நல்லை அல்லை – குறுந்தொகை 47

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

காட்டில் கருமையான அடிமரம் உள்ள வேங்கை மரங்கள். அவற்றிலிருந்து மஞ்சள் நிறப் பூக்கள் பாறை மீது விழுந்து கிடக்கின்றன. நிலவொளியில் பார்த்தால் புலிக்குட்டி போல தோற்றமளிக்கிறது. காட்டு வழியே நடந்து வருபவர்கள் அஞ்சமாட்டார்களா? களவுமுறை உறவு கொள்ள வரும் தலைவனுக்கு வரத் தாமதம் ஆகிறதே! என் தலைவிக்கு நீ நல்லை அல்லை வெண்ணிலவே!

அருமையான காட்சி. நேரடியாகச் சொல்லப்படுவதை விட நாமாக உணர்வதுதான் இந்தக் கவிதையின் அழகு. நிலவொளியில் தலைவன் அஞ்சலாம், தாமதம் ஆகலாம் என்பதுதானா தோழியின் குறை? நிலவொளியில் அவன் வருவதை ஊரார் பார்த்துவிடப் போகிறார்களே என்றுதானே சொல்லாமல் சொல்கிறாள்? சீக்கிரம் மணம் செய்து கொள் என்று குறிப்பா? சொல்லும் ஒரு வார்த்தையிலிருந்து நம்மை இத்தனை யோசிக்க வைக்கிறாள்! காட்சியும் மிகவும் அருமை. நிலவு, கரிய பாறை மீது மஞ்சள் நிறப் பூக்கள்…

பாடியவர் பெயர் தெரியவில்லை. நெடுவெண்ணிலவினார் என்றே அழைக்கப்படுகிறார். குறிஞ்சித்திணை.

வேங்கை மரத்துக்கு ஆங்கிலத்தில் Malabar Kino என்று பேராம்.

கவிதைக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் நம்மில் எத்தனை பேர் “நல்லை அல்லை” என்று இந்தப் பாட்டு வருவதற்கு முன் கேட்டிருப்போம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

நூலகத்திலிருந்து எட்டு மில்லியன் திருட்டு

அது என்னவோ ஒரு வாரமாக நூலகத்திலிருந்து திருட்டு என்று செய்தியாக கண்ணில் படுகிறது. போன் பதிவில் ஐம்பது வருஷத்துக்கு முந்தைய திருட்டு. இந்தத் திருட்டு ஐந்து வருஷத்துக்கு முன்னால்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது, ஆனால் இருபது முப்பது வருஷங்களாக நடந்த திருட்டு. அது அசோகமித்திரன் கதை போல வாழ்க்கையின், திட்டங்களின் அபத்தத்தைக் காட்டுகிறது. இது ஷெர்லக் ஹோம்ஸின் புகழ் வெற்ற வசனத்தை நினைவுபடுத்துகிறது – When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth.

நூலகம் பிட்ஸ்பர்கில் உள்ள கார்னகி நூலகம். பல அரிய புத்தகங்கள் இருந்திருக்கின்றன. 1644-இல் பதிக்கப்பட்ட Blaeu Atlas. 276 maps – அன்றைய ஐரோப்பியர்களுக்கு தெரிந்த உலக்த்தைப் பற்றிய முழு விவரங்களுக்கும் இருந்திருக்கின்றன. “செவ்விந்தியர்களின்” 1500 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புத்தகம். (272 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கின்றன, 2012-இல் ஒரு பிரதி கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டிருக்கிறது). புகழ் பெற்ற ஓவியர்/உயிரியல் ஆராய்ச்சியாளர் ஆடுபானின் புத்தகம் ஒன்று. சர் ஐசக் நியூட்டன், அமெரிக்காவின் இரண்டாவது ஜனாதிபதி ஜான் ஆடம்ஸ், மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்சன், பொகோஷியோ எழுதிய டெகமெரானின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஆடம் ஸ்மித் எழுதிய Wealth of Nations, ஜார்ஜ் எலியட் எழுதிய Silas Marner போன்ற பல புத்தகங்களின் மிக அரிய first editions…

அஜாக்கிரதையா? இல்லவே இல்லை. 1992-இல் க்ரெக் ப்ரையோரே (Greg Priore) என்பவர் நூலக அதிகாரியாக சேர்ந்திருக்கிறார். பார்த்து பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அரிய புத்தகங்கள் ஆலிவர் ரூம் என்ற அறையில் இருக்கின்றன. அதன் உள்ளே வர ஒரே ஒரு வழிதான். வெகு சில சாவிகளே உள்ளன. நாளில் சில மணி நேரம் மட்டுமே அறை திறந்திருக்கும். அந்த நேரத்தில் ப்ரையோரே அங்கே உட்கார்ந்து வருபவர் போகிறவர்களைக் கண்காணிப்பார். உள்ளே நுழைபவர்கள் கையெழுத்திட வேண்டும். தங்கள் கோட்டுகள், பைகள் எல்லாவற்றையும் வெளியே வைத்தாக வேண்டும். உங்களுக்கு புத்தகம் வேண்டுமென்றால் ப்ரையோரேவைக் கேட்க வேண்டும். அவர்தான் எடுத்துத் தருவார். திரும்பித் தரும்போது புத்தகத்தை நன்றாக சரிபார்ப்பார். புகைப்படங்கள் நிறைந்த புத்தகத்திலிருந்து எதையும் கிழித்துவிட்டார்களா என்று பார்த்துக் கொள்வார். காமெராக்கள் அறையில் நடப்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

பிறகு எப்படித்தான் திருட்டு நடந்தது? When you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth. திருடியது ப்ரையோரேவேதான். Roger Ackroyd நாவலைத்தான் நினைத்துக் கொண்டேன்.

