நகுலன் கவிதைகள்

இனி மேல் தமிழ் எழுதப் படிக்கத் தடுமாறும் என் பெண்களுக்காகவும் எழுத உத்தேசித்திருக்கிறேன்.

அழியாச்சுடர்கள் தளத்தில் தற்செயலாகப் பார்த்தேன். அனேகமாக எல்லா கவிதைகளும் நன்றாக இருந்தன. என்னைக் கவர்ந்த இரண்டு, என் ஆங்கில மொழிபெயர்ப்புடன்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!

Any book you read
just reflects
the content in your heart.
Nothing Beyond That!

நான் என் அனுபவத்தில் உணர்ந்ததை இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது – வாசகன் ஒரு புத்தகத்திலிருந்து என்ன பெற்றுக் கொள்கிறான்(ள்) என்பது அவனை(ளை)ப் பொறுத்தது. To Kill A Mockingbird புத்தகம் எனக்கு அப்பா-பிள்ளைகள் உறவின் சித்தரிப்பால்தான் உயர்ந்த இலக்கியமாகிறது. படிப்பவர்கள் அனேகரும் அது அன்றைய கறுப்பர் வாழ்நிலை, பூ ராட்லியின் சித்தரிப்பு, சிறுவர்களின் உலகம், அட்டிகஸின் சித்தரிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுகிறார்கள். அதே போல Love Story நாவல் என் மனதைத் தொடுவது அப்பா-மகன் உறவினால்தான். அது அனேகமாக காதல் கதை என்ற நிலையை படிப்பவர்களுக்குத் தாண்டுவதில்லை. ஒரு புனைவில் அடுத்தவர் விளக்கத்தினால் நான் எதையாவது பெற்றுக் கொள்வது அபூர்வமாகவே நிகழ்கிறது.

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!

He came to talk to me.
But all he wanted was
for me to talk about him.

இதுவும் என் அனுபவத்தில் – மிகத் தாமதமாக – உணர்ந்ததுதான். அனேக உரையாடல்கள் தான் அடுத்தவர் கண்ணில் எப்படித் தெரிகிறோம் என்ற உணர்வோடுதான் நடக்கின்றன. அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள அல்ல, தன் உணர்வுகளைப் புரிந்து கொள் என்ற வேண்டுகோள்தான் விடுக்கப்படுகிறது. இதன் இன்னொரு பரிணாமம் என் பெற்றோரோடு நான் பேசும்போதெல்லாம் உணர்ந்தது. நான் என்ன பேசுகிறேன் என்பது ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியம்தான், ஆனால் இரண்டாம் பட்சம். மகனோடு பேசுகிறோம் என்பதுதான் முக்கியம்.

வாழ்க்கை அனுபவங்களை – குறைந்தபட்சம் என் வாழ்க்கை அனுபவங்களை – நகுலன் சிறப்பாக, கச்சிதமாக, பிரதிபலித்திருக்கிறார். எனக்கு இதுதான் கவிதை. Hopefully, my daughters would feel that way too.

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

ஆர். சூடாமணி சிறுகதைகள்

சூடாமணியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அதிகமாகப் படித்ததில்லை. இணைப்பறவை சிறுகதை எப்போதோ பள்ளிக் காலத்தில் துணைப்பாடமாக இருந்தது என்று நினைவு. அவரது சிறுகதைகள் அச்சில் இல்லை என்று நினைக்கிறேன். இணையத்திலும் அதிகமாக கிடைப்பதில்லை. அவருக்கு அஞ்சலி எழுதியபோது கூட குறைப்பட்டுக் கொண்டேன்.

சிறுகதைகள் தளத்தில் திடீரென்று சில சிறுகதைகளைப் பார்த்தேன். அதனால்தான் இந்தப் பதிவு. குறிப்பாக சொந்த வீடு சிறுகதையைப் படித்ததால்தான் இதை எழுதுகிறேன்.

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு கூட புத்தகங்கள் என் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தன. இந்த வருஷம் இதைப் படிக்க வேண்டும், அதைப் படிக்க வேண்டும், இது ரொம்ப நாளாக தள்ளிப் போகிறது, இதை முடிக்க வேண்டும் என்று குருட்டு யோசனைகள் வந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் பெருங்காயம் வைத்த பாண்டம்தான். படிப்பது பழகிவிட்டது, அதனால்தான் படிக்கிறேன். சாப்பிடும்போது படிப்பது என்று ஒரு பழக்கம் இருந்தது, அது கூட இப்போது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது என்று மாறி வருகிறது. உழைப்பு தேவைப்படும் புத்தகங்களை எடுத்துப் படிப்பதே இல்லை, பல மூறை படித்த புத்தகத்தை திருப்பிப் படிக்கிறேன். புத்தகம் ஒன்றை வாங்கி சில வருஷங்கள் ஆகிவிட்டன. புதிதாகப் புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் வைக்க இடமில்லை என்ற நிதர்சனம். வாழ்க்கைப் பிரச்சினைகள், சோகங்கள், வயதாவது எல்லாம் சேர்ந்து என்னை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இருக்கும் புத்தகங்களைத் தூக்கிப் போடவும் மனதில்லை. பாதிக்கு மேல் குப்பைதான், டைம் பாஸ்தான், இருந்தாலும் அலமாரிகளில் அடைத்து வைத்திருக்கிறேன்.

சொந்த வீடு சிறுகதை வயதான, வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட அப்பா. பெரிய வாடகை வீட்டில் பல வருஷங்களாகக் குடி இருக்கிறார்கள். வீட்டின் சொந்தக்காரர் காலி செய்ய சொல்லிவிட்டார். ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி குடியேறப் போகிறார்கள். அப்பாவுக்கு ஒரு சின்ன அறை, அறை கூட இல்லை, மரத்தடுப்பால் அறை மாதிரி ஒரு இடம், அவ்வளவுதான். அப்பாவிடம் ஆயிரத்துக்கும் மேல் புத்தகங்கள்.

என்னையேதான் கண்டேன். மேலே என்ன சொல்ல?

