வாசந்தியை இலக்கியவாதி அல்லது வணிக எழுத்தாளர் என்று சுலபமாக வகைப்படுத்திவிட முடியவில்லை. இலக்கியவாதி என்றால் எங்கோ கடைசி வரிசையில் நிற்கிறார். வணிக எழுத்தாளர் என்று பார்த்தால் பொருட்படுத்தக் கூடிய வணிக எழுத்தாளர். இந்தப் பதிவுக்காக அவரது சில பல புத்தகங்களைப் படிக்கும் வரையில் நானும் அவரைப் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி வகையறா, ஆனால் அந்த வரிசையில் முதல்வர் என்றுதான் நினைத்திருந்தேன். நிச்சயமாக இல்லை, கிருத்திகா, அம்பை, பாமா, ஹெப்சிபா ஜேசுதாசன் அளவுக்கு வரவில்லை என்றாலும் அவருக்கு பெண் எழுத்தாளர் என்ற அடையாளம் தேவையில்லை. எழுத்தாளர் என்று சொன்னால் போதும்.
ஜெயமோகன் இவரது மௌனப்புயல், ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன நாவல்களை தனது இரண்டாம் வரிசை இலக்கியப் பட்டியலிலும், ஜெய்ப்பூர் நெக்லஸ், நிற்க நிழல் வேண்டும் ஆகிய நாவல்களை தன் பரப்பிலக்கியப் பட்டியலிலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். என்னைப் பொறுத்த வரை நிற்க நிழல் வேண்டும், மூங்கில் பூக்கள் இரண்டும் இலக்கியம். ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவல் வணிக நாவல் இல்லைதான், ஆனால் பெரிய இலக்கியமும் இல்லை.
வாசந்தியின் பாத்திரங்கள் பொதுவாக மேல்மட்டத்தவர்கள். ஓரளவு மென்மையானவர்கள். ஓரளவு சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் திருப்பி திருப்பி வருபவர்கள். அதனால் முதல் சில நாவல்களுக்குப் பிறகு அலுத்துவிடுகிறார்கள். என் பதின்ம வயதில் அவரது பாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் ஓ போடுவதால் அவரது புத்தகங்களைப் பார்த்தாலே ஓ என்று கிண்டல் செய்வேன்.
ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது மூங்கில் பூக்கள் என்ற குறுநாவலைத்தான். மிசோரத்தில் டீச்சராக வேலை செய்யும் தமிழ்ப் பெண். ராணுவ அதிகாரி ராஜீவுடன் காதல், உறவு. அவள் வகுப்பில் “டெரரிஸ்ட்” தலைவர் லால்கங்காவின் மகன் சுங்கா வந்து சேருகிறான். டெரரிஸ்ட் தலைவர் என்றாலும் லால்கங்கா மிசோரத்தில் சாதாரணமாக புழங்குபவர். சுங்கா தொல்லை தரும் மாணவன் என்று அவனுக்கு பெயர் இருக்கிறது. உண்மையில் அவன் சாதாரணமான, அழகை ரசிக்கும் மாணவன். தன் அப்பா மீது கொஞ்சம் வெறுப்பு வேறு. டீச்சருக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுகிறது. பொறாமை கொண்ட ராஜீவ் சுங்கா மீது ஜீப்பை ஏற்றி கொன்றுவிடுகிறான். டீச்சருக்கு அங்கிருந்து தப்பிக்க வேண்டிய நிலை. மிஜோரத்திலிருந்து ஷில்லாங் வந்து விமானம் ஏறும்போது அவளுக்கு தனக்கு ஜீப் கொடுத்து உதவியது லால்கங்காதான் என்று தெரிய வருகிறது.
மிஜோரப் பின்புலம், அழகான பூக்கள், அன்பு ஆகியவற்றை வைத்து ஒரு நல்ல கதை பின்னி இருக்கிறார். இது மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி கூடெவிடே என்ற திரைப்படமாகவும் வந்தது.
எனக்கு இதைத்தான் ஜெயமோகன் தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்க்க நினைத்து தவறுதலாக ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன குறுநாவலைக் குறிப்பிட்டுவிட்டாரோ என்று ஒரு சந்தேகம் உண்டு.
