கந்தர் அனுபூதி

என் சிறு வயதில் வீட்டில் காலையில் எழுந்து கந்தசஷ்டி கவசம் சொன்னால்தான் காப்பி கிடைக்கும். சுலோகம் சொல்வதற்கும் முன்னால் குளித்தாக வேண்டும். அதனால் சோப்பு போடும்போதே கடகடவென்று சொல்ல ஆரம்பித்துவிடுவோம். துணியை மாட்டிக் கொள்ளும்போது பாதியாவது முடிந்திருக்கும். இப்படி ஒரு கட்டுப்பாடு இருந்ததால் இன்றும் கந்தசஷ்டி கவசம் நினைவிருக்கிறது. அதே நேரத்தில் அதன் மீது சிறு வயதில் ஏற்பட்ட கடுப்பும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது.

அதிலும் டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு என்று சொல்லும்போது மனதுக்குள் கொஞ்சம் சிரிப்பு வரும். வட்டக் குதத்தைக் கூட விடமாட்டேன் என்கிறாரே என்று தோன்றும். கவிதை தெரியாத வயதுதான், (இன்று மட்டும் தெரியுமா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்) ஆனால் நயமே இல்லாத பாடல்/கவிதை என்று தோன்றியது. அம்மாவிடம் சொல்லிவிட முடியாது…

அந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் பக்தி இருந்தது. வேறு ஏதாவது சுலோகம் சொல்லலாம் என்று தேடி இருக்கிறேன். விநாயகர் அகவல் (இன்றும் முக்கால்வாசி நினைவிருக்கிறது), கந்தர் அனுபூதி இரண்டும்தான் முயற்சி செய்தேன். இரண்டுமே அருமையான சந்தம் உள்ளவை. சஷ்டி கவசமும் நல்ல சந்தம் உடையதுதான், ஆனால் விநாயகர் அகவல் வேற லெவல். (சில பாரதிதாசன் கவிதைகளில் இதே மாதிரி நல்ல சந்தம் உண்டு.) கந்தர் அனுபூதியோ, கையில் பிடிக்க முடியாது. அதற்கு இணையான சந்தத்தை சில பாரதியார் கவிதைகளில் பார்த்திருக்கிறேன். அதை விடச் சிறந்த சந்தத்தை சில கம்பன் கவிதைகளிலும் திருப்புகழிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். சந்தத்திற்கு அருணகிரி என்பது சத்தியமான வார்த்தை.

அந்த வயதிலும் கந்தர் அனுபூதி கவிதை என்று தெளிவாகத் தெரிந்தது. அதனாலேயே பிடித்துப் போய்விட்டது. என்ன, ஓரிரு வருஷம்தான் பாராயணம், அதனால் இன்று நினைவில் இருப்பவை சில பாடல்கள் மட்டும்தான்.

எல்லாவற்றையும் விட மனதில் ஆழப் பதிந்த பாடல் இதுதான்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே

சும்மா இரு சொல்லற என்பது என்னைத் தொட்ட வார்த்தை. அப்படி இருந்தால் கடவுளைத் தவிர வேறு பொருளை அறியாமல் இருக்கலாம் என்பது பெரிய கனவாக இருந்தது. அப்போதெல்லாம் மனதில் ஏதாவது ஓடிக் கொண்டே இருக்கும். சும்மா இருக்க முயன்று பார்த்தேன், நடக்கவே இல்லை. இன்றும் கூட வாய்ப்பில்லைதான். முருகனைத் திருடன் என்று அழைப்பது கவர்ச்சிகரமான வார்த்தைப் பிரயோகம்!

முதல் பாடலில் ஆடும் பரிவேல் அணிசேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய் என்று கேட்பதும் அருமை. தேளும் பாம்பும் செய்யான் பூரானிடத்திடமிருந்து என்னைக் காப்பாற்று என்று மனதில் இளக்காரச் சிரிப்புடன் தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவனுக்கு உன்னைப் பாடுவதே எனக்குப் பணியாக அருள வேண்டும் என்று பிரார்த்திப்பது uplifting ஆக இருந்தது. பின்னொரு பாடலில் முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகும் செயல்தந் துணர்வென் றருள்வாய் என்றும் வரும். அவனை நினைத்து உருகவும் அவன் அருள் தேவை!

உருவென் றரவென் றுளதென் றிலதென் இருளன் றொளியன் றென நின்றதுவே என்பது கவிதை! உருவம் என்றும், அருவம் என்றும் உளது என்றும் இலது என்றும் இருள் என்றும் ஒளி என்றும் நின்றானாம்! கொஞ்சம் பெரியவனான பிறகு இதே கரு கொண்ட நம்மாழ்வார் பாடலையும் பார்த்த நினைவிருக்கிறது.உளன் எனில் உளன் இலன் எனில் இலன் என்ற வரிகள்தான் என்று நினைக்கிறேன்.