சூடாமணி குறிப்பிட வேண்டிய எழுத்தாளர்தான். இலக்கியம்தான் படைத்திருக்கிறார். ஆனால் அவர் புதுமைப்பித்தனோ, அசோகமித்ரனோ அல்லர். அவருடையது மெல்லிய, குரல் எழும்பாத எழுத்து. மத்யமர், மேல் மத்யமர் பின்புலம். சில சமயம் உண்மையான சித்தரிப்பு வந்து விழுந்துவிடுகிறது.

சொந்த வீடு சிறுகதையையே எடுத்துக் கொள்ளுங்கள். குறைகள் தெரிகின்றன. நேர்கோட்டில் செல்லும், என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியும் எழுத்து. அதை உயர்த்துவது, புத்தகப் பிரியரான அப்பாவின் தவிப்பு உண்மையாக இருப்பதுதான்.

இணைப்பறவையிலும் அப்படித்தான். மனைவியை இழந்த தாத்தாவின் துயரம் அவருடையது, அவருடையது மட்டுமே. அது உண்மையாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் பேரன் பேத்திகள் தாத்தா மனசு கல்லு என்று பேசிக் கொள்வதெல்லாம் தேவையே இல்லாத (ஆனால் உண்மையான) சித்தரிப்பு.

அன்னியர்கள் சிறுகதையிலும் அக்கா தங்கை உறவு, அவர்களுக்குள்ளே உள்ள குணாதிசய வேறுபாடுகள் எல்லாம் உண்மையாக இருக்கின்றன. என் கண்ணில் இந்தக் கதையும், கடற்கரையில் ஒரு புது வித ஜோடி சிறுகதையும், சாம்பலுக்குள் என்ற சிறுகதையும் கச்சிதமாக எழுதப்பட்டவை. தேவையற்ற வார்த்தைகளே இல்லை.

பூமாலை, குழந்தையின் அழகு, உருவத்தைத் தாண்டி என்ற சிறுகதைகளையும் படித்தேன். எளிய சிறுகதைகள். பூமாலை அறிவுரை சொல்வதையே உபதேசமா என்று அலுத்துக் கொள்ள வைக்காமல் சொல்கிறது.

இந்த ஐந்தையும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஜெயமோகன் தனது seminal சிறுகதைப் பட்டியலில் டாக்டரம்மா அறை என்ற சிறுகதையைப் பரிந்துரைக்கிறார். அது கிடைப்பேனா என்கிறது.

சூடாமணி பெண் எழுத்தாளர் என்றே அறியப்படுகிறார். ஆனால் அவருக்கு பெண் என்ற அடையாளம் தேவையில்லை, எழுத்தாளர் என்று சொன்னால் போதும் என்று தோன்றுகிறது.

சூடாமணியைப் பற்றிய் அருமையான கட்டுரை ஒன்றை சு. வேணுகோபால் எழுதி இருக்கிறார். முழுமையான அலசல் என்றே சொல்லலாம். சூடாமணியைப் பாத்திரமாக வைத்து கமலதேவி வெளிச்சம் என்ற சிறுகதையை எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சூடாமணி பக்கம்

“Merry Christmas!” என்ற வாழ்த்து எப்படி ஆரம்பித்தது?

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “A Christmas Carol” குறுநாவலால்தான். அதற்கு முன்னும் இப்படி வாழ்த்து இருந்ததா என்று சரியாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்த குறுநாவல் வெளிவந்த பிறகுதான் இந்த வாழ்த்து பிரபலம் ஆகி இருக்கிறது.

குறுநாவல் 1843-இல் – சரியாகச் சொன்னால் டிசம்பர் 19, 1843-இல் – வெளியாகி இருக்கிறது. டிக்கன்ஸ் இதை கிறிஸ்துமஸுக்காகவே எழுதினார்.

டிக்கன்ஸ் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் அவரது எழுத்து மெலோட்ராமா நிறைந்தது (Great Expectations-இன் மிஸ் ஹாவிஷம்). அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் (சிட்னி கார்டன்-சார்லஸ் டார்னே உருவ ஒற்றுமை) விலக்கல்ல. ஆனாலும் அவரது எழுத்து வீரியம் வாய்ந்தது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் அவ்வளவாக பேசப்படாத, அவரது எழுத்தில் கொஞ்சம் வித்தியாசமான, Hard Times.

A Christmas Carol புத்தகத்தை முதன்முதலாகப் படித்தபோது எனக்கு 20 வயது இருக்கலாம். Christmas Carol என்றால் என்ன என்று கூடத் தெரியாது, ஒரு பாடலைக் கூட நான் கேட்டதில்லை. என் பொது அறிவு அந்த அளவில்தான் இருந்தது. ஆனால் ஸ்க்ரூஜ் என்ற படிமம் மனதில் இருந்தது, எங்கேயோ கேள்விப்பட்டிருந்தேன். ஒரு புத்தகத்தின் வழியாக, அதுவும் ஏறக்குறைய தீபாவளி மலருக்காக எதையோ எழுதி அது ஒரு படிமம் ஆகவே ஆகிவிட்டதா, இத்தனை தாக்கம் உள்ள எழுத்தா என்று வியந்து போனேன். பிற்காலத்தில் “Merry Christmas!” என்று வாழ்த்துவதும் இந்தப் புத்தகத்தால்தான் பிரபலமானது என்று தெரிந்ததும் வியப்பு இன்னும் அதிகரித்தது.

எபனேசர் ஸ்க்ரூஜ் பணக்காரன்; கஞ்சன். எல்லாவற்றையும் ரூபாய்-பைசா, லாபநஷ்ட நோக்கில்தான் பார்க்கிறான். கிறிஸ்துமஸை வெறுப்பவன். ஏனென்றால் அன்று தன்னிடம் பணி புரியும் பாப் க்ராட்சிட்டுக்கு விடுமுறை தர வேண்டி இருக்கிறது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில் அவனுடைய தொழில் கூட்டாளி ஜேகப் மார்லியின் ஆவி அவனைப் பார்க்க வருகிறது. மார்லிக்கு முக்தி கிடைக்கவில்லை, அவனது சுயநலம் அவனை பூமியிலேயே சிறைப்படுத்தி வைத்திருக்கிறது. மார்லி ஸ்க்ரூஜிடம் அடுத்தவருக்கு உதவி செய், இல்லாவிட்டால் உனக்கும் என் கதிதான் என்று அறிவுரைக்கிறான்.

