திராவிட இயக்க எழுத்தாளர்கள்

திராவிட இயக்க சார்புள்ள எழுத்தாளர்களில் இமையம் ஒருவரே முக்கியமான எழுத்தாளர் என்று நான் கருதுகிறேன். தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இமையத்தை நான் திராவிட இயக்க எழுத்தாளராகக் கருதவில்லை, ஆனால் அவர் தன்னைப் பற்றி அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார், அதனால் வேறு வழியில்லை. 🙂 சுருக்கமாகச் சொன்னால் அவர் படைப்பது இலக்கியம். அவருடைய சார்புநிலை என்ன, திராவிட இயக்கத்தின் மீது பரிவுள்ளவரா, ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவரா என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.

அண்ணாவுக்கெல்லாம் சில நாடகங்கள் மட்டுமே நினைவில் இருக்க வேண்டியவை. போனால் போகிறது என்று செவ்வாழை சிறுகதையை சேர்த்துக் கொள்ளலாம்.

மனுஷ்யபுத்திரன் தன்னை திராவிட இயக்க எழுத்தாளராக கருதுகிறாரா என்று தெரியவில்லை. எனக்கு கவிதை அலர்ஜி, நான் மனுஷ்யபுத்திரனைப் படித்ததில்லை. ஆனால் அவர் நல்ல கவிஞர் என்று நான் மதிக்கும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

வேறு யாரும் என் கண்ணில் தேறவில்லை. பாரதிதாசனை நான் நல்ல கவிஞராகக் கருதவில்லை. அவருடைய பலம் சந்தம் மட்டுமே. பிரச்சார நெடி பலமாக அடிக்கும் இரணியன் போன்ற சில சகிக்க முடியாத நாடகங்களை எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பிசிராந்தையார் புத்தகத்துக்கு சாஹித்ய அகடமி விருது கிடைத்தது உலக மகா அநியாயம். வெங்கட் சாமிநாதன் அதைப் பற்றி தகுதி உள்ளவர் எழுதிய தகுதி அற்ற புத்தகத்துக்கு கிடைத்த விருது என்று குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு எழுத்தாளரின் தகுதி பற்றியே நல்லெண்ணம் கிடையாது.

கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு என்பது மனோகரா வரை திரைப்பட வசனங்கள் மட்டுமே. குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா இத்யாதியை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது என்பதால் வாயை மூடிக் கொள்கிறேன்.

நெடுஞ்செழியன் எழுதிய “பண்டைய கிரேக்கம்” (1954) என்ற புத்தகத்தைப் படித்தேன். தெளிவான, பள்ளிப் புத்தகங்களுக்கு கொஞ்சம் மேலான அறிமுகம். கருணாநிதி போல துருத்திக் கொண்டு தெரியும் அலங்காரத் தமிழ் எல்லாம் குறைவுதான். சரளமான நடை.

என் கண்ணில் அவர் எழுதிய மொழிப் போராட்டம் (1948) ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம்.1938-இல் ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் உ.வே.சா.வும் ஒருவர் என்று குறிப்பிடுகிறார். வியப்பளித்த தகவல், உ.வே.சா. எந்த வம்புக்கும் போகமாட்டார் என்று எனக்கு ஒரு மனப்பிம்பம் உண்டு. ராஜாஜியே போராட்டம் வலுத்ததும் இவ்வளவு தூரம் தகராறு முற்றிவிடும் என்று தெரிந்திருந்தால் இதில் தலையிட்டிருக்க மாட்டேன் என்று சொன்னாராம். அவர் போட்ட அபூர்வமான தப்புக் கணக்குகளில் ஒன்றோ? ஓமந்தூராரும் 1948-இல் ஹிந்தியைக் கொண்டு வந்தார் என்கிறார். அன்றைய கல்வி மந்திரியான அவினாசிலிங்கம் அன்றைய சென்னை மாகாணத்தில் ஹிந்திப் பயிற்சியை ஏற்படுத்தினாலும் தமிழ் பேசும் பகுதிகளுக்கு முதலில் விலக்கு அளித்தாராம், ஆனால் பல வித அழுத்தங்களால் தன் முடிவை மாற்றி ஹிந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினாராம். ஈ.வெ.ரா. தலைமையில் அண்ணாதுரை ஆணையாளராகப் பணியாற்றினார், திரு.வி.க. ஆதரவு தந்தார், 500 பேர் சிறையில் என்கிறார்.

அன்பழகன், முரசொலி மாறன் போன்றவர்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன், ஒரு வேளை சில கொள்கை விளக்கப் புத்தகங்களை எழுதி இருக்கலாம். பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ. விஸ்வநாதம், தேவநேயப் பாவாணர் எல்லாம் அபுனைவுகள், கொள்கை விளக்கப் புத்தகங்கள் மட்டுமே எழுதினார்கள். சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ். தென்னரசு, ஜலகண்டபுரம் கண்ணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்ற சிலர் புனைவுகளும் எழுதினார்கள். வேழவேந்தன் மாதிரி சில கவிஞர்களின் பேர் நினைவிருக்கிறது. (நான் படித்ததில்லை) அண்ணா, கலைஞர் தவிர பாரதிதாசன், மாறன், ஆசைத்தம்பி, நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று சிலர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எல்லாம் எழுதினார்கள்.

அனேகமாக இவை எல்லாம் பிரச்சார நெடி அடிக்கும் மோசமான எழுத்துக்களே. அந்தக் காலத்து விகடன் குமுதம் கல்கி தொடர்கதைகள் தரத்தில் கூட இல்லை. காலாவதி ஆகிவிட்டன என்று சொல்வதே தவறாக இருக்கலாம், அன்றே இவற்றை யார் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தமிழின் புனைவுலக வரலாற்றில் இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ஒரு அடிக்குறிப்பு அளவில் இடம் தரலாம்.

அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ். தென்னரசு, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பெருஞ்சித்திரனார், புதுவை சிவம், புலவர் குழந்தை, அரங்கண்ணல், சாமி சிதம்பரனார், ஜலகண்டபுரம் கண்ணன், கி.ஆ.பெ. விஸ்வநாதம்,ஏ.கே. வேலன் உள்ளிட்டோரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. (முழுப் பட்டியல் அல்ல) ஈ.வெ.ரா.வின் எழுத்துக்கள் இன்னும் நாட்டுடமை ஆக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அவர்கள் சிலரைப் பற்றி:

சி.பி. சிற்றரசு: அறுபதுகளில், ஏன் எழுபதுகளில் கூட பள்ளிகளில் விரும்பி நடிக்கப்பட்ட பல காட்சிகள் உடைய நாடகம் விஷக்கோப்பை. அதுவும் நான் படித்த பள்ளிகளில் வருஷாவருஷம் இதைதான் நடிப்பார்கள். சாக்ரடீசின் வாதங்கள் அப்படி ஒன்றும் அபூர்வமானவை இல்லை என்றாலும் இன்றும் படிக்க முடிகிறது. இவற்றைத் தவிர சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் (வழக்கமான பிராமண எதிர்ப்பு), சாய்ந்த கோபுரம் (மாஜினியின் வாழ்க்கை வரலாறு) நூல்களும் படித்தேன். இவற்றை எல்லாம் யார் படித்தார்கள் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். சிற்றரசின் சில புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

எஸ்.எஸ். தென்னரசு பற்றி ஜெயமோகன் இரண்டொரு வார்த்தை நல்ல விதமாக சொல்லி இருக்கிறார். அவரது கோபுர கலசம் நாவலை தனது வரலாற்று நாவல்கள் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சில புத்தகங்கள் ஆர்க்கைவ் தளத்தில் கிடைத்தன. வரலாற்றுக் கதைகள் வாரப் பத்திரிகை தொடர்கதை தரத்தில் இருக்கின்றன. கிருஷ்ணதேவராயர்-விஸ்வநாத நாயக்கரை வைத்து படுசுமாரான நாவல் ஒன்றை – துங்கபத்திரை – எழுதி இருக்கிறார். செம்மாதுளை படுசுமாரான நாவல்தான். ஆனால் பாகனேரி-பட்டமங்கலம் கள்ளர்களிடம் 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்ச்சியை, ஒரு கலவரத்தை விவரிப்பதால் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. பெண்ணில்லாத ஊரிலே அவரது சிறைச்சாலை நினைவுகள். (மிசா காலம் உட்பட பல முறை சிறை சென்றவர்.) ஆனால் அவரது பாடகிமலடி பெற்ற பிள்ளை, மிஸ் ராதா நாவல்கள் எல்லாம் உலக மகா தண்டம்.

