அசோகமித்ரன்: இந்தியா 1944-48

2017-இல் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அவர் எழுதிய கடைசி நாவலோ என்னவோ.

அசோகமித்ரன் இந்த நாவலில் கி.ரா. பாணி கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார். அத்தைப்பாட்டியோ, வயதான மாமாவோ தங்கள் சென்ற காலத்து வாழ்வைப் பற்றி கதையாக சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது. யுத்தங்களுக்கிடையில் புத்தகம் படித்தபோதும் இப்படியேதான் உணர்ந்தேன். அவர் எழுத்தில் எப்போதும் சொல்லப்படுவதை விட சொல்லாமல் விடப்படுவதே அதிகம். ஆனால் இதில் அப்படி சொல்லாமல் விடப்பட்டது எதுவுமில்லை. எழுதியவர் யாரென்று தெரியாமல் படித்திருந்தாலும் இது அசோகமித்ரன் எழுத்து என்று தெரிந்திருக்கும், ஆனாலும் இது அவரது பாணிதானா என்று சில சமயம் தோன்றியது. மேலும் அவரது மெல்லிய, சில சமயம் குரூரமான, நகைச்சுவையும் இதில் குறைவாகத்தான் தெரிகிறது.

எப்படி இருந்தாலும் கதை நன்றாகவே இருந்தது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

என்ன கதை? கணவன் இறந்து, மனைவியின் அண்ணா ஆதரவில் வளரும் குடும்பம். மூத்த மகன் சுந்தரத்தின் விருப்பம் கேட்கப்படாமல் மாமா பெண் பார்வதியோடு திருமணம். மாமா துறவி ஆகிவிட, சுந்தரம் குடும்பப் பொறுப்பை ஏற்கிறான். தம்பி மணியைப் படிக்க வைக்கிறான். 1944 வாக்கில் பம்பாய்க்கு குடிபெயர்கிறான். அம்மா வாழ்க்கையில் முதல் முறையாக குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். மணி வேலைக்குப் போவதில் சில சிக்கல்கள். மணிக்கு குஸ்தி பயில்வான் வினாயக், அவன் தங்கை நிர்மலாவோடு நட்பு. இரு குடும்பங்களும் நெருக்கமாகின்றன. குடுமப்த்தின் உண்மையான தலைவியான அம்மாவே மணியை நிர்மலாவை மணந்து கொள்ளேன் என்கிறாள். மன்னி பார்வதியும் ஆமோதிக்கிறாள். ஆனால் நடக்கவில்லை.

இரண்டாம் பகுதியில் சுந்தரம் பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறான். அங்கே பணக்கார குடும்பத்தை சேர்ந்த, ஹார்வர்டில் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பால்ய விதவை லட்சுமியை சந்திக்கிறான், அவளை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான், குடும்பத்திற்குத் தெரியாது. திரும்பி வருவது 1948-இல். விடுதலை கிடைத்தாயிற்று. சுந்தரத்தின் பதவி உயர்கிறது. மணிக்கு திருமணம் நடக்கிறது. ஆனால் இரண்டாம் திருமணம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறான். கடைசியில் தன் துறவி மாமாவிடம் சொல்ல, மாமா இரண்டு மனைவிகளோடு வாழ் என்று ஆலோசனை சொல்கிறார். இதற்கிடையில் பார்வதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிடுகிறது. லட்சுமி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து உங்கள் சுகதுக்கம் என் சுகதுக்கம் என்று அம்மாவிடம் சொல்வதோடு கதை முடிகிறது.

மணியின் சிக்கல்கள் முதல் பகுதி, சுந்தரத்தின் சிக்கல்கள் இரண்டாம் பகுதி.

அசோகமித்ரன் பல இடங்களில் தெரிகிறார். எத்தனை பிரச்சினை என்றாலும் அதை கூச்சல் போடாமல் எதிர்கொள்ளும் பாத்திரங்கள். உண்மையான நட்பின் சித்திரம், வினாயக் குடும்பத்துக்கு செய்யப்படும் உதவிகள். சுந்தரத்தின் இரண்டாவது திருமணம் பற்றி ரிஷிகேஷில் தெரிந்து கொள்ளும் பார்வதி ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு இரண்டு நாள் கழித்து பம்பாய்க்கு திரும்பிய பிறகு சுந்தரத்தின் அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறுவது. குழந்தை இறந்த செய்தி தெரிந்ததும் வந்து பார்க்கும் லட்சுமி உங்கள் சுகதுக்கம் என்னுடையவை என்று சொன்னதும் அது வரை பெரிதாக அழாத அம்மா லட்சுமியைக் கட்டிக் கொண்டு கதறுவது. லட்சுமியின் வீடு காந்தி வீட்டின் பக்கத்துத் தெருவில் இருப்பதும், லட்சுமி பத்து வயதில் விதவை ஆனதும் காந்தியின் அம்மா – ஆம் மகாத்மா காந்தியின் அம்மாவேதான் – அவளிடம் மொட்டை அடித்துக் கொண்டு ஜபம் செய்துகொண்டு வாழ்க்கையைக் கடத்தாதே என்று சொல்வது. சுந்தரம் அமெரிக்கா போகும்போது மடி ஆசாரம் பார்க்கும் அம்மாவை நிர்மலா இயல்பாகக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்வது. ஆசாரமான அம்மா மராத்திப் பெண்ணை மணம் செய்து கொள் என்று மணியிடம் சொல்வது. சொல்லிக் கொண்டே போகலாம்.

