அஞ்சலி: பேராசிரியர் பசுபதி

பேராசிரியர் பசுபதி மறைந்த செய்தி கொஞ்சம் திடுக்கிட வைத்தது. பைபாஸ் சர்ஜரி என்று சொல்லி இருந்தார், ஆனால் பதிவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. இதோ வந்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தேன். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

பார்த்ததில்லை, பேசியதில்லை, இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனாலும் மிகவும் வருத்தம் தந்த செய்தி. சஹிருதயர் என்றே உணர்ந்திருந்தேன். இருபது வருஷம் முன்னால் பிறந்திருந்தால் என் ரசனை ஏறக்குறைய அவரைப் போலத்தான் இருந்திருக்கும். இருபது வருஷம் பிந்திப் பிறந்திருந்தால் அவர் ரசனை என்னைப் போலத்தான் இருந்திருக்கும்.

அவரது தளத்தைப் படிப்பது எப்போதும் ஆர்வம் ஊட்டும் ஒன்று. பழைய பத்திரிகைகளின் சிறந்த ஆவணம். எங்கிருந்துதான் இத்தனை பத்திரிகைகளை பிடிக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன்.

கவிதை இயற்றிக் கலக்கு, சங்கச் சுரங்கம் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.

என் போன்றவர்களுக்கு இணையம் மூலமாகத்தான் பழக்கம். ஆனால் அவருக்கு வேறு ஒரு பக்கமும் உண்டு. பசுபதி கிண்டி பொறியியல் கல்லூரி ஆரம்பித்து பிறகு சென்னை ஐஐடி, பிறகு யேல் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர். பிறகு டோரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். Professor Emeritus என்ற நிலைக்கு உயர்ந்தார்.

இந்த இழப்பிலிருந்து மீள ஆண்டவன் அவர் குடும்பத்துக்கு பலத்தை அருளட்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

அஞ்சலி: பா. செயப்பிரகாசம்

அடுத்தடுத்து இரண்டு எழுத்தாளர் மறைவு.

பா. செயப்பிரகாசத்தை நான் அதிகம் படித்ததில்லை. நிஜமான பாடல்கள் சிறுகதை பிடித்திருந்ததால்தான் இந்த அஞ்சலியை எழுதுகிறேன்.

இன்குலாபுக்கு சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டபோது நடுவர் குழுவில் இருந்த பா. செயப்பிரகாசத்தை ஜெயமோகன் அதிகார வெறி பிடித்த ஆக்டோபஸ், இலக்கியம் பற்றி அறியாதவர், ராஜேஷ்குமாருக்கும் அசோகமித்திரனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்று கழுவி ஊற்றினார். அரசு உயர் அதிகாரி இடதுசாரி புரட்சி அமைப்பின் தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். ஒருவர் மீது மற்றவர் அவதூறு வழக்கு தொடுத்தனர் என்று நினைவு.

ஆனால் என் கண்ணில் செயப்பிரகாசம் இலக்கியவாதிதான். இது ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்த பிறகு எழுந்த எண்ணம்தான், sample size சிறியதுதான். என்றாலும் இப்படிப்பட்ட சிறுகதைகளை எழுதியவருக்கு அசோகமித்திரன் என்ன எழுதினார், ராஜேஷ்குமார் என்ன எழுதுகிறார் என்று தெரியாமல் இருக்க முடியாது. எனக்கே தெரிகிறது.

ஆனால் செயப்பிரகாசம் முன்னணியில் இருக்கும் இலக்கியவாதி அல்லர். அவர் எழுதிய எந்த சிறுகதையும் நான் ஒரு anthology-யைத் தொகுத்தால் அதில் இடம் பெறாது. இது சுவை வேறுபாடு அல்ல, அவர் எங்கோ பின்னால்தான் நிற்கிறார். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய “முற்போக்கு” கதைகள்தான் மீண்டும் மீண்டும். பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன். இதுவும் அந்த ஒரு சிறுகதைத் தொகுப்பை வைத்து எழும் கருத்துதான்.

செயப்பிரகாசத்தை நல்ல எழுத்தாளராக மதிக்காத ஜெயமோகனே கூட அவரது இதழியல் பங்களிப்பு முக்கியமானது என்று அங்கீகரிக்கிறார். செயப்பிரகாசம் மன ஓசை என்ற சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர்.

அவரது ஆளுமையை அவரோடு நேரடியாகப் பழகிய பெருமாள் முருகன் தன் அஞ்சலிக் கட்டுரையில்சி விவரித்திருந்தார். என்ன காரணத்தாலோ இப்போது தலைப்பு மட்டுமே இருக்கிறது. பெ. முருகன் உட்பட்ட பலருக்கு நிறைய உதவி செய்திருக்கிறராம். அதிகார பீடங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர், நிறைய உதவி செய்பவர், முன்னோடி இதழியலாளர், சில நல்ல சிறுகதைகளை எழுதியவர் ஆகிய நான்குமே சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

செயப்பிரகாசம் ஒரு தளத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

வழக்கமான வரிதான் – எழுத்தாளருக்கு அஞ்சலி என்பது அவரது படைப்புகளைப் பற்றி எழுதுவதுதான். அவரது அக்னி மூலை சிறுகதைத் தொகுப்பை பற்றி எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.


பா. செயப்பிரகாசத்தின் பேரை அங்கே இங்கே கேட்டிருந்தாலும், அவருடைய அம்பலக்காரர் வீடு சிறுகதையை எங்கோ (விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுதி என்று நினைக்கிறேன்) படித்திருந்தாலும் சமீபத்தில் ஜெயமோகன் அவரைக் கழுவி ஊற்றியபோதுதான் அவரது பெயர் பிரக்ஞையில் ஏறியது. கையில் கிடைத்த ஒரு சிறுகதைத் தொகுப்பைப் – அக்னி மூலை – படித்துப் பார்த்தேன்.

இந்தக் கதைகளில் எனக்குப் பிடித்தவை ‘நிஜமான பாடல்கள்‘. ஏழை கொத்தாசாரி கோவில் வேலை கிடைக்கும், பிள்ளைகளுக்கு சோறு போடலாம் என்ற எதிர்பார்ப்பு தகரும்போது சாமி சிலையை உடைக்கிறான். இந்த மாதிரி ஒற்றை வரி சுருக்கங்களை வைத்து இந்தக் கதையை மதிப்பிட முடியாது, படித்துத்தான் பார்க்க வேண்டும். வளரும் நிறங்கள் சிறுகதையில் அந்தக் கால சண்டியரை இன்று அடையாளம் கண்டு கொள்ளும் தருணம் நன்றாக வந்திருந்தது. அக்னி மூலை, ஒரு ஜெருசலேம் போன்றவை பரவாயில்லை ரகம். அம்பலக்காரர் வீடு, தாலியில் பூச்சூடியவர்கள் இரண்டும் அவரது சிறுகதைகளில் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன.

பா. செயப்பிரகாசம் ‘முற்போக்கு’ எழுத்தாளர் என்று நினைக்கிறேன். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய கதைகள்தான் மீண்டும் மீண்டும். ‘முற்போக்கு’ எழுத்து என்றல்ல, சட்டகத்தை வைத்து அதற்குள் எழுதப்படும் எழுத்து அனேகமாக இலக்கியம் ஆவதில்லை. பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பக்கங்கள்:
செயப்பிரகாசத்தின் தளம்
பா.செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் தடையம் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மகன் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் புத்தர் ஏன் நிர்வாணமாக ஓடினார் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மூளைக்காய்ச்சல் சிறுகதை

அஞ்சலி: தெளிவத்தை ஜோசஃப்

காலம் தாழ்ந்த அஞ்சலிதான், தெளிவத்தை ஜோசஃப் மறைந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.

