தீபாவளிச் சிறுகதை – லா.ச.ரா.வின் ‘பாற்கடல்’

Deepavaliஅனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளிக்கு என்ன சிறுகதை பொருந்தும் என்று யோசித்தால் அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்‘, லா.ச.ரா.வின் ‘பாற்கடல்‘ இரண்டும் நினைவு வந்தன. இன்று நான் இருக்கும் மனநிலையில் (உறவினரின் இறப்பு) பாற்கடல்தான் பொருத்தமாக இருக்கிறது. புத்தாடை, தீபாவளி பட்சணம், பட்டாசு ஆகியவற்றோடு இந்தக் கதையையும் எஞ்சாய்!

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

வெங்கட் சாமிநாதன் – மீண்டும்

jeyamohanகிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு முன் எழுதிய பதிவு. இப்போது பதிக்கக் காரணம் சமீபத்தில் ஜெயமோகன் “வயதான காலத்தில் சாமிநாதன் அதுவரை பேணிய அனைத்துச் சமநிலைகளையும், நவீன இலக்கிய மதிப்பீடுகளையும் இழந்து சாதியுணர்டனும் மதவெறியுடனும் எழுதிய பல பதிவுகள் இணையத்தில் சிதறிக் கிடக்கின்றன” என்று எழுதி இருப்பதுதான். இணையத்தில் அப்படி எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை. ஐந்து வருஷங்களுக்கு முன்னால் என் ஒரிஜினல் பதிவை ஜெயமோகனும் படித்து ஒரு பின்னூட்டமும் எழுதி இருந்தார். அப்போது அவரும் என் கருத்தை மறுத்து வெ.சா. தன் விழுமியங்களை இழந்து ஜாதி மதவெறியுடன் நிறைய எழுதி இருக்கிறார் என்று எதுவும் சொல்லவில்லை.

பதிவிலிருந்து relevant பகுதி.

வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். இதற்கு ஆதாரமாக சுட்டப்படுவது அவர் சோ. தர்மனின் கூகை என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனமும் தமிழ் ஹிந்து தளத்தில் வெட்டுப்புலி நாவலுக்கு எழுதிய விமர்சனமும்தான். கூகையை நான் படித்ததில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கூகை, வெட்டுப்புலி பற்றிய அவர் கருத்துகளைப் பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. அவர் திராவிட இயக்கத்தின் போலித்தனம், பிராமண எதிர்ப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கக் கூடிய கருத்துகள் படைப்புகளில் இருந்தால் அவற்றை emphasize செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன். இதில் நான் தவறு காணவில்லை, ஆனால் இந்த நிலைப்பாடு அவரது விமர்சன எல்லைகளைக் குறுக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

இதைத்தான் ஜெயமோகனும் இன்று மனதில் வைத்து எழுதுகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இந்தக் கட்டுரைகள் எந்த விதத்திலும் ஜாதி மதவெறியை காட்டவில்லை என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். ஜெயமோகனின் இந்தக் கருத்து தவறு என்று ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஹிந்துத்துவர்கள் சொன்னால் அவர்களுடைய அரசியல் நிலை காரணமாக பெரியவரின் மத வெறிக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் என்று அவர்கள் கருத்துக்களை ஜெயமோகனும் மற்றவர்களும் புறம் தள்ளிவிடக் கூடும். ஆனால் அவர்களுக்கு நேர் எதிர் அரசியல் நிலை உள்ள, ஹிந்துத்துவ அரசியலை முற்றிலும் நிராகரிப்பவ்ர்களிலும் இந்தக் கருத்து தவறானது என்று ஆணித்தரமாக பேசக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யத்தான் இதை மீள்பதித்திருக்கிறேன்.

கூகையை பிறகு படித்தேன். நாவலின் ஒரு சிறு பகுதியைப் (ஒரு அய்யர் நிலங்களை நாயக்கர்-தேவர் போன்ற ஆதிக்க ஜாதியினரைத் தவிர்த்து பள்ளருக்கு குத்தகைக்கு கொடுப்பது, பிறகு விற்பது இத்யாதி) பற்றித்தான் வெ.சா. தன் விமர்சனத்தில் நிறையப் பேசுகிறார். அவரது விமர்சனத்தை மட்டும் படிப்பவர்களுக்கு இதுதான் நாவலின் முக்கியப் பகுதியோ என்று தோன்றும். கூகை பள்ளர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது, அதில் சம்பந்தப்படும் அளவுக்குத்தான் பிற ஜாதியினர் விவரிக்கப்படுகிறார்கள். வெ.சா. தனக்கு ஒரு அய்யர் இப்படி செய்தார் என்று வருவது தனக்கிருந்த பிம்பங்களை கட்டுடைத்தது, சோ. தர்மனே இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நம்பிக்கை ஏற்பட்டது என்று எழுதுகிறார். நாவலில் அவருடைய takeaway இதுதான் என்று தெளிவாகத் தெரிகிறது. (எண்பத்து சொச்சம் வயதில் மறைந்த வெ.சா.வுக்கே இது கண்திறப்பு என்றால் என் தலைமுறை எத்தனை வியப்படையும்?) கண்திறப்பு அவருக்கு takeaway ஆக இருப்பதில் ஆச்சரியம் என்ன? ஆனால் அந்தக் கண்திறப்பு அவரது நோக்கைக் குறுக்கிவிட்டது, அதனால் அவரது விமர்சனம் முழுமையாக இல்லை. அதற்காக அவரது நேர்மையைப் பற்றியோ, அவர் இதை ஜாதீய, மதக் கண்ணோட்டங்களில் இந்த விமர்சனங்களை எழுதவில்லை என்பதைப் பற்றியோ சந்தேகிக்க எந்த முகாந்தரமும் இல்லை.

படிப்பவர்கள் யாருக்காவது வெ.சா. அப்படி ஜாதி மத வெறியோடு எழுதிய கட்டுரைகள் தெரிந்தால் சுட்டி கொடுங்கள்! அதை விட முக்கியமாக ‘பாலையும் வாழையும்‘ யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்! மின்பிரதி இருந்தால் இன்னும் உத்தமம்…

வசதிக்காக பழைய பதிவை இங்கே சில திருத்தங்களோடு மீள்பதித்திருக்கிறேன்.