1944-48 பம்பாயில் வாழ்கிறார்கள். ஆனால் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் நடக்கிறது என்பதே இந்தக் குடும்பத்தின் பிரக்ஞையில் இல்லை என்பது மிகச் சிறப்பான சித்திரம். உப்பு புளி மிளகாய், ரேஷன், வாடகை, காலி செய்யமாட்டேன் என்று அட்டூழியம் செய்யும் குடித்தனக்காரர், அலுவலகத்துக்கு செல்ல ரயில், பஸ் இதுதான் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. போரால் அரிசி பருப்பு கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு விவரிக்கப்படுகிறது. பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் வெடிமருந்து வெடித்து ஏற்படும் நாசம் விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான். அதாவது நேரடி பாதிப்பு மட்டுமே. அது ஒரு மாஸ்டர் டச்.

இதை தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள், ஒற்றன் போன்ற நாவல்களுக்கு அடுத்த படியில்தான் வைப்பேன். அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

நாஞ்சில்: சூடிய பூ சூடற்க

சூடிய பூ சூடற்க 2010-க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று அவரே சொல்லி இருக்கிறார். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹமி காணார்” என்று சொன்னதை – சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள் – அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம். நாஞ்சிலுக்கு எனக்குத் தெரிந்ததை விட நன்றாகவே ஹிந்தி/மராத்தி தெரியும் என்பதும் உண்மைதான், தவறாக நான் புரிந்து கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்.

எனக்கு மிகவும் பிடித்தது கதை எழுதுவதின் கதை என்ற கும்பமுனிக் கதை. Tour de force. மனிதருக்கு நக்கல் அதிகம், அதுவும் ஜெயமோகன் எழுதியதை நாஞ்சில் தன் பெயரில் போட்டுக் கொள்கிறார் என்கிறார் பாருங்கள், நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

தன்ராம் சிங் நல்ல சிறுகதை. நாம் பலரும் பார்த்த, வீடுகளையும், கடைகளையும் ராக்காவல் காக்கும் கூர்க்காவை உயிர் பெற வைத்திருக்கிறார்.

வளைகள் எலிகளுக்கானவை இன்னொரு நல்ல சிறுகதை. மஹாராஷ்டிரத்திலிருந்து பாரதத்தில் பல மூலைகளுக்கு தீர்த்தயாத்திரை செல்லும் கிழவ்ர்கள், பத்து மைல் தூரம் கூட பயணிக்காத தமிழர்களை அழகாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.

பிற கதைகளும் படிக்கக் கூடியவைதான். ஆனால் கதை எழுதுவதின் கதை, யாம் உண்பேம், தன்ராம் சிங் இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது

இந்த வருஷத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் நல்லுலகில் விஷ்ணுபுரம் விருது முக்கியமானது. ஆரம்பித்த நாளிலிருந்து தரம் உணர்ந்து விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விக்ரமாதித்யனும் விஷ்ணுபுரம் விருதும் இந்த விருதளிப்பால் பரஸ்பரம் தங்களை கௌரவித்துக் கொண்டிருப்பார்கள்.

கொண்டிருக்கிறார்கள் என்று எழுதாமல் கொண்டிருப்பார்கள் என்று எழுத ஒரே காரணம்தான். நற்றிணை, குறுந்தொகை என்று ஆரம்பித்திருந்தாலும் எனக்கு இன்னும் கவிதைகள் உலகம் கொஞ்சம் தூரம்தான். ஆனால் சமகாலக் கவிஞர்கள் வரை ஒரு நாள் வந்துவிடலாம் என்று நம்பிக்கை வந்திருக்கிறது.

