நித்ய சைதன்ய யதி – In the Stream of Consciousness

In the Stream of Consciousness” என்ற நித்ய சைதன்ய யதி எழுதிய புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் அவரும் நடராஜ குருவும் மேற்கொண்ட பயணங்களில் ஏற்பட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளார். எல்லாமே ஒரு வகையில் குரு அவருக்கு கொடுத்த பாடங்கள் என்றும் சொல்லலாம். அரை பக்கத்துக்கு குறைவான கட்டுரைகள். நண்பர் முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் கீழே.

பகிர்தல்

எங்கள் ரயில் முக்கிய ஸ்டேஷனில் வந்து நின்ற பொழுது உண்ணுவதற்காக இரண்டு உணவு பொட்டலங்களை வாங்கினோம். குரு (நடராஜ குரு) தன் பொட்டலத்தை பிரித்து முதல் கவளத்தை கையில் எடுத்த பொழுது, ஜன்னலின் வெளியே ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய சிறுவன் கையை நீட்டி யாசித்தான். குரு அந்த சோற்றுருண்டையை அவனிடம் கொடுத்தார். அவன் அவசரமாக அதை முழுங்கிவிட்டு குரு இரண்டாவது உருண்டையை சாப்பிடுவதற்கு முன்பே மறுபடியும் கையை நீட்டினான்.

எனக்கு அது எரிச்சலூட்டியது. நான் அந்த பிள்ளையை தள்ளி விலக்கி விட நினைத்தேன். அனால் குரு நான் அப்படி செய்வதை தடுத்தார். அவர் இரண்டாவது உருண்டையை தான் சாப்பிட்டு விட்டு மூன்றாவது உருண்டையை அந்த சிறுவனுக்குக் கொடுத்தார்.
அவர் திரும்பி என்னைப் பார்த்து சொன்னார், “மனிதர்கள் பிச்சைக்காரர்களால் எரிச்சலடைவார்கள் என எனக்குத் தெரியும். வறுமை மோசமானது அனால் அது ஒரு குற்றம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் அவனால் முடிந்த அளவிற்கு வாழ முயற்சிக்கிறான். நீ இந்தியாவில் காண்பது மேலை நாடுகளில் நடக்க சாத்தியமேயில்லை. இந்த சிறுவன் நமக்கு முற்றிலும் அறிமுகமற்றவன், ஆனால் மற்றவர்களின் அன்பின் மீதும், கருணையின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். ஒரு மனிதன் மீது மற்றொரு மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையே அவனை நம் முன் கைநீட்ட வைக்கிறது. உனக்கு இந்த காட்சியை கண்டு கண்களில் நீர் வரவேண்டும். இந்த பரஸ்பர பகிர்தலும் அடையாளப்படுத்துதலும் மேலை சமூகங்களில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன.”

“வறுமை ஒழிப்பதையும், உதவி தேடி நிற்கும் மனிதரின் நிலையை புரிந்து கொள்வதையும் குழப்பிக் கொள்ளாதே. முதல் பிரச்சனையை எடுத்துக் கொள்ள விரும்பினால் நீ மொத்தமாக உலக பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டியிருக்கும். உன்னால் முடிந்தால் போய் அதைச் செய். ஆனால் இரண்டாவது பிரச்சனைக்கு உடனடியான தீர்வு தேவை. அதற்காக உன் மகிழ்ச்சியை துறக்க வேண்டாம், உனக்கு இருப்பதை பகிர்ந்தால் மட்டும் போதும். உன்னுடைய மகிழ்ச்சி மற்றவருடைய மகிழ்ச்சியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.”