மேலே உள்ள வரியில் சந்தம் எத்தனை அற்புதமாக வெளிப்படுகிறது! நேரசை நிரையசை எல்லாம் அருணகிரியார் மூலம் தெரிந்து கொண்டதுதான். (ஆனால் தேமா புளிமா எல்லாம் மறந்துவிட்டது….)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே

விழைவு புலன்கள் வழியாகத்தான் வெளிப்படும் என்பது அப்போது தரிசனமாக இருந்தது. இப்போது உடல் செயலிழந்து மூளை மட்டுமே செயல்பட்டாலும் விழைவு மறையாது என்று தோன்றுகிறது.

பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் என்பது காதலின் உச்சம் என்று அந்த வயதில் தோன்றியது. நாற்பது வருஷங்களுக்கு முன் மனைவி/காதலியின் பாதம் பணியும் ஆண் என்பது புரட்சி! பிற்காலத்தில் ஜயதேவரின் அஷ்டபதியிலும் அப்படி சில வரிகளைப் பார்த்தேன்

ஸ்மரகரள கண்டனம் மமசிரஸி மண்டனம் தேஹீ பத பல்லவம் உதாரம்

என் தலை மீது உன் கால்களை வைத்து என் தாபத்தை ஆற்று என கண்ணன் ராதாவை வேண்டுகிறான்!

பல வரிகள் அன்று (இன்றும்) மனதைக் கவர்ந்தன.

அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே – அவன் அருளைப் பெறவும் அவன் அருள் புரிய வேண்டும் என்பது அற்புதமான முடிவிலியாகத் தெரிந்தது. இல்லே எனு மாயையில் இட்டனை நீ – மாயையில் இட்டவனும் அவனே! பின்னே? அலகிலா விளையாட்டுடையான்! மாயையில் அழுத்துபவனும் அவனே, விடுவிப்பவனும் அவனே, அதுவும் அவன் அருள், இதுவும்…

யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே, தன்னந்தனி நின்றது தானறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோஅறிவொன் றறநின் றறிவார் அறிவில் பிறிவொன் றறநின் றபிரான், உணரா மறவா…..விமலன் புதல்வா

போன்ற வரிகள் அந்த வயதில் ஒரு புது உலகைக் காட்டின. என்னை விழுங்கி வெறும் தானாய் நின்ற தற்பரம் – அதில் அந்த வெறும் தானாக என்ற வார்த்தைப் பிரயோகம் எத்தனை கவித்துவமாக அமைந்திருக்கிறது! தன்னந்தனியாக நின்றதை தான் மட்டுமே அறிய  முடியும் இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பது எப்படி நடக்கும்? அறிவில் நின்றவர் அறிவில் எல்லாமாக நின்ற பிரான்! விமலன் புதல்வன் நினைப்பதுமில்லை, மறப்பதுமில்லை!

பாழ்வாழ் வெனு மிப்படு மாயையிலே
வீழ்வா யெனஎன் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ
வாழ்வா யினிநீ மயில் வாகனனே

என்னை மாயையில் வீழ்வாய் என விதித்தாய், (ஆனாலும்) வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே என்று வாழ்த்துவது கவிதை. அன்று (இன்றும்) இதை இரண்டு விதமாகப் படிக்க முடிந்தது/முடிகிறது. நிந்தாஸ்துதியாக, உண்மையான வாழ்த்தாக. அன்று அப்படி இரண்டு விதமாகப் படிக்க முடியும் என்பது பெரிய கண்திறப்பாக இருந்தது.

பிடித்த சில பாடல்கள்:

ஆடும் பரிவேல் அணிசேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவிற்
சாடும் தனியானை சகோ தரனே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

செவ்வான் உருவில் திகழ் வேலவனன்
றொவ்வா ததுஎன உணர்வித் ததுதான்
அவ்வா றறிவார் அறிகின்ற தலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே

பாழ்வாழ் வெனு மிப்படு மாயையிலே
வீழ்வா யெனஎன் னைவிதித் தனையே
தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ
வாழ்வா யினிநீ மயில் வாகனனே

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே

ஆறா றையும்நீத் ததன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமா றுளதோ?
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

முழு அனுபூதியையும் இங்கே படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தொடர்புடைய சுட்டி: கந்தர் அனுபூதி

என் கவிதை: Free at Last

நான் எழுதிய இரண்டாவது கவிதை இதுதான். பல முறை எழுதிப் பார்த்தும் திருப்தியாக இல்லை. சரி வந்த வரைக்கும் பதிக்கிறேன்…

One has gone to New York
Other to San Diego
Former 7 hours away by flight
Latter 7 hours away by car
Northeastern corner and Southwestern corner

No more clothes on the bathroom floor
No more hand scrubbing 3 day old tea cups
No more expletive filled songs in the car
No more fights about who walks the dog
No more shouts to come to dinner
No more snarky answers
The living room TV is mine at last

Then why do I feel unfulfilled?
Why, in the name of the God, do I miss all that?