அழியாச்சுடர்கள் தளத்திலும் எழுத்து தளத்திலும் அவரது சில கவிதைகள் கிடைக்கின்றன. எனக்கே இன்னும் படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்திருந்த கவிதை தட்சிணாமூர்த்தியான…

மாமிசம் தின்னாமல்
சுருட்டு பிடிக்காமல்
பட்டையடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடை வராதது பொறாமல்
பதினெட்டாம் படி விட்டிறங்கி
ஊர் ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்த காலக் கைத்த நினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

கவிஞருக்கு ஒரு தளம் இருந்தாலும் அது செயல்படவில்லை. கடைசி பதிவு 2009-இல்.

விக்ரமாதித்யன் கவிஞர் என்றே அடையாளம் காணப்படுகிறார். ஆனால் அவர் சில சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். அங்கே இருந்து ஆரம்பிப்பது என் போல கற்பூர வாசனை தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கலாமோ என்னவோ. நேர்ந்தது என்ற சிறுகதை இங்கே கிடைக்கிறது.

கவிஞருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

எஸ்ரா: சஞ்சாரம்

சஞ்சாரம் 2018க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இது எனக்கு முதல் வரிசை நாவல் இல்லை.

சஞ்சாரத்தின் பலம் அது காட்டும் உலகம். நாதஸ்வரக் கலைஞர்களின் உலகம். மறைந்து கொண்டிருக்கும் உலகம். எப்படி இருந்தது, எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சிறப்பாகக் காட்டுகிறார். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலத்தின் உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் புரிய வைக்கிறார். அவர்களின் லெவலில் இருப்பவர்களின் அழிச்சாட்டியங்கள் எப்படி பொறுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன, குடி, இஷ்டப்படும்போது வாசிப்பது, வாசிப்பில் மயங்கிக் கிடக்கும் கூட்டம் எல்லாவற்றையும் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். அங்கங்கே தொன்மம்தான். கண் தெரியாத நாதஸ்வர வித்வான் தன்னாசி அத்தியாயத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

தொன்மமாக்கல் ஒரு பலவீனமும்தான். எஸ்ரா அவ்வப்போது வலிந்து தொன்மத்தன்மையை புகுத்த முயற்சி செய்வார். சில சமயம் அது செயற்கையாக இருக்கும். இந்த நாவலில் பல இடங்களில் வெற்றி அடைந்தாலும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது. உதாரணமாக மாலிக் காபூர் கல் யானையை இசையை கேட்க வைக்கும் நாதஸ்வரக் கலைஞனை டெல்லிக்கு அழைத்துச் செல்வது அருமை. ஆனால் டெல்லியில் தன் இசையால் மாலிக் கபூரை அலாவுதீன் கில்ஜிக்கு துரோகம் செய்ய வைப்பது செயற்கையாக இருக்கிறது.

நேரடியாக சொல்லப்படும் கதை. உண்மையில் கதை, கதைப்பின்னல் என்று எதுவும் இல்லை. எனக்கு அதெல்லாம் ஒரு குறையும் இல்லை. காட்சிகளின், சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு வரவர உண்மையான சித்தரிப்பு பத்தவில்லை, ஏதாவது தரிசனம் கிடைக்குமா என்று தேடுகிறேன். ஆனால் இது உண்மையான சித்தரிப்பைத் தாண்டிய படைப்பு.

வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல்வாதி தேர்தலில் நிற்கும்போது ஏற்படும் அவமானங்கள், லண்டனுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றும் இடை, கல்யாணத்தில் ஏற்படும் அவமானங்கள் எல்லாவற்றையும் சிறந்த காட்சிகளாகக் கொண்டு வந்திருக்கிறார். கலைக்கு மதிப்பு குறைந்துகொண்டே போனாலும் இன்னும் எச்சங்கள் இருக்கின்றன என்று காட்டுகிறார். குறிப்பாக ஊமை ஐயர் போன்ற ஒரு ரசிகர். நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் வெள்ளைக்கார ஹாக்கின்ஸ். இசையை விரும்பிக் கற்றுக் கொள்ளும் முஸ்லிம் அபு ஆறுமுகம். இசை தெரிந்தாலும் கற்றுக் கொடுக்க முடிந்தாலும் சிறப்பாக வாசிக்க முடியாத ராகவையா. பழைய ஜமீந்தார், வானொலி நிலையத்து அதிகாரி வரும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கலைஞனுக்கு மதிப்பு இல்லை, ஜாதி குறுக்கே நிற்கிறது.