இலக்கிய விமர்சனம் ஒரு கலை. அது தமிழ்நாட்டில் குறைவு.

விமர்சனத்துக்கு அடிப்படை நேர்மைதான். படைப்புகள்தான் விமர்சிக்கப்பட வேண்டும். நீங்கள் மதிப்பவர், உங்களுக்குப் பிடித்தவர், உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர் எழுதினார் என்பதற்காக ஒரு படைப்பை உயர்த்திப் பிடிக்கக் கூடாது. உங்களுக்குப் பிடிக்காதவர் எழுதினார் என்பதற்காக தாழ்த்துதலும் கூடாது. உங்களுடைய framework என்ன என்று தெளிவாக இருக்க வேண்டும். ஒரு புத்தகம் ஏன் பிடித்திருக்கிறது, ஏன் பிடிக்கவில்லை என்று தெளிவாக விளக்க வேண்டும்.

அப்படி நேர்மை, தெளிவு இரண்டும் நிறைந்த ஒரு அபூர்வ மனிதர் வெங்கட் சாமிநாதன். வெ.சா.வின் கருத்துகளோடு எனக்கு எப்போதும் ஒத்துப் போவதில்லை. ஆனால் அவரது integrity சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. தான் நினைப்பதைத்தான் அவர் எழுதுகிறார், சும்மா முகஸ்துதிக்காகவோ, தனக்கு வேலை நடக்க வேண்டுமென்றோ அவர் எழுதுவதில்லை. ஐம்பது ஆண்டுகளாக அவர் ஒரு சின்ன வட்டத்துக்குள் இருந்துகொண்டே பெரிய விஷயங்களைச் செய்திருக்கிறார்.

வ.ந. கிரிதரன் அவரைப் பற்றி சிறப்பான ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். வெ.சா.வை அவ்வளவாகப் படிக்காத என் போன்றவர்களுக்கும் அவரது ஆளுமையை ஓரளவு புரியவைக்கிறார். படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நண்பர் ஜடாயு இன்னும் இரண்டு சுட்டிகளைக் கொடுத்திருக்கிறார். அவரே எழுதிய “வெ.சா என்னும் சத்தியதரிசி” என்று ஒன்று, அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “நமக்கு எதற்கு வெ.சா.?” என்று ஒன்று. இரண்டு கட்டுரைகளும் வெ.சா.வின் ஆளுமையை இன்னும் புட்டுப் புட்டு வைக்கின்றன.

வெ.சா. தற்போதெல்லாம் பிராமண சார்பு நிலை எடுக்கிறார் என்ற விமர்சனத்தை இப்போதெல்லாம் பார்க்கிறேன். இதற்கு ஆதாரமாக சுட்டப்படுவது அவர் சோ. தர்மனின் கூகை என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனமும் தமிழ் ஹிந்து தளத்தில் வெட்டுப்புலி நாவலுக்கு எழுதிய விமர்சனமும்தான். கூகையை நான் படித்ததில்லை, அதனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கூகை, வெட்டுப்புலி பற்றிய அவர் கருத்துகளைப் பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. அவர் திராவிட இயக்கத்தின் போலித்தனம், பிராமண எதிர்ப்பு நிலை ஆகியவற்றைப் பற்றி சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார் என்றும் அந்த முடிவுகளுக்கு பலம் சேர்க்கக் கூடிய கருத்துகள் படைப்புகளில் இருந்தால் அவற்றை emphasize செய்கிறார் என்றும் நான் நினைக்கிறேன். இதில் நான் தவறு காணவில்லை, ஆனால் இந்த நிலைப்பாடு அவரது விமர்சன எல்லைகளைக் குறுக்கிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

நான் வெ.சா.வை அதிகம் படித்ததில்லை. படித்த வரையில் உலகைப் புரட்டிப் போடும் எதையும் அவர் சொல்லிவிடவும் இல்லை. ஆனால் அவருடைய தாக்கம் முக்கியமானது என்று எனக்கே புரிகிறது. அவர் படைப்பாளி இல்லை, அதனால் இன்னும் ஒரு இருபது வருஷங்களில் மறக்கப்பட்டுவிடுவார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு மட்டுமல்ல, டி.கே.சி., கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, ம.பொ.சி., கோமல் சுவாமிநாதன் போன்ற தாக்கம் நிறைந்த பல ஆளுமைகளுக்கு நடப்பதுதான். இந்த மாதிரி ஆளுமைகளின் தாக்கம் அவர்களோடு பழகுபவர்கள் மீதுதான் நிறைய இருக்கிறது.

அவரது சிறந்த விமர்சன எழுத்துக்களை தொகுத்துப் போட்டால் இன்னும் கொஞ்ச நாள் தாக்குப் பிடிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகனின் சர்ச்சைக்குரிய கருத்து
கூகை நாவல் பற்றி வெ.சா., கூகை பற்றி ஆர்வி
வெட்டுப்புலி பற்றி வெ.சா., வெட்டுப்புலி பற்றி ஆர்வி

வ.ந. கிரிதரனின் கட்டுரை
வ.ந. கிரிதரனின் தளம்
வெ.சா. பற்றி ஜெயமோகன் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)
வெ.சா. பற்றி நண்பர் ஜடாயு – “வெ.சா என்னும் சத்தியதரிசி
வெ.சா. பற்றி அரவிந்தன் நீலகண்டன் – “நமக்கு எதற்கு வெ.சா.?
திண்ணை இணைய இதழில் வெ.சா. கட்டுரைகள்
தமிழ் ஹிந்து தளத்தில் வெ.சா. கட்டுரைகள்
வெ.சா.வின் தளம் (கடைசி பதிவு 2012-இல்)

நிழல்

தமிழ் ஹிந்துவில் என்னுடைய இன்னொரு மஹாபாரதச் சிறுகதை வெளியாகி இருக்கிறது. தளத்தின் பொறுப்பாளர்களுக்கு என் நன்றி!

எத்தனை திருத்தினாலும் திருப்தி இருப்பதே இல்லை. சின்னச் சின்ன மாற்றங்களோடு அதே சிறுகதை கீழே.