ஆசாரம் சிறையிடும்; அறிவு விடுவிக்கும்

ஒரு முறை நாரயண குரு உடல் நலமற்று படுக்கையில் கிடந்தார். அவருக்கு அரிசி கஞ்சி கொடுக்கப்பட்டது. அதைக் கொணர்ந்தவனிடம் கஞ்சியில் உப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளதா என வினவினார். இந்தியாவில் குருவுக்கு சமைக்கப்படும் உணவை யாரும் ருசி பார்ப்பதில்லை என்ற ஆசாரம் உண்டு ஏனென்றால் அப்படி ருசி பார்க்கப்பட்ட உணவு அவருக்கு விளம்ப தகுதியற்ற எச்சில் உணவாகிவிட்டது என்ற நம்பிக்கையினால். அந்த கஞ்சியை தயாரித்த சமையற்காரன் அங்கே இல்லாததால் அதைக் கொண்டு வந்த மனிதனால் ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல முடியவில்லை. அவன் குழப்பத்தைக் கண்டு குரு கூறினார், “அதில் கொஞ்சம் நாய்க்கு கொடு. அவைகளுக்கு இது போன்ற மனசாட்சியின் பொய்யான ஐயங்கள் இல்லை”.

உண்மையின் பிம்பங்கள்

நான் சுவாமி அகாநந்தா உடன் தங்கியிருந்த பொழுது, அங்கிருந்த பிரார்த்தனை கூடத்தில் சலவைக்கல்லால் செய்யப்பட்ட பகவான் கிருஷ்ணரின் சிலை ஒன்று பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கற்சிலைக்கு பக்தர்கள் மலர்களை அர்ப்பணித்த வண்ணம் இருந்தனர்.

ஒரு சமயம் நான் சுவாமியின் அருகில் சென்று கேட்டேன், “உங்களை போன்ற மிக உயர்ந்த நிலையை அடைந்த உயிருள்ள உதாரணம் என் முன் இருக்கையில் எதற்காக நான் மாற்றமற்றதும் கல்லால் செய்யப்பட்டதும் ஆன ஒரு கலைப்பொருளை வழிபட வேண்டும்? நான் அந்த பிம்பத்தின் முன் உட்காருவதைக் காட்டிலும் உங்கள் காலடியில் அமர்ந்திருக்கவே பிரியப்படுவேன்.”

அவர் கூறினார், “ஆமாம், அது சரிதான். ஆனால் ஒரு நாள் என்னை தேடிக் கொண்டு என் அறைக்கு வருவாய், நான் அங்கு இருக்க மாட்டேன். நீ என்னை தேடி கொண்டே வந்து இறுதியில் நான் மலம் கழித்துக் கொண்டிருப்பதை காண்பாய். நான் மலம் கழிக்கும் அந்த பிம்பம் புனிதத்தன்மை, இறைத்தன்மை, அப்பழுக்கற்ற தன்மை என்று நீ என் மீது முன்னர் ஏற்றி வைத்திருந்த பிம்பங்களுடன் முரண்படும். அதற்கு பதிலாக இந்த அழகிய சிலையை வழிபடுவதே மேல் என நினைக்கிறேன். ஏனென்றால் அதுவும் மிக உயர்ந்த ஒன்றையே காட்டுகிறது. எப்பொழுதெல்லாம் அதை அணுகுகிறாயோ அது உன்னை இன்முகத்துடன் வரவேற்கும். அது என்றைக்குமே வயதாகியோ, அசிங்கமாகவோ அல்லது மலம் கழிக்கவோ ஓடிவிடாது.”

நான் நினைத்துக் கொண்டேன், “ஆமாம், அது சரிதான்.”

நீ தவறுகையில்

ஒரு முறை தில்லியில் இருந்து அம்ரித்சருக்கு நடராஜ குருவுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். எங்களுடன் பயணித்த சகபயணிகளில் இருவர் பஞ்சாப் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். நாங்கள் அணிந்திருந்த காவி உடையையும் தாடியையும் பார்த்து நாங்கள் மத நம்பிக்கை கொண்டவர்கள் என நினைத்து எங்களுடன் மனித வாழ்கையை பாதிக்கும் அடிப்படை அம்சங்களை பற்றி விவாதிக்க விரும்பினார்கள்.

அவர்களில் வயது முதிர்ந்தவர் குருவிடம், “ஐயா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?” என வினவினார்.

நடராஜ குரு சொன்னார்,” நீங்கள் ‘கடவுள்’ என எதைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என சொல்லாத வரை என்னால் அக்கேள்விக்கு பதிலளிக்க இயலாது. கடவுளின் இருப்பும் இல்லாமையும் அதை எப்படி வகுக்கிறோமோ அதை பொறுத்து அமைவது.”