ஸ்க்ரூஜுக்கு மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால கிறிஸ்துமஸ் காட்சிகளைக் காட்டுகின்றன. ஸ்க்ரூஜிற்கு இருந்த பந்தங்கள் – அவனது சகோதரியுடன், அவனது முதலாளியுடன், அவனது “காதலியுடன்” – எல்லாம் பணம் சேர்க்கும் வெறியால் ஒவ்வொன்றாக அறுபடுகின்றன. கடந்த கால கிறிஸ்துமஸில் ஸ்க்ரூஜின் காதலி அவனது மாற்றத்தை விவரிக்கிறாள், ஸ்க்ரூஜால் தாங்க முடியவில்லை. நிகழ்காலத்தில் பாப் க்ராட்சிட்டின் குடும்ப கிறிஸ்துமஸ் விருந்து காட்டப்படுகிறது. க்ராட்சிட்டின் மகன் டைனி டிம் நோயாளி, பணப் பற்றாக்குறையால் விரைவில் இறக்கப் போகிறான். எதிர்காலத்தில் ஸ்க்ரூஜ் இறக்கிறான், யாருக்கும் அவன் சாவில் அக்கறை இல்லை.

ஸ்க்ரூஜ் கருணாசீலனாக மனம் மாறுகிறான். எல்லாருக்கும் உதவி செய்கிறான். தன் குடும்பத்தோடு மீண்டும் இணைகிறான்.

முதல் முறை படிக்கும்போது கூட இது என்ன அறுபதுகளின் பிரபல இயக்குனர்களான பீம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் எடுக்கும் திரைப்படங்கள் மாதிரி இருக்கிறதே என்று தோன்றி கொண்டே இருந்தது. கஞ்சத்தனம் செய்யும் பணக்காரன் மனம் மாறும் சாதாரண கதைதானே என்று தோன்றியது. அதே நேரத்தில் டிக்கன்ஸின் எழுத்துத் திறமையும் (craft) தெளிவாகத் தெரிந்தது. ஸ்க்ரூஜின் தொழில் கூட்டாளியான மார்லியின் ஆவி தோன்றுவது, நேற்று-இன்று-நாளை என்று மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் வரும் காட்சிகளை வடிவமைத்திருப்பது, மிகைஉணர்ச்சி காட்சியாக இருந்தாலும் ஸ்க்ரூஜிடம் பணி புரியும் பாப் க்ராட்சிட் வீட்டு கிறிஸ்துமஸ் விருந்து – குறிப்பாக டைனி டிம்மின் சித்தரிப்பு என்று மிகக் கச்சிதமாக வடிவமைத்திருப்பது எல்லாம் தெரிந்தது. உண்மையில் மோசமான கதையாக இருந்தாலும் சரி, தேய்வழக்காகவே (cliche) இருந்தாலும் சரி, நல்ல காட்சிகளை அமைத்து சிறந்த திரைக்கதையாக மாற்றலாம் என்று உணர்ந்தது அப்போதுதான். மேலும் இது தேய்வழக்குதானா என்று சந்தேகமும் எழுந்தது. தேய்வழக்கும் ஒரு காலத்தில் புதுமையாக இருந்திருக்கும் இல்லையா? கஞ்சத்தனத்தை ஸ்க்ரூஜ் என்ற படிமம் இன்று உணர்த்துகிறது என்றால் ஏன் இந்த உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் பணக்காரன் என்ற தேய்வழக்கு இந்தப் புத்தகத்திலிருந்து உருவாகி இருக்கக் கூடாது என்று தோன்றியது.

சுருக்கமாகச் சொன்னால் டிக்கன்ஸ் இது பெரிய மானிட தரிசனத்தைக் காட்டுகிறது என்று நினைத்திருப்பார். ஆனால் அவர் காட்ட விழையும் தரிசனம் நூறு நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தேய்வழக்காக மாறிவிட்டது. ஆனால் அவரது எழுத்துத் திறமை புத்தகத்தை இன்னும் காலாவதி ஆகிவிடாமல் காப்பாற்றுகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

Merry Christmas!

தொகுக்கப்பட்ட பக்கம்: டிக்கன்ஸ் பக்கம்

 

(பழைய) சினிமாவில் பாரதியார் பாடல்கள்

இந்த யூட்யூப் சுட்டியில் பல அரிய பாரதி பாடல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக டி.ஆர். மஹாலிங்கம் குரலில் “மோகத்தைக் கொன்றுவிடு“, எம்எல்வி குரலில் “சுட்டும் விழிச்சுடர்தான்” மற்றும் “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” ஆகியவற்றை நான் முன்னே கேட்டதில்லை, பரிந்துரைக்கிறேன். Usual suspects ஆன “சின்னஞ்சிறு கிளியே“, டி.ஆர். மகாலிங்கம் குரலில் “சோலை மலரொளியோ“, கப்பலோட்டிய தமிழன் படத்தில் திருச்சி லோகநாதன் குரலில் பாடங்கள் எல்லாம் இருக்கவே இருக்கின்றன. தேவநாராயணன் என்பவரை நான் முன்னே பின்னே கேட்டதே இல்லை, உச்சரிப்பிலிருந்தும் பாடும் பாணியிலிருந்தும் தெலுங்கர் என்று யூகிக்கிறேன், “மங்கியதோர் நிலவினிலே” பாடல் charming ஆக இருந்தது.

கட்டாயம் பாருங்கள்/கேளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

வேதசகாயகுமார் – அஞ்சலி

வேதசகாயகுமாருக்கு பல முகங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித் தேடிப் பதிப்பித்த முன்னோடி அவர். எனக்குத் தெரிந்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அதுவே அவரது முதன்மையான அடையாளம்.

அவரது தேடல் அபூர்வமானது. அர்ப்பணிப்பு மிகுந்தது. கிடைத்தால் படிப்போம், இல்லாவிட்டால் இல்லை என்று என் போல சோம்பிக் கிடப்பவர் அல்லர். ஆராய்ச்சி மாணவரான அவரை வ.ரா.வின் மனைவி வீட்டுக்குள் விட மறுத்தபோது வீட்டுவாசலில் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்து அவரது மனதை மாற்றி இருக்கிறார். எதற்காக? வைக்கோல் போர் போலக் குவித்து வைக்கப்பட்டிருந்த இதழ்களைத் தேடுவதற்காக. மணிக்கொடி இதழ்கள் சுலபமாகக் கிடைத்தனவாம், அவரது மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது.