நிழல்

இன்னும் ஒரு அடி. இன்னும் ஒன்று. இன்னும் ஒன்று. இன்னும் ஒன்று…

என்னதான் களைத்திருந்தாலும் கிருதவர்மன் நடப்பதை நிறுத்தும் வரை தானும் ஓய்வதில்லை என்று கிருபர் தீர்மானித்திருந்தார். ‘நீ உட்கார்ந்தால் நானும் கொஞ்சம் ஓய்வெடுப்பேனே, நில்லேண்டா’ என்று அவனை மனதில் சபித்தார். கிருதவர்மனும் சோர்வுற்றிருந்தான் என்பது அவனும் குனிந்த தலை நிமிராமல் சின்னச் சின்ன அடிகளாக எடுத்து நடப்பதில் தெரிந்தது. இன்னும் அரை நாழிகைக்குள் நின்றுவிடுவான் என்று எண்ணிக் கொண்டார். பிறகு தலையை நிமிர்த்தி முன்னால் நோக்கினார்.

அடர்ந்த கருமையான கூந்தல். பரந்த தோள்கள். வலுவான முதுகுத் தசைகள். முழங்கால் வரை நீண்டிருந்த கைகள் முன்னும் பின்னும் சீராகச் சென்று வந்தன. நீண்ட கால்களின் ஆடுசதை இறுகித் தெரிந்தது. தந்தை சரத்வானின் தோள்கள். தந்தையின் கைகள். தந்தையின் கால்கள். தந்தையின் கூந்தல். தன் தோள்கள். தன் முதுகு. தன் கைகள். தன் கால்கள். தன் கூந்தல். மாலை வெயிலில் பொலிந்த பொன்னிற உடல். கிருபியின் பொன்னிறம். அது மட்டும்தான் தன் நிறம் இல்லை. கிருபரின் முகம் தானாக மலர ஆரம்பித்தது

அஸ்வத்தாமன் திரும்பினான். அதே குறுகிய நெற்றி. அதே இடுங்கிய சிறு பச்சைக் கண்கள். முனையில் கொஞ்சம் வளைந்திருந்த அதே மூக்கு. அதே உப்பிய கன்னங்கள். அதே தெற்றுப்பல். அதே இரட்டைத் தாடை. துரோணனின் முகம். கிருபரின் முகத்தில் தோன்ற ஆரம்பித்திருந்த மலர்ச்சி தானாக மறைந்தது. அவரது கண்கள் சுருங்கின.

அஸ்வத்தாமன் அவர் கண்கள் சுருங்கியதைக் கவனித்தான். அவரிடம் விரைந்து வந்தான். ‘களைத்திருக்கிறீர்களா மாமா? இந்த வேப்ப மரத்தடியில் அமருங்களேன். அருகில் நீரின் சத்தம் கேட்கிறது, நான் சென்று கொஞ்சம் குளிர்ந்த நீர் கொண்டு வருகிறேன். நீங்களும் களைத்துவிட்டீர்கள் கிருதவர்மரே! மாமாவுடன் அமருங்கள்’ என்றான்.

‘இல்லை மருகா, முதலில் துரியோதனனைக் கண்டுபிடிப்போம், பிறகு மற்றதெல்லாம்’ என்றார் கிருபர். ‘இருக்கட்டும் மாமா, எங்கே போய்விடப் போகிறான்? நம்மாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாண்டவர்களும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது. அவனுக்கு எந்த அபாயமும் இருக்காது’ என்று அஸ்வத்தாமன் சொல்லிவிட்டு அவருக்கு மிக அருகில் வந்தான். ‘நீங்கள் நிறுத்தினால்தான் கிருதவர்மரும் நிற்பார். அவரை விட வயதில் மூத்த நீங்கள் நடக்கும்போது அவர் ஓய்வெடுக்க சம்மதிக்கமாட்டார்’ என்று ரகசியமாகச் சொன்னான். சரி என்று தலையை மெதுவாக ஆட்டியபடியே கிருபர் கிருதவர்மனை நோக்கினார். கிருதவர்மன் முகத்தில் ஒரு சின்னப் புன்னகை இருந்தது. கிருதவர்மனுக்கு பாம்புச் செவி என்பது கிருபருக்கு நினைவு வந்தது.

பதிலுக்குக் காத்திராமல் அஸ்வத்தாமன் தண்ணீரின் சத்தம் கேட்கும் திசையை நோக்கி விரைந்தான். கிருபர் அடிமரத்தின் மீது சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். கிருதவர்மன் அவர் எதிரில் அமர்ந்தான். கிருபரின் கண்கள் லேசாக மூடத் தொடங்கினாலும் கிருதவர்மனின் இன்னும் மறையாத புன்னகையை கவனித்தார். ‘சொந்த மகன் இல்லையே என்ற குறையே உங்களுக்கு வேண்டாம் கிருபரே! அஸ்வத்தாமன் ஆசார்யருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மகன்தான்!’ என்று கிருதவர்மன் களைத்த குரலில் சொன்னான். கிருபர் நன்றாகவே கண்களை மூடிக் கொண்டார்.

பிரச்சினையே அதுதானடா மூடா! அவன் எனக்கு மட்டுமல்ல, துரோணனுக்கும் மகன் என்பதுதான் பிரச்சினை. அது சரி, அது என்ன ஆசார்யன்? துரோணன் என்று சொல்லமாட்டாயோ? அவன் ஆசார்யன் என்றால் நான் என்ன சமையல்காரனா? என்னை மட்டும் கிருபன் என்று பெயர் சொல்லி அழைக்கிறாயே!

வில்லின் நுட்பங்களை மற்றும் சிலருக்கு – வெகு சிலருக்கு – கற்றுத் தருபவன் அந்த துரோணன். வில் மட்டும் பயின்றால் போதாதடா, மற்ற படைக்கலங்களை எப்படி பயன்படுத்துவது என்று பயிற்சி தர வேண்டாமா? படைக்கலம் பயின்றால் போதுமா, சேனைகளை வழி நடத்திச் செல்லத் தெரிய வேண்டாமா, வியூகங்களை வகுக்கத் தெரிய வேண்டாமா? அத்தனையும் கற்றுத் தருவது நானடா! ஹஸ்தினபுரத்தின் அற்புதமான குருகுலத்தை உருவாக்கியவன் நானடா! ஆசார்யன் என்றால் அது நான்தானடா, அவன் அல்லன்!

