ஒரு மாறுதலுக்காக இன்று புத்தகங்கள் பற்றி இல்லை. பழைய பதிவு ஒன்றை தூசி தட்டி மீள்பதித்திருக்கிறேன். – மூலப்பதிவு இங்கே.
எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாட்களில் (எண்பதுகள்) துக்ளக் பத்திரிகையில் பெரிய அளவில் கிண்டல் செய்யப்பட்டவர் ம.பொ.சி. சரியான ஜால்ரா என்றுதான் நினைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நாள் போன பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது அவருக்கும் ஜால்ரா என்று தெரியவந்தது. அவரை பற்றி பேசிய குடும்ப/நட்பு வட்டாரப் பெரியவர்கள் எல்லாரும் அவர் நன்றி கெட்டவர், கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அவருக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டு இப்போது எம்ஜிஆரை சந்தோஷப்படுத்த கருணாநிதியைத் திட்டுகிறார் என்றுதான் சொன்னார்கள்.
இன்னும் கொஞ்சம் விவரம் தெரிந்தபோது இவர்தான் மறந்து போயிருந்த கட்டபொம்மனையும் வ.உ.சியையும் தமிழர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தினார் என்று தெரியவந்தது. அட! என்று பார்த்தேன். பிறகு மெதுமெதுவாக அவர் தமிழக எல்லை போராட்டத்தில் ஆற்றிய பங்கு, தமிழையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் போற்றியது மாதிரி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். அவரே எழுதிய சில புத்தகங்கள் – நானறிந்த ராஜாஜி, ராஜாஜியுடன் அவருக்கிருந்த உறவு பற்றி – கிடைத்தன. பத்து வருஷங்களுக்கு முன் தமிழம் தளத்தில் தமிழ் முழக்கம் பத்திரிகையின் சில பழைய இதழ்களையும் பார்த்தேன்.
ம.பொ.சி. 1906-இல் பிறந்தவர். பனை ஏறும் ஜாதியில், நாடார் உட்பிரிவாக இருக்க வேண்டும், – தாழ்வாக கருதப்பட்ட ஜாதியாம் – பிறந்தவராம். (கிராமணி என்றால் கிராமத்தில் முக்கியப் பதவி, “உயர்ந்த” ஜாதி என்று நினைத்திருந்தேன்.) சுதந்திர போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்றார் என்று நினைக்கிறேன். மிக ஏழையாக இருந்திருக்கிறார். பரம்பரை சொத்தும் இல்லை, குடும்பத் தலைவனும் விடுதலை, போராட்டம், சிறை என்று போய்விட்டால் குடும்பத்தின் நிலை கஷ்டம்தான். சிறைவாசம் அவரது உடல்நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாம். அவரது எளிய பின்புலம், மற்றும் தோற்றம் – குறிப்பாக மீசை, அவர் ரவுடியோ என்ற ஒரு சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது. ராஜாஜியே அப்படித்தான் நினைத்திருந்தாராம். கல்கியை ராஜாஜி மனமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாம்.
அவருக்கு வ.உ.சி.யும், கட்டபொம்மனும் பெரிய icon-கள். அவர்களை பற்றிய பிரக்ஞை தமிழ் நாட்டில் உருவாக அவர்தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். (அவருக்கு அடுத்த படியில்தான் நான் சிவாஜி கணேசனை வைக்கிறேன்)
நாற்பதுகளில் அவருக்கு முக்கியத்துவம் அதிகரிக்க ஆரம்பித்தது. சின்ன அண்ணாமலை உதவியுடன் கட்டபொம்மன், வ.உ.சி. புத்தகங்களை வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார். அதற்கு முன்னும் வெளி வந்தாலும், அவை விற்கவில்லை. சின்ன அண்ணாமலை சாணி நிறக் காகிதத்தில் மோசமான பிரதிகளோடு ம.பொ.சி. தன்னை வந்து பார்த்ததாக குறிப்பிடுகிறார். சி. அண்ணாமலை வணிகம் ரத்தத்தில் ஊறிய செட்டியார். வியாபார உத்திகள் தெரிந்தவர். அவர் தனது தமிழ்ப்பண்ணை பதிப்பகத்தில் இவற்றை நல்ல முறையில் அச்சடித்து வெளியிட்டார், நன்றாக விற்றிருக்கிறது. ம.பொ.சிக்கு பணம் கிடைத்த மாதிரி தெரியவில்லை, ஆனால் எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள்.
காங்கிரசை விட்டு வெளியேறிய ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழைய முயன்றபோது காமராஜ் அதை கடுமையாக எதிர்த்தார். அப்போது ராஜாஜி சார்பாக முனைந்து போராடிய தமிழ் நாட்டுக்காரர்களில் ம.பொ.சி. முக்கியமானவர். அப்போதிலிருந்தே ராஜாஜியின் அணுக்க சீடர் ஆகிவிட்டார். ராஜாஜி காங்கிரசுக்குள் நுழைவதற்காக செய்த சமரசங்களில் இவர் அவமானப்பட்டிருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு ராஜாஜி இவரது விஸ்வாசம் பற்றி தெளிவாக புரிந்துகொண்டார்.
ராஜாஜியின் சிஷ்யர்தான், ஆனால் ராஜாஜிக்கு ஆமாம் போடுபவரில்லை. கண்மூடித்தனமான பக்தி இல்லை. (கல்கி நாட்டில் மழை பெய்ததற்கெல்லாம் ராஜாஜிதான் காரணம் என்று எழுதி இருக்கிறார்) சுதந்திரமாக (independent) ஆக செயல்பட்டார். ராஜாஜி இவரை வருமானம் வரக்கூடிய பல வேலைகளுக்கு பரிந்துரைத்திருக்கிறார். – கல்கியின் மறைவுக்கு பிறகு கல்கி பத்திரிகைக்கு ஆசிரியர் வேலை உட்பட. இவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
52 தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்கவில்லையா, பணம் இல்லாத குறையால் போட்டியிடவில்லையா, இல்லை தோற்றுவிட்டாரா என்று தெரியவில்லை. ராஜாஜி முதல்வர் ஆனதும் இவரை பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் பதவி எதுவும் தரவில்லை. ஏதோ நிலச்சீர்திருத்தம் விஷயத்தில் மிக அற்புதமாகப பேசி தஞ்சாவூர் பண்ணையார்களை சட்டத்தை ஒத்துக்கொள்ள வைத்தாராம். ராஜாஜி அரசே எல்லைப் போராட்டத்துக்காக இவரை சிறைப்படுத்தியது என்று படித்திருக்கிறேன். காமராஜ் இவரை ராஜாஜியின் சிஷ்யர் என்று ஒதுக்கிவிட்டார். தமிழக எல்லைக்காக இவர் போராடியதும் காமராஜுக்கு embarassing ஆக இருந்திருக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் தமிழ் இவரை கவர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களை எதிரியாகத்தான் நினைத்திருக்கிறார். ஆனால் அவர்களது பாணியிலேயே அவர்களது நோக்கங்களை – கடவுள் மறுப்பு, திராவிட நாடு மாதிரி பல – எதிர்த்திருக்கிறார். அதாவது இந்தியாவுக்கு உட்பட்ட தமிழ் தேசியத்துக்காக நல்ல தமிழில் பேசி, எழுதி வந்திருக்கிறார். ராஜாஜியும் காமராஜும் அழகான தமிழ் பேசியதில்லை. அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் ஆகியோரின் தமிழ் ஐம்பதுகளில் பெரும் வரவேற்பு பெற்றது. இவர் கா.மு. ஷெரிஃப், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி. நாகராஜன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு தமிழரசுக் கழகம் என்று ஒரு அமைப்பை ஸ்தாபித்தார். ஏ.பி.என். சினிமா துறையில் அறுபதுகள் வரை பெரும் வெற்றி பெறவில்லை, ஆனால் கலைஞர் போல வர முயற்சி செய்துகொண்டே இருந்திருக்கிறார். தமிழ் முழக்கம் பத்திரிகையை புரட்டினால் கலைஞர், கே.ஆர். ராமசாமி மாதிரி பலரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. ஏ.பி.என். படங்களும் தி.மு.கவினரால் விமர்சிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இலக்கியத்தின் எதிரிகள் என்ற சிறு தொகுப்பில் கம்ப ராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும் தாக்கிப் பேசிய ஈ.வே.ரா.வை மறுத்து எழுதுகிறார்.
ம.பொ.சியின் தாக்கம் தமிழக எல்லை போராட்டத்தில்தான் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கிறது. நேருவும், ராஜாஜியும் மொழிவாரி மாநிலங்களின் ஆதரித்ததில்லை. மத உணர்வு பாகிஸ்தான் கொண்டு வந்தது போல மொழி உணர்வு பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கும் என்றுதான் எண்ணினார்கள். பொட்டி ஸ்ரீராமுலு போய்ச் சேரும் நிலை வந்த பிறகுதான் முதல்வர் ராஜாஜிக்கும் பிரதமர் நேருவுக்கும் அவரை பற்றி பிரக்ஞையே வந்திருக்கிறது. வேறு வழி இல்லை என்று தோன்றிய பிறகுதான் ஆந்திரா உருவாக ஒத்துக்கொண்டார்கள். மாநில எல்லையை அவர்களும் சரி, பின்னால் வந்த காமராஜும் சரி பெரிய பிரச்சினையாக நினைக்கவில்லை. சென்னை மீது ஆந்திரர்கள் உரிமை கொண்டாடினார்கள் (அவர்களுக்கு உரிமை இருக்கவும் செய்தது). ம.பொ.சி., தமிழரசு கழகத்தார் போராடி இருக்காவிட்டால் திருத்தணி எல்லாம் ஆந்திராவில்தான் இருந்திருக்கும். சித்தூர், திருப்பதி ஆகியவற்றின் மீது தமிழர்களுக்கும் உரிமை அந்த காலத்தில் உண்டு. நேரு இதை பற்றி விசாரிப்பதாக வாக்குறுதி எல்லாம் கொடுத்திருக்கிறார், எல்லாம் காற்றோடு போய்விட்டது.
வட எல்லை மட்டுமல்ல; கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்ற போராட்டத்திலும் முக்கிய பங்களிப்பு இருந்திருக்கிறது. இன்று மார்ஷல் நேசமணி பேரே யார் நினைவிலும் இல்லை, இவருடைய பங்களிப்பு எங்கே நினைவிருக்கப் போகிறது?
காமராஜ் காலத்தில் ம.பொ.சிக்கு அழுத்தம் அதிகமாக இருந்திர்க்க வேண்டும். கட்சிக்குள்ளிருந்தே ஒருவர் தமிழக எல்லைகள் பற்றி “கலாட்டா” செய்வது காமராஜுக்கு கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். காமராஜ் கட்சிக்குள் இருக்க வேண்டுமென்றால் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். காங்கிரசை விட்டு வெளியேறினார். தமிழை வைத்து நடந்த போட்டியில் தி.மு.க.வினரை வெல்ல முடியவில்லை. தமிழரசுக் கழகம் மங்க ஆரம்பித்தது. ராஜாஜி சுதந்திராவுக்கு வரும்படி பல முறை கூப்பிட்டும் மறுத்துவிட்டார். ஓரளவு புகழ் இருந்தது, பணம்தான் குறைச்சலாக இருந்திருக்கிறது.
67-இல் ராஜாஜியே தி.மு.க.வுடன் கூட்டு சேரும்போது, ம.பொ.சி.யும் கூட்டணியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவர் வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த முதல் பதவி அதுதான் – 60 வயதில். வயதாகிவிட்டது, இளமையில் இருந்த வைராக்யம் குறைந்துவிட்டது. மெதுமெதுவாக கலைஞருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார். இது அவரது ஆளுமையின் பெரிய வீழ்ச்சிதான், ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய வீழ்ச்சி. அதை விட பெரிய வீழ்ச்சி அவர் எம்ஜிஆருக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்தது. ஒரு முறை வெளிப்படையாகவே சொன்னார் – “எம்ஜிஆர் நன்றாக ஆட்சி செய்கிறார் ஏனென்றால் எனக்கு மேல் சபை தலைவர் பொறுப்பு கொடுத்திருக்கிறார்”! எம்ஜிஆர் மேல்சபையைக் கலைத்தபோது கூட அவரை மிக மிருதுவாக இப்படி எல்லாம் செய்யலாமா என்று பட்டும்படாமல் கேள்வி எழுப்பி இருக்கிறார். கண்டித்தால் வேறு பதவி கிடைக்காமல் போய்விடலாம் என்ற பயம் தெளிவாகவே தெரிந்தது. இன்றைய நிலையை வைத்து பார்த்தால் அன்று அவருக்கு கிடைத்தவை சிறு வசதிகள்தான் – ஒரு கார், ஒரு வீடு, ஏதோ கொஞ்சம் பணம். அவர் எழுதிய புத்தகங்கள், நடத்திய பத்திரிகை நிச்சயமாக நூலகங்களில் வாங்கப்படும் என்ற பேசப்படாத உறுதி. ஆனால் அதன் அருமை கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
அவரை காமராஜ் பயன்படுத்தி இருக்க வேண்டும். காங்கிரசுக்கு பெரும் வலு சேர்த்திருப்பார். அவரது பாணியை காங்கிரஸ் கடைப்பிடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் தாக்கு பிடித்திருக்கலாம். அவரது potential பெரிது. அவரது சாதனைகள் குறைவுதான், வாய்ப்பு கிடைக்காத குறைதான்.
சிறந்த பேச்சாளர் என்று சொல்கிறார்கள். சிலம்புச் செல்வர் என்று பட்டமே கொடுத்திருக்கிறார்கள். நான் அவரது பேச்சை கேட்டதில்லை, அதனால் எதுவும் சொல்வதற்கில்லை.
பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். அவரது புத்தகங்கள் எதுவும் எனக்கு பிரமாதமாக தெரியவில்லை. வெகு சிலவற்றைத் தவிர மற்றவற்றை யார் வாங்கி இருப்பார்கள் என்றே புரியவில்லை. ஒரு வேளை நூலகங்கள் வாங்கினவோ என்னவோ. பொதுவாக கட்டுக்கோப்பு, வடிவ கச்சிதம் குறைவாக இருக்கின்றன, ramble ஆகின்றன.
ஆனால் சில புத்தகங்கள் முக்கியமான சரித்திர ஆவணங்கள் – கட்டபொம்மன், வ.உ.சி. ராஜாஜி, விடுதலை போரில் தமிழகம் போன்றவை முக்கியமான புத்தகங்கள். வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு புத்தகத்திற்காக 1966-இல் சாஹித்ய அகடமி விருது கிடைத்திருக்கிறது. அரசு இவரது எழுத்துகளை நாட்டுடமை ஆக்கி இருக்கிறது. ஒரு தபால்தலையும் வெளியிட்டிருக்கிறது.
இந்த மதிப்பீட்டை எழுதி பத்து வருஷம் இருக்கும். இன்று யோசித்தால் அவரது முக்கியப் பங்களிப்பு இந்திய அடையாளத்துக்குள் தமிழ் அடையாளம் என்ற கருத்தை முன் வைத்ததுதான் என்று தோன்றுகிறது. அந்த பண்பாட்டு அணுகுமுறை எத்தனை முக்கியம் என்று காங்கிரசும் காமராஜும் உணராமல் போனது துரதிருஷ்டமே. கடைசியில் ஆளே இல்லாத டீக்கடையில் டீயை ஆற்றும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அவர் காங்கிரசின் முகமாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் காமராஜின் முக்கியப் பேச்சாளராக, பிரச்சாரகராக இருந்திருந்தால், இன்றும் அங்கங்கே தெரியும் இந்தியா vs தமிழகம் என்ற இருமை நிலை இன்னும் குறைந்திருக்கும். அவரது பிற பங்களிப்புகளை அது இன்னும் பின்னே தள்ளி இருக்கும்.
காந்தியடிகளும் ஆங்கிலமும் புத்தகம் அவருக்கு இருந்த பிரச்சினைகளை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. காந்தி ஹிந்தி நாட்டின் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று உறுதியாகக் கருதியவர். அதை எந்த சமரசமும் இல்லாமல் பல முறை தெளிவாக சொல்லி இருக்கிறார். ம.பொ.சி.க்கு காந்தி மறுத்துப் பேச முடியாத தலைவர். அதே நேரத்தில் ஹிந்தி வேண்டாம் என்பது அவரது உறுதியான கருத்து. அவர் இரண்டு பக்கமும் பேச முடியாமல் அல்லாடுவது இந்தப் புத்தகத்தில் தெளிவாகத் தெரிகிறது.
திராவிட இயக்கம் இந்திய அடையாளத்துக்கு எதிரான தமிழ் அடையாளம் என்ற கருத்தை 1989-இல்தான் – முரசொலி மாறன் மத்திய அமைச்சர் ஆனபோதுதான் – உண்மையில் கைகழுவியது என்று நான் எண்ணுகிறேன்.
திறமை இருந்தும், லட்சிய வேகம் இருந்தும், தலைமை வகிக்க தகுதி இருந்தும், அவர் தன் வாழ்வில் பெரிய பதவி எதையும் அடையமுடியவில்லை. கடைசியில் தன் பேச்சுத் திறமையை ஜால்ரா அடிக்க பயன்படுத்திவிட்டார். அவரது தாக்கம் தமிழக எல்லைப் போராட்டத்திலும், வ.உ.சி., கட்டபொம்மன் ஆகியோரை பிரபலப்படுத்தியதிலும் மட்டுமே நிற்கிறது. ஒரு நல்ல ஆளுமையாக வரக்கூடிய தகுதி உள்ள ஒருவரை தேவைகளும், காலமும் எப்படி வீழ்ச்சி அடைய செய்கின்றன என்பதைத்தான் அவர் வாழ்க்கை காட்டுகிறது.
ஆதாரங்கள்:
ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், நானறிந்த ராஜாஜி, விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு ஆகிய புத்தகங்கள்
சின்ன அண்ணாமலை எழுதிய சொன்னால் நம்பமாட்டீர்கள்
தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்
தொடர்புடைய சுட்டிகள்:
கப்பலோட்டிய தமிழன்
விடுதலைப் போரில் தமிழகம்
கட்டபொம்மன் – உண்மையும் தொன்மமும்
மாநில சுயாட்சியும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்
ம.பொ.சி. பற்றி சேதுராமன்
ம.பொ.சி. விக்கி குறிப்பு
தமிழக எல்லை நிர்ணயிப்பில் ம.பொ.சி.