அன்று என் கையில் 5000 ரூபாய் இருந்திருந்தால் வ.ரா. சேகரித்து வைத்திருந்த (பாரதி முன்னின்று நடத்திய) இந்தியா பத்திரிகை இதழ்களை வாங்கி இருப்பேன் என்று அவர் வருத்தப்படுவது உள்ளத்தைத் தொடும் நிகழ்ச்சி.

இதே போல ரோஜா முத்தையாவும் அவருக்கு முதலில் ஒத்துழைப்பு தரவில்லை. பிறகு நிறைய உதவி செய்திருக்கிறார்.

ஒரு மாணவர் – அதுவும் தமிழில் முனைவர் பட்டத்துக்கு படித்துக் கொண்டிருப்பவர் – அதுவும் எழுபதுகளில் – புதுமைப்பித்தன் வீடு எங்கே, சி.சு. செல்லப்பா வீடு எங்கே, வ.ரா. வீடு எங்கே, பி.எஸ். ராமையா வீடு எங்கே, பத்திரிகை அலுவலங்கள் எங்கே, பழைய புத்தகக் கடை எங்கே என்று அலைந்த திரிந்து இத்தனை சேகரித்தார் என்றால் அவர் எவ்வளவு பாராட்டப்பட வேண்டும்? அவருக்கு அவருக்குரிய இடம் கிடைத்ததா என்று எனக்குத் தெரியவில்லை.

அழியாச்சுடர்களின் தனது தேடலின் கதையை விவரித்திருக்கிறார். திண்ணை தளத்தில் சிறு வேறுபாடுகளுடன் இதே கட்டுரை இருக்கிறது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்னாளில் ஆ.இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு பதிப்பகம் மூலமாக கொண்டு வந்த செம்பதிப்புதான் இன்றைக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகளுக்கு gold standard. ஆனால் அதன் பின்னால் வேதசகாயகுமாரின் பெரும் உழைப்பு இருக்கிறது. சலபதி போகிறபோக்கில் casual ஆக வேதசகாயகுமாரின் பங்களிப்பைப் குறிப்பிடுவது பெரிய அநியாயம்.

அவருடைய குணாதிசயங்களை, சில ஆய்வுகளை நாஞ்சிலும் ஜெயமோகனும் முறையே இங்கே மற்றும் இங்கே (1, 2) விவரிக்கிறார்கள். படுசுவாரசியமான ஆளுமையாக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். நாஞ்சில் குறிப்பிடும் அவரது எக்கர் புத்தகம் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்…

வேதசகாயகுமாருக்கு என் உளமார்ந்த நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

ஜான் லெ காரே – அஞ்சலி

john_le_carreஜான் லெ காரே மறைந்தார் என்ற செய்தி வருத்தம் தந்தது.

லெ காரே உளவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரது நாவல்கள் பலவும் ஒற்றர் பின்புலத்தைக் கொண்டவை. (இதே போல உளவுத் துறையில் பணிபுரிந்து அந்தப் பின்புலத்தை வைத்து Ashenden என்ற சிறப்பான புத்தகத்தை எழுதியவர் சாமர்செட் மாம்.) ஆனால் அவை ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் அல்ல.அவற்றின் நோக்கம் விறுவிறுப்போ, அல்லது மர்மத்தை சுவாரசியமாக கட்டவிழ்ப்பதோ அல்ல. அவை இலக்கியப் படைப்புகள். ஆழ்மனதின் பிரச்சினைகளை, ஒற்றுத் தொழில் புரிபவர்களின் அகச்சிக்கல்களைக் காட்டுபவை. உங்கள் தொழிலின் அடிப்படையே “எதிரி” அரசுகளை ஏமாற்றி, “எதிரி” நாட்டு குடிமகன்களை அவர்கள் அரசுக்கு துரோகம் செய்ய வைத்து அந்த அரசுகளின் ரகசியங்களைக் கைப்பற்றுவதாக இருந்தால், உங்கள் மனதில் அறம் உயிரோடு இருக்க முடியுமா? உங்களுக்கு “எதிரி” அரசின் ஒற்றர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? இந்த அறக் குழப்பத்தை – moral ambiguities – சிறப்பாக சித்தரிப்பதில்தான் லெ காரேவின் வெற்றி இருக்கிறது, அதனால்தான் அவர் எழுத்து இலக்கியமாக உயர்கிறது.

லெ காரேவின் இன்னொரு முக்கியமான கரு நடந்த வரலாறு. இரண்டாம் உலகப் போருக்கு பின் ஒரு முப்பது வருஷங்கள் வரையாவது ஆங்கிலேயர்கள் பலர் சோவியத் ரஷியாவுக்காக உளவு வேலை பார்த்தார்கள். சிலர் ஆங்கிலேய உளவுத் துறையிலேயே உயர் அதிகாரிகளாக இருந்தார்கள். கிம் ஃபில்பி இவர்களில் மிகவும் பிரபலமானவர். மாட்டிக் கொள்ளும் நிலை வரும்போது சோவியத் ரஷியாவில் அடைக்கலம் ஆகிவிட்டார். உளவுத்துறையில் உயர்பதவியில் இருப்பவர் எதிரி அரசுக்காக உளவு பார்க்கிறார் என்பது எத்தனை பலமான கரு, எப்பேர்ப்பட்ட நகைமுரண் (irony)! லெ காரேவின் பல புத்தகங்களின் இந்தக் கரு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. எதிரி அரசின் உளவுத்துறையிலிருந்து தனக்காக ஆள் பிடிப்பது, தங்கள் உளவுத்துறையில் இருந்து கொண்டு எதிரி அரசுக்காக வேலை பார்ப்பவர்களை கண்டுபிடிப்பது இவை பல புத்தகங்களின் அடித்தளமாக இருக்கின்றன.

சோவியத் ரஷியா உடைந்த பிறகு இந்தக் கரு கொஞ்சம் காலாவதி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு அவர் எழுதிய புத்தகங்கள் சில எனக்கு அத்தனை சுவாரசியப்படவில்லை. Constant Gardener (2001) போன்ற சில நல்ல புத்தகங்களும் உண்டு.