எந்த எழுத்தாளனுக்கும் அஞ்சலி என்பது அவர் எழுத்துக்களைப் பற்றி பதிவு செய்வதுதான் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். அவரது சில எழுத்துக்களைப் பற்றி.

தெளிவத்தை ஜோசஃப் பற்றி முதன்முதலாக கேள்விப்பட்டது அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டபோதுதான். தமிழகத்தில் அதிகம் தெரியாத நல்ல எழுத்தாளரைத் தேடிப் பிடித்து விருது கொடுத்த ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் குழுவினரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நூலகம் தளத்தில் ஜோசஃப்பின் சில புத்தகங்கள் கிடைத்தன. சில சிறுகதைகள் – மனிதர்கள் நல்லவர்கள், கத்தியின்றி ரத்தமின்றி – இணையத்தில் கிடைக்கின்றன.


நாமிருக்கும் நாடே 1979-இல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு. மீன்கள் சிறுகதை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஜெயமோகன் இந்தச் சிறுகதையை தன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். அவரது வார்த்தைகளில்:

என்னுடைய நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலில் சிறந்த நூறு தமிழ்ச் சிறுகதைகள் – விமர்சகனின் சிபாரிசு என்ற பட்டியலில் நான் சேர்த்திருந்த கதை இது. மீன்கள் மலையகத் தொழிலாளர் வாழ்க்கையின் ஒரு எரியும் துளி. அவர்கள் வாழ்க்கையின் தலையாய பிரச்சினையை பிரச்சார நெடியில்லாமல் சித்தரிக்கிறது இது.

பாவண்ணன் இந்த சிறுகதையை இங்கே விலாவாரியாக அலசுகிறார்.

இந்தத் தொகுப்பில் சில கதைகள் சாதாரண – தீட்டு ரொட்டி, மண்ணைத் தின்று – கொஞ்சம் பிரச்சார நெடி அடிக்கும் “முற்போக்கு” கதைகள்தான், ஆனால் அவற்றிலும் உண்மையான சித்திரம் தெரிகிறது. நம்பகத்தன்மை, உண்மை எல்லா கதைகளிலும் நிறைந்திருக்கிறது. தேய்வழக்காகிவிட்ட கூப்பாடுகள் இல்லை. பள்ளியை சோதனை செய்ய வரும் அதிகாரி (சோதனை), கடன் வாங்கி சினிமா பார்க்க கிளம்பும் விடலைகள் (ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்), கஷ்டப்பட்டு பணம் சேர்த்து தமிழகத்தில் நிலம் வாங்கி அதை அனுபவிக்க முடியாத கிழவன் (நாமிருக்கும் நாடே), பேத்தியை இளமைக் கனவு பற்றி எச்சரிக்கும் பாட்டி (பாட்டி சொன்ன கதை), உயர்தர தேயிலையை அடுக்கும் இடத்தில் வேலை செய்தாலும் மோசமான தேனீரைக் குடிக்கும் தொழிலாளி (கூனல்), குரங்கு பற்றிய ஒரு கதை (அது!) எல்லாவற்றையுமே சொல்லலாம்.


விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டபோது ஜோசஃபின் சில சிறுகதைகளை ஜெயமோகனே மீன்கள் என்ற பேரில் தொகுத்திருந்தார்.

மீன்கள் சிறுகதையைத் தவிர மழலை என்ற சிறுகதை அருமையான முத்தாய்ப்பு கொண்டது. அறைக்குள் குழந்தை மாட்டிக் கொள்கிறது. கொண்டியைத் திறக்க படாதபாடு படுகிறார்கள், தாத்தா ஒருவர் எப்படியோ குழந்தைக்கு கதவைத் திறக்க சொல்லித் தருகிறார், குழந்தை வெளியே வந்துவிடுகிறது. இன்னொரு முறை இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று குழம்புகிறார்கள். குழந்தை எனக்குத்தான் கதவைத் திறக்கத் தெரியுமே என்று நினைத்துக் கொள்கிறது!

அம்மா என் மனதைத் தொட்ட சிறுகதை. என் அம்மாவையே கண்டேன். சுலபமாக வந்து போகக் கூடிய செலவில், தூரத்தில் மூத்த மக்ன் இல்லை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, மீண்டும் மீண்டும் வந்து பார்ப்பதின் சிரமங்கள். பாசமுள்ள குடும்பம் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. கோழி வெட்டும் தம்பி, இடப்பற்றாக்குறை வீடு, பேத்தி மீது பாசத்தைப் பொழியும் பாட்டி…

சிலுவை சிறுகதையும் நல்ல் முத்தாய்ப்பு கொண்டது. வர வேண்டிய பணம் வரவில்லை, கிறிஸ்துமஸ் அன்று உடுத்திக் கொள்ள முடியவில்லை. ஆலயத்துக்கு லாரியில் செல்ல அழைப்பு வருகிறது, அப்பா மறுக்கிறார். பிள்ளைகளுக்கு லாரியில் செல்ல கொள்ளை ஆசை. அப்பா கடுப்பில் தண்ணி அடித்து மட்டையாகிவிட, அம்மா கிளம்பச் சொல்கிறாள்!

இருப்பியல் (மகள் திருமணத்துக்காக அப்பா மதம் மாற வேண்டிய சூழ்நிலை, பாதிரியாருக்கு சம்மதமில்லை), மனிதர்கள் நல்லவர்கள் (பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் பிச்சை கிடைக்க அவன் திருடிவிட்டான் என்று நினைக்கிறார்கள்), பயணம் (நெரிசல் பஸ்ஸில் சிங்களருக்கு சலுகை), கத்தியின்றி ரத்தமின்றி (காந்தி பற்றி உரையாற்ற இருப்பவர் அநியாயத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுகிறார்), பாவசங்கீர்த்தனம் (பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டே அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யும் பெரிய மனிதர்..) என்றும் சில சிறுகதைகள். படிக்கலாம்.

ஆனால் மீன்கள் உட்பட்ட எந்த சிறுகதையும் நான் தமிழின் நல்ல சிறுகதைகள் என்று நான் தொகுத்தால் இடம் பெறாது. அது சுவையின் வேறுபாடுதான் என்று நினைக்கிறேன்.

படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் நாவல் குடை நிழல். எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை.

முக்கியமான (இலங்கை) தமிழ் எழுத்தாளர், ஏதாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள்! நூலஹம் தளத்தையாவது எட்டிப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தெளிவத்தை ஜோசஃப் பக்கம், அஞ்சலிகள்

பீட்டர் ப்ரூக்: அஞ்சலி

பிரபல நாடக, திரைப்பட இயக்குனர் பீட்டர் ப்ரூக் நேற்று மறைந்தார்.

பீட்டர் ப்ரூக்கை நான் மகாபாரத நாடக/திரைப்பட இயக்குனராக மட்டுமே அறிவேன். அவரது ஒன்பது மணி நேர திரைப்படம் (நாடகத்தின் ஒளி வடிவம் என்றும் சொல்லலாம்) மகாபாரதத்தை வேற்று கலாசாரத்தவர் எப்படி உள்வாங்கிக் கொள்ளலாம் என்று கொஞ்சமாவது புரிய வைக்கும்.

