ஜெயமோகனின் “வாழ்விலே ஒரு முறை”

இந்தப் புத்தகத்தை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதா கட்டுரைத் தொகுப்பு என்று சொல்வதா? கட்டுரை என்று சொல்லக் கூடியவற்றில் கொஞ்சம் புனைவுத் தன்மை தெரிகிறது, கதை என்று சொல்லக் கூடியவற்றில் உண்மை அனுபவங்களின் சாயல் தெரிகிறது. எனக்கு சிறுகதைகள்தான் பிடித்தமானவை என்பதால் சவுகரியமாக சிறுகதைத் தொகுப்பு என்றே வைத்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்திலிருந்து நான் மீண்டும் மீண்டும் நினைவு கூர்வது அவதாரம் சிறுகதையைத்தான். உக்கிரமான சிறுகதை. ஒரு மூர்க்கமான மோதலை, ஏறக்குறைய ஒரு டேவிட் கோலையாத் கதையை தமிழ்ப் படுத்தி இருக்கிறார் இல்லை இல்லை நாஞ்சில் படுத்தி இருக்கிறார். என்ன, தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ என்று பாடுவது டேவிட் இல்லை, கதைசொல்லி. அந்த மோதல் தமிழ் சிறுகதை உலகில் ஒரு உச்சம்.

முதல் இரண்டு பாராவும் மெதுவாகப் போகிறது. ஊர் சண்டியர் ஆசீரான் கதைக்குள் வந்ததுமே சூடு பிடிக்கிறது. ரவுடிகளின் டெக்னிக்குகள் – காலுறச்சு நிற்பது, உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பார்வை, இடது கைப்பழக்கம் என்றெல்லாம் விவரித்து அசத்துகிறார்.

வேறு எங்கோ போவது போல நடந்த ஆசீரான் சட்டென்று பிரபாவின் பின்பக்கத்தைப் பற்றி ஒரு அமுக்கு அமுக்கினான். அவள் ‘ச்சீ” என்று சீறியபடி திரும்ப அப்படியே அள்ளிப் பிடித்து மார்பை அள்ளிக் கசக்கினான்

என்று சர்வசாதாரணமாக ஒரு அநீதியை இரண்டு வரியில் எழுதிச் செல்கிறார்.

நேர்மாறாக பயந்தாங்கொள்ளி கோலன் அப்பு. ஒரு கால் வேறு ஊனம். பிரபாவின் சகோதரன். பிரபாவுக்கு நடந்ததைக் கேட்டு அவன் ஆசீரானோடு மோத வரும்போது நீ என்ன செய்ய முடியும் என்றுதான் தோன்றுகிறது.

கதையின் உச்சக்கட்டமாக அந்த சண்டை. சண்டை கிண்டை என்றெல்லாம் சொன்னால் சரிப்படவில்லை. போர், யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நுணுக்கமாக விவரிக்கப்படும் வன்முறை.

என் anthology-யில் இடம் பெறும் சிறுகதை. கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் நோகடித்தது “கடைசி வரை” சிறுகதை. பின்னே, இந்த சாயலில் நானும் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேனே! 🙂 என் கதையை எழுதிவிட்டு பிறகு இந்த கதையைப் படித்தபோது ரொம்ப நொந்து போய்விட்டேன். என் குறைகள் பூதாகாரமாகத் தெரிவது ஒரு பக்கம், அடடா மனுஷன் எனக்கு அபூர்வமாக வந்த ஒரு ஐடியாவையும் விடவில்லையே என்ற வருத்தம் இன்னொரு பக்கம்.

களம் எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை. குழந்தைகளின் மனநிலையைக் காட்டுவதில் ஜெயமோகன் ராஜாதான்.

பாலையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளமைப் பருவத்தை தத்ரூபமாக விவரித்திருக்கிறார்.

மூக்குத்தியும் கடலும், பாதையில் ஒரு கூழாங்கல், ஆதி, மூன்றாவது சீட்டு, லாவா, கண்ணன் ஒரு கைக்குழந்தை போன்றவை டிபிகல் ஜெயமோகன் கதைகள். உணர்ச்சி பொங்கும் ஒரு கட்டத்தை நோக்கித் திறமையாகச் செல்கின்றன.

முடிவின்மையிலிருந்து ஒரு பறவை (யோகி ராம்சுரத்குமார் பற்றி), தரிசனம் மற்றும் தேசம் (வாரங்கல் அனுபவங்கள்), யோகி (நாய் குட்டப்பன்), சாப்ளின், குதிரைவால் மரம் (குரு நித்யாவுடன் சிறு வயது அஜிதன்), உலகெலாம் (பெரிய புராணம்), மகாராஜாவின் இசை (மகாராஜபுரம் சந்தானம்), தனிமொழிகள் (பயன்படுத்தாத சில வரிகள் ) ஆகியவற்றை கட்டுரை என்றுதான் வகைப்படுத்துவேன். ப்ளாக் வராத அந்தக் காலத்திலேயே ப்ளாக் எழுத ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றுகிறது!

தனிமொழிகளிலிருந்து சில மேற்கோள்கள்:

  1. எதிர்காற்றில் நடந்து வரும் சுடிதார்ப் பெண்போல் என் மொழியில் என் சுயம் வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.
  2. உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச் செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
  3. கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பவை, ஒலிகள்.
  4. முற்போக்கு இலக்கியத்திற்கும் அரசாங்கப் பிரசாரத்திற்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.

ஜெயமோகனின் வார்த்தைகளில்:

வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்க வேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும் விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்ய வேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது.

என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. “இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்” என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.

புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை எண்பது ரூபாய். அவதாரம் சிறுகதைக்கு மட்டுமே கொடுத்த காசு செரித்துவிடுகிறது. மிச்ச கதை கட்டுரை எல்லாம் போனஸ்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன், தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி:
அவதாரம் சிறுகதை
அவதாரம் சிறுகதை பற்றிய பதிவு

தரம்பால் எழுதிய “பியூட்டிஃபுல் ட்ரீ”

தரம்பால் எழுதிய இந்தப் புத்தகம் எனக்கு ஒரு eye-opener. ஆங்கில ஆட்சிக்கு முன் இந்தியாவில் படிப்பு என்பது பிராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் மட்டுமே உரியது, வைசியர்களும் சூத்திரர்களும் தொழிற்கல்வி அல்லது வியாபாரத்துக்குத் தேவையான கணிதம் கற்றிருப்பார்கள், முஸ்லிம்களில் பணக்காரர்கள் படித்திருப்பார்கள், ஏழைகளுக்கு குரான், தொழிற்கல்வி தெரிந்தால் அதிகம் என்று எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இதில் ஆச்சரியம் இல்லை, தரம்பாலுக்கே அப்படித்தான் ஒரு பிம்பம் இருந்திருக்கிறது. ஆனால் ஆங்கிலேயர்களின் ஆவணங்கள் மூலம் நமக்குத் தெரிய வரும் நிலையே வேறு.

