விர்ஜினியா வூல்ஃப்: How Should One Read a Book?

விர்ஜினியா வூல்ஃப் எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது.

சுருக்கமாக, அவர் வார்த்தைகளிலேயே:

…how should we read a book? Clearly, no answer that will do for everyone; but perhaps a few suggestions. In the first place, a good reader will give the writer the benefit of every doubt; the help of all his imagination; will follow as closely, interpret as intelligently as he can. In the next place, he will judge with the utmost severity. Every book, he will remember, has the right to be judged by the best of its kind. He will be adventurous, broad in his choice, true to his own instincts, yet ready to consider those of other people. This is an outline which can be filled, in at taste and at leisure, but to read something after this fashion is to be a reader whom writers respect. It is by the means of such readers that masterpieces are helped into the world.

சில இடங்களில் வேறுபட்டாலும் பொதுவாக இசைகிறேன். எழுத்தை ரொம்ப கேள்வி கேட்கக் கூடாது. கிரிகரி சாம்சா கரப்பான் பூச்சியாக மாறுகிறான் என்றால் சரி என்று ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஏற்க முடியவில்லை என்றால் காஃப்கா உங்களுக்கான எழுத்தாளர் இல்லை, அவ்வளவுதான். எழுத்தை கறாராகத்தான் மதிப்பிட வேண்டும்.

Wisdom of the crowds என்பது நாம் என்ன படிக்கிறோம் என்பதை வழிநடத்துகிறதுதான், ஆனால் ஓரளவு கையில் கிடைத்ததை படிக்கும் மனநிலை, ஒன்றை நம் வாசிப்பால் ஏற்கும்/நிராகரிக்கும் மனப்பான்மை வேண்டும்.

நேர்மை மகா முக்கியம், ஊர் சொல்கிறது என்பதால் ஒரு படைப்பை உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் பிடிக்கிறது என்று சொல்லிவிடாதீர்கள். அதே போல பிடித்த படைப்பை பிடிக்கவில்லை என்றும் சும்மா பந்தாவுக்காக சொல்லிவிடாதீர்கள்.

மாறுபடும் இடம் இதுதான்; எழுத்தாளர் மதிக்கும் வாசகனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் முயலாதீர்கள், உங்கள் ரசனைக்கு உண்மையாக இருங்கள் என்றுதான் நான் சொல்வேன். அப்படி இருப்பதை எழுத்தாளர் மதித்தால் மகிழ்ச்சி; இல்லாவிட்டால் குறை ஒன்றுமில்லை.

எனது இன்னொரு takeaway – நீங்கள் இதை சம்பவத்தை/பாத்திரத்தை எப்படி எழுதுவீர்கள் என்று வாசிக்கும்போது யோசித்துப் பாருங்கள் என்கிறார். இப்படி எனக்கு இது வரை தோன்றியதில்லை. சில சமயம் சொந்த அனுபவங்களை கதை எதிரொலித்திருக்கிறது, அந்த அனுபவங்களைப் பற்றி யோசித்திருக்கிறேன். சில கதைகளில் – குறிப்பாக துப்பறியும் கதைகளில் – கதை எப்படி நகரும் என்று சிந்தனை ஓடும். ஆனால் நானே இந்தக் கதையை எழுதினால் எப்படி இருக்கும் என்று இது வரை யோசித்ததில்லை. முயன்று பார்க்க வேண்டும்.

டேனியல் டெஃபோ (ராபின்ஸன் க்ரூசோ நாவலை எழுதியவர்), ஜேன் ஆஸ்டென், தாமஸ் ஹார்டி மூவரும் ஒரு பிச்சைக்காரனை தெருவில் சந்திப்பதை எப்படி எழுதுவார்கள் என்று அவர் விவரித்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன்.

வூல்ஃபின் கடைசி பாரா கவிதை.

If the moralists ask us how we can justify our love of reading, we can make use of some such excuse as this. But if we are honest, we know that no such excuse is needed. It is true that we get nothing whatsoever except pleasure from reading; it is true that the wisest of us is unable to say what that pleasure may be. But that pleasure—mysterious, unknown, useless as it is—is enough. That pleasure is so curious, so complex, so immensely fertilizing to the mind of anyone who enjoys it, and so wide in its effects, that it would not be in the least surprising to discover, on the day of judgment when secrets are revealed and the obscure is made plain, that the reason why we have grown from pigs to men and women, and come out from our caves, and dropped our bows and arrows, and sat round the fire and talked and drunk and made merry and given to the poor and helped the sick and made pavements and houses and erected some sort of shelter and society on the waste of the world, is nothing but this: we have loved reading.

வூல்ஃப் புகழ் பெற்ற எழுத்தாளர். ஆனால் நான் இது வரை படித்ததில்லை. சஹிருதயர் என்று இந்த ஒரு கட்டுரையிலேயே தெரிகிறது. ஏதாவது ஒரு புத்தகத்தை இந்த ஆண்டு படித்துப் பார்க்க வேண்டும்.

கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய சுட்டிகள்:

  • விர்ஜினியா வூல்ஃப் விக்கி குறிப்பு
  • How Should One Read a Book? கட்டுரை

அச்சிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம்

ஜீகன்பால்க் (Ziegenbalg) என்ற டென்மார்க் பாதிரியார்தான் தமிழில் முதல் புத்தகத்தை அச்சிட்டவர் – 1715 வாக்கில் – என்று நினைத்துக் கொண்டிருந்தேன். (வேறென்ன புத்தகம், புதிய ஏற்பாடுதான்) ஆனால் ஹென்றிக் ஹென்றிகஸ் (Henrique Henriques) என்ற போர்ச்சுகீசிய பாதிரியார்தான் தம்பிரான் வணக்கம் என்ற புத்தகத்தை 1578-இலேயே வெளியிட்டாராம். 24 பக்கங்கள் உள்ள புத்தகமாம், ஒவ்வொரு பக்கத்திலும் 16 வரிகளாம். இன்றைய கேரளா மாநிலத்தில் இருக்கும் கொல்லத்தில் போர்ச்சுகீசிய அச்சு எந்திரங்களை வைத்து இது அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில புத்தகங்களையும் அச்ச்சடித்திருக்கிறார். ஹென்றிகஸ் ஆமென் என்று சொல்வதற்கு பதில் ஓம் என்று சொல்லும் பழக்கத்தை ஆரம்பித்தாராம்! அக்பர் டெல்லியிலும், நாயக்கர்கள் மதுரையிலும் தஞ்சையிலும் ஆட்சி செய்து வந்த காலம். ஹிந்துவில் சுவாரசியமான கட்டுரை ஒன்று கிடைக்கிறது.