யோசித்துப் பாருங்கள், நாம் – குறைந்தபட்சம் என் தலைமுறை இந்தியர்களுக்கு – பீமன் யார், அர்ஜுனன் யார், திரௌபதி யார், கிருஷ்ணன் யார், ராமனும் ராவணனும் அனுமனும் யார் யார் என்றெல்லாம் விளக்க வேண்டியதில்லை. எந்த வித சிரமமும் இல்லாமல் அவர்களைப் பற்றி பேசிக் கொள்கிறோம். அர்ஜுனன் வில்லு என்று பாட்டு ஆரம்பித்தால் அது யாருப்பா அர்ஜுனன் என்று கேள்வி கேட்க மாட்டோம். ஆனால் ஒரு சராசரி ஐரோப்பியருக்கு இதெல்லாம் முடியாது அல்லவா?

ப்ரூக்கின் சவால் அதுதான். மகாபாரதம் போன்ற ஒரு சிக்கலான கதைப்பின்னல் உள்ள கதையை மேலை நாட்டு பார்வையாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதற்கு முதலில் அதை தான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். மகாபாரதத்தை இலக்கியமாக அணுகுவதா, மதச்சார்புள்ள தொன்மமாக அணுகுவதா, கிருஷ்ணனின் மாயாஜாலங்களை எப்படி விளக்குவது என்பதை எல்லாம் மனதில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். ஒன்பது மணி நேரம் (இடைவேளைகளுடன் 11 மணி நேரம்) உட்கார்ந்து பார்ப்பது என்பது மேலை நாட்டவருக்கு மட்டுமல்ல, நமக்குமே சிரமம்தான். ஒன்பது மணி நேரம் பார்வையாளர்களை கட்டிப் போடுவது என்பது அசாதாரணம். ஆனால் ஒன்பது மணி நேரம் என்பது மகாபாரதத்துக்கு மிகக் குறைவு. அந்த ஒன்பது மணி நேரத்தில் மகாபாரதம் என்ற மாபெரும் இலக்கியத்தின் சாரத்தை புரிய வைக்க வேண்டும். நம்மூர் என்றால் பாரதத்தில் நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம், போரிலிருந்து ஆரம்பிக்கலாம், யாருக்கும் பின்புலம் என்ன, முன்கதை என்ன என்று தெரியும். அதுவும் முடியாது.

ப்ரூக் அந்த சவாலை வென்றிருக்கிறார். பாரதத்தை எனக்கு திருப்தியாக காட்டிய ஒரே நாடக/திரைப்பட வடிவம் இதுதான் பி.ஆர். சோப்ரா மகாபாரதம் கலாபூர்வமான வெற்றி அல்ல, ஆனால் அதுவே இந்திய முயற்சிகளில் சிறந்தது என்று கருதுகிறேன். மாயாபஜார் போன்ற திரைப்படங்கள் சிறு பகுதியை, கிளைக்கதையை காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் அவை முழுவடிவம் இல்லை. எனக்கு மகாபாரதப் பித்து நிறையவே உண்டு, தானவீரசூர கர்ணா மாதிரி காலாவதி ஆகிவிட்ட மிகை நடிப்பு திரைப்படங்களையும் விடமாட்டேன், அதனால் என் வெற்றி தோல்வி கணிப்பை எல்லாம் ரொம்ப நம்பக் கூடாது.

ப்ரூக் பாத்திரங்களுக்கு இந்தியர்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. என் நினைவு சரி என்றால் திரௌபதியாக நடித்த மல்லிகா சாராபாய் மட்டுமே இந்தியர். (சாராபாயின் நடிப்புக்கு ஒரு ஜே!) பீமனாக, பீஷ்மராக நடித்தவர்கள் கறுப்பர்கள் என்று நினைக்கிறேன். அர்ஜுனன் ஐரோப்பிய நடிகர். துரோணர் ஜப்பானியர் என்பது நன்றாக நினைவிருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இது வெறும் gimmick மட்டுமே. ஆனால் இன்னொரு விதத்தில் பார்த்தால் மகாபாரதம் உலகத்தின் பொக்கிஷம் என்பதை வலியுறுத்தவும் செய்கிறது.

ப்ரூக் ஆஸ்கர் விருது பெற்ற ழான்-க்ளாட் காரியருடன் கிட்டத்தட்ட பத்து வருஷம் இந்த நாடகத்தை உருவாக்க உழைத்திருக்கிறார். இந்தியாவின் பல இடங்களில் பல வடிவங்களைப் பார்த்து படித்து ஆராய்ந்திருக்கிறார். குறிப்பாக கேரள கதகளி வடிவங்கள், தமிழகத்தின் தெருக்கூத்து வடிவங்களை இவருக்கும் காரியருக்கும் பெரிய முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. காரியர் இந்த அனுபவங்களை Big Bhishma in Madras புத்தகத்தில் சுவாரசியமாக (குறைந்தபட்சம் எனக்கு சுவாரசியமாக) விவரித்திருக்கிறார். 1985-இல் நாடகம் ஃப்ரெஞ்சு மொழியில் அரங்கேறி இருக்கிறது. நாடகத்தில் பல நாடுகளைச் சேர்ந்த 16 நடிகர்கள். நடிகர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களி ஏற்று நடித்திருக்கிறார்கள். முன்னர் சொன்ன மாதிரி ஒன்பது மணி நேர நாடகம், இடைவேளைகளுடன் சேர்த்து 11 மணி நேரம்.

நாடகம் நான்கு வருஷங்கள்தான் நடந்திருக்கிறது. 1987-இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் இரண்டு வருஷம். நாடகத்தில் மூன்று பாகங்கள் – Game of Dice, Exile in the Forest, War. 1989-இல் தொலைக்காட்சி தொடராக ஆறு மணி நேர நிகழ்ச்சியாக சுருக்கப்பட்டிருக்கிறது. பிறகு மூன்று மணி நேர திரைப்படமாக சுருக்கப்பட்டிருக்கிறது. நான் பார்த்தது தொலைக்காட்சித் தொடர் என்று நினைக்கிறேன், மூன்று மணி நேரம் அளவு சின்ன நிகழ்ச்சி இல்லை.

மகாபாரதத்தை மேலை நாட்டவருக்கு “மொழிபெயர்க்கும்” முயற்சியில் அதன் சாரத்தை விட்டுவிட்டார், இது தோல்வி, ப்ரூக்கின் காலனிய மனப்பான்மைதான் தெரிகிறது என்றெல்லாம் சில விமர்சனங்களைப் பார்த்திருக்கிறேன். நான் அவற்றை வன்மையாக மறுக்கிறேன். வியாசரே மகாபாரதத்தை முழுமையாக எழுதவில்லை என்று குறை சொல்லலாம், ப்ரூக் தனக்கென வகுத்துக் கொண்ட நேரத்தில் பாரதத்தை சிறப்பாக சித்தரித்திருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

மீண்டும் ஒரு முறை; இலியட், ஆடிஸி, பியோவுல்ஃப், கில்கமேஷ் போன்ற காவியங்களில் அகச்சிக்கல்கள் குறைவு. பியோவுல்ஃப் எல்லாம் பீமன், பகாசுரன், இடும்பன் மாதிரி நாலு பேர் மட்டுமே உள்ள ஒரு காவியத்தை எழுதுவது போலத்தான். இத்தனை குறைந்த நேரத்தில் மகாபாரதத்தின் சாரத்தை புரிய வைப்பது உலக மகா கஷ்டம். அதில்தான் ப்ரூக் வெற்றி பெற்றிருக்கிறார்.