வயது முதிர்ந்தவர் தன் கருத்தை விடாமல்,” அப்படியென்றால் குருஜி கடவுளை எப்படி வகுக்கிறீர்கள்?” என்றார்.

நடராஜ குரு அவரை பார்த்து லேசாக சிரித்து விட்டு கூறினார், “நீ தவறும் பொழுது எது சரியானதோ அதுவே இறைவன்.”

அபத்தத்தின் பெருவெற்றி

வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியாலா என்று ஒரு ஊர் உள்ளது. ஒருமுறை அவ்வூரை நாடோடி பிச்சைக்காரனாய் கடந்து சென்று கொண்டிருந்தேன். எவரோ ஓடி வந்து சாகக் கிடக்கும் மனிதனை காணுமாறு அழைத்தனர். இறக்கும் தறுவாயில் உள்ளவர்களை ஆசீர்வதிக்க ஒரு ‘சாதுவை’ அழைப்பது இந்தியாவில் சாதாரணமாக நடப்பது. என் ஆன்மீக சக்தி மீது நானே உறுதியற்று இருந்த போதிலும், மிகுந்த அவசரத்துடன் மாளிகை போலிருந்த ஒரு கட்டிடத்தின் படிகளை ஏறிக் கடந்தேன். இறுதியில் ராஜ தோரணையும், பகட்டலங்காரமும் கொண்ட பெரும் செல்வந்தருக்கு சொந்தமான அந்த வீட்டின் ஒரு அறைக்குள் நுழைந்தேன்.

வீட்டின் முதலாளி சொகுசான மெத்தையிடப்பட்ட படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தார். அவரைச் சுற்றி உயர் பதவியில் இருப்பவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுள் என்னால் சுலபமாக ஒரு புரோகிதரையும், மருத்துவரையும், தாதியையும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான் வந்திருப்பது அவருக்கு தெரிவிக்கப்பட்டவுடன் கண்களை திறந்து என்னை உச்சகட்ட கலக்கத்துடன் திரும்பிப் பார்த்தார். ஒரு கொடுங்கனவினுள் அவர் இருப்பது போல பெருங்குரலுடன் ஓலமிட்டார். இரு கைகளையும் கூப்பி அவருடைய பாவங்களை மன்னித்து, அமைதியான மரணத்தை அருளுமாறு என்னிடம் மன்றாடினார்.

அடுத்தவரை மன்னிக்க எனக்குள்ள உரிமையை பற்றி வாதிக்க அது சரியான நேரம் அல்ல என்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் நான் கூறினேன், “உன்னுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டன. பயப்படாதே. நீ இப்போது இறக்கப் போவதில்லை, என்றுமே நீ இறப்பதும் இல்லை”. என்னுடைய சிற்றுரையை முடித்தவுடன், என் பேச்சின் அபத்தம் மனதில் அறைந்தது. இந்தியாவில் சன்னியாசிகள் மனம் போன போக்கில் நடந்து கொள்ள கிடைக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்டு நான் அந்த மாளிகையை விட்டு அவசரமாக வெளியே வந்து முடிந்தவரை வேகமாக நடந்து போய்விட்டேன்.

இரண்டு வருடங்கள் கழித்து புனிதத் தலமான ஹரித்வாரின் கங்கைக் கரையில் நின்று கொண்டிருக்கையில் ஒரு வயதான மனிதன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். என் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, வழிபடுவது போல அவர் நெற்றியை கால்களில் பதித்தார். மரியாதைக்குரிய மனிதர் ஒருவர் என் கால்களில் விழுவதைக் கண்டு மிகவும் சங்கடமாய் உணர்ந்தேன். அதனால் அவரை தூக்கி யாரென்று விசாரித்தேன்.