மேலே உள்ள படத்தில் எனக்குப் புரிந்தது கடைசி மூன்று வரிகள் மட்டுமே – “பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்”

ஜீகன்பால்க் 1706-இல் தரங்கம்பாடிக்கு வந்திருக்கிறார். தமிழிலே புத்தகங்கள் அச்சடித்தால்தான் மத மாற்றத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நினைத்திருக்கிறார். உண்மையில் மத மாற்றத்தை விட தமிழ் கற்பதில்தான் அதிக நேரம் செலவிட்டாராம். அச்சு எந்திரம் ஒன்றை வரவழைத்து, தமிழுக்காக முதல் typeface உருவாக்கி, புதிய ஏற்பாட்டை அச்சடித்திருக்கிறார். மேல் விவரங்களுக்கு எஸ். முத்தையா எழுதிய இந்த கட்டுரையைப் பார்க்கலாம். (படத்தில் இருப்பதில் என்னால் சில எழுத்துக்களை மட்டுமே அடையாளம் காண முடிகிறது.)

தொகுக்கப்பட்ட பக்கம்: References

தொடர்புடைய சுட்டிகள்:
முதல் தமிழ் புத்தகம்
ஜீகன்பால்க் பற்றி எஸ். முத்தையா

நானும் புத்தகங்களும் – 14 வயது வரை

எனக்கு படிக்கும் ஆர்வத்தை ஊட்டியது என் அம்மா. விழுந்து விழுந்து படிக்கும் டைப். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. நாங்கள் 3 குழந்தைகள். முப்பதுகளில் பிறந்த என் அப்பா வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ள மாட்டார். (என் மனைவி: நீங்க என்ன உத்தமரா?) இதில் எங்கிருந்துதான் படிக்க நேரம் கிடைக்குமோ தெரியாது, ஆனால் வீட்டில் புத்தகங்கள் இரையும்.

என் அப்பாவும் படிப்பார்தான், ஆனால் என் அம்மா அளவுக்கு இல்லை. அவர் தலைமை ஆசிரியர், ஆட்சி செய்ய ஒரு பள்ளி இருந்தது. சாதாரணமாக நாங்கள் வசித்த கிராமங்களில் அவர்தான் மெத்தப் படித்தவர். அதனால் ஏதாவது ஊர் விவகாரங்கள், பெரிய மனிதர்கள் கூட்டம் என்று பொழுது போய்விடும். நெல்லுக்கு இறைத்த நீர் ஆங்கே புல்லுக்கும் பொசிவதைப் போல அப்பாவின் நண்பர்கள் கூட்டம் அம்மாவிடமும் கலந்து பேசும். ஆனால் புத்தகங்கள்தான் அம்மாவுக்கு escape valve.

எனக்கு ஏழு வயதிருக்கும்போது அம்மா என்னை கிராம நூலகத்துக்கு (லாடாகரணை எண்டத்தூர்) அழைத்துப்போய் உறுப்பினன் ஆக்கினாள். நான் படித்துக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிக்கு அடுத்த கட்டடம்தான் நூலகம். 11:25க்கு இண்டர்வல் விடுவார்கள். 11:30க்கு நூலகத்தை மூடுவார்கள். அந்த ஐந்து நிமிஷத்தைக் கூட விரயமாக்காமல் நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். எட்டு வயதுக்குள் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் முடித்துவிட்டேன். பிறகு புரிகிறதோ இல்லையோ பெரியவர்கள் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பொட்டலம் கட்டி வரும் காகிதங்களைக் கூட விடாமல் படிக்கும் அளவுக்கு ஒரு வெறி. தேள்கடிக்கு நூறு மருந்து மாதிரி புத்தகங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.

முதன்முதல் படித்த புத்தகத்தின் பேர் மறந்துவிட்டது. நிறைய படங்கள் இருந்தன. இருபது முப்பது பக்கம் இருந்தால் அதிகம். படங்கள் நினைவிருக்கின்றன, ஆனால் கதை எல்லாம் மறந்துவிட்டது. ஒரு பன்றிக் குடும்பத்துத் தாய் ஓநாயை சமாளிப்பாள் என்று ஏதோ வரும்.

நினைவில் இன்னும் இருக்கும் சிறுவர் புத்தகம் வாண்டு மாமா எழுதிய காட்டுச் சிறுவன் கந்தன்தான். காட்டில் ஒரு குகையில் வளரும் கந்தன் ராஜா பீடத்தில் உட்கார்ந்திருக்கும் தன் சித்தப்பாவுக்கோ யாருக்கோ பல முறை தண்ணி காட்டுவான். அவனுக்கு பல மிருகங்களும் உதவி செய்யும். அவன் குகையில் ஒரு பெரிய புதையலே இருக்கும்.

எனக்கு பிடித்த முதல் ஆசிரியரும் வாண்டு மாமாதான். கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போதுதான் வர ஆரம்பித்தது. அதை விடாமல் வாங்கி படிப்பேன். அதில் அவர் பல கதைகளை எழுதி இருந்தார். பலே பாலு என்ற காமிக் தொடர் பிடிக்கும். மந்திரக் கம்பளம் என்று ஒரு கதை நினைவிருக்கிறது. அப்புறம் கல்வி கோபாலகிருஷ்ணன் என்பவர் சில அறிவியல் விளக்கக் கதைகளை எழுதியது நினைவிருக்கிறது. ஒரு சின்னப் பையன் – ஒரு விஞ்ஞானியின் மகன் – ஏதோ மாத்திரையை சாப்பிட்டு எறும்பு சைசுக்கு சுருங்கிவிடுவான். அப்புறம் பூவண்ணன் எழுதிய காவேரியின் அன்பு, ஆலம்விழுது கதைகள் நினைவிருக்கிறது.