ப்ரையோரேவின் பிள்ளைகள் கொஞ்சம் பணச் செலவு பிடிக்கும் பள்ளிகளில், கல்லூரிகளில் படித்தார்கள். பணம் பத்தவில்லை. என்ன செய்வது? அவ்வப்போது ஒரு அரிய புத்தகத்தை, இல்லாவிட்டால் புத்தகத்திலிருந்து ஒரு ஓவியத்தை, ஃபோட்டோவை கிழித்துக் கொண்டு போய் விற்றிருக்கிறார். நாலைந்து வருஷம் முன்னால் ஆடிட் நடந்தபோது பிடிபட்டிருக்கிறார். சோகம் என்னவென்றால் அவருக்கு வீட்டுச் சிறை என்று ஒரு வருஷம் மட்டுமே தண்டனை.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: நூலகத் திருட்டு

கூடன்பர்க் பைபிள் திருட்டு

கூடன்பர்க் முதன்முதலாக புத்தகங்களை அச்சிட்டவர். முதலில் அச்சிடப்பட்ட புத்தகம் பைபிள்தான். 1455-இல் அவர் அச்சிட்ட பைபிளுக்கு உலகில் 47 பிரதிதான் இருக்கிறதாம். (எங்கோ 48 பிரதி என்றும் படித்தேன்). அதில் ஒன்று ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் இருக்கிறது.

1969-இல் விடோ அராஸ் அதைத் திருட முயன்றிருக்கிறான். அப்போது அவனுக்கு வயது 19. அன்று சிசிடிவி காமெராக்கள், எச்சரிக்கை மணிகளும் (alarm) கிடையாது. இரண்டு பெருங்கதவுகளுக்குப் பின்னால் இரட்டை அடுக்கு கண்ணாடிப் பேழை ஒன்றில் பைபிள் இருக்கிறது. கதவுகளுக்கு நூலகத்தின் மற்ற பூட்டுகள் மாதிரி இல்லாமல் வேறு விதப் பூட்டு. ஜன்னல்கள் தரையிலிருந்து ஐம்பது அடி உயரத்தில், எல்லாவற்றிலும் இரட்டை அடுக்கு கண்ணாடி.

அராஸின் திட்டம் மிக எளிமையானது. ஒரு நாள் மாலை நூலகத்தின் கழிப்பறை ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். ஒரு முதுகுப்பையில் (backpack) சின்ன சுத்தியல், ஸ்க்ரூட்ரைவர், டேப், முடிச்சுகள் உள்ள பலமான 40 அடி நீளக் கயிறு இத்யாதி. இரவு பத்து மணிக்கு கழிப்பறையின் ஜன்னல் மூலம் நூலகத்தின் கூரையில் ஏறுகிறான். அங்கே கயிறைக் கட்டுகிறான். கயிற்றில் இருக்கும் முடிச்சுகளை கைப்பிடியாகவும் கால்பிடியாகவும் பயன்படுத்தி கீழே இறங்குகிறான். கயிறு முடியும் இடம் ஜன்னல். ஜன்னலின் ஆறடி உயர வெளிக்கண்ணாடி மீது டேப்பை ஒட்டுகிறான். அதை உடைக்கும்போது கண்ணாடி சிதறல்கள் வெளியே விழாமல் டேப் தடுக்கிறது. உள்ளே சென்று உள்கண்ணாடியின் ஒரு சின்ன பகுதியை உடைக்கிறான். புத்தகம் இருக்கும் கண்ணாடிப் பேழைக்குப் போய்விட்டான். அடுத்தப்படி பேழையையும் உடைத்து புத்தகத்தை எடுத்து தன் முதுகுப்பையில் திணித்துக் கொள்கிறான். வந்த வழியே திரும்பி மீண்டும் கயிறு வழியாக மேலே ஏற ஆரம்பிக்கிறான்.

புத்தகம் அல்ல. புத்தகங்கள். புதிய ஏற்பாடு ஒரு புத்தகம், பழைய ஏற்பாடு ஒரு புத்தகம். அவன் கணிக்கத் தவறியது இந்தப் புத்தகங்களின் எடை. இரண்டும் சேர்ந்து 25 கிலோ இருக்கும். இந்த எடையைத் தூக்கிக் கொண்டு மேலே ஏற முடியவில்லை. கீழேயும் இறங்க முடியாது. ஏனென்றால் கயிறு ஜன்னல் வரைக்கும்தான் இருக்கிறது, அதற்குக் கீழே ஐம்பது அடி. வசமாக மாட்டிக் கொண்டான்.

கடைசியில் எடை தாங்காமல் கீழே விழுகிறான். தலையில், தொடையில் எலும்பு முறிவு. இவனது முனகல்கள் கேட்டு காவலாளிகள் வந்து இவனைக் காப்பாற்றி இருக்கிறார்கள். உண்மையில் அவனைக் காப்பாற்றியது அந்தப் புத்தகங்கள்தான், அவற்றின் மேலாகத்தான் விழுந்திருக்கிறான். புத்தகங்களுக்கு சின்ன அளவில் சேதம்.

இதை அசோகமித்திரனோ, முத்துலிங்கமோ சிறுகதையாக எழுதி இருந்திருந்தால் பெரிதும் சிலாகித்திருப்பேன். Truth is indeed stranger than fiction…

நீதிமன்றத்தில் மனநிலை சரியில்லை என்று விடுதலை அடைந்திருக்கிறான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

தொடர்புடைய சுட்டி: ஹார்வர்டில் திருட்டு 1, ஹார்வர்டில் திருட்டு 2

நீதிமன்றத்தில் சோ. தர்மனின் முகநூல் பதிவு

மகிழ்ச்சி அளித்த செய்தி. சோ. தர்மனி ஃபேஸ்புக்கில் எழுதிய ஒரு பதிவை நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் verbatim மேற்கோளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சோ. தர்மனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து கட்-பேஸ்ட்.

