தரையில் இறங்கும் விமானங்கள் எனக்கு இலக்கியமே என்று சொன்னதைக் கண்டு ரமணன், ராஜ்சந்திரா, எஸ்செக்ஸ் சிவா வியப்பைத் தெரிவித்தார்கள். அவர்கள் ரியாக்ஷன் எனக்கு எது இலக்கியமாகத் தெரிகிறது என்று என்னை மீண்டும் சிந்திக்க வைத்தது.
எனக்கு வணிக எழுத்து, சீரிய எழுத்து போன்ற பாகுபாடுகளில் நம்பிக்கை இல்லை. வசதிக்காக சில சமயம் அப்படிப் பிரித்துக் கொள்கிறேன், அவ்வளவுதான். இலக்கியம், இலக்கியம் இல்லை என்ற பாகுபாடுதான் எனக்கு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. எழுதியது விற்கிறதா இல்லையா என்பதை வைத்து அதன் தரத்தை நிர்ணயிப்பதில் எனக்கு சம்மதமில்லை. ஜெயகாந்தனும் அசோகமித்ரனும் விகடனில், குமுதத்தில் எழுதியது இலக்கியமே. சாண்டில்யன் கணையாழியில் எழுதி இருந்தாலும் அது எனக்கு இலக்கியம் ஆகாது. ராஜேஷ்குமார் டைப் எழுத்துகளை சுலபமாக அடையாளம் காட்டும் ஒரு பேர்தான் எனக்கு வணிக எழுத்து.
யோசிக்க வைக்கும் படைப்புகள்; சித்தாந்தங்கள்+பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளை அசைக்கும் படைப்புகள்; உண்மையான மனிதர்கள், உணர்ச்சிகள், சூழல்களின் சித்தரிப்பு; மனிதர்களின் உயர்வுகளை, தாழ்வுகளை தோலுரித்துக் காட்டுவது; அபூர்வமாக, ஒரு அருமையான framework, அதை விவரிக்கும் படைப்புகள்; மனிதர்களின் பண்பாட்டை, அனுபவங்களை சில வரிகளில் காட்டும் கவிதைகள் இவை எல்லாம் எனக்கு இலக்கியமாகத் தெரிகின்றன. இவை எல்லாம் எனக்கு மன எழுச்சியைத் தருகின்றன, இல்லாவிட்டால் யோசிக்க வைக்கின்றன, இல்லாவிட்டால் நுணுக்கங்கள், நுட்பங்கள் நிறைந்த படைப்பாக இருக்கின்றன. மன எழுச்சியைத் தருபவற்றை நான் அனேகமாக மிக உயர்ந்த இடத்தில் வைக்கிறேன். என்னை யோசிக்க (மட்டும்) வைக்கும் படைப்புகளுக்கு அனேகமாக இரண்டாம் வரிசை. என் இதயம், புத்தி இரண்டையும் தொடாமல் என் ரசனை, அழகுணர்ச்சி வரை மட்டுமே வரும் படைப்புகளுக்கு அனேகமாக மூன்றாவது இடம் அளிக்கிறேன். இந்த மூன்றாவது வரிசையில் உட்காரும் படைப்புகளில் அனேகமாக நுட்பம், நுணுக்கம், framework என்று ஏதாவது ஒன்று இருக்கும். இன்னொரு விதமாகச் சொன்னால் நுட்பம், நுணுக்கம் இத்யாதியை நான் craft என்ற அளவில் மதிக்கிறேன். மன எழுச்சியைத் தூண்டுபவை எனக்கு art.
சுருக்கமாகச் சொன்னால் நான் இலக்கியம் என்று கருதும் எல்லாப் படைப்புகளுமே என் அழகுணர்ச்சி, ரசனை போன்றவற்றுக்கு அப்பீல் ஆக வேண்டும். அதோடு நின்றுவிடாமல் என் புத்தி வரைக்கும் போய் மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைக்கும் படைப்புகள், எனக்கு மன எழுச்சியைத் தரும் படைப்புகளுக்கு இன்னும் உயர்ந்த இடம் தருகிறேன்.
அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் இருக்கக்கூடிய அருமையான உறவைக் காட்டும் To Kill A Mockingbird எனக்கு உயர்ந்த இலக்கியம். ஒவ்வொரு முறை படிக்கும்போது நான் மன எழுச்சி அடைகிறேன். இது எனக்குப் பெண்கள் பிறப்பதற்கு பல வருஷங்கள் முன்னாலேயே ஆரம்பித்த விஷயம். ஒரு காலத்தில் என் உறவினர்கள், நண்பிகள், நண்பர்களின் மனைவிகள் எல்லாரும் கர்ப்பம் ஆனால் கிடைத்தது சான்ஸ் என்று இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுப்பேன். என் தங்கைகள் உட்பட யாரும் படித்ததில்லை. 🙂 ஆனால் அது ஆய்வாளர்களின் லிஸ்டில் அநேகமாகத் தென்படுவதில்லை. ஜெயமோகன் போன்றவர்கள் அதை சீந்தக் கூட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அப்படி சீந்தாவிட்டால் அது ஜெயமோகனின் குறைபாடு என்றும் நினைக்கிறேன்.) Mockingbird மட்டுமல்ல, போரின் தேவையற்ற தன்மையை விவரிக்கும் All Quite on the Western Front, இரண்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத விஷ்ணுபுரம், அமைப்புகளின் குரூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் பின் தொடரும் நிழலின் குரல், புதுமைப்பித்தனின் பல சிறுகதைகள், புரியும்போதெல்லாம் டங்கென்று மண்டையில் அடிக்கும் அசோகமித்ரனின் பல படைப்புகள், அறம் சீரிஸ் சிறுகதைகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை என் ரசனை வழியாக என்னைத் தாக்குகின்றன என்றே சொல்லலாம். இந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது எனக்கு பல முறை லிட்டரலாக ஜிவ்வென்று மண்டையில் ஏறும். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு பல முறை அப்படியே உட்கார்ந்து படித்ததை அசை போடத் தோன்றும். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற வரியைப் படித்த கணத்தில் பல காலமாக சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த கற்பு, ஆண்-பெண் உறவு கருத்தாக்கங்கள் சுக்குநூறாக உடைந்தன, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். எனக்கு மன எழுச்சியும் தந்து சிந்தனையையும் தூண்டிய படைப்பு இது. இது போன்ற படைப்புகளைத்தான் முதல் இடத்தில் வைக்கிறேன்.
யோசிக்க மட்டும் வைக்கும் படைப்புகள் என்பது பல முறை SF-இல் எனக்கு நேர்கிறது. உர்சுலா லே க்வின் எழுதிய ஒரு கதையில் மனிதர்களுக்கும் ஒரு சீசனில் மட்டும்தான் செக்ஸ் உணர்வுகள் வரும், அப்போது அவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இஷ்டம் போல மாறிக் கொள்ளலாம். அவர் எழுதியது கொஞ்சம்தான், ஆனால் எனக்கு அம்மா, அப்பா, குடும்பம், இதெல்லாம் இந்த செட்டப்பில் எப்படி இருக்கும் என்று நிறைய யோசனை வந்தது. பைரப்பாவின் பர்வா, தாண்டு, அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்று SF தவிர்த்தும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. பர்வா, தாண்டு, அசோகமித்திரன் படைப்புகள் எனக்கு மன எழுச்சியையும் தருகின்றன என்பதால் அவை முதல் வரிசைக்குப் போய்விடுகின்றன.
ரசனைக்கு மட்டும் அப்பீல் ஆகும் கதைகள் என்று ஷெர்லாக் ஹோம்ஸ் (சுவாரசியம்), பொன்னியின் செல்வன் (கதைப்பின்னல் என்ற தொழில்நுட்பம்), வாசவேஸ்வரம் (உண்மையான சித்தரிப்பு), நிர்வாண நகரம் என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. இவை Strand பத்திரிகையில், கல்கியில், சாவியில் வந்தவை என்பதால் மட்டுமே வணிக எழுத்து ஆகிவிடாது. இவற்றில் பலவற்றை நான் minor classic என்று வகைப்படுத்துவேன். அவற்றின் சாதனை ஒரு புதுமைப்பித்தனை விட குறைவு, அவ்வளவுதான். ஐம்பது செஞ்சுரி அடித்த டெண்டுல்கர் அளவுக்கு குண்டப்பா விஸ்வநாத் சாதிக்கவில்லை என்பதால் அவர் மோசமான பாட்ஸ்மன் ஆகிவிடுவாரா என்ன?
த.இ. விமானங்கள் எனக்கு மூன்றாவது வகை இலக்கியம். Minor classic. உண்மையான மனிதர்கள், சித்தரிப்பு, மனதைத் தொடும் சில சீன்கள் இருக்கின்றன. கதைக்கு யூனிவர்சல் அப்பீல் இருக்கிறது. இந்தக் கதை போலந்தில் ஒரு யூதக் குடும்பத்தில், என் பக்கத்து வீட்டில் ஒரு மெக்சிகன் குடும்பத்தில், தாய்லாந்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் நிகழலாம், நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அது விகடனில் வந்தது, இந்துமதி எழுதியது போன்ற சாரமற்ற காரணங்களுக்காக என்னால் நிராகரிக்க முடியாது.
நேரடியாகச் சொல்லப்படும் கதைதானே, அது எப்படி இலக்கியம் ஆகும் என்று சிலர் யோசிக்கலாம். ஜெயமோகன் போன்ற நான் மிகவும் மதிக்கும் விமர்சகர்கள் சில சமயம் நேரடியாகச் சொல்லப்படுவதை ஒரு குறையாகச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். எனக்கு இதில் கொஞ்சமும் சம்மதமில்லை. நேரடியாகக் கதை சொல்லுவது, subtle ஆக சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் ஒரு லிடரரி டெக்னிக். ஒரு டெக்னிக் பயன்படுத்தப்படவில்லை என்பது குறையாகாது.
மன எழுச்சி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடத்தான் செய்யும். அது subjective விஷயம். எனக்கு மன எழுச்சி தரும் படைப்பு உங்களுக்கு வெட்டியாகத் தெரியலாம். அதனால் இலக்கியமா இல்லையா என்று எப்படி பொதுவாக நிர்ணயிப்பது என்ற கேள்வி எழலாம். அது அர்த்தம் இல்லாத கேள்வி. ரசனைதானே தரம் பிரிப்பதன் அடிப்படை? இரட்டைப் பிறவிகளுக்கு கூட ரசனை நூறு சதவிகிதம் ஒத்துப் போகாது! காலப்போக்கில் தானாக அவ்வளவு தரம் இல்லாத, ஆனால் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நூல்கள் மறக்கப்படுகின்றன. அந்த ஜனநாயக முறையை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
உணர்ச்சிகளைத் தூண்டும் படைப்புகள் எல்லாம் மன எழுச்சி தரும் படைப்புகள் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். என்னால் சிம்பிள் கதையான லவ் ஸ்டோரி-யின் கடைசி பக்கங்களை கண்ணில் நீர் வராமல் படிக்க முடிந்ததே இல்லை. அப்பா-பிள்ளை சீன் வந்துவிட்டால் ஒரு வேளை நான் உணர்ச்சிவசப்படுகிறேனோ என்னவோ. அதை நான் மன எழுச்சி லிஸ்டில் சேர்ப்பதில்லை. மூன்றாவது பட்டியலில்தான் சேர்ப்பேன்.
எது இலக்கியம் என்று என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். எது நூறு ஆண்டுகளுக்கு மேல் நிற்கும், எது காலப்போக்கில் மறக்கப்பட்டுவிடும் என்று கண்டுபிடிக்க ஃபார்முலா உண்டா என்று தேடி இருக்கிறேன். இதைப் பற்றிய எனது எண்ணங்கள் எதுவும் இறுதியானவை இல்லை. ஆனால் இந்தப் பதிவில் காலம் தாண்டி நிற்கும் இலக்கியம் என்பதை எல்லாம் அடையாளம் காண நான் முயற்சிக்கவில்லை. இன்று நான் எதை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறேன் என்று தெளிவாக்க மட்டும்தான் முயற்சி செய்திருக்கிறேன்.
இதைப் பற்றி எல்லாம் எழுதுவதின் ஒரே பயன் கருத்துப் பரிமாற்றம்தான். என் வரையறை உங்களுக்கு சரிப்படாமல் போகலாம். மன எழுச்சியாவது மயிராவது என்று நீங்கள் நினைக்கலாம். மேலே பேசுவோமே! இலக்கியத்துக்கு உங்கள் வரையறை என்ன? மறுமொழியிலோ இல்லை உங்கள் ப்ளாகிலோ எழுதி சுட்டி கொடுங்கள்!
அனுபந்தம்
சிரில் அலெக்சின் வரையறை:
நேரடிக் காட்சிகளை துல்லியமாக பதித்துச் செல்வதுவோ, கிராமத்துக் கதைகளை மீள்பதிப்பதுவோ மட்டுமே ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிவிட முடியாது. ஒரு இலக்கியப் புனைவின் போக்கில் இரண்டு நகர்வுகள் இருக்க வேண்டும். ஒன்று கதை மாந்தர்களின் செயல்களின், சொற்களின் வழியே, எழுத்தாளனின் வர்ணணைகள், விவரணைகள் வழியே நகரும் கதையின் நகர்வு. இன்னொன்று அதற்கு மேல்தளத்தில் நிகழும் கருத்தின் அல்லது கருத்துக்களின் நகர்வு. இந்த இரண்டு நகர்வுகளும் பின்னிப் பிணைந்து சென்று சேர்ந்து உச்சமடைதலே ஒரு நல்ல இலக்கிய படைப்பின் அழகு.
…
நான் கருத்து எனச் சொல்வது நல்லொழுக்க போதனைகளையோ, புரட்சிகரமான சமூகக் கருத்துகளையோ அல்ல. அந்தக் கருத்துகள் நம் நம்பிக்கைகளை கேள்வி கேட்பவையாக இருக்கலாம், ஒழுக்க விதிகளை சிதறடிக்கச் செய்யலாம், நம் இருப்பையே கேலி செய்யலாம். ஒரு லட்சியம் நோக்கிய நகர்வு, அல்லது லட்சியங்களை விமர்சிக்கும் கருத்து. எதுவாகிலும் ஒன்று.
எது காலத்தை வெல்லும் இலக்கியம் பதிவுக்கு எழுதிய மறுமொழியில் ஜெயமோகன் சொன்னது:
நூறாண்டு தாங்கும் படைப்பு எது? இதுவரை தாங்கிய படைப்புகளை வைத்து இப்படிச் சொல்லலாம்.
- தொன்மமாக மாறும் படிமத் தன்மை கொண்டது
- கலாச்சாரம் சம்பந்தமான பேச்சுகளில் எப்போதும் இருந்துகொண்டிருப்பது
- எளிதில் வாயால் சொல்லத்தக்கது
- நடை, உத்தி போன்றவற்றை நம்பாமல் பண்பாட்டின் சாராம்சமான ஒன்றை வரையறுத்து கூறும் கருவாலேயே நிலைநிற்கும் படைப்பு
தொடர்புள்ள சுட்டிகள்:
ஏன் படிக்கிறேன்?
எது நல்ல இலக்கியம்? – சிரில் அலெக்ஸ்
எது காலத்தை வெல்லும் இலக்கியம்?
Like this:
Like ஏற்றப்படுகின்றது...