அவர் சொன்னார், “நான் உங்களுடைய சீடன். உங்களின் பாதச் சுவடுகளை பின்பற்றுபவன். நான் முன்பு செல்வத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். அதை மிக அதிகமாக சேர்த்து வைத்தேன். மேலும் பணத்தால் கிடைக்கக் கூடிய அனைத்தையும் வைத்திருந்தேன். மரணம் அருகில் வந்த போது, என் பாவங்களை வெறித்து பார்த்துக் கொண்டு உதவியற்று கிடந்தேன். எங்கிருந்தோ நீங்கள் என் அறையினுள் பிரவேசித்தீர்கள். உலகத்தின் பார்வையில் நீங்கள் பிச்சைக்காரன், தெருவில் அலையும் நாடோடி. என் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்என அதிகாரத்துடன் கூறினீர்கள். அந்த கணத்தில் என்னை மூடியிருந்த இருண்ட திரை விலகியது. பெரும் நம்பிக்கையுடன் நான் சாக மாட்டேன், என்றுமே சாக மாட்டேன் என கூறினீர்கள்.”

“உங்கள் வாக்கு பலித்தது. நான் இறக்கவில்லை. நான் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் என் செல்வத்தையும், சமூக அந்தஸ்துகளையும் விட்டுவிட்டு உங்கள் காலடிகளை தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களை போல பலர் உள்ள இந்த புனிதத் தலத்திற்கு வந்தேன். இன்று நானும் ஒரு நாடோடி. இந்த கங்கைக் கரையில் உங்களை போன்ற ஞானிகளின் காலடிகளில் உட்கார்ந்து நீங்கள் அன்று உரைத்ததின் உண்மையை புரிந்து கொண்டேன். எனக்கு நிச்சயமாக தெரியும் நான் என்றைக்குமே இறப்பதில்லை. யாருமே இறப்பதில்லை”

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்

சுப்ரபாரதிமணியன் தேர்வுகள்

சுப்ரபாரதிமணியனின் ஒரு பதிவிலிருந்து கட் பேஸ்ட் செய்தது.

தமிழின் சில முக்கிய நாவல்கள்

  1. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
  2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன்
  3. ஒரு நாள் – க.நா. சுப்ரமணியம்
  4. மோகமுள் – தி. ஜானகிராமன்
  5. ஒரு புளிய மரத்தின் கதைசுந்தர ராமசாமி
  6. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
  7. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
  8. மானசரோவர் – அசோகமித்திரன்
  9. வெக்கைபூமணி
  10. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  11. துறைமுகம் – தோப்பில் முகமது மீரான்
  12. காகித மலர்கள் – ஆதவன்
  13. சாயாவனம் – சா. கந்தசாமி
  14. புயலில் ஒரு தோணி – ப. சிங்காரம்
  15. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  16. தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில்நாடன்
  17. வாக்குமூலம் – நகுலன்
  18. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
  19. மண்ணகத்துப் பூந்துளிகள் – ராஜம் கிருஷ்ணன்
  20. செடல் – இமயம்
  21. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
  22. ரப்பர்ஜெயமோகன்
  23. மூன்று விரல் – இரா. முருகன்
  24. அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத் தேனீரும் – எம்.ஜி. சுரேஷ்
  25. மணியபேரா – சி.ஆர். ரவீந்திரன்
  26. நல்ல நிலம் – பாவை சந்திரன்
  27. கங்கணம்பெருமாள் முருகன்
  28. ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
  29. நீர்த்துளி – சுப்ரபாரதிமணியன்

கடந்த ஆண்டின் (2011) சில சிறந்த நாவல்கள்

  1. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ. முத்துலிங்கம்
  2. கொற்கை – ஜோ டி குரூஸ்
  3. ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
  4. கால்கள் – அபிலாஷ்
  5. நிழலின் தனிமை – தேவிபாரதி
  6. கண்ணகி – தமிழ்ச்செல்வி
  7. வல்லினமே மெல்லினமே.. – வாசந்தி
  8. மறுபக்கம் – பொன்னீலன்
  9. படுகளம் – ப.க. பொன்னுசாமி
  10. குவியம் – ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
  11. விடியல் – அ. ரங்கசாமி (மலேசியா)
  12. சூதாட்டம் ஆடும் காலம் – ரெ.கார்த்திகேசு (மலேசியா)

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: சுப்ரபாரதிமணியன் தளம்

நாஞ்சில்நாடனின் “தலைகீழ் விகிதங்கள்”

இதே கருவை ஒரு லக்ஷ்மியோ சிவசங்கரியோ பாலகுமாரனோ கையாண்டிருந்தால் கதையின் ஓட்டம், சம்பவங்கள் இதே மாதிரிதான் இருந்திருக்கும், ஆனாலும் அது எனக்கு இலக்கியம் ஆகி இருக்காது. நாஞ்சில்நாடன் எழுதினால் மட்டும் ஏன் இலக்கியம் ஆகிறது? அவரை நான் சந்தித்திருக்கிறேன், அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு என்பதாலா என்று எனக்கே ஒரு சந்தேகம்.

