(மீள்பதிவு, திருத்தங்களுடன்)
\இந்து சுந்தரேசன் புத்தகங்களைப் பற்றிய பதிவில் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றி இரா. முருகன் “Vernacular (Tamil, Malayalam, Kannada, Marathi etc) writing is miles ahead of these.” என்று சொல்லி இருந்தார். உண்மையே. இருந்தாலும் அத்தனையும் குப்பை என்று சொல்லிவிடுவதற்கில்லை. பொதுவாக இந்தியர்கள் எழுதும் ஆங்கில இலக்கியம் சுமார்தான். நினைவு வரும் சில நல்ல புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி இந்தப் பதிவில்.
என்னைப் பொறுத்த வரையில் முதன்மையானவர் ஆர்.கே. நாராயண்தான். இத்தனைக்கும் பொதுவாக அவரது கதைகளில் எல்லாம் சுவாரசியம் குறைவுதான். சில நாவல்களை – Swami and Friends, English Teacher, Waiting for the Mahatma – ரசித்திருக்கிறேன். சுவாமியின் உலகம் மிகவும் சுவாரசியமானது. நிறைய நம்பகத்தன்மை உடையது. மனைவியை இழந்தவரின் துக்கம் English Teacher-இல் genuine ஆக வெளிப்பட்டிருக்கும். Waiting for the Mahatma எனக்குப் பிடித்த “சுதந்திரப் போராட்ட நாவல்களில்” ஒன்று. அவருடைய புகழ் பெற்ற பல புத்தகங்கள் – Guide, Man-Eater of Malgudi, Mr. Sampath, Vendor of Sweets, Financial Expert மாதிரி – எனக்கு கொஞ்சம் போர் அடித்தன. ஆனால் அவை எல்லாம் சேர்ந்து தரும் ஒரு சிறு நகர ambience எனக்கு மிகவும் பிடிக்கும். கொஞ்சம் படித்த, professional மற்றும் சிறுதொழில் அதிபர்கள் வர்க்கத்தின் கண்களிலிருந்து அந்த சிறு நகரத்தை பார்த்து அதை நமக்கும் சொல்கிறார். (அந்த நகரம் மைசூராகத்தான் இருக்க வேண்டும்.)
முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய கதைகள் – கூலி, Untouchable – இரண்டு படித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. ஒரு கதையில் கக்கூஸ் கழுவும் பங்கி ஜாதியைச் சேர்ந்த ஒருவன் வாழ்க்கையில் ஒரு நாள் விவரிக்கப்படுகிறது – அவன் காந்தியின் ஒரு பேச்சை கேட்பது நினைவிருக்கிறது. நல்ல framework உள்ள கதை என்று அப்போது நினைத்தேன்.
ராஜாராவ் எழுதிய ஒரே ஒரு புத்தகம் – காந்தபுரா – படித்திருக்கிறேன். நன்றாக ஆரம்பித்து நன்றாகப் போகும். ஆனால் என்னவோ பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கும். இன்னும் ஒரு சுதந்திரப் போராட்ட நாவல்.
நாராயண், ஆனந்த், ராவ் மூவரும் இந்திய ஆங்கில புனைவுலகத்தின் “முதல் மூவர்” என்று கருதப்படுகிறார்கள். இரா. முருகன் சொல்வது போல மூவரையும் விஞ்சும் பல இந்திய மொழி எழுத்தாளர்கள் உண்டு. உதாரணமாக ராஜாராவ் பைரப்பாவின் அருகே கூட வரமுடியாது. ஆர்.கே. நாராயண் ஒருவர்தான் – அதுவும் Swami and Friends மட்டும்தான் – இன்னொரு ஐம்பது வருஷம் போனாலும் நினைவில் இருப்பார்/இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஜிம் கார்பெட் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் “முதல் மூவரில்” ஒருவர் இல்லைதான். ஆனால் நல்ல, விறுவிறுப்பான புத்தகங்களை எழுதி இருக்கிறார். Maneater of Kumaon ஒரு கிளாசிக். அதை மட்டுமாவது கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். ராஜாராவை விட, முல்க் ராஜ் ஆனந்தை விட இவர்தான் நினைவில் இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. கார்பெட் ஒரு ஆங்கிலேய அதிகாரி. “வேட்டைக்காரர்”. மனிதர்களை சாப்பிட ஆரம்பித்துவிட்ட பல புலிகளை, சிறுத்தைகளை சுட்டுக் கொன்றிருக்கிறார். அவர் எழுதியவை எல்லாம் அந்த வேட்டை அனுபவங்கள்தான் (non-fiction).
