேடையில்‌ ௩டிக்கப்பட்டது என்கிறார் டி.கே. ஷண்முகம். கண்டிராஜா கண்டி அரச வம்சத்தின் கடைசி அரசரான ஸ்ரீ விக்ரம ராஜசிம்மனின் ஆட்சியை ஏலப்பளை அதிகாரம் என்ற மந்திரி ஆங்கிலேயர் உதவியோடு முடிவுக்குக் கொண்டு வந்ததை விவரிக்கிறது. ஏலப்பளையின் சிறு குழந்தைகளைக் கொன்று அவர்கள் தலைகளை ஏலப்பளையின் மனைவியையே உரலில் இடிக்க வைத்ததாகவும் அதனால்தான் ஏலப்பளை அவரை எதிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இது மிகைப்படுத்தலா என்று தெரியவில்லை, ஆனால் இப்படி ஒரு “தொன்மம்” இருக்கிறது. நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் போடுவது போல அன்று இந்தக் காட்சி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்திருக்கும், அதனாலேயே இந்த நாடக அன்று வெற்றி பெற்றிருக்கும்.

ஊர்வசியும் இவள்தானோ, ரம்பைதானோ, ரதிதானோ – பிரம்மன் உலகை வெல்லப் படைத்தானோ இவள் ஊர்தானெது பேர்தானெது யார்தான் அறிவார் தானிது உன்னதமாகவே வந்தாள் – காதல் சன்னதம் யானுறத் தந்தாள்

என்ற பாடல் துணுக்கை சிவாஜி கணேசன்-சாவித்ரி நடித்த புகழ் பெற்ற நவராத்திரி திரைப்படத்தில் தெருக்கூத்து காட்சியில் கேட்டிருக்கலாம். அது இந்த நாடகத்தில்தான் வருகிறது!

இதைத் தவிர சம்பூர்ண இராமாயணம், அரிச்சந்திரா முதலான நாடகங்களையும் எழுதினாராம். இவர் எழுதிய பாடல்களைத்தான் எல்லா இராமாயண நாடகங்களிலும் பயன்படுத்தினார்கள் என்று டி.கே. ஷண்முகம் தகவல் தருகிறார். நாடக சபைகள் நாடக முகாம் நடத்துகையில் இறுதி நாளில் இவரது ராமாயண நாடகத்தை நடத்தி முகாமை முடிப்பார்களாம்.

சிவசண்முகம் பிள்ளை பிற்காலத்தில் கன்னையாவுக்காக நாடகங்கள் எழுதினாராம்.

இவரது புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.

கண்டி ராஜா முன்னோடி நாடகம் மட்டுமே. அதன் பின்னணித் தகவல் ஏற்படுத்தும் பயங்கர உணர்வுக்காகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: நாடகத்தின் மின்பிரதி

எஸ்விவி

எஸ்விவியின் பலம் அன்றைய மேல் வர்க்க பிராமணக் குடும்பங்களின் இயல்பான சித்தரிப்பு; குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை நயமாக விவரித்தல்; சரளமான நடை. அவரது conservative அணுகுமுறையை மீறி அங்கங்கே தெரியும் சிறு புரட்சிகள். பலவீனம் வணிக எழுத்து என்ற நிலையைத் தாண்டாதது. அன்றிருந்த சுவாரசியம் காலாவதி ஆகிக் கொண்டே போவது.

உல்லாச வேளை நாவலை க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா? பட்டியலில் பரிந்துரைத்திருக்கிறார். 22-23 வயதில் படித்தபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று காலாவதி ஆகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் விக்கி அவரது சம்பத்து புத்தகத்தைப் பரிந்துரைக்கிறது. தேடிப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்வது:

“சம்பத்து” கதை எஸ்.வி.வியின் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது. சராசரி ஆண் மனதின் எண்ணவோட்டங்களை சம்பத் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டுகிறார் எஸ்.வி.வி. ஜனகம், லலிதா, பக்கத்து வீட்டு ஐயங்கார் பெண் சம்பகா, லலிதாவின் தோழி சாரு என பல தரப்பட்ட பெண் பாத்திரங்களைப் படைத்து சம்பத்துவின் எண்ணவோட்டங்களை மையமாக வைத்துக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அவரது வேறு சில படைப்புகளைப் பற்றி:

ராஜாமணி சுமாரான வணிக நாவல்தான். ஆனால் சிறப்பான இலக்கியமாக வந்திருக்கக் கூடிய கரு. நாயகனுக்கு மாமா பெண் வசந்தாவிடம் ஈர்ப்பு. தெருவில் உள்ள இன்னொரு பெண்ணுக்கு இவன் மேல் ஈர்ப்பு. வசந்தா ஊருக்குப் போனதும் இவனுக்கும் தெருப் பெண்ணிடம் ஈர்ப்பு உண்டாகிறது. கொஞ்ச நாளில் அந்தப் பெண் வேறொருவனை சைட்டடிக்கிறாள். இப்படி பதின்ம வயதினருக்கு உண்டாகும் சாதாரண ஈர்ப்பு கூட நம்மூர் வணிக நாவல்களில் தெய்வீகக் காதலாகிவிடும். அப்படி இல்லாமல் சகஜமான உணர்ச்சியாக சித்தரிக்கப்பட்டிருப்பதுதான் இந்த நாவலின் சிறப்பு. ஆனால் ஜோடிகள் மாறிக் கொண்டே இருப்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

புது மாட்டுப்பெண் நிச்சயமாக அந்த நாளுக்கான குறுநாவல். வீட்டுக்கு வரும் cool மருமகள் அன்பாலும் கிண்டலாலும் எல்லாரையும் வழிக்குக் கொண்டு வருகிறாள். நாவல் வந்த காலத்தில் வெற்றி பெற்றிருக்கும் – அதுவும் விகடன், கல்கி, கலைமகளில் தொடர்கதையாக வந்திருந்தால் பெருவெற்றிதான். நான் ரசித்தது மறைந்துபோன பழக்கங்களைப் பற்றி பேசுவதும், அய்யங்கார் பாஷையும்தான். துரைச்சா என்ற பேரால் யாரையாவது அழைத்துப் பார்த்திருக்கிறீர்களா? பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ‘ப்ரைவேட்’ வைப்பது என்றால் என்ன என்று தெரியுமா? தளிகை, சாத்தமுது போன்ற வார்த்தைகளைக் கேட்டே எத்தனையோ வருஷமாயிற்று.

சபாஷ் பார்வதியும் அதே மாதிரிதான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் பயந்து மனைவியை பொட்டை அதிகாரம் செய்யும் கணவனை மனைவி ஒரு கட்டத்தில் எதிர்த்து வீட்டில் தன் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறாள். கை மேல் பலன் குறுநாவலில் தன் கீழ் வேலை செய்பவனுக்கு அவனது நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பார்த்துக் கொள்ள விடுமுறையை மறுக்கும் அதிகாரி அதே நிலை தனக்கு வரும்போது தன் தவறை உணர்கிறான். சரோஜா குறுநாவலில் ஒரு பெண்ணை விரும்பும் இருவர், இயல்பாக பெண் தனக்குப் பிடித்தவனை மணக்கிறாள்.

ராமமூர்த்தி நாவலை அப்போதே நான் ரசிக்கவில்லை

தமிழில் நகைச்சுவை எழுத்து எப்படி பரிணமித்தது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் எஸ்விவியைத் தவற விடக் கூடாது. ஆனால் கறாராகப் பார்த்தால் அவர் தமிழ் வணிக எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி பக்கம்