திராவிட இயக்க சார்புள்ள எழுத்தாளர்களில் இமையம் ஒருவரே முக்கியமான எழுத்தாளர் என்று நான் கருதுகிறேன். தாட்சணியம் பார்த்தால் அண்ணாதுரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இமையத்தை நான் திராவிட இயக்க எழுத்தாளராகக் கருதவில்லை, ஆனால் அவர் தன்னைப் பற்றி அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார், அதனால் வேறு வழியில்லை. 🙂 சுருக்கமாகச் சொன்னால் அவர் படைப்பது இலக்கியம். அவருடைய சார்புநிலை என்ன, திராவிட இயக்கத்தின் மீது பரிவுள்ளவரா, ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவரா என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.
அண்ணாவுக்கெல்லாம் சில நாடகங்கள் மட்டுமே நினைவில் இருக்க வேண்டியவை. போனால் போகிறது என்று செவ்வாழை சிறுகதையை சேர்த்துக் கொள்ளலாம்.
மனுஷ்யபுத்திரன் தன்னை திராவிட இயக்க எழுத்தாளராக கருதுகிறாரா என்று தெரியவில்லை. எனக்கு கவிதை அலர்ஜி, நான் மனுஷ்யபுத்திரனைப் படித்ததில்லை. ஆனால் அவர் நல்ல கவிஞர் என்று நான் மதிக்கும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
வேறு யாரும் என் கண்ணில் தேறவில்லை. பாரதிதாசனை நான் நல்ல கவிஞராகக் கருதவில்லை. அவருடைய பலம் சந்தம் மட்டுமே. பிரச்சார நெடி பலமாக அடிக்கும் இரணியன் போன்ற சில சகிக்க முடியாத நாடகங்களை எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பிசிராந்தையார் புத்தகத்துக்கு சாஹித்ய அகடமி விருது கிடைத்தது உலக மகா அநியாயம். வெங்கட் சாமிநாதன் அதைப் பற்றி தகுதி உள்ளவர் எழுதிய தகுதி அற்ற புத்தகத்துக்கு கிடைத்த விருது என்று குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு எழுத்தாளரின் தகுதி பற்றியே நல்லெண்ணம் கிடையாது.
கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு என்பது மனோகரா வரை திரைப்பட வசனங்கள் மட்டுமே. குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா இத்யாதியை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது என்பதால் வாயை மூடிக் கொள்கிறேன்.
நெடுஞ்செழியன் எழுதிய “பண்டைய கிரேக்கம்” (1954) என்ற புத்தகத்தைப் படித்தேன். தெளிவான, பள்ளிப் புத்தகங்களுக்கு கொஞ்சம் மேலான அறிமுகம். கருணாநிதி போல துருத்திக் கொண்டு தெரியும் அலங்காரத் தமிழ் எல்லாம் குறைவுதான். சரளமான நடை.
என் கண்ணில் அவர் எழுதிய மொழிப் போராட்டம் (1948) ஆவண முக்கியத்துவம் உள்ள புத்தகம்.1938-இல் ஹிந்திக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் உ.வே.சா.வும் ஒருவர் என்று குறிப்பிடுகிறார். வியப்பளித்த தகவல், உ.வே.சா. எந்த வம்புக்கும் போகமாட்டார் என்று எனக்கு ஒரு மனப்பிம்பம் உண்டு. ராஜாஜியே போராட்டம் வலுத்ததும் இவ்வளவு தூரம் தகராறு முற்றிவிடும் என்று தெரிந்திருந்தால் இதில் தலையிட்டிருக்க மாட்டேன் என்று சொன்னாராம். அவர் போட்ட அபூர்வமான தப்புக் கணக்குகளில் ஒன்றோ? ஓமந்தூராரும் 1948-இல் ஹிந்தியைக் கொண்டு வந்தார் என்கிறார். அன்றைய கல்வி மந்திரியான அவினாசிலிங்கம் அன்றைய சென்னை மாகாணத்தில் ஹிந்திப் பயிற்சியை ஏற்படுத்தினாலும் தமிழ் பேசும் பகுதிகளுக்கு முதலில் விலக்கு அளித்தாராம், ஆனால் பல வித அழுத்தங்களால் தன் முடிவை மாற்றி ஹிந்தியை கட்டாயப் பாடம் ஆக்கினாராம். ஈ.வெ.ரா. தலைமையில் அண்ணாதுரை ஆணையாளராகப் பணியாற்றினார், திரு.வி.க. ஆதரவு தந்தார், 500 பேர் சிறையில் என்கிறார்.