இன்று காலையிலேயே இரண்டு மூன்று வக்கீல்களிடமிருந்து ஃபோன் அழைப்புக்கள். வாழ்த்து தெரிவித்தார்கள். ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அதாவது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜி.ஆர். சுவாமிநாதன் என்கிற நீதியரசர் என்னுடைய முகநூல் பதிவை மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பதாகச் சொல்லி தீர்ப்பின் நகலை எனக்கு அனுப்பினார்கள்.
பதினோரு பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் என் முகநூல் பதிவை அப்படியே எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு இல்லாமல் அரசுக்கு சில ஆலோசனைகளை‌ வழங்குகிறார்கள்.
கண்மாய் போன்ற நீர் நிலைகளை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள், நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்‌ என்று அறிவுறுத்துகிறார்கள். சாகித்திய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் பதிவை பாருங்கள் என்று எடுத்துக் காட்டுகிறார்கள்.
சாதாரணமான ஒரு முகநூல் பதிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம் பெற்று இதைப் பின்பற்றும்படி அரசின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள பரிந்துரைக்கிறது. ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பு என்பது‌ இந்திய அரசின் ஆவணம். காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். பல்வேறு சட்டநிபுணர்கள் வழக்கறிஞர்களால் வாசிக்கப்படும்.
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு படைப்பாளி என்ற முறையில் புளகாங்கிதமடைகிறேன். என்னுடைய முகநூல் நண்பர்கள் சார்பாகவும் தமிழ்நாட்டின் அனைத்து படைப்பாளிகளின் சார்பாகவும் உயர்நீதிமன்ற நீதியரசர் மதிப்பிற்குரிய ஐயா.ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு நீர்நிலைகளில் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டி ஏலம் விடும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

மேற்கோள் காட்டப்பட்ட பதிவு:

நேற்று உச்சி மதியம். சுட்டெரிக்கும் வெய்யில். கண்மாய்க் கரை மரத்தடியில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். அந்த கண்மாயின் குத்தகைதாரர் என்னை மட்டுமே தூண்டில் போட அனுமதித்திருப்பதால் நான் மட்டுமே எப்போதும் தனித்திருப்பேன். சில நேரம் பயமாகக் கூட இருக்கும். இந்தத் தனிமை தவத்திற்காகவே நான் விரும்பி போய் தூண்டில் போடுகிறேன்.
திடீரென்று ஆளரவம் கேட்கவும் ஏறிட்டுப் பார்த்தால் நேராக என் தலைக்கு மேல் கரையில் திடகாத்திரமான ஒரு ஆறடி மனுஷர். கையில் நீண்ட கம்பு. கழுத்தில் தொங்கும் நீண்ட துண்டு. மிகவும் பவ்யமாக வணக்கம் வைத்து பணிந்து கும்பிட்டார். தூண்டிலை வாகரையில் ஊன்றி விட்டு கரையேறினேன்.
“ஐயா என் பேர் காளியப்பக்கோனார். கிடை மாடுகள் மேய்ப்பவர்கள்.” என்று சொல்லி விட்டு தூரத்தில் மேயும் மாடுகளைக் காட்டினார்.
“சரிய்யா இப்ப உங்களுக்கு என்ன வேணும்”
“இந்த மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க நீங்க அனுமதிக்கணும் ஐயா”என்றார்.
அவர் இப்படிக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம். அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். அவர் சொன்னார்.
“ஐயா நாங்க கமுதியிலிருந்து வர்ரோம். அப்பிடியே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரை போய் திரும்ப ஊர் போக ஆறு மாசமாகும். எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்ருச்சு. குத்தகைதாரர்கள் மாடுகளை தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. எங்களை அடித்து விரட்டுகிறார்கள். மாடுகளை கற்களால் எறிந்து விரட்டுகிறார்கள்” என்று அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. இந்தக் குத்தகைதாரர் மிகவும் நல்லவர், தாராளமாக தண்ணீர் காட்டுங்கள் என்று சொன்னவுடன் கரையிலிருந்தபடியே ஒரு விசில் கொடுத்தார். எல்லா மாடுகளும் எங்களைச் பார்த்து வேகமாக வந்தன. கூடவே இன்னொருவரும் வந்தார். மொத்தம் 270 மாடுகள். காளை பசு கன்றுக்குட்டிகள். ஆனந்தமாக தண்ணீர் குடித்து நீச்சலும் அடித்தன. பல்வேறு தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் கோனார். சம்சாரிகளின் பம்புசெட் கிணறுகளில் வாய்க்காலில் மாடுகள் தண்ணீர் குடிப்பதை இதுவரை எந்த சம்சாரியும் தடுத்ததில்லை என்றார். பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை என்றவர் குளங்களில் கண்மாய்களில் குடிப்பது மாதிரி வாய்க்காலில் குடிப்பது நிறைவாக இருக்காது என்றார்.
நிறையக் கண்மாய்களில் பறவைகளை மீன்பிடிக்க விடாமல் கூடு கட்ட விடாமல் குத்தகைதாரர்கள் வெடிவெடித்து விரட்டுகிறார்கள் என்று அவர் சொன்ன போது நான் மௌனித்துப் போனேன். அரசு கண்மாய்களை குத்தகை என்ற பேரில் பாக்டரிகளாக மாற்றி விட்டது. லாபநோக்கில் வியாபாரியாக செயல்படுகிறார்கள் குத்தகைதாரர்கள்.
ஏற்கனவே வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, கனிமவளத்துறை போன்றவற்றால் கண்காணிப்பு என்ற பேரில் ஊர் மக்களுக்கும் கண்மாய்க்குமான உறவை நாசப்படுத்தி விட்டது அரசு. இப்போது குத்தகைதாரர்கள் பறவைகளுக்கும் கால்நடைகளுக்குமான தொடர்பை துண்டித்துவிட்டார்கள். அப்படியானால் இந்தக் கண்மாய்களை, ஏரிகளை, ஊருணிகளை, தெப்பங்களை, நீராவிகளை நம் முன்னோர்கள் யாருக்காக உருவாக்கினார்கள்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மாடுகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் ஒரு குறுநாவல் எழுதப் போகிறேன்.
சைபீரியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வந்து தமிழ்நாட்டுக்கு வருகிற ஒரு கொக்கை இங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய விடாமலும் மீன் பிடித்து பசியாற விடாமலும் நாம் விரட்டினால் அது நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகுக்கே பொதுமறை சொன்ன கனியன் பூங்குன்றன் வாழ்ந்த பூமியா இது? “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றாரே வள்ளலார் அவர் காலடிபட்ட மண்ணா இது? “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றானே எட்டயபுரத்து மகாகவி பாரதி அவர் வாழ்ந்த பூமியா இது? என்று நினைக்குமா இல்லையா. பட்சி தோஷமும் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காத வாயில்லா ஜீவன்களின் வயிற்றெரிச்சலும் இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்கும்.
தயவு செய்து கண்மாய்களை குத்தகைக்கு விட்டு கம்பெனியாக்குவதை நிறுத்துங்கள். கண்மாய்களும் நீர்நிலைகளும் ஒரு நாட்டின் இரத்த நாளங்கள் என்பதை பகுத்தறிவு உங்களுக்கு சொல்லவில்லையா. அப்படியானால் நீங்கள் பேசுகின்ற பகுத்தறிவுக்கு என்ன அர்த்தம்?