குஷ்வந்த் சிங்கின் கதைகளில் Train to Pakistan மட்டுமே படித்திருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்புலக் கதை. படிக்கலாம். அவரது மிச்ச புனைவுகளை புரட்டித்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நல்ல அபிப்ராயம் இல்லை.
மனோகர் மல்கோங்கர் ஆறேழு மாதங்களுக்கு முன்தான் இறந்துபோனார். அவர் இறந்தபோது நான் எழுதிய அஞ்சலியை இங்கே படிக்கலாம். எனக்கு Bend in the Ganges புத்தகம் பிடித்திருந்தது.
பதின்ம வயதில் ரஸ்கின் பாண்ட் சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். பாண்ட் ஆங்கிலோ-இந்தியர். அவர் எழுதிய என்ற கதை ஜூனூன் என்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படமாக வந்தது. அதைப் படிக்க வேண்டும் பார்க்கிறேன், இன்னும் கிடைக்கவில்லை. படத்தை ஷ்யாம் பெனகல் இயக்கி இருந்தார். சஷி கபூர், ஷபனா ஆஸ்மி, நசீருதின் ஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். நல்ல படம்.
சேதன் பகத் இன்றைய கூல் எழுத்தாளர். என் கண்ணில் படுசுமார். ஐஐடி பின்புலத்தில் எழுதப்பட்ட Five Point Someone புத்தகம்தான் 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மூலக்கதை. இன்றைய நகர்ப்புற, IT இளைஞர் கூட்டத்தை குறி வைத்து எழுதுகிறார், அந்த மார்க்கெட்டில் ஒரு ஸ்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்னாள் அமைச்சர், ஐ.நா. சபையில் பெரிய பதவியில் இருந்த சஷி தரூர் Great Indian Novel என்ற மகாபாரதம் சார்ந்த ஒரு படைப்பை எழுதி இருக்கிறார். அந்தக் காலத்தில் பிடித்திருந்தது.
சல்மான் ரஷ்டியின் Haroun and the Sea of Stories படிக்க ஆரம்பித்தேன். மிக நன்றாக இருந்தது. சரியான மூட் வர வேண்டும் என்று மூடி வைத்துவிட்டேன், பல வருஷம் ஆகியும் மூட் இன்னும் வரவில்லை. அவரது புகழ் பெற்ற Midnight’s Children புத்தகத்தை யாராவது படித்திருக்கிறீர்களா? எப்படி இருக்கிறது?
சுகேது மேத்தாவின் Maximum City புத்தகத்தை (Non-Fiction) நான் விரும்பிப் படித்தேன். மும்பைக்கு (கொஞ்ச நாள்) திரும்பி வரும் ஒரு அமெரிக்க இந்தியனின் வாழ்க்கை. எப்படியோ மிஷன் காஷ்மீர் என்ற படத்தில் வேறு பணி புரிவார். கொஞ்சம் நீளமான புத்தகம் என்றாலும் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
விக்ரம் சந்த்ராவின் Sacred Games நன்றாக ஆரம்பித்தது. பெரிய புத்தகம், பாதியில் நிறுத்தினேன், இன்னும் தொடர முடியவில்லை. இது ஒரு விதத்தில் Maximum City புத்தகத்தின் companion volume என்று தோன்றுகிறது.
உபமன்யு சாட்டர்ஜியின் English, August எனக்கு பிடித்திருந்தது. ஒரு ஹை கிளாஸ் குடும்பத்தில் பிறந்து கலெக்டர் ஆகும் ஒருவனின் அனுபவங்கள். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
சாம்ராட் உபாத்யாய் என்ற நேபாளி எழுத்தாளரை எனக்கு கொஞ்சம் பிடிக்கும். Royal Ghosts என்ற சிறுகதைத் தொகுப்பு கொஞ்சம் subtle ஆக இருந்தது. ஆனால் இப்போது சட்டென்று கதைகள் எதுவும் நினைவு வரவில்லை.
அனுராக் மாத்தூரின் Inscrutable Americans கொஞ்ச நாள் பாப்புலராக இருந்தது. ஒரு இந்திய சிறு நகர சூழலிலிருந்து அமெரிக்காவில் படிக்க வரும் ஒருவனின் அனுபவங்கள். சூப்பர்மார்க்கெட்டில் பேரம் பேச முயற்சிப்பது, வாஷிங் மெஷினைப் பார்த்துக் கொண்டே இருப்பது என்று ஜோக்குகள் வரும். அந்தக் காலத்தில் சிரித்தேன்.
