தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றது. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.
ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.
விலை ரூ. 5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.
குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
பா.மாரியப்பன்
இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள். புத்தகம் வராவிட்டால் நமக்குத்தான் நஷ்டம். எஸ்.ரா. மகாபாரதம் படிப்பது எப்படி என்ற பதிவில் இந்த மொழிபெயர்ப்பை ஒரு முக்கியமான படியாகக் குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:
மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்.
புகைப்படம் அருட்செல்வன் கந்தசாமியின் இணையதளத்தில் கிடைத்தது. மனிதர் ஒரிஜினல் பதிவையே வைத்திருக்கிறார்! ம.வீ.ரா. மொழிபெயர்ப்பு என்கிறார்களே, ஆனால் வேறு பெயர் போட்டிருக்கிறதே என்று கேட்டிருக்கிறார். மாரியப்பன் எங்கோ இது பலரின் கூட்டு முயற்சி, ம.வீ.ரா. தொகுப்பாளர், ம.வீ.ரா. பதிப்பு என்று அறியப்படுகிறது என்று விளக்கி இருந்தார்.
ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது என்று நண்பர் செல்வராஜு தகவல் தருகிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், தொன்மங்கள்