வ.ரா. தமிழ் பெரியார்கள் புத்தகத்தில் சத்தியமூர்த்தியைப் பற்றி விவரிப்பார்; சத்தியமூர்த்தி நேருவுக்கு இணையான அரசியல் அறிவுள்ளவர்; ராஜாஜிக்கு இணையான தர்க்க அறிவுள்ளவர். சட்டசபை விவகாரங்களில் நிபுணர். யார் என்ன சொன்னாலும் மனச் சோர்வடைவதில்லை. சிறந்த தேசபக்தர். ஆனாலும் அவரிடம் ஏதோ குறை இருக்கிரது, மக்கள் அவரை நம்புவதில்லை என்பார்.

எஸ்ராவும் அப்படித்தான். எல்லாம் உண்டு, ஆனாலும் என்னவோ குறைகிறது. எனக்கு மகாபாரதப் பித்து அதிகம், கவிதையைக் கண்டால் ஓடுபவன்தான், கம்பனைக் கூட படிக்க முடியாமல் கஷ்டப்படுபவன்தான், ஆனால் வில்லிபாரதம், அல்லி அரசாணி மாலை எல்லாம் கூட படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு உபபாண்டவம் நினைவில் தங்கவே இல்லை. என்ன படித்தோம் என்பது தெரியவே இல்லை. அதே மாதிரிதான், ஏதோ ஒன்று இந்தப் புத்தகத்தையும் அடுத்த படிக்கு போகமுடியாமல் தடுக்கிறது.

எஸ்ராவின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது உறுபசி. அதில்தான் அவரது உச்சத்தை அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. என்றாவது அதைப் பற்றி எழுத வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எஸ்ரா பக்கம்

கல்கி: சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்றாகத் தெரிந்த நாவல். கல்கி மறைந்த பிறகும் கல்கியின் பழைய தொடர்கதைகளில் ஏதோ ஒன்று – பார்த்திபன் கனவு, சி. சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை – கல்கி பத்திரிகையில் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். நான்கும் மீண்டும் மீண்டும் விரும்பிப் படிக்கப்பட்டன, கல்கி பத்திரிகை விற்றது. அந்த அளவுக்கு பிரபலமான நாவல்.

கதையின் பலம் பாத்திரங்கள் – குறிப்பாக நாகநந்தி. நாகநந்தி கற்பனைப் பாத்திரம். புலிகேசியின் இரட்டை சகோதரர். அதே உருவம். புத்த பிக்ஷுவாக சாளுக்கிய அரசுக்கு ஒற்று வேலை பார்ப்பவர். நாகநந்தியின் பாத்திரம்தான் கதையை ஒருங்கிணைக்கிறது, கதையின் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டாவதாக மகேந்திரவர்மர். புலிகேசியின் படையெடுப்பை தடுக்க மகேந்திரவர்மர் செய்யும் தந்திரங்கள் சுவாரசியமானவை. சிவகாமி, நரசிம்மவர்மர், நரசிம்மவர்மரின் படைத்தளபதியாக பரிணமிக்கும் பரஞ்சோதி, சிவகாமியின் அப்பா ஆயனச் சிற்பி எல்லாருமே பலமான பாத்திரங்கள்.

இரண்டாவது பலம் கதைப்பின்னல். அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் குறைவு. ஒரு சம்பத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு சரளமாகச் செல்லும் கதை. என் கண்ணில் வெகு சில தமிழ் சரித்திர நாவல்களே இப்படி கட்டுக்கோப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன.

பலவீனம்? இது பொழுதுபோக்கு நாவல்தான், வணிக நாவல்தான், இலக்கியம் அல்ல. கல்கியே அப்படித்தான் எழுத விரும்பி இருப்பார். பெரிய மானுட தரிசனங்களை எதிர்பார்க்க முடியாது. நல்ல அரண்மனைச் சதி நாவல், அவ்வளவுதான். பாத்திரங்கள் – நாகநந்தி உட்பட – caricatures மட்டுமே. வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே கல்கி இதை எழுதி இருப்பார். கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், ஆகியவையே இவற்றின் பலம். 10-11 வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

சி. சபதத்தை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டதால் கதை சுருக்கமாக: சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசர் மகேந்திரவர்மர் மீது படையெடுத்து வந்ததும், ஆரம்பத்தில் வெற்றி பெற்றதும் மகேந்திரவர்மர் புலிகேசியை வென்று தன் ராஜ்யத்துக்கு திரும்பச் செய்ததும், பின்னாளில் மகேந்திரவர்மரின் மகனான நரசிம்மவர்மர் புலிகேசி மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றி சாளுக்கியத் தலைநகரான வாதாபியை அழித்ததும் வரலாறு. இந்தப் பின்புலத்தில் இளைஞரான நரசிம்மவர்மர் – நடனப் பெண் சிவகாமி காதல், புலிகேசி திரும்பிச் செல்லும்போது சிவகாமியைக் கடத்திச் செல்லுதல், சிவகாமி வாதாபி அழிக்கப்பட்டாலொழிய காஞ்சி திரும்பமாட்டேன் என்று சபதம் செய்தல், காதல் முறிவு, நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல் – obsession, சபதப்படி வாதாபி அழிக்கப்படல் என்று கதை.