மற்ற நாவல்களில் கடைசி வரை எனக்கு ஓரளவு பிடித்த நாவல். அப்பாவோடு வாழும் டாக்டர் பெண். தான் மகனாகப் பிறக்கவில்லை என்று அப்பாவுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு என்று அவளுக்குத் தெரிகிறது. அது chip on the shoulder ஆக இருக்கிறது. அவளுடைய மனநிலையை நன்றாக சித்தரித்திருக்கிறார்.
சிறை என்ற நாவலும் பரவாயில்லை. மும்பை குண்டுவீச்சு பின்னணியில் ஒரு நிரபராதி நிருபன் மாட்டிக் கொள்கிறான்.
கடை பொம்மைகள் என்ற நாவலையும் குறிப்பிடலாம். பெண் குழந்தை வேண்டாமென்று நிராகரிக்கப்பட்ட குழந்தையை வெள்ளைக்கார அம்மா ஒருவர் எடுத்து வளர்க்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அது பெண் குழந்தைகளுக்கான இல்லமாகவே மாறிவிடுகிறது. வளர்ந்த பெண் தனக்குப் பிறகு இந்த இல்லத்தை எடுத்து நடத்துவாள் என்று அந்த வெள்ளைக்கார அம்மா எதிர்பார்க்க, இவள் உள்ளம் தடுமாறுகிறது.
ஆகாச வீடுகள் என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. கிராமம், அக்ரஹாரம். ஆணாதிக்கம். மாமா சபேசனுக்கு தன் எட்டு வயது மகன் ராஜு மீது அதீத அன்பு, அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திட்டிக் கொண்டே இருப்பார்.
யுகசந்தி என்ற நாவலும் எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. சம்பிரதாயமான பிராமணக் குடும்பம். முதல் பையன் போலந்துக்காரியை மணந்து கொள்கிறார். இரண்டாமவர் ஒரு முஸ்லிம் பெண்ணை. முதல் பையன் ஐம்பது வயதுக்கப்புறம் இன்னொரு பெண்ணோடு போய்விடுகிறார். விதவை அம்மா, முதல் பையனின் பெண் என்று கதாபாத்திரங்கள். நடுவில் இடதுசாரி சார்புடைய வள்ளியின் கிளைக்கதை.
டைம் பாஸ் என்ற அளவில் ஆர்த்திக்கு முகம் சிவந்தது (நேபாளத்தில் ஒரு பணக்காரக் குடும்ப இளைஞனுக்கு முதுகெலும்பு முறிந்துவிடுகிறது. பார்த்துக் கொள்ளப் போகும் தமிழ்நாட்டு நர்சுக்கும் அவனுக்கும் காதல்), அக்னிக்குஞ்சு (வீண் சந்தேகத்தால் பிரிந்த அம்மா-அப்பா பெண்ணுக்கு பதினெட்டு வயதாகும்போது சமாதானம் ஆகிறார்கள்), இடைவெளிகள் தொடர்கின்றன (ஒரு கல்லூரி நகரம். அங்கே புது லைப்ரரியனாக வரும் அழகான இளம் பெண். எல்லார் பிரச்சினைகளையும் தீர்க்கிறாள்), காதலெனும் வானவில் (அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் குடும்பத்தின் பதின்ம வயதுப் பெண்), மீண்டும் நாளை வரை (அவசரப்பட்டு சந்தேகப் பிராணி கணவனை மணக்கும் பெண் அவனைப் பிரிந்து சொந்தக் காலில் நிற்கிறாள்), நான் புத்தனில்லை (மேல் தட்டு குடும்பத்தின் அம்மா இன்னொருவனை விரும்புகிறாள்), நழுவும் நேரங்கள் (அப்பாவின் முன்னாள் காதலி, இந்நாள் தோழியால் குடும்பத்தில் குழப்பம். தோழிக்கு கான்சர். மகள் எல்லாரையும் ஒன்று சேர்க்கிறாள்), பொய்யில் பூத்த நிஜம் (சேர்ந்து வாழும் பெண்ணையும் மகனையும் விபத்தில் பட்ட அடியால் மறந்து போகும் ஆண்), சந்தியா (பெற்றோர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் நார்வே செல்லும் பெண் அந்தக் கலாசாரத்தின் வெறுமையைப் புரிந்து கொள்வது), வசந்தம் கசந்தது (குடும்பத்தைப் புறக்கணிக்கும் அரசியல் தலைவி