முழுப் பதிவும் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: சோ. தர்மன் பக்கம்

பெர்னார்ட் ஷா நாடகம்: Arms and the Man

Arms and the Man (1894) நாடகத்தை விவரிக்க ஒரு வார்த்தை போதும். Delightful.

ஷா எனக்குப் பிடித்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். எனக்கு நாடகத்தின் சாத்தியங்களைப் புரிய வைத்த முதல் ஆசிரியர் அவர்தான். வசனம் மூலமாக மட்டுமே நாடகத்தை நகர்த்துபவர் என்று அவர் விமர்சிக்கப்படுகிறார்தான். ஆனால் என் கண்ணோட்டத்தில் இதெல்லாம் ஒரு குறையே அல்ல. இத்தனை ஆண்டுகள் கழித்து நகைமுரணுக்காக (irony) மிகவும் முயற்சிக்கிறார், நகைமுரண் மட்டுமே நாடகம் அல்ல என்று ஒரு குறை தெரிகிறது. அப்படிப்பட்ட அணுகுமுறை மானுட தரிசனங்களைக் குறைத்துவிடுகிறதுதான். ஆனாலும் ஷா சாதனையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஷாவின் நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது Arms and the Man-தான். ஸ்டீரியோடைப் கதாபாத்திரங்களை வைத்து ஸ்டீரியோடைப்களை மேலும் பொலியச் செய்வதும் அவ்வப்போது அந்த ஸ்டீரியோடைப்களை உடைப்பதும் ஷாவுக்கு கைவந்த கலை. இந்த நாடகத்தில் அது மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது. நகைச்சுவை மிளிர்கிறது. பற்றாக்குறைக்கு போரில் வெற்றி என்பதில் ஏற்படும் பெருமிதம் என்பது – romanticizing war and victories – எத்தனை பொய்யான பிம்பம் என்பதையும் தெளிவாகக் காட்டிவிடுகிறார். பொதுவாக இப்படி போரையும் வெற்றியையும் கட்டுடைப்பவர்கள் மிக சீரியசாக எழுதுவார்கள். ஷா போரை ஒரு கேலிக்கூத்தாகக் காட்டுகிறார். எந்தக் குழுவுக்கும் தலைமை வகித்தவர்களுக்குத் தெரியும், எத்தனை மடத்தனமான விஷயங்கள் திட்டங்களை முறியடிக்கும் என்று. ஷா அதைத்தான் முன்வைக்கிறார்.

நாடகத்தின் பின்புலம் செர்பியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையே 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த போர். இன்னும் குதிரைப்படைகள் போரில் பயன்படுகின்றன. நாயகி ரெய்னாவுக்கும் பல்கேரியப் படையின் கேப்டன் செர்ஜியசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.செர்ஜியசின் வீர சாகசத்தால் பல்கேரியப் படை வென்றுவிட்டது. தோற்ற செர்பியப் படையின் கூலிப்படை வீரன் (mercenary soldier) ப்ளண்ட்ஷிலி தப்பி ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் ரெய்னாவின் படுக்கை அறைக்குள் புகுந்து ஒளிந்து கொள்கிறான். ரெய்னாவுக்கு அவன் மேல் பரிதாபம், தன் காதலனின் வீரச் செயலால்தான் இவன் ஓடினான் என்ற பெருமை. ஆனால் ப்ளண்ட்ஷிலி அவளுக்கு இருக்கும் பிம்பங்களை உடைக்கிறான். ரெய்னாவுக்கு இந்தப் வெற்றிப் பெருமிதம் எல்லாம் அடிப்படை அற்ற பிம்பம் என்று கொஞ்சம் புரிகிறது. ப்ளண்ட்ஷிலி தப்ப உதவுகிறாள்.

ப்ளண்ட்ஷிலி தன்னைப் பற்றிய எந்த மாயைகளும் இல்லை. அவனுக்கு ரெய்னாவின் romantic மனநிலை புரிகிறது. அவள் பந்தா காட்டும்போது, வீரவசனம் பேசும்போது எல்லாம் தனக்கு உண்மையில் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியும் என்பதை ரெய்னாவுக்கு உணர்த்துகிறான். இருவருக்கும் நடுவில் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் ப்ளண்ட்ஷிலியின் கண்ணில் ரெய்னா சிறு பெண்.

ரெய்னாவுக்கு தனக்கு செர்ஜியஸ் மேல் இருக்கும் ஈர்ப்பு வலுவான அஸ்திவாரம் இல்லாதது என்று புரிகிறது. ஆனால் சமூகநிலையால் சீன் காட்டிக் கொண்டிருக்கிறாள். செர்ஜியசுக்கும் அதே நிலைதான். இந்த சமயத்தில் ப்ளண்ட்ஷிலி திரும்பி வருகிறான். பி.ஜி. வுட்ஹவுஸ், க்ரேசி மோகன் நிலை குழப்பங்களுக்குப் பிறகு பளண்ட்ஷிலியும் ரெய்னாவுக்கும் திருமணம் உறுதியாகிறது.