லெ காரேவின் சிறந்த பாத்திரப் படைப்பு ஜார்ஜ் ஸ்மைலி. நிறைய புத்தகங்களில் வருபவர், பல புத்தகங்களின் நாயகன். ஆங்கில அரசின் உளவுத்துறையின் தலைவராக இருந்தவர். கம்யூனிச ரஷியா, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளின் உளவுத் துறையோடு எப்போதும் “போர்”. ரஷிய உளவுத்துறையில் அவருக்கு எதிரியாக இருக்கும் கார்லாவும் அவரும் மிகவும் பிரமாதமாக ஆடுவார்கள். ஜார்ஜ் ஸ்மைலியின் வாழ்க்கை வரலாறு என்று ஒரு பதிவு எழுத ஆரம்பித்து சில வருஷமாகவே அரைகுறையாக நிற்கிறது.

லெ காரே பிரபலமானது Spy Who Came in from the Cold (1963) நாவலுக்குப் பிறகுதான். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த நாவல் Tinker Tailor Soldier Spy (1974).

Spy Who Came in from the Cold, Tinker Tailor Soldier Spy, Smiley’s People (1974), Constant Gardener ஆகிய புத்தகங்களை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். எந்தப் புத்தகமும் தவிர்க்க வேண்டியதில்லை, ஆனால் இவை நான்கும் எனக்கு டாப்பில் இருக்கின்றன.

லெ காரேவின் பல புத்தகங்கள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. நான் பரிந்துரைப்பது ரால்ஃப் ஃபியன்னஸ் நடித்த Constant Gardener (2005), காரி ஓல்ட்மன் நடித்த Tinker Tailor Soldier Spy (2011)

அவருக்கு அஞ்சலியாக Spy Who Came in from the Cold பற்றி எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன். அதை நானே மீண்டும் படிக்கும்போது கதைச்சுருக்கம்தான் தெரிகிறது, என் எண்ணங்கள் தெளிவாக வெளிப்படவில்லை. திருத்தி எழுத நேரமில்லை…


வண்டியை கொஞ்ச நாளைக்கு த்ரில்லர்கள் பக்கம் ஓட்டுகிறேன்.

ஜான் லெ காரே அறியப்பட்ட எழுத்தாளரானது Spy Who Came in from the Cold (1963) நாவலுக்குப் பிறகுதான். Well crafted novel.

கம்யூனிஸ்ட் கிழக்கு பெர்லினையும் மேற்கு பெர்லினையும் பிரிக்கும் சுவர் இப்போதுதான் எழுப்பப்பட்டிருக்கிறது. அது வரையில் கிழக்கு ஜெர்மனியில் மேற்குக்காக உளவு பார்த்தவர்கள் மாட்டிக் கொள்வோம் என்று தெரியும்போது சுலபமாக மேற்கு பெர்லினுக்கு ஓடிவிடுவது இப்போது கஷ்டமாகிவிட்டது. இங்கிலாந்துக்காக உளவு பார்க்கும் கார்ல் ரீமெக் சுவரைத் தாண்டி மேற்கு பெர்லினுக்கு ஒரேயடியாக வந்துவிட முயற்சி செய்யும்போது சுடப்படுகிறான். இதற்கெல்லாம் காரணம் கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறை அதிகாரி முண்ட் என்று தெரிகிறது.

ரீமெக்கின் “வழிகாட்டி” லீமாஸ். லீமாசின் கடைசி ஒற்றன் ரீமெக். கடைசி ஒற்றனும் போன பிறகு லீமாசுக்கு பெர்லினில் வேலையில்லை. அவன் இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்படுகிறான். அங்கே உளவு வேலை எதுவும் கிடையாது, மேஜையில் உட்கார்ந்து காகிதங்களில் கையெழுத்திடுவதுதான் வேலை. லீமாசின் உலகம் தெருவில் இறங்கி ஒற்று வேலை பார்க்கும் உலகம், இந்த paper-pushing சூழல் லீமாசுக்கு ஏற்ற உலகமல்ல. லீமாஸ் சொதப்ப ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் வேலை போய்விடுகிறது. சின்னச் சின்ன வேலைகளைப் பார்க்கும்போது லிஸ்ஸுடன் தொடர்பு ஏற்படுகிறது. லிஸ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.

ஆனால் இது எல்லாமே செட்டப். லீமாஸ் ரஷ்யா/கிழக்கு ஜெர்மனி கண்களில் துரோகியாக மாறி முண்ட் உண்மையில் இங்கிலாந்துக்காக வேலை பார்க்கும் ஒரு double agent என்று நாடகம் ஆட வேண்டும் என்பதுதான் லீமாஸின் உயர் அதிகாரியான “கண்ட்ரோலின்” திட்டம். நினைத்தபடியே லீமாஸை எதிரி நாட்டுக்காரர்கள் தொடர்பு கொள்கிறார்கள். பணத்துக்காக லீமாஸ் கட்சி மாறுவதாக நாடகமாடுகிறான். கிழக்கு ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். முண்ட் மீது சந்தேகமே இல்லாததாக காட்டிக் கொள்கிறான், ஆனால் மெதுமெதுவாக முண்டின் துணை அதிகாரி ஃபீட்லரை முண்ட் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறான். ஃபீட்லர் முண்ட் துரோகி என்று புகார் கொடுக்கிறான். முண்டுக்கு எதிராக கேஸ் பலமாக இருக்கிறது.

ஆனால் கடைசி நேரத்தில் முண்ட் தரப்பு வக்கீல் லீமாசின் காதலி லிஸ்சை சாட்சியாகக் கொண்டு வருகிறார். லீமாஸ் சில பொய்களை சொல்லி இருக்கிறான் என்று நிரூபிக்கிறார். லிஸ்ஸை காப்பாறுவதற்காக லீமாஸ் இது அத்தனையும் நாடகம் என்று ஒப்புக் கொள்கிறான். ஃபீட்லர் கதி அதோகதி ஆகிறது.