ப்ரூக் பல ஷேக்ஸ்பியர் நாடகங்கள், Lord of the Flies உள்ளிட்ட பல நாடகங்கள், தொடர்கள், திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மகாபாரத இயக்குனர் என்பதைத் தாண்டி நான் அதிகம் அறியேன். குருக்ஷேத்திரப் போரை மையமாக வைத்து Battlefield என்று ஒரு நாடகத்தையும் எழுதி இயக்கி இருக்கிறாராம், அதையாவது பார்க்க/படிக்க வேண்டும்.

ப்ரூக்க்கு 2021-இல் பத்மஸ்ரீ கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த அரசுக்கு ஒரு ஜே! இத்தனை நாள் தாமதத்துக்கு ஒரு boo!

நானே சிலிகன்ஷெல்ஃபில் எழுதுவதை சில மாதங்களாக நிறுத்தி வைத்து ஏறக்குறைய வனவாசத்தில்தான் இருந்தேன். ஆனால் பீட்டர் ப்ரூக் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உத்வேகம்…


தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், மகாபாரதம்

தொடர்புடைய சுட்டிகள்:
தொலைக்காட்சித் தொடர்
பீட்டர் ப்ரூக் விக்கி குறிப்பு

ஜாக் ஹிக்கின்ஸ் மறைவு

பிரபல சாகச நாவல் எழுத்தாளர் ஜாக் ஹிக்கின்ஸ் சில நாட்களுக்கு முன்னால் மறைந்தார்.

என் சிறு வயதில் நான் விரும்பிப் படித்த சாகச நாவல் எழுத்தாளர்களில் ஹிக்கின்ஸ் ஒருவர். 85 நாவல்கள் எழுதி இருக்கிறார். Eagle Has Landed (1975) அவரை வெற்றிகரமான எழுத்தாளராக ஆக்கியது. அதற்கு முன் ராஜேஷ்குமார் தரத்தில் நிறைய pulp நாவல்கள். Eagle Has Landed-ஏ pulp நாவல் என்றும் சொல்லலாம்தான், ஆனால் கொஞ்சம் உயர்தர pulp நாவல். அதற்குப் பிறகும் பல நாவல்கள் எழுதி இருக்கிறார். எதுவும் இந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் சில நாவல்கள் – Storm Warning (1973), Prayer for the Dying (1976) – இந்தத் தரத்தில் இருந்தது என்று சிறு வயதில் நினைத்தேன். இப்போது படித்தால் என்ன நினைப்பேனோ தெரியாது. என் பதின்ம வயதுகளில் Exocet (1983) என்ற நாவலும் பிரபலமாக இருந்தது. 1982-இல் நடந்த ஃபாக்லண்ட்ஸ் போரில் எக்சோசெட் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன என்று நினைவு.

ஹிக்கின்ஸ் மீண்டும் மீண்டும் கையாண்ட கரு அயர்லாந்து கலவரம்/போர். IRAவை களமாக வைத்து நிறைய எழுதி இருக்கிறார்.

நான் படித்த முதல் நாவலும் Eagle Has Landed-தான். 15, 16 வயதில் படித்தேன். ஜெர்மானிய படை வீரர்களை உயர்ந்த பண்புகள் உள்ள வீரர்களாக சித்தரித்ததுதான் – குறிப்பாக திட்டம் வகுக்கும் மாக்ஸ் ராடல், ஜெர்மானிய தளபதி கர்ட் ஸ்டைனர், அவரது துணை அதிகாரி ரிட்டர் நியூமன், அவர்களுக்கு உதவியாக வரும் ஐரிஷ்கார லியம் டெவ்லின், கப்பல் தலைவர் கோனிக், விமானம் ஓட்டும் பீட்டர் கெரிக் ஆகியோரின் நாயகத் தன்மைதான் அந்த நாவலை சாதாரண சாகச நாவல் என்ற நிலையிலிருந்து உயர்த்தியது என்பதெல்லாம் பிற்காலத்தில்தான் புரிந்தது. நீர் ஏவுகணைகள் (torpedos) மேல் பயணித்து அவற்றை எதிரி கப்பல்கள் மீது செலுத்துவது, ஆங்கிலேயப் பிரதமர் சர்ச்சிலை இங்கிலாந்திலிருந்து கடத்தி வரப் போடப்படும் திட்டங்கள், ஆற்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்ற ஒரு ஜெர்மானிய வீரன் தன் உயிரைக் கொடுப்பது, அந்தத் தியாகத்தின் மூலமே திட்டம் தோல்வி அடைவது, ஆழமான காதல், அந்தக் காதல் சாகசக் கதையை முன்னே நகர்த்த தேவையாக இருப்பது, கடைசியில் சர்ச்சில் பற்றிய திருப்பம் எல்லாம் அந்த வயதில் மனதை மிகவும் கவர்ந்தது. எடுத்தால் கீழே வைக்க முடியாது.

மைக்கேல் கெய்ன், டொனல்ட் சதர்லாண்ட், ராபர்ட் டுவால் நடித்து 1976-இல் திரைப்படமாகவும் வந்தது.

வேறு சில நாவல்களைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. பால் ஷவாஸ் (Paul Chavasse) என்ற உளவாளியை வைத்து ஒரு சீரிசை ஆரம்பித்தார். Bormann Testament (1962) எல்லாம் சுமாரான pulp நாவல்களே.

ஷான் டில்லன் (Sean Dillon) சீரிஸில் சில கதைகளை மட்டுமே படித்தேன். A Devil Is Waiting (2012), White House Connection (1999) போன்ற நாவல்கள் sloppy ஆக இருந்தன.

என் கண்ணில் ஹிக்கின்ஸை – அதுவும் Eagle Has Landed நாவலை பதின்ம வயதில் படிப்பதுதான் உத்தமம். அதையே இன்று படிக்கும்போது மிகைப்படுத்தி இருப்பது தெரிகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

அஞ்சலி: செல்வராஜு நடராஜன்

இந்தத் தளத்தின் மிகப் பிரபலமான பதிவை எழுதிய செல்வராஜு நடராஜன் கொரோனா பாதிப்பால் மறைந்தார். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

செல்வராஜ் BSNL-இல் பொறியாளராகப் பணியாற்றி இருக்கிறார். தீவிர வாசகர். தமிழ் நாவல்கள், சிறுகதைகளை மட்டும் படிக்காமல் அவற்றின் பரிந்துரைகளையும் விடாமல் படித்தார். அந்தப் பரிந்துரைகளை வைத்து meta-பரிந்துரைகள் எழுதினார். அவரது அணுகுமுறையை Wisdom of the Crowds என்று சுருக்கமாகச் சொல்லலாம். இணையத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் பரிந்துரைகளைத் தேடிப் பிடித்து எண்ணினார். எந்த நாவலை, எந்த சிறுகதையை எத்தனை பேர் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தார். அதிலிருந்து பத்து பரிந்துரை பெற்ற நாவல்/சிறுகதை, ஒன்பது பரிந்துரை பெற்ற படைப்பு என்று தரவரிசைப்படுத்தினார்.