தரம்பால் மூன்று ஆவணங்களை ஆதாரமாகத் தருகிறார். ஒன்று அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் (இது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளப் பகுதிகளை உள்ளடக்கியது) கல்வி நிலையைப் பற்றி சர் தாமஸ் மன்றோ காலத்தில் எழுதப்பட்ட ரிபோர்ட்டுகள். இரண்டு அன்றைய வங்கம்/பீகார் ஸ்டேட்டில் கல்வி நிலையைப் பற்றி தரப்பட்ட ஆடம் ரிபோர்ட்டுகள். மூன்றாவதாக பஞ்சாபின் கல்வி நிலையைப் பற்றி எழுதப்பட்டவை.

இவை மூன்றிலுமே காட்டப்படும் கல்வி நிலையே வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்திருக்கிறது. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர், ஏன் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்ட தலித்கள் கூட அங்கே படித்திருக்கிறார்கள். பள்ளிக்கென்று நிலம் மானியமாகத் தரப்படுவது அபூர்வமே, ஆனால் ஆசிரியருக்கு ஊரே கூடி சம்பளம் தந்திருக்கிறது. எல்லாருக்கும் எழுதப் படிக்க சொல்லித் தரப்பட்டிருக்கிறது. இதற்கு சில வாரங்கள்தான் ஆகுமாம். மணலில் எழுதிப் பழகுவார்களாம். (நான் கூட குச்சி வைத்து மணலில் எழுதி இருக்கிறேன், ஆனால் ஸ்லேட்டு பலப்பம்தான் அனேகமாக.) அதற்குப் பிறகு நூறு வரை எண்ணுவது, கூட்டல் கழித்தல், பெருக்கல் வாய்ப்பாடு, அளவுக் கணக்குகள் என்று சில வருஷம். அதற்குப் பிறகு பாரதம், ராமாயணம் என்று கொஞ்சம் வருஷம். இதற்குள் தொழிற்கல்வி என்று போனவர்களும் உண்டு.

ஆடம் ரிபோர்ட்டுகள் வங்காளத்தில் ஒரு லட்சம் கிராமப் பள்ளிகள் இருக்கலாம் என்று யூகிக்கின்றன. (கிராமங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்.) இவை அழிந்து கொண்டிருக்கின்றன என்று அவர் எழுதி இருக்கிறார். அன்றைக்கு உருவாகிக் கொண்டிருந்த சென்னை நகரத்திலேயே நிறையப் பள்ளிகள் இருந்திருக்கின்றன.

பெண்கள் கல்வி கற்றது மிகவும் குறைவு. தேவதாசிகள்தான் ஓரளவு கல்வி கற்றார்கள் என்று தெரிகிறது. முஸ்லிம்களுக்கும் பாரசீகப் பள்ளிகள் இருந்தன.

அன்றையக் கல்வி முறை மேலை நாடுகளின் எந்தக் கல்வி முறைக்கும் குறைந்ததாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் உயர்கல்வி (கணிதம், அறிவியல்) அங்கே வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. இங்கே தேங்கிப் போனதுதான் ஐரோப்பிய நாடுகளின் வேகமான முன்னேற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும். அன்றைய ஆங்கிலேயர்களுக்கு இந்தக் கல்வி முறை புரிந்திருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மூர் ஆட்களுக்கே, அதுவும் வேகமாக anglicize ஆகிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கல்வி முறையை இளக்காரமாகத்தான் பார்த்திருப்பார்கள். சர் சையத் அஹமத் கான் போன்றவர்கள் இந்த பாரம்பரியக் கல்வி முறை இனி மேல் பயன்படாது, கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்று நினைத்துத்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தை நிறுவி இருப்பார் என்று நினைக்கிறேன்.

மொத்தத்தில் ஆங்கிலக் கல்வி என்பது ஒரு paradigm shift. அது பழைய கல்வி முறையை அழித்துத்தான் வளர்ந்திருக்கிறது.

தரம்பால் காந்தீயவாதி என்று தெரிகிறது. பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைப் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்து நிறைய எழுதி இருக்கிறார். இவரது ஆராய்ச்சி ஏன் பாப்புலராக இல்லை என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் ஹிந்துத்துவவாதிகளாவது இவரைப் பற்றி நிறைய பேச வேண்டாமா? ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

ஜெயமோகன் இவரைப் பற்றி பெரிதாக ஒரு கட்டுரை எழுதி இருப்பதாகவும் அதை இப்போது வெளியிட முடியவில்லை என்றும் சொல்லி இருந்தார். தளத்திலாவது போடுங்க சார்!

தமிழ் பேப்பரில் ஒரு நேர்காணல் வந்திருக்கிறது, அதைப் படித்துவிட்டுத்தான் நான் இந்தப் புத்தகத்தை தேடத் தொடங்கினேன்.

தரம்பாலின் புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது. துரதிருஷடவசமாக tables சரியாக வருவதில்லை. 1983-இல் முதல் பதிப்பு வந்திருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
பியூட்டிஃபுல் ட்ரீ ஆன்லைனில்
தரம்பாலின் நேர்காணல்
விக்கி குறிப்பு

ஹாலிவுட் ஸ்டார் ஸ்டீவ் மார்ட்டின் எழுதிய “பார்ன் ஸ்டாண்டிங் அப்”

ஸ்டீவ் மார்ட்டின் (Steve Martin) பிரபல ஹாலிவுட் நடிகர். சமீபத்தில் பிங்க் பாந்தர் (Pink Panther) படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த “Planes, Trains and Automobiles” திரைப்படத்தின் கருவை வைத்துத்தான் கமலஹாசன் “அன்பே சிவம்” திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

மார்ட்டின் தன் வாழ்க்கையை ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக ஆரம்பித்தவர். ஒரு கட்டத்தில் ஸ்டாண்ட் அப் காமெடி உலகத்தின் உச்சத்தில் இருந்தவர். அந்த அனுபவங்களைப் பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.

ஸ்டாண்ட் அப் காமெடி எனக்கு பொதுவாக அப்பீல் ஆவதில்லை. பாதி நேரம் அது கிறுக்குத்தனம் என்ற எல்லையைத் தாண்டுவதில்லை. டேவிட் லெட்டர்மனைத் தவிர வேறு யாரும் எனக்கு பார்க்கும்படி இல்லை, லெட்டர்மனே அவ்வப்போது போர்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அது அமெரிக்காவில் ஒரு முக்கியமான கலை வடிவம். ஜானி கார்சன், பில் காஸ்பி, ஜே லெனோ, லெட்டர்மன், ஜெர்ரி செய்ன்ஃபெல்ட், எல்லன் டீஜெனரஸ் என்று பலரும் கொடி கட்டிப் பறந்தார்கள்/பறக்கிறார்கள். (திண்டுக்கல் லியோனியைக் கூட நான் ரசிப்பதில்லை.)