தான் முதலில் சொன்னதை பொய்யாக்கியது கண்ட்ரோல்தான் என்பதை லீமாஸ் உணர்கிறான். முண்ட் உண்மையிலேயே இங்கிலாந்துக்குத்தான் உளவு பார்க்கிறான், முண்ட் மேல் ஏற்கனவே சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த ஃபீட்லரை ஒழிக்க கண்ட்ரோல் போட்ட திட்டம்தான் இது என்பதை உணர்கிறான்.

கதையைப் படித்துவிட்டு பிறகு சாவகாசமாக யோசித்துப் பார்த்தால் முடிச்சு சாதாரணமானதுதான் என்பது புரிகிறது. ஆனால் கதையைப் படிக்கும்போது அது புரிவதில்லை. 🙂 மெதுமெதுவாக உண்மையை வெளிப்படுத்துவதில்தான் இந்தப் புத்தகத்தின் வெற்றி இருக்கிறது.

முண்டைக் காப்பாற்ற ரீமெக்கை பலி கொடுக்க கண்ட்ரோல் தயங்குவதில்லை. முண்ட் போன்ற ஒரு வில்லனைக் காப்பாற்ற ஃபீட்லர் போன்ற நேர்மையான அதிகாரியை ஒழிக்க வேண்டுமா என்று லீமாசை மட்டுமல்ல நம்மையும்தான் யோசிக்க வைக்கிறார். உளவுத்துறையில் amoral மனநிலை சிறப்பாக வெளிப்படுகிறது.

இந்தக் கதையிலும் ஜார்ஜ் ஸ்மைலிக்கு ஒரு சின்ன ரோல் உண்டு. ஸ்மைலியைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

ரிச்சர்ட் பர்ட்டன் நடித்து 1965-இல் திரைப்படமாகவும் வந்தது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜான் லெ காரே பக்கம், அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஜான் லெ காரே எழுதிய Our Kind of Traitor
லெ காரேவின் தளம்

சுஜாதாவின் “நிர்வாண நகரம்” – மீள்பதிவு

பத்து வருஷங்கள் முன்னால் எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாகி இருக்கின்றன.

நிர்வாண நகரம் போன்ற (சில) நாவல்களில் சுஜாதா சாகச நாவல், வணிக நாவல், வாரப் பத்திரிகை தொடர்கதை ஆகியவற்றின் எல்லைகளைத் (constraints) தாண்டி இலக்கியம் படைத்திருக்கிறார். அதிலும் அனாயாசமாகத் தாண்டி இருக்கிறார். வீரேந்தர் செவாக்கும் நிறைய செஞ்சுரி அடித்திருக்கிறார். ராஹுல் திராவிடும். ஆனால் திராவிட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் அவரது உழைப்பு தெரியும். செவாக் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும் ஒரு அலட்சியம், இதெல்லாம் என்ன ஜுஜுபி என்ற ஒரு attitude தெரியும். அதே போலத்தான் வாரப் பத்திரிகையில் எழுதினால் என்ன, வாசகர்களின் எதிர்பார்ப்புகளை வாராவாரம் ஒரு முடிச்சு போட்டு கட்டமைக்க வேண்டிய அவசியம் இருந்தால் என்ன, சாகசங்களை வைத்து பக்கத்தை நிரப்ப வேண்டிய தேவை இருந்தால் என்ன, இதை எல்லாம் மீறி இலக்கியம் படைப்பது பிஸ்கோத் வேலை என்ற மாதிரி ஒரு attitude தெரிகிறது.

இந்த நாவலைப் பற்றி எழுதுபவர்கள் இதன் குறும்புத்தனத்தைத்தான் பெரிதும் சிலாகிக்கிறார்கள். ஆனால் அந்த குறும்புத்தனத்திலேயே ஆழ்ந்துபோய் அவை நகர வாழ்வின் வெறுமையையும் சிறப்பாகக் காட்டுவதை தவற விட்டுவிடுகிறார்கள். எனக்கு அந்த சித்தரிப்பால்தான் இது இலக்கியமாக உயர்கிறது.

இலக்கியம்தான், ஆனால் இரண்டாம், மூன்றாம் வரிசை இலக்கியம். இது வாழ்வின் பெரிய தரிசனங்களைக் காட்டிவிடவில்லை. உங்களைப் பெரிதாக சிந்திக்க வைத்துவிடாது. விஷ்ணுபுரம் மைக்கேலாஞ்சலோவின் Sistine Chapel என்றால் இது ரெட்டைவால் ரங்குடு கார்ட்டூன். (நானும் குறும்புத்தனத்தை மட்டும்தான் இங்கே முன்வைக்கிறேனோ?)

அன்று எழுதியது கீழே.


நான் சுஜாதாவின் பரம விசிறி ஆனது இந்தப் புத்தகத்தைப் படித்துதான். அந்த phase ஒரு பத்து வருஷமாவது நீடித்தது. இந்தக் கதை குங்குமத்தில் தொடராக வந்தபோது படித்தேன். சமீபத்தில் மீண்டும் படித்தேன்.

முதல் அத்தியாயத்திலேயே தூள் கிளப்பினார். தற்காலிக கிளார்க்காக இருக்கும் சிவராஜுக்கு மெடர்னிடி லீவில் போன பெண் திரும்பி வருவதால் நாளையிலிருந்து வேலை இல்லை. விஷயம் தெரிந்ததும் சிவராஜ் கேட்கும் கேள்வி: வேற யாராவது கிளார்க்குகள் கர்ப்பமா இருக்காங்களா சார்?” ஹோட்டலில் டேபிளுக்கு காத்திருக்கும் சிவராஜ் நினைக்கிறான் – “சினிமா இன்டர்வல்லில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்” சென்னை என்ற நகரம் தன் தனித்தன்மையை அழிப்பதைப் பொறுக்க முடியாமல் சிவராஜ் சென்னையைப் பழி வாங்க தீர்மானிக்கிறான். அப்புறம் ஒரு ஜட்ஜ் கொலை, சிவராஜ் அடுத்தபடி ஒரு டாக்டரை கொல்லப் போகிறேன் என்று போலீசுக்கு ஜீவராசி என்ற பெயரில் லெட்டர் எழுதுவது, போஸ்டர் அடித்து கமிஷனர் ஆஃபீசுக்கு முன்னாலே ஓட்டுவது, டாக்டர் கொலை, ஒரு எம்.எல்.ஏ.க்கு மிரட்டல், வனஜா தன்னை கல்யாணம் செய்து கொள் என்று சிவராஜை கேட்பது, திருமணத்தால் சிவராஜுக்கு வாழ்க்கை நிலையாக அமையப் போவது, கணேஷ்-வசந்த் வருகை, எம்.எல்.ஏ. மரணம், கணேஷ் வசந்த் சிவராஜை கண்டுபிடிப்பது என்று கதை போகிறது.