சுவாரசியமான, வித்தியாசமான அணுகுமுறை. ஆனால் ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு ஓட்டுதான், ஜெயமோகன் போன்ற சிறந்த விமர்சகருக்கும் ஒரு ஓட்டுதான், ராஜேஷ்குமார் படைப்புகளைத் தாண்டாதவருக்கும் அதே ஒரு ஓட்டுதான். இணையத்திலோ சகட்டுமேனிக்கு எழுதித் தள்ளலாம். அதனால் இந்த அணுகுமுறையில் தரமற்ற படைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுவிடுமோ என்று எனக்கு ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அவரது இந்த meta-தரவரிசை அனேகமாக ஒரு நல்ல விமர்சகரின் தர வரிசையாகத்தான் இருந்தது. Wisdom of the Crowds அணுகுமுறை செல்லுபடியாகும் என்று என்னை உணர வைத்தது.

அவரது தேடல் மிக அகலமானது. இணையத்தில் 2003-04 காலத்தில் நான் பூரி என்ற பெயரில் சில விவாதக் குழுமங்களில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் அதைக் கூட தேடிக் கண்டுபிடித்து தனது கணிப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரது பிரபலமான பதிவு – 150 சிறந்த சிறுகதைகள்இங்கே.

அவாது இழப்பு மிக வருத்தம் தருகிறது. எனது அஞ்சலி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

அஞ்சலி – பெ.சு. மணி

ஆவண முக்கியத்துவம் உள்ள நிறைய புத்தகங்களை எழுதிய பெ.சு. மணி தனது 87-ஆவது வயதில் மறைந்தார்.

நம் நாட்டில் மறைந்த தலைவர்களைப் பற்றி எழுதப்படும் புத்தகங்கள் புகழ் மாலைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. (காந்தியும், நேருவும், ஓரளவு ஈ.வே.ரா.வும் மட்டுமே விதிவிலக்கு.) மஹாராஷ்டிரத்தில் சிவாஜி அஃப்சல் கானை வஞ்சகமாகத் தாக்கினார் என்று எழுதிவிட்டு நீங்கள் மும்பை பக்கம் போவது அபாயம். அல்லது ஒரு பக்க சார்புடைய “வரலாறு” பலத்த பிரச்சாரத்தால் நிலைநிறுத்தப்பட்டுவிடுகிறது, அது (முழு) உண்மையல்ல என்று புரிந்து கொள்வதே மிகக் கடினம். ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார் என்று இன்றும் தமிழ்நாட்டில் அனேகர் நம்பத்தான் செய்கிறார்கள்.

பெ.சு. மணியின் முக்கியத்துவம் இங்கேதான். அவருக்கும் பெரும் ஆகிருதி உள்ள தலைவர்களிடம் குறைகளை சுட்டிக் காட்டுவதில் தயக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர் விடாமல் அன்றைய பத்திரிகைகளில், அவருக்கு முன் எழுதப்பட்ட பத்திரிகைகளில் உள்ள விவரங்களை சேகரித்து தன் புத்தகங்களில் பதிவு செய்திருக்கிறார்.

உதாரணமாக வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவி குருகுலத்தில் இரு பிராமணச் சிறுவர்களுக்கு தனிப்பந்தியில் உணவு பரிமாறியது தமிழகத்தில் பெரிய சர்ச்சையை உருவாக்கியது, பிராமண-அபிராமணப் பிரிவை, பிரச்சினைகளை பெரிதாக்கியது. பொதுவாக இருக்கும் பிம்பம் ஐயர் பொதுப்பந்தியில்தான் உணவு பரிமாறப்படும் என்று வாக்குறுதி தந்துவிட்டு தனிப்பந்திக்கு ஏற்பாடு செய்துவிட்டார், அவருக்கு ராஜாஜி உட்பட்ட பிராமண காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தந்தார்கள், அதனால் ஈ.வே.ரா. காங்கிரஸை விட்டு வெளியேறி நீதிக் கட்சியில் சேர்ந்தார், ஈ.வே.ரா.வின் பிராமண வெறுப்பு உறுதிப்பட்டது ராஜாஜி போன்றவர்களும் ஐயரை ஆதரித்ததால்தான் என்பதுதான். அதிலும் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி முதலியாரின் பையன்கள் அவரிடம் தனிப்பந்தி பிராமணப் பையன்களுக்கு மட்டும் நல்ல உணவு (உப்மா?), எங்களுக்கு பழைய சோறு? மாதிரி என்னவோ என்று கண்ணீர் வடித்ததாகவும் அதனால்தான் பிரச்சினை பூதாகாரமாக வெடித்ததாகவும் ஒரு கதை உலவுகிறது. (ஈ.வே.ரா.வே அப்படி சொன்னார் என்று நினைவு.)

அது உண்மைதான், ஆனால் முழு உண்மை அல்ல. ஐயர் பொதுப்பந்தி என்று எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று தெரிகிறது. ஆனால் தனிப்பந்தி தவறான அணுகுமுறை என்று அவரும் உணர்ந்தே இருக்கிறார். ஆசிரமத்தில் ஆளைச் சேர்க்க படாதபாடு பட்டிருக்கிறார், இரு குடும்பத்தினரிடம் தனிப்பந்திக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அப்படி ஒத்துக் கொண்டும் கொஞ்ச நாள் பொதுப்பந்திதான் நடந்திருக்கிறது. குடும்பத்தினரின் வற்புறுத்தலோ, அல்லது கூட இருந்த ஆசாரவாதி மகாதேவ ஐயரின் அழுத்தமோ தனிப்பந்தி ஆரம்பித்திருக்கிறது. ஐயர், அவர் குடும்பத்தினர் அனைவரும் பொதுப்பந்தியில்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். (உப்மா, பழைய் சோறு இத்யாதி யாரோ கட்டிவிட்ட கதை.) ராஜாஜி, டி.எஸ்.எஸ். ராஜன் உட்பட பலரும் தனிப்பட்ட முறையில் கண்டித்திருக்கிறார்கள், ஆனால் பொதுவில் கண்டிக்க தயங்கி இருக்கிறார்கள். இது ஒரு public relations disaster ஆக மாறி இருக்கிறது. ஐயருக்கு அதை எப்படி சமாளிப்பது என்ற ஞானம் இல்லை. அந்த இரு மாணவர்களை விலக்கி இருக்கலாம், பொதுப்பந்தி என்று வற்புறுத்தி இருக்கலாம், இல்லை காங்கிரஸ் கொடுத்த நன்கொடையை திருப்பிக் கொடுத்திருக்கலாம். ஐயர் குழம்பி இருக்கிறார். காவ்யகண்ட சாஸ்திரி என்ற பெரியவர் (பிராமணர்) பொதுப்பந்தியில் ஆதிதிராவிடர் சமைத்து எல்லாரும் சாப்பிடுங்கள் என்று ஒரு வழி சொல்ல, அதை எதிர்த்தவர்கள் அபிராமண தலைவர்கள், மற்றும் அபிராமண சிறுவர்களின் பெற்றோர்கள். வ.வே.சு. ஐயர் சரி என்றிருக்கிறார்! (யார் யார் எதிர்த்தார்கள் என்ற தகவல் இல்லை) ஐயரை எதிர்த்த பல தலைவர்கள் – ஈ.வே.ரா., வரதராஜுலு நாயுடு உட்பட்ட பலர் – அதே காலகட்டத்தில் அவரைப் புகழ்ந்தும் இருக்கிறார்கள். நாயுடு குருகுலத்துக்குப் போய் அங்கே எந்தத் தவறும் நடக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஐயர் இறந்தபோது அவருக்கு ஈ.வே.ரா. எழுதிய அஞ்சலியை நானே படித்திருக்கிறேன்.