ஸ்டீவ் மார்ட்டின் அந்த உலகத்தை எனக்குக் கொஞ்சம் புரிய வைத்திருக்கிறார். உண்மையில் டாப் காமெடியன்கள் தங்களுக்கென்று ஒரு பர்சனாலிடியை உருவாக்கிக் கொள்கிறார்கள். அது மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படுகிறது. திருப்பி திருப்பி அது சொல்லப்படும்போது சிரிப்பு வருகிறது. உதாரணமாக லெட்டர்மனுக்கு கொஞ்சம் offbeat இமேஜ் இருக்கிறது. ஜெர்ரி செய்ன்ஃபெல்ட் அற்பமான விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார். ஜே லெனோவின் ஜோக்குகள் நன்றாக இருந்தாலும் என் கண்ணில் அவருக்கு இமேஜே இல்லை, அதனால்தானோ என்னவோ லெனோவுக்கு ஒரு cult following இல்லை.

மார்ட்டின் தனக்கென்று மோசமான காமெடியன், கிறுக்கு காமெடியன் மாதிரி ஒரு ஆளுமையை மெதுமெதுவாக உருவாக்கி இருக்கிறார். அந்த process ஓரளவு சுவாரசியமாக இருக்கிறது.

புத்தகத்தின் பிற பகுதிகள் – மார்ட்டினின் அப்பாவோடு அவருக்கிருந்த உறவு, நண்பர்கள் இத்யாதி – எனக்கு போரடித்தது.

ஸ்டாண்ட் அப் காமெடி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டும்.

தொடர்புடைய சுட்டிகள்: ஸ்டீவ் மார்ட்டினின் தளம்

பாரதியை சந்தித்த பாரதிதாசன் – மலர்மன்னனின் சிறுகதை

திண்ணை தளத்தில் இந்த “சிறுகதையை” படித்தேன். மலர்மன்னன் எழுதி இருக்கிறார். இதில் எவ்வளவு நிஜம், எவ்வளவு கற்பனை என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் பாரதிதாசனைப் பற்றி

சரிதான். ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்

என்று பாரதி எழுதி இருப்பதை எங்கோ படித்திருக்கிறேன். வேணு நாயக்கரைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார் என்று நினைவு.

பாரதிதாசனைப் பற்றி எனக்குப் பெரிதாக அபிப்ராயம் இல்லை. பொதுவாகவே கவிதை அலர்ஜி. ஆனால் நல்ல சந்தம் வரும்படி எழுதுவார் என்று ஒரு நினைப்பு. சிறு வயதில் “இருண்ட வீடு” என்ற ஒரு புத்தகத்தைப் படித்து சிரித்திருக்கிறேன். வீட்டுக்கு வரும் திருடனை பொம்மைத் துப்பாக்கி வைத்து அப்பா மிரட்டி சமாளித்துக் கொண்டிருப்பார். அவரிடம் சின்னைப் பையன்

அப்பா அப்பா அது பொய்த் துப்பாக்கி
தக்கை வெடிப்பது தானே என்றான்

என்று சத்தமாக சொல்லும் வரிகள் இன்னும் நினைவிருக்கின்றன.

பாரதியைப் பற்றி அபிப்ராயம் சொல்லும் நிலையில் நான் இல்லை. இந்த இரண்டு ஆளுமைகளும் சுவாரசியமானவை, அவ்வளவுதான்.

இது பெரிய இலக்கியம் இல்லைதான். ஆனாலும் என்னவோ எனக்கு சிறுகதை பிடித்திருக்கிறது. மலர்மன்னனுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
மலர்மன்னனின் சிறுகதை
பாரதி ஒரு மதிப்பீடு

ஷெர்லாக் ஹோம்ஸின் மனைவி – மேரி ரஸ்ஸல்

லாரி ஆர். கிங் எழுதிய மேரி ரஸ்ஸல் சீரிஸ்

56 சிறுகதைகள், நான்கு நாவல்கள். அவ்வளவுதான் ஷெர்லாக் ஹோம்ஸின் official canon.

துப்பறியும் கதைகள் சிறப்பாக வர மூன்று கூறுகள் அவசியம். பாத்திரப் படைப்பு, சுவாரசியமான கதை, சுலபமாக யூகிக்க முடியாத மர்மம். பாத்திரங்கள் எவ்வளவுக்கெவ்வளவு சுவாரசியமாக இருக்கின்றனவோ அவ்வளவு நல்லது. உதாரணமாக ஷெர்லாக் ஹோம்ஸ், டாக்டர் வாட்சன், மோரியார்டி, கணேஷ்/வசந்த் போன்றவர்கள் charismatic பாத்திரங்கள். சுலபமாக யூகிக்க முடியாத, கொஞ்சம் கொஞ்சமாக அவிழும் மர்மம், எல்லா க்ளூக்களையும் முழுமையாகப் புரிந்து கொள்ள நம்மை மீண்டும் முந்தைய பக்கங்களைப் போய் பார்க்க வைக்கும் மர்மம் இருந்தால் கதை பிரகாசிக்கும். And Then There Were None, Murder in the Orient Express போன்றவை நல்ல உதாரணங்கள். சுவாரசியமான கதையும் இருந்தால் கதை எங்கேயோ போய்விடுகிறது. Red Headed League, Purloined Letter போன்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். சுவாரசியமான கதை மட்டுமே இருந்து மர்மம் அவ்வளவு பிரமாதமாக இல்லாவிட்டாலும் நன்றாகவே இருக்கிறது. Blue Carbuncle, Dying Detective போன்ற கதைகளை சொல்லலாம். மர்மம் ஏதோ ஒரு obscure உண்மையின் மீது கட்டப்பட்டிருந்தால் அவ்வளவு சுகப்படுவதில்லை. எலரி க்வீன் (Ellery Queen) போன்றவர்கள் இப்படித்தான் எழுதினார்கள், கதைகளை தீவிர ரசிகர்கள் தவிர யாரும் சீந்துவதில்லை. ஹோம்ஸ் கதைகளில் நல்ல பாத்திரப் படைப்பு is a given. சுவாரசியமான கதை, நல்ல மர்மம் இரண்டில் ஒன்றாவது அனேகமாக இருக்கிறது. அதனால்தான் ஹோம்ஸ் இடத்துக்கு யாருமே போக முடியவில்லை.

ஹோம்ஸ் பாத்திரத்தை வைத்தே இந்த நிலையை அடைய முயற்சிக்கும் கதைகள் பல உண்டு. கானன் டாயில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதிக் கொண்டிருந்தபோதே parodies வரத் தொடங்கிவிட்டன. இன்றும் ஹோம்ஸ் கதைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகோலஸ் மேயர் எழுதிய Seven Percent Solution போன்றவை ஓரளவு பிரபலமானவை. நான் சமீபத்தில் படித்த மேரி ரஸ்ஸல் கதைகளும் சுவாரசியமானவை.