தமிழில்:
மூத்தவள் நியூ யார்க்கில்
அடுத்தவள் சான் டியகோவில்
அவளைப் பார்க்க வேண்டுமென்றால் 7 மணி நேரம் விமானப் பயணம்
இவளுக்கு 7 மணி நேரம் கார் பயணம்
ஒருத்தி வடகிழக்கு மூலையில்
இன்னொருத்தி தென்மேற்கு மூலையில்

குளியலறைத் தரையில் துணிகள் குவிந்து கிடப்பதில்லை
மூன்று நாளாகக் காய்ந்து கிடக்கும் டீக் கோப்பைகளை கையால் கழுவ வேண்டியதில்லை
நாயை யார் சிறுநீர் கழிக்க கூட்டிச் செல்வது என்ற சண்டைகள் இல்லை
மரியாதைக் குறைவான பதில் பேச்சுகள் இல்லை
வரிக்கு வரி ஃபக் ஃபக் என்று ஒலிக்கும் பாடல்கள் இல்லை
ஒரு வழியாக டிவி ரிமோட் என் கையில்

பிறகும் என்ன சலிப்பு எனக்கு?
ஏன் நாள் இத்தனை வெறுமையாக இருக்கிறது?

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: நான் எழுதிய முதல் கவிதை

பரிபாடலில் ஒரு பாடல்

பிரமாதமான கவிதை!

கொடியியலார் கைபோற் குவிந்த முகை
அரதவுடன்றவை போல் விரிந்த குலை
குடை விரிந்தவை போலக் கோலுமலர்
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்
சினை உதிர்ந்து விரிந்த வீப்புதல் விரிபோதோடும்
அருவி சொரிந்த திரையின் துரந்து
நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து
கடுமா களிறணித்து கைவிடு நீர் போலும்
நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்
கடிமதில் பெய்யும்பொழுது
நாமமார் ஊடலும் நட்பும் தணப்பும்
காமமும் கள்ளும் கலந்து உடன்பாராட்ட
தாமமர் காதலரோடு ஆடப் புணர்வித்தல்
பூமலி வையைக்கியல்பு
நல்லந்துவனார்

கொடிகளைப் போன்ற பெண்களின் கை போல குவிந்த மொட்டுக்கள்
நாகப்பாம்பின் படம் போல விரிந்த மலர்கள்
குடையைப் போல விரிந்த மலர்கள்
சுனையிலிருந்து உதிர்ந்து வந்த நீர்ப்பூக்கள்
மரங்களிலிருந்து உதிர்ந்த பூக்கள்
இவை எல்லாம் அருவியாகப் பொழிந்து அலைகள் மீதாக வந்து
நீண்ட பெரிய நீர்ப்போக்கின் வழியாக வந்து
மதுரை நகரில் நுழைந்து ஓடுவது
மதம் கொண்ட யானை தன் துதிக்கை வழியாக நீரைச் சொரிவது போல இருக்கிறது
ஊடலும் கூடலும் சிறு பிரிவுகளையும் கொண்ட
காமமும் கள்ளும் கலந்து
காதலர்கள் புனலாடுவது
பூக்கள் மலிந்த வைகை நதியின் இயல்பு

சுருக்கமாக: உன்னோடு பூக்கள் நிறைந்திருக்கும் வைகையில் ஆட தலைவி காத்திருக்கிறாள்!

இது தோழியோ பாணரோ விறலியோ சொல்வதாக இருக்க வேண்டும். என்ன அழகா சுற்றி வளைக்கிறார்! அதுவும் பூமலி வையைக்கியல்பு என்ற முத்தாய்ப்பு அபாரம்!

அதுவும் எனக்கே குன்சாக எல்லா வார்த்தைகளும் புரிந்துவிட்டன, கோனார் நோட்ஸ் தேவைப்படவில்லை. அது ஒரு சின்ன சந்தோஷம்!