மிகவும் கலக்கலான கதை. வசனம் பிரமாதம். ஒரு பம்மாத்து இன்டர்வ்யூவில் சிவராஜை கேட்கிறார்கள் – “நீங்கள் எதற்காக இந்த வேலையை விரும்புகிறீர்கள்?” “என் வாழ்நாளின் ஆதர்சம் உங்கள் கம்பெனியில் ஒரு டெஸ்பாட்ச் கிளார்க்காக சேர வேண்டும் என்பதுதான்”. ஒரு டாக்டரை சிவராஜ் பார்க்கிறான். அவர் சொல்கிறார் – “சுவாமி நான் ஒரு ஜி.பி. மனசு சரியில்லைனா சைக்காட்ரிஸ்டிடம் போங்கோ.” சிவராஜின் பதில் “எனக்கு ரெண்டு கொட்டையும் வலிக்கிறது டாக்டர்.”

இத்தனை வருஷம் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தேன். சுவாரசியம் குன்றவே இல்லை. சின்ன சின்ன விஷயங்களில் ஒரு காட்சியை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார். உதாரணமாக டாக்டரை சிவராஜ் பார்ப்பதற்கு முன்னால் ஒரு அம்மாள் பச்சையா வெளிக்குப் போறான் டாக்டர் என்று குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கவலையோடு சொல்லிக் கொண்டிருப்பார். கமிஷனர் பேட்டியில் ஹிந்து நிருபர் யோசித்து கேள்வி கேட்பதற்குள் கமிஷனர் போய்விடுவார். பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கும். சிவராஜின் தனிமை, கையாலாகாத்தனம் எல்லாம் சிறப்பாக வந்திருக்கும். வனஜா, எம்.எல்.ஏ., சந்தடி சாக்கில் பெண் ரோசலினுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போலீஸ் அதிகாரி, எல்லாவற்றையும் சிறப்பாக எழுதி இருப்பார்.

உடுமலை பதிப்பகத்தில் (இன்றும்) கிடைக்கிறது. விலை எழுபது நூறு ரூபாய். வாங்குங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இது விஷ்ணுபுரமோ, கரைந்த நிழல்களோ இல்லை. ஆனால் என் கண்ணில் இது இலக்கியமே. ஆனால் ஜெயமோகன் போன்றவர்கள் இந்த மாதிரி ஒரு புத்தகத்தை பொருட்படுத்துவதில்லை. இது ரசனை வேறுபாடா, இல்லை என் படிப்பு முறையின் குறைபாடா தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். சுஜாதா existential angst பற்றி ஒரு கதை எழுதி இருந்தால் தூள் கிளப்பி இருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

கி.ரா. கலந்துரையாடல்

எனக்கு சில quirks உண்டு. வீடியோக்களை, யூட்யூப் உரைகளைப் பார்க்கும் பொறுமை கிடையாது. வரி வடிவம் கிடைத்தால் விரைவாகப் படித்துவிடலாமே என்று தோன்றும். கிண்டிலிலோ, மின்பிரதிகளையோ படிக்கப் பிடிக்காது. காகிதப் புத்தகம்தான் பிடிக்கும். வேறு வழியில்லாத போதுதான், அதுவும் அவ்வப்போதுதான் மின்பிரதிகளைப் படிக்கிறேன். இன்று வரை கிண்டில் வாங்கவில்லை. அவ்வளவு ஏன், தமிழில் சீர்திருத்த எழுத்துக்களைப் படிக்கும்போது கூட லேசாக உறுத்தும். இத்தனைக்கும் “லை”, “ளை” போன்றவற்றின் புதிய வரிவடிவம்தான் உத்தமம் என்று பதின்ம வயதிலேயே புரிந்திருந்தது. (இந்தத் தலைமுறை அந்தப் பழைய வரி வடிவத்தைப் பார்த்தே இருக்காது. அவர்களுக்காக இது)
.

இந்த வருஷமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். வருஷமே முடியப் போகிறது! சரி, பார்த்து வைப்போம் என்று ஜெயமோகன் தளத்தில் வெளியான கி.ரா. கலந்துரையாடல் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

கி.ரா.வைப் பார்ப்பதே நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. 97 வயதாம். என் வீட்டு பெரிசு போலவே உணர்ந்தேன். அவ்வப்போது ramble ஆனாலும் கோர்வையாகத்தான் பேசுகிறார். உண்மையில் அவர் ramble ஆகும்போது இன்னும் நெகிழ்ச்சியாக இருந்தது. அ. முத்துலிங்கம் உங்கள் எழுத்து வேகம் தடைப்படுமா, எப்படி மீள்வீர்கள் என்று கேட்டால் அவர் தான் பொற்கொல்லர் (ஆசாரி) ஜாதியினரின் கண்டனத்துக்கு உள்ளானதை, அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தைப் பற்றி பேசுகிறார். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

சின்னச் சின்ன பிற சந்தோஷங்கள் வேறு. அ. முத்துலிங்கம், ஜெயமோகன் இருவரும் கலந்து கொண்டது, ஜாஜாவைப் பார்த்தது…

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கி.ரா. பக்கம்

Taking of Pelham 123

ஜான் கோடே 1973இல் எழுதிய த்ரில்லர் நாவல். இரண்டு மூன்று முறை திரைப்படமாக வந்திருக்கிறது. என் பதின்ம வயதில் படித்திருக்கிறேன். அன்றும் சரி, இப்போது மீண்டும் ஒரு முறை படித்தபோதும் சரி, இந்த நாவலின் வடிவ கச்சிதம் மனதைக் கவர்ந்தது. விறுவிறுப்பாக எழுதுவது எப்படி என்று ஏதாவது வகுப்பு இருந்தால் அதில் பாடமாக வைக்கலாம்.