கல்கி போட்ட கோட்டில்தான் ஓரிரண்டு தலைமுறைக்கு தமிழ் சரித்திர நாவல்கள் எழுதப்பட்டன – அரண்மனைச் சதிகள். அது அவரது தவறு இல்லைதான். ஆனால் அப்படி சரித்திர நாவல்கள் வெறும் அரண்மனைச் சதி நாவல்களாக குறுகிவிட்டது பா. கனவு, சி. சபதம், பொ. செல்வன் நாவல்களின் துரதிருஷ்டமான விளைவு என்று கருதுகிறேன்.

ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த சரித்திர பொழுதுபோக்கு நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ரா பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

ஆயிரம் நொட்டை சொன்னால் என்ன, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

முதல் சாஹித்ய அகடமி விருது

1955-இல் சாஹித்ய அகடமி விருதுகள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழுக்கான முதல் விருது ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம் என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்டது. மின்புத்தகம் இங்கே.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். தமிழின்பம் பிள்ளைவாள் ஆற்றிய பல உரைகள், பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு. பிள்ளை தமிழறிஞர். அவரது தமிழ் அலங்காரத் தமிழ். சுகமான நடை. கேட்பதற்கு சுவையாக இருந்திருக்கும். ஆனால் அங்கும் இங்கும் பாடல்களை எடுத்து விளக்குவதற்கு எதற்கு விருது?

தமிழ் சாஹித்ய அகடமி விருதுகளின் பிரச்சினையே இதுதான். படைப்புகளை விட அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுக்குதான் பரிசு அதிகமாகக் கிடைத்தது. அதுவும் முதல் 25 வருஷங்களில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தது. விமர்சனங்கள், விளக்கங்கள், அறிமுகங்கள் முக்கியமானவைதான். ஆனால் அறிமுகத்தை விட படைப்பல்லவா முக்கியம்?

என் கண்ணில் சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியமானவை. அதுவும் இந்தியா போன்ற பல மொழிகள் பழக்கத்தில் இருக்கும் நாட்டில் ஒரு மொழியில் இலக்கியம் வேற்று மொழிக்காரர்களுக்கு பரிச்சயம் ஆவதற்கு சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. புத்தகத்துக்கு விருது என்றால் அடுத்தபடி மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். வேற்று மொழியினரைப் போய்ச் சேரும் என்று நப்பாசைப்படலாம். நம்மூரில் ராமலிங்கம் எழுதிய உரைநடை வளர்ச்சி, தண்டாயுதம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் சாஹித்ய அகடமி விருது கொடுக்கிறார்கள். உரைநடையை நன்றாகப் படித்த வேற்றுமொழியினருக்கு உரைநடை எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கலாம். வேதநாயகம் பிள்ளை முதல் நாவலை எழுதினார் என்று தெரிந்து கொண்டு என்ன லாபம்? என்ன சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதவா வேற்று மொழியினர் இந்த மாதிரி புத்தகங்களை படிக்கிறார்கள்? பிரதாப முதலியாரின் சரித்திரத்தைப் படித்தால்தானே தமிழ் இலக்கியம், உரைநடை எப்படி பரிணமித்தது என்று புரிந்து கொள்ளலாம்? நம்மூரில்தான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புத்தகத்துக்கு முதலில் விருது கொடுத்துவிட்டு நாலைந்து வருஷம் கழித்துத்தான் புதுக்கவிதை புத்தகம் ஒன்றுக்கு முதன்முதலாக விருது கொடுக்கும் முட்டாள்தனம் எல்லாம் நடக்கிறது.

சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காகவும் விருது கொடுக்கப்படலாம். அதுவும் முக்கியமே, ஆனால் என் கண்ணில் அது இரண்டாம் பட்சம்தான். தமிழில் பல முறை அப்படி நடந்துவிடுகிறது. பாரதிதாசனுக்கு கொடுப்போம், சமீபத்தில் என்ன புத்தகம் வந்ததோ அதற்குக் கொடுத்துவிடுவோம், அது பிசிராந்தையார் மாதிரி வெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடக்கிறது.