மேரி 15 வயதில் முதல் முறையாக ஹோம்ஸை சந்திக்கிறாள். ஹோம்ஸ் மேரியும் அந்த வயதிலேயே தன்னைப் போலவே சின்னச் சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிப்பதையும், அவற்றிலிருந்து சரியான முடிவுகளுக்கு வருவதையும் பார்க்கிறார். அவர்களுக்குள் நட்பு, பந்தம் உருவாகிறது. மேரியை ஹோம்ஸ் தன் மாணவியாக நடத்த ஆரம்பிக்கிறார். சில கேஸ்களில் சேர்ந்து துப்பறிய ஆரம்பிக்கிறார்கள். மேரி ஹோம்ஸின் சரிசமமான பார்ட்னராகவே மாறுகிறாள். பிற்காலத்தில் மேரியும் ஹோம்சும் நிறைய வயது வித்தியாசம் இருந்தும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து துப்பறியும் கதைகள்தான் இந்த சீரிஸில். இந்தக் கதைகளில் ஹோம்ஸ் வயது, அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றால் சீனியர் பார்ட்னர் என்றாலும் அவர் ஒரு துணைப்பாத்திரம்தான். கதைகள் எப்போதும் மேரியின் கோணத்தில்தான் விவரிக்கப்படுகின்றன, நிறையத் துப்பறிவதும் மேரிதான். மேரிக்கு ஹோம்ஸ் உதவி செய்வதாகவேதான் கதைகள் எழுதப்படுகின்றன. இந்தக் கதைகளில் மர்மம் கொஞ்சம் குறைவு, ஆனால் பின்புலம் (பெண்ணுரிமைப் போராட்டம், பாலஸ்தீனம்…) எப்போதுமே நன்றாக இருக்கிறது, கதைகளும் சுவாரசியமானவை.

சீரிஸின் முதல் நாவலான Beekeeper’s Apprentice (1994)-இல் மேரிக்கு பதினைந்து வயது இருக்கும்போது ரிடையர் ஆகிவிட்ட ஹோம்ஸை சந்திக்கிறாள். ஹோம்ஸ் ஒரு ஆளைப் பார்த்தவுடன் அவன் யார், என்ன தொழில் செய்கிறான் என்றெல்லாம் (Blue Carbuncle) deduce செய்வது போலவே ஹோம்சைப் பற்றி மேரி கணிக்கிறாள். இருவருக்கும் நட்பு உருவாகிறது, ஹோம்ஸ் மேரியை தன் “மாணவியாக” ஏற்றுக் கொள்கிறார். மேரியும் அவரும் சில கேஸ்களை சேர்ந்து துப்பறிகிறார்கள். ஒரு படு பயங்கர வில்லன் – மோரியார்டி லெவல் வில்லன் வரும்போது – மேரியும் ஹோம்சும் பார்ட்னரே ஆகிறார்கள்.

A Monstrous Regiment of Women (1995): 20 வயது மேரி ரஸ்ஸல் 60 வயது ஹோம்ஸை மணக்க விரும்புகிறாள். ஹோம்ஸ் மறுக்கிறார். மேரி மார்ஜரி சைல்ட் என்ற “சாமியாரிணியை” சந்திக்கிறாள். மார்ஜரி பெண் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுபவள். பல பணக்காரப் பெண்கள் அவளுக்கு உதவியாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு மூன்று பேர் இறந்துவிடுகிறார்கள். இறந்தவர்கள் மார்ஜரியின் சர்ச்சுக்கு நிறைய பணம் எழுதி வைத்திருக்கிறார்கள். மேரி துப்பறியப் போய் அவளே மாட்டிக் கொள்கிறாள். ஹோம்ஸ் காப்பாற்றுகிறார், இருவரும் சேர்ந்து மர்மங்களை அவிழ்க்கிறார்கள். ஹோம்ஸ் மேரி மேல் உள்ள காதலை ஒப்புக் கொள்கிறார், திருமணத்தோடு கதை முடிகிறது.

A Letter from Mary (1997): டோரதி பாலஸ்தீனத்தில் ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட். மேரியிடம் ஒரு பழைய papyrus கடிதத்தைக் கொடுக்கிறாள். அது மேரி மக்தலீன் எழுதியது, அதில் தான் ஒரு அப்போஸ்தலர் என்று எழுதி இருக்கிறார். அது வெளியே வந்தால், ஒரு பெண் அப்போஸ்தலராக இருந்தாள் என்று தெரிந்தால் அன்றைய ஆணாதிக்க சமூகத்தில் பெரும் சர்ச்சை உண்டாகும். அன்று இரவே டோரதி ஒரு “விபத்தில்” இறக்கிறாள். அது விபத்து இல்லை, கொலை என்று ஹோம்சும் மேரியும் நிரூபிக்கிறார்கள். அடுத்த நாள் ஹோம்ஸ்-மேரியின் வீடு சூறையாடப்படுகிறது. என்ன மர்மம், யார் கொலையாளி என்று துப்பறிகிறார்கள். பில்டப் இருக்கும் அளவுக்கு மர்மம் இல்லை. ரொம்ப சிம்பிளாக முடித்துவிடுகிறார். ஹோம்சே கதையில் பூ இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்கிறார்!

Moor (1998): பாஸ்கர்வில்லி கதை நடந்த டார்ட்மூருக்கு ஹோம்ஸ் திரும்பி வருகிறார். இப்போதும் ஒரு அமானுஷ்ய நாய். ஒரு நாடோடிப் பாட்டுக்காரனின் மரணம். பாஸ்கர்வில்லி மாளிகையில் ஒரு அமெரிக்கப் பணக்காரன். ஹோம்ஸின் godfather பேரிங்-கவுல்ட் இறக்கும் தருவாயில் இருக்கிறார். இதை வைத்து ஒரு சுவாரசியமான கதையைப் பின்னி இருக்கிறார்.

O Jerusalem (1999):: இந்தக் கதை chronologically ஆரம்ப நாவலான Beekeeper’s Apprentice நடுவில் இரண்டு மூன்று வாரத்தில் நடக்கிறது. படித்ததில் எனக்குப் பிடித்தது இதுதான். ஹோம்சும் மேரியும் பாலஸ்தீனத்தில். பாலஸ்தீன கவர்னர் ஆலன்பி. யூதர்கள், முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் யாரும் இன்னும் சீரியஸாக அடித்துக் கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஆனால் டென்ஷன் இருக்கிறது. லோகல் ஒற்றர்களான அலி, முகம்மது இருவரின் உதவியுடன் ஜெருசலேத்தில் வெடிகுண்டு சதியை முறியடிக்கிறார்கள். பாலஸ்தீன குழுக்களை மிக அருமையாக விவரித்திருக்கிறார். அலி, முகம்மது இருவருமே நல்ல பாத்திரப் படைப்புகள்.