ப்ளண்ட்ஷிலியின் தன்னை அறிந்திருக்கும் குணமும், ரெய்னாவும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளாத பாத்திரமாக பரிணமிப்பதும் சிறப்பாக எழுதப்பட்டவை. ரெய்னா ஸ்டீரியோடைப்பை உடைக்கும் பாத்திரம் என்றால், பல துணைப்பாத்திரங்கள் – ரெய்னாவின் தாய் தந்தையர், “பட்லர்” நிகோலா, இரண்டாம் நாயகி லௌகா – போன்றவை ஸ்டீரியோடைப்களை மேலும் பொலிவாகக் காட்டுகின்றன. செர்ஜியஸ் பாத்திரத்தில் ஷா மிகக் கடினமான ஒன்றை நிகழ்த்துகிறார் – ஸ்டீரியோடைப் பாத்திரத்தை மேலும் பொலியவும் செய்கிறார், ஸ்டீரியோடைப்படை உடைக்கவும் செய்கிறார்.

பொதுவாக ஷாவின் பாத்திரங்கள் நிறைய பேசுவார்கள். சான்ஸ் கிடைத்தால் பக்கம் பக்கமாகப் பேசுவார்கள். இதில் குறைவாகத்தான் பேசுகிறார்கள்! அரைப் பக்கத்துக்கு மேல் வசனம் கிடையாது என்று நினைக்கிறேன்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். நான் நாலைந்து வருஷத்துக்கு ஒரு முறையாவாது திரும்பப் திரும்பப் படிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெர்னார்ட் ஷா பக்கம்

பாவண்ணனின் எனக்குப் பிடித்த கதைகள் சீரிஸ்

மீள்பதிவு (முதல் பதிவு 2010-இல்!). திண்ணை தளத்தின் சுட்டிகள் மாறிவிட்டன, நானும் மாற்றி இருக்கிறேன். மேலும் சில சிறுகதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறேன்.

பாவண்ணன் திண்ணை தளத்தில் “எனக்கு பிடித்த கதைகள்” என்று ஒரு சீரிஸ் எழுதினார். அவரது வாசிப்பு அனுபவங்கள் – அவரை சுற்றிமுற்றி நடப்பவற்றை படித்த கதைகளோடு தொடர்புபடுத்தி அருமையாக எழுதப்பட்ட ஒரு சீரிஸ் அது. அதையும் ஒரு reference ஆக பயன்படுத்த ஆசை, ஆனால் அது திண்ணை தளத்தில் சுலபமாக கிடைப்பதில்லை. கடைசியில் நானே தொகுத்துவிட்டேன், இன்னும் ஒரு reference! பொழுது போகவில்லை என்றால் சும்மா எங்கேயாவது க்ளிக்கி படிக்கலாம். சிறுகதைக்கு மின் வடிவம் கிடைத்தால் அதற்கும் சுட்டி கொடுத்திருக்கிறேன். சில இடங்களில் எழுத்தாளர்களின் பேரைக் கிளிக்கினால் விக்கி குறிப்புக்கு போகலாம்.

பாவண்ணன் எழுதி இருப்பது சிறுகதைகளைப் பற்றிய கட்டுரைகள். அவர் சிறுகதைகளைத் தொகுக்கவில்லை. தலைப்பு – “எனக்குப் பிடித்த சிறுகதைகள்” – குழப்பக்கூடும்.

#75 நாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்”, மற்றும் #99 கி.சந்திரசேகரின் “பச்சைக்கிளி” ஆகியவற்றுக்கு லிங்க் கிடைக்கவில்லை. யாருக்காவது கிடைத்தால் கொடுங்கள்! பாவண்ணனின் கட்டுரை கிடைக்காவிட்டாலும் சுல்தான் நாஞ்சில் நாடனின் ஒரிஜினல் கதைக்கு ஒரு சுட்டி கொடுத்திருக்கிறார்.

பாவண்ணனே இந்தச் சிறுகதைகளை வேறு விதமாகப் பகுத்திருக்கிறார், பயனுள்ள பகுப்பு. நானும் அவரது கட்சிக்கு மாறிவிட்டேன், அவரைப் பின்பற்றியே இந்தப் பட்டியலைத் தொகுத்திருக்கிறேன்.

உலகச் சிறுகதைகள், பிற இந்திய மொழிச் சிறுகதைகளுக்கு ஆங்கில மூலம்/மொழிபெயர்ப்பின் பேர் தெரிந்தால் சொல்லுங்கள். (என்னால் முடிந்த வரை தேடினேன்). ஆங்கிலம் இணையத்தில் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