சேதுப்பிள்ளைக்கு அப்படித்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அவரது வானொலி உரைகள், கூட்டத்தில் பேசியவை, தீபாவளி மலருக்காக எழுதியவை என்று பலதையும் கலந்து கட்டி ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். அதற்கு விருது வேறு.

ஆனால் ஒன்று. பிள்ளைவாளிள் புத்தகம் ஆங்கிலத்தில், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், தேவாரம், கம்பன், குற்றாலக் குறவஞ்சி, பாரதி என்று பலருக்கும் நல்ல அறிமுகமாக இருந்திருக்கும். ஏன், இன்றைய தமிழனுக்குக் கூட பயனுள்ளதாக இருந்திருக்கும். ஒரு வேளை அப்படி நினைத்துத்தான் பரிசு கொடுத்தார்களோ என்னவோ.

பிள்ளைவாள் அவரது trademark பாணியில் இயற்கைக் காட்சிகள், சிலம்பின் காலம், வள்ளல்கள், கர்ணன்-கும்பகர்ணன், குகன்-கண்ணப்ப நாயனார், பாரதி பாடல்கள் என்று பல தலைப்பில் பேசி எழுதி இருக்கிறார். நிச்சயமாகப் படிக்கலாம். இப்படி சுகமான தமிழில் சுவையாக விடாமல் பேசியதும் எழுதியதும்தான் அவரது முக்கியப் பங்களிப்பு. இதற்கு பரிசு ஏன் என்பதுதான் விளங்கவில்லை. புதுமைப்பித்தன் போய் சில வருஷம் ஆகிவிட்டதுதான், ஆனால் கு.ப.ரா., தி.ஜா., க.நா.சு. எல்லாரும் எழுதிக் கொண்டிருந்தார்களே? குறைந்த பட்சம் கல்கி, பாரதிதாசனுக்காவது கொடுத்திருக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: தமிழின்பம் மின்பிரதி

ச. பாலமுருகன்: சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி அருமையான நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சோளகர் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர். இன்று 20000 பேர்தான் இருக்கிறார்களாம். அவர்கள் பேசும் மொழி சோளகம். இது திராவிட மொழிகளில் ஒன்றாம். தொட்டி என்றால் அவர்கள் மொழியில் கிராமமாம். லிங்காயத்துக்களை ஒரு வகையில் தங்கள் பங்காளிகளாக நினைக்கிறார்கள். மாதேஸ்வரனை வழிபடுகிறார்கள். பிலிகிரி ரங்கநாதரை தங்கள் குலத்து மாப்பிள்ளையாக சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

சோளகர்களின் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் புத்தகம். தொட்டி, கொத்தல்லி என்று அழைக்கப்படும் தொட்டியின் தலைவன், கோல்காரன் என்று அழைக்கப்படும் பூசாரி. ராகி விவசாயம் உண்டு. தேன் எடுக்கிறார்கள். வேட்டை. ஆனால் இப்போது வனத்துறை அதிகாரிகளுக்கு பயந்து பயந்து வேட்டை. “நாகரீகம்” மெதுமெதுவாக அவர்களை கொள்ளை அடிக்கிறது, அவர்களது பாரம்பரிய உரிமைகளை, நிலத்தை பறித்துக் கொள்கிறது. குறிப்பாக வேட்டை வீரன் சிக்குமாதாவை ஏமாற்றி போலீஸ் துறை அடித்து அவர்கள் நிலத்தை பிடுங்கிக் கொள்ளும் காட்சி உண்மையாக இருக்கிறது. சுலபமான திருமணங்கள். இறப்பு சடங்குகள். கும்பிடும் தெய்வம் மணிராசன், மாதேஸ்வரன், லிங்காயத்துக்களுடான தொன்மம். யானைகள், புலி, (புலிக்கு அவர்கள் பெயர்: பெருநரி!) கரடி, பன்றிகள், மான்கள், எறும்புத்தின்னிகள். சந்தன மரத்தைத் தொடாத பாரம்பரியம் மெதுமெதுவாக பணத் தேவைகளுக்காக சந்தன மரத்தை, அதன் வேர்களை, மரப் பிசிர்களை விற்கும் மாற்றங்கள். வீரப்பன். அவனைத் தேடும் காவல்துறை…

நுண்விவரங்கள் நிறைந்து கிடக்கின்றன. விவரிக்க முடியாது, படிக்கத்தான் வேண்டும். ஆழிசூழ் உலகை ஒரு வகையில் நினைவுபடுத்தியது. ஆழிசூழ் உலகில் நமக்குத் தோன்றும் பெரும் மானுடத் தொடர்ச்சி இதில் குறைவு. சில விதிவிலக்குகள் இருந்தாலும் இது ஒரு குறுகிய காலகட்டத்தை மட்டுமே விவரிப்பது போலத் தோன்றியது.