குருகுலத்தின் பாடத் திட்டத்தை வகுத்தது நான். இன்று குருகுலம் இத்தனை பிரபலமாக இருக்கிறது என்றால் யார் காரணம்? பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு அரசும் ஹஸ்தினபுரத்துக்கு தங்கள் இளவரசர்களை அனுப்ப யாரடா மூல காரணம்? எந்த மூலையில் எந்த இளவரசன் பிறந்தாலும் அவனுக்கு வாழ்த்து அனுப்புவது நான். எட்டு வயதில் இங்கே பயில அனுப்பலாம் என்று நினைவூட்டுவது நான். வரும் இளவரசர்களின் உணவு, உடை, பராமரிப்பு, ஆசிரியர்களை அமர்த்துவது, வில் தவிர்த்த மற்ற படைக்கலங்களின் நுணுக்கங்கள கற்றுத் தருவது, படை நடத்துவதின் அடிப்படைகள், நுட்பங்கள் எல்லாம் என் பொறுப்பு. அது என் குருகுலம்! ஆனால் யாரைக் கேள், துரோணனின் குருகுலம், மஹா ஆசார்யர் துரோணர்! நான்? வெறும் குலகுரு! இந்தக் கௌரவாதிகளின் பல நூறு மக்குப் பிள்ளைகள்தான் என் சிஷ்யர்கள். அர்ஜுனனும் துரியோதனனும் பீமனும் பகதத்தனும் பூரிசிரவசும் துரோணனின் சிஷ்யர்கள்! அவர்கள் என்னிடமிருந்து ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லையா? என் அத்தனை உழைப்பும் அவனுக்குப் பெருமை சேர்க்கத்தானா? நான் அவனுடைய நிழல் மட்டும்தானா?

ஆனால் உன்னை மட்டும் சொல்வானேன்! பீஷ்ம பிதாமகர் என்று பெரிய பேர், ஆனால் உன்னைக் கண்டதும் அப்படியே காலில் விழாத குறையாகப் பணிந்து பாண்டவ கௌரவர்களின் ஆசார்யராக இருக்க வேண்டும் என்று அந்தக் கிழட்டுக் கழுகும்தான் கேட்டுக் கொண்டது. பிறகு போனால் போகிறது என்று குலகுரு பட்டத்தை எனக்கு பிச்சை போடுகிறது! வெட்கம் இல்லாமல் நானும் ஏற்றுக் கொண்டேன்…

அஸ்வத்தாமன் மெதுவாக கிருபரின் தோளை உலுக்கினான். கிருபர் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். விழித்ததும் அவர் கண்டது அதே முகம். துரோணனின் முகம். தன்னிச்சையாக அவர் கண்கள் மூடிக் கொண்டன. ‘எழுந்திருங்கள் மாமா! இந்த நெல்லிக் கனிகளை சாப்பிட்டு கொஞ்சம் பசியாறுங்கள்’ என்று அவரை மீண்டும் அஸ்வத்தாமன் எழுப்பினான். கிருபரால் இந்த முறை மலர்ந்த முகத்தோடு விழிக்க முடிந்தது. ‘நீயும் கொஞ்சம் சாப்பிடு, கிருதவர்மருக்கும் கொடு’ என்றபடியே இரண்டு கனிகளை எடுத்துக் கொண்டார்.

“துரியோதனன் நாரைத் தடாகத்தின் பக்கம் பார்த்ததாக ஒரு வேடன் சொன்னான்” என்றான் அஸ்வத்தாமன்.

“மடையன்! சிறு வயதில் கௌரவர்கள் அங்கே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்ததெல்லாம் பீமனுக்கு நினைவிருக்காதா என்ன? பாண்டவர்கள் அவனைக் கண்டுபிடிப்பதை சுலபமாக்குகிறான்” என்று கிருபர் சினந்தார்.

“மெய்க்காவல் படை கூட இல்லாமல் இளவரசர் தன்னந்தனியனாகிவிட்டார்” என்று கிருதவர்மன் பெருமூச்செறிந்தான்.

யார் தவறு? துரோணன் தலைமை தாங்கி ஐந்தே நாளில் கௌரவர்கள் தோற்றாயிற்று, சேனாதிபதிக்கு அத்தனை திறமை. அந்தக் கர்ணன் பாவம், பாதிப் படையும் முக்கால்வாசி மஹாரதிகளும் ஒழிந்த பிறகு என்னத்தை கிழிக்க முடியும்? பதினோரு அக்ரோணி சேனையை ஏழு அக்ரோணி சேனை எதிர்க்கிறது. அர்ஜுனனையும் பீமனையும் சாத்யகியையும் விட்டால் அந்தப் பக்கம் வேறு மஹாரதிகளே கிடையாது. இத்தனை பலவீனங்கள் இருந்தும் நம் தரப்பில் இத்தனை முட்டாள் சேனாதிபதி இருந்தால் ஏன் தோற்க மாட்டோம்? அற்ப விஷயம், கர்ணனை சம்சப்தகனாக அனுப்பி அர்ஜுனன் கதையை முடிக்க வேண்டியதுதானே! அது கூடத் தெரியாமல் என்ன பிரதம சேனாதிபதி? சொன்னால் பீமனையும் சாத்யகியையும் கர்ணன் திசைதிருப்புவான், அப்போது யுதிஷ்டிரனைப் பிடித்துவிடுவேன் என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கிறாய். அட அந்த மூவருமே வியூகத்தின் உள்ளே இருக்கும்போது நீ யுதிஷ்டிரனைப் பிடித்துவிட்டாயா? பதினோரு அக்ரோணி சேனையில் இன்று நாலே பேர்தான் மிச்சம்!

“என்ன மாமா யோசனையில் ஆழ்ந்துவிட்டீர்கள்? நாம் விரைந்து செல்ல வேண்டும், அப்போதுதான் சூரியன் மறைவதற்குள் நாரைத் தடாகத்துக்கு போக முடியும்” என்றபடியே அஸ்வத்தாமன் மேற்காக நடக்க ஆரம்பித்தான்.