அப்புறம் தோன்றிய காரணங்கள்:

  • நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள் – சிவதாணு, பார்வதி, மாமனார் சொக்கலிங்கம் பிள்ளை, கொழுந்தியாள் பவானி, நண்பர்கள் ராமநாதன்+காந்திமதி, பெரியவர் சண்முகம் பிள்ளை என்று எல்லாருமே நாம் பார்க்கக் கூடிய, நம்மவர்கள். அவர்களின் உணர்ச்சிகள், வினைகள்+எதிர்வினைகள் எல்லாமே நாம் அனுபவித்தவை, அனுபவிக்கக் கூடியவை.
  • நுட்பமான சித்தரிப்புகள் – கோலப்பப் பிள்ளை கலகம் மூட்ட முயற்சிக்கும் ஒரு இடம் போதும்.
  • நுட்பமான அவதானிப்புகள் – சைவப் பிள்ளைமார்களின் பல பழக்க வழக்கங்களை கவனமாக எடுத்தாண்டிருக்கிறார். கொழுந்தியா சமைஞ்சது, துஷ்டியின் முக்கியத்துவம் எல்லாம் இன்றைக்கு குறைந்து போயிருக்கலாம், ஆனாலும் அவற்றை தத்ரூபமாக சித்தரித்திருக்கிறார்.
  • ஆனாலும் எனக்கு குறைகள் தெரியத்தான் செய்கின்றன. இது ஓரளவு கீழ்மட்டத்திலேயே நின்றுவிடுகிறது. செண்டிமெண்ட் மெலோட்ராமா என்ற நிலையிலிருந்து ஒரு மயிரிழையில்தான் தப்பிக்கிறது. வாரப் பத்திரிகைகளில் வந்திருந்தால் பெருவெற்றி பெற்றிருக்கும். ஒரு சிவாஜி கணேசன் நடித்து அறுபதுகளில் வந்திருந்தால் நன்றாக ஓடி இருக்கும். ஏன் இப்போது கூட ஒரு மெகாசீரியலாக வந்தால் வெற்றி பெறும். தரிசனம் என்று ஒன்று இல்லவே இல்லை.

    சுருக்கமாகச் சொன்னால் மிகவும் promising படைப்பு. எப்போதும் நினைவில் இருக்கும் படைப்பு, சுலபமாக மறந்துவிடாது. ஆனால் உங்கள் சொந்த அனுபவங்களோடு ஒத்துப் போனால் ஒழிய மீண்டும் மீண்டும் யோசிக்க வைக்கும் படைப்பு இல்லை.

    தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன், ரதி, பிரமிட் நடராஜன், ஜனகராஜ் நடித்து “சொல்ல மறந்த கதை” என்று திரைப்படமாகவும் வந்தது. பச்சான் இதை வன்னியர் பின்புலத்துக்கு மாற்றி இருந்தார்.

    ஜெயமோகன் இதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். அவரது வார்த்தைகளில்:

    சமத்காரம் மிக்க கதை சொல்லியான நாஞ்சில் நாடனின் கூரிய அவதானிப்பு கதாபாத்திரங்களையும் சூழலையும் கண் முன் நிறுத்த, அங்கதம் அதில் ஊடுருவிச் செல்லும் படைப்பு இது. வேளாள வாழ்வின் பெருமிதமும், சரிவும், செழிப்பும், அற்பத்தனமும் மாறி மாறித் தெரிந்து நமது புதையுண்ட ஞாபகப் பதிவுகளை கிளர்த்துகின்றன. தங்கைகளை கரையேற்ற பணக்கார வீட்டில் பெண்ணெடுத்த சிவதாணு வீட்டோடு மாப்பிள்ளையாகி படும் அவமானங்களில் நாஞ்சில்நாடனின் பாசத்திற்குரிய கருவாகிய, ’வறுமையின் அவமானம்’ கூர்மை கொள்கிறது.