பெரியவர் புத்தகங்களில் நினைவிருப்பது “பாமினிப் பாவை”, “அறிவுக் கனலே அருட் புனலே”, “கயல்விழி“, பல சாண்டில்யன் புத்தகங்கள். முதலாவது விஜயநகரம் பற்றி கௌசிகன் (வாண்டு மாமாவேதான்) எழுதிய சரித்திர நாவல். இரண்டாவது விவேகானந்தர், ராமகிருஷ்ணர் பற்றி ரா. கணபதி எழுதியது. கயல்விழி அகிலன் எழுதிய மோசமான புத்தகங்களில் ஒன்று. (எல்லாமே மோசமான புத்தகங்கள்தான் என்பது என் துணிபு) சாண்டில்யன் புத்தகங்களை எப்படி அம்மாவும் அப்பாவும் படிக்கவிட்டார்கள் என்று தெரியவில்லை. அந்த வயதில் ஒன்றும் புரியப் போவதில்லை என்ற தைரியமாக இருந்திருக்கலாம். புரியத்தான் இல்லை. ஆனால் யவனராணி, கடல்புறா, மலைவாசல், மன்னன் மகள், கன்னி மாடம், ஜீவபூமி, ஹரிதாஸ் ஜாலா கதாநாயகனாக வரும் ஒரு கதை (பேர் நினைவு வந்துவிட்டது, நாகதீபம்), மஞ்சள் ஆறு போன்றவற்றை படித்தேன். எனக்கு சரித்திரம் அறிமுகமானது சாண்டில்யன் மூலமாகத்தான். குப்தர்கள், ஹூணர்கள் பற்றி மலைவாசல் மூலமும், ராஜஸ்தானம் பற்றி பல புத்தகங்கள் மூலமும், சோழர்கள் பற்றி கடல்புறா மூலமும் தெரிந்து கொண்டவை சில சமயம் சரித்திரப் பரீட்சைகளில் உதவி செய்தன.

பனிரண்டு வயதுக்குள் படித்த தரமான புத்தகங்கள் என்றால் இரண்டுதான். ஒன்று சாயாவனம். அப்போதும் புரிந்தது. ஒரு காரியத்தை திறமையாக செய்கிறார்கள் என்று தெரிந்தது. கடைசி பக்கத்தில் சொல்லப்பட்ட இழ்ப்பும் புரிந்தது. இன்னொன்று சில நேரங்களில் சில மனிதர்கள். ஆனால் வேறு ஜெயகாந்தன் புத்தகங்கள் எதுவும் பிடிபடவில்லை. அசோகமித்திரன் (கதையே இல்லையே என்று தோன்றியது), லா.ச.ரா. (கொஞ்சமும் புரியவில்லை) ஆகியோரை முயற்சி செய்து விட்டுவிட்டேன்.

வாரப் பத்திரிகைகளில் ரா.கி. ரங்கராஜன், மணியன் போன்றவர்கள் எழுதுவதை படித்திருக்கிறேன். ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை மிகவும் பிடித்திருந்த ஞாபகம் இருக்கிறது. தொடர்கதையாக வந்த கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா எல்லாம் நினைவிருக்கிறது. மணியன் போரடிப்பார், ஆனால் என் குடும்பப் பெரியவர்கள் நன்றாக எழுதுகிறார் என்று சொல்வார்கள், அதனால் குறை என்னிடம்தான் என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் படித்துப் பார்த்தேன். மேலும் முன்பு சொன்ன மாதிரி மளிகை சாமான் கட்டி வரும் காகிதத்தைக் கூட படிக்கும் வெறி இருந்த காலம். ஆனால் ஒரு கதை கூட பிடிக்கவில்லை. பயணக் கட்டுரைகளை (இதயம் பேசுகிறது) படிக்கும்போது இந்தாள் பெரிய சாப்பாட்டு ராமனாக இருப்பாரோ என்று நினைத்தேன்.

தமிழ்வாணனின் சங்கர்லால் புத்தகங்கள் என்னை அந்த வயதில் மிகவும் கவர்ந்தன. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.

அப்போதும் இப்போதும் இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ காமிக்ஸ் மீது தனி ஆர்வம் உண்டு.

அறிவியல் புத்தகங்கள் என்றால் பெ.நா. அப்புசாமி ஒருவர்தான். மேலை விஞ்ஞானிகள் பற்றி அவர் எழுதிய ஒரு புத்தகம் நன்றாக நினைவிருக்கிறது. நாசா பற்றி ஏ.என். சிவராமன் எழுதிய ஒரு புத்தகம் (விலை பத்து ரூபாய் – நாங்கள் அபூர்வமாகப் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம்) ஒன்றை விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகள் பற்றி ஒரு புத்தகத்தையும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

நான் மயங்கி விழுந்த முதல் புத்தகம் பொன்னியின் செல்வன்தான். இன்னும் மயக்கம் தீரவில்லை. யாரோ பைண்ட் செய்து வைத்த புத்தகத்தை பல முறை திருப்பி திருப்பி படித்திருக்கிறேன். பல நண்பர்களுடன் மணிக்கணக்கில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்று தீராத விவாதங்கள். இதை படமாக எடுத்தால் யார் யார் நடிக்கலாம் என்றும் மேலும் விவாதங்கள். (எழுபதுகளின் இறுதியில் எங்கள் சாய்ஸ்: சிவகுமார் வந்தியத்தேவனாக. சிவாஜி பெரிய பழுவேட்டரையராக. ரஜினிகாந்த் ஆதித்த கரிகாலனாக. முத்துராமன் கந்தமாறனாக. மேஜர் சுந்தர சோழனாக. விஜயகுமார் பார்த்திபேந்திரனாக. ஸ்ரீதேவி குந்தவையாக. சுஜாதா அல்லது கே.ஆர். விஜயா மந்தாகினியாக. மனோகர் சின்ன பழுவேட்டரையராக. நம்பியார் ரவிதாசனாக. சரத்பாபு சேந்தன் அமுதனாக. தேங்காய் ஆழ்வார்க்கடியானாக. லட்சுமி வானதியாக. அருள்மொழி, நந்தினி ரோல்களுக்கு யாருமே எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது.)