பெருஞ்சித்திரனாரின் தமிழ் ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஆனால் அவரது எழுத்துக்களில் அப்பட்டமான இனவெறி தெரிகிறது. ஆரியப் பார்ப்பனரின் அளவற்ற கொட்டங்கள் என்றே ஒரு புத்தகம் வந்திருக்கிறது. ஆவணக் கொலைகள் செய்து தள்ளும் எந்த ஜாதியினரைப் பற்றிக் கூட இப்படி ஒரு தலைப்பு வைத்துவிட முடியாது.

தேவநேயப் பாவணரும்  பெருஞ்சித்திரனார் போலத்தான், அவரது தமிழ் ஆய்வுகளும் எனக்குப் புரிந்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் என்றாவது முயன்று பார்க்க வேண்டும். புரிந்த வரையில்: பாவாணர் உலகின் அத்தனை மொழிகளும் – குறிப்பாக சமஸ்கிருதம் – தமிழிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கி உருவானவை என்று கருதுகிறார். தமிழனே ஆதி மனிதன், ஆனால் ஆரிய வந்தேறிகள் தமிழனை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பது அவரது உறுதியான கருத்து. பிரம்ம தத்துவம் மாதிரிதான்; அடிமையும் தமிழன், அடிமைப்படுத்துவனும் தமிழனேதான், ஆனாலும் அவன் வந்தேறி, தமிழ் வம்சாவளி ஆரியன். தன் படிப்பையும் அறிவையும் இந்த முன்முடிவுகளை நியாயப்படுத்தவே பயன்படுத்துகிறார், அது அவ்வப்போது கேலிக் கூத்தாக முடிகிறது.  ஏதோ ஒரு புத்தகத்தில் பிராமணன் தோல் வெளுப்பாக இருந்ததால் மூவேந்தரும் அவன் பேச்சைக் கேட்டு அவனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்கிறார். தமிழன் கேனையன் என்று உறுதியாக நம்பி இருக்கிறார். இருந்தாலும் அவர் சிறந்த தமிழறிஞராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

ஜலகண்டபுரம் கண்ணன் பல நாடகங்களை எழுதி இருக்கிறார். நாடக ஆசிரியராகத்தான் அவரது பங்களிப்பு. குன்றுடையான் என்ற ஒரு நாடகத்தை படிக்கலாம். நந்திவர்மன் என்ற நாடகம் ஓரளவு பிரபலமானது. அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டது தேவையற்ற செயல்.

ஏ.வி.பி. ஆசைத்தம்பி: எழுதியவருக்குத்தான் வேறு வேலை இல்லை என்றால் எனக்கு எங்கே போயிற்று அறிவு என்று நினைக்க வைத்த புத்தகம் தந்தையின் ஆணை.

கி.ஆ.பெ. விஸ்வநாதம் தமிழுக்கு வேறு வகைகளில் உழைத்திருக்கலாம். ஆனால் அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டதும் தேவையற்ற செயல்தான்.

ஏ.கே. வேலன் திரைப்படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார், தயாரித்துமிருக்கிறார். வாழ்வின் பிற்பகுதியில் அவர் பக்தராக மாறி திராவிட இயக்கதிலிருந்து விலகினார். அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டது தேவையற்ற செயல்.

இது முழுமையான பட்டியல் இல்லைதான். என் கண்ணில் பட்ட சிலரைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். ஆனால் இமையம் ஒருவரைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்த வேண்டிய திராவிட இயக்க எழுத்தாளராக எனக்குத் தெரியவில்லை. அண்ணாவின் சில நாடகங்கள் பரவாயில்லை ரகம். பாரதிதாசனை நல்ல கவிஞர் என்ற மதிப்பீடு அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் அந்த மதிப்பீடும் இப்போது காலவதி ஆகிவிட்டது.  பெருஞ்சித்திரனார் தமிழறிஞராக இருக்கலாம், ஆனால் அப்பட்டமான இனவெறியர். தேவநேயப் பாவாணரும் நல்ல தமிழறிஞர்தான் என்று நினைக்கிறேன், ஆனால் அவரது முன்முடிவுகள் சில சமய்ம் அவரை கேலிக்கூத்தாக்கிவிடுகின்றன.

இமையமே கூட எந்த விதத்தில் திராவிட இயக்க எழுத்தாளார் என்று எனக்குத் தெரியவில்லை, அவரது தனி வாழ்க்கையில் அவர திராவிட இயக்கத்தினராக இருக்கலாம், அவரது விழுமியங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக்கலாம், ஆனால் இமையத்தின் எழுத்தில் செயற்கைத்தனமோ, பிரச்சார நெடியோ எதுவுமில்லை, அவர் இலக்கியம் படைக்கிறார் அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”

சிறு திருத்தங்களுடன் மீள்பதிவு. மீள்பதிவுக்காக மீண்டும் படித்தபோது என் எண்ணங்கள் மாறவில்லை என்று தெரிகிறது…

சுஜாதாவின் கச்சிதமான புனைவுகளில் ஒன்று.

எழுபதுகளும் எண்பதுகளும்தான் சுஜாதா புனைவுகளின் பொற்காலம் என்று தோன்றுகிறது. அறுபதுகளில் he was finding his feet. எண்பதுகளின் பிற்பாதியிலேயே அவரது creative juices வற்ற ஆரம்பித்துவிட்டது என்று நினைக்கிறேன்.

24 ரூபாய் தீவு புகழ் பெற்ற நாவல். குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. பிற்காலத்தில் ஒண்டித்வனி என்று கன்னட திரைப்படமாகவும் வந்தது. (கொலை செய்யப்பட்டது என்கிறார் சுஜாதா) இப்போது கிழக்கு பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள். விலை 80 ரூபாய் இப்போது என்னவோ தெரியாது, ஆனால் 80 ரூபாயாக இருக்க வாய்ப்பில்லை.

எளிய கதை. விஸ்வநாத் ஒரு நிருபன். மத்யமர் பிராமணக் குடும்பம். அம்மா, மூன்று தங்கைகள். ஒரு பெண் அவனுக்கு ஃபோன் செய்து அனல் பறக்கும் செய்தி தருகிறேன் வீட்டுக்கு வா என்கிறாள். போனால் பெண்ணின் பிணத்தைத்தான் பார்க்க முடிகிறது. தற்செயலாக அங்கே இருக்கும் ஒரு நாட்குறிப்பை (dairy) தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறான். நாட்குறிப்பில சில கவிதைகளைப் படிக்கிறான். முழுதும் படிக்காமல் நாட்குறிப்பை டாக்சியிலேயே விட்டுவிடுகிறான். செய்தித்தாளில் பக்கத்தை நிரப்ப ஏதோ எழுதும்போது இந்தப் பெண்ணின் மரணம், மற்றும் நாட்குறிப்பில் இருக்கும் கவிதைகளைக் குறிப்பிடுகிறான்.

நாட்குறிப்பை திருப்பித் தா என்று செத்துப் போன பெண்ணின் தங்கை கேட்கிறாள். நான்தான் அந்தக் கவிதையை எழுதினேன் தா என்று ஒரு “கவிஞன்” கேட்கிறான். பணம் தருகிறேன் தா என்று ஒரு மாமா கேட்கிறார். அடிப்பேன் தந்துவிடு என்று சில ரவுடிகள் கேட்கிறார்கள். நாட்குறிப்பைத் தா தா என்று பலரும் பல விதமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பெரிய அரசியல் தலைவரும் தற்போதைய முதல்வரைக் கவிழ்த்து தான் முதல்வராக முயற்சிக்கும் கோபிநாத் இவனைக் கூப்பிட்டு அந்த நாட்குறிப்பைப் பற்றி விசாரிக்கிறார். முதல்வருக்கும் இறந்தவளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம், நான் உனக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்.

விவகாரம் பெரிதாகி முதல்வர் ராஜினாமா, கோபிநாத் முதல்வர். அடுத்த நாளே இவன் பத்திரிகையில் இந்தப் பெண்ணைப் பற்றி செய்தி போடுவதை நிறுத்துகிறார்கள். இவன் எதிர்க்க வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறார்கள். விஸ்வநாத்தின் 15 வயதுத் தங்கை சீரழிக்கப்படுகிறாள். விஸ்வநாத் கைது செய்யப்படுகிறான். நாட்குறிப்பு எங்கே எங்கே என்று அழுத்தம் தரப்படுகிறது. கடைசியில் வேலையிலிருந்தே தூக்கிவிடுகிறார்கள். தன் பொருட்களை எல்லாம் அலுவலகத்திலிருந்து எடுத்து வரும்போது நாட்குறிப்பு அங்கே பல குப்பைகளோடு கிடக்கிறது. நாட்குறிப்பில் என்ன இருக்கிறது, ஏன் எல்லாரும் இப்படி அதை அடையத் துடிக்கிறார்கள், விஸ்வநாத் என்ன ஆனான் என்பதுதான் கதையின் முடிவு.