அசோக் பாங்கர் ராமாயணத்தை science fiction பாணியில் (Prince of Ayodhya, Siege of Mithila, Demons of Chitrakut, Armies of Hanuman, Bridge of Rama, King of Ayodhya)எழுதிக் கொண்டு வருகிறார். எனக்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒரு சூப்பர்ஹீரோ காமிக்ஸ் புத்தகத்தின் ambience-ஐ கொண்டு வந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். அதற்கு தொழில் திறமை வேண்டும்.
அமிஷ் திரிபாதி இன்னும் பிரபலமானவர். அவருடைய மெலுஹா-சிவா புத்தகங்கள் சக்கைப்போடு போட்டிருக்கின்றன. மார்வெல் காமிக்ஸ் தரத்தில் இருக்கும், சுமாரான புத்தகங்களே. ஆனால் அவரது கற்ப்னை வளத்துக்கு ஒரு ஜே!
வேத் மேத்தா சிறு வயதிலேயே கண்களை இழந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தது நிலைமையை சமாளிக்க ஓரளவு உதவியது. நிறைய எழுதி இருக்கிறார். அனேகமாக தான் பிறந்து வளர்ந்தது, உறவினர்கள் பற்றிய Non-fictionதான். எனக்குப் பிடித்தது Daddyji. டாடிஜியை படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
விகாஸ் ஸ்வரூப்பின் Q and A என்ற புத்தகம்தான் ஸ்லம்டாக் மில்லியனர் படமாக வந்தது. அவரைப் பற்றி கொஞ்சம் விவரமாக இங்கே.
டார்க்வின் ஹால் சில சுமாரான துப்பறியும் கதைகளை, ஆனால் நல்ல இந்திய சித்தரிப்பு உள்ள கதைகளை எழுதி இருக்கிறார்.
ஷோபா தே எழுதுவதெல்லாம் குப்பை. இளம் வயதில் செக்ஸ் பற்றி நிறைய எழுதுவார் என்று Sisters, Socialite Evenings மாதிரி சில புத்தகங்களை தேடிப் பிடித்து படித்திருக்கிறேன்.
ஜும்பா லாஹிரியை எனக்கு கொஞ்சம் பிடிக்கும். இப்போது கதைகள் எதுவும் நினைவு வரவில்லை என்றாலும் அவரது Interpreter of Maladies சிறுகதைத் தொகுப்பு ஓரளவு பிடித்திருந்தது. பாரதி முகர்ஜி (Middleman and Other Stories, Jasmine) இன்று ஓரளவு புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளர். எனக்கு அவர் கதைகள் எல்லாம் சுமாராகத்தான் இருக்கிறது. சித்ரா பானர்ஜி திவாகருணி கொஞ்சம் பிரபலமான அமெரிக்க இந்தியன் எழுத்தாளர். என் கண்ணில் சுமார்தான். இவர்கள் மூவருமே NRI எழுத்தாளர்கள். அவர்களின் கதைகளின் களம் அமெரிக்காதான். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியினரை வைத்து கதைகள் எழுதப்பட்டிருக்கும். இன்னொரு NRI எழுத்தாளரான இந்து சுந்தரேசன் பற்றி பதிவே போட்டுவிட்டேன்.
கவிதா தாஸ்வானி ஒரு அமெரிக்க இந்திய எழுத்தாளர். என் பனிரண்டு வயது பெண்ணுக்குப் பிடிக்குமோ என்று For Matrimonial Purposes புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன், கடைசியில் நான்தான் படித்தேன். இதெல்லாம் டீனேஜர்களுக்காக எழுதப்படும் மில்ஸ் அண்ட் பூன் பாணி (காதல் இல்லை) புத்தகங்கள்.
ஷாமினி ஃப்ளிண்ட் ஒரு மலேசிய/சிங்கப்பூர் இந்திய வம்சாவளி எழுத்தாளர். இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் சில நாவலகளை எழுதி இருக்கிறார். A Most Peculiar Malaysian Murder (2009), A Curious Indian Cadaver (2012). இந்திய வம்சாவளி எழுத்தாளர் என்றுதான் படித்தேன். நீங்களும் அந்தத் தவறை செய்யாதீர்கள்.