வீரப்பனைத் தேடும் காவல்துறை கையில் கிடைத்தவர்கள் எல்லாம் சந்தேகப்பட்டு செய்யும் சித்திரவதைகள் விவரமாக எழுதப்பட்டிருக்கின்றன. இதில் பாதியாவது உண்மையாக இருக்கும். அதுதான் பெரிய சோகம், அரசு எந்திரம் சட்டத்தை உடைத்தால் எந்த எல்லைக்கும் போகும் என்பதை உணர வைக்கும் பக்கங்கள்.

எழுதியவர் ச. பாலமுருகன். வேறு ஏதாவது எழுதி இருக்கிறாரா தெரியவில்லை.

அருமையான நாவல், படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

அருண்மொழிநங்கை பதிவு

அருண்மொழிநங்கையை அனேகரும் ஜெயமோகனின் மனைவி என்றுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். அவர் நினைத்தால், முயன்றால், எழுத்தாளர் என்றே அடையாளம் கொள்ளலாம்.

அவரது சிறு வ்யது நினைவுகள் சுவாரசியமானவை. குறிப்பாக நுரை. நுரை ஒரு ஏழெட்டு வயது சிறுமியின் கண்ணிலிருந்தே சொல்லப்படுகிறது, அந்தக் கண்ணோட்டம் தவறிக்கூட கொஞ்சம் பெரியவளான பெண்ணின் கண்ணிலிருந்து சொல்லப்படவில்லை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

அவர் முயன்றால் லா.ச.ரா.வின் பாற்கடல் பாணியில் தன் குடும்ப நினைவுகளை எழுதலாம். நமக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்ப்போம்… (பாற்கடல்தான் எனக்கு மிகவும் பிடித்தமான லா.ச.ரா. நூல்.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

நேருவின் ஆகஸ்ட் 15, 1947 உரை: Tryst with Destiny

இந்தியா விடுதலை அடைந்தபோது, ஆகஸ்ட் 15, 1947-இல் நேரு ஆற்றிய புகழ் பெற்ற உரை.

Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes, which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long supressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service of Inida and her people and to the still larger cause of humanity.

At the dawn of history India started on her unending quest, and trackless centuries are filled with her striving and the grandeur of her success and her failures. Through good and ill fortune alike she has never lost sight of that quest or forgotten the ideals which gave her strength. We end today a period of ill fortune and India discovers herself again. The achievement we celebrate today is but a step, an opening of opportunity, to the greater triumphs and achievements that await us. Are we brave enough and wise enough to grasp this opportunity and accept the challenge of the future?

Freedom and power bring responsibility. The responsibility rests upon this Assembly, a sovereign body representing the sovereign people of India. Before the birth of freedom we have endured all the pains of labour and our hearts are heavy with the memory of this sorrow. Some of those pains continue even now. Nevertheless, the past is over and it is the future that beckons to us now.

That future is not one of ease or resting but of incessant striving so that we may fulfil the pledges we have so often taken and the one we shall take today. The service of India means the service of the millions who suffer. It means the ending of poverty and ignorance and disease and inequality of opportunity. The ambition of the greatest man of our generation has been to wipe every tear from every eye. That may be beyond us, but as long as there are tears and suffering, so long our work will not be over.

And so we have to labour and to work, and work hard, to give reality to our dreams. Those dreams are for India, but they are also for the world, for all the nations and peoples are too closely knit together today for any one of them to imagine that it can live apart Peace has been said to be indivisible; so is freedom, so is prosperity now, and so also is disaster in this One World that can no longer be split into isolated fragments.

To the people of India, whose representatives we are, we make an appeal to join us with faith and confidence in this great adventure. This is no time for petty and destructive criticism, no time for ill-will or blaming others. We have to build the noble mansion of free India where all her children may dwell.

The appointed day has come – the day appointed by destiny – and India stands forth again, after long slumber and struggle, awake, vital, free and independent. The past clings on to us still in some measure and we have to do much before we redeem the pledges we have so often taken. Yet the turning point is past, and history begins anew for us, the history which we shall live and act and others will write about.

It is a fateful moment for us in India, for all Asia and for the world. A new star rises, the star of freedom in the East, a new hope comes into being, a vision long cherished materializes. May the star never set and that hope never be betrayed!