Justice Hall (2002): போன கதையில் சந்தித்த முகம்மதும் அலியும் இந்தக் கதையிலும் முக்கிய பாத்திரங்கள். முகம்மது உண்மையில் ஒரு ஆங்கில பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவன். உண்மையான பேர் மார்ஷ். பல வாரிசுகள் இறந்துவிடுவதால் அடுத்த ட்யூக் ஆக பதவி ஏற்க வேண்டிய நிலை. ஆனால் முகம்மது உண்மையில் விரும்புவதோ பாலஸ்தீனப் பாலைவனங்களில் ஒரு நாடோடியாக வாழ்வதைத்தான். அலி அவனது உறவினன், பதவிக்கு உரிமை உள்ளவன், அவனும் முகம்மதோடு அப்படி சுற்றுவதைத்தான் விரும்புகிறான். மார்ஷ் பதவி தன் கடமை, அதைத் தவிர்க்கக் கூடாது என்று நினைக்கிறான். மார்ஷின் மனதை மாற்ற அலி ஹோம்ஸ் மற்றும் மேரியின் உதவியை நாடுகிறான். என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
எனக்கு மிகவும் பிடித்த கதைகள் முகம்மது, அலி இருவரும் வரும் இந்த இரண்டு கதைகள்தான்.

Game (2004): இப்போது ஹோம்ஸ், மேரி இருவரும் இந்தியாவுக்கு வருகிறார்கள். அங்கே கிம்மைகிப்ளிங் உருவாக்கிய கிம் – மூன்று வருஷங்களாகக் காணவில்லை. ஹோம்ஸ் மோரியார்டி மறைவுக்குப் பின் இந்தியா வந்ததாகவும், அப்போது கிம்முடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்புலம். Pigsticking – காட்டுப்பன்றி வேட்டை – காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. சின்னச் சின்னத் தவறுகள் (anachronisms) தெரிகின்றன – ஜின்னா 1924இலேயே முஸ்லிம்களின் தலைவராகிவிட்டார், மேற்கு உத்தரப்பிரதேசத்தைப் பற்றி பேசுகிறார்கள் – ஒரு இந்தியனை proofread செய்ய வைத்திருக்கலாம்.

Locked Rooms (2005): இந்தியாவிலிருந்து ஹோம்சும் மேரியும் சான் ஃபிரான்சிஸ்கோ செல்கிறார்கள். அங்கே மேரிக்கு நிறைய சொத்து இருக்கிறது. மேரிக்கு கப்பலிலேயே பல கெட்ட கனவுகள் ஆரம்பிக்கின்றன. ஹோம்ஸ் அந்தக் கனவுகளை வைத்து மேரி தன் இளமைக் கால நினைவுகளை மறந்திருக்கிறாள் என்று யூகிக்கிறார். மேரியின் பெற்றோரின் இறப்பில் என்ன மர்மம் என்று கண்டுபிடிக்கிறார்கள். கதையின் ஒரு பாத்திரம் டாஷியல் ஹாம்மெட்!

Language of Bees (2009): ஹோம்ஸின் மகன் – ஹோம்சுக்கும் ஐரீன் ஆட்லருக்கும் பிறந்த டேமியன் ஆட்லர் – ஹோம்சைத் தேடி வருகிறார். அவரது மனைவி, மகள் இருவரையும் காணவில்லை. டேமியனுக்கு அப்பா மேல் நிறைய கோபம் உண்டு, அப்பாவை வாழ்க்கை முழுதும் தவிர்த்திருக்கிறார். தேடும்போது உறவு ஓரளவு சுமுகம் அடைகிறது. அதற்குள் டேமியனே விலகிப் போய்விடுகிறார். ஹோம்சும் மேரியும் டேமியனின் மனைவி ஒரு cult தலைவனால் பலி கொடுக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மேரி டேமியன்தான் அதை செய்தவரோ என்று சந்தேகப்படுகிறாள். டேமியனையும், அவர் மகளையும் தப்ப வைக்கும் காட்சியோடு புத்தகம் முடிகிறது, ஆனால் கதை அடுத்த புத்தகத்தில் தொடர்கிறது.

God of the Hive (2010): போன நாவல் இங்கே தொடர்கிறது. cult தலைவன் ஒரு பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரியின் கைப்பாவை. மைக்ராஃப்ட் ஹோம்ஸை கவிழ்க்க போட்ட சதி என்பது தெரிகிறது.

Pirate King (2011): இந்த முறை மேரி ஒரு சினிமா கம்பெனியில் துப்பறியப் போகிறாள். Pirates of Penzance நாடகத்தை பின்புலமாக வைத்து எடுக்கப்படும் கதை. சில நடிகர்களே உண்மையில் கடற்கொள்ளையர்கள். இது வரை வந்த கதைகளில் இதைத்தான் படு சுமார் என்று சொல்வேன்.

சீரிஸில் அடுத்ததாக வரப் போகும் நாவல் Garment of Shadows (2012): மீண்டும் முஹம்மதும் அலியும். பின்புலம் மொராக்கோ. 1920களில் மொராக்கோவின் வட பகுதி ரிஃப் குடியரசாக உருவாகியது. அங்கே மேரியும் ஹோம்சும் முஹம்மதும் அலியும் குட்டையைக் குழப்புகிறார்கள்.

Garment of Shadows (2012): இப்போது ஜப்பானிய இளவரசர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவருக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கும் ஒரு நிஞ்சா இளைஞி ஹருகி சாடோ. சுமார்தான்.

Island of the Mad (2018) இன்னொரு படுசுமாரான நாவல். இந்த முறை வெனிசில் மேரியும் ஹோம்சும் இங்கிலாந்திலிருந்து ஓடிவந்துவிட்ட முன்னாள் பைத்தியக்கார சீமாட்டியைத் தேடுகிறார்கள்.

சிறுகதைகளின் தொகுப்பாக வந்திருப்பது Mary Russell’s War (2016). இவை மர்மக் கதைகள் அல்ல, ஆனால் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.

சீரிசை நான் சிபாரிசு செய்வேன். ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் Justice Hall புத்தகத்தை பரிந்துரைப்பேன்.

கிங் எழுதிய பிற நாவல்களில் ஒன்று Keeping Watch (2003). கதையின் premise – abuse செய்யப்படும் சிறுவர் சிறுமியரைக் கடத்திக் காப்பாற்றும் ஒரு சின்ன டீம் – கவனத்தை ஈர்த்தாலும் கதையில் நிறைய ஓட்டைகள்.