வகை எழுத்தாளர் சிறுகதை பாவண்ணன் கட்டுரை குறிப்புகள்
தமிழ் புதுமைப்பித்தன் மனித எந்திரம் பாவண்ணன் கட்டுரை
ந. பிச்சமூர்த்தி தாய் பாவண்ணன் கட்டுரை
மௌனி சாவில் பிறந்த சிருஷ்டி பாவண்ணன் கட்டுரை
ஜெயகாந்தன் குருபீடம் பாவண்ணன் கட்டுரை
கி. ராஜநாராயணன் கன்னிமை பாவண்ணன் கட்டுரை
ஆ. மாதவன் பறிமுதல் பாவண்ணன் கட்டுரை
சுந்தர ராமசாமி பள்ளம் பாவண்ணன் கட்டுரை
பூமணி பொறுப்பு பாவண்ணன் கட்டுரை
கு. அழகிரிசாமி இரண்டு பெண்கள் பாவண்ணன் கட்டுரை
ஜி. நாகராஜன் ஓடிய கால்கள் பாவண்ணன் கட்டுரை
சா. கந்தசாமி தேஜ்பூரிலிருந்து பாவண்ணன் கட்டுரை
சி.சு. செல்லப்பா குருவிக்குஞ்சு பாவண்ணன் கட்டுரை
க.நா.சு. கண்ணன் என் தோழன் பாவண்ணன் கட்டுரை
வண்ணநிலவன் அழைக்கிறவர்கள் பாவண்ணன் கட்டுரை
கு.ப.ரா. ஆற்றாமை பாவண்ணன் கட்டுரை
எம்.வி. வெங்கட்ராம் இனி புதிதாய் பாவண்ணன் கட்டுரை
அசோகமித்ரன் அம்மாவுக்காக ஒரு நாள் பாவண்ணன் கட்டுரை
நகுலன் ஒரு ராத்தல் இறைச்சி பாவண்ணன் கட்டுரை
வண்ணதாசன் தனுமை பாவண்ணன் கட்டுரை
சார்வாகன் கனவுக்கதை பாவண்ணன் கட்டுரை
லா.ச.ரா சர்ப்பம் பாவண்ணன் கட்டுரை
தி. ஜானகிராமன் கண்டாமணி பாவண்ணன் கட்டுரை
சம்பத் நீல ரதம் பாவண்ணன் கட்டுரை
சுஜாதா முரண் பாவண்ணன் கட்டுரை
எம்.எஸ்.கல்யாணசுந்தரம் தபால்கார அப்துல் காதர் பாவண்ணன் கட்டுரை
அகிலன் காசுமரம் பாவண்ணன் கட்டுரை
ஆதவன் ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் பாவண்ணன் கட்டுரை
த.நா. குமாரசாமி சீமைப்பூ பாவண்ணன் கட்டுரை
மா. அரங்கநாதன் சித்தி பாவண்ணன் கட்டுரை
பி.எஸ். ராமையா நட்சத்திரக் குழந்தைகள் பாவண்ணன் கட்டுரை
து. ராமமூர்த்தி அஞ்ஞானம் பாவண்ணன் கட்டுரை
கிருத்திகா தீராத பிரச்சனை பாவண்ணன் கட்டுரை
அ. மாதவையா ஏணியேற்ற நிலையம் பாவண்ணன் கட்டுரை
நா.பா. கசப்பும் இனிப்பும் பாவண்ணன் கட்டுரை
பிரபஞ்சன் பிரும்மம் பாவண்ணன் கட்டுரை
ஆர். சூடாமணி ரயில் பாவண்ணன் கட்டுரை
கிருஷ்ணன் நம்பி மருமகள் வாக்கு பாவண்ணன் கட்டுரை
சி.ஆர். ரவீந்திரன் சராசரிகள் பாவண்ணன் கட்டுரை
இந்திரா பார்த்தசாரதி நாசகாரக் கும்பல் பாவண்ணன் கட்டுரை
கரிச்சான் குஞ்சு நூறுகள் பாவண்ணன் கட்டுரை
நாஞ்சில் நாடன் ஒரு இந்நாட்டு மன்னர் பாவண்ணன் கட்டுரை கிடைக்கவில்லை
மலர்மன்னன் அற்பஜீவிகள் பாவண்ணன் கட்டுரை
ஜெயந்தன் அவள் பாவண்ணன் கட்டுரை
சுரேஷ்குமார் இந்திரஜித் அலையும் சிறகுகள் பாவண்ணன் கட்டுரை
ஜே.வி.நாதன் விருந்து பாவண்ணன் கட்டுரை
சிவசங்கரி வைராக்கியம் பாவண்ணன் கட்டுரை
ந. முத்துசாமி இழப்பு பாவண்ணன் கட்டுரை
தி.சா. ராஜூ பட்டாளக்காரன் பாவண்ணன் கட்டுரை
விந்தன் மாடும் மனிதனும் பாவண்ணன் கட்டுரை
திலீப்குமார் மூங்கில் குருத்து பாவண்ணன் கட்டுரை
ராஜேந்திர சோழன் கோணல் வடிவங்கள் பாவண்ணன் கட்டுரை
கல்கி கேதாரியின் தாயார் பாவண்ணன் கட்டுரை
ந. சிதம்பர சுப்ரமணியன் சசாங்கனின் ஆவி பாவண்ணன் கட்டுரை
மீ.ப. சோமு உதயகுமாரி பாவண்ணன் கட்டுரை
கி.சந்திரசேகர் பச்சைக்கிளி பாவண்ணன் கட்டுரை கிடைக்கவில்லை
ஈழ எழுத்தாளர்கள் மு. தளையசிங்கம் கோட்டை பாவண்ணன் கட்டுரை
வ.அ. இராசரத்தினம் தோணி பாவண்ணன் கட்டுரை
அ. முத்துலிங்கம் அக்கா பாவண்ணன் கட்டுரை
எஸ். பொன்னுத்துரை அணி பாவண்ணன் கட்டுரை
அ.செ. முருகானந்தன் பழையதும் புதியதும் பாவண்ணன் கட்டுரை
தெளிவத்தை ஜோசஃப் மீன்கள் பாவண்ணன் கட்டுரை
உமா வரதராஜன் எலியம் பாவண்ணன் கட்டுரை
மாத்தளை சோமு தேனீக்கள் பாவண்ணன் கட்டுரை
என்.கே. ரகுநாதன் நிலவிலே பேசுவோம் பாவண்ணன் கட்டுரை
என்.எஸ்.எம். ராமையா ஒரு கூடைக் கொழுந்து பாவண்ணன் கட்டுரை 1, கட்டுரை 2
சாந்தன் முளைகள் பாவண்ணன் கட்டுரை
பிற இந்திய மொழிச் சிறுகதைகள் பிரேம்சந்த் கஃபன் பாவண்ணன் கட்டுரை
முல்க்ராஜ் ஆனந்த் குழந்தை மனம் பாவண்ணன் கட்டுரை
காண்டேகர் மறைந்த அன்பு பாவண்ணன் கட்டுரை
தாராஷங்கர் பானர்ஜி அஞ்சல் சேவகன் பாவண்ணன் கட்டுரை
கிஷன் சந்தர் நான் யாரையும் வெறுக்கவில்லை பாவண்ணன் கட்டுரை
மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் மசூமத்தி பாவண்ணன் கட்டுரை
கர்த்தார் சிங் துக்கல் விந்தைச் செயல் பாவண்ணன் கட்டுரை
வைக்கம் முகம்மது பஷீர் ஐஷுக்குட்டி பாவண்ணன் கட்டுரை சிலிகன்ஷெல்ஃப் பதிவு
தாகூர் காபூலிவாலா பாவண்ணன் கட்டுரை
ஸாதனா கர் சிறைப்பறவைகள் பாவண்ணன் கட்டுரை
குலாப்தாஸ் ப்ரோக்கர் வண்டிக்காரன் பாவண்ணன் கட்டுரை
காளிந்திசரண் பாணிக்கிரஹி நாய்தான் என்றாலும் பாவண்ணன் கட்டுரை
கேசவதேவ் நான்? பாவண்ணன் கட்டுரை
கே.ஏ. அப்பாஸ் அதிசயம் பாவண்ணன் கட்டுரை
தூமகேது போஸ்டாபீஸ் பாவண்ணன் கட்டுரை
சரத்சந்திர சாட்டர்ஜி ஞானதா பாவண்ணன் கட்டுரை
ஜயதேவன் தில்லி பாவண்ணன் கட்டுரை
உலகச் சிறுகதைகள் லியோ டால்ஸ்டாய் மோகினி பாவண்ணன் கட்டுரை
ஐசக் பாஷவிஸ் சிங்கர் Gimpel the Fool பாவண்ணன் கட்டுரை சிலிகன்ஷெல்ஃப் பதிவு
புஷ்கின் Postmaster பாவண்ணன் கட்டுரை
அலெக்சாண்டர் குப்ரின் அதிசயக் காதல் பாவண்ணன் கட்டுரை
தாஸ்தவெஸ்கி An Honest Thief பாவண்ணன் கட்டுரை
மாக்சிம் கார்க்கி சிறுவனின் தியாகம் பாவண்ணன் கட்டுரை
செல்மா லாகர்லாஃப் Legend of Christmas Rose பாவண்ணன் கட்டுரை
ஆண்டன் செகாவ் Vanka பாவண்ணன் கட்டுரை
மாப்பஸான் Forgiveness பாவண்ணன் கட்டுரை
நதானியல் ஹாதோர்ன் The Great Stone Face பாவண்ணன் கட்டுரை
ஸ்டீஃபன் க்ரேன் Shame பாவண்ணன் கட்டுரை
ஜாக் லண்டன் Love of Life பாவண்ணன் கட்டுரை
துர்கனேவ் Mumu பாவண்ணன் கட்டுரை
வில்லியம் ஃபாக்னர் Two Soldiers பாவண்ணன் கட்டுரை
எட்கர் ஆலன் போ Tell-Tale Heart பாவண்ணன் கட்டுரை
ஐல்ஸ் ஐக்கிங்கர் ரகசியக் கடிதம் பாவண்ணன் கட்டுரை
ஆஸ்கர் வைல்ட் Selfish Giant பாவண்ணன் கட்டுரை கிடைக்கவில்லை