நீயா பத்ம வியூகம் வகுத்தாய்? அதை அபிமன்யு உடைத்தபோது ஜயத்ரதனை அங்கு அனுப்பி நீயா மீண்டும் அடைத்தாய்? பேருக்குத்தான் துரோணன் தலைவன், பொறுப்பு என் தலையில்தான் விழும் என்று யாருக்கும் தெரிவதில்லை. இல்லை, அந்தக் காந்தார நரிக்கு நன்றாகவே தெரியும். பாண்டவ வனவாசத்தின்போது துரோணன் இந்திரப்பிரஸ்தத்தின் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டான், வில் தவிர வேறு எதுவும் அறியாத அந்தணனுக்கு அதிகாரமா என்று வலுத்த குரல் எழுந்தபோது நாட்டை என்ன ஆசார்யரா நடத்தப் போகிறார், அவருண்டு அவர் வில் உண்டு என்று அவர் இருக்கப் போகிறார், கிருபர் அல்லவா ஆட்சி செலுத்தப் போகிறார், இந்திரப்பிரஸ்த மக்களுக்கு ஒரு குறையும் இருக்காது என்று அவையில் எல்லார் முன்னிலையிலும் அந்த நொண்டி நரி சொன்னானே! அப்போது என்னை அல்லவா நீ சர்வாதிகாரியாக நியமித்திருக்க வேண்டும்? நான் ஒரு ஈனப் பிறவி, வாயை மூடிக் கொண்டு துரோணனோடு இந்திரப்பிரஸ்தம் சென்றேன்.

அஸ்தமன சூரியன் தண்ணீரை பொன்னாக மின்னச் செய்து கொண்டிருந்தான். பஞ்சுப் பொதியிலிருந்து பஞ்சு கீழே விழுவதைப் போல நாரைகளின் பெருங்கூட்டத்திலிருந்து அங்கும் இங்கும் சில நாரைகள் தண்ணீருக்குள் இறங்கின. முன்னால் சென்று கொண்டிருந்த அஸ்வத்தாமன் திடீரென்று கூவினான். ‘இளவரசே! துரியா!’ என்று அலறியபடியே ஓடினான். கிருபர் அருகே சென்றபோது அவனது பச்சைக் கண்கள் நிறம் மாறி சிவந்து கிடந்தன. கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.

aswathama_duryodhanaமுறிந்த தொடையிலிருந்து ஓடிய ரத்தம் சேற்றோடு கலந்து சிவப்புக் கம்பளத்தில் படுத்திருப்பதைப் போல துரியோதனன் கிடந்தான். அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே அமர்ந்து அவன் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டான். கிருபர் ‘நான் சென்று பச்சிலைகள் கொண்டு வருகிறேன், கிருதவர்மரே, நீங்கள் எப்படியாவது ஒரு மருத்துவரைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்!’ என்று பரபரத்தார்.

துரியோதனன் நகைத்தான். ‘தருமன் தர்மவான்தான், ஆனால் எதிரி பிழைத்துக் கொள்ளும் நிலையில் இருக்கும்போது அவனை விட்டுவிட்டுச் செல்லும் அளவுக்கு மூடன் அல்ல, கிருபரே!’ என்றான். கிருபரின் தலை தொங்கியது. துரியோதனன் செருமினான். ‘இந்த நேரத்தில் எனக்கு உதவக் கூடிய ஒரே பச்சிலை சிவமூலிகை மட்டுமே’ என்று புன்னகைத்தான். ‘வரும் வழியில் பார்த்தேன்’ என்று கிருபர் விரைந்தார்.

என் ஆலோசனைப்படி ஜயத்ரதனின் அருகில் நீ நின்றிருந்தால் உன்னை வென்று அர்ஜுனனால் அவனை அணுக முடிந்திருக்காது. அன்றிரவு அர்ஜுனன் சிதை ஏறி இருப்பான், துரியோதனன் இப்படி அநியாயமாக விழுந்து கிடக்காமல் இத்தனை நேரம் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி ஆகி இருப்பான். நான் சொல்லி நீ கேட்டுவிட்டால் உன் கௌரவத்துக்கு இழுக்கு வந்துவிடும் இல்லையா? மைத்துனக் காய்ச்சல்! ஆனால் வெளியே சொன்னால் எனக்குத்தான் பொறாமை என்பார்கள்.

ஆம் ஒத்துக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் நீ என்னை விடப் பெரிய வீரன்தான். ஆனானப்பட்ட பார்த்தன் கூட உன்னை வெல்ல முடியாது. ஆனால் உன்னால் மட்டும் பார்த்தனை வென்றுவிட முடியுமா? பார்த்தனை விடு, வயதான பிதாமகரை வெல்ல முடியுமா? சரி அப்படியே நீ அவர்களையும் வெல்லும் திறமை படைத்தவனாகவே இருந்தால் மட்டும்? படைக்கலத் திறமை மட்டும் போர்களை வெல்லப் போதுமா? பீஷ்மரும், கர்ணனும், நானும், பகதத்தனும், சல்லியனும் தளபதிகள். நீயும், அஸ்வத்தாமனும், பூரிஸ்ரவசும், ஜயத்ரதனும் வீரர்கள் மட்டுமே! இந்த மூடன் இதை உணர்ந்திருந்தால் இன்று இப்படி குற்றுயிராகக் கிடப்பானா?

கிருபர் தடாகத்துக்குத் திரும்பியபோது சூரியனின் எச்சம் மட்டும்தான் இருந்தது. அஸ்வத்தாமன் பொங்கிக் கொண்டிருந்தது நாரைகளின் கூச்சலையும் தாண்டி கேட்டது. ‘கதாயுதப் போரின் விதிகளை மீறி இடுப்புக்கு கீழே அடித்திருக்கிறான் கோழை! இவன் சொன்ன பொய்யால்தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். தர்மன் ஒரு போலி, பீமன் ஒரு கோழை, அர்ஜுனன் ஒரு கயவன், கிருஷ்ணன் ஒரு வஞ்சகன்! என்ன நேர்ந்தாலும் சரி, இவர்களை பழி வாங்கியே தீருவேன். துரியோதனா, இது சத்தியம்!’ என்று துரியோதனனின் வலக்கையை எடுத்து தன் வலக்கையால் ஏறக்குறைய அறைந்தான்.