தொடர்புடைய சுட்டிகள்:
லாரி ஆர். கிங்கின் தளம்
லாரி ஆர். கிங் விக்கி குறிப்பு
ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்
ஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்த சிறுகதைகள்

காந்தி படித்த சில மத நூல்கள்

மகாத்மா காந்தியின் வாசிப்பு பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவர் மதங்களைப் பற்றி படித்த சில நூலகள் இவை-
(Photo courtesy – Camera Press)

Abott, Lyman.    What Christianity Means To Me: A Spiritual Autobiography
Ali, Amir Syed.    Spirit of Islam : A History of The Evolution and Ideals of  Islam
Andrew, Charles Freer.    What I Owe To Christ
Arab Wisdom Wisdom of the East series
Arm of God
Arnold, Edwin.    Light of Asia; Or The Great Renunciation (Mahabhinishkarmana)
Arnold, Edwin.    The Song Celestial Or Bhagavadgita
Bhagavad Gita
Bhatt, Nrisinhprasad Kalidas.    Biography of The Prophet
Bible. English Authorized.    The Holy Bible containing the Old and New Testaments
Bible Story
Bible Yew of The World Martyrs
Buhler, George.    The Laws of Manu
Carus, Paul.    Gospel of Buddha
Chakravarti, Atulananda.    Hindus and Muslims of India
Christianity in Practice
Cunningham, J. D.    History of The Sikhs’ From The Origin of The Nation To The Battles of The Sutlej
Dadachanji.    Zend-Avesta
Essence of The Koran
Ghose, Aurobindo.    Eight Upanishads
Ghose, Aurobindo.    Gita: With Text, Translation and Notes
Govindacharya, Alkondaville.    Life of Ramanuja
Hassan.    Saints of lslam
Hayes, Will.    Essence of Hinduism
Hopkins, E. Washburn.    Origin and Evolution of Religion
Imam, Saheb.    Biography of The Prophet [Mohomed]
Irving, Washington. Life of Mahomet and His Successors
Ushopanishad Arvind’s Commentary
Iyer, Rajan.    Vedanta
Jacolliot, M. Louis.    Bible in India
Jaikrishna, Vyas.    Panchikaran
Jain, Champakrai.    Confluence of Religions
James, William.    Varieties of Religious Experiences
Kingsford, Anna and Edward Maitland.    The Bible’s Own Account of Itself
Kingsford, Anna and Edward Maitland.    Story of The New Gospel of Interpretation
Kiritkar, Vasudev.    Studies in Vedanta
Koran
Lady Ramanathan.    Ramayana
Macauliffe, Max Arthur.    Sikh Religion’ Its Gurus, Sacred Writings and Authors
Maitland, Edward.    New Interpretation of The Bible
Manu.    Manusmriti
Masani, Rustom Pestonji.    Religion of The Good Life: Zoroastrianism
Mashruwala, Kishorelal G.    Buddha and Mahavira
Mayne, John Dawson.    Treatise on Hindu Law and Usage
Modi, P. N.    Bhagavadgita: A Fresh Approach
Mirza.    Ethics of Islam
Muller, Friedrich Max.    Upanishads
Narmadashankar.    Dharma Vichara
Nicholson.    Mystics of Islam
Nivedita.    Cradle Tales of Hinduism
Rhys Davids, Thomas William.    Lectures on Buddhism
Rolland, Romain.    Life of Ramakrishna
Rolland, Romain.    Life of Vivekananda and The Universal Gospel
Schopenhaaver.    Upanishads
Shibli, Maulana.    Life of The Prophet
Six Systems of Hindu Philosophy
Sohravorthy, Abdulla.    Sayings of Mahomed
Steps To Christianity
Tilak, Bal Gangadhar.    Hindu Philosophy of Life, Ethics and Religion, Omtat-sat Srimad Bhagavadgita Rahasya Or Karma- Yoga Sastra
Tilak, Bal Gangadhar.    Orion Or Researches Into The Antiquity of The Vedas
Vivekananda, Swami.    Raja Yoga Or Conquering The Internal Nature
Zarathustra.    Sayings of Zarathustra

மகாத்மா காந்தியின் நூல்கள்

காந்தி எழுதிய புத்தகங்கள்

An Autobiography – The Story Of My Experiments With Truth
Key To Health
Hind Swaraj Or Indian Home Rule (ஹிந்த் ஸ்வராஜ் புத்தகத்தின் மின்வடிவம். இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்க மாட்டேன். எங்கே கிடைத்தது என்று நினைவில்லை, பதிவேற்றியவருக்கு நன்றி!)

காந்தியின் கட்டுரைகளின் தொகுப்பு
Truth is God
Nature Cure
Epigrams From Gandhi
Ethical Religion
From Yeravda Mandir (Ashram Observances)
Mohan Mala (A Gandhian Rosary)
Panchayat Raj
Pathway To God
All Men Are Brothers
The Gita According To Gandhi
The Mind Of Mahatma Gandhi
The Moral Basis Of Vegetarianism
The Teaching Of The Gita
The Words Of Gandhi
Towards New Education
Trusteeship
Character & Nation Building
Discourses On Gita
A Gandhi Anthology – Part I
A Gandhi Anthology – Part II
Constructive Programme – Its Meaning And Place
My Views on Education
The Message Of Gita
The Way To Communal Harmony
Truth Is God
Village Industries
Village Swaraj
Selected Letters
Selections From Gandhi
Gandhiji Expects
India Of My Dream
Industrial And Agrarian Life And Relations
Key To Health
My God
My Religion
Prayer
Ramanama
Satyagraha In South Africa
Self Restraint Vs. Self Indulgence
The Essence of Hinduism
The Law And The Lawyers

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்

இது ஒரு வித்தியாசமான பட்டியல். இந்த புத்தகங்கள் அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அதனால் படிக்க முடியாத சில புத்தகங்கள் –

1. The Face of Mother India, Katherine Mayo
2. Mysterious India, Moki Singh
3. What has Religion done for Mankind, Watchtower Bible and Tract Society
4. The Ramayana, Aubrey Menen
5. The Lotus and the Robot, Arthur Koestler
6. The Jewel in the Lotus (A Historical Survey of the Sexual Culture of the East), Allen Edwards
7. A Struggle between Two Lines over the Question of How to Deal with U.S. Imperialism, Fan Asid-Chu
8. Nehru: A Political Biography, Michael Edwards
9. India Independent, Charles Bettelheim
10. Who killed Gandhi, Lourenco De Sadvandor
11. Smash and Grab: Annexation of Sikkim, Sunanda Datta-Ray
12. The True Furqan, “Al Saffee” and “Al Mahdee”
13. Great Soul: Mahatma Gandhi and His Struggle With India, Joseph Lelyveld
14. Old Soldier Sahib, Frank Richards
15. Hindu Heaven, Max Wylie
16. The Land of the Lingam, Arthur Miles
17. Nine Hours to Rama, Stanley Wolpert
18. India Independent, Charles Bettelheim
19. Understanding Islam through Hadis, Ram Swarup
20. The Satanic Verses, Salman Rushdie
21. Islam: A Concept of Political World Invasion, R.V. Bhasin
23. The Polyester Prince, Hamish McDonald
24. Rama Retold, Aubrey Menen
25. Captive Kashmir, Aziz Beg

விஷ்ணுபுரம் – முடிவுரை

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள், கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

“அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி.” – விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிக்கு அங்கீகார ரீதியாகவும், பொருளியல் ரீதியாகயும் இழப்புதான். மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும். கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக புரியும். மொழி பெயர்ப்பது ஒருபக்கம் இருக்கட்டும், நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது. சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன் “இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. நான் படித்தவைகளில் முதன்மையானது”.

மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – போரும் அமைதியும் (ஒருமுறை படித்திருக்கிறேன்), பின் தொடரும் நிழலின் குரல் நாவல்களோடும் ஒப்பிட்டு எப்போதாவது எழுத வேண்டும்.

நான் படித்த பொறியியல் கல்லூரியில், நண்பர்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாறிக் கொள்வோம். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள்தான். ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டனில் துவங்கி அயன் ராண்ட், சிக்மண்ட் ப்ராய்டு வரை. டால்ஸ்டாய், தஸ்த்தயேவ்ஸ்கி எல்லாம் தெரியாது. தமிழைப் பொறுத்த வரை நாவல் என்றால் பொன்னியின் செல்வன்தான். தமிழ் இலக்கியவாதிகள் யார் என்றால் கல்கி, சுஜாதா, வைரமுத்து. சிற்றிதழ்கள் என்று ஒன்று இருக்கிறதென்றே தெரியாது. கிடைப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், தமிழில் சிறந்தவை எது என்று தெரியாது. ‘modern literatureல தமிழ்ல ஒண்ணும் பெருசா இல்லை போல’ என்று நம்பிக் கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், நண்பர் அருண் பரத், ஜெயமோகனின் இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் தளத்தை படித்ததின் மூலம், மற்ற எழுத்தாளர்கள், பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் இனையத்தில் எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர்-வாசகர் உறவில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல்; தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அதுவும் என்னைப் போன்ற வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு தவமின்றி கிடைத்த வரம். ஜெயமோகனுக்கு என் நன்றிகள்.

ஜெயமோகனின் சொல்புதிது குழுமம் மூலமாக, சிலிக்கான் ஷெல்ஃப் வட்டத்தினர் அறிமுகமானார்கள். (ராஜன், ஆர்.வி, பக்ஸ், பாலாஜி, அருணகிரி, நித்யா, அருணா, காவேரி, சித்ரா). இவர்களிடம் உள்ள தமிழ் நாவல்களை வைத்தே ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்கலாம். ஐந்நூறு புத்தகங்களாவது வைத்திருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதின் மூலம் தமிழின் சிறந்த நாவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நண்பர்களுக்கும் என் நன்றி.

நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் வகையறாவைத் தவிர, வேறு இலக்கியங்கள் படித்ததில்லை. நான் விஷ்ணுபுரம் படித்த பிரமிப்பில், அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பிவிட்டேன். திக்கித் திணறி, அழுது கொண்டே பாதி படித்தார். இது மாதிரிதான் இலக்கியம் இருக்குமென்றால், இலக்கியமே வேண்டாம் என்று ஓடிவிட்டார் :-). இப்போதுதான், கொற்றவையை ஒரு முறை படித்து முடித்தேன். விஷ்ணுபுரம் கல்யாண விருந்தென்றால், கொற்றவை தேன்குடம். ஆனால், ஜெயமோகனின் கதைப்புலம், மொழி போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமல் கொற்றவையை படிப்பது கடினம் என்று தோன்றுகிறது. அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பியது என் தவறு. இன்னொருவர் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எதுவும் படித்ததில்லை. அவர் காடு நாவலை ரசித்துப் படித்தார். என் வாசிப்பு அனுபவத்தில், ஜெயமோகனின் நாவல்களை வாசிக்க கீழ்க்கண்ட வரிசையை சிபாரிசு செய்வேன். (நான் படித்ததில்..)

புனைவு – காடு, ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை.

சிறுகதைத் தொகுப்புகளை எந்த வரிசையிலும் படிக்கலாம். அபுனைவும் அப்படித்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்த வரிசையிது.

அபுனைவு – சங்க சித்திரங்கள், இன்றைய காந்தி, நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின்தொடர்தல், இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள், கொடுங்கோளூர் கண்ணகி

விஷ்ணுபுரம் தொடர்பதிவுகள் நிறைவு பெறுகின்றன

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

முந்தைய பகுதிகள்:
அறிவிப்பு, கதைச்சுருக்கம், வரலாறு, தத்துவம், கவித்துவம்+காவிய மரபு, மாய யதார்த்தவாதம், மொழி, கதை மாந்தர்கள், கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து

எழுத்தாளர் சூடாமணியைப் பற்றி விகடனில்

சமீபத்தில் படித்த கட்டுரை. சூடாமணி எத்தனை தனிமையில் வாழ்ந்திருப்பார்கள் என்ற எண்ணம் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர்களை நினைவு கூர்ந்த விகடனுக்கு நன்றி!

அவள் விரிவு, அவள் முழுமை, அவள் பெருக்கம் – அவற்றைப் பிறப்பு உரிமைகளாகக் கேட்கும் முதிர்ச்சியல்லவா அவளுடையது? அவளை எதிலும் அடைக்க முடியாது. தளைப்படுத்த முடியாது. அவள் ஒரு சுதந்திர ஜீவன். சிறையும் விடுதலையும் நாமாக ஆக்கிக் கொள்வதுதானே? அவள் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஜீவன்!

எழுத்தாளர் ஆர். சூடாமணி எழுதிய ‘நான்காம் ஆசிரமம்’ கதையின் வரிகள் இவை. கிட்டத்தட்ட அவரும் இப்படியாகத்தான் வாழ்ந்தவர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மூலம் எழுத்துலகில் தனக்கென அழுத்தமான தடம் பதித்தவர் சூடாமணி. சிறு வயதில் தாக்கிய அம்மை நோயின் பாதிப்பு, கை கால்களின் எலும்பு வளர்ச்சியைப் பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பு குறித்த கேள்விகளையும் பார்வைகளையும் எதிர்கொள்ளத் தயங்கி, வீடெனும் கூட்டுக்கு உள்ளேயே தன் உலகை அமைத்துக் கொண்டவர் சூடாமணி. ஆனால், அவர் படைத்த சிறுகதைகள் மனித மனத்தின் விசித்திரங்கள் மீது எல்லை கடந்து ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சின!