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், பாவண்ணன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: என் references

புறநானூற்றிலிருந்து ஒரு கவிதை

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்,
பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் ளறுவை போர்ப்பித்திலதே

– ஔவையார், புறநானூறு, திணை கரந்தை

வெள்ளாட்டு மந்தையைப் போன்ற இளைஞர் கூட்டம் சூழ்ந்திருக்க, தலைவன் பலரது தலைக்கு மேலாக என் சின்ன வயது மகனை நோக்கி நீட்டிய கள் மொந்தை அவனை இப்போது தூய வெள்ளாடையால் போர்த்தி இந்த காலில்லாத கட்டிலில் கிடத்திவிட்டது.

விடுதலைப் புலிகளாகட்டும், ஜிஹாதி போராளிகளாட்டும், இளைஞர்களும் இளைஞிகளும் பதின்ம வயதினரும் “எதிரிகளைத்” தாக்கி தங்களை மாய்த்துக் கொண்டார்கள் என்று செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் இந்தக் கவிதையைத்தான் நினைத்துக் கொள்வேன். எத்தனை poignant கவிதை!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகையிலிருந்து ஒரு கவிதை

எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

எழுதியவர் கங்குல்வெள்ளத்தார் என்றே அறியப்படுகிறார். முல்லைத்திணை.

இன்னும் இந்தக் கவிதை நமக்குப் புரியும் வார்த்தைகளில் இருப்பது ஆச்சரியம்தான். கங்குல் என்ற வார்த்தைக்கு மட்டும்தான் பொருள் தேட வேண்டி இருந்தது.

கதிரவன் சினம் தணிந்தான். பகலின் எல்லை முடிகிறது. மாலைப் பொழுது தொடங்கிவிட்டது. முல்லை மலர ஆரம்பித்துவிட்டது. நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு யாருக்காக நீந்துகிறேன், தோழி? இரவென்னும் வெள்ளம் கடலை விடப் பெரியது…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

நற்றிணையில் ஒரு கவிதை

விருந்து எவன் செய்கோ தோழி! சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கைச்
கரும்புஇமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு
உரும்புஇல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் வரவு அறிந்து விரும்பி
மாக்கடல் முகந்து மணிநிறத்து அருவித்
தாழ்நீர் நனந்தலை அழுந்து படப் பாஅய்
மலை இமைப்பது போல் மின்னிச்
சிலை வல்லேற்றொடு செறிந்த இம்மழைக்கே!

பெருங்குன்றூர்க் கிழார், பாடல் 112

அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமளியின் அதிபன் வருவதைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி,
நீலமணி அருவியென
மண் நிறைந்து ஒழுக,
மலை கண்ணிமைப்பது போல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி?