துரியோதனனின் விழிகள் விரிந்தன. ‘கிருபரே, கொஞ்சம் நீர் கொண்டு வாருங்கள்’ என்றான். கிருபர் தடாகத்திலிருந்து நீரை விரைந்து எடுத்துக் கொண்டு வந்து துரியோதனனுக்கு புகட்டப் போனார். ‘இல்லை கிருபரே, குடிக்க அல்ல’ என்ற துரியோதனன் ‘அஸ்வத்தாமா, என் வலப்பக்கம் முழந்தாளிடு’ என்றான். ஒன்றும் புரியாத அஸ்வத்தாமன் முழந்தாளிட, துரியோதனன் தொன்னையிலிருந்து நீரை எடுத்து அஸ்வத்தாமன் தலையில் ஊற்றினான்.

கிருபரின் மார்புக்கூடு விரிந்தது. அவரது மூச்சு கொல்லன் துருத்தி போல பெரிதாக எழுந்தது. அவரது கன்னங்களில் ரத்தம் பாய்ந்து சிவந்தன. துரியோதனன் ‘அஸ்வத்தாமா, உன்னை என் படைகளின் பிரதம சேனாதிபதியாக நியமிக்கிறேன், பாண்டவர்களைக் கொல்! கிருபரே, கிருதவர்மரே, நீங்கள் இருவரும் இவனுக்கு பக்கபலமாக கடைசி வரை நிற்க வேண்டும். போ அஸ்வத்தாமா, என் இறுதி நிமிஷங்களை மகிழ்ச்சியானதாக ஆக்கு, நீ மீண்டும் என்னைப் பார்க்கும் வரை நான் உயிர் துறக்க மாட்டேன்!’ என்று வஞ்சினம் உரைத்தான்.

அடச்சே! மூன்றே பேர் கொண்ட படைக்குக் கூட நான் தலைவன் இல்லையா? என் தலைமைப் பண்புகள் யார் கண்ணிலும் படாதா? நான் மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்த்தவன் எனக்கே ஆணையிடுவானா? காலமெல்லாம் துரோணனின் நிழலாக இருந்தேன், இனி மேல் இவன் நிழலாக என் வாழ்வைக் கழிக்க வேண்டியதுதானா? அதே இடுங்கிய முகத்திற்கு சேவை செய்தே என் வாழ்நாள் முடியுமா? எங்கள் குலத்துக்கு வந்த சாபமடா!

மூவரும் மீண்டும் கூடாரங்களின் பக்கம் நடந்தனர். கௌரவர் கூடாரங்களில் அங்குமிங்கும் ஓநாய்களின் விழிகள் ஒளிவிட்டன. பாண்டவர் படைகளின் கூடாரங்களில் விளக்குகள் அணைந்துவிட்டிருந்தன. நட்சத்திரங்களின் மெல்லிய ஒளி மேகக் கூட்டத்தின் வழியே மங்கலாகத்தான் தெரிந்தது.

குயத்திக்குப் பிறந்தவன் குடத்திலே பிறந்தேன், அதனால் துரோணன் என்ற பேர் பெற்றேன் என்று கதை கட்டி என் தந்தையின் மனம் கவர்ந்து என் தங்கையை மணந்தாய். குருகுலத்தில் வில் கற்றுத் தா என்று அழைத்தபோது என்னதான் மாமா மைத்துனன் என்றாலும் உறவினருக்கு கடன்பட விரும்பவில்லை என்று பெருமை பேசி மகனுக்கு பால் கூட வாங்கித் தர முடியாத வறுமையில் என் தங்கையை சித்திரவதை செய்தாய். கடைசியில் கரையான் புற்றில் குடியேறிய பாம்பைப் போல என் குருகுலத்தை உன் குருகுலமாக்கிக் கொண்டாய். நீ இறந்த பிறகும் எனக்கு விடுதலை இல்லையா? கிருபி அப்பனுக்கு அடிமை, கிருபன் அப்பனுக்கும் அடிமை, மகனுக்கும் அடிமையா?

‘நாம் மூவர்தான் இருக்கிறோம், அவர்கள் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள், இவர்களை எப்படித்தான் எதிர்கொள்வது மாமா?’ என்று அஸ்வத்தாமன் கேட்டான்.

நீதானேடா தளபதி? என்னை ஏன் கேட்கிறாய்? ஆணையிடு, நிறைவேற்றுகிறேன். போதும், எனக்கு வர வேண்டிய பேரையும் புகழையும் உன் அப்பன் அபகரித்துக் கொண்டது போதும். இனி மேலும் இல்லை. நான் மாபெரும் குருகுலத்தை கட்டி எழுப்பினாலும் வியூகங்களை வகுத்தாலும் அது துரோணன் செய்ததாகத்தானே கருதப்படுகிறது? எத்தனை உன்னதமான சாதனைகளைப் புரிந்தாலும் எத்தனை கீழ்மையான செயல் புரிந்தாலும் அதற்கான பெருமையும் சிறுமையும் உன் அப்பனையும் உன்னையும்தானே சேர்கிறது? எத்தனை… கீழ்மையான… செயல்… புரிந்தாலும்…

‘என்ன மாமா நினைக்கிறீர்கள்?’ என்று அஸ்வத்தாமன் மீண்டும் கேட்டான். ‘அவரை கொஞ்சம் யோசிக்கவிடுவோம், அவர் ஒருவர்தான் ஏதாவது திட்டம் வகுக்கக் கூடியவர், நானோ நீங்களோ அல்ல’ என்று கிருதவர்மன் சொன்னான்.

இருளில் கூகைகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த குருட்டுக் காகங்களின் கூக்குரல் பலமாகக் கேட்டது. கிருபர் யோசிப்பது போல கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு மெல்லிய குரலில் சொன்னார் – ‘நள்ளிரவில் பாண்டவர் படைகள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களைத் தாக்குவோம். தியானத்தில் இருந்த உன் தந்தையின் தலையைச் சீவிய திருஷ்டத்யும்னனையும் குருத்துரோகம் செய்த பாண்டவர்களையும் அவர்கள் தூங்கும்போதே நீயே உன் கைப்பட கொன்றுவிடு. மற்ற வீரர்கள் படைக்கலங்களை எடுத்துக் கொள்ளும் முன்பே கூடாரங்களுக்கு தீ வைத்து அவர்களை எரித்தே கொன்றுவிடுவோம்’.

இருளில் அவர் புன்னகைத்தது மற்ற இருவருக்கும் தெரியவே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

Vannadasanவிருது அறிவிக்கப்பட்டு பத்து நாள் இருக்கும் என்று நினைக்கிறேன். அன்றே எழுதிய பதிவை வோர்ட்பிரஸ் தின்றுவிட்டது, மீண்டும் எழுத இத்தனை நாள்.