We rejoice in that freedom, even though clouds surround us, and many of our people are sorrowstricken and difficult problems encompass us. But freedom brings responsibilities and burdens and we have to face them in the spirit of a free and disciplined people

On this day our first thoughts go to the architect of this freedom, the Father of our Nation, who, embodying the old spirit of India, held aloft the torch of freedom and lighted up the darkness that surrounded us. We have often been unworthy followers of his and have strayed from his message, but not only we but succeeding generations will remember this message and bear the imprint in their hearts of this great son of India, magnificent in his faith and strength and courage and humility. We shall never allow that torch of freedom to be blown out, however high the wind or stormy the tempest.

Our next thoughts must be of the unknown volunteers and soldiers of freedom who, without praise or reward, have served India even unto death.

We think also of our brothers and sisters who have been cut off from us by political boundaries and who unhappily cannot share at present in the freedom that has come. They are of us and will remain of us whatever may happen, and we shall be sharers in their good [or] ill fortune alike.

The future beckons to us. Whither do we go and what shall be our endeavour? To bring freedom and opportunity to the common man, to the peasants and workers of India; to fight and end poverty and ignorance and disease; to build up a prosperous, democratic and progressive nation, and to create social, economic and political institutions which will ensure justice and fullness of life to every man and woman.

We have hard work ahead. There is no resting for any one of us till we redeem our pledge in full, till we make all the people of India what destiny intended them to be. We are citizens of a great country on the verge of bold advance, and we have to live up to that high standard. All of us, to whatever religion we may belong, are equally the children of India with equal rights, privileges and obligations. We cannot encourage communalism or narrow-mindedness, for no nation can be great whose people are narrow in thought or in action.

To the nations and peoples of the world we send greetings and pledge ourselves to cooperate with them in furthering peace, freedom and democracy.

And to India, our much-loved motherland, the ancient, the eternal and the ever-new, we pay our reverent homage and we bind ourselves afresh to her service.

Jai Hind!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

பாயசம் (தி. ஜானகிராமன்) குறும்படம்

மேம்படுத்தப்படுத்தி மீண்டும் பதிப்பதற்கு ஒரே காரணம்தான். நெட்ஃப்ளிக்சில் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் டெல்லி கணேஷ், ரோஹிணி, அதிதி பாலன் நடித்து இந்த சிறுகதை வெளியாகி இருக்கிறது.

இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த வசந்துக்கு ஒரு ஜே!

நவரசாவின் எல்லா அத்தியாயங்களையும் நான் பார்த்து முடிக்கவில்லை. பார்த்தவற்றுள் பலவும் சுமார்தான். ஆனால் இந்த நிகழ்ச்சி (episode) பிரமாதம். அபாரமான சிறுகதையோடு சிறந்த நடிப்பும் சேர்ந்துவிட்டால் இது போன்ற குறும்படங்கள் எங்கேயோ போய்விடுகின்றன.

டெல்லி கணேஷின் நடிப்பு மிக அருமை. ஆங்காரத்தை, தானும் தன் குடும்பமும் தாழ்ந்திருப்பதை அருமையாகக் காண்பித்திருக்கிறார். அதிதி பாலன் கடைசியில் டெல்லி கணேஷைப் பார்க்கும் பார்வைக்கே முழு பைசா வசூல். துணைப் பாத்திரங்களாக வருபவர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மணப்பெண்ணாக வருபவர், அவருடைய மகிழ்ச்சியும் அக்காவிடம் இருக்கும் அன்பும் பிரமாதமாக வந்திருக்கிறது; மற்றும் காத்தாடி ராமமூர்த்தி. “இது என்ன காப்பியா” என்று கேட்டால் “அப்படித்தான் சொல்றா” என்று அவர் பதில் சொல்வது இன்னாளில் அழிந்து கொண்டிருக்கும் அக்மார்க் தஞ்சாவூர் பிராமணக் குசும்பு.

இரண்டாவதாக அந்த கல்யாணக் காட்சியை படமாக்கி இருக்கும் விதம். நான் இளமையில் பார்த்த திருமணங்களை கண் முன் கொண்டு வந்துவிட்டது. அதுவும் அந்த ஜமக்காளம்! அந்த மாதிரி ஒரு ஜமக்காளத்தைப் பார்த்து பல வருஷம் ஆயிற்று.

பாயசம் சிறுகதையைப் பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? தி.ஜா.வின் முழு வீச்சும் வெளிப்படும் சிறுகதை. மனித மனத்தின் அசூயையை, பொறாமையை, உறவுகளுக்குள்ளே இருக்கும் அகங்காரப் (ego) பிரச்சினைகளை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது. தவறவிடாமல் படியுங்கள்!

இந்த சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் சிறந்த தமிழ் சிறுகதை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி. ஜானகிராமன் பக்கம், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: பாயசம் சிறுகதை