அப்போதுதான் சுஜாதா எங்களுக்கு சூப்பர்ஸ்டார் ஆனார். ஒரு கால கட்டத்தில் அவரை பித்து பிடித்தது போல் படித்தோம். அவருக்கு அடுத்த நிலையில் இருந்தது புஷ்பா தங்கதுரை (ரொம்ப கிளுகிளுப்பா இருந்ததுங்க). குறிப்பாக சிங் துப்பறியும் கதைகள் (லீனா மீனா ரீனா). அப்புறம் ராஜேந்திரகுமார். ரா. குமாரின் எல்லா கதைகளிலும் பைக் ஓட்டுபவனின் முதுகில் ஏதாவது அழுந்தும். அதற்காகவே படிப்போம். மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்திருந்தன. இவர்கள், மஹரிஷி (மறுபடியும் காஞ்சனா) எல்லாவற்றையும் படித்தோம். மாருதி, மணியன் செல்வன், மதன், கோபுலு எல்லாரையும் விட ஜெயராஜின் படங்கள் மீதுதான் தனி ஈர்ப்பு இருந்தது. காரணத்தை சொல்லவும் வேண்டுமா? தினமணி கதிரில் சுஜாதாவின் காயத்ரி தொடர்கதைக்காக புடவை இல்லாமல் ரவிக்கையோடு அக்காக்காரி உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்த்து மனம் கிளர்ந்தது நன்றாக நினைவிருக்கிறது.

பக்கத்து எதிர் வீட்டுப் பெண்களோடு கடலை போடுவதற்காக விதியே என்று சிவசங்கரி தொடர்கதைகளையும் படித்தேன். ரொம்பக் கடுப்படித்தவர் அவர்தான்.

ஒரு காலத்தில் பிடிக்கிறதோ இல்லையோ எல்லா வாரப் பத்திரிகைகளையும் படிப்பேன். பிடித்து படித்த ஒரே பத்திரிகை துக்ளக்.

14 வயதில் ஆங்கிலத்துக்கு பால் மாறிவிட்டேன். அது பற்றி எப்போதாவது எழுத வேண்டும்.

சீரியஸாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தது வேலைக்கு போன பிறகுதான். அது பற்றியும் பிறகு.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுய அறிமுகம்

2011 – திரும்பிப் பார்க்கிறேன்

வோர்ட்பிரஸ் இந்தத் தளத்தைப் பற்றி உருவாக்கிய 2011 ரிப்போர்ட்டைப் பார்த்தேன். போன வருஷம் எழுதியவற்றில் மிகப் பாப்புலரான பதிவு கல்கியின் வாரிசுகள் என்ற பதிவாம். அந்த சரித்திர நாவல்கள் சீரிஸ் பதிவுகளை எனக்கும் பிடிக்கும். மிச்ச டாப் பதிவுகள்:

ஜெயமோகன் தளத்திலிருந்தும், தமிழ்மணம் திரட்டியிலிருந்தும் நிறைய பேர் வந்து பார்த்திருக்கிறார்களாம். இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவிலும் வாசகர்கள் இருப்பது ஆச்சரியமில்லை, ஆனால் அர்ஜென்டினா, சிலி, அல்ஜீரியா, போலந்து ஆகிய நாடுகளிலிருந்தும் படிக்கிறார்கள் என்பது வியப்புதான். நிறைய மறுமொழிகள் எழுதிய ரமணன், ஸ்ரீனிவாஸ், ஜெயமோகன், சாரதா, சிமுலேஷன், மற்ற எல்லாருக்கும் நன்றி!

படித்ததில் எது நல்ல படைப்பு என்பதுதான் முக்கியம், 2011-இல் என்னத்தைப் படித்தேன் என்பதெல்லாம் எனக்கே மேட்டர் இல்லை. இருந்தாலும் போன வருஷம் என்னதான் எழுதி இருக்கிறோம் என்று ஒரு அவசரப் பார்வை பார்த்தேன். போன வருஷம் எழுதிய பதிவுகளில் எது நல்ல நாவல் பற்றியது, எது நல்ல சிறுகதை பற்றியது என்று கீழே. சிறுகதைகள் பேரைக் கிளிக்கினால் அந்த சிறுகதையைப் படிக்கலாம்.

சிறுகதைகள்
எழுத்தாளர் சிறுகதை(கள்) பதிவு
லா.ச.ரா. பாற்கடல் என் பதிவு
சுந்தர ராமசாமி விகாசம் என் பதிவு
கு.ப.ரா. கனகாம்பரம் என் பதிவு
சுஜாதா ஒரு லட்சம் புத்தகங்கள் என் பதிவு
ஜெயமோகன் அறம் என் பதிவு
ஜெயமோகன் சோற்றுக்கணக்கு, மத்துறுதயிர், வணங்கான், தாயார்பாதம், யானை டாக்டர், மயில்கழுத்து, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, மெல்லிய நூல், பெருவலி, கோட்டி, உலகம் யாவையும் அறம் சீரிஸ் சிறுகதைகள் – என் அலசல்
நாஞ்சில்நாடன் வனம் என் பதிவு
Jack London A Piece of Steak என் பதிவு
ஆலந்தூர் மள்ளன் சுமைதாங்கி என் பதிவு
ஆர்வி (நானேதான்) கிருஷ்ணனைப் பிடிக்காதவன்
ஜெயமோகன் மாடன் மோட்சம் என் பதிவு
பிரகாஷ் சங்கரன் ஞானலோலன், அன்னை, அன்னதாதா என் பதிவு
விவேக் ஷன்பாக் சுதீரின் அம்மா என் பதிவு
சந்திரா அறைக்குள் புகுந்த தனிமை என் பதிவு