விஷ்ணுபுரம் விருது சாஹித்ய அகாடமி விருது, அல்லது ஞானபீடம் போன்று இன்னும் பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் – நல்ல இலக்கியம் படைப்பவர்களுக்கு மட்டும்தான் விருதை அளிக்கிறது. இந்த முறையும் அப்படித்தான் வண்ணதாசனுக்கு விருதளித்து தன்னையும் வண்ணதாசனையும் ஒருசேர கௌரவித்துக் கொண்டிருக்கிறது.

மற்றவர்கள் எப்படியோ எனக்கு எப்போதும் வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் நடுவே ஒரு குழப்பம் உண்டு. யார் எஸ்தர் எழுதியது, யார் கிருஷ்ணன் வைத்த வீடு எழுதியது என்றால் இந்த இரண்டு பேரில் ஒருவர் என்றுதான் சொல்ல முடியும்.

ஜெயமோகனின் சிறுகதைத் தேர்வுகளில் ஆறு வண்ணதாசன் சிறுகதைகள் – தனுமை, நிலை, சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள், போய்க் கொண்டிருப்பவள், வடிகால். தனுமை, நிலை இரண்டும் எஸ்.ரா.வால் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை தனுமைதான்.

வண்ணதாசனின் புகழ் பெற்ற கவிஞர் அவதாரம் கல்யாண்ஜி. கவிதைகளை நான் பொதுவாகத் தவிர்த்துவிடுவதால் அந்த அவதாரத்தைப் பற்றி எனக்கு சொல்ல எதுவுமில்லை.

தமிழ் விக்கிபீடியாவில் வண்ணதாசனைப் பற்றித் தேடினேன். கால ஓட்டத்தில் தமிழறிஞர்கள் என்ற பக்கத்தில் வண்ணதாசனைக் கொன்றேவிட்டார்கள். 1976-இலேயே போய்விட்டாராம்! பாவம், அவருக்கே தெரியுமோ தெரியாதோ. உடனடியாக விக்கிபீடியாவில் உறுப்பினன் ஆகி அதைத் திருத்தினேன். 🙂

வண்ணதாசனுக்கும் விஷ்ணுபுரம் பரிசுக் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
வண்ணதாசனின் தளம்

பாப் டிலனுக்கு நோபல் பரிசு

இந்த வருஷத்துக்கான நோபல் பரிசு பாப் டிலனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நான் பொதுவாக பாப் ராக் ராப் இசை வகையறாக்களை கேட்பதில்லை. ஆனால் பாப் டிலனின் இசை ஓரளவு பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல் Blowin’ in the Wind

ஆனால் பாப் டிலனுக்கு இலக்கியத்துக்கான பரிசு என்பது சரியல்ல. பாப் டிலனின் அடையாளம் அவரது கவிதைகள் அல்ல, அவரது இசைதான். கவிதை என்றாலே ஓடும் எனக்கே அவரது கவிதைகளுக்கு விருது என்பது தவறு என்று புரிகிறது. நோபல் பரிசு கமிட்டிக்கு இது புரியாமல் போனது துரதிருஷ்டம். கண்ணதாசனுக்கு திரைப்பாடல்களுக்காக ஞானபீட விருது அளிப்பதைப் போன்ற குளறுபடி இது.

நோபல் பரிசு கமிட்டி இலக்கியம் என்பதன் வரையறையை காலத்துக்கேற்ப மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது டூ மச். அடுத்தபடி ஜே.கே. ரௌலிங், மைக்கேல் கானலி, டக்ளஸ் ஆடம்ஸ் என்று கிளம்பாமல் இருந்தால் சரி.

போன வருஷம் ஸ்வெட்லானா அலேக்சேவிச் எழுதிய அபுனைவுகளுக்கு நோபல் விருது தரப்பட்டது. அது சரியாகவே எனக்கு பட்டது என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

ஷோபா சக்தியின் சிறுகதையும் ஒரு ஃப்ளாஷ்பாக்கும்

ஷோபா சக்தி ஒரு புதிய சிறுகதையை எழுதி இருக்கிறார். சிறுகதை எனக்கு சுகப்படவில்லை. ஆனால் அதில் ஒரு வரி வருகிறது – ‘ஒரு ஈக்கு தன் பெயர் மறந்துவிட்டதாம்’ என்று. அந்த வரியைப் படித்ததும் அப்படியே மன்னார்குடியில் முதல் வகுப்பில் சேர்ந்து ஒரே மாதம் படித்த பள்ளிக்கு ஃப்ளாஷ்பாக்!

முன்பும் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன், அதையே இங்கே திருப்பி பதித்துவிடுகிறேன்…

நான்கரை வயதில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தபோது முதல் முதலாகக் கற்றுக் கொண்ட பாட்டு இதுதான்.

ஒரு ஈயாம். அதற்கு அதன் பேர் என்னவென்று மறந்துவிட்டதாம். அது ஒரு கன்றுக்குட்டியிடம் போய் தன் பேர் என்ன என்று கேட்டதாம்.
    கொழுகொழு கன்றே என் பேரென்ன?

கன்றுக்குட்டி எனக்குத் தெரியாது, என் அம்மாவிடம் கேள் என்றதாம். உடனே ஈ அந்தப் பசுவிடம் சென்று கேட்டதாம்.
    கொழுகொழு கன்றே கன்றின் தாயே என் பேரென்ன?

அந்தப் பசு எனக்குத் தெரியாது, என்னை மேய்க்கும் இடையனிடம் கேள் என்றதாம். உடனே அந்த இடையனிடம் கேட்டதாம்.
    கொழுகொழு கன்றே கன்றின் தாயே மாடு மேய்க்கும் இடையா என் பேரென்ன?

இப்படியே தொடரும் பாட்டு:

கொழுகொழு கன்றே
கன்றின் தாயே
மாடு மேய்க்கும் இடையா
இடையன் கைக்கோலே
கோல் வளர்ந்த கொடிமரமே
கொடிமரத்துக் கொக்கே
கொக்கு வாழும் குளமே
குளத்தங்கரை மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைச்சட்டியே
சட்டி செய்த மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரை
என் பேரென்ன?