பரிபாடலுக்கு நல்ல உரை ஏதாவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

தில்-ஏ-நாதான்

நான் ஹிந்தி கற்றது ஹிந்தி திரைப்படங்கள் – குறிப்பாக திரைப்பாடல்கள் மூலமாகத்தான். அதுவும் எனக்கு பழைய பாடல்கள் என்றால் உயிர். முகேஷ், ரஃபி, கிஷோர், கீதா தத், ஆஷா, லதா, மன்னா டே, ஹெமந்த் குமார், தலாத், ஷம்ஷத் பேகம், சிதல்கர் (ராமச்சந்திரா), எஸ்.டி. பர்மன், ஷங்கர்-ஜெய்கிஷன், ஓ.பி. நய்யார், ஆர்.டி. பர்மன், நௌஷாத், மதன்மோஹன், ஜெய்தேவ், கய்யாம் என்று உள்ளம் கவர்ந்தவர்களின் பெரிய பட்டியல் இருக்கிறது.

இப்படி கற்ற ஹிந்தி அரைகுறையாகத்தானே இருக்கும்? ஹிந்தியே அரைகுறை என்றால் உருது பற்றி கேட்கவா வேண்டும்? ஆனால் அரைகுறையாக இருந்தாலும் திரைப்பாடல்களின் மொழி என்ன என்று தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. கேட்கும் வார்த்தை உருதுவா ஹிந்தியா என்று எப்படியோ புரிந்துவிடுகிறது. அனேகமாக உருது கலப்பு அதிகம் உள்ள திரைப்பாடல்கள் மனதைக் கவர்கின்றன. ஏன் என்று இன்று வரை புரிந்ததில்லை. சமஸ்கிருத-பாரசீக மொழிக் கலப்பு எப்படியோ கவிதை மொழியாக, ஷாயரியின் மொழியாக மாறிவிட்டது.

நீண்ட பீடிகை! விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். மிர்சா காலிப் எழுதிய தில்-ஏ-நாதான் பாடலை பத்து பதினைந்து நிமிஷமாக மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தில்-ஏ-நாதான் துஜே ஹுவா க்யா ஹை
ஆகிர் இஸ் தர்த் கி தவா க்யா ஹை

ஹம் ஹே முஷ்டாக் அவுர் வோ பேஜார்
லா இலாஹி ஏ மாஜ்ரா க்யா ஹை?

மே பி மூ(ன்) மே ஜபான் ரக்தா ஹூன்
காஷ் பூச்சோ கி “முத்தா க்யா ஹை”

ஹம் கோ உன் பே வஃபா கீ உமீத்
ஜோ நஹி ஜான்தி வஃபா க்யா ஹை

ஜான் தும் பர் நிஸார் கர்தா ஹூன்
மே நஹி ஜான்தா துவா க்யா ஹை

போன்ற வரிகளின் எளிமையை, அழகை விவரிக்க முடியாது. அனுபவிக்கத்தான் வேண்டும். அதுவும் தலாத் மெஹ்மூதின் குரலின் குழைவு, சுரையாவின் குரலில் வெளிப்படும் ஏக்கம் எல்லாம் சுஹானா! குலாம் மொஹம்மத் (பகீசா படத்தின் இசையமைப்பாளரும் இவரே) இசையை நான் அதிகம் கேட்டதில்லை, ஆனால் இந்த ஒரு படமே போதும் அவரது திறமையைக் காட்ட. முழுக் கவிதையிலிருந்து நான்கே ஈரடி செய்யுள்களை (couplets) மட்டும் பாடுகிறார்களே என்றுதான் வருத்தம்.

காலிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற உருது கவிஞர். கடைசி மொகலாய மன்னரான பஹதூர் ஷா சஃபரின் அன்புக்குரியவராக, கவிதை ஆசிரியராக இருந்தவர். பல புகழ் பெற்ற கஜல்களை எழுதி இருக்கிறார். உருது உரைநடைக்கும் இவரே முன்னோடியாம்.

முழுக் கவிதைக்கும் என் மொழிபெயர்ப்பு. கொஞ்சம் வரிகளின் வரிசையை மாற்றி இருக்கிறேன். (பாட்டின் வரிகள் முதலில்) என் உருது அரைகுறை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தில்-ஏ-நாதான் துஜே ஹுவா க்யா ஹை
ஆகிர் இஸ் தர்த் கி தவா க்யா ஹை

மட நெஞ்சே உனக்கு நடந்தது என்ன?
இந்தக் காயத்துக்கு மருந்துதான் என்ன?

Oh my naive heart, what happened to you?
Is there any medicine for this hurt?

ஹம் ஹே முஷ்டாக் அவர் ஓ பேஜார்
லா இலாஹி ஏ மாஜ்ரா க்யா ஹை?

பித்தனாக அலைகிறேன், நீயோ என்னை கண்டு கொள்வதே இல்லை
ஆண்டவா, இது என்ன பிரச்சினை!

I am going crazy, and you are so indifferent
Oh God, what kind of problem is this?