பெ.சு. மணி வ.வே.சு. ஐயர் எழுதிய புத்தகத்தில் மேலே சொன்னவற்றில் பல விவரங்கள் இருக்கின்றன. இவற்றை அவர் அன்று வந்து பத்திரிகைக் குறிப்புகளிலிருந்தும் புத்தகங்களிலிருந்துமே சேகரித்திருக்கிறார். ஆச்சரியப்படும் விதத்தில் ஐயர் செய்தது தவறு என்று வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறார். இதனால்தான் அவரது புத்தகங்கள் முக்கியமானவை. வியக்க வைக்கும் படிப்பு, உழைப்பு.

அவரைப் போன்றவர்களின் இழப்பு சுலபமாக ஈடு செய்ய முடியாதது. அவருக்கு என் அஞ்சலி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டி: விக்கி குறிப்பு

ஆ. மாதவன் – அஞ்சலி

மாதவன் மறைந்து ஒரு மாதத்திற்கு மேலாயிற்று. அவரை நான் அதிகம் படித்ததில்லை. நல்ல வேளையாக அவர் எழுதிய புனலும் மணலும் புத்தகம் அலமாரியில் இருந்தது. அதைப் படித்துவிட்டு எழுதலாம் என்று நினைத்தேன். கெட்ட நேரம், அலுவலக வேலைப் பளுவும் அதிகமாக இருந்தது. சின்னப் புத்தகம்தான், ஆனால் படித்து முடிக்கவும் எழுதவும் ஒரு மாதம் ஆகிவிட்டது.

மாதவனின் நாயனம் சிறுகதை ஒன்றைத்தான் நான் முன்னால் படித்திருந்தேன். Minimalist எழுத்து என்றால் அதுதான். எளிய ஒற்றை வரி முடிச்சை எத்தனை சிறப்பாக வடித்திருக்கிறார்! கச்சிதமான எழுத்து. சும்மாவா ஜெயமோகனும் எஸ்ராவும் இதை அவரவர் போட்ட தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்!

ஆனால் ஆ. மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோதுதான் அவரைப் பற்றிய பிரக்ஞை ஏற்பட்டது. (ஜெயமோகனையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தையும் எத்தனை பாராட்டினாலும் தகும்.) புனலும் மணலும் எல்லாம் அதற்குப் பிறகுதான் வாங்கினேன், படிக்க இத்தனை வருஷமாயிற்று. அவர் இருந்திருந்தால் இப்படி எழுத்தாளர் இறந்த பிறகுதான் அவர் எழுதிய புத்தகங்களைப் படித்து அஞ்சலி எழுதும் வாசகன் என்ற கருவை வைத்தே இன்னொரு பிரமாதமான சிறுகதை எழுதி இருப்பார்.

சரி முதலில் புனலும் மணலும் பற்றி:


புத்தகத்தைப் படிக்கும்போதெல்லாம் நாஞ்சில் நாடன் நினைவுதான் வந்து கொண்டே இருந்தது. ஆ. மாதவனுக்கு நாஞ்சில்தான் மிகவும் பிடித்த அடுத்த தலைமுறை எழுத்தாளர். நாஞ்சிலுக்கு ஆ. மாதவன் குரு ஸ்தானத்தில் உள்ளவர். இருவரும் தங்களையே அடுத்தவர் எழுத்தில் கண்டார்களோ என்னவோ.

புனலும் மணலும் ஆற்றை, ஆற்றில் மணல் வாரப்படும் தொழிலை பின்புலமாகக் கொண்டது. நாவலுக்கு பொருத்தமான பேரை வைத்திருக்கிறார். மெய்நிகர் அனுபவத்தை தருவது இலக்கியத்தின் ஒரு முக்கியத் தகுதி. அந்த அனுபவத்தை முழுமையாகத் தரும் எதார்த்தவாத, வட்டார வழக்கு நாவல்.

ஒரு வரியில் கதையை சுருக்கிவிடலாம். தனக்கு மகள் முறை உள்ள, குரூபியான இளம் பெண்ணை வெறுக்கும் அப்பா, அவ்வளவுதான் கதை. பின்புலம் முன்னே சொன்ன மாதிரி “புனலும் மணலும்”. கதையின் பின்புலம் – ஆறு, ஆற்றையும், ஆற்று மணலையும் நம்பி வாழும் பலர் அருமையாக சித்தரிக்கப்படுகிறது. அப்பா அங்குசாமியின் backstory – அவர் விரும்பி மணக்கும் தங்கம்மை, அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள காதல், தங்கம்மையின் அவலட்சண மகள் பங்கி, ஆரம்பத்திலிருந்தே பங்கியை ஒரு தடங்கலாக, இடையூறாக, பல்லில் நிரடும் சிறு கல்லாகப் பார்க்கும் அங்குசாமி, பங்கியை மட்டுமே வெறுக்கும் அங்குசாமி, ஏதோ ஒரு அனாதை தாமோதரனை ஆதரித்து வளர்க்கும் அங்குசாமி, தாமோதரனுக்கும் பங்கிக்கும் இடையே உருவாகும் சகோதர உறவு, அங்குசாமி பங்கியைக் கரித்துக் கொட்டும்போதெல்லாம் வருந்தும் தங்கம்மை, அவளை ஆதரித்துப் பேசும் தாமோதரன், தங்கம்மையின் மரணம், அங்குசாமிக்கு ஏற்படும் கைக்காயம், கைக்காயத்திற்கு பிறகு கஞ்சிக்கும் பங்கி சம்பாத்தியம் தேவைப்படும் நிலை எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. இறுதிக் காட்சியில் பங்கியின் மரணமும் நல்ல அழுத்தமான முடிச்சு.

வட்டார வழக்கும் மிக அருமையாக வந்திருக்கிறது. மிகவும் ரசித்துப் படித்தேன். நாவலின் இறுதியில் நானும் அடிக்கடி “கொள்ளாமே!” என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் என் கண்ணில் இந்த நாவல் குறையுள்ள படைப்பே. 150 பக்கத்தில் 50 பக்கமாவது அங்குசாமி பங்கியை வெறுக்கிறார் என்று திருப்பித் திருப்பி வருகிறது. அது காட்சிகளால் பெரிதாக வேறுபடுத்தப்படவில்லை. அது ஒரு தொழில் நுட்பக் குறைவாகவே பட்டது. உண்மையைச் சொல்லப் போனால் என் புனைவுகளில் எனக்கு ஒரு முடிச்சை இரண்டு முறை கூட பெரிதாக வேறுபடுத்தி சொல்லத் தெரியவில்லை. என்னடா இவருக்கும் இதே பிரச்சினையா என்றுதான் தோன்றியது. நாவலின் பின்புலமும், வட்டார வழக்கும், வாழ்க்கையின் போக்கும்தான் நாவலைக் காப்பாற்றுகிறது.

ஜெயமோகன் தனது சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இந்த நாவலைக் குறிப்பிடுகிறார். எஸ்ராவின் பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

புனலும் மணலும் நாவலை 1974-இல் முதலில் வெளியிட்டது லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர் வட்டம்!


மாதவனின் சுவாரசியமான ஆளுமையாக இருந்திருப்பார். பூர்வீகம் செங்கோட்டை. என் அப்பாவுக்கும் அவருக்கும் ஒரே வயதுதான். திருவனந்தபுரத்தில் பிறந்து, வளர்ந்து, வணிகராக வாழ்ந்திருக்கிறார். ஜெயமோகன் தளத்தில் அவரது விரிவான பேட்டி (பகுதி 1, 2, 3) வந்திருக்கிறது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அவரது ஆளுமையைப் புரிந்து கொள்ள ஜெயமோகனின் இந்தப் பதிவைப் படியுங்கள். அவரது இந்தப் பேட்டியும் உதவலாம்.