கா.சி. வேங்கடரமணி பழைய காலத்து தமிழ் எழுத்தாளர். தேசபக்தன் கந்தன், முருகன் ஒரு உழவன் என்று இரண்டு நாவல்கள் ஓரளவு பிரபலமானவை. அவற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு பிறகு தமிழில் அவரே மீண்டும் எழுதினாராம். இவரைப் போலவே மாதவையா, எஸ்.வி.வி. போன்றவர்களும் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்களாம். சமீபத்தில் பி.ஏ. கிருஷ்ணன் கூட புலிநகக்கொன்றை நாவலை முதலில் ஆங்கிலத்தில் “Tiger Claw Tree” என்று எழுதிவிட்டு பிறகுதான் தமிழில் மொழிபெயர்த்தாராம். வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரின் சில நாடகங்களைத்தான் அவரது மருமகன் வி.சி. கோபாலரத்தினம் தமிழ்ப்படுத்தி இருக்கிறார். அப்படி தமிழ்படுத்தப்பட்ட நாடகத்தைப் பற்றி சமீபத்தில்தான் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அமிதவ் கோஷ் எழுதிய Countdown எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகிறார். நாவல்களை இனி மேல்தான் படிக்க வேண்டும்.
இவர்களைத் தவிர இந்திய பின்புலத்தில் எழுதும் பிற நாட்டவர்களும் உண்டு. ஹெச்.ஆர். எஃப். கீட்டிங்(H.R.F. Keating) இன்ஸ்பெக்டர் கோடே(Ghote) என்ற பாத்திரத்தை வைத்து துப்பறியும் கதைகள் எழுதி இருக்கிறார். ஜான் மாஸ்டர்ஸ் ஆங்கிலேயர் அல்லது ஆங்கிலோ-இந்தியர்களை வைத்து சில நல்ல கதைகளை (Bhowani Junction) எழுதி இருக்கிறார். கிப்ளிங்கைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
அமித் வர்மா (My Friend Sancho), த்ரிடி உம்ரீகர், மனில் சூரி(Death of Vishnu, Age of Shiva), இந்திரா சின்ஹா (Animal People), விக்ரம் சேத் (Golden Gate, Suitable Boy), நயனதாரா செகால், ஆலன் சீலி (Trotternama), அருந்ததி ராய்(God of Small Things), ரோஹின்டன் மிஸ்திரி(Such a Long Journey), ஹரி குன்ஸ்ரு (Transmission), பல இஸ்மாயில் மெர்ச்சன்ட் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ருத் ஜப்வாலா, சஷி தேஷ்பாண்டே (Long Silence – இதை வாஸந்தி தமிழில் மவுனப்புயல் என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார்), அனிதா தேசாய் (Bye Bye Blackbird), கிரண் தேசாய் (அனிதா தேசாயின் மகள் – Hulabaloo in the Guava Orchard), ஜி.வி. தேசானி (All About H. Hatterr), குர்சரண் தாஸ் (A Fine Family), நிரத் சவுதுரி (Autobiography of an Unknown Indian), அர்விந்த் அடிகா (White Tiger) ஆகிய புத்தகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. நீங்கள் யாராவது?
உயர்தர புத்தகம் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவே (Swami and Friends, Man-Eater of Kumaon). படிக்கக் கூடியவை என்று பல உண்டு. உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் அவற்றைப் பற்றியும் சொல்லுங்களேன்! என்னுடைய “படிக்கலாம்” லிஸ்டை வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன். நான் சிறு வயதில் படித்து இப்போது மங்கலாக மட்டுமே நினைவிருப்பதை சேர்க்கவில்லை.
- R.K. Narayan – Swami and Friends, English Teacher, Waiting for the Mahatma
- Jim Corbett – Man-Eater of Kumaon
- Manohar Malgonkar – Bend in the Ganges
- Khushwant Singh – Train to Pakistan
- Sashi Tharoor – Great Indian Novel
- Salman Rushdie – Haroun and the Sea of Stories
- Suketu Mehta – Maximum City
- Vikram Chandra – Sacred Games
- Upamanyu Chatterji – English, August
- Ved Mehta – Daddyji
- Samrat Upadhyay – Royal Ghosts
- Jhumpa Lahiri – Interpreter of Maladies
தொடர்புடைய சுட்டி:
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் – பரிதோஷ் உத்தமின் லிஸ்ட்