மே பி மூ(ன்) மே ஜபான் ரக்தா ஹூன்
காஷ் பூச்சோ கி “முத்தா க்யா ஹை”

என் வாய்க்குள்ளும் வார்த்தைகள் இருக்கின்றன.
நீ மட்டும் “என்ன பிரச்சினை” என்று என்னைக் கேட்டால்!

There are words within my mouth too.
If only you ask me “What is your problem?”!

ஹம் கோ உன் பே வஃபா கீ உமீத்
ஜோ நஹி ஜான்தி வஃபா க்யா ஹை

அவள் என்னிடம் விசுவாசமாக இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அவளுக்கோ விசுவாசம் என்றால் என்ன என்றே தெரியாது

I live in hope that she will be faithful
She doesn’t know what faith is

ஜான் தும் பர் நிஸார் கர்தா ஹூன்
மே நஹி ஜான்தா துவா க்யா ஹை

என் உயிரையே உனக்கு அர்ப்பணிக்கிறேன்.
உன்னிடம் எப்படி பிரார்த்திப்பது என்றுதான் தெரியவில்லை.

I offer my life as a sacrifice to you.
I don’t know how to pray to you!

ஜப் கி துஜ் பின் நஹி கொயி மௌஜூத்
ஃபிர் ஏ ஹங்கமா, ஏ குதா க்யா ஹை

உன்னைத் தவிர வேறு எதுவுமே இல்லாதபோது
இந்த வாழ்வின் பிரச்சினைகளில் என்ன பொருளிருக்கிறது? கடவுள் என்றால் கூட என்ன பொருளிருக்கிறது?

When nobody other than you exist
Then what is all this clamor? What is God? They all become meaningless.

ஏ பரி செஹரா லோக் கைசே ஹை?
கம்சா-ஓ-இஷ்வா-ஓ-அதா க்யா ஹை?

தேவதைகள் போல் ஒளி வீசும் முகம் கொண்ட இவர்கள் யாருக்காக?
இழுக்கும் விழிகள், உல்லாச நடத்தை எதற்காக? இவை எதிலும் பொருளில்லை.

Why are these angel-faced people?
What are these amorous glances, what is this flirting? All meaningless.

ஷிகான்-ஏ-ஜுல்ஃப்-ஏ-அம்பரீ க்யோன் ஹை
நிகா-ஏ-சஷ்ம்-ஏ-சூர்மா சா க்யா ஹை?

மலர்க்கூந்தல் இப்படி சுருண்டு கொண்டிருப்பதில் என்ன பயன்?
மைவிழிகள் இப்படி ஓரக்கண்ணால் பார்ப்பதில் என்ன பயன்?

Why do these fragrant tresses curl uselessly?
Why do these kohl-lined eyes glance uselessly?

சப்ஜா-ஓ-குல் கஹான் சே ஆயே ஹை?
அப்ர் க்யா சீஸ் ஹை, ஹவா க்யா ஹை?

இந்தப் பசுமையும் மலர்களும் எங்கிருந்து வந்தன?
இந்த மேகங்கள்தான் என்ன? இந்தத் தென்றல் என்ன? என்ன பயன்?

Where did this greenery and flowers come from?
What are these clouds? What is this breeze? All irrelevant.

ஹான் பலா கர் தேரா பலா ஹோகா
அவுர் தர்வேஷ் கீ சதா க்யா ஹை?

“பிறர்க்கு நல்லன செய்தால் உனக்கும் நல்லது நடக்கும்”
என்பதைத்தானே குருமார்களும் உபதேசிக்கிறார்கள்?

“Do good to others and good things will happen to you”
What else do the holy men preach?

மேனே மானா கி குச் நஹி காலிப்
முஃப்த் ஹாத் ஆயே தோ புர்ரா க்யா ஹை?

காலிப் வெட்டிப்பயல் என்பதை ஒத்துக் கொள்கிறேன்
ஆனால் எந்த முயற்சியுமில்லாமல் உன் காலடியில் விழுபவனை ஏற்பதில் நஷ்டம் என்ன?

I agree that Ghalib is worthless
But why not accept him, if you can get him without any effort?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

பிடித்த கவிதை: For whom the bell tolls

எழுதியவர் ஜான் டோன். 16-17-ஆம் நூற்றாண்டு கவிஞர். எனக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியாது, தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. இந்த ஒரு கவிதை தரும் நிறைவே போதும்.

No man is an island,
Entire of itself.

Each is a piece of the continent,
A part of the main.

If a clod be washed away by the sea,
Europe is the less.
As well as if a promontory were.

As well as if a manor of thine own
Or of thine friend’s were.

Each man’s death diminishes me,
For I am involved in mankind.

