1895-இலேயே முதல் சரித்திர நாவல் (மோகனாங்கி) வந்துவிட்டதாம். இருந்தாலும் தமிழர்களுக்கு 1942-இல் வந்த பார்த்திபன் கனவுதான் முதல் சரித்திர நாவல்.
பார்த்திபன் கனவுக்கும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களுக்கும் கதைப்பின்னல் என்ற வகையில் பெரிய வித்தியாசம் கிடையாது. மாயாவினோதப் பரதேசி நாவலில் திகம்பர சாமியார் செய்யும் அஜால்குஜால் வேலைகளை இங்கே சிவனடியார் செய்கிறார். ரோமியோ ஜூலியட் போல ஒரு ஜோடி, சுலபமாக யூகிக்கக்கூடிய முடிச்சுகள், திருப்பங்கள், இன்டர்நெட்டும் ஈமெயிலும் இல்லாத காலத்திலேயே நாட்டில் ஒவ்வொரு மூலையிலும் நடப்பதைத் அடுத்த நிமிஷமே தெரிந்து கொள்ளும் சக்கரவர்த்தி, caricature என்ற லெவலில் உள்ள பாத்திரங்கள் என்று பலவிதமான பலவீனங்கள் உள்ள நாவல். எனக்கு இது அவருக்கு ஒரு practice நாவலோ, எழுதிப் பழகி கொண்டாரோ என்று தோன்றுவதுண்டு. Fluff என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் கல்கி வடுவூராரை விட பல மடங்கு தொழில் திறமை உள்ளவர். அவரால் வெகு சரளமாக எழுத முடிகிறது. யூகிக்கக் கூடிய கதை என்றாலும் கல்கியால் அதை சுவாரசியமாக எழுத முடிகிறது. எங்க வீட்டுப் பிள்ளையும் ஷோலேயும் இன்றும் ரசிக்கும்படிதானே இருக்கின்றன? இன்றே ரசிக்க முடிகிறதென்றால் அன்று இந்த நாவல் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்? வாசகர்கள் எத்தனை தூரம் விரும்பிப் படித்திருக்க வேண்டும்? கல்கி ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து விலகி கல்கி பத்திரிகையை ஆரம்பித்த சில மாதங்களிலேயே இதை தொடர்கதையாக எழுத ஆரம்பித்துவிட்டார். வியாபாரம் பெருக இந்த நாவல் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். பத்திரிகையில் தொடர்கதையாக வருவது இந்த நாவலுக்கான வாசகர் வட்டத்தையும் அதிகரித்திருக்க வேண்டும்.
கல்கி எழுதியது ஒரு முன்னோடி நாவல். முன்னோடி முயற்சிக்கு உண்டான பலங்களும் பலவீனங்களும் அதில் நிறைய இருக்கின்றன. அவரைச் சொல்லியும் குற்றமில்லை, அவரது ரோல் மாடல்கள் அலெக்சாண்டர் டூமாவும், வால்டர் ஸ்காட் ஆகியோரின் பாணியில் ஆனால் அவர்களை விட சிறப்பாக எழுதினார்.
கல்கி எழுதியது வணிக நாவல். வணிக நாவல் எழுத வேண்டும், வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே இதை எழுதி இருப்பார். இதில் பெரிய மானுட தரிசனங்கள் இல்லை. கல்கியின் எந்த நாவலிலும் அதெல்லாம் கிடையாது. கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், காவிரி பற்றிய வர்ணனைகள் ஆகியவையே இவற்றின் பலம். எட்டு ஒன்பது வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.
பார்த்திபன் கனவை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிக் கொண்டே போகிறது. அதனால் கதை சுருக்கமாக: சோழ அரசன் பார்த்திபன் பல்லவ அரசன் சக்ரவர்த்தி நரசிம்மவர்ம பல்லவருக்கு கப்பம் கட்ட மறுக்கிறான். அவனது கனவு சோழ அரசு பல்லவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும், கரிகாலன் காலத்து கீர்த்தியை மீண்டும் அடைய வேண்டும் என்பது. மகன் விக்ரமன் சிறுவனாக இருக்கும்போதே நரசிம்மவர்மரை எதிர்த்துப் போராடி இறக்கிறான். அவன் வீரத்தைக் கண்டு பூரித்துப் போன சிவனடியார் ஒருவர் அவன் இறக்கும்போது விக்ரமனை வீரனாக வளர்க்கிறேன் என்று வாக்களிக்கிறார். விக்ரமன் வாலிபன் ஆன பிறகு சக்ரவர்த்தியை எதிர்த்து நாடு கடத்தப்படுகிறான். உண்மையில் நரசிம்மவர்மர் அவனை தொலைதூர தீவு ஒன்றுக்கு அரசனாக அனுப்புகிறார். அனுப்புவதற்கு முன் நரசிம்மவர்மரின் மகள் குந்தவி விக்ரமனை நோக்க அண்ணலும் நோக்குகிறான். குந்தவியைத் தேடி மீண்டும் தமிழகம் திரும்பும் விக்ரமன், அவனைத் துரத்தும் காபாலிகன் ஒருவன், சிவனடியார் உண்மையில் யார் என்ற மர்மம், அடுத்தபடி எழுதப் போகும் சிவகாமியின் சபதம் நாவலுக்கு அங்கே இங்கே ஒரு தீற்றல்…
ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ்.வி. ரங்காராவ் நடித்து திரைப்படமாகவும் வந்தது.
கல்கி சரித்திர நாவலை இப்படி எழுதலாம் என்று ஒரு கோடு போட்டார், ரோடு போட இரண்டு தலைமுறைக்கு யாரும் வரவில்லை. அந்த நாவலின் தாக்கத்தில் இருந்து இன்றும் தமிழகம் முழுதாக வெளிவரவில்லை. அன்று அவர் நிறுவிய parameters-ஐ ஒரு பரம்பரையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறது.
கல்கியைத் தாண்டி அடுத்தவர்கள் போகாததற்கு அவரைக் குறை சொல்ல முடியாதுதான். ஆனால் சரித்திரக் கதை என்றால் அது ராஜா-ராணி, இளவரசன், இளவரசி, அவர்களுக்கு உதவி செய்யும் மந்திரிகள், ஒற்றர்கள், போர்கள், அரண்மனைச் சதிகள், அங்கங்கே தமிழ்(இந்திய) கலை+இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம், ஃபார்முலா மனிதர்கள், எம்ஜிஆர் படம் மாதிரி கொஞ்சம் வீரம்+சாகசம்+காதல்+அன்பு+தந்திரம் எல்லாம் கலந்த ஒரு மசாலா என்றே சரித்திரக் கதை ஆசிரியர்களின் புரிதல் இருக்கிறது.
ஆயிரம் நொட்டை சொன்னாலும் தமிழர்கள் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்