நாவல், நாடகம், அபுனைவு இத்யாதி

நாவல்கள்:

  1. சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”
  2. லா.ச.ரா.வின் “அபிதா”
  3. சுஜாதாவின் “நைலான் கயிறு”
  4. அசோகமித்ரனின் “பதினெட்டாவது அட்சக்கோடு”
  5. பாலகுமாரனின் “காதல் வெண்ணிலா”
  6. ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”
  7. கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்”
  8. ஜோ டி க்ரூஸின் “ஆழிசூழ் உலகு”
  9. பாலகுமாரனின் “அகல்யா”
  10. சம்பத்தின் “இடைவெளி”
  11. ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”
  12. இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”

 
சரித்திர நாவல்கள்:
பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”
பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

நாடகங்கள்:
மெரினாவின் “மாப்பிள்ளை முறுக்கு”
சோ ராமசாமியின் “சாத்திரம் சொன்னதில்லை”
சுஜாதாவின் “டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு”

ஆங்கிலப் புத்தகங்கள்:
John Carlin’s “Playing the Enemy”
Jane Austen’s “Pride and Prejudice”
Stuart Neville’s “Ghosts of Belfast”
Frederick Forsyth’s “Dogs of War”

சிறுவர் புத்தகங்கள்:
Roald Dahl’s “BFG”, “Enormous Crocodile”, “Matilda”, “Fantastic Mr. Fox”
Rudyard Kipling’s “Junglebook”
Calvin and Hobbes
R.L. Stevenson’s “Treasure Island”

அபுனைவுகள்:
சுந்தர ராமசாமியின் நினைவோடை சீரிஸ் – “ஜீவா”
யதுகிரி அம்மாளின் “பாரதி நினைவுகள்”
அ.கா. பெருமாளின் “சுண்ணாம்பு கேட்ட இசக்கி”

ஓபன் ரீடிங் ரூம்

இன்னும் ஒரு புத்தகத் தளம். ஓபன் ரீடிங் ரூம் என்ற இந்தத் தளத்தில் காப்பிரைட் முடிந்த, அல்லது நாட்டுடமை ஆன புத்தகங்கள் சேகரிக்கப்படுகின்றன. ரமேஷ் என்பவர் முயற்சி எடுத்துச் செய்கிறார். ரமேஷுக்கு வாழ்த்துக்கள்!

ஓபன் ரீடிங் ரூம், தமிழ் தொகுப்புகள், அழியாச்சுடர்கள் என்று இந்த மாதிரி முயற்சிகள் பெருகிக் கொண்டே போவது நல்ல விஷயம். இப்போது இவற்றை ஒருங்கிணைத்த ஒரு அட்டவணைதான் வேண்டி இருக்கிறது…

தொடர்புடைய சுட்டிகள்:
ஓபன் ரீடிங் ரூம் தளம்
தமிழ் தொகுப்புகள் தளம்
அழியாச்சுடர்கள் தளம்

2012 புத்தாண்டு திட்டங்கள் – RV

புது வருஷம் என்றால் திட்டங்கள் போடுவதும் இரண்டு நாள் போனதும் அவற்றை மறந்துவிடுவதும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து நடந்து வரும் பழக்கம். போன வருஷம் போட்ட திட்டங்கள் சிரிக்கத்தான் பயன்படுகின்றன. வழக்கம் போல கொஞ்சம்தான் நடந்தது. இந்த வருஷம் திட்டம் போட வேண்டிய வேலை மிச்சம்.

2012 -இல் எனக்கு முக்கியமாகத் தோன்றுபவை.

  1. கையில் கிடைத்ததைப் படிப்பதை எல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். பதிவுகளின் quantity முக்கியம் இல்லை, quality-தான் முக்கியம். இந்தத் தளத்தைப் பார்ப்பவர்களுக்கும் அது கொஞ்சம் relief ஆக இருக்கும். 🙂
  2. முடிந்த வரை சீரிசாக எழுத வேண்டும். எழுதும் பதிவுகளுக்கு ஒரு தீம் இருக்க வேண்டும். அது என்ன என்று முடிவு செய்யவில்லை. ஜெயமோகன் சிபாரிசு செய்யும் நாவல்கள், எஸ்.ரா. சிபாரிசு செய்யும் நாவல்கள், மகாபாரதப் படைப்புகள், இல்லை நானே படித்த, படிக்க விரும்பும் புத்தகங்களை ஒரு லிஸ்ட் போட்டு அவற்றைப் பற்றி ஒரு சீரிசாக போட்டால் நன்றாக இருக்கும்.
  3. சிலிகான் ஷெல்ஃப் குழுமம் இங்கே ஓரளவு டெவலப் ஆகி இருக்கிறது. ஆனால் இந்தத் தளத்தில் எழுதுவது அனேகமாக நான் மட்டுமே. சக பொறுப்பாளனான பக்ஸ் கூட ஜகா வாங்கிவிட்டான். மற்ற குழும உறுப்பினர்களை எழுத வைக்க வேண்டும். ((அருணகிரி, திருமலைராஜன் ஆகியோர் பல இணைய தளங்களில் அவ்வப்போது எழுதுகிறார்கள். மயிலேறி ஒரு ப்ளாக் நடத்துகிறார்.)
  4. எழுதுவதை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

2011 திட்டங்கள், மற்றும் படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள் என்று இரண்டு லிஸ்ட் போட்டிருந்தேன். மொத்தமாக 22 புத்தகங்களை சொல்லி இருந்தேன். அதில் படித்தது ஐந்துதான். (ஆழிசூழ் உலகு, வீரபாண்டியன் மனைவி, சுண்ணாம்பு கேட்ட இசக்கி, வீரபாண்டியன் மனைவி, வாசவேஸ்வரம், புளியமரத்தின் கதை (மறு வாசிப்பு). உண்மையில் மிச்சப் பதினேழு மற்றும் விஷ்ணுபுரம், Six Acres and a Third, சாஹேப் பீபி குலாம் புத்தகங்களை மட்டும் இந்த வருஷம் படித்தால் அதுவே போதும். பழக்க தோஷம் விடாது, அதனால் ஜனவரியில் பழைய பாணியில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற பாணி தொடரும். அதற்கப்புறம் தெரியாது.