மீண்டும் குடும்பத்தில் ஒன்றுவது), வீடு வரை உறவு (ஒரு சம்பல் கொள்ளைக்காரனின் – டாகுவின் – மனமாற்றம்), வேர்களைத் தேடி (உயர் மத்தியதரக் குடும்பம். விவாகரத்து ஆன பெண். அயோத்தியாக் கலவர பின்புலம்), யாதுமாகி (அதே பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலா, அதே பெண்களை யாரும் புரிந்து கொள்வதில்லை புலம்பல். நடப்பது கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களில். ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைப்பதை புருஷன் விரும்பவில்லை. ஆணாதிக்கக் குடும்பம். எதிலோ தொடர்கதையாக வந்திருக்க வேண்டும், உதவி ஆசிரியர் யூஸ்லெஸ். ஒரு பாத்திரத்தின் பெயர் பாதியில் மாறிவிடுகிறது, அதை புத்தகமாகப் போட்ட பிறகும் யாரும் கவனிக்கவில்லை) ஆகிய நாவல்/குறுநாவல்கள் இருக்கின்றன.
தவிர்க்க வேண்டியவை எல்லைகளின் விளிம்பில் (மேல்மட்ட ஊழல் அதிகாரியின் பெண்ணை மணக்கும் மத்தியதர வர்க்க பாலு, அவனுடைய புதுமைப்பெண் தங்கை மாலு) இன்றே நேசியுங்கள் (முதலாளியால் கொலை செய்யப்பட்ட யூனியன் லீடரின் மனைவிக்கு நூல் விடும் முதலாளியின் வாரிசு).
தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் ஜனனம் அதைத் தனியாக குறிப்பிட காரணம் ஒன்றுதான். இது “யாரோ எழுதிய கவிதை” என்று சிவகுமார், ஜெயஸ்ரீ, ராஜேஷ் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. என் போதாத காலம், நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் அம்னீஷியா என்பது பரவலாக பயன்படுத்தப்பட்ட ஒரு உத்தி. இந்த கதையிலும் அதுதான். விபத்து, ஒரு அழகான பெண் மட்டும் தப்பிக்கிறாள். அவளுக்கு அம்னீஷியா வந்து பேர் கூட மறந்து போக வேண்டுமே? போகிறது. வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கும் அவளுக்கும் காதல் வர வேண்டுமே! வருகிறது. அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்க வேண்டுமே? ஆகி இருக்கிறது. அவளைத் தேடும் கணவனுக்கு அவளுக்கு காதல் ஏற்பட்ட பிறகுதான் அவள் இருக்கும் இடம் தெரிய வேண்டுமே? தெரிகிறது. அவளைத் தேடி வரும் கணவன் அவள் காதலைக் கண்டு விலகுவதோடு கதை முடிகிறது. புத்தகமே cliched என்னும்போது சினிமாவை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மலையாளத்தில் பத்மராஜன் இயக்கி இன்னிலே என்ற திரைப்படமாகவும் வந்தது.
தவிர்க்க வேண்டிய இன்னொரு குறுநாவல் வேர் பிடிக்கும் மண். நண்பன் இரண்டு பெண்களை மணந்து வாழ்வதைக் கண்டு ஏற்கனவே மணமான ரமேஷுக்கும் கொஞ்சம் நப்பாசை. கரெக்டாக அவன் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று கதை போகிறது. இது பாலகுமாரனை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகம் என்று ஒரு கிசுகிசுவை எங்கோ படித்திருக்கிறேன். வம்பு பேசும் ஆசையில்தான் இதை தனியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
தேடல் என்று சிறுகதை நினைவிருக்கிறது. பல இன்னல்கள் கண்ட பத்தினி மனநிலை பிறழ்ந்துவிடும் என்று போகும். ஏன் நினைவிருக்கிறது என்றே தெரியவில்லை.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்