தி.ஜா. 1982-இல் மறைந்தபோது அசோகமித்ரன் எழுதிய அஞ்சலி: (கல்கிக்கு நன்றி).
ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடீரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது.
அசோகமித்ரன் இதை விட உணர்ச்சிகரமாக எழுதியது அபூர்வம்தான் என்று நினைக்கிறேன். இத்தனை அடக்கி வாசிப்பது எத்தனை உணர்வுபூர்வமான தருணமாக இருக்கிறது!
(சாஹித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு) மறுக்கப்பட்ட பல் ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்களை யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.
என்ற வரிகள் தி.ஜா.வை விட அசோகமித்திரனின் ஆளுமையைத்தான் வெளிப்படுத்துகின்றன. தி.ஜா.வுக்கு விருது தரப்பட தாமதம் என்பதை எத்தனை மென்மையாகச் சொல்கிறார்? அசோகமித்ரனால் முடிந்த கடுமையான விமர்சனமே இவ்வளவுதான் என்று நினைக்கிறேன்.
அசோகமித்திரனின் கதைகளில்தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று பார்த்தால் அவர் வாழ்விலுமா? சிதம்பர சுப்ரமணியனைத் தேடி அலைந்ததை விவரிக்கிறார் – அவரது டச் தெரியும் வரிகள்
ஒரு வாரம் பொறுத்து சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்ரமணியன் வீட்டுக்குப் போனேன். அந்தத் தெருவே வேறு. அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகிவிட்டிருந்தார்.
எழுத்தாளர் ராஜரங்கன் என்று குறிப்பிடுகிறார். யார் என்றே தெரியவில்லை.
தி.ஜா. தஞ்சாவூரின் மண் வாசனையை எழுத்தில் கொண்டு வந்தவர் என்பதை விட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு நவீன வாழ்க்கையின் சவால்களோடு செய்து கொள்ளும் சமரசங்களை எழுதியவர் என்கிறார். மிகச்சரி. கி.ரா. கரிசல் மண் வாசனையை எழுத்தில் கொண்டு வந்தார்; தி.ஜா. அந்த பாரம்பரியத்திற்கு உள்ள சவால்களை எழுதினார் என்பது நல்ல அவதானிப்பு.
அசோகமித்திரன் அம்மா வந்தாளை விட உயிர்த்தேனை உயர்வாக மதிப்பிடுகிறார் என்பது வியப்பு. அவர் சிறுகதைகளைப் பற்றி சொல்லவே இல்லை என்பது பெருவியப்பு!
வசதிக்காக கீழே.
ஒருவர் அந்தரங்கமாகப் பழகிவிட்டால் அவர் பேராற்றல் படைத்தவரானாலும் அவருடைய மனிதப் பண்புகள்தான் முதலில் நினைவு வருகிறது. வியாழன் நவம்பர் 18 பிற்பகல் சுமார் 1 மணிக்கு தி. ஜானகிராமன் இறந்துட்டார் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது அவர் எனக்காக வெயிலில் வாடி வதங்கிய தருணங்கள்தான் உடனே மனதில் தோன்றின. ஏனோ நாங்கள் இருவரும் நெடுநேரம் பேசியதெல்லாம் நல்ல வெயில் நேரமாக இருந்திருக்கிறது. அவர் டில்லிக்குக் குடி போகும் முன் சென்னையில் வசித்த நாட்களில் சைக்கிளில்தான் எங்கும் போவார், வருவார். இருபது வருடங்களுக்கு மேலாகிறது – என்னுடைய கதை முதன்முதலாக இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வெளியாகி இருந்தது. ஜானகிராமன் வழியில் என்னைப் பார்த்து சைக்கிளை நிறுத்தினார். நல்ல புரட்டாசி வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவருக்கு மிகவும் பெருமை, சந்தோஷம்.
இன்னொரு சித்திரைப் பகல். கடுமையான வெயில். “சிதம்பர சுப்ரமணியத்துக்கு உடம்பு சரியில்லையாம். போய்ப் பார்த்துவிட்டு வருவோம்.” என்றார். அவர் வைத்திருந்த முகவரிக்குப் போனோம். அங்கு சிதம்பர சுப்ரமணியன் இல்லை. அடுத்த வீட்டுக்குப் போனோம். அங்கும் இல்லை. ஒவ்வொரு வீடாக அந்தத் தெருவில் இருந்த அனைத்திலும் விசாரித்தோம். எழுத்தாளர் சிதம்பர சுப்ரமணியன் பற்றிக் கேள்விப்பட்டது கூடாது. அன்று மாலையே ஜானகிராமன் டில்லி திரும்ப வேண்டி இருந்தது. ஒரு வாரம் பொறுத்து சரியான முகவரி தெரிந்து கொண்டு நான் சிதம்பர சுப்ரமணியன் வீட்டுக்குப் போனேன். அந்தத் தெருவே வேறு. அவரை எனக்குப் பார்க்க வாய்ப்பில்லை. அன்று அவர் காலமாகிவிட்டிருந்தார்.