    எஸ்.ரா.வும் இதை தமிழின் நூறு சிறந்த நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார்.

    புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 225 ரூபாய்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

    எது நல்ல கவிதை – சுந்தரேஷ்

    A poem is not an explanation. Nor it is an array of rhythmic sounding words. A poem is spontaneous but all spontaneous poems need not be good poems either. A good poem evokes in the reader a picture much larger than what is contained in the mere words of the poem. A good poem should necessarily be crisp and say less but it always kindles an inner space in the reader that is vastly larger than the poem itself. Like a good camera, a good poem demands your effort to understand it. Once you understand the camera it lets you take good pictures but it is still a process towards perfection. Same way, taking the effort to appreciate how a good poem unfurls itself is important if one ever hopes to write good poems.

    Like a good photograph, a good poem evokes imagination. A good poem does not explain, it does not shout, it does not even try overtly to impress or win applause.

    A good poem is not a destination, it is way-pointer to the reader to greater vistas.

    I will give a couple examples:

    இது பிரமிளின் பிரபலமான கவிதை:

    சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
    காற்றின் தீராத பக்கங்களில்
    தன் வாழ்வை எழுதிச்செல்கிறது

    Now take some time absorb this poem. You can visualize this in your photographic eyes. The poet has probably seen just a falling feather floating away in the air, but see how it has come out in his words. When you read this poem, dwell on each of the line and think whether it talks only about a falling feather or points to something much larger than that. When you just read these three simple lines, it immediately leaves a sadness in you- it is a subtle sadness. We have all seen such feathers in our families that have fallen down writing their life in the eternal air of our world, no? A good poem is a magic… Read this one:

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    See how the juxtaposition is used to explain the endlessness of god. See how one is existential and another one is virtual. As you try to understand it more, it leads you into inner truths contained in Shaiva Siddhantha and therefrom into our deeper Vedantic roots.

    A good poem is a transcendental experience. Like a beautiful scene you saw in a movie it demands you to again and again revisit it and re-view it in a new perspective.

    A good poem takes up a seemingly ordinary experience and makes it sublime. Shakepeare’s Sonnet on Love is one such example:

    It is the star to every wandering bark
    Whose worth’s unknown, although his height be taken.
    Love’s not Time’s fool, though rosy lips and cheeks
    Within his bending sickle’s compass come

    He says Love is like a North Star (that guides and gives hope) to a wandering (meaning lost) bark (meaning boat). Does the boat know the worth of the north star? No, but it looks up to the star to find its destination (after it reaches the shore the boat does not need the star but what is the worth of a boat itself once it has reached the shore). Think about the use of the phrase “bending sickle”. These lines should be read as “Love’s not Time’s fool, though rosy lips and cheeks come within the bending sickle’s’ compass”. Now dwell on this metaphor that Time is a Sickle. What does it harvest? It harvests the years, it harvests the age, it harvests beauty (rosy lips and cheeks) but look, Love is still beyond the reach of this sickle’s compass. (And he calls these as time’s fool, why?).

    A good poem expands your perspective, holds your hand and helps you transcend yourself into something larger.

    Even good poets write only a few good poems in their whole life. It is to write those few good poems that they keep up their poetic practice. And to write good poems, one should be continuously intimate with good poems and invest in the time needed to understand and appreciate the good poems. Just like one who wants to take good photos would invest in a good camera and would take the time to understand its workings. Then and then only a good camera or a good poem will uncover its hidden path to us and lead us towards taking good photographs or writing good poems.

    If you are interested to write good poems, keep up your practice of writing poems but do also read good poems- both new and old from any language you know. Tamil is a treasure house of good poems. Unfortunately a poorly visited treasure house.

    தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதை பக்கம், சுந்தரேஷ் பதிவுகள்

    கவிதை விவாதத்தின் அவசியம்

    எனக்கு கவிதை அலர்ஜி என்று நான் அடிக்கடி சொல்வது கொஞ்சம் அலட்டல் போல தோன்றலாம். ஆனாலும் அதுதான் உண்மை. நண்பர் முத்துகிருஷ்ணனின் இந்தக் கட்டுரை எனக்கு கவிதை என்றால் ஏன் அலர்ஜியாக இருக்கிறது என்று சிந்திக்க வைக்கிறது.

    நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

    நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால்தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

    புத்தகத்தை அட்டையை பார்த்து வாங்குவதை போல எனக்கு இதுவரை முதல் சில வரிகளே ஒரு கவிதையை அணுக என்னை உந்தும் முக்கிய விசையாகும். நமக்கு தெரிந்த மொழிப் பிரயோகங்களை அது மாற்றி காட்டுகையில் அது கவனத்தை ஈர்கின்றது. அது மொழி விளையாட்டல்ல, சற்றே மாறுபட்ட கோணத்தில் ஆழமாக ஏதையோ சொல்லிச் செல்வது, இது கவிதையில் ஆர்வத்தை உண்டு செய்வதற்கு மட்டுமே. ஒரு கவிதை மனம் விரும்புவதற்கு அதை வாசிக்கையிலேயே அதை பின் தொடர இயலவேண்டும். சில கவிதைகள் மிகச் சிறிதாக இருப்பதால், தொடர்வதற்கு இலகுவாக அமைந்து விடும். 

    கவிதை வாசித்து பரிச்சயமில்லதவர்களுக்கும், அதில் கற்பனையால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாதவர்களுக்கும் சலித்து விடும். கவிதை என்பது புனைகதைகளை போலவோ அல்லது கட்டுரைகளை போலவோ நம்மை சில அடிகள் கூட எங்கும் அழைத்துப் போவதில்லை. ஒரு குழப்பமான வழிகாட்டி பலகையை நம் முன் வைத்து அமைதியாகி விடுகிறது. குறிப்பாக நவீன கவிதைகள் அதைத்தான் எப்பொழுதும் செய்கின்றன என தோன்றுவதுண்டு. நாம் திரும்பத் திரும்ப கவிதைகளை வாசித்து அதில் சொல்லப்படாத அர்த்தங்களை கொடுத்து புரிந்து கொண்டேயிருந்தோமென்றால் நமக்கென அவற்றை அணுகும் முறை உருவாகிவிடும். அதைக் கொண்டு சில காலம் வாசிக்கலாம். ஆனால், இங்குதான் தனிமையில் கவிதையை வாசிக்கும் பொழுது எற்படும் தேக்கம் உருவாகிறது. ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கவிதையில் அதில் சொல்லப்படாத படிமத்தை மனம் கண்டு கொள்வதன் மூலம் நாம் புதிய திறப்புகளை அடைகிறோம். அதையே மற்ற கவிதைகளுக்கும் போட்டுப் பார்த்து வாசிக்க கற்றுக் கொள்கிறோம், ரசிக்கவும் செய்கிறோம். ஆனால் தற்செயலாகவோ இல்லை எல்லைக்குட்பட்ட கற்பனை அல்லது வாழ்கை அனுபவங்களாலோ நம்மால் வெவ்வேறு கவிதைகளுக்கு வேறுபட்ட படிமங்களையும், பார்வைகளையும் செலுத்த முடியாது. இது ஒரு வகை பரிச்சய தோஷம் என்றும் சொல்லலாம். கவிதை என்ற காட்டில் தற்செயலாக நம் மனம் வகுத்த ஒரு சில ஒற்றையடிப் பாதைகளையே பின்பற்றி நாம் நடக்க ஆரம்பிக்கிறோம். நமக்கு பரிச்சயமான முதல் பாதையையே எல்லா காடுகளுக்கும் போட்டு சுற்றி வருகிறோம். சிறிது நேரத்திலேயே ‘எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு’ என மனம் சலிக்க ஆரம்பிக்கிறது. புதிய பாய்ச்சல்களை மனம் ஏற்படுத்திக் கொள்ள முடியாத பொழுது, கவிதை தன்னையே மூடிக் கொள்கிறது.