அந்த வணிகப் பின்புலத்தை வைத்து நிறைய சிறுகதைகள் எழுதி இருக்கிறார். கடைத்தெரு கதைகள் முக்கியமான சிறுகதைத் தொகுப்பாம். நாயனத்தைத் தவிர பூனை, பதினாலுமுறி, புறா முட்டை, தண்ணீர், அன்னக்கிளி ஆகிய சிறுகதைகளை ஜெயமோகன் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்ரா பட்டியலில் நாயனம் மட்டும்தான்.

கிருஷ்ணப்பருந்து (1980) அவருடைய சிறந்த நாவலாகக் கருதப்படுகிறது. எஸ்ரா அவரது சிறந்த 100 தமிழ் நாவல்கள் பட்டியலில் இதைச் சேர்த்திருக்கிறார். அ. முத்துலிங்கம் நாவலைப் படித்த அனுபவத்தை இங்கே விவரிக்கிறார். ஜெயமோகன் வார்த்தைகளில்:

திருவனந்தபுரம் காலை பஜாரில் கடை வைத்திருக்கும் ஆ.மாதவன் நாற்பது வருடங்களாக திரும்பத் திரும்ப அதைப் பற்றி மட்டுமே எழுதுபவர். தெருவில் வாழும் ‘உயிர் வாழ்தல் போட்டி’, அதன் ஆழத்து இருள் சலனங்கள். இந்நாவலும் அதுவே. இந்நாவலில் வரும் சாமியார் தன் வீட்டில் மாட்டியுள்ள நிர்வாணப் பெண்ணின் படத்திலிருந்து நாவலை மீண்டும் புதிதாகப் படிக்கலாம். ஆ.மாதவனின் சாதனை என்றால் இப்படைப்புதான்.

தி.ஜா.வும் இந்த நாவலை பெரிதாகப் பாராட்டி மாதவனுக்கே 1982-இல் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்திலிருந்து:

இரு மரபுகள் இரு மொழிகளின் கலப்பில் பிறந்த மனிதர்கள், வாழ்க்கை, சிந்தனை முறைகள், இவற்றை அப்படியே சித்தரித்திருக்கிறீர்கள். என் போன்றவர்களுக்கு இது புதிய அனுபவம். வெறும் புறத்தை மட்டுமின்றி இந்த சங்கமத்தின் ஆழங்களை, சிரத்தையோடும் உண்மையில் ஆர்வத்தோடும் நீங்கள் எடுத்துக்காட்டி இருப்பது சும்மா புகைப்படம் போல் இல்லாமல் ஒரு கலைஞரின் தேர்வோடும் அர்த்தப்படுத்தும் திறமையோடும் பிரகாசமாக வந்திருக்கிறது. படித்து முடித்து நினைக்கும்போது, அங்கெல்லாம் மீண்டும் ஒருமுறை வந்து தங்க ஆசை எழுகிறது. குருஸ்வாமியும் அவர் இதயமும்தான் இந்த நாவலின் கதாநாயகர்கள் என்றாலும் ஒரு நாவலின் சுற்றுப்புறம், உபநாயகர்கள், எல்லோருமே கதாநாயகர்களாகத்தான் இருக்கமுடியும். இவை இல்லாவிட்டால், ஒரு கதாநாயகன் ஓங்கி உருவாக முடியாது. அதில் உங்கள் நாவல் வெற்றி பெறுகிறது.

மாதவனின் பாச்சி, சாத்தான் திருவசனம் ஆகிய சிறுகதைகள் அழியாச்சுடர் தளத்தில் கிடைக்கின்றன. பாச்சி சிறுகதையில் நாணுக்குட்டனுக்கு இனி வேலையும் மாதச் சம்பளமும் உண்டா என்ற கேள்வியைப் பற்றி ஒரு வரி கூட கதையில் கிடையாது, ஆனால் கதை முழுவதும் அந்தக் கேள்வியின் அழுத்தம்தான் விரவிக் கிடக்கிறது. மிகத் திறமையான எழுத்து.

மாதவனுக்கு 2015-க்கான சாஹித்ய அகடமி விருது – இலக்கியச் சுவடுகள் என்ற திறனாய்வு நூலுக்காக – கிடைத்தது. தேர்ந்தெடுப்பவர்கள் கமிட்டியில் நாஞ்சில் நாடனும் இருந்தார்!

மாதவனின் படைப்புலகத்தை அணுக, புரிந்து கொள்ள அவருடைய இந்தப் பேட்டி, நாஞ்சில் எழுதிய இந்தப் பதிவு, எஸ்ரா எழுதிய கட்டுரை, சுகுமாரன் எழுதிய பதிவு, விகடனில் இந்தக் கட்டுரை ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆ. மாதவன் பக்கம், அஞ்சலிகள்

அஞ்சலி: சோலை சுந்தரப்பெருமாள்

தஞ்சை மாவட்டத்தில் நில உடமையாளர்களின் அடக்குமுறைகளை ஆவணப்படுத்திய சோலை சுந்தரப்பெருமாள் மறைந்தார்.

சுந்தரப் பெருமாளின் புத்தகங்களில் இலக்கிய நயமோ, மானுட தரிசனமோ பெரிதாக வெளிப்படுவதில்லை. அவருடைய முக்கியத்துவம் அவரது புத்தகங்களை ஏறக்குறைய ஆவணமாகவே பார்க்க முடியும் என்பதுதான். உதாரணமாக அவரது தப்பாட்டம் நாவலில் பள்ளர் பறையர்களுக்காக உதவும் கதாபாத்திரம் “உயர்ஜாதிக்காரர்”, மூப்பர் ஜாதியினர். அவரது புத்தகங்களின் நம்பகத்தன்மை இந்த மாதிரி உண்மையான சித்திரங்களால் அதிகரிக்கிறது. அவரது நாவல்களில் மெய்நிகர் சித்திரம் கிடைத்துவிடுகிறது.

கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதைப் பற்றி எனக்குத் தெரிந்து மூன்றே மூன்று நாவல்கள்தான் எழுதப்பட்டிருக்கின்றன. குருதிப்புனல் இ.பா.வுக்கு சாஹித்ய அகடமி பரிசு பெற்றுத் தந்தது. ஆனால் அது இலக்கியமாகவும் சரி, ஆவணமாகவும் சரி எனக்கு உயர்ந்த இடத்தில் இல்லை. கீழ்வெண்மணியைப் பற்றி எழுதியதுதான் பெரிய விஷயமாகத் தெரிந்தது, தெரிகிறது. பாட்டாளி என்பவர் கீழைத்தீ என்ற நாவலை எழுதி இருக்கிறாராம், நான் படித்ததில்லை.

சோலை சுந்தரப்பெருமாளின் செந்நெல் எனக்கு முக்கியமான இடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இலக்கியமாக உயர்ந்த இடத்தில் இல்லைதான். ஆனால் முக்கியமான ஆவணம். நம்பகத்தன்மை அதிகம். எரிக்கப்பட்ட ஒருவரின் தம்பியோ, பக்கத்து வீட்டுக்காரரோ நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியதைப் போல இருக்கும்.

தப்பாட்டம், செந்நெல் இரண்டு நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். நான் படிக்க விரும்பும் புத்தகம் தாண்டவபுரம். ஞானசம்பந்தர் தொன்மத்தை மறுவாசிப்பு செய்திருக்கிறாராம்.