இந்த வருஷம் படிக்க வேண்டிய புத்தகங்கள்:

  1. வார் அண்ட் பீஸ் (War and Peace)
  2. க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் (Crime and Punishment)
  3. ஐவோ ஆண்ட்ரிச் எழுதிய ப்ரிட்ஜ் ஆன் தி ட்ரினா (Bridge on the Drina)
  4. கோபோ அபே எழுதிய உமன் இன் த ட்யூன்ஸ் (Woman in the Dunes)
  5. பிபூதிபூஷன் பட்டாசார்யா எழுதிய பதேர் பாஞ்சாலி (Pather Panchali)
  6. கொற்றவை
  7. கடலுக்கு அப்பால் + புயலிலே ஒரு தோணி
  8. ஜே ஜே சில குறிப்புகள் (மறு வாசிப்பு)
  9. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  10. பாலகுமாரனின் உடையார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  11. நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  12. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  13. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  14. பாலகிருஷ்ண நாயுடுவின் டணாய்க்கன் கோட்டை (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  15. பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  16. கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  17. தேவனின் சி.ஐ.டி. சந்துரு (கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  18. விஷ்ணுபுரம் (மறுவாசிப்பு)
  19. ஃபகீர் மோகன் சேனாபதி எழுதிய Six Acres and a Third (ஒரிய மொழிப் புத்தகம் – கையில் இல்லை, கிடைத்தால்தான் படிக்க முடியும்)
  20. பிமல் மித்ரா எழுதிய சாஹேப் பீபி குலாம்
  21. ஜெயமோகனின் இன்றைய காந்தி (முதல் முறை போட்ட லிஸ்டில் விட்டுப்போய்விட்டது, இதுவும் கைவசம் இல்லை)

தொடர்புள்ள சுட்டிகள்:
2011 திட்டங்கள்
படிக்க விரும்பும் டாப் டென் தமிழ் புத்தகங்கள்
நண்பர் நட்பாசின் வாழ்த்து

நூலகம் தளம் – இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

நூலகம் என்ற தளத்தை சமீபத்தில் பார்த்தேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி எழுதிய Dance of Siva போன்ற ஆங்கிலப் புத்தகங்களும் pdf வடிவில் கிடைக்கின்றன. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பொதுவாக தமிழகத்து தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. நான் ஓரளவாவது படித்திருப்பது அ. முத்துலிங்கத்தை மட்டுமே. படிப்பதை விடுங்கள், எனக்கு தெரிந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் – அ. முத்துலிங்கம், மு. தளையசிங்கம், டொமினிக் ஜீவா, ஷோபா சக்தி, தேவகாந்தன். (தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் ஓரளவு எழுதி இருக்கிறார். சிறு வயதில் குமுதத்தில் டொமினிக் ஜீவாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஷோபா சக்தி எழுதிய கொரில்லா புத்தகம் சமீபத்தில் நிறைய பேசப்பட்டது. தேவகாந்தன் கதாகாலம் என்ற மகாபாரதப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறாராம்.) சராசரிக்கு சற்று மேம்பட்ட வாசகனான, படிப்பில் மோகம் மற்றும் தேடல் உள்ள என் கதியே இதுதான்.

இந்தத் தளத்தை வைத்துக் கொண்டாவது இலங்கைப் படைப்புலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

பிற்சேர்க்கை: ராஜ்சந்திராவும் சித்திரவீதிக்காரனும் சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களைக் கவர்ந்த, உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் புத்தகங்களை மறக்காமல் குறிப்பிடுங்கள்!

தொடர்புடைய சுட்டி: நூலகம் தளம்

எனக்கு எது இலக்கியம்?

தரையில் இறங்கும் விமானங்கள் எனக்கு இலக்கியமே என்று சொன்னதைக் கண்டு ரமணன், ராஜ்சந்திரா, எஸ்செக்ஸ் சிவா வியப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் ரியாக்ஷன் எனக்கு எது இலக்கியமாகத் தெரிகிறது என்று என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.

எனக்கு வணிக எழுத்து, சீரிய எழுத்து போன்ற பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லை. வசதிக்காக சில சமயம் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன், அவ்வளவுதான். இலக்கியம், இலக்கியம் இல்லை என்ற பாகுபாடுதான் எனக்கு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. எழுதியது விற்கிறதா இல்லையா என்பதை வைத்து அதன் தரத்தை நிர்ணயிப்பதில் எனக்கு சம்மதமில்லை. ஜெயகாந்தனும் அசோகமித்ரனும் விகடனில், குமுதத்தில் எழுதியது இலக்கியமே. சாண்டில்யன் கணையாழியில் எழுதி இருந்தாலும் அது எனக்கு இலக்கியம் ஆகாது. ராஜேஷ்குமார் டைப் எழுத்துகளை சுலபமாக அடையாளம் காட்டும் ஒரு பேர்தான் எனக்கு வணிக எழுத்து.

யோசிக்க வைக்கும் படைப்புகள்; சித்தாந்தங்கள்+பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை அசைக்கும் படைப்புகள்; உண்மையான மனிதர்கள், உணர்ச்சிகள், சூழல்களின் சித்தரிப்பு; மனிதர்களின் உயர்வுகளை, தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுவது; அபூர்வமாக, ஒரு அருமையான framework, அதை விவரிக்கும் படைப்புகள்; மனிதர்களின் பண்பாட்டை, அனுபவங்களை சில வரிகளில் காட்டும் கவிதைகள் இவை எல்லாம் எனக்கு இலக்கியமாகத் தெரிகின்றன. இவை எல்லாம் எனக்கு மன எழுச்சியைத் தருகின்றன, இல்லாவிட்டால் யோசிக்க வைக்கின்றன, இல்லாவிட்டால் நுணுக்கங்கள், நுட்பங்கள் நிறைந்த படைப்பாக இருக்கின்றன. மன எழுச்சியைத் தருபவற்றை நான் அனேகமாக மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறேன். என்னை யோசிக்க (மட்டும்) வைக்கும் படைப்புகளுக்கு அனேகமாக இரண்டாம் வரிசை. என் இதயம், புத்தி இரண்டையும் தொடாமல் என் ரசனை, அழகுணர்ச்சி வரை மட்டுமே வரும் படைப்புகளுக்கு அனேகமாக மூன்றாவது இடம் அளிக்கிறேன். இந்த மூன்றாவது வரிசையில் உட்காரும் படைப்புகளில் அனேகமாக நுட்பம், நுணுக்கம், framework என்று ஏதாவது ஒன்று இருக்கும். இன்னொரு விதமாகச் சொன்னால் நுட்பம், நுணுக்கம் இத்யாதியை நான் craft என்ற அளவில் மதிக்கிறேன். மன எழுச்சியைத் தூண்டுபவை எனக்கு art.

சுருக்கமாகச் சொன்னால் நான் இலக்கியம் என்று கருதும் எல்லாப் படைப்புகளுமே என் அழகுணர்ச்சி, ரசனை போன்றவற்றுக்கு அப்பீல் ஆக வேண்டும். அதோடு நின்றுவிடாமல் என் புத்தி வரைக்கும் போய் மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைக்கும் படைப்புகள், எனக்கு மன எழுச்சியைத் தரும் படைப்புகளுக்கு இன்னும் உயர்ந்த இடம் தருகிறேன்.

அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் இருக்கக்கூடிய அருமையான உறவைக் காட்டும் To Kill A Mockingbird எனக்கு உயர்ந்த இலக்கியம். ஒவ்வொரு முறை படிக்கும்போது நான் மன எழுச்சி அடைகிறேன். இது எனக்குப் பெண்கள் பிறப்பதற்கு பல வருஷங்கள் முன்னாலேயே ஆரம்பித்த விஷயம். ஒரு காலத்தில் என் உறவினர்கள், நண்பிகள், நண்பர்களின் மனைவிகள் எல்லாரும் கர்ப்பம் ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பேன். என் தங்கைகள் உட்பட யாரும் படித்ததில்லை. 🙂 ஆனால் அது ஆய்வாளர்களின் லிஸ்டில் அநேகமாகத் தென்படுவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் அதை சீந்தக் கூட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அப்படி சீந்தாவிட்டால் அது ஜெயமோகனின் குறைபாடு என்றும் நினைக்கிறேன்.) Mockingbird மட்டுமல்ல, போரின் தேவையற்ற தன்மையை விவரிக்கும் All Quite on the Western Front, இரண்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத விஷ்ணுபுரம், அமைப்புகளின் குரூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பின் தொடரும் நிழலின் குரல், புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள், புரியும்போதெல்லாம் டங்கென்று மண்டையில் அடிக்கும் அசோகமித்ரனின் பல படைப்புகள், அறம் சீரிஸ் சிறுகதைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை என் ரசனை வழியாக என்னைத் தாக்குகின்றன என்றே சொல்லலாம். இந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது எனக்கு பல முறை லிட்டரலாக ஜிவ்வென்று மண்டையில் ஏறும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பல முறை அப்படியே உட்கார்ந்து படித்ததை அசை போடத் தோன்றும். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற வரியைப் படித்த கணத்தில் பல காலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த கற்பு, ஆண்-பெண் உறவு கருத்தாக்கங்கள் சுக்குநூறாக உடைந்தன, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். எனக்கு மன எழுச்சியும் தந்து சிந்தனையையும் தூண்டிய படைப்பு இது. இது போன்ற படைப்புகளைத்தான் முதல் இடத்தில் வைக்கிறேன்.

யோசிக்க மட்டும் வைக்கும் படைப்புகள் என்பது பல முறை SF-இல் எனக்கு நேர்கிறது. உர்சுலா லே க்வின் எழுதிய ஒரு கதையில் மனிதர்களுக்கும் ஒரு சீசனில் மட்டும்தான் செக்ஸ் உணர்வுகள் வரும், அப்போது அவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இஷ்டம் போல மாறிக் கொள்ளலாம். அவர் எழுதியது கொஞ்சம்தான், ஆனால் எனக்கு அம்மா, அப்பா, குடும்பம், இதெல்லாம் இந்த செட்டப்பில் எப்படி இருக்கும் என்று நிறைய யோசனை வந்தது. பைரப்பாவின் பர்வா, தாண்டு, அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்று SF தவிர்த்தும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பர்வா, தாண்டு, அசோகமித்திரன் படைப்புகள் எனக்கு மன எழுச்சியையும் தருகின்றன என்பதால் அவை முதல் வரிசைக்குப் போய்விடுகின்றன.

ரசனைக்கு மட்டும் அப்பீல் ஆகும் கதைகள் என்று ஷெர்லாக் ஹோம்ஸ் (சுவாரசியம்), பொன்னியின் செல்வன் (கதைப்பின்னல் என்ற தொழில்நுட்பம்), வாசவேஸ்வரம் (உண்மையான சித்தரிப்பு), நிர்வாண நகரம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவை Strand பத்திரிகையில், கல்கியில், சாவியில் வந்தவை என்பதால் மட்டுமே வணிக எழுத்து ஆகிவிடாது. இவற்றில் பலவற்றை நான் minor classic என்று வகைப்படுத்துவேன். அவற்றின் சாதனை ஒரு புதுமைப்பித்தனை விட குறைவு, அவ்வளவுதான். ஐம்பது செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் அளவுக்கு குண்டப்பா விஸ்வநாத் சாதிக்கவில்லை என்பதால் அவர் மோசமான பாட்ஸ்மன் ஆகிவிடுவாரா என்ன?