அன்பழகன், முரசொலி மாறன் போன்றவர்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்டார்கள் என்று நினைக்கிறேன், ஒரு வேளை சில கொள்கை விளக்கப் புத்தகங்களை எழுதி இருக்கலாம். பெருஞ்சித்திரனார், கி.ஆ.பெ. விஸ்வநாதம், தேவநேயப் பாவாணர் எல்லாம் அபுனைவுகள், கொள்கை விளக்கப் புத்தகங்கள் மட்டுமே எழுதினார்கள். சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ். தென்னரசு, ஜலகண்டபுரம் கண்ணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி போன்ற சிலர் புனைவுகளும் எழுதினார்கள். வேழவேந்தன் மாதிரி சில கவிஞர்களின் பேர் நினைவிருக்கிறது. (நான் படித்ததில்லை) அண்ணா, கலைஞர் தவிர பாரதிதாசன், மாறன், ஆசைத்தம்பி, நாஞ்சில் மனோகரன், காளிமுத்து என்று சிலர் திரைப்படங்களுக்கு கதை வசனம் எல்லாம் எழுதினார்கள்.
அனேகமாக இவை எல்லாம் பிரச்சார நெடி அடிக்கும் மோசமான எழுத்துக்களே. அந்தக் காலத்து விகடன் குமுதம் கல்கி தொடர்கதைகள் தரத்தில் கூட இல்லை. காலாவதி ஆகிவிட்டன என்று சொல்வதே தவறாக இருக்கலாம், அன்றே இவற்றை யார் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தமிழின் புனைவுலக வரலாற்றில் இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ஒரு அடிக்குறிப்பு அளவில் இடம் தரலாம்.
அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ். தென்னரசு, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பெருஞ்சித்திரனார், புதுவை சிவம், புலவர் குழந்தை, அரங்கண்ணல், சாமி சிதம்பரனார், ஜலகண்டபுரம் கண்ணன், கி.ஆ.பெ. விஸ்வநாதம்,ஏ.கே. வேலன் உள்ளிட்டோரின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. (முழுப் பட்டியல் அல்ல) ஈ.வெ.ரா.வின் எழுத்துக்கள் இன்னும் நாட்டுடமை ஆக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அவர்கள் சிலரைப் பற்றி:
சி.பி. சிற்றரசு: அறுபதுகளில், ஏன் எழுபதுகளில் கூட பள்ளிகளில் விரும்பி நடிக்கப்பட்ட பல காட்சிகள் உடைய நாடகம் விஷக்கோப்பை. அதுவும் நான் படித்த பள்ளிகளில் வருஷாவருஷம் இதைதான் நடிப்பார்கள். சாக்ரடீசின் வாதங்கள் அப்படி ஒன்றும் அபூர்வமானவை இல்லை என்றாலும் இன்றும் படிக்க முடிகிறது. இவற்றைத் தவிர சிற்றரசு எழுதிய சிந்தனைச் சுடர் (வழக்கமான பிராமண எதிர்ப்பு), சாய்ந்த கோபுரம் (மாஜினியின் வாழ்க்கை வரலாறு) நூல்களும் படித்தேன். இவற்றை எல்லாம் யார் படித்தார்கள் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். சிற்றரசின் சில புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.
எஸ்.எஸ். தென்னரசு பற்றி ஜெயமோகன் இரண்டொரு வார்த்தை நல்ல விதமாக சொல்லி இருக்கிறார். அவரது கோபுர கலசம் நாவலை தனது வரலாற்று நாவல்கள் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சில புத்தகங்கள் ஆர்க்கைவ் தளத்தில் கிடைத்தன. வரலாற்றுக் கதைகள் வாரப் பத்திரிகை தொடர்கதை தரத்தில் இருக்கின்றன. கிருஷ்ணதேவராயர்-விஸ்வநாத நாயக்கரை வைத்து படுசுமாரான நாவல் ஒன்றை – துங்கபத்திரை – எழுதி இருக்கிறார். செம்மாதுளை படுசுமாரான நாவல்தான். ஆனால் பாகனேரி-பட்டமங்கலம் கள்ளர்களிடம் 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்ச்சியை, ஒரு கலவரத்தை விவரிப்பதால் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. பெண்ணில்லாத ஊரிலே அவரது சிறைச்சாலை நினைவுகள். (மிசா காலம் உட்பட பல முறை சிறை சென்றவர்.) ஆனால் அவரது பாடகி, மலடி பெற்ற பிள்ளை, மிஸ் ராதா நாவல்கள் எல்லாம் உலக மகா தண்டம்.