அவரது பெயரிலிருந்து அவர் சுந்தரப்பெருமாள் கோவில் ஊர்க்காரன் என்று யூகிக்கிறேன். சுந்தரப்பெருமாள் கோவில் காலம் சென்ற கருப்பையா மூப்பனாரின் சொந்த ஊரும் கூட. மூப்பனார் குடும்பம் அங்கே பல தலைமுறைகளாக பெரும் பண்ணையார்கள்.

என்னைப் பொறுத்த வரை எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி எழுதுவதுதான். அவரது தப்பாட்டம் என்ற நாவலைப் பற்றி முன்பு எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.


தப்பாட்டம் 2002-இல் தஞ்சை மாவட்ட ஜாதீயப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது.

தஞ்சாவூருக்கு அருகே ஒரு சின்ன கிராமம்தான் கதை நடக்கும் இடம். ஊரில் பெரிய மனிதர்கள் மூப்ப ஜாதியினர். அடுத்த இடத்தில் அம்பலக்காரர்கள். பள்ளர், பறையர், சக்கிலியர் மூன்று ஜாதியினரும் உண்டு. மூப்பர்களுக்கும் அம்பலக்காரர்களுக்கும் கொஞ்சம் புகைச்சல் உண்டென்றாலும் மற்றவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இரட்டைக் குவளை டீக்கடை மாதிரி விஷயங்கள் சர்வசாதாரணம். சுந்தரமூர்த்தி வாத்தியார் பிறப்பால் மூப்பர் என்றாலும் கம்யூனிஸ்ட். ஜாதி வித்தியாசம் ஒழியவும், கம்யூனிஸ்ட் கட்சி வளரவும், எல்லாருக்கும் – மூப்பரிலிருந்து சக்கிலியர் வரை எல்லா ஜாதிக் குழந்தைகளுக்கும் உயிரை விட்டு படிப்பு சொல்லித் தருபவர். அவரால் பல மூப்பர் வீட்டுக் குழந்தைகள் பயன் அடைந்திருப்பதால் அவர் மேல் ஊர் பெரிய மனிதர்களுக்கு இருக்கும் எரிச்சல் அவ்வப்போது நொந்து கொள்வதற்கு மேல் போவதில்லை. மெதுமெதுவாக சின்னச் சின்ன தகராறுகள் மூலம் “கீழ்” ஜாதியினர் அடக்குமுறையை எதிர்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வளர்கிறது. அதை மும்முரமாக எதிர்க்கும் “மேல்” ஜாதியினர்.

கதை முக்கியமில்லை. கதை காட்டும் சித்திரம்தான் முக்கியம். ஒரு மெய்நிகர் வாசக அனுபவத்தைத் தருகிறார். ஆனால் அவரால் மனித மனதின் ஆழத்துக்குள் போக முடியவில்லை. மேலோட்டமாகத்தான் அவன் அடக்குமுறை செய்பவன், இவன் அடக்கப்படுபவன் என்ற அளவில்தான் எழுத முடிகிறது. இது புறவயமான உலகம் பற்றிய நாவல் மட்டுமே. வரவர எல்லா நாவலிலும் அகவயமான உலகம் தெரியாவிட்டால் திருப்தியாக இல்லை. சில சமயம் அதைத் தாண்ட முயற்சித்தாலும் – உதாரணமாக, தப்பு வாத்தியத்தை, அதை வாசிப்பதை எதிர்ப்பின் குறியீடாக காட்ட முயற்சிக்கிறார், அதெல்லாம் சரியாக வரவில்லை. நாவலின் பலமே சமீப காலத்தில் கூட, அனேகமாக இன்று கூட, நமக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் கூட, இப்படிப்பட்ட ஜாதீய வன்முறைகள் நடப்பதை தோலுரித்துக் காட்டுவதுதான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பெருமாளின் இன்னொரு புத்தகமான பெருந்திணைக்கும் ஆவண முக்கியத்துவம்தான். ஒரு பண்ணை, அதன் பறைய ஜாதி உழைப்பாளிகள். பல ஜாதி முறைப் பழக்கங்களை ஆவணப்படுத்துகிறார். ஆனால் நயம் இல்லாத புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

வேதசகாயகுமார் – அஞ்சலி

வேதசகாயகுமாருக்கு பல முகங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித் தேடிப் பதிப்பித்த முன்னோடி அவர். எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அதுவே அவரது முதன்மையான அடையாளம்.

அவரது தேடல் அபூர்வமானது. அர்ப்பணிப்பு மிகுந்தது. கிடைத்தால் படிப்போம், இல்லாவிட்டால் இல்லை என்று என் போல சோம்பிக் கிடப்பவர் அல்லர். ஆராய்ச்சி மாணவரான அவரை வ.ரா.வின் மனைவி வீட்டுக்குள் விட மறுத்தபோது வீட்டுவாசலில் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்து அவரது மனதை மாற்றி இருக்கிறார். எதற்காக? வைக்கோல் போர் போலக் குவித்து வைக்கப்பட்டிருந்த இதழ்களைத் தேடுவதற்காக. மணிக்கொடி இதழ்கள் சுலபமாகக் கிடைத்தனவாம், அவரது மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது.

அன்று என் கையில் 5000 ரூபாய் இருந்திருந்தால் வ.ரா. சேகரித்து வைத்திருந்த (பாரதி முன்னின்று நடத்திய) இந்தியா பத்திரிகை இதழ்களை வாங்கி இருப்பேன் என்று அவர் வருத்தப்படுவது உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சி.

இதே போல ரோஜா முத்தையாவும் அவருக்கு முதலில் ஒத்துழைப்பு தரவில்லை. பிறகு நிறைய உதவி செய்திருக்கிறார்.

ஒரு மாணவர் – அதுவும் தமிழில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருப்பவர் – அதுவும் எழுபதுகளில் – புதுமைப்பித்தன் வீடு எங்கே, சி.சு. செல்லப்பா வீடு எங்கே, வ.ரா. வீடு எங்கே, பி.எஸ். ராமையா வீடு எங்கே, பத்திரிகை அலுவலங்கள் எங்கே, பழைய புத்தகக் கடை எங்கே என்று அலைந்த திரிந்து இத்தனை சேகரித்தார் என்றால் அவர் எவ்வளவு பாராட்டப்பட வேண்டும்? அவருக்கு அவருக்குரிய இடம் கிடைத்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

அழியாச்சுடர்களின் தனது தேடலின் கதையை விவரித்திருக்கிறார். திண்ணை தளத்தில் சிறு வேறுபாடுகளுடன் இதே கட்டுரை இருக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்னாளில் ஆ.இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு பதிப்பகம் மூலமாக கொண்டு வந்த செம்பதிப்புதான் இன்றைக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகளுக்கு gold standard. ஆனால் அதன் பின்னால் வேதசகாயகுமாரின் பெரும் உழைப்பு இருக்கிறது. சலபதி போகிறபோக்கில் casual ஆக வேதசகாயகுமாரின் பங்களிப்பைப் குறிப்பிடுவது பெரிய அநியாயம்.

அவருடைய குணாதிசயங்களை, சில ஆய்வுகளை நாஞ்சிலும் ஜெயமோகனும் முறையே இங்கே மற்றும் இங்கே (1, 2) விவரிக்கிறார்கள். படுசுவாரசியமான ஆளுமையாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நாஞ்சில் குறிப்பிடும் அவரது எக்கர் புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்…

வேதசகாயகுமாருக்கு என் உளமார்ந்த நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்