    இங்குதான் ஒரு குழுவாக கவிதை வாசித்தல் தனி மனித மனதை பல வாசல்களுக்கு இட்டுச் செல்கிறது. பல வாசிப்பாளர்கள் ஒரே கவிதையை பற்றி கூடிப் பேசுகையில் முதல் வரியிலிருந்து வேறுபட்ட கோணங்களை நாம் காண நேரிடும். மனம் ஒரு புதிய கோணத்தை கண்டு கொண்டால் இன்னொரு கவிதையை வாசிக்கையில் இயல்பாகவே அதையும் அக்கவிதையில் செலுத்திப் பார்க்கும். அல்லது இரண்டையும் சேர்த்து ஒரு புதிய படிமத்தை உருவகித்துக் கொள்ளும். மிகச் சாதாரணமாக இருந்த ஒரு கவிதை மிக வித்தியாசமானதாக தெரிய வரும் அதிசயம் அங்கு நடைபெறும். இதைத்தான் நாம் கதை விவாதங்களில் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கதை விவாதம் தொடங்குவதற்கு முன்பே எல்லோரும் கதையில் என்ன நடக்கிறது என்பதில் ஒரு உடன்பாடு கொண்டிருப்போம். ஆனால் கவிதை விவாதத்தில் – முக்கியமாக நவீன கவிதைகளில் – அந்த சொற்களுக்கு கொடுக்கப்படும் எளிமையான பொருள் கூட வாசித்தவரின் மனதிற்கேற்ப மாறியிருக்கும். இப்படி பல பேசுபொருட்களாய் கொண்ட கவிதைகளை வாசித்து விவாதிக்கையில் நமக்கென ஒரு கவிதையை தரம் பிரிப்பதற்கான அந்தரங்கமான கோட்பாடும் அழகியலும் உருவாகிவிடும். எனக்கு நவீன தமிழ் கவிதைகளை வாசிக்கையில் ஏற்பட்ட தடங்கல்களையும், சலிப்பையும் வைத்தே மேலே சொன்ன கருத்துகள் உருவாயின.

    ஆனால் கவிதை வாசிப்பின் சாத்தியங்கள் அதன் அழகியலுடன் முடிந்து விடுவன அல்ல. எனக்கு தோன்றுவது, ஒரு கவிதையின் உச்சகட்ட நோக்கம் அது நம் கவிதையாக மாறுகையிலே நடந்தேறுகிறது. ஆயிரம் கவிதைகளை நாம் ரசித்தாலும் வெகு சில கவிதைகளே நம்மை அப்படி வந்தடையும். ஒரு மந்திரச் சொல் போல அக்கவிதை எங்கோ அமிழ்ந்து கிடந்த ஒரு நினைவை தட்டி எழுப்பி புது உருவு கொண்டு நம்முன் நிறுத்தி விடும். அதன் பிறகு அந்த கவிதை கவிஞனுடையது அல்ல. அது நமக்கு, நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கவிதையாக மாறிவிடும்.

    தேவதேவனின் கவிதை ஒன்று மட்டுமே இதுவரை எனக்கு அத்தரப்பட்ட ஒரு அனுபவத்தை அளித்துள்ளது,

    பனைகள்
    பனைகளின் தலைகளெங்கும்
    பறவைகளின் சிறகுகள்
    பச்சைப்பனைகளின் நடுவே
    ஒரு மொட்டைப் பனை
    மொட்டைப் பனை உச்சியிலே
    ஓர் பச்சைக்கிளி
    அடங்கிவிட்டது
    ‘மரணத்தை வெல்வோம்’ என்ற கூச்சல்
    மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
    இனி இங்கே நான்
    செய்யவேண்டியதுதான் என்ன ?
    ‘நானே தடைகல்’ ஆகும் வழியறிந்து
    வழிவிடுவதை தவிர ?
    பனைகளின் தலைகளெங்கும்
    படபடக்கும் சிறகுகள்
    பாவம் அவை பூமியில்
    மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

    அவ்வனுபவத்தைக் குறிவைத்து கவிதை விவாதத்தை நடத்த இயலாது. காரணம், அந்த அனுபவம் மனம் திட்டமிட்டு நடத்துவதல்ல. அது