Therefore, send not to know
For whom the bell tolls,
It tolls for thee.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

நகுலன் கவிதைகள்

இனி மேல் தமிழ் எழுதப் படிக்கத் தடுமாறும் என் பெண்களுக்காகவும் எழுத உத்தேசித்திருக்கிறேன்.

அழியாச்சுடர்கள் தளத்தில் தற்செயலாகப் பார்த்தேன். அனேகமாக எல்லா கவிதைகளும் நன்றாக இருந்தன. என்னைக் கவர்ந்த இரண்டு, என் ஆங்கில மொழிபெயர்ப்புடன்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

Any book you read
just reflects
the content in your heart.
Nothing Beyond That!

நான் என் அனுபவத்தில் உணர்ந்ததை இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது – வாசகன் ஒரு புத்தகத்திலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறான்(ள்) என்பது அவனை(ளை)ப் பொறுத்தது. To Kill A Mockingbird புத்தகம் எனக்கு அப்பா-பிள்ளைகள் உறவின் சித்தரிப்பால்தான் உயர்ந்த இலக்கியமாகிறது. படிப்பவர்கள் அனேகரும் அது அன்றைய கறுப்பர் வாழ்நிலை, பூ ராட்லியின் சித்தரிப்பு, சிறுவர்களின் உலகம், அட்டிகஸின் சித்தரிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுகிறார்கள். அதே போல Love Story நாவல் என் மனதைத் தொடுவது அப்பா-மகன் உறவினால்தான். அது அனேகமாக காதல் கதை என்ற நிலையை படிப்பவர்களுக்குத் தாண்டுவதில்லை. ஒரு புனைவில் அடுத்தவர் விளக்கத்தினால் நான் எதையாவது பெற்றுக் கொள்வது அபூர்வமாகவே நிகழ்கிறது.

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

He came to talk to me.
But all he wanted was
for me to talk about him.

இதுவும் என் அனுபவத்தில் – மிகத் தாமதமாக – உணர்ந்ததுதான். அனேக உரையாடல்கள் தான் அடுத்தவர் கண்ணில் எப்படித் தெரிகிறோம் என்ற உணர்வோடுதான் நடக்கின்றன. அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள அல்ல, தன் உணர்வுகளைப் புரிந்து கொள் என்ற வேண்டுகோள்தான் விடுக்கப்படுகிறது. இதன் இன்னொரு பரிணாமம் என் பெற்றோரோடு நான் பேசும்போதெல்லாம் உணர்ந்தது. நான் என்ன பேசுகிறேன் என்பது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம்தான், ஆனால் இரண்டாம் பட்சம். மகனோடு பேசுகிறோம் என்பதுதான் முக்கியம்.

வாழ்க்கை அனுபவங்களை – குறைந்தபட்சம் என் வாழ்க்கை அனுபவங்களை – நகுலன் சிறப்பாக, கச்சிதமாக, பிரதிபலித்திருக்கிறார். எனக்கு இதுதான் கவிதை. Hopefully, my daughters would feel that way too.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 119

சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கியா அன்று
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் எம் அணங்கியோளே

சத்திநாதனார், குறிஞ்சித் திணை

சிறிய, இளைய, வரிகள் ஓடும் உடலைக் கொண்ட, வெள்ளை நிறப் பாம்பு கானகத்தின் பெரும் யானையை துன்புறுத்துவதைப் போல, வயதில் இளைய, முளை போன்ற பற்களைக் கொண்ட, வளையல் அணிந்த கைகளுடய இவள் என்னைத் துன்புறுத்துகிறாள்.
– என் மொழிபெயர்ப்பு

நாலே வரி. அதில் எப்பேர்ப்பட்ட சித்திரத்தை தீட்டி இருக்கிறார்?

பெண் இளையவள். 16-17 வயது இருக்கும் என்று வைத்துக் கொள்கிறேன். ஆணோ யானைக்கு ஒப்பிடப்படுகிறான். அப்படி என்றால் சமுதாயத்தில் பெரிய வெற்றி பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படி வெற்றி பெற கொஞ்சம் வயதாகி இருக்க வேண்டும். அதிலும் பாம்புக் குட்டி (குருளை), இளையள் என்று பெண் விவரிக்கப்படுகிறாள். பெண் இளையள் என்றால் ஒப்பு நோக்க ஆணுக்கு கொஞ்சம் வயதாகி இருக்க வேண்டும் இல்லையா? ஏற்கனவே மணமாகி இருக்கலாம், குழந்தைகள், குடும்பம் எல்லாம் இருக்கலாம். ஆனால் இந்த இளையள் அவனை அணங்குகிறாள். She is troubling him. தொந்தரவு செய்கிறாள் என்று தமிழில் மொழிபெயர்த்தால் சரியாக வரவில்லை. அதிலும் பெண்ணையும் சரி, பாம்பையும் சரி, prosaic ஆக விவரிக்கிறார். வெள்ளரவு, வரிக்குருளை. (பாம்புக் குட்டிக்கு வெள்ளை நிறம், வரிகள் ஓடிய உடல்) பெண்ணுக்கு முளைவாள் எயிறு, வளைக்கை. (எயிறு என்றால் பல், ஈறு என்ற வார்த்தை இதிலிருந்துதான் வந்ததோ என்னவோ). அது ஒரு master’s touch. நீ வாழ்க்கையில் என்ன வெற்றி பெற்றிருந்தாலும் காலி!