இந்தத் தீபாவளிக்கு மறு நாள் நானும் எழுத்தாளர் ராஜரங்கனும் ஜானகிராமனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் வீட்டில் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நெருக்கடி ஒன்றும் இல்லை. சில பரிசோதனைகளை ஒழுங்காகப் செய்து பார்க்கத்தான். நல்ல வெயில், இப்போது சிரமப்படுத்த வேண்டாம், ஒரு மாலைப் பொழுதில் போய்ப் பார்க்கலாம் என்று திரும்பி வந்துவிட்டோம். அந்த மாலை வருவதற்குள் அவர் போய்விட்டார்.
ஜானகிராமனின் கலையுணர்வு அவருடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் எல்லாருக்கும் தெரியக் கிடைக்கும். ஆனால் சாதாரண அன்றாடப் பேச்சு வார்த்தைகளிலும் செய்கைகளிலும் கூட அவருடைய மென்மையான, பண்பட்ட தன்மை அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும். அவருக்கு யாரையும் வெறுக்க முடிந்திருக்க முடியாது. அதனால்தான் அவருடைய படைப்புகளிலும் முற்றிலும் தீய பாத்திரம் என்று ஒன்று கிடையாது. குரோதமும் துவேஷமும் எப்போதோ வெளிப்பட சந்தர்ப்ப சூழ்நிலைதான் காரணம்.
ஜானகிராமன் நிறைய எழுதியும் சாவு அவருடைய கவனத்தை அதிகம் பெற்றதில்லை. மனித சிருஷ்டியின் நிரந்தரத்தன்மைதான் அவருள் நிறைந்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மண் வாசனையை தமிழ் உரைநடையில் வார்த்தவர் என்று எல்லாரும் அவரை அடையாளம் கூறுகிறார்கள். அதை விட தஞ்சாவூர் போன்ற நீண்ட பாரம்பரியம் உடைய கலாசாரத்தின் பிரதிநிதிகள் சமரசங்கள் மிகுந்த இன்றைய வாழ்க்கையில் தங்களை பொருத்திக் கொள்ள முயலும் ஆழ்ந்த துன்பத்தைத்தான் அவர் பிரதிபலிக்க முயற்சி செய்தார் என்பதுதான் பொருத்தமானது.
ஜானகிராமனின் பெண் பாத்திரங்கள் பெரிதும் விவாதிக்கப்பட்டவை. ஜானகிராமனின் மகோன்னதப் பாத்திரங்களும் பெண்கள்தான். அவருடைய சிறந்த படைப்புகளாக மோகமுள்ளையும் அம்மா வந்தாளையும் கூறுகிறார்கள். ஆனால் அவரது பாத்திரங்கள் பரிபூரணமாக வெளிப்பட்ட நாவல் உயிர்த்தேன் என்றே தோன்றுகிறது.
ஜானகிராமன் எழுதின நாடகங்கள் (நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியர், டாக்டருக்கு மருந்து) எஸ்.வி. சஹஸ்ரநாமத்திற்காக அவரது உந்துதலில் எழுதப்பட்டவை. ஜானகிராமனோடு நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்பு ஏற்பட்டதே சஹஸ்ரநாமம் வீட்டில்தான். கலாசாகரம் ராஜகோபால், என்.வி. ராஜாமணி, கு. அழகிரிசாமி, பி.எஸ். ராமையா, முகவை ராஜமாணிக்கம் என ஒரு தமிழ்க் கலை இலக்கியத்திற்கு சஹஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் மையமாக இருந்தது.
யாரையும் உற்சாகப்படுத்துவது ஜானகிராமனின் இயல்பு. அதனாலேயே ஒவ்வொரு தலைமுறையிலும் அவருக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு. பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் அவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு ரசிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளில் இலக்கியக் குழுவினர் மதிக்கும் தமிழ் எழுத்தாளர்களில் அவர் தனி இடம் பெற்றவர்.
சாஹித்ய அகாடமி பரிசு ஜானகிராமனுக்கு அளிக்கப்பட்டது பற்றி எல்லா அரசு செய்தி ஸ்தாபனங்களும் குறிப்பிட்டிருக்கின்றன. ஆனால் அது அவருக்கு மறுக்கப்பட்ட பல் ஆண்டுகளில் அகாடமி குழுவினரின் விவாதங்களை யாராவது வெளிப்படுத்த முடியுமானால் பல விசித்திரமான தகவல்கள் தெரிய வரலாம்.
மரணம் எப்போது நேர்ந்தாலும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஜானகிராமன் மறைவு பற்றி கேள்விப்பட்டதும் நானும் ஐய்யய்யோ என்றுதான் கத்தினேன். வெயில் திடீரென்று சகிக்க முடியாத தீவிரத்தை அடைந்த மாதிரி இருந்தது.
ஜானகிராமன் கடைசி முறையாக சுவாசம் விட்டு அமைதி அடைந்த போதும் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது.
நவம்பர் 19, 1982
அசோகமித்திரன்
அசோகமித்திரன் எழுதிய வெகுஜனப் பத்திரிகை குமுதம் ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன். குறைந்த பட்சம் கல்கியிலும் எழுதி இருக்கிறார். அவரது (சுமாரான) சிறுகதை ஒன்றும் – பளு – கண்ணில் பட்டது.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், தி.ஜா. பக்கம், அசோகமித்ரன் பக்கம்
தொடர்புடைய சுட்டிகள்: