கல்கி: கணையாழியின் கனவு

கல்கி சிறந்த பத்திரிகையாளர். ஆனால் அவர் நல்ல எழுத்தாளர் அல்லர். பொன்னியின் செல்வன் தவிர்த்த அவரது எழுத்துக்களை பத்திரிகை எழுத்து என்றுதான் வகைப்படுத்த வேண்டும். சுலபமாக படிக்கக் கூடிய எளிமையான எழுத்து, படித்த கொஞ்ச நேரத்திலேயே மறந்தும் போய்விடும். பொ. செல்வனும் அதே வகையறாதான் என்று கருதும் நல்ல வாசகர்கள் இருக்கிறார்கள். எனக்குதான் அதுவும் சில கட்டுரைகளும் இலக்கியம்.

குறிப்பாக அவரது சிறுகதைகளில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியவை அல்ல. தமிழின் சிறந்த சிறுகதைகள் என்று நீங்கள் எந்தப் பட்டியலைப் பார்த்தாலும் அதில் கல்கியின் சிறுகதைகள் இடம் பெறுவது அபூர்வம். கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லக் கூடியவை வெகு சிலதான். அவரால் அன்றைய நடுத்தர வர்க்கத்தினரின் – குறிப்பாக பிராமணர்களின் பின்புலத்தை – ambience – உருவாக்க முடிந்திருக்கிறது என்பதுதான் அவரது கதைகளின் பெரிய பலம்.

ஆனால் இந்தச் சிறுகதைகள் கல்கி காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டன. ஆனந்தவிகடனின், பின்னாளில் கல்கி பத்திரிகையி பெரும் பலமாக இருந்தது அவரது எழுத்துதான். அவற்றுக்கு ஆவண முக்கியத்துவம் உண்டு. அவர் போட்ட பாதையில்தான் பின்னாளில் தேவன் ஏன் சுஜாதா கூட போயிருக்கிறார்.

1937-இல் அவரது சிறுகதைகள் பலவற்றைத் தொகுத்து கணையாழியின் கனவு என்ற தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இவற்றை அவரது சிறந்த கதைகள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். எனக்குத் தெரிந்து விட்டுப் போன ஒரே நல்ல சிறுகதை தப்பிலி கப். டி.கே.சி. முயற்சியால் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். டி.கே.சி.யே ஒரு முன்னுரையையும் எழுதி இருக்கிறார்.

கணையாழியின் கனவு, கேதாரியின் தாயார்காந்திமதியின் காதலன், சிரஞ்சீவிக்கதை, ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம், பாழடைந்த பங்களா, சந்திரமதி, போலீஸ் விருந்து, கைதியின் பிரார்த்தனை, மயிலைக்காளை, காரிருளில் ஒரு மின்னல், தந்தையும் மகனும், பவானி பி.ஏ. பி.எல்., கடிதமும் கண்ணீரும், வைர மோதிரம் ஆகிய கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அத்தனையும் சுவாரசியமானவைதான், இன்றும் படிக்கக் கூடியவைதான். ஆனால் எதுவும் நம் மனதைத் தொடப் போவதில்லை. கறாராகச் சொன்னால் fluff-தான்.

இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை மயிலைக்காளைதான். அதன் மெல்லிய நகைச்சுவையும் எளிய, ஆனால் புன்னகைக்க வைக்கும் காதலும் அவரது பாணியின் சிறப்பான வெளிப்பாடு. அதே போலத்தான் கைதியின் பிரார்த்தனை, வைர மோதிரம் சிறுகதைகளும்.  போலீஸ் விருந்து சிறுகதையும் புன்னகைக்க வைக்கும். பவானி பி.ஏ. பி.எல். அன்றைக்கு பாய்ஸ் கம்பெனி நாடகமாக வந்திருந்தால், அல்லது ஐம்பதுகளில் திரைப்படமாக வந்திருந்தால் சக்கைப்போடு போட்டிருக்கும். காரிருளில் ஒரு மின்னலில் நாயகன் உண்மை எது பொய் எது எனப் புரிந்து கொள்ளும் இடம் அருமை. கேதாரியின் தாயார், ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம், கடிதமும் கண்ணீரும் ஆகியவை நல்ல கருக்கள் கொண்டவை.

கல்கி ரசிகர்கள், தமிழில் பத்திரிகை எழுத்து எப்படி பரிணமித்தது என்று புரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

கல்கியின் “அலை ஓசை”

நண்பர் சுந்தரராஜன் அலை ஓசை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்டிருந்தார். அதனால் மீள்பதித்திருக்கிறேன். மூலப்பதிவு இங்கே.


கல்கியின் அலை ஓசை நாவல் உயர்ந்த இலக்கியம் இல்லை. திடுக்கிடும் சம்பவங்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு அதிர்ச்சி வைக்க வேண்டிய கட்டாயம், நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள், ஸ்டீரியோடைப் காரக்டர்கள் என்று எல்லா விதமான பலவீனங்களும் மலிந்து காணப்படுகின்றன. கதாநாயகி சீதா கல்கத்தாவில் மயங்கி விழுந்தால் அங்கே அவளைக் காப்பாற்றுவதற்காகவே அமர்நாத்-சித்ரா தம்பதியினர் அங்கே மாற்றல் ஆகிப் போயிருக்கிறார்கள். லாகூரில் மாட்டிக் கொண்டால் மவுல்வி சாஹிபும் ரசியா பேகமும் வந்து காப்பாற்றுகிறார்கள். இரவு 12 மணிக்கு யாரும் இல்லாத இரவில் தற்கொலை செய்து கொள்ளப்போனால் அம்மாஞ்சி சூர்யா வந்து தடுக்கிறான். நேரம்தான்!

நாவலை மீள்வாசிப்பு செய்தபோது எனக்கு அலைகள் ஓய்வதில்லை படம் நினைவு வந்துகொண்டே இருந்தது. என் பதின்ம வயதுகளில் வந்த படம் அது. பாட்டுகள் அமர்க்களமாக இருந்தன. கன்னாபின்னா என்று ஓடிற்று. பார்த்தவரெல்லாம் புகழ்ந்தார்கள். இரண்டு முறை படம் பார்க்கப் போய் டிக்கெட் கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு வழியாக டிக்கெட் கிடைத்துப் போய்ப் பார்த்தால் பாரதிராஜா சோகப்படுத்துகிறார். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி – கார்த்திக்கும் ராதாவும் ஓடுகிறார்கள், ஊரே துரத்துகிறது, தியாகராஜன் அவர்களை வெட்டப் போகிறார், திடீரென்று பாதிரியார் வந்து தடுக்கிறார். பாதிரியாரைப் பார்த்து நானும் என் நண்பர்களும் கொல்லென்று சிரித்துவிட தியேட்டரில் ரத்தக் களரி ஆகும் நிலை. பாதிரியார் எங்கிருந்து வந்தார்? சரியாக இங்கே மாட்டிக் கொள்வார்கள் என்று முன்னாலேயே கணித்து அங்கே வந்து ஒளிந்து கொண்டிருந்தாரா?

Deux ex machina – அதிசய தற்செயல் நிகழ்ச்சிகள் – கதையில் வரலாம். இங்கே Deux ex machina-வில் அவ்வப்போது கதை வருகிறது.

அப்புறம் அலை ஓசை என்று தலைப்பு வைத்துவிட்டோமே என்று பலவந்தமாக அந்த ஓசையை இழுத்து வருகிறார்.

ஆனால்: ஆயிரம் குறை இருந்தாலும் கதையில் கொஞ்சம் ஜீவன் இருக்கிறது. நிறைய சுவாரசியம் இருக்கிறது. சீதா இறக்கும்போது அங்கஹீனம் அடைந்த தாரிணியின் கோர சொரூபத்தைப் பார்த்து அக்கா என்ன அழகாக இருக்கிறாய் என்று வியக்கும் இடத்தில் கவிதை இருக்கிறது. சீதாவைக் கண்டு சுண்டு உட்பட எல்லாரும் கொஞ்சம் மயங்குவதில் உண்மை இருக்கிறது.

லலிதாவும் அவள் அத்தை மகள் சீதாவும் நெருங்கிய தோழிகள். நல்ல வேலையில் இருக்கும் ராகவன் தாரிணியை காதலிக்கிறான், ஆனால் அது கைகூடவில்லை. லலிதாவை பெண் பார்க்க வரும் ராகவன் சீதாவை விரும்பி மணம் செய்து கொள்கிறான். லலிதாவின் அண்ணன் சூர்யா காங்கிரஸ்காரன். அவன் தாரிணியை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சந்திக்கிறான். இருவரும் நெருங்குகிறார்கள். தாரிணியை மீண்டும் சந்திக்கும் ராகவன் அவளையும் மணக்க விரும்புகிறான். தாரிணி அவனை நிராகரிக்கிறாள். சீதா-ராகவன் வாழ்க்கை பரஸ்பர சந்தேகத்தால் நரகம் ஆகிறது. சில அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளால் சீதா-ராகவன் பிரிகிறார்கள், பிறகு சேர்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் பிரிவின்போது சீதா பாகிஸ்தான் பக்கம் மாட்டிக் கொள்கிறாள். தாரிணி தன் சொந்த அக்கா என்று அவளுக்கு தெரிய வருகிறது. பல துன்பங்களுக்குப் பின்னால் ராகவனின் மடியில் அவள் இறக்கிறாள். தாரிணி கை இழந்து கண்ணிழந்து கோரமான உருவத்தோடு இருந்தாலும் சீதாவின் இறுதி ஆசைப்படி ராகவனும் அவளும் மணந்து கொள்கிறார்கள்.

கல்கியின் ஆதர்சம் டிக்கன்ஸ் ஆக இருக்க வேண்டும். இது ஒரு Dickensian நாவலே. ஆனால் டிக்கன்சின் பாத்திரப் படைப்பு எப்போதும் சிறப்பானது. இந்த கதையில் ஸ்கோப் இருந்தும் கல்கியின் கவனம் மெலோட்ராமா கதையில்தான் இருக்கிறது. சீதா, ராகவன், தாரிணி, சூர்யா, லலிதா எல்லாருமே நன்றாக வரக் கூடிய பாத்திரங்கள்தான். சுதந்திரப் போராட்டம் போராட்டம் என்கிறார்களே தவிர அது யாருடைய வாழ்க்கையையும் பெரிதாக பாதிப்பதாகத் தெரியவில்லை. (இத்தனைக்கும் ஜெயிலுக்கு போகிறார்கள், அடி வாங்குகிறார்கள்…) வழக்கமான காதல் கத்திரிக்காய் என்ற உலகத்தைத்தான் கல்கி காட்டுகிறார். இதை நல்ல இலக்கியம் ஆக மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளை அவர் உணரவில்லை என்று தோன்றுகிறது.

கதையில் சீதாவைக் கண்டு சூர்யா, ராகவன், பட்டாபி எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். அது கொஞ்சம் அலுப்பைத் தருகிறது. ஆனால் அத்தை மகளை சூர்யா விரும்புவது, காதலி தாரிணி சாயலில் உள்ளவளை ராகவன் விரும்புவதும், தனக்காக உழைத்த நாகரீகப் பெண்மணியை பட்டாபி விரும்புவதும் சாத்தியம் உள்ள நிகழ்ச்சிகளே.

ஐம்பதுகளில் இது உயர்ந்த இலக்கியமாகவே கருதப்பட்டிருக்கும். கல்கிக்கு இது இலக்கியம்தான், இதுவே தான் எழுதிய எல்லா கதைகளிலும் சிறந்தது என்று அவர் கருதினார். தொடர்கதையாக வெளிவந்த நாட்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும், வாசகர்கள் சீதா, ராகவன், தாரிணி, சூர்யா ஆகியோரின் வாழ்வில் அடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருந்திருப்பார்கள். இன்றைக்கு கல்கியின் தீவிர ரசிகர்கள் கூட பொன்னியின் செல்வனைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு இதை ரசிப்பதில்லை. இன்றைக்கு என் புரிதலின் படி தவறான தேர்வு என்றாலும் அந்த காலகட்டத்தில் இதற்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்தது புரிந்து கொள்ளக் கூடியதே. புரிந்து கொள்ள முடியாத விஷயம் ஒன்றுதான். ஒரு flawed படைப்பு ஒரு தலைமுறை வாசகர்களை எப்படி இந்த மாதிரி கட்டிப்போட்டது? ஒரு தலைமுறை வாசகர்களை கட்டிப்போட்ட படைப்பு எப்படி அடுத்த ஓரிரு தலைமுறையிலேயே தன் ஈர்ப்பு சக்தியை இழந்தது?

ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

1956க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற நாவல்.  கல்கி இறந்த ஒரு வருஷத்தில் அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்கிறது.

இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் சென்னை லைப்ரரி தளத்தில் படிக்கலாம். மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். இது ஒரு flawed, மெலோட்ராமா, மிகுகற்பனைக் கதையே. ஆனாலும் இந்தக் கதையில் எங்கோ சிறிய அளவில் ஜீவன் மறைந்து கிடக்கிறது. சுவாரசியம் இருக்கிறது. ஒரு காலத்தில் பெரிய வெற்றி பெற்ற நாவல். அதனால் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..

மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.

குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.

ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!

திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.

வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.

திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.

திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.

ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.

மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.

முந்தைய பதிவிலிருந்து:

ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?

இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.

ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.

வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.

என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?

இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!

பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.

அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

ராஜாஜி, கல்கி, மதுவிலக்கு

ராஜாஜி பற்றிய பதிவில் அவர் விமோசனம் என்ற பத்திரிகையை நடத்தியதைப் பற்றி எழுதி இருந்தேன். அதைப் பற்றி இன்னும் விவரங்கள் இருந்த ஒரு கூட்டாஞ்சோறு பதிவை மீள்பதித்திருக்கிறென்.

பாங்கர் விநாயகராவ் என்ற புத்தகத்தை சமீபத்தில் எப்போதோ படித்தேன். கல்கி மதுவிலக்கு அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி விமோசனம் என்ற பத்திரிகையில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. எந்த கதையும் சுகமில்லை. பிரசாரம் கதையை விட முக்கியமாக இருக்கும்போது கதையில் இலக்கிய நயம் தொலைந்து போய்விடுகிறது. மேலும் கல்கியின் ஆரம்ப கால சிறுகதைகள் இவை – சுவாரசியம் குன்றாமல் எழுதும் கலையை அவர் இன்னும் முழுதாக தெரிந்துகொள்ளாத காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார். அந்த முன்னுரையில் விமோசனம் பத்திரிகை உருவான விதம், அவருக்கும் ராஜாஜிக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பதை பற்றி எல்லாம் விவரித்திருக்கிறார். பிரமாதமாக இருந்தது. இந்த புத்தகம் வானதி பதிப்பகம் வெளியீடு, இதற்காகவே வாங்கலாம்!

ராஜாஜிக்கு அப்போதெல்லாம் கல்கியை அவ்வளவு தெரியாது. கல்கி கதர் போர்டில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு நவசக்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர சென்னை போகும்போது கல்கியை அவர் பார்த்திருக்கிறார். ராஜாஜி ஒரு மதுவிலக்கு பத்திரிகை நடத்த கல்கியை அழைத்துக் கொள்ளலாம் என்ற நினைத்து கல்கியிடம் சொல்லியிருக்கிறார். கல்கிக்கு இஷ்டம்தான், ஆனால் பத்திரிகை ஆரம்பிக்க நாளாகும் என்பதால் நவசக்தியில் திரு.வி.க.விடம் சேர்ந்திருக்கிறார். மூன்று வருஷம் ஒரு தகவலும் இல்லை. ஒரு நாள் ராஜாஜி சென்னைக்கு வந்திருந்தபோது அவரை பார்க்கப் போயிருக்கிறார். என்னவோ காரணத்தால் நவசக்தி வேலையையும் விட்டுவிட்டார். ராஜாஜி மூன்று மாதத்தில் வந்து சேர்ந்துகொள் என்று சொல்ல இவர் இன்றைக்கே வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ராஜாஜி நீ சென்னையில் வேலை இல்லாமல் இருந்தால் கெட்டுப் போய்விடுவாய்! என்று சொல்லி அவரை திருச்செங்கோட்டுக்கு அனுப்பி இருக்கிறார்.

அங்கே அவருக்கு மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம். இது அந்தக் காலத்தில் போதுமா போதாதா என்று தெரியாது. போதாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ராஜாஜியின் மகனான சி.ஆர். நரசிம்மனுக்கு நாற்பதுதான். அந்த சம்பளத்தில்தான் அவர், அப்பா ராஜாஜி, தங்கை லக்ஷ்மி (எதிர்காலத்தில் காந்தியின் மருமகள்) எல்லாரும் வாழவேண்டுமாம்! அதுவும் 17×10 அடி உள்ள ஒரே அறை கொண்ட வீட்டில்!

பணக்கார வக்கீல் தன் பங்களா, ஆயிரக்கணக்கில் வருமானம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நாற்பது ரூபாய் சம்பளத்தில் எதற்கு வாழ்ந்தார்? (இதே போல் ஈ.வெ.ரா.வும் வருமானம் வரும் தோப்புகளை எல்லாம் அழித்தார்.) சரி அவருக்கு பைத்தியம் என்றாலும், கல்கி, மற்றும் பலரும் எதற்கு அவர் பேச்சை கேட்டுக்கொண்டு சொற்ப சம்பளத்தில் அங்கே வேலை செய்தார்கள்?

மதுவிலக்குக்காக ஒரு பத்திரிகை – இது எப்படி விற்கும் என்று தெரியவில்லை. கல்கிக்கும் இதே சந்தேகம்தான். பத்து இதழ்கள் வந்திருக்கின்றன. ராஜாஜியும் கல்கியுமே எல்லா பக்கங்களையும் நிரப்பி இருக்கிறார்கள். ராஜாஜி உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போனதும் கல்கி இழுத்து மூடிவிட்டாராம்.

இரண்டு கேள்விகள்:

  • ஒரு இடத்தில் அந்த ஊரில் பஞ்சம் என்றும் இந்த ஆசிரமம் மூலம் கதர் நூற்பதன் மூலம் லட்சக்கணக்கில் நிவாரணம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். கதர் விற்று அவ்வளவு லாபம் வந்திருக்கப்போவதில்லை. பிறகு லட்சங்கள் எங்கிருந்து வந்தன?
  • சில ஹரிஜன்கள், பிராமணர் அல்லாதார் பற்றி குறிப்பிட்டாலும் ஆசிரமத்தின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் பிராமணர்கள் போலத்தான் தோன்றுகிறது. காங்கிரஸில் அப்போது இருந்த பிராமணர் அல்லாதோர் (திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, முத்துரங்க முதலியார் – இவர் பின்னால் முதலமைச்சரான பக்தவத்சலத்தின் மாமனார், ஜே.சி. குமரப்பா, சர்தார் வேதரத்தினம் பிள்ளை) யாருமே இதில் பங்கெடுத்துக்கொள்ள முன் வரவில்லையா? இல்லை ராஜாஜி பிராமணர்களுக்கு முன்னுரிமை அளித்தாரா?

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பொன்னியின் செல்வன்

ஒரு வழியாக பொ.செ. திரைப்படமாக வந்துவிட்டது. அதனால் புத்தகம் பற்றிய என் பதிவை மீள்பதித்திருக்கிறேன். மூலப்பதிவு இங்கே

பதின்ம வயதில் நடிக நடிகையர்களுக்கு எங்கள் தேர்வு:

ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலும் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

இன்று விக்ரம் ஆதித்தகரிகாலன்; ஜெயம் ரவி அருண்மொழிவர்மன்; கார்த்தி வந்தியத்தேவன்; பெரிய பழுவேட்டரையராக சரத்குமார்; ஜெயராம் ஆழ்வார்க்கடியான்… பிரகாஷ் ராஜ் சுந்தர சோழன். ஐஸ்வர்யா ராய் மந்தாகினி/நந்தினி; த் ரிஷா குந்தவை; பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர்; கிஷோர் ரவிதாசன்… பொருத்தமாகத்தான் இருக்கும், ஆனால் பிரகாஷ் ராஜ் பெரிய பழுவேட்டரையராக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ? என் கண்ணில் சுந்தர சோழன் ஒரு filler, மொக்கை ரோல். அதுவும் பிரகாஷ் ராஜ் எப்படி மந்தாகினி/நந்தினியைப் பார்த்து துடிப்பார் என்று இப்போதே கண்ணில் தெரிகிறது. அவருக்கு கொஞ்சம் meatier பாத்திரமான பெரிய பழுவேட்டரையர் ரோலைக் கொடுத்திருக்கலாமோ? திரைப்படத்தைப் பார்க்காமல் சொல்லக் கூடாதுதான், ஆனால் அருண்மொழிக்கு ஜெயம் ரவியைப் பற்றி எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது…

கதையிலிருந்து மாற்றிவிட்டார்கள் என்று சில விமர்சனங்களைப் பார்க்கிறேன். வந்தியத்தேவன் தற்செயலாக கடம்பூர் மாளிகையில் சதி நடக்கிறதா என்று கண்டுபிடித்தானா இல்லை அதை உளவறியத்தான் அனுப்பப்பட்டானா என்பதெல்லாம் கதையின் போக்கை மாற்றுவதில்லை. இதைப் போன்ற சின்ன சின்ன கதையின் போக்கை மாற்றாத மாற்றங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம், இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உதாரணமாக ராஷ்டிரகூடர்களோடு சண்டையைக் காட்டுவதில் என்ன பிரச்சினை? பிரம்மாண்டப்படுத்துவதற்காக சேர்த்திருப்பார்கள். நொட்டை சொல்பவர்கள் நாவலை உள்வாங்கிக் கொண்டார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஆனால் ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைப்படத்தை நான் கட்டாயமாகப் பார்ப்பேன். எல்லாரும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். தமிழ் நாவல்களுக்கு மார்க்கெட் அதிகரிக்க வேண்டுமென்றால் இந்த மாதிரிப் படங்கள் வெற்றி பெற வேண்டும். இது வென்றால் அடுத்தபடி யவனராணியையும் கடல்புறாவையும் திரைப்படமாக்க யாராவது முன் வருவார்கள். இது தோல்வி அடைந்தால் அது இன்னும் பத்து வருஷம் தள்ளிப் போகும். இவையே தள்ளிப் போனால் அம்மா வந்தாளுக்கு இன்னும் இருபது வருஷம் ஆகும்!

பீடிகை போதும், பழைய பதிவு கீழே


பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். கல்கி பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.

இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.

ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.

பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.

வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு போய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.

பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.

இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலும் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

நெருங்கிய உறவினர் கல்கி

என் தங்கையின் (அருணா) மூத்த மைத்துனரின் (விசு) இளைய மருமகளின் (சாரதா) அப்பாவின் கஸின் (அத்தான்? அம்மாஞ்சி? ஒன்று விட்ட அண்ணா/தம்பி?) ராம்நாராயணின் (முன்னாள் கிரிக்கெட் வீரர் உட்பட பல முகங்கள் கொண்டவர்) மனைவியின் (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகி கௌரி ராம்நாராயண்) தாத்தா கல்கி!

ஆங்கிலத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கிறேன்.

I am Kalki’s granddaughter’s husband’s first cousin’s daughter’s father-in-law’s sister-in-law’s elder brother! Just 7 hops! MS is just a couple more hops away!

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

கல்கி: சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்றாகத் தெரிந்த நாவல். கல்கி மறைந்த பிறகும் கல்கியின் பழைய தொடர்கதைகளில் ஏதோ ஒன்று – பார்த்திபன் கனவு, சி. சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை – கல்கி பத்திரிகையில் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். நான்கும் மீண்டும் மீண்டும் விரும்பிப் படிக்கப்பட்டன, கல்கி பத்திரிகை விற்றது. அந்த அளவுக்கு பிரபலமான நாவல்.

கதையின் பலம் பாத்திரங்கள் – குறிப்பாக நாகநந்தி. நாகநந்தி கற்பனைப் பாத்திரம். புலிகேசியின் இரட்டை சகோதரர். அதே உருவம். புத்த பிக்ஷுவாக சாளுக்கிய அரசுக்கு ஒற்று வேலை பார்ப்பவர். நாகநந்தியின் பாத்திரம்தான் கதையை ஒருங்கிணைக்கிறது, கதையின் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டாவதாக மகேந்திரவர்மர். புலிகேசியின் படையெடுப்பை தடுக்க மகேந்திரவர்மர் செய்யும் தந்திரங்கள் சுவாரசியமானவை. சிவகாமி, நரசிம்மவர்மர், நரசிம்மவர்மரின் படைத்தளபதியாக பரிணமிக்கும் பரஞ்சோதி, சிவகாமியின் அப்பா ஆயனச் சிற்பி எல்லாருமே பலமான பாத்திரங்கள்.

இரண்டாவது பலம் கதைப்பின்னல். அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் குறைவு. ஒரு சம்பத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு சரளமாகச் செல்லும் கதை. என் கண்ணில் வெகு சில தமிழ் சரித்திர நாவல்களே இப்படி கட்டுக்கோப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன.

பலவீனம்? இது பொழுதுபோக்கு நாவல்தான், வணிக நாவல்தான், இலக்கியம் அல்ல. கல்கியே அப்படித்தான் எழுத விரும்பி இருப்பார். பெரிய மானுட தரிசனங்களை எதிர்பார்க்க முடியாது. நல்ல அரண்மனைச் சதி நாவல், அவ்வளவுதான். பாத்திரங்கள் – நாகநந்தி உட்பட – caricatures மட்டுமே. வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே கல்கி இதை எழுதி இருப்பார். கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், ஆகியவையே இவற்றின் பலம். 10-11 வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

சி. சபதத்தை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டதால் கதை சுருக்கமாக: சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசர் மகேந்திரவர்மர் மீது படையெடுத்து வந்ததும், ஆரம்பத்தில் வெற்றி பெற்றதும் மகேந்திரவர்மர் புலிகேசியை வென்று தன் ராஜ்யத்துக்கு திரும்பச் செய்ததும், பின்னாளில் மகேந்திரவர்மரின் மகனான நரசிம்மவர்மர் புலிகேசி மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றி சாளுக்கியத் தலைநகரான வாதாபியை அழித்ததும் வரலாறு. இந்தப் பின்புலத்தில் இளைஞரான நரசிம்மவர்மர் – நடனப் பெண் சிவகாமி காதல், புலிகேசி திரும்பிச் செல்லும்போது சிவகாமியைக் கடத்திச் செல்லுதல், சிவகாமி வாதாபி அழிக்கப்பட்டாலொழிய காஞ்சி திரும்பமாட்டேன் என்று சபதம் செய்தல், காதல் முறிவு, நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல் – obsession, சபதப்படி வாதாபி அழிக்கப்படல் என்று கதை.

கல்கி போட்ட கோட்டில்தான் ஓரிரண்டு தலைமுறைக்கு தமிழ் சரித்திர நாவல்கள் எழுதப்பட்டன – அரண்மனைச் சதிகள். அது அவரது தவறு இல்லைதான். ஆனால் அப்படி சரித்திர நாவல்கள் வெறும் அரண்மனைச் சதி நாவல்களாக குறுகிவிட்டது பா. கனவு, சி. சபதம், பொ. செல்வன் நாவல்களின் துரதிருஷ்டமான விளைவு என்று கருதுகிறேன்.

ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த சரித்திர பொழுதுபோக்கு நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ரா பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

ஆயிரம் நொட்டை சொன்னால் என்ன, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பார்த்திபன் கனவு

1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல்.

பார்த்திபன் கனவுக்கும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களுக்கும் கதைப்பின்னல் என்ற வகையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மாயாவினோதப் பரதேசி நாவலில் திகம்பர சாமியார் செய்யும் அஜால்குஜால் வேலைகளை இங்கே சிவனடியார் செய்கிறார். ரோமியோ ஜூலியட் போல ஒரு ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் கல்கி வடுவூராரை விட பல மடங்கு தொழில் திறமை உள்ளவர். அவரால் வெகு சரளமாக எழுத முடிகிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கியால் அதை சுவாரசியமாக எழுத முடிகிறது. எங்க வீட்டுப் பிள்ளையும் ஷோலேயும் இன்றும் ரசிக்கும்படிதானே இருக்கின்றன? இன்றே ரசிக்க முடிகிறதென்றால் அன்று இந்த நாவல் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்? வாசகர்கள் எத்தனை தூரம் விரும்பிப் படித்திருக்க வேண்டும்? கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து விலகி கல்கி பத்திரிகையை ஆரம்பித்த சில மாதங்களிலேயே இதை தொடர்கதையாக எழுத ஆரம்பித்துவிட்டார். வியாபாரம் பெருக இந்த நாவல் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். பத்திரிகையில் தொடர்கதையாக வருவது இந்த நாவலுக்கான வாசகர் வட்டத்தையும் அதிகரித்திருக்க வேண்டும்.

கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட் ஆகியோரின் பாணியில் ஆனால் அவர்களை விட சிறப்பாக எழுதினார்.

கல்கி எழுதியது வணிக நாவல். வணிக நாவல் எழுத வேண்டும், வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே இதை எழுதி இருப்பார். இதில் பெரிய மானுட தரிசனங்கள் இல்லை. கல்கியின் எந்த நாவலிலும் அதெல்லாம் கிடையாது. கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் ஆகியவையே இவற்றின் பலம். எட்டு ஒன்பது வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

பார்த்திபன் கனவை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அதனால் கதை சுருக்கமாக: சோழ அரசன் பார்த்திபன் பல்லவ அரசன் சக்ரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு கப்பம் கட்ட மறுக்கிறான். அவனது கனவு சோழ அரசு பல்லவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும், கரிகாலன் காலத்து கீர்த்தியை மீண்டும் அடைய வேண்டும் என்பது. மகன் விக்ரமன் சிறுவனாக இருக்கும்போதே நரசிம்மவர்மரை எதிர்த்துப் போராடி இறக்கிறான். அவன் வீரத்தைக் கண்டு பூரித்துப் போன சிவனடியார் ஒருவர் அவன் இறக்கும்போது விக்ரமனை வீரனாக வளர்க்கிறேன் என்று வாக்களிக்கிறார். விக்ரமன் வாலிபன் ஆன பிறகு சக்ரவர்த்தியை எதிர்த்து நாடு கடத்தப்படுகிறான். உண்மையில் நரசிம்மவர்மர் அவனை தொலைதூர தீவு ஒன்றுக்கு அரசனாக அனுப்புகிறார். அனுப்புவதற்கு முன் நரசிம்மவர்மரின் மகள் குந்தவி விக்ரமனை நோக்க அண்ணலும் நோக்குகிறான். குந்தவியைத் தேடி மீண்டும் தமிழகம் திரும்பும் விக்ரமன், அவனைத் துரத்தும் காபாலிகன் ஒருவன், சிவனடியார் உண்மையில் யார் என்ற மர்மம், அடுத்தபடி எழுதப் போகும் சிவகாமியின் சபதம் நாவலுக்கு அங்கே இங்கே ஒரு தீற்றல்…

ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

கல்கி சரித்திர நாவலை இப்படி எழுதலாம் என்று ஒரு கோடு போட்டார், ரோடு போட இரண்டு தலைமுறைக்கு யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்றும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது.

கல்கியைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.

ஆயிரம் நொட்டை சொன்னாலும் தமிழர்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வனை முதன்முதலாகப் படிக்கும்போது 13 வயதிருக்கலாம். வாரப்பத்திரிகை பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்த புத்தகங்கள். வைத்திருந்த் உறவினரோ தருவதற்கு ஒரே பிகு. கெஞ்சிக் கூத்தாடி வாங்கிப் படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. கதைப்பின்னல் அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்பதை பதில் இல்லாத கேள்வியாக இல்லை இல்லை எந்த பதிலிலும் ஓட்டை இருக்கும் கேள்வியாகப் படைத்தது அபாரமான உத்தி ஆகத் தெரிந்தது/தெரிகிறது. நந்தினியின் பாத்திரப் படைப்பு, ஆழ்வார்க்கடியானின் அலப்பறைகள், ஆதித்த கரிகாலனின் மனச்சிக்கல்கள், அருண்மொழிவர்மன், பெரிய பழுவேட்டரையர், பூங்குழலி, மந்தாகினி, குந்தவை ஏன் கந்தமாறனும் மணிமேகலையும் பினாகபாணியும் மதுராந்தனும் ரவிதாசன் தலைமையிலான ஆபத்துதவிகள் வரை மிகவும் அருமையான பாத்திரப் படைப்புகள். இன்று வரையில் தமிழில் இதை விடச் சிறந்த அரண்மனைச் சதி sub-genre சரித்திர நாவல் வந்ததில்லை. இதற்கு சமமான ஆகிருதி உள்ள சரித்திர நாவல் என்று எனக்குத் தெரிவது பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஒன்றுதான். அலெக்சாண்டர் டூமா மேலை உலகத்தில் கொண்டாடப்படுகிறார். அவர் எழுதிய எந்த நாவலையும் விட பொ. செல்வன் சிறப்பான கதைப்பின்னல் கொண்டது. வால்டர் ஸ்காட் எல்லாம் எங்கோ பின்னால்தான் நிற்க வேண்டும்.

இன்றும் கல்கி போட்ட ரோட்டில்தான் அனேகத் தமிழ் வரலாற்று நாவல் எழுத்தாளர்கள் வெறும் கோடு மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவரை நெருங்க முடியவில்லை. சாண்டில்யன் உட்பட.

ஆனால் இன்று 13 வயது இல்லை, நாலு கழுதை வயதாகிவிட்டது. அதனால் குறைகள் தெரிகின்றன. பொ. செல்வனைப் படிப்பவர்களுக்கு தமிழகத்தில் அன்று ஜாதி என்று ஒன்று இருந்ததா என்பது கூடத் தெரியாது. ராஜாவும் இளவரசர்களும் குறுநில மன்னர்களும் ஒற்றர்களும் அமைச்சர்களும்தான் சமூகமே. ஏதோ பேருக்கு அங்குமிங்கும் ஒரு ஜோதிடரும் வைத்தியரும் ஓடக்காரன்/ஓடக்காரியும் வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அரண்மனையோடு நெருங்கிய உறவிருக்கிறது. சரித்திர நாவலின் வீச்சு என்பது மிகவும் குறைந்திவிடுகிறது. கதைப்பின்னல் மட்டுமே நாவலின் பெரும்பலமாக நிற்கிறது. பெரும் மானிட தரிசனம் என்று எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. மனிதர்களில் இயல்புகளைத் தோலுரித்துக் காட்டிவிடும் படைப்பில்லை. சுவாரசியம் மட்டுமே இலக்காக வைத்து எழுதப்பட்ட நாவல். அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் போல. அதனால் minor classic என்றுதான் வகைப்படுத்துவேன்.

பொ. செல்வனைப் படிக்காதவர்களுக்காக: பொ. செல்வன் என்று அழைக்கப்படுபவன் அருண்மொழிவர்மன் – பிற்காலத்தில் ராஜராஜ சோழன். அருண்மொழிவர்மனின் அண்ணனும் பட்டத்து இளவரசனும் ஆன ஆதித்தகரிகாலன் நந்தினியை விரும்புகிறான். நந்தினிக்கோ ஆதித்த கரிகாலனின் எதிரியான வீரபாண்டியனோடு உறவு. இது தெரிந்ததும் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொல்கிறான். நந்தினி ஆதித்த கரிகாலனை பழிவாங்க சோழ அரசின் முக்கியத் தூணான கிழவரான பெரிய பழுவேட்டரையரை மணக்கிறாள். பழுவேட்டரையர் அவள் சொல்படி ஆடுகிறார். ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக அவனது பெரியப்பாவின் மகனான “போலி” மதுராந்தகனை அரசனாக்க சதி செய்கிறாள். எதிர்தரப்பில் வந்தியத்தேவனும், இளவரசி குந்தவையும், அருண்மொழிவர்மனும். ஆதித்தகரிகாலன் கொல்லப்படுகிறான். அருண்மொழி அரசனாகாமல் உண்மையான மதுராந்தகனை அரசனாக்குவதுடன் கதை முடிகிறது.

வந்தியத்தேவன் தற்செயலாக சம்புவராயர் அரண்மனைக்கு வருவதும் அங்கே சதியோலாசனை ஒன்றை ஒட்டுக் கேட்பதிலும் ஆரம்பிக்கும் கதை அங்கிருந்தே கீழே வைக்க முடிவதில்லை. வந்தியத்தேவன் நந்தினியைச் சந்திப்பதும், கந்தமாறன் அவனை துரோகி என்று நினைப்பதும், குந்தவையின் ஓலை கொண்டு வந்தியத்தேவன் அருண்மொழியை சந்திக்க செல்வதும், பூங்குழலியின் உதவியோடு சந்திப்பதும், ஆபத்துதவிகள் சோழ மன்னர் பரம்பரையையே ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும் இரண்டு கொலை முயற்சிகள் தோற்பதும், ஒன்று வெல்வதும், பெரிய பழுவேட்டரையரின் மரணமும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டுபோய்விடுகின்றன. ஆழ்வார்க்கடியான், பூங்குழலி போன்றவர்கள் சிறப்பாக வடிக்கப்பட்ட பாத்திரங்கள்.

பதின்ம வயதில் நண்பர்கள் பல மணி நேரமாக ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று பேசி இருக்கிறோம். பெரிய பழுவேட்டரையர் தான்தான் கொன்றேன் என்று ஒத்துக் கொள்கிறார். ஆனால் அவர் இறக்கும்போது தான் கொலையாளி இல்லை என்று சொல்லிவிட்டு இறக்கிறார். ஆதித்தகரிகாலன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஒரு வரி வரும், ஆனால் தற்கொலை இல்லை என்றும் கல்கி தெளிவுபடுத்திவிடுவார். நந்தினி கொல்லவில்லை. ஆபத்துதவியை பெரிய பழுவேட்டரையரே தாக்கிவிடுவார். பிறகு யார்தான் கொன்றது? பேசிக் கொண்டே இருந்திருக்கிறோம்.

இன்னொரு பொழுதுபோக்கு திரைப்படமாக எடுத்தால் யார் யார் நடிக்க வேண்டும் என்று பேசுவது. அன்றைய எங்கள் தேர்வு ரஜினி ஆதித்தகரிகாலனாக; சிவகுமார்தான் அருண்மொழிவர்மனுக்கு சிறந்த தேர்வு என்று தோன்றியது, அதனால் கமல் அவ்வள்வு பொருத்தம் இல்லை என்று தோன்றினாலௌம் கமலுக்கு வந்தியத்தேவன் ரோல். பெரிய பழுவேட்டரையராக சிவாஜி; தேங்காய் ஆழ்வார்க்கடியான். முத்துராமன் கந்தமாறன். விஜயகுமார் சேந்தன் அமுதன். வெண்ணிற ஆடை மூர்த்தி பினாகபாணி. மேஜர் சுந்தர சோழன். சுஜாதா மந்தாகினி. சரிதா அல்லது ராதா பூங்குழலி. லட்சுமி குந்தவை. மனோகர் சின்ன பழுவேட்டரையர். நம்பியார் ரவிதாசன். வானதி அம்பிகா. கடைசியில் நந்தினியாக நடிக்க யாரும் இல்லாததால் திரைப்படம் எடுக்கும் முயற்சியை கைகழுவிவிட்டோம்.

பொ. செல்வனை சுருக்க முடியாது. படியுங்கள் என்றுதான் சொல்ல முடியும். இதை சரியானபடி மொழிபெயர்த்தால் டூமாவின், ஸ்காட்டின் இடத்தில் கல்கி உட்கார வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

கல்கி vs தேவன் – அசோகமித்ரன் ஒப்பீடு

சில வருஷங்களுக்கு முன்னால் அசோகமித்திரன் கல்கியையும் தேவனையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரைக்கு சுட்டி கொடுத்திருந்தேன். மேலோட்டமான கட்டுரை என்று குறையும் பட்டிருந்தேன். அது அவர் காதில் பட்டதோ என்னவோ தெரியாது, நல்ல ஒப்பீடு ஒன்றை எழுதி இருக்கிறார். பசுபதி சாருக்கு நன்றி!

குறிப்பாக இந்தக் கருத்துக்களை நானும் (அனேகமாக) வழிமொழிகிறேன்.

கல்கி திடுக்கிடும் திருப்பங்களிலும் நாடகத்தனமான திருப்பங்களிலும் அவரது கதைகளை விரித்துச் சென்றார். அவருடைய பாத்திரங்கள் ஸ்டீரியோடைப்ஸ் என்ற பிரிவில் வரக் கூடியவை. அவற்றின் மேன்மை, சிறுமை, கயமை எல்லாமே ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. உயர்ந்த மதிப்பீடுகளையும் இலக்குகளையும் வைத்து எழுதினார் என்றாலும் கூட அவருடைய பாத்திரங்கள் பொம்மைத்தனம் கொண்டவை. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் வாசகர் கற்பனையைத் தூண்டக் கூடியவை. சிவகாமி, நாகநந்தி போன்ற பாத்திரங்கள் வாசகர்களால் விரிவாக்கப்பட்டவை. கல்கியின் நிறையப் பாத்திரங்கள் அவருடைய பல இதரப் பாத்திரங்களை ஒத்திருக்கும். அவருக்கு முன்மாதிரியாக ஆங்கில, ஃப்ரெஞ்சு ஆசிரியர்களில் கூற வேண்டுமானால் வால்டர் ஸ்காட் மற்றும் அலெக்சாண்டர் டூமாசைக் கூறலாம்.

தேவன் கல்கியின் சமகாலத்தவரானாலும் இலக்கிய உத்திகளில் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர். சாகசப் பார்வை தவிர்த்து யதார்த்தப் போக்கில் உலகையும் பாத்திரங்களையும் சித்தரிக்க முயன்றவர். இதனால் தேவனால் ஏராளமான பாத்திரங்களை படைக்க முடிந்தது. எல்லாப் பாத்திரங்களும் தனித்தனியானவை. தனித்தன்மை கொண்டவை. பழக்க வழக்கங்கள், பேச்சு முதலியவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுபவை. இலக்கிய ரீதியாக கல்கியை விட உயரிய இடம் தேவனுக்கு அளித்தேயாக வேண்டும். கல்கி அளவுக்கு அவர் பிரபலம் அடைய முடியவில்லை என்றால் கல்கியின் கதைகள் இருந்த மயக்க அம்சம் (fantasy) தேவன் கதைகளிலும் பாத்திரங்களிலும் கிடையாது. கல்கியின் தொடர்கதைகளைப் படித்துவிட்டு சிவகாமி, விக்கிரமன், நந்தினி, நாகநந்தி என்று பலர் புனைபெயர் வைத்துக் கொண்டார்கள். சாம்பு என்றும் சந்துரு என்றும் ஜகன்னாதன் என்றும் சுதர்சனம் என்றும் யாரும் தன்னைப் புது நாமகரணம் செய்து கொள்ளவில்லை. இந்த விதத்தில் தேவன் சார்லஸ் டிக்கன்ஸ் வகை எனலாம்.

கல்கி, தேவன் இருவருக்கும் நிறைய நகைச்சுவை உண்டென்பார்கள். கல்கியுடையது கிண்டல் வகையைச் சார்ந்தது. தேவனுடையது மனித இயல்பின் வினோதங்களைச் சித்தரிப்பது.

அசோகமித்திரன் சொல்லும் குறைகளை எல்லாம் – பொம்மைத்தனம் உள்ள பாத்திரங்கள் இத்யாதி – கல்கி பொன்னியின் செல்வனில் தாண்டி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அலை ஓசையிலும் தாண்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது 99 சதவிகிதம் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் தியாகபூமியிலும் கள்வனின் காதலியிலும் பார்த்திபன் கனவிலும், ஏன் சிவகாமியின் சபதத்திலும் கூட வரும் பாத்திரங்கள் பொம்மைத்தன்ம் உள்ளவையே. சி. சபதத்தில்தால் அவர் தனது எல்லைகளைத் தாண்ட முயற்சித்திருக்கிறார். பொ. செல்வனில் வெற்றி அடைந்திருக்கிறார்.

தேவனின் பாத்திரங்களிலும் அனேக ஸ்டீரியோடைப்கள் உண்டு. மிஸ்டர் வேதாந்தத்தின் சுவாமிக்கும் ஸ்ரீமான் சுதர்சனத்தின் முதலாளிக்கும் என்ன வித்தியாசம்? கோமதியின் காதலனில் இல்லாத ஸ்டீரியோடைப்பா? அவர் அனேகமாக எழுதியது வாரப் பத்திரிகை தொடர்களே, வணிக இலக்கியமே. சில சமயங்களில் வணிக எழுத்து இலக்கியமாகி விடுகிறது – துப்பறியும் சாம்புவைப் போல, ஸ்ரீமான் சுதர்சனத்தைப் போல. கல்கிக்கும் அதேதான். இருவருமே வணிக எழுத்தைத்தான் எழுத விரும்பினார்கள், பிரபலமாக இருக்க வேண்டும், நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். ஆனால் வாரப்பத்திரிகை எழுத்தின் தடைகளை, எல்லைகளை மீறி அவர்களது திறமை இலக்கியமாகப் பரிமளிக்கிறது என்றுதான் கருதுகிறேன்.

அக்கப்போர் வேண்டுமென்பவர்களுக்காக: கல்கி இருந்த வரை தேவன் விகடனில் தொடர்கதை எதுவும் எழுதவில்லையாம். தேவனின் பேர் இல்லாமல்தான் அவரது நிறைய எழுத்து வருமாம். விகடனில் வேலை செய்த பலருக்கும் கல்கி ஆசிரியராக இருந்தபோது சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை, தேவன் காலத்திலும் இது தொடர்ந்ததாம்.

அசோகமித்திரனின் ஒப்பீட்டை கட்டாயம் படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம், தேவன் பக்கம், கல்கி பக்கம்