த.இ. விமானங்கள் எனக்கு மூன்றாவது வகை இலக்கியம். Minor classic. உண்மையான மனிதர்கள், சித்தரிப்பு, மனதைத் தொடும் சில சீன்கள் இருக்கின்றன. கதைக்கு யூனிவர்சல் அப்பீல் இருக்கிறது. இந்தக் கதை போலந்தில் ஒரு யூதக் குடும்பத்தில், என் பக்கத்து வீட்டில் ஒரு மெக்சிகன் குடும்பத்தில், தாய்லாந்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் நிகழலாம், நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அது விகடனில் வந்தது, இந்துமதி எழுதியது போன்ற சாரமற்ற காரணங்களுக்காக என்னால் நிராகரிக்க முடியாது.

நேரடியாகச் சொல்லப்படும் கதைதானே, அது எப்படி இலக்கியம் ஆகும் என்று சிலர் யோசிக்கலாம். ஜெயமோகன் போன்ற நான் மிகவும் மதிக்கும் விமர்சகர்கள் சில சமயம் நேரடியாகச் சொல்லப்படுவதை ஒரு குறையாகச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. நேரடியாகக் கதை சொல்லுவது, subtle ஆக சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் ஒரு லிடரரி டெக்னிக். ஒரு டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாகாது.

மன எழுச்சி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடத்தான் செய்யும். அது subjective விஷயம். எனக்கு மன எழுச்சி தரும் படைப்பு உங்களுக்கு வெட்டியாகத் தெரியலாம். அதனால் இலக்கியமா இல்லையா என்று எப்படி பொதுவாக நிர்ணயிப்பது என்ற கேள்வி எழலாம். அது அர்த்தம் இல்லாத கேள்வி. ரசனைதானே தரம் பிரிப்பதன் அடிப்படை? இரட்டைப் பிறவிகளுக்கு கூட ரசனை நூறு சதவிகிதம் ஒத்துப் போகாது! காலப்போக்கில் தானாக அவ்வளவு தரம் இல்லாத, ஆனால் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நூல்கள் மறக்கப்படுகின்றன. அந்த ஜனநாயக முறையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

உணர்ச்சிகளைத் தூண்டும் படைப்புகள் எல்லாம் மன எழுச்சி தரும் படைப்புகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். என்னால் சிம்பிள் கதையான லவ் ஸ்டோரி-யின் கடைசி பக்கங்களை கண்ணில் நீர் வராமல் படிக்க முடிந்ததே இல்லை. அப்பா-பிள்ளை சீன் வந்துவிட்டால் ஒரு வேளை நான் உணர்ச்சிவசப்படுகிறேனோ என்னவோ. அதை நான் மன எழுச்சி லிஸ்டில் சேர்ப்பதில்லை. மூன்றாவது பட்டியலில்தான் சேர்ப்பேன்.

எது இலக்கியம் என்று என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எது நூறு ஆண்டுகளுக்கு மேல் நிற்கும், எது காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும் என்று கண்டுபிடிக்க ஃபார்முலா உண்டா என்று தேடி இருக்கிறேன். இதைப் பற்றிய எனது எண்ணங்கள் எதுவும் இறுதியானவை இல்லை. ஆனால் இந்தப் பதிவில் காலம் தாண்டி நிற்கும் இலக்கியம் என்பதை எல்லாம் அடையாளம் காண நான் முயற்சிக்கவில்லை. இன்று நான் எதை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக்க மட்டும்தான் முயற்சி செய்திருக்கிறேன்.

இதைப் பற்றி எல்லாம் எழுதுவதின் ஒரே பயன் கருத்துப் பரிமாற்றம்தான். என் வரையறை உங்களுக்கு சரிப்படாமல் போகலாம். மன எழுச்சியாவது மயிராவது என்று நீங்கள் நினைக்கலாம். மேலே பேசுவோமே! இலக்கியத்துக்கு உங்கள் வரையறை என்ன? மறுமொழியிலோ இல்லை உங்கள் ப்ளாகிலோ எழுதி சுட்டி கொடுங்கள்!

அனுபந்தம்

சிரில் அலெக்சின் வரையறை:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

எது காலத்தை வெல்லும் இலக்கியம் பதிவுக்கு எழுதிய மறுமொழியில் ஜெயமோகன் சொன்னது:

நூறாண்டு தாங்கும் படைப்பு எது? இதுவரை தாங்கிய படைப்புகளை வைத்து இப்படிச் சொல்லலாம்.

  1. தொன்மமாக மாறும் படிமத் தன்மை கொண்டது
  2. கலாச்சாரம் சம்பந்தமான பேச்சுகளில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது
  3. எளிதில் வாயால் சொல்லத்தக்கது
  4. நடை, உத்தி போன்றவற்றை நம்பாமல் பண்பாட்டின் சாராம்சமான ஒன்றை வரையறுத்து கூறும் கருவாலேயே நிலைநிற்கும் படைப்பு

தொடர்புள்ள சுட்டிகள்:
ஏன் படிக்கிறேன்?
எது நல்ல இலக்கியம்?சிரில் அலெக்ஸ்
எது காலத்தை வெல்லும் இலக்கியம்?

தமிழ் தொகுப்புகள் தளம்

தமிழ் புனைவுகளைத் தொகுக்கும் இன்னொரு சிறப்பான தளம். கட்டாயம் உங்கள் லிஸ்டில் இருக்க வேண்டும்.

தொகுப்பாளர் சிங்கமணியின் வார்த்தைகளில்:

ஏராளமான தளங்கள் தமிழில் உள்ளன. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்க முடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன்.

அவருக்கு என் வாழ்த்துக்கள்!

எது நல்ல இலக்கியம்? – சிரில் அலெக்சின் விளக்கம்

நண்பர் சிரில் அலெக்ஸ் ஆழிசூழ் உலகு புத்தகத்தைப் பற்றி ஓர் அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார். அதில் நல்ல இலக்கியத்திலிருந்து என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை தெள்ளத்தெளிவாக articulate செய்திருக்கிறார். அவர் வார்த்தைகளில்:

நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.

நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.

என் பதிவில் நான் பார்க்கத் தவறிய பல விஷயங்களை சொல்லி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

தொடர்புள்ள சுட்டி: ஆழிசூழ் உலகு – என் விமர்சனம்