நியூ யார்க் நகரத்தில் சப்வேக்கள் – பூமிக்கடியில் செல்லும் ரயில் பாதைகள் நகரத்தின் முக்கிய பகுதி. நகரமே சப்வே இல்லை என்றால் ஸ்தம்பித்துவிடும். ஒரு ரயிலை – முழு ரயில் கூட இல்லை, ஒரே ஒரு பெட்டி, அதில் 15-16 பயணிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு ஒரு மில்லியன் டாலர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் இவர்களைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். பூமிக்கடியில் சுரங்கப் பாதையில் ரயில் நிற்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு எப்படி தப்பிப்பார்கள்?

குற்றவாளிகள் வெறும் ஸ்டீரியோடைப்கள் – திட்டங்களை மிகவும் கச்சிதமாக செயல்படுத்தும் தலைவன் (ரைடர்). சொல்வதை கேள்வி கேட்காமல் திறமையாக செயல்படுத்தும் ஒரு சிப்பாய் (ஸ்டீவர்). திறமையான திட்டத்தைப் போட்டுக் கொடுக்கும் மூளைக்கார, ஆனால் கோழையானவன். (லாங்மன்). தைரியமும் வீரமும் உள்ள, ஆனால் ஆணைகளை தன் இஷ்டப்படி மட்டுமே செயல்படுத்தும் வெல்கம். இந்த ஸ்டீரியோடைப்களை வைத்தே மிகத் திறமையாக எழுதப்பட்ட நாவல்.

இரண்டு பக்கத்துக்கு ஒரு முறை கடத்தல்காரர்களில் யாராவது, ரயில் பாதையை கண்காணிக்கும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் அதிகாரிகள், பயணிகள், நகரத்தின் மேயர், போலீஸ்காரர்கள் என்று கதை வேறு வேறு கோணங்களில் சொல்லப்படுகிறது. அதுதான் இந்தக் கதையின் விறுவிறுப்புக்கு முக்கியக் காரணம். கடத்தல்காரர்களின் திட்டமும் நடக்கக் கூடியதுதான், புத்திசாலித்தனமானது. நாவலின் denouement-உம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

வெள்ளைக்காரன் சொன்னால்தான் பாரதி கவிஞன்

இன்று பாரதி பிறந்த நாள். இன்று அவர் தமிழகத்தில் ஒரு icon ஆக இருந்தாலும் வாழ்ந்த காலத்தில் படாதபாடு பட்டிருக்கிறார். அவரையே கவிதை எழுத வேண்டாம், உரைநடையில் எழுதும் என்று சொன்ன பத்திரிகை ஆசிரியர் வெள்ளைக்காரன் பாராட்டியதும் கவிதை எழுதும் என்று கேட்டுக் கொண்டாராம். தமிழ்க் கவிதைக்கு வெள்ளைக்காரன் சர்ட்டிஃபிகேட் வேண்டி இருந்திருக்கிறது.

பத்திரிகை ஆசிரியர் யார் என்று தெரியவில்லை, பாரதியிடம் கவிதைகளை கேட்டு வாங்கிய கசின்ஸ் என்ற ஆங்கிலேயரைப் பற்றியும் நான் முன்னால் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

பாரதிதாசன் தேன்கவிகள் தேவை என்ற கவிதையில் விவரிக்கிறார்.

 

பொழுது விடியப் புதுவையிலோர் வீட்டில்
விழி மலர்ந்த பாரதியார் காலை வினை முடித்து
மாடிக்குப் போவார் கடிதங்கள் வந்திருக்கும்
வாடிக்கையாக வரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்
சென்னைத் தினசரியின் சேதி சில பார்ப்பார்
முன்னாள் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படிந்ததுண்டா இல்லையா என்று
வரி மேல் விரல் வைத்து வாசிப்பார் ஏட்டை

அதன் மேல் அடுக்கடுக்காய் ஆரவாரப் பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்ப ஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளப்புகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க் கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள் பெறும் பாக்கியத்தை?

வாய் திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய் அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்
தாம்பூலம் தின்பார், தமிழ் ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்

மாடியின் மேல் ஓர் நாள் மணி எட்டரை இருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியில்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்
வாசித்தார் ஐயர் மலர் முகத்தில் வாட்டமுற்றார்

“என்னை வசனம் மட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்
பாட்டெழுத வேண்டாமாம் பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை” என்றுரைத்தார்

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் சோர்வென்னும்
காரிருளில் கால்வைத்தார் ஊக்கத்தால் மீண்டுவிட்டார்
“பாட்டின் பயனறிய மாட்டாரோ நம் தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?”
என்று மொழிந்தார் இரங்கினார் சிந்தித்தார்
“நன்று மிக நன்று, நான் சலிப்பதில்லை” என்றார்
நாட்கள் சில செல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பல பேராகிவிட்டார்

ஆங்கிலம் வல்ல கசின்ஸ் என்னும் ஆங்கிலவர்
“நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகில அரங்கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குப் பாட்டெழுதித் தாருங்கள்”
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார், எம்மை அபிப்பிராயம் கேட்டார்

“வேண்டும் எழுதத்தான் வேண்டும்” என்றோம், பாரதியார்
“வேண்டும் அடி, எப்போதும் விடுதலை” என்று
ஆரம்பம் செய்தார், அரை நொடியில் பாடிவிட்டார்
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வெளியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ் விளைத்தே
எண்ணூறாண்டாய் கவிஞர் தோன்றவில்லை இங்கென்று
வீவீஎஸ் ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!

ஆங்கிலவர் பாரதியார் ஆர்ந்த கவித்தேனை
வாங்கி உண்ணக் கண்ட பின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் “தேவையினித் தேவை,
இனிய கவி நீங்கள் எழுதுங்கள்” என்றுரைத்தார்
தேவையில்லை என்று முன் செப்பிவிட்ட அம்மனிதர்
தேவையுண்டு, தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!

“தாயாம் தமிழில் தரும் கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவை கண்டு அறிவித்தார் பின்னர்
பயன் தெரிந்தார் நம் தமிழர்” என்றுரைத்தார் பாரதியார்

நல்ல கவியினிமை நம் தமிழர் நாடுநாள்
வெல்ல அரும் திருநாள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்