சிறுகதை, ஓவியம் மீது ஆர்வம்கொண்டு இருந்த சூடாமணி, தான் இறப்பதற்கு முன் 10 கோடி மதிப்பு உள்ள சொத்துகளைத் தானமாக வழங்கி இருக்கிறார். அவருடைய 4.5 கோடி மதிப்பு உள்ள வீடு மற்றும் வம்சாவழியாக வந்த சுமார் 6 கோடி மதிப்பு உள்ள சொத்துகளை, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி, ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனை, வி.ஹெச்.எஸ். ஆகிய அமைப்புகளுக்குத் தானமாகக் கொடுக்கச் சொல்லி உயில் எழுதிவைத்து இருக்கிறார். இந்தச் சொத்துக்களின் விற்பனை மற்றும் விநியோகத்தின் பொறுப்புகளை நீதிபதி சந்துருவின் மனைவி பேராசிரியர் பாரதியிடம் ஒப்படைத்திருந்தார் சூடாமணி. 2010-ல் சூடாமணி இறந்த பிறகு, வீட்டை விற்றுக் கிடைத்த 4.5 கோடியை 2011-ல் மூன்று அமைப்புகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கிய பாரதி, 6 கோடியை கடந்த வாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கினார்.

சூடாமணியுடன் தனக்கு இருந்த நெருக்கம் பற்றி மனம் திறந்து பேசினார் பாரதி. “25 வருஷங்களுக்கு முன்னாடி நான் கல்கியில் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, சூடாமணியம்மா கதைகள் எழுதி அனுப்புவாங்க. கதைக் கட்டுக்குள்ளேயே ஒரு கவரும் வெச்சு அனுப்புவாங்க. ஒருவேளை கதை நல்லா இல்லைன்னா திருப்பி அனுப்பும் சிரமத்தை நமக்கு கொடுக்கக் கூடாதுனு அப்படிப் பண்ணுவாங்க. அவங்களோட ஒவ்வொரு கதை வந்ததும் படிச்சிட்டு, ‘ரொம்ப நல்லா இருந்தது’னு உடனே நான் தொலைபேசியில் பாராட்டுவேன். அப்படித்தான் சூடாமணியம்மா எனக்குப் பழக்கம்!

வீட்ல வெச்சே சூடாமணியம்மாவுக்கு அவங்க அம்மா கனகவல்லி, படிப்பு, ஓவியம் சொல்லிக் கொடுத்தாங்க. வீடே பள்ளி என ஆன பிறகு, எப்பவும் வாசிச்சுட்டே இருப்பாங்க சூடாமணியம்மா. நிறைய எழுத ஆரம்பிச்சாங்க. அவங்க முதல் கதை ‘பரிசு விமர்சனம்’ 1954-ல் வெளியாச்சு. விகடனில் முத்திரைக் கதைகள்ல அவங்க கதை வந்திருக்கு.

நல்ல செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணியில் வளர்ந்தாலும், காந்திய வழியில் வாழ்ந்தாங்க சூடாமணியம்மா. சகோதரிகள் மூணு பேர் இறந்த பிறகு, அவங்க தனி மனுஷியாகிட்டாங்க. எழுத்து, புத்தகங்கள்தான் அவங்களுக்குத் துணையா இருந்துச்சு. அவங்க அம்மா கனகவல்லியிடம் இருந்த நெட்டிலிங்கம் மர சரஸ்வதி சிலைதான் எப்பவும் அவங்களுக்குத் துணை. வீட்டில் இருந்து மெரினாவுக்கு காரில் பயணம்… காருக்குள் உட்கார்ந்துக்கிட்டே கடற்கரையை ரசிப்பது… இதுதான் அவங்களோட ஒரே பொழுதுபோக்கு.

2006-ல் இந்த உயிலை எழுதினாங்க சூடாமணியம்மா. அப்பவே எனக்கு இந்த சரஸ்வதி சிலையையும் பரிசாக் கொடுத்துட்டாங்க!

அம்மா என்னை நம்பி ஒப்படைச்ச பொறுப்பை முடிச்சிட்டேன். ஆனா, இதோடு என் வேலை முடியலை. அவங்ககிட்ட இருந்த புத்தகங்களை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்குக் கொடுத்துட்டோம். அவங்களைப் பத்தி ஓர் ஆவணப் படம் எடுத்திருக்கேன். அவங்க எழுதின மொத்தக் கதைகளையும் ஒரே தொகுப்பாக் கொண்டு வரும் எண்ணம் இருக்கு.

சூடாமணியம்மா வரைஞ்ச ஓவியங்களை சில மாதங்களுக்கு முன்னாடி காட்சிக்கு வெச்சிருந்தோம். அந்த ஓவியங்களின் விற்பனை மூலம் வரும் தொகையையும் நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கலாம்னு நினைச்சோம். ஆனா, ‘1950-60கள் காலகட்டத்தில் பெண்கள் வரைந்த ஓவியங்கள்னு எதுவுமே இல்லை. இவங்க வரைந்த ஓவியங்கள் எல்லாம் ‘ஆர்க்கியாலஜிக்கல் வேல்யூ’ கொண்டவை. இவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை. வித்துடாதீங்க’னு சொன்னாங்க ஆர்ட் கேலரியைச் சேர்ந்த ஓவிய ரசிகர்கள். அதனால, இப்போ அவங்க ஓவியங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இருக்கோம்.

சூடாமணியம்மா தானம் கொடுத்த தொகை, மாணவர்களின் படிப்பு, தொழுநோயாளிகளுக்கான சிகிச்சை, நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அறைனு நல்ல காரியங்களுக்குப் பயன்படுது. இன்னும் பல நல்ல விஷயங்களுக்குப் பயன்படும். ‘நீயே என் உலகம்’னு ஒரு கதை எழுதினாங்க சூடாமணியம்மா. அதில் நாயகன், ‘நான் சமர்த்தனான வியாபாரி. பெரும் செல்வத்தைக் கொடுத்து ஏழைகளின் புன்னகையை வாங்கி இருக்கிறேன்’னு ஒரு இடத்தில் சொல்வான். சூடாமணியம்மாவும் அப்படித்தான்!”

தொடர்புடைய சுட்டிகள்:
ஆர். சூடாமணி மறைவு
சூடாமணி பற்றி ஜெயமோகன்
சூடாமணியைப் பற்றி அம்பை
விக்கி குறிப்பு
சூடாமணியைப் பற்றி அனுத்தமா
பா.ரா.வின் அஞ்சலி
விமலா ரமணியின் அஞ்சலி
எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி
ஜீவியின் அறிமுகம்
பாவண்ணன் ரயில் சிறுகதையை அலசுகிறார்
அழியாச்சுடர்கள் தளத்தில் இரண்டு சிறுகதைகள் – இணைப்பறவை, பூமாலை