இது நடப்பதுதான். எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவு வரலாம். 1940களிலேயே காரும் பங்களாவுமாக வாழ்ந்த என் அத்தையின் கணவர் மகனுக்கு 15-16 வயது இருக்கும்போது என் அத்தையைக் கைவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார். ஏன் என்று கேள்வி கேட்டால் தர்க்கரீதியாக விளக்கிவிட முடியுமா என்ன?

நாலே வரி, எவ்வளவு யோசிக்க வைக்கிறார்! இது கவிதை, வெறும் வார்த்தை அலங்காரத்தை வைத்து எழுதப்பட்டதில்லை. நயத்தை முன்வைக்கவில்லை. இதற்கு மொழியே தேவையில்லை, ஆங்கிலத்தில், ஸ்வாஹிலியில் எதில் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம். உலகத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களாலும் புரிந்து கொள்ள முடியும். ஏன் இது போன்ற கவிதைகள் தமிழில் அழிந்துபோய்விட்டன? எனக்குத் தெரிந்த வரையில் (குறைவாகவே படித்திருக்கும்) கம்பனும் (நிறையவே படித்திருக்கும்) பாரதியும் வெகு சில மொழி தேவையில்லாத கவிதைகளைத்தான் எழுதி இருக்கிறார்கள். தேமாவும் புளிமாவும் சீரும் அசையும் கவிதையை அழித்தேவிட்டனவா?

குறுந்தொகையை நான் படிப்பதில்லை. அங்கும் இங்குமாக புரட்டிப் பார்க்கிறேன், அவ்வளவுதான். எனக்கு கோனார் நோட்ஸ் தேவைப்படாத கவிதை கண்ணில் பட்டால் அதைப் பற்றி எழுதுகிறேன். (சில சமயம் சங்க சித்திரங்கள், Interior Landscape இரண்டு புத்தகங்களையும் புரட்டிப் பார்ப்பதும் உண்டு.)

இந்தக் கவிதையில் குருளை, அணங்குதல், எயிறு என்ற வார்த்தைகள் அவ்வளவாக பழக்கத்தில் இல்லை. அணங்குதல் என்ற ஒரு வார்த்தை எனக்குத் தெரியாதது, ஆனால் ஊகித்துக் கொள்ள முடிகிறது. அதை “துன்புறுத்துகிறாள்” என்று மொழிபெயர்ப்பது கவிதையில் இருப்பதை விட அதிகம்; தொந்தரவு செய்கிறாள் என்பது கவிதையில் இருப்பதை விடக் குறைவு. அது தொண்டையில் முள் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு. இந்த மாதிரி நேரத்தில்தான் தமிழறிந்த, நல்ல பண்டிதர்களின் தேவை புரிகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

புறநானூறு 349

நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கூடிய கூறும் வேந்தே, தந்தையும்
நெடிய வல்லது பணிந்து மொழியலனே
இஃதிவர் படிவமாயின் வையெயிற்று
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
மரம்படு சிறுதீ போல
அணங்காயினள்தான் பிறந்த ஊர்க்கே.

மருதன் இளநாகனார், புறநானூறு, காஞ்சித்திணை

கூரிய வேலின் நுனியால்
நெற்றி வியர்வையைத் துடைத்தபடி
கடுஞ் சொற்களைச் சொல்கிறான் மன்னன்
இவள் தந்தையும்
பேச்சை நீட்டுகிறானேயன்றி
சற்றும் பணிந்து போகிறவனாக இல்லை
இப்படியே போனால்
கூரிய பற்களும்
மழை மேகமெனக் கறுத்த விழிகளும்
மாந்தளிர் நிறமும்
உள்ள இப்பெண்
காட்டின் மரப்பொந்தில் விழுந்த
தீத்துளி போல
பிறந்த ஊருக்கு
கொற்றவையாக ஆகிவிடுவாள்

ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு (சங்க சித்திரங்கள் புத்தகத்தில்)

தகப்பன் மறுப்பது பெண்ணுக்கு விருப்பமில்லை என்றா இல்லை பெண்ணுக்கும் விருப்பம்தான், ஆனால் காதல் கத்திரிக்காய் என்று எப்படி நீ வரலாம் என்று கோபமா? முதலில் பெண்ணுக்கு விருப்பமா இல்லையா என்று யாராவது கேட்டார்களா இல்லையா? எப்படி இருந்தால் என்ன? வேல் கொண்டு நெற்றி வியர்வையைத் துடைக்கும் மன்னன். அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை. மரம்படு சிறு தீ. கண்முன் விரியும் காட்சி. என்ன அற்புதமான கவிதை!

