(மீள்பதிவு)
எனக்கு ஆறேழு வயது இருக்கும்போது என் அம்மா உள்ளூர் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டாள். முதன்முதலாக நானே படித்த கதையில் ஒரு ஓநாய் பன்றிக்குட்டிகளை வாக் கூட்டிக்கொண்டு போகிறேனே என்று அம்மா பன்றியிடம் கேட்கும், அம்மா பன்றி போ போ என்று துரத்திவிடும். புத்தகம் பேர் நினைவில்லை.
நூலகம் பள்ளிக்கு அடுத்த கட்டிடம். பத்து நிமிஷம் இன்டர்வல் விட்டால் கூட நான் நூலகத்துக்கு ஓடிவிடுவேன். அங்கே ஒரு நூறு நூற்றைம்பது சிறுவர் புஸ்தகம் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் படித்தேன். அப்புறம் அம்மா கை காட்டியவற்றை படிக்க ஆரம்பித்தேன்.
என் வாழ்க்கையின் முதல் ஸ்டார் எழுத்தாளர் வாண்டு மாமாதான். அவருடைய கதைகள் எல்லாவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவும் நூலகத்தில் இருந்த காட்டுச்சிறுவன் கந்தன் புத்தகம் எனது ஃபேவரிட். கந்தனின் சித்தப்பா ராஜ்யத்தைப் பறித்துக் கொண்டு கந்தனை விரட்டிவிட, கந்தன் காட்டில் வளர்வான். அங்கே அவனுக்கு ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கும். பல மிருகங்கள் அவனுக்கு உதவி செய்யும். சித்தப்பா செய்யும் கொடுமைகளை எதிர்ப்பதும், மக்களுக்கு உதவி செய்வதும்தான் கதை. இன்று கிடைத்தால் நாஸ்டால்ஜியாவுக்காகவே வாங்கி வைப்பேன்.
அப்புறம் கோகுலம் என்று ஒரு பத்திரிகை அப்போது வரும். அதற்கு அவர்தான் ஆசிரியர் என்று நினைக்கிறேன். அதை விரும்பிப் படித்தேன். பலே பாலு என்ற ஒரு காமிக்ஸ் சீரிஸ் வரும். படங்களும் கதையும் ரொம்பவே பிடிக்கும். அதில் வந்த மந்திரக் கம்பளம் என்ற புத்தகம் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.
வாண்டு மாமாவைப் பற்றி தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் ஒரு விவரமான பதிவு இருக்கிறது. (புகைப்படமும் அங்கே கிடைத்ததுதான்) அவர் எழுதிய எல்லா புத்தக விவரங்களும் அங்கே இருக்கின்றன.
அம்புலி மாமாவில் வரும் சித்திரங்கள் பிரமாதமாக இருக்கும். ஆனால் ஏனோ வாங்கியதில்லை. எப்போதாவது நண்பர்கள் வீட்டில் கிடைத்தால் படித்ததோடு சரி. ரத்னபாலா என்ற ஒரு பத்திரிகையும் நினைவிருக்கிறது.
வாண்டு மாமாவுக்கு அடுத்தபடியாக கல்வி கோபாலகிருஷ்ணன் என்று ஒருவர் எழுதும் புத்தகங்கள் பிடித்திருந்தன. இன்னும் நினைவிருப்பது ஏதோ மருந்தைக் குடித்து மிகச்சிறு உருவம் ஆகிவிட்ட ஒரு சிறுவன் பற்றிய கதைதான். அறிவியலை அந்த சிறுவனுக்கு ஏற்படும் நிகழ்ச்சிகளை வைத்து சொல்லித் தருவார். டாக்டர் அப்பா மாற்று மருந்து கண்டுபிடிப்பதுடன் கதை முடியும்.
காட்டுச்சிறுவன் கந்தன் தவிர படித்த புத்தகங்களில் எனக்கு நன்றாக நினைவிருப்பது இரண்டுதான் – காவேரியின் அன்பு, ஆலம் விழுது. இரண்டுமே பூவண்ணன் எழுதியவை. காவேரி கொஞ்சம் கோரமான உருவம் படைத்த கோபக்கார டீனேஜ் சிறுவனின் மீது செலுத்தும் அன்பு அவனை மாற்றுவது என்று முதல் கதை. ஆலம்விழுதிலோ குடும்பத்தில் பற்றாக்குறை. குழந்தைகள் பட்ஜெட் போட்டு குடும்பத்தை சிறப்பாக நடத்துகிறார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகவும் வந்தது. ((அதில் ஒரு நல்ல காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)
அதைத் தவிர முத்து காமிக்ஸ். இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ என்று மூன்று மனம் கவர்ந்த ஹீரோக்கள். அதுவும் மாயாவிதான் டாப். அப்புறம் பலர் – ரிப் கேர்பி, ஃ பாண்டம், மாண்ட்ரேக் – என்று வந்தாலும் இவர்கள் போல ஆகுமா?
சிறுவர்களுக்காக கவிதை எழுதியவர்களில் தூரன், அழ. வள்ளியப்பா இருவர் பேர்தான் நினைவிருக்கிறது. ( அழ. வள்ளியப்பா எழுதிய பர்மா ராணி என்ற புத்தகத்தையும் படித்திருக்கிறேன்.) ஆனால் ஒரு கவிதை கூட நினைவில்லை. நினைவிருக்கும் ஒரே சிறுவர் கவிதை – அதுவும் நாலடிதான் நினைவிருக்கிறது – எழுதியது யார் என்று தெரியவில்லை.
தினம் தினமும் காலையில் நீ பேப்பர் படிக்கிறே
அம்மா அதை தேடி எடுத்து தினம் தினமும் குப்பை அள்ளுறா
எனக்குக் கொடுத்த புத்த்கத்தில் தாளைக் கிழித்து
நான் இத்துனூண்டு கப்பல் செய்தா ஏனோ திட்டுறே!
என் பெண்களுக்காக பனிமனிதன் என்று ஜெயமோகன் எழுதிய ஒரு புத்தகத்தை சில வருஷம் முன்னால் வாங்கினேன். அவர்களுக்கு தமிழ் படிக்கத் தெரியாது, அதனால் நான்தான் படித்து கதை சொன்னேன். அவர்களுக்கு இப்போது சுத்தமாக மறந்துவிட்டாலும் கதை கேட்கும்போது மிகுந்த ஆர்வத்தோடு கேட்டார்கள்.
என்ன ஒரு சோகம் பாருங்கள்! மிகுந்த ஆர்வத்தோடு படித்த நாட்கள். ஆனால் மூன்று நான்கு புத்தகங்கள், சில காமிக்ஸ் தவிர வேறு எதுவும் நினைவில் தங்கவில்லை.
ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த சோகம் இன்னும் அதிகமாகிறது. நான் 13, 14 வயதில்தான் ஆங்கிலப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடன் (Enid Blyton) எழுதிய ஒரு புத்தகத்திலிருந்து ஆரம்பித்தேன். இந்த மாதிரி புத்தகங்களை கடந்தாயிற்று என்று அப்போதே தெரிந்தது. இருந்தாலும் இங்கிலீஷ் புஸ்தகம், சீன் காட்டலாம் என்று ஒரு பத்து புத்தகம் படித்திருப்பேன். இந்த மாதிரி எல்லாம் தமிழில் புத்தகம் இல்லையே என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இன்றும் Just So Stories மாதிரி ஒரு புத்தகத்தை என் பெண்களுக்கு படித்துக் காட்டும்போது குதுகலமாக இருக்கிறது. ரொவால்ட் டால் எழுதிய BFG புத்தகம் என் பெண்ணுக்கு லிடரேச்சர் கிளாசில் பாடம், அதைப் படித்துவிட்டு சின்ன வயதில் படிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்.Wind in the Willows, Peter Pan, Pinnochio, Treasure Island, Wizard of Oz, Narnia, Jungle Book, Hobbit, Lord of the Rings என்று பல புத்தகங்கள் இருக்கின்றன. தற்காலத்திலோ ஹாரி பாட்டர், ஆர்டமிஸ் ஃபவுல், ரிக் ரியோர்டான் எழுதும் கதைகள் என்று எக்கச்சக்கமாக இருக்கின்றன. தமிழில்?
அது சரி, பெரியவர்கள் புத்தகங்களே விற்பதில்லையாம், சிறுவர் புத்தகங்களை எழுதி எழுத்தாளன் எப்படி பிழைப்பது?
இன்றைய நிலை எனக்குத் தெரியாது. மாறி இருந்தால் சொல்லுங்கள், சந்தோஷமாக இருக்கும்!
தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்
தொடர்புடைய பதிவுகள்:
வாண்டு மாமா பற்றிய தமிழ் காமிக்ஸ் உலகம்
ஆன்லைனில் வாண்டு மாமாவின் “மந்திரக் கம்பளம்” கதை
Like this:
Like ஏற்றப்படுகின்றது...