கதையின் பெரிய பலம் ஹீரோயிசம் எதுவும் இல்லாதது. விஸ்வநாத் நம் பக்கத்து வீட்டில் பார்க்கக் கூடியவன். அதிசாதாரணன். கடைசி வரைக்கும் அப்படித்தான். அவனுடைய தெளிவு வியக்க வைக்கிறது, ஆனால் படிக்கும்போது அது துருத்திக் கொண்டு தெரிவதில்லை. மேலும் அந்தத் தெளிவு செயலாக மாறுவது அபூர்வமாக இருப்பதுதான் அவன் குணாதிசயமாக இருக்கிறது. அதை கடைசி வரைக்கும் அப்படியே வைத்திருப்பது சுஜாதாவின் திறமையைக் காட்டுகிறது. அவனுடைய அடிப்படை சுபாவம் மாறுவதே இல்லை.

அவன் குடும்பத்தார், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், அரசியல்வாதிகள் எல்லாருமே நாம் பார்க்கக் கூடியவர்களே. கதையின் நம்பகத்தன்மை சிறப்பாக இருக்கிறது. அப்புறம் சுஜாதாவின் நடை, சின்னச் சின்ன ஜோக்குகள், கிளுகிளுப்புக்காக கொஞ்சம் sexual references (இன்று காலாவதியாகிவிட்டவை) எல்லாம் உண்டு.

பலவீனம் சுலபமாக யூகிக்கக் கூடிய வில்லன்கள். சில பக்கங்களிலேயே நாட்குறிப்பில் அடையாளம் காட்டப்படப் போகும் வில்லன் யார் என்று தெரிந்துவிடுகிறது. இன்னொரு விதத்தில் சொன்னால் கதை, கதையின் முடிச்சு எல்லாம் சீக்கிரமே புரிந்துவிடுகிறது. ஆனால் “திரைக்கதை” நன்றாக இருக்கிறது.

இதில் கணேஷ்-வசந்த் இருவரும் உண்டு. சின்ன பாத்திரம்தான், விஸ்வநாத்தை ஜாமீனில் எடுக்கும் வக்கீல்கள். கணேஷ் சென்னை வந்தாயிற்று. ஆனால் இன்னும் முழு கணேஷாக மாறவில்லை. வசந்த் மாதிரி ஓரிரு இடங்களில் பேசுகிறார்…

சுஜாதாவின் சிறந்த நாவல்களில் ஒன்று. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி:
ஒண்டித்வனி பற்றி சுஜாதா

முதல் தமிழ் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம்தான் முதல் தமிழ் நாவலா என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன. ஆதியூர் அவதானி சரிதம்தான் முதல் தமிழ் நாவல் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அந்தப் பிரச்சினையை தமிழறிஞர்களுக்கு விட்டுவிடுகிறேன்.

பாலையும் வாழையும் புத்தகத்தில் வெங்கட் சாமிநாதன் இந்தப் புத்தகத்தின் தரத்தைப் பற்றி போட்டுத் தாக்கி இருந்தார். கறாராகப் பார்த்தால் அவர் சொல்வது அத்தனையும் சரியே. இது அத்தைப் பாட்டி கதைதான். பஞ்சதந்திரம், பட்டி-விக்ரமாதித்தன், வினோதரச மஞ்சரி போன்றவற்றின் நீட்சியேதான். ஆனாலும் என் கண்ணில் முக்கியமான முன்னோக்கிப் பாய்தலும்தான். நாவல் என்ற வடிவத்தை தமிழில் கொண்டு வந்த முதல் படைப்பு இதுதான். டம்பாச்சாரி விலாசத்தை படித்தால்தான் சங்கரதாஸ் ஸ்வாமிகளும் பம்மல் சம்பந்த முதலியாரும் எத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார்கள் என்று புரிகிறது. ஆதியூர் அவதானியை நான் இன்னும் முழுதாகப் படிக்கவில்லை, ஆனால் படித்த வரையில் அதில் அப்படி எந்த முன்னேற்றமும் இல்லை. கவிதையாக எழுதப்பட்டிருந்தால் நாவல் இல்லை என்று சொல்லிவிட முடியாது, அதனால் முதல் தமிழ் நாவல் பிரதாப முதலியார்தானா என்ற (நியாயமான) கேள்வி எழுந்திருக்கிறது, அவ்வளவுதான். ஆனால் பெரிய அடி எடுத்து வைத்தது பிரதாப முதலியார்தான், அதனால் எனக்கு பிரதாப முதலியார்தான் முதல் தமிழ் நாவல். முதல் தமிழ் நாவல் ஆதியூர் அவதானியும் இல்லை, பிரதாப முதலியாரும் இல்லை, கமலாம்பாள்தான் என்றும் சொல்லலாம், ஏனென்றால் கமலாம்பாள் வடிவம், கதை இரண்டும் உள்ளது.

நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. பிரதாப முதலியார் ஞானாம்பாளின் காதல், மணம், லட்சியத் தம்பதி வாழ்க்கை, பல அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் என்று சுருக்கிவிடலாம். எளிமையான, அத்தைப்பாட்டி கதை. எங்கெங்கோ தத்திச் செல்கிறது. ஆயிரத்தெட்டு கிளைக்கதைகள். உபதேசங்கள் நிறைய. புதிதாகப் படிக்க ஆரம்பிக்கும் எந்த இளைஞனுக்கும் இளைஞிக்கும் பரிந்துரைக்க முடியாதுதான்.

ஆனால் முயற்சி செய்து படித்தால் அதில் உள்ள மெல்லிய (சமயங்களில் வலிந்து புகுத்தப்பட்ட நகைச்சுவை தெரிகிறது. உதாரணமாக சிறு வயதில் முதலியார் ராமாயண நாடகம் பார்க்கிறார், ராமன் காட்டுக்குப் போகும் கட்டம் வரும்போது நாம் இருக்கும் ஊரில் இப்படி ஒரு அநியாயம் நடக்கலாமா என்று கைகேயியையும் ராமனையுமே மிரட்டி அயோத்தியா காண்டத்திலேயே ராம பட்டாபிஷேகத்தை நடத்திவிடுகிறார். பரதனால் கூட செய்ய முடியாத காரியம்! முதலியார்-ஞானாம்பாள் திருமணத்தில் சில சங்கடங்கள் ஏற்பட இருவருக்கு வேறு இடத்தில் சம்பந்தம் பேசுகிறார்கள். ஆனால் சில பல பிரச்சினைகளால் இவருக்குப் பார்க்கப்பட்ட பெண் ஞானாம்பாளுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளையை மணந்து கொள்கிறாள்!

அன்றைய சமுதாயத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமும் கிடைக்கிறது. ஆங்கிலேயர் அரசு, ராஜா-ராணி மேல் இன்னும் இருந்த மரியாதை (ஆண் வேடத்தில் இருக்கும் ஞானாம்பாளுக்கு யானை மாலை சூட்டி அவள் அரசனாகிறாள்), மேல்தட்டு மக்களின் வாழ்க்கை, ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிமன்றத்தின் மாற்றங்கள் ல்லாவற்றையும் பார்க்க முடிகிறது.

ஞானாம்பாள் முதலியாரை விட அறிவிலும் ஆற்றலிலும் ஒரு படி மேலானவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். (ஆனால் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் கற்பின் சிகரம்தான்.) இந்த சிந்தனை – அன்றைய நடைமுறை எப்படி இருந்தாலும் சரி – ஆணாதிக்கம் வாழ்க்கை முறையாக இருந்த 1879-இல் பிள்ளைக்கு எப்படி வந்தது என்பது அதிசயம்தான்.

ஜெயமோகன் இதை முக்கியத் தமிழ் நாவல் வரிசையில் சேர்க்கிறார். எஸ்ராவும். Obviously. ஜெயமோகனின் வார்த்தைகளில்:

இது முதல் தமிழ் நாவல் எனப்படுகிறது. மேற்கத்திய ‘ரொமான்ஸ்’ வகை எழுத்தை முன் மாதிரியாகக் கொண்டது. மேலோட்டமான விகடத் துணுக்குகள், (இந்தக் கடிதம் கிடைக்க வில்லை என்றால் பதில் எழுது. வேறு கடிதம் அனுப்புகிறேன்) அனுபவ விமர்சனங்கள், நல்லுபதேசங்கள் ஆகியவற்றுடன் ஒரு நிலப்பிரபுவின் கதையை சுயசரிதை போலக் கூறுகிறது.