மரம்படு சிறு தீ. பாரதிக்குக் கூட இந்த இரண்டு வாரத்தையை விவரிக்க நாலைந்து வரிகள் தேவைப்படுகின்றன.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டினில் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

உண்மையில் சங்கக் கவிதைகளில் இருக்கும் நயத்தை, நாலைந்து வரிகளில் காட்சிகளை சித்தரிக்கும் திறமையை, மொழியை வெகு சுலபமாக மீறிச் செல்லும் கவித்துவத்தை நான் இது வரை வேறு எங்கும் காணவில்லை. குறைவாகவே படித்திருக்கும் கம்பனிடமும் வள்ளுவரிடமும் நிறையவே படித்திருக்கும் பாரதியிடமும் கூட அபூர்வமாகவே காண்கிறேன். யார் இந்த மருதன் இளநாகனார்? வேறு என்ன எழுதி இருக்கிறார்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

குறுந்தொகை 112

எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் ஒன்று. “பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியலற்றே” என்பது மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான உவமை.

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள்ளற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா
நாருடை ஒசியலற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே

ஊரார் பேச்சுக்கு அஞ்சினால் காமம் நிறைவடையாது. இழிசொற்களை நிறுத்த காமத்தை மறந்தால் மிச்சம் இருப்பது நாணம் மட்டுமே. காமத்தையும் விடமுடியவில்லை, நாணத்தையும் விட முடியவில்லை பெரிய யானை உண்பதற்காக ஒடித்த கிளை முற்றிலும் முறியாமல் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தால் அந்தக் கிளை கீழேயும் விழாது, மரத்திலூம் இருக்காது. அது போல தலைவர் என் பெண்மையை முழுதாக உண்ணவில்லை, கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. அந்தக் கிளையின் நிலையைப் போல – என்னால் தலைவருடனும் சேரவும் முடியவில்லை, காமம் அறியாத கன்னி நிலைக்கும் போக முடியவில்லை, தோழி!

பாடியவர் ஆலத்தூர் கிழார். குறிஞ்சித்திணை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள் பக்கம்

நல்லை அல்லை – குறுந்தொகை 47

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண்ணிலவே

காட்டில் கருமையான அடிமரம் உள்ள வேங்கை மரங்கள். அவற்றிலிருந்து மஞ்சள் நிறப் பூக்கள் பாறை மீது விழுந்து கிடக்கின்றன. நிலவொளியில் பார்த்தால் புலிக்குட்டி போல தோற்றமளிக்கிறது. காட்டு வழியே நடந்து வருபவர்கள் அஞ்சமாட்டார்களா? களவுமுறை உறவு கொள்ள வரும் தலைவனுக்கு வரத் தாமதம் ஆகிறதே! என் தலைவிக்கு நீ நல்லை அல்லை வெண்ணிலவே!

அருமையான காட்சி. நேரடியாகச் சொல்லப்படுவதை விட நாமாக உணர்வதுதான் இந்தக் கவிதையின் அழகு. நிலவொளியில் தலைவன் அஞ்சலாம், தாமதம் ஆகலாம் என்பதுதானா தோழியின் குறை? நிலவொளியில் அவன் வருவதை ஊரார் பார்த்துவிடப் போகிறார்களே என்றுதானே சொல்லாமல் சொல்கிறாள்? சீக்கிரம் மணம் செய்து கொள் என்று குறிப்பா? சொல்லும் ஒரு வார்த்தையிலிருந்து நம்மை இத்தனை யோசிக்க வைக்கிறாள்! காட்சியும் மிகவும் அருமை. நிலவு, கரிய பாறை மீது மஞ்சள் நிறப் பூக்கள்…

பாடியவர் பெயர் தெரியவில்லை. நெடுவெண்ணிலவினார் என்றே அழைக்கப்படுகிறார். குறிஞ்சித்திணை.

வேங்கை மரத்துக்கு ஆங்கிலத்தில் Malabar Kino என்று பேராம்.

கவிதைக்கும் இந்தப் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் நம்மில் எத்தனை பேர் “நல்லை அல்லை” என்று இந்தப் பாட்டு வருவதற்கு முன் கேட்டிருப்போம்?

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்