அந்தக் குதிரை ஈஈஈஈஈஈஈ என்று கனைத்தாம். உடனே அந்த ஈக்கும் அதுதான் தன் பேர் என்று ஞாபகம் வந்துவிட்டதாம், சுபம்!

இந்த மாதிரிப் பாட்டுகளெல்லாம் இப்போதும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா இல்லை பாபா ப்ளாக் ஷீப்தானா? இதை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்றால் சோகம்தான். சோகத்தைக் குறைத்துக் கொள்ள நல்ல வழி இப்படிப்பட்டவற்றைத் தொகுப்பது. அதனால் நினைவிருப்பதை பின்னூட்டமாக எழுதுங்கள்!

பிற்சேர்க்கை: தங்கரேகை பற்றி தனியாக எழுதுவதற்கில்லை. படிக்கக் கூடிய சிறுகதைதான், அவரது தொழில் திறமை வெளிப்படுகிறது, ஆனால் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று சொல்லமாட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பலவும்

பள்ளிப் பாடங்களில் தமிழ்

பன்னிரண்டு வருஷப் பள்ளிப் படிப்பில் தமிழை விரும்பிப் படித்த நினைவில்லை. அதுவும் செய்யுள் பகுதியாவது பரவாயில்லை. உரைநடை படிக்கும்போது பாதி நேரம் இதை விட நானே உருப்படியாக எழுதுவேனே என்று தோன்றும். பதினோராம் வகுப்பில் என்று நினைக்கிறேன், ‘அறிஞர்’ அண்ணா ‘பெரியார்’ ஈ.வே.ரா.வைப் பற்றி எழுதியது ஒரு பத்து பக்கம் வரும். அந்த வயதில் தமிழகத்தில் அண்ணாவுக்கும் ஈ.வே.ரா.வுக்கும் பின்னால் ஒரு ஒளிவட்டம் இருந்தது, ஆனால் என்ன செய்தார்கள் என்று தெரியாது. நானும் சிஷ்யப் பிள்ளையே குருநாதரைப் பற்றி எழுதுகிறாரே என்று ஆர்வத்துடன் படித்துப் பார்த்தேன். ‘பெரியார்’ தமிழர்களுக்கு உணர்வூட்டினார், வழி காட்டினார், மூட நம்பிக்கைகளை ஓட்டினார் என்று அலங்காரமாக எழுதி இருப்பார். நானும் அந்தப் பத்து பக்கத்தை நாலைந்து முறை படித்துப் பார்த்தேன், கடைசி வரை அவர் என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அடச்சே என்று தூக்கிப் போட்டுவிட்டேன். கடற்கரையிலே பாரதியார் ரா.பி. சேதுப்பிள்ளை ஸ்டைலில் உரையாற்றுவார். பாரதியாரின் சில பல கட்டுரைகளைப் படித்திருந்த நான் இது பாரதியார் ஸ்டைலாகவே இல்லையே, ரா.பி. சேதுப்பிள்ளைக்கு இது கூடவா தெரியாது என்று வியந்தேன். அலங்காரத் தமிழுக்கு அப்போதெல்லாம் பயங்கர மவுசு! (திரு.வி.க. ஒருவரது தமிழ்தான் படிக்க நன்றாக இருந்தது.)

இன்று பன்னிரண்டு வருஷப் படிப்பில் நினைவிருப்பது என்ன? பத்து இருபது திருக்குறள். கொங்குதேர் வாழ்க்கை மாதிரி நாலைந்து சங்கப் பாடல்கள். அங்கொன்றும் இங்கொன்றும் சில கம்ப ராமாயணப் பாடல்கள். கலிங்கத்துப் பரணியில் இரண்டு பாட்டு. (வருவார் கொழுனர்… வாரார் கொழுனர்…, முருகிற் சிறந்த கழுநீரும் முற்றா இளைஞர் ஆருயிரும் திருகிச் செருகும் குழல்மடவீர்!…) இலக்கியம் என்றால் அவ்வளவுதான்.

ஆனால் நன்றாக நினைவிருப்பது சந்தத்துக்காகவே ரசித்துப் படித்த கவிதைகள்தான். இவற்றை வாய்விட்டுப் படிப்பதே ஒரு சுகானுபவமாக இருந்தது. நினைவிலிருந்து:

ஏழாம் வகுப்புப் பாடத்திலிருந்து அரிச்சந்திர புராணப் பாடல்:

பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
பசியால் அலைந்தும் உலவா
அநியாய வெங்கண் அரவால் இறந்த
அதிபாவம் என்கொல் அறியேன்
தனியே கிடந்து விடநோய் செறிந்து
தரை மீதுருண்ட மகனே
இனி யாரை நம்பி உயிர் வாழ்வம்
எந்தன் இறையோனும் யானும் அவமே!

எட்டாம் வகுப்பு(?) – குற்றாலக் குறவஞ்சி

வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரையெழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்கு கிள்ளி தேனெடுத்து வளம் பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் செண்பக வாசம் வானுலகில் வெடிக்கும்
(கடைசி இரண்டு வரி மறந்து போச்சே!)

இந்தத் தேவாரப் பாடலும் பிரபந்தப் பாடலும் பள்ளியில் படித்ததா இல்லை கோவிலில் கற்றுக் கொண்டதா என்று நினைவில்லை. எழுபதுகளில் பள்ளி சென்றவர்களுக்கு நினைவிருந்தால் உண்டு…

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார்க்கு நல்ல மிகவே

பச்சை மாமலை போல் மேனி
பவழ வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே
ஆயர்தம் கொழுந்தே நின்றன்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

சந்தம் என்று ஆரம்பித்துவிட்டு இந்தக் கம்ப ராமாயணப் பாடலைக் குறிப்பிடாவிட்டால் ஜன்மம் ஈடேறாது.
(ராமனை மயக்க சூர்ப்பனகை வரும் காட்சி)

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்

என்னைக் கேட்டால் இப்படிப்பட்ட பாடல்கள்தான் ஏழு எட்டாம் வகுப்பு வரை இருக்க வேண்டும்!

உங்களுக்கு தமிழ் பாடத்திலிருந்து நினைவிருப்பது என்ன? சந்தத்துக்கு கவிதை என்றால் என்ன நினைவு வருகிறது? சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்