பிள்ளை சுகுணசுந்தரி சரித்திரம் என்ற இன்னொரு நாவலையும் எழுதி இருக்கிறார். நாவலுக்கு historical curiosity என்பதைத் தவிர வேறு மதிப்பு எதுவும் இல்லை. ஒரு அம்புலி மாமா கதையை சட்டமாக வைத்து அதில் நல்லொழுக்கம், பொறாமை, இளமையில் திருமணம் என்று பல விஷயங்களைப் பற்றி சொற்பொழிவு. நல்ல வேளையாக பிரதாப முதலியாரில் முழம் ஏறினால் இங்கே சாண்தான் சறுக்கி இருக்கிறது.


பிரதாப முதலியார் சரித்திரம் தமிழர்களுக்கு மட்டுமே முக்கியமான நாவல்.  முன்னோடி நாவல் மட்டுமே, சிறந்த நாவல் அல்ல. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். மின்னூல் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்: தமிழ் விக்கி குறிப்பு, மின்னூல்

பழைய நாவல்: பொற்றொடி

இப்போதெல்லாம் பொழுது போகவில்லை என்றால் தமிழ்.விக்கி தளத்தில் ஏதாவது ஒன்றிரண்டு பக்கத்தைப் படிக்கிறேன். அப்படிப் பார்த்த பக்கங்களில் ஒன்று பொற்றொடி – 1911-இல் எழுதப்பட்ட நாவல். மின்னூல் வேறு கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன்.

உண்மையைச் சொல்லிவிடுகிறேன். நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன். நாவலின் பழமை ஒன்றே அதை படிக்க வைத்தது. உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

ஆனால் பொற்றொடியின் நடை கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டால் அது சாண்டில்யன் எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். ஏன், லட்சுமி எழுதி இருக்கக் கூடிய கரு/நாவல். முப்பது நாற்பதுகளில் பாய்ஸ் கம்பெனி நாடகமாக, ஏன் ஐம்பது அறுபதுகளில் திரைப்படமாக நடிக்கக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது.

மிக எளிமையான கதைதான். பொற்றொடிக்கு பதினாறு வயது. “படித்த பெண்”. அதுவும் 1911க்கு முந்தைய காலகட்டத்திலேயே. பன்னிரண்டு வயதிலிருந்து சீராளனோடு காதல். அப்பா பிடிவாதமாக பணக்கார வெள்ளையப்பனுடன் திருமணம் ஏற்பாடு செய்கிறார். சீராளன் அவனது குருவான பக்கா சுவாமிகள், சுவாமிகளின் நண்பரான சப்-ஜட்ஜ் ராயர் ஆகியோரின் உதவியோடு முகூர்த்தத்துக்கு முன்னால் பெண்ணைத் தூக்கிவிடுகிறான். அதே முகூர்த்தத்தில் திருமணமும் நடந்துவிடுகிறது. வெள்ளையப்பன் அன்றிரவே ஆயிரக்கணக்கானவர் உள்ள படையோடு திருமண வீடு மீது தாக்குதல் நடத்துகிறான். சீராளனுக்கு அடி, அவனைத் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். சீராளன் இறந்ததாக நம்பி சுவாமிகளும் ராயரும் வழக்கு நடத்துகிறார்கள். அனேகருக்கு தண்டனை, லஞ்சம் கொடுதது தப்பிக்கும் வெள்ளையப்பனுக்கும் உயர்நீதிமன்றத்தில் தண்டனை. தூக்கிச் செல்லப்பட்ட சீராளன் உயிர் பிழைக்கிறான், பத்து பனிரண்டு நாளைக்குப் பின் வந்து பார்த்தால் பொற்றொடி துயரத்தில் சாகக் கிடக்கிறாள். சீராளனைப் பார்த்ததும் புனர்ஜன்மம். சுவாமிகள் பணத்துக்காக மணம் செய்து கொள்ளக் கூடாது, குணத்துக்காகத்தான் என்று ஒரு சொற்பொழிவு ஆற்றுகிறார். சுபம்!

“படித்த பெண்ணின்” சித்தரிப்பு, அவள் தன் கணவனைத் தானே தேர்ந்தெடுக்கலாம் என்ற நிலை எல்லாம் அப்போது புரட்சியாக இருந்திருக்க வேண்டும். இதை அன்று படித்தவர்கள் பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள், அப்பா அம்மாவை எதிர்ப்பார்கள் என்று நினைத்திருந்தால் நான் வியப்படைய மாட்டேன்.

நாவலின் சிறந்த பகுதி கொள்ளையர்களின் தாக்குதல்தான். அதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண்டும். நாற்பது ஐம்பது பேர் தங்களை தற்காத்துக் கொள்வது ஓரளவு படிக்கும்படி இருக்கிறது. ஆனால் அன்று சீராளனிடம் துப்பாக்கி – அதுவும் நாலைந்து இருப்பது – எல்லாம் கொஞ்சம் அதிகப்படிதான்.

பொற்றொடியும் சீராளனும் பேச ஆரம்பித்தால் நாலைந்து பக்கம் மூச்சு விடாமல் பேசுகிறார்கள். சீராளன் பத்து பனிரண்டு நாளைக்குள் திரும்பிவிடுகிறான். ஆனால் அதற்குள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, அப்பீல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்றத்திலும் வழக்கு முடிகிறது. அதாவது 12 நாட்களுக்குள் இரண்டு வழக்கு முடிவடைந்துவிடுகிறது. இத்தனைக்கும் இந்த நாவலை எழுதியவர் வழக்கறிஞர்!

நாவலை எழுதியவர் ஒட்டப்பிடாரம் குருமலை சுந்தரம் பிள்ளை. சுதேசமித்திரன் இதழில் பாரதியாருடன் இணைந்து துணையாசிரியராகப் பணியாற்றியவர். ஜி. சுப்ரமணிய அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். திருநெல்வேலியில் கோலோச்சிய ‘சர்வஜனமித்திரன்’ பத்திரிகையின் தூண்களில் ஒருவராம்

நாவலின் முன்னோடித்தனம் என்பது பெண் கல்வி நல்லது, பெண்ணுக்கு தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை மிக இயல்பாக முன்வைப்பதுதான். 1911-இல் இதற்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என்பதை பிள்ளைவாள் உணர்ந்திருப்பாரா என்றே கேள்வி எழுந்தது.

மீண்டும் சொல்கிறேன், நூறு வருஷங்களுக்கு முன் எழுதப்படவில்லை என்றால் இந்த நாவலை நான் சீந்தக்கூட மாட்டேன்.உங்களுக்கு பழமை, முன்னோடித்தனம் எல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் தவிர்த்துவிடுவது நலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்னூல்
தமிழ் விக்கி குறிப்பு

தமிழ்பிரபா: பேட்டை

பேட்டை (2018) நாவலில் எழுத்தாளரின் திறமை தெரிகிறது. ஆனால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று நினைக்க வைத்தது.

பேட்டை சிந்தாதிரிப்பேட்டையில் ஆங்கிலேயர் ஆட்சியில் குடியேறிய பள்ளர் ஜாதியினர் – அங்கே பல பரம்பரைகளாக வாழ்ந்தவர்களின் – வாழ்க்கையை நுண்ணுலகமாக (microcosm) காட்டுகிறது. வாழ்க்கை முறை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கப்படுவதுதான் நாவலின் வெற்றி. ஆனால் தரிசனங்களோ, இல்லை வரலாற்றின் வீச்சோ எதுவுமில்லை. அது பற்றாக்குறை உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது.

நாவல் கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நெசவாளர்களை சென்னைக்கு அருகில் குடியேற்றுவதில் இருந்து ஆரம்பிக்கிறது. சுத்திகரிப்பு வேலைகளுக்காக சில தலித்களும் வருகிறார்கள். ஜாதி முறைப்படி வீடுகள் கட்டப்படுகின்றன. தலித்களுக்கு ஊரில் இடமில்லை, அவர்கள் ஊருக்கு வெளியேதான். பிறகு நாவல் நேராக சமகாலத்துக்கு வந்துவிடுகிறது. எண்பதுகளின் பிற்பகுதி என்று வைத்துக் கொள்ளலாம். இன்று நாறும் கூவத்தின் அருகில் வீட்டு வசதி வாரியக் டியிருப்புகள். அனேகரும் தலித்கள். கணிசமானவர்கள் கிறிஸ்துவர்கள். புதிதாக திருமணம் ஆன ரெஜினா. அவள் உடலில் அவள் மாமியாரின் ஆவி புகுந்து கொள்கிறது. பாதிரியார் பேயை ஓட்டுகிறார். ரெஜினா தீவிர மத நம்பிக்கை உடையவளாக மாறுகிறாள். மகன் ரூபன். நண்பர்கள். சிலர் கேரம் விளையாடுகிறார்கள். ரூபன் பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்கிறான். பொருளாதார ரீதியில் பிறந்த சூழலுக்கு அடுத்த படிநிலையில் இருக்கிறான். கம்பெனிக்கு அழைத்துச் செல்ல தினமும் கார் வருகிறது. அவனுக்கு ஒரு மடிக்கணினி தரப்படுகிறது. ஒரு பெண்ணோடு உறவு ஏற்பட்டு முறிகிறது. நண்பர்களின் வாழ்வு திசைதிரும்புகிறது. காதல். அவனையும் ஒரு பேய் பிடிக்கிறது. குண்மாகிறது…

நாவல் எப்படியோ ரூபனின் சூழலை காட்டிவிடுகிறது. அது சென்னைத் தமிழில் கெட்ட வார்த்தைகள் விரவிய பேச்சா, அதிதீவிரமாக மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் கிறிஸ்துவ சபைகளின் சித்தரிப்பா, மதுவும் போதையும் வாழ்வின் ஒரு பகுதியாக இருப்பதா, கேரம் போர்ட் விளையாட்டுப் பின்புலத்தின் விவரிப்பா, ரூபனின், அவன் நண்பன் சௌமியனின், குடிகார யோசப்பின் அகச்சிக்கல்களா என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

நாவலின் சிறந்த பகுதி ரூபன்-இவாஞ்சலின் காதல். இயற்கையாக இருக்கிறது. இன்னொரு சிறந்த பகுதி பாதிரியார் மிக இயல்பாக தன் வட்டத்துக்குள் வருபவர்களின் மத நம்பிக்கைய தீவிரப்படுத்துவது. பெரிய பாத்திரங்களான நகோமி ஆயா, இறந்து போகும் நண்பன் சௌமியன் போன்றவர்கள் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு பாத்திரங்கள் கூட – டிஜிடல் யுகத்தில் முக்கியத்துவத்தை இழக்கும் ஓவியர் பூபாலன், குடித்துவிட்டு லந்து செய்யும் ரூபனின் அப்பா, கொஞ்சம் லூசான ஆமோஸ், செத்துப் போன மாமியார் கிளியாம்பா – நல்ல படைப்புகள்

சரித்திர வீச்சு இல்லை என்றால் முதல் ஓரிரு அத்தியாயங்களுக்கு – சிந்தாதிரிப்பேட்டை எப்படி நிறுவப்பட்டது – அவசியமே இல்லை. நாவலில் இன்னும் ஒருங்கமைதி (coherence) அதிகரித்திருக்கும். நாயகன் ரூபனுக்கு பேய் பிடிக்கும் இடம் எனக்கு ஒட்டவில்லை. அதுவும் அவன் சொல்லும் காரணம் செயற்கையாக இருக்கிறது. நாயகன் நாவல் எழுத விழைவது, ஃபேஸ்புக்கில் பதிவு போடுவது எல்லாமே நாவலோடு ஒட்டவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றில் கொஞ்சம் தன்வரலாற்றுச் சாயல் இருக்குமோ என்று தோன்ற வைத்தது.

நாவல் எனக்கு மெரினா எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதே பாணி எழுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையில் வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளில் வாழும் கிறிஸ்துவ தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட மாதிரி இருக்கிறது.

நல்ல எழுத்துதான். ஆனால் ஏதோ – இல்லை நிறையவே குறைகிறது என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. படித்தே ஆக வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் சராசரிக்கு மேலான எழுத்துதான். உங்கள் நூலகத்துக்கு வாங்கலாம்தான். ஆனால் இன்னும் தரமான இலக்கியம் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: நண்பர் ரெங்காவின் விமர்சனம்

நூறாண்டு பழைய நாவல்: இந்துலீகா

தவறுதலாக – பி.ஆர். ராஜம் ஐயர் எழுதியது என்று நினைத்துத்தான் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இதை எழுதியவரோ டி.எஸ். ராஜம் ஐயர். நான் கேள்விப்பட்டதே இல்லை.

1912-இல் வெளிவந்த நாவல். (அன்றைய விலை ஐம்பது பைசா) மொழியைக் கொஞ்சம் புதுப்பித்தால் ஐம்பதுகளின் லக்ஷ்மி நாவல் போல இருக்கும். நாவலின் புதுமை என்பது பத்து பனிரண்டு வயது இந்துலீகாவுக்கு 32 வயது நரேந்திரபாபு, அவள் வயதுக்கு ஓரளவு நெருக்கமான சுகுமாரன் இருவர் மேலும் ஈர்ப்பு ஏற்படுவதுதான். இன்று கூட ஒரு பெண்ணுக்கு ஒரே நேரத்தில் இருவர் மீது ஈர்ப்பு என்று வருவது அபூர்வம்தான்.

ஐம்பது அறுபது பக்கம் படிக்கும்வரை இந்த நாவலைப் பற்றி எல்லாம் எழுதமாட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன். (நாவல் நூறு பக்கம் இருந்தால் அதிகம்). அப்போது படித்த வரிகள்:

பால்ய விவாகம் கூடாதென்றும் சமபந்தி போஜனம் வேண்டுமென்றும் விதவாவிவாகம் செய்வது உசிதமென்றும் ஸ்த்ரீகளுக்கு கல்வி அத்யாவஸ்யமென்றும் மாத்திரம் முறையிடும் ஆசார சீர்திருத்தக்காரர்களைக் கண்டு அனேகர் பயப்படுவதோடு அவர்களுக்கு ஒத்தாசையும் செய்ய இயலாதவர்களாகிறார்கள். இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஆசார சீர்திருத்தக்காரர்களில் ஒருவரையும் நமது சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்றுணர்ந்த மற்றொருவரையும் நம்முடைய பிரதிநிதிகளாக ஏற்பாடு செய்தால் அவர்கள் இருவரும் கலந்து எந்தெந்த சாஸ்திரங்கள் ஆதிகாலம் முதல் மாற்றப்படாமல் இருக்கின்றனவோ அவற்றைத் தொடாமல் எவைகள் அவ்வப்போது மாற்றப்பட்டு நம்முடைய சௌர்ய சௌகர்யங்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனவோ அவைகள் அனைத்தையும் சம்யோஜிதமாக மாற்ற வேண்டியது. இவைகளினால் மட்டுமே நாம் முன்னுக்கு வந்து பழைய ஞானத்தை அடைந்து அஞ்ஞானமாகிய இருளை வென்று நான் ஆரியன் என்று கௌரதையாக சொல்லிக் கொள்ளலாம்

உதாரணமாக அந்தணர்கள் சிரார்த்தங்களில் மது மாமிசம் படையல் வைத்தார்கள், இப்போது இல்லை என்கிறார்.மாறாத அறநெறி, மாற்றக் கூடிய சடங்குகள்/பழக்கங்கள் என்று அவர் சிந்தித்திருப்பது எனக்கு வியப்பை உண்டாக்கியது. இன்று கூட முன்னோர் சொல்லிவிட்டார்கள் என்ற ஒரு காரணம் போதும், சடங்குகளை மாற்றவே கூடாது என்று சொல்பவர்களைப் பார்க்கலாம். “பால்ய விவாகம் நல்ல விஷயம்” என்றே ஒருவர் 2021-இல் – இந்தப் புத்தகம் வந்து 109 வருஷம் கழித்து – சொன்னதைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். ராஜம் ஐயருக்கு மனதார ஜே போட்டதை பதிவு செய்யத்தான் இதை எழுதுகிறேன்.

இந்த ராஜம் ஐயர் பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெரிந்தால் எழுதுங்கள்!

பழைய புத்தகம் என்ற curiosity உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

ச. பாலமுருகன்: சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி அருமையான நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சோளகர் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர். இன்று 20000 பேர்தான் இருக்கிறார்களாம். அவர்கள் பேசும் மொழி சோளகம். இது திராவிட மொழிகளில் ஒன்றாம். தொட்டி என்றால் அவர்கள் மொழியில் கிராமமாம். லிங்காயத்துக்களை ஒரு வகையில் தங்கள் பங்காளிகளாக நினைக்கிறார்கள். மாதேஸ்வரனை வழிபடுகிறார்கள். பிலிகிரி ரங்கநாதரை தங்கள் குலத்து மாப்பிள்ளையாக சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

சோளகர்களின் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் புத்தகம். தொட்டி, கொத்தல்லி என்று அழைக்கப்படும் தொட்டியின் தலைவன், கோல்காரன் என்று அழைக்கப்படும் பூசாரி. ராகி விவசாயம் உண்டு. தேன் எடுக்கிறார்கள். வேட்டை. ஆனால் இப்போது வனத்துறை அதிகாரிகளுக்கு பயந்து பயந்து வேட்டை. “நாகரீகம்” மெதுமெதுவாக அவர்களை கொள்ளை அடிக்கிறது, அவர்களது பாரம்பரிய உரிமைகளை, நிலத்தை பறித்துக் கொள்கிறது. குறிப்பாக வேட்டை வீரன் சிக்குமாதாவை ஏமாற்றி போலீஸ் துறை அடித்து அவர்கள் நிலத்தை பிடுங்கிக் கொள்ளும் காட்சி உண்மையாக இருக்கிறது. சுலபமான திருமணங்கள். இறப்பு சடங்குகள். கும்பிடும் தெய்வம் மணிராசன், மாதேஸ்வரன், லிங்காயத்துக்களுடான தொன்மம். யானைகள், புலி, (புலிக்கு அவர்கள் பெயர்: பெருநரி!) கரடி, பன்றிகள், மான்கள், எறும்புத்தின்னிகள். சந்தன மரத்தைத் தொடாத பாரம்பரியம் மெதுமெதுவாக பணத் தேவைகளுக்காக சந்தன மரத்தை, அதன் வேர்களை, மரப் பிசிர்களை விற்கும் மாற்றங்கள். வீரப்பன். அவனைத் தேடும் காவல்துறை…

நுண்விவரங்கள் நிறைந்து கிடக்கின்றன. விவரிக்க முடியாது, படிக்கத்தான் வேண்டும். ஆழிசூழ் உலகை ஒரு வகையில் நினைவுபடுத்தியது. ஆழிசூழ் உலகில் நமக்குத் தோன்றும் பெரும் மானுடத் தொடர்ச்சி இதில் குறைவு. சில விதிவிலக்குகள் இருந்தாலும் இது ஒரு குறுகிய காலகட்டத்தை மட்டுமே விவரிப்பது போலத் தோன்றியது.

வீரப்பனைத் தேடும் காவல்துறை கையில் கிடைத்தவர்கள் எல்லாம் சந்தேகப்பட்டு செய்யும் சித்திரவதைகள் விவரமாக எழுதப்பட்டிருக்கின்றன. இதில் பாதியாவது உண்மையாக இருக்கும். அதுதான் பெரிய சோகம், அரசு எந்திரம் சட்டத்தை உடைத்தால் எந்த எல்லைக்கும் போகும் என்பதை உணர வைக்கும் பக்கங்கள்.

எழுதியவர் ச. பாலமுருகன். வேறு ஏதாவது எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.

அருமையான நாவல், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

க.நா.சு. பரிந்துரை – ஜடாவல்லவர்

இருபது இருபத்திரண்டு வயது வரை தமிழில் படிக்க பெரிதாக எதுவுமில்லை என்றுதான் எண்ணி இருந்தேன். நற்றிணையையும், நல்ல குறுந்தொகையையும் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் கம்ப ராமாயணத்தையும் என்னால் அந்த வயதில் படிக்க முடியவில்லை. (திருக்குறளை இன்னமும் படிக்க முடியவில்லை.) புதுமைப்பித்தன் மேதை என்ற முடிவுக்கு வந்திருந்தாலும், சாயாவனம், கோபல்ல கிராமம், சில நேரங்களில் சில மனிதர்கள் மாதிரி சிலவற்றைப் படித்திருந்தாலும் தமிழ் வாசிப்பு என்றால் சுஜாதாவும் கல்கியும் விகடனும் குமுதமும்தான், டைம் பாஸ் வாசிப்புதான், தமிழில் படித்து பழகிவிட்ட ஒரே காரணத்தால்தால் நிறுத்த முடியவில்லை, படித்து தொலைக்க வேண்டி இருக்கிறது என்றுதான் நினைத்திருந்தேன். அந்த மாதிரி வாசிப்புக்கும் பெர்னார்ட் ஷாவுக்கும் இப்சனுக்கும்  ஹ்யூகோவுக்கும் ஹெமிங்க்வேக்கும் மார்க்வசுக்கும் ஆலன் பேடனுக்கும் ஹார்பர் லீக்கும், ஏன் டிக்கன்சுக்கும், தாக்கரேவுக்கும், எமிலி ப்ரான்டேவுக்கும் கூட நிறைய தூரம் இருந்தது.

அப்போது செகந்தராபாத்தில் (முதல்) வேலை. மாரட்பள்ளியில் கீஸ் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி என்று கேள்விப்பட்டேன். நான் வசித்ததும் மாரட்பள்ளிதான். கையில் முதல் முறையாக புத்தகம் வாங்கும் அளவுக்கெல்லாம் காசு இருந்தது. சுப்ரபாரதிமணியன் கஷ்டப்பட்டு வருஷாவருஷம் அதை நடத்தி வந்தார். போனவன் வழக்கமான சுஜாதா புத்தகங்களோடு சாயாவனத்தையும் வாங்கினேன். அவர் கண்ணில் பல்ப் எரிந்தது. சின்னப் பையனுக்கு சாயாவனம் பற்றி தெரிந்திருக்கிறதே என்று அவருக்கு சின்ன சந்தோஷம். அவருடைய பரிந்துரையில் சில பல புத்தகங்களை வாங்கினேன்.

அப்போது கண்ணில் பட்ட புத்தகம் க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை வாங்கிய கையோடு அங்கேயே பள்ளி வராந்தாவில் படித்து முடித்தேன். எனக்கு அந்தப் புத்தகம் பெரிய கண்திறப்பு. எந்த உலக மொழிக்கும் இணையான நவீன இலக்கியம் தமிழில் உண்டு என்று உணர்ந்த தருணம். அவர் போட்டிருந்த பட்டியலில் ஒன்றோ இரண்டோ கூட அப்போது படித்திருக்கவில்லை. ஆனாலும் அவரது விவரிப்பிலிருந்தே தமிழ் வாசிப்பு பற்றிய எனது எண்ணம் வெறும் அறியாமை என்று தெரிந்தது. இன்னும் கூட கிழிந்த ஒரு பிரதி என் அலமாரியில் எங்கோ இருக்கிறது, வாங்கி முப்பது வருஷமாவது இருக்கும்.

க.நா.சுவின் பரிந்துரை பாணி – இது என ரசனைக்கு ஒத்து வருகிறது, இந்த மாதிரி புத்தகம் – என்னைப் பொறுத்தவரை மிகச் சரியான அணுகுமுறை. எனக்கு ஏற்ற அணுகுமுறை. ஆனால் பின்னால் அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் பல என் ரசனைக்கு ஒத்தே போகாது என்பது புரிந்தது. அவர் பரிந்துரைத்த இதயநாதம், உல்லாச வேளை, கரித்துண்டு போன்றவை எனக்கு சரிப்படாது. படிக்கலாம், ஆனால் க.நா.சு. பரிந்துரைக்காவிட்டால் படித்திருக்கமாட்டேன், படிக்கவில்லை என்றால் எந்த வருத்தமும் இராது. அதாவது அவரது அணுகுமுறை எனக்கு சரிப்படுகிறது, அவரது ரசனை எனக்கு ஒத்துப் போகவில்லை. அவர் பரிந்துரைத்திருக்கும் புத்தகங்களில் ஒன்றோ இரண்டோ எனக்கு நல்ல இலக்கியமாக இருந்தால் அதிகம். அனேகம் வெறும் fluff மட்டுமே. என் கண்ணைத் திறந்த பரிந்துரைப் பட்டியல், ஆனால் பரிந்துரைகளில் வெகு சிலவே எனக்குத் தேறும் என்பது பெரிய நகைமுரண்.

அவர் பட்டியலில் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த புத்தகம் ஜடாவல்லவர் (1939).

ஏதோ ஒரு தஞ்சாவூர் கிராமத்தில் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த சந்திரசேகரன். ஆங்கிலம் படிக்கவில்லை, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி. விவசாயம், ஆனால் தங்கைகள் திருமணம், செலவுகள் என்று சொத்து கரைந்து கொண்டிருக்கிறது. முன்சீப் வேலை, கடன், திருமணம், மாமியார்-மருமகள் தகராறு, கடன் தீர்வது, மகள், மகளுக்குத் திருமணம், சுபம் என்று போகிறது.

மகா மோசமான கதை. ஒவ்வொரு அத்தியாயத்தில் முதல் இரண்டு பக்கம் உபதேசம், மேற்கோள்கள். திடீரென்று கதாநாயகன் காசிக்கு குடும்பத்தோடு போகிறான். அதனால் கதை எப்படி நகர்கிறது என்றால் ஒன்றுமில்லை. பாத்திரங்களோ வெறும் தேய்வழக்குகள். மாமியார் மோசமானவள்; “நாகரீக” மாற்றங்களால் வைதிக பழக்கங்கள் சிலவற்றை கைவிடும் மாப்பிள்ளை முட்டாள், மூர்க்கன். நாயகனும் நாயகியும் உலக மகா உத்தமர்கள். கொடுமை செய்யும் மாமியார் கிணற்றில் மருமகளை பிடித்துத் தள்ளப் போனால் அவள் தலையில் சரியாக தேங்காய் விழுகிறது. பிரதாப முதலியார் சரித்திரம் எத்தனையோ ramble ஆகும். அதற்கு ஐம்பது வருஷம் கழித்து வெளியான புத்தகம் கொஞ்சமாவது முன்னேற வேண்டாமா? இது பின்னேறி இருக்கிறது!

கதையின் சுவாரசியம் இன்று ஒன்றுதான். என்னவெல்லாம் ஆசிரியருக்கு தவறாகத் தெரிகிறது! மீசை வைத்த பிராமணன்; குருக்கள் தாழ்ந்த ஜாதி (பிராமணர்களுக்குள் தாழ்ந்தவர்களா? எனக்குத் தெரியவில்லை); காப்பி குடிப்பது, அதிலும் சீப்பிக் குடிப்பது; ஆங்கிலக் கல்வி; சுருட்டு பிடிக்கும் மேலதிகாரி. சொல்லிக் கொண்டே போகலாம்.

க.நா.சு. தன் சிறு வயதில் பார்த்த தஞ்சாவூர் கிராமங்களை, வைதிகப் பிராமணர் குடும்பங்களை ஓரளவு உண்மையாகப் பிரதிபலிக்கும் நாவல் என்று நினைக்கிறேன். மெய்நிகர் அனுபவம் என்று நினைத்து பரிந்துரைத்துவிட்டார் என்று தோன்றுகிறது.

நாவலை எழுதியவர் வரகவி என்று பட்டம் பெற்ற அ. சுப்ரமணிய பாரதி. இவர் கவிஞர் பாரதியின் நண்பர். அவரோடு சுதேசமித்திரனில் பணியாற்றி இருக்கிறார். இரண்டு பேருக்கும் எப்படித்தான் ஒத்துப் போயிற்றோ தெரியவில்லை. இவர் இந்தப் புத்தகத்தில் நாகரீக வளர்ச்சியின் பின்விளைவுகள் என்று சொல்லும் அத்தனையும் கவிஞருக்கு உண்டு – மீசை, ஜாதி ஆசாரம் பார்க்காமல் இருத்தல்…

அ. சுப்ரமணிய பாரதியைப் பற்றி க.நா.சு. தவிர வேறு யாரும் குறிப்பிட்டு நான் பார்த்ததில்லை. நீங்கள் யாராவது ஏதாவது கேள்விப்பட்டிருந்தால் சொல்லுங்கள்!

அவர் எழுதிய மாயாவதி (1911) என்ற நாடகமும் கிடைத்தது. பிரத்யும்னன் – சம்பராசுரன் கதை. 1911க்கு நிறைய உரைநடை. அன்று வெற்றி பெற்றிருக்கலாம். பக்த மஹிமை (1920) புண்டரீகன், நாம்தேவ், கோரா கும்பார் ஆகியோர், இரண்டு பக்த சிரோன்மணிகள் (1925) மாணிக்கவாசகர், பத்ராசல ராமதாஸ் ஆகியோரின் சுருக்கமான “வரலாறு”. பாண்டவ வனவாசம் (1923), பாலகோபால லீலை என்றும் சில புத்தகங்களைப் படித்தேன்.

தஙகளைத் தாங்களே வருத்திக் கொள்ள நினைக்கும் masochist-களுக்காக – ஜடாவல்லவர், மாயாவதி இரண்டும் இணையத்தில் கிடைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

சிவாஜி கணேசனைத் தாக்கும் நாவலுக்கு சாஹித்ய அகடமி விருது

மீள்பதிவு, முதல் பதிவு 2010-இல்.

நா.பா. எழுதிய சமுதாய வீதி 1968-இல் வெளிவந்தது. 1971-இல் சாஹித்ய அகடமி பரிசு பெற்றது.

இந்தப் புத்தகம் சிவாஜி கணேசனை கடுமையாகத் தாக்குகிறது. நாவலின் “வில்லன்” கோபால் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறான். போக் ரோட்டில் வசிக்கிறான். நாடக மன்றம் வைத்து பலருக்கு சம்பளம் தருகிறான். நாவலின் நாயகன் முத்துக்குமரன் நா.பா.வேதான் என்பதும் தெளிவு. கதாசிரியன், அழகன், நீண்ட பாகவதர் ஸ்டைல் முடி, தான் சிறந்த எழுத்தாளன் என்ற செருக்குடையவன். கதை நா.பா.வின் wish fulfilment fantasy மாதிரி இருக்கிறது.

காமராஜின் காங்கிரசில் அந்தக் காலத்தில் சிவாஜி பெரும் சக்தி. ஜெயகாந்தன், நா.பா. போன்றவர்கள் ஸ்டார் பேச்சாளர்கள். 68-இல், காமராஜின் தோல்விக்குப் பிறகு வெளிவந்த புத்தகம். ஒரு வருஷம் முன்னால் கூட இருவரும் ஒரே மேடையில் முழங்கி இருப்பார்கள். என்ன தகராறோ? ஒரு வேளை சிவாஜி நா.பா.வை தனக்காக ஒரு நாடகம் எழுதச் சொல்லி அதில் இரண்டு பேருக்கும் ஏதாவது உரசலா, யாருக்காவது தெரியுமா? திருப்பூர் கிருஷ்ணன் மாதிரி யாருக்காவது தெரிந்தால் உண்டு.

அறுபதுகளில் நா.பா. ஒரு ஸ்டார் எழுத்தாளர். அவருடைய குறிஞ்சி மலர் எக்கச்சக்க பிரபலம். அதைப் படித்துவிட்டு குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணி என்று பேர் வைத்தவர்கள் நிறைய பேர் உண்டு. அப்படி பேர் இருந்தால் அவர்களுக்கு அனேகமாக நாற்பத்து சொச்சம் வயது இருக்கும். ராணி மங்கம்மாள், பொன் விலங்கு, மணிபல்லவம் போன்ற புத்தகங்களும் புகழ் பெற்றவை. சமுதாய வீதி சாகித்ய அகாடமி பரிசு பெற்றது.

நா.பா.வின் புத்தகங்களில் நாயகன் எப்போதுமே லட்சியவாதி. சமுதாய அவலங்களைக் கண்டு பொங்குவான். இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார்களே என்று பக்கம் பக்கமாக பொருமுவான். அவருடைய கனவு நாயகி “காதல் ஒருவனை கைப்பிடித்து அவன் காரியம் யாவையும் கை கொடுப்பவள்”. நாயகனின் அழகு, ஆண்மை, திமிர், லட்சியங்கள் எல்லாவற்றையும் கண்டு சொக்கிக் கொண்டே இருப்பாள். சுதந்திரத்துக்குப் பிறகு தெருக்களில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவு உடைந்தபோது ஏற்பட்ட ஏமாற்றங்களை அவர் தன் எழுத்தில் கொண்டு வந்தது ஒன்றே அவரது எழுத்தின் பலம். ஆனால் எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறாக இருக்கின்றன.

இன்று கறாராக மதிப்பிட்டால் என் கண்ணில் அவர் ஒரு வணிக எழுத்தாளரே. சில சமயம் சுவாரசியமாக இருக்கும், அன்றைய தமிழ் உலகம் எதை விரும்பியது என்று தெரிந்து கொள்ள உதவும் கதைகளை எழுதி இருக்கிறார். வணிக எழுத்தாகக் கூட அவர் எழுத்து காலாவதி ஆகிவிட்டது. சமுதாய வீதி போன்ற நாவலுக்கெல்லாம் சாஹித்ய அகடமி பரிசா என்றுதான் தோன்றுகிறது. 71-இல் க.நா.சு.வுக்கும், சி.சு. செல்லப்பாவுக்கும், எம்.வி. வெங்கட்ராமுக்கும், லா.ச.ரா.வுக்கும், பிச்சமூர்த்திக்கும் கூட கொடுக்கப்படவில்லை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே. எழுதி இருக்கிறார்.

ஆனால் நா.பா. நல்ல எழுத்து என்றால் என்ன என்று நன்றாகவே அறிந்தவர். அவர் சாஹித்ய அகடமி விருதுக் குழுவில் இருந்தபோது இலக்கியம் படைப்பவர்களுக்கு பரிசு கிடைக்கப் பாடுபட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவரால் நல்ல இலக்கியத்தைப் படைக்கவே முடியவில்லை என்பதுதான் வாழ்வின் நகைமுரண்.

எல்லா நாவலும் ஒரே கதைதான், அதே பாத்திரங்கள்தான், பேர்கள்தான் வேறு வேறு என்றால் சுவாரசியத்துக்கு வேறு ஏதாவது காரணம்தான் தேட வேண்டி இருக்கிறது. சமுதாய வீதியின் சுவாரசியம் கதைப்பின்னல் அல்ல, பாத்திரங்கள் மிகவும் வெளிப்படையாக நிஜ மனிதர்களைத் தாக்குவதுதான் என்று கருதுகிறேன்.

நாவலில் முத்துக்குமரன் ஒரு நாடக ஆசிரியன். அவன் குழுவில் அந்தக் காலத்தில் ஸ்திரீபார்ட் வேஷங்களில் நடித்த கோபால் – இவனுடன் நெருங்கிப் பழகிய நண்பன் – இன்றைக்கு பெரிய திரைப்பட கதாநாயகன். முத்துக்குமரன் கோபாலைப் பார்க்க வருகிறான். கோபால் முத்துவை ஒரு நாடகம் எழுதித் தரச் சொல்கிறான். கதாநாயகி மாதவிதான் நாடகத்திற்கு நாயகி. அவள் முத்துவைப் பார்த்த அடுத்த நிமிஷத்திலிருந்து அவன் அழகிலும் திமிரிலும் மயங்குகிறாள், மாதவிக்கும் முத்துவுக்கும் காதல் உருவாகிறது. கோபாலின் “போலித்தனம்” மெதுமெதுவாகத் தெரிகிறது. முத்து கோபாலிடம் சில சமயம் முறைத்துக் கொள்கிறான். கோபாலுக்கு பழகிய தோஷத்தாலும், முத்து மீது அந்தக் காலத்திலிருந்து இருக்கும் பயம் கலந்த மரியாதையாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. முத்து அங்கங்கே கோபாலின் “சின்னத்தனத்தை” கண்டு பொருமுகிறான். கோபாலுக்கு விபத்து ஏற்படும்போது முத்துக்குமரன் தானே நாடகத்தில் நாயகனாக நடிக்கிறான். அப்புறம் தன் வழியே காதலியுடன் போய்விடுகிறான். இதுதான் கதை.

கோபால் அப்படி ஒன்றும் தவறாக நடந்துகொண்ட மாதிரியும் தெரியவில்லை. கோபால் தன்னை மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கும் முத்து, கோபாலை மரியாதையாக நடத்துவதில்லை. பலர் முன் எடுத்தெறிந்து பேசுகிறான். மாதவி முத்துவைக் கண்டு மயங்கிய பிறகு கற்புக்கரசி மாதிரி நடந்தாலும் அதற்கு முன் அப்படி இருந்ததாகத் தெரியவில்லை. கோபால் முன் மாதிரியே பெரிய மனிதர்களிடம் மாதவி “அட்ஜஸ்ட்” செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது முத்துவுக்கு தவறாகத் தெரிகிறது. மாதவியின் மனம் மாறும் என்று கோபால் எப்படி யூகிப்பது?

நாவல் காலாவதி ஆகிவிட்டது, படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிவாஜியை வம்புக்கு இழுத்திருப்பது கிசுகிசு படிப்பதைப் போல சுவாரசியமாக இருக்கிறது.

சமுதாய வீதி இணையத்தில் கிடைக்கிறது. ஜெயமோகன் இந்த நாவலை நல்ல social romance என்று குறிப்பிடுகிறார்.

சில வருஷங்களுக்கு முன் ஜெயமோகன் தொந்தி தொப்பி என்று எழுதியதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் கொதித்தெழுந்தது. அன்றைக்கு சிவாஜி ரசிகர் மன்றங்கள் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கிய காலத்தில் இதைப் பற்றி சர்ச்சை எதுவும் எழவில்லையா? நினைவிருப்பவர் சொல்லுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
சமுதாய வீதி – மின் புத்தகம்
எஸ். கிருஷ்ணமூர்த்தியின் விலாவாரியான அலசல்

மதம் மாறிய முஸ்லிம்கள் – அன்வர் பாலசிங்கத்தின் ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’

1981 வாக்கில் மீனாட்சிபுரம் என்ற கிராமமே இஸ்லாமுக்கு மாறியது. தலித்கள் பெருவாரியாக வாழ்ந்த கிராமம். ஜாதி அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவே இது நடந்தது என்று கூறப்பட்டது. பண ஆசை காட்டி மதம் மாற்றினார்கள் என்று இன்னொரு தரப்பு கூறியது. சில வருஷங்கள் கழித்து அனேகம் பேர் மீண்டும் ஹிந்து மதத்திற்கே திரும்பிவிட்டார்கள் என்று நினைவு.

அன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம். அன்றைய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான வாஜ்பேயி வந்து பார்த்து அறிக்கை எல்லாம் சமர்ப்பித்தார். தமிழக் அரசு விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தது. ஜெயகாந்தன் இந்தப் பின்புலத்தை வைத்து ஈஸ்வர அல்லா தேரோ நாம் என்ற (சுமாரான) நாவலை எழுதினார்.

அதே பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட குறுநாவல் கருப்பாயி என்கிற நூர்ஜஹான். இங்கே கிராமத்தின் பேர் காமாட்சிபுரம். 25 வருஷங்களுக்குப் பிறகு மதம் மாறியவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. புத்தகம் மதம் மாறியவர்களுக்கும் மாற இருப்பவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பேர் அன்வர் பாலசிங்கம் என்று இருப்பதால் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கருப்பாயியாகப் பிறந்து ஆறேழு வயதில் மதம் மாறிய நூர்ஜஹானுக்கு 40 வயதாகியும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அப்பா தனக்கு மாப்பிள்ளை தேடி அனுபவிக்கும் அவமானங்களின் பளு தாங்க முடியாமல் நூர்ஜஹான் தற்கொலை செய்து கொள்வதுடன் குறுநாவல் ஆரம்பிக்கிறது. மதம் மாறியவர்கள் என்றாலே ஒரு படி குறைவாகத்தான் பார்க்கிறார்கள்; அதுவும் தலித் – இல்லை இல்லை பள்ளக்குடி பறையக்குடி என்றால் – விலகி ஓடுகிறார்கள். காமாட்சிபுரத்தில் இப்படி மதம் மாறிய குடும்பங்களில் ஐம்பது அறுபது முதிர்கன்னிகள் மாப்பிள்ளை கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். முஸ்லிம்களாக மாறினாலும் இன்னும் அவர்கள் தலித்துகளாகவோ அல்லது ‘நவ் முஸ்லிம்களாகவோ’தான் இருக்கிறார்கள். நூர்ஜஹான் இறந்த பிறகு முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை எல்லாரும் நிற்க வைத்து நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்கிறார்கள். நாவல் அவ்வளவுதான்.

நாவலில் கொஞ்சமாவது உண்மை இருக்கத்தான் இருக்கும். நம்மூரில் மதம் மாறினால் ஜாதி ஒழிந்துவிடுவதில்லை என்பது நிதர்சனம். எதற்காக மதம் மாறி இருந்தாலும் அதை வைத்து பெருமை அடித்துக் கொள்ளவும், அது மனமாற்றம் அல்ல, மதம் மாறியவர்களை உசுப்பிவிட்டு குளிர்காய்கிறார்கள் என்று குற்றம் சாட்டவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கேட்கப்படும் கேள்வியும் நியாயமானதுதான்.

ஆனால்: காமாட்சிபுரத்தில் என்ன பெண் குழந்தைகள் மட்டும்தான் பிறப்பார்களா? உள்ளூரிலேயே வேறு மதம் மாறிய குடும்பங்களிலிருந்து மாப்பிள்ளை கிடைக்காதா? ஏதோ 55 சதவிகிதம் பெண் குழந்தைகள் 45 சதவிகிதம் ஆண் குழந்தைகள் என்றால் பரவாயில்லை, ஆனால் எக்கச்சக்க பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றால் லாஜிக் இடிக்கிறதே!

இந்தப் புத்தகத்தின் வெற்றி என்பது அப்படி லாஜிக் இடிப்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க நேரமே இல்லாமல் கதை போவதுதான். கேள்வி அவ்வளவு உக்கிரமாக கேட்கப்படுகிறது. இலக்கிய நயம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சமீபத்தில் மீனாட்சிபுரம் சென்று பார்த்தவர்கள் மதம் மாறியவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள், விலக்கி வைக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன். புனைவுக்கு plausibility இருந்தால் போதும், அது முழு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதுதான் எப்போதுமே என் தரப்பு. அது பெருமாள் முருகனின் மாதொருபாகனாக இருந்தாலும் சரி, இல்லை கருப்பாயி என்கிற நூர்ஜஹானாக இருந்தாலும் சரி.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்