பெருஞ்சித்திரனாரின் தமிழ் ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவு பத்தாது. ஆனால் அவரது எழுத்துக்களில் அப்பட்டமான இனவெறி தெரிகிறது. ஆரியப் பார்ப்பனரின் அளவற்ற கொட்டங்கள் என்றே ஒரு புத்தகம் வந்திருக்கிறது. ஆவணக் கொலைகள் செய்து தள்ளும் எந்த ஜாதியினரைப் பற்றிக் கூட இப்படி ஒரு தலைப்பு வைத்துவிட முடியாது.
தேவநேயப் பாவணரும் பெருஞ்சித்திரனார் போலத்தான், அவரது தமிழ் ஆய்வுகளும் எனக்குப் புரிந்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் என்றாவது முயன்று பார்க்க வேண்டும். புரிந்த வரையில்: பாவாணர் உலகின் அத்தனை மொழிகளும் – குறிப்பாக சமஸ்கிருதம் – தமிழிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கி உருவானவை என்று கருதுகிறார். தமிழனே ஆதி மனிதன், ஆனால் ஆரிய வந்தேறிகள் தமிழனை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பது அவரது உறுதியான கருத்து. பிரம்ம தத்துவம் மாதிரிதான்; அடிமையும் தமிழன், அடிமைப்படுத்துவனும் தமிழனேதான், ஆனாலும் அவன் வந்தேறி, தமிழ் வம்சாவளி ஆரியன். தன் படிப்பையும் அறிவையும் இந்த முன்முடிவுகளை நியாயப்படுத்தவே பயன்படுத்துகிறார், அது அவ்வப்போது கேலிக் கூத்தாக முடிகிறது. ஏதோ ஒரு புத்தகத்தில் பிராமணன் தோல் வெளுப்பாக இருந்ததால் மூவேந்தரும் அவன் பேச்சைக் கேட்டு அவனுக்கு அடிமை ஆகிவிட்டார்கள் என்கிறார். தமிழன் கேனையன் என்று உறுதியாக நம்பி இருக்கிறார். இருந்தாலும் அவர் சிறந்த தமிழறிஞராக இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
ஜலகண்டபுரம் கண்ணன் பல நாடகங்களை எழுதி இருக்கிறார். நாடக ஆசிரியராகத்தான் அவரது பங்களிப்பு. குன்றுடையான் என்ற ஒரு நாடகத்தை படிக்கலாம். நந்திவர்மன் என்ற நாடகம் ஓரளவு பிரபலமானது. அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டது தேவையற்ற செயல்.
ஏ.வி.பி. ஆசைத்தம்பி: எழுதியவருக்குத்தான் வேறு வேலை இல்லை என்றால் எனக்கு எங்கே போயிற்று அறிவு என்று நினைக்க வைத்த புத்தகம் தந்தையின் ஆணை.
கி.ஆ.பெ. விஸ்வநாதம் தமிழுக்கு வேறு வகைகளில் உழைத்திருக்கலாம். ஆனால் அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டதும் தேவையற்ற செயல்தான்.
ஏ.கே. வேலன் திரைப்படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார், தயாரித்துமிருக்கிறார். வாழ்வின் பிற்பகுதியில் அவர் பக்தராக மாறி திராவிட இயக்கதிலிருந்து விலகினார். அவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கபப்ட்டது தேவையற்ற செயல்.
இது முழுமையான பட்டியல் இல்லைதான். என் கண்ணில் பட்ட சிலரைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். ஆனால் இமையம் ஒருவரைத் தவிர வேறு யாரும் பொருட்படுத்த வேண்டிய திராவிட இயக்க எழுத்தாளராக எனக்குத் தெரியவில்லை. அண்ணாவின் சில நாடகங்கள் பரவாயில்லை ரகம். பாரதிதாசனை நல்ல கவிஞர் என்ற மதிப்பீடு அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் அந்த மதிப்பீடும் இப்போது காலவதி ஆகிவிட்டது. பெருஞ்சித்திரனார் தமிழறிஞராக இருக்கலாம், ஆனால் அப்பட்டமான இனவெறியர். தேவநேயப் பாவாணரும் நல்ல தமிழறிஞர்தான் என்று நினைக்கிறேன், ஆனால் அவரது முன்முடிவுகள் சில சமய்ம் அவரை கேலிக்கூத்தாக்கிவிடுகின்றன.
இமையமே கூட எந்த விதத்தில் திராவிட இயக்க எழுத்தாளார் என்று எனக்குத் தெரியவில்லை, அவரது தனி வாழ்க்கையில் அவர திராவிட இயக்கத்தினராக இருக்கலாம், அவரது விழுமியங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக்கலாம், ஆனால் இமையத்தின் எழுத்தில் செயற்கைத்தனமோ, பிரச்சார நெடியோ எதுவுமில்லை, அவர் இலக்கியம் படைக்கிறார் அவ்வளவுதான்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்