“மொழிபெயர்ப்பு” ஜெயமோகனுடையதுசங்க சித்திரங்கள் புத்தகத்தில். பெருங்குன்றூர்க் கிழார் காட்டையும் மழையையும் கண் முன் கொண்டுவந்துவிட்டார்! குறிப்பாக மலை இமைப்பது போல் மின்னி என்ற வரி. ஜெயமோகனும்தான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

வ.உ.சி. கண்ட பாரதி


இன்று பாரதி நினைவு நாள் (செப்டம்பர் 11). வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய நான் கண்ட பாரதி என்ற சிறு புத்தகத்தைப் பற்றி இன்று.

வ.உ.சி.க்கும் பாரதிக்கும் இருந்த நட்பையும், பந்தத்தையும், உறவையும் பற்றி எனக்கு சிறு வயதில், முதன்முதலாக ஏற்பட்ட பிம்பம் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் மூலமாத்தான். ஆனால் வ.உ.சி. சிறை சென்ற பிறகு, பாரதி புதுவை சென்ற பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் மறந்துவிட்டார்களா, உண்மையாகவே ஆழமான நட்புதானா என்று தோன்றவும் செய்தது. வயதான பிறகுதான் உண்மையான பந்தம் இருந்தாலும் குடும்பக் கவலைகளாலும் பணப் பிரச்சினைகளாலும் நெருங்கிய நண்பர்களுக்குள்ளும் தொடர்பு விட்டுப் போகக் கூடும் என்று சொந்த அனுபவத்திலேயே உணர்ந்துகொண்டேன். இருந்தாலும் இருவரும் கடிதம் கூட எழுதிக் கொள்ளவில்லையா என்று தோன்றியது.

வ.உ.சி.யின் மகனான வ.உ.சி. சுப்ரமணியம் அப்பா தன் நண்பரைப் பற்றி எழுதிய குறிப்புகளை 1946-இல் புத்தகமாகப் பிரசுரித்திருக்கிறார். அ.இரா. வேங்கடாசலபதி அதன் கையெழுத்துப் பிரதியையே வாங்கிப் படித்துப் பார்த்தாராம். 1946-இல் வ.உ.சி.யும் இல்லை, பாரதியும் இல்லை என்பது புத்தகத்துக்கு poignancy-ஐத் தருகிறது.

புத்தகம் முழுக்க முழுக்க வ.உ.சி.யின் பர்சனல் நினைவுகள். சிதம்பரம் பாரதிக்கு பத்து வருஷம் மூத்தவர். ஆனால் பாரதிதான் சிதம்பரத்துக்கு மாமா; சிதம்பரம் பாரதிக்கு மாப்பிள்ளை. சிதம்பரத்தின் சிறு வயதில் பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் சிதம்பரத்தின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்துக்கு அடிக்கடி வருவாராம். பாரதியைப் பற்றி சிதம்பரம் கேள்விப்பட்டிருக்கிறார். சென்னை சென்றபோது ஒரு முறை பார்த்திருக்கிறார். இருவருக்கும் விடுதலை வேட்கை; வெள்ளைக்காரன் மீது கோபம். திலகர் கோஷ்டி. பிபின் சந்திரபாலால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். நட்பு பற்றிக்கொண்டுவிட்டது. சூரத் காங்கிரசிற்கு இருவரும் சேர்ந்து போய் திலகர் பக்கம் நின்று போராடி இருக்கிறார்கள். சிதம்பரம் விஞ்ச்-சிதம்பரம் பற்றி பாடிய பாட்டை எல்லாம் தண்டனைக்கு முன் பாரதி வாயாலேயே கேட்டு மகிழ்ந்திருக்கிறார். சிதம்பரம் சிறை சென்றபின் பாரதி கப்பல் கம்பெனியைக் காப்பாற்றுங்கள் என்று பிச்சையே எடுத்திருக்கிறார். Literal ஆகவே மூர்மார்க்கெட்டில் நின்று பேசி சேர்த்த பணம் ஒரு ரூபாய், எட்டணா என்றெல்லாம் குறிப்பு இருக்கிறது. ஆனால் லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டிருக்கிறது, சில நூறுகள்தான் சேர்ந்திருக்கின்றன. சிதம்பரம் விடுதலை ஆன பிறகு புதுவை சென்று பாரதியை சந்தித்திருக்கிறார்.

தான் கடைசியாக பாரதியை சந்தித்தது பற்றி வ.உ.சி. எழுதி இருப்பது உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சி. சென்னையில் ஒரு நாள் சிதம்பரம் வீட்டுக்கு பாரதியும் ஒரு சாமியாரும் போயிருக்கிறார்கள். வீட்டில் சிதம்பரம் இல்லை. சிதம்பரத்தின் மனைவியிடம் உரிமையோடு சோறு போடு என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு (பாரதிக்கு ஜாதி ஆசாரம் எதுவும் கிடையாது என்பதை பல முறை பாரதிதாசனும் சொல்லி இருக்கிறார்.) இருவரும் அங்கேயே வராந்தாவில் தூங்கி இருக்கிறார்கள். சிதம்பரம் வந்ததும் பாரதிக்கு கண்ணில் ஒளி இல்லை என்று கவனிக்கிறார். பிறகு பாரதியும் சாமியாரும் எலுமிச்சங்காய் அளவில் கஞ்சா தின்பதைக் கண்டு சிதம்பரம் அதிர்ந்திருக்கிறார். “அடப்பாவி! காலையிலேயே இவ்வளவா!” என்று கேட்க பாரதியோ கூலாக “நீ திட்டுவாய் என்றுதான் இவ்வளவு குறைவாக எடுத்துக் கொள்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.

உண்மையான தியாகிகளுக்கு செத்த பிறகுதான் சிலை வைக்கிறோம், அதுவும் சில சமயம் மட்டுமே.

புத்தகத்தை இணைத்திருக்கிறேன், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்