2017-இல் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அவர் எழுதிய கடைசி நாவலோ என்னவோ.
அசோகமித்ரன் இந்த நாவலில் கி.ரா. பாணி கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார். அத்தைப்பாட்டியோ, வயதான மாமாவோ தங்கள் சென்ற காலத்து வாழ்வைப் பற்றி கதையாக சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது. யுத்தங்களுக்கிடையில் புத்தகம் படித்தபோதும் இப்படியேதான் உணர்ந்தேன். அவர் எழுத்தில் எப்போதும் சொல்லப்படுவதை விட சொல்லாமல் விடப்படுவதே அதிகம். ஆனால் இதில் அப்படி சொல்லாமல் விடப்பட்டது எதுவுமில்லை. எழுதியவர் யாரென்று தெரியாமல் படித்திருந்தாலும் இது அசோகமித்ரன் எழுத்து என்று தெரிந்திருக்கும், ஆனாலும் இது அவரது பாணிதானா என்று சில சமயம் தோன்றியது. மேலும் அவரது மெல்லிய, சில சமயம் குரூரமான, நகைச்சுவையும் இதில் குறைவாகத்தான் தெரிகிறது.
எப்படி இருந்தாலும் கதை நன்றாகவே இருந்தது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
என்ன கதை? கணவன் இறந்து, மனைவியின் அண்ணா ஆதரவில் வளரும் குடும்பம். மூத்த மகன் சுந்தரத்தின் விருப்பம் கேட்கப்படாமல் மாமா பெண் பார்வதியோடு திருமணம். மாமா துறவி ஆகிவிட, சுந்தரம் குடும்பப் பொறுப்பை ஏற்கிறான். தம்பி மணியைப் படிக்க வைக்கிறான். 1944 வாக்கில் பம்பாய்க்கு குடிபெயர்கிறான். அம்மா வாழ்க்கையில் முதல் முறையாக குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். மணி வேலைக்குப் போவதில் சில சிக்கல்கள். மணிக்கு குஸ்தி பயில்வான் வினாயக், அவன் தங்கை நிர்மலாவோடு நட்பு. இரு குடும்பங்களும் நெருக்கமாகின்றன. குடுமப்த்தின் உண்மையான தலைவியான அம்மாவே மணியை நிர்மலாவை மணந்து கொள்ளேன் என்கிறாள். மன்னி பார்வதியும் ஆமோதிக்கிறாள். ஆனால் நடக்கவில்லை.
இரண்டாம் பகுதியில் சுந்தரம் பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறான். அங்கே பணக்கார குடும்பத்தை சேர்ந்த, ஹார்வர்டில் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பால்ய விதவை லட்சுமியை சந்திக்கிறான், அவளை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான், குடும்பத்திற்குத் தெரியாது. திரும்பி வருவது 1948-இல். விடுதலை கிடைத்தாயிற்று. சுந்தரத்தின் பதவி உயர்கிறது. மணிக்கு திருமணம் நடக்கிறது. ஆனால் இரண்டாம் திருமணம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறான். கடைசியில் தன் துறவி மாமாவிடம் சொல்ல, மாமா இரண்டு மனைவிகளோடு வாழ் என்று ஆலோசனை சொல்கிறார். இதற்கிடையில் பார்வதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிடுகிறது. லட்சுமி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து உங்கள் சுகதுக்கம் என் சுகதுக்கம் என்று அம்மாவிடம் சொல்வதோடு கதை முடிகிறது.
மணியின் சிக்கல்கள் முதல் பகுதி, சுந்தரத்தின் சிக்கல்கள் இரண்டாம் பகுதி.
அசோகமித்ரன் பல இடங்களில் தெரிகிறார். எத்தனை பிரச்சினை என்றாலும் அதை கூச்சல் போடாமல் எதிர்கொள்ளும் பாத்திரங்கள். உண்மையான நட்பின் சித்திரம், வினாயக் குடும்பத்துக்கு செய்யப்படும் உதவிகள். சுந்தரத்தின் இரண்டாவது திருமணம் பற்றி ரிஷிகேஷில் தெரிந்து கொள்ளும் பார்வதி ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு இரண்டு நாள் கழித்து பம்பாய்க்கு திரும்பிய பிறகு சுந்தரத்தின் அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறுவது. குழந்தை இறந்த செய்தி தெரிந்ததும் வந்து பார்க்கும் லட்சுமி உங்கள் சுகதுக்கம் என்னுடையவை என்று சொன்னதும் அது வரை பெரிதாக அழாத அம்மா லட்சுமியைக் கட்டிக் கொண்டு கதறுவது. லட்சுமியின் வீடு காந்தி வீட்டின் பக்கத்துத் தெருவில் இருப்பதும், லட்சுமி பத்து வயதில் விதவை ஆனதும் காந்தியின் அம்மா – ஆம் மகாத்மா காந்தியின் அம்மாவேதான் – அவளிடம் மொட்டை அடித்துக் கொண்டு ஜபம் செய்துகொண்டு வாழ்க்கையைக் கடத்தாதே என்று சொல்வது. சுந்தரம் அமெரிக்கா போகும்போது மடி ஆசாரம் பார்க்கும் அம்மாவை நிர்மலா இயல்பாகக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்வது. ஆசாரமான அம்மா மராத்திப் பெண்ணை மணம் செய்து கொள் என்று மணியிடம் சொல்வது. சொல்லிக் கொண்டே போகலாம்.
1944-48 பம்பாயில் வாழ்கிறார்கள். ஆனால் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் நடக்கிறது என்பதே இந்தக் குடும்பத்தின் பிரக்ஞையில் இல்லை என்பது மிகச் சிறப்பான சித்திரம். உப்பு புளி மிளகாய், ரேஷன், வாடகை, காலி செய்யமாட்டேன் என்று அட்டூழியம் செய்யும் குடித்தனக்காரர், அலுவலகத்துக்கு செல்ல ரயில், பஸ் இதுதான் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. போரால் அரிசி பருப்பு கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு விவரிக்கப்படுகிறது. பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் வெடிமருந்து வெடித்து ஏற்படும் நாசம் விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான். அதாவது நேரடி பாதிப்பு மட்டுமே. அது ஒரு மாஸ்டர் டச்.
இதை தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள், ஒற்றன் போன்ற நாவல்களுக்கு அடுத்த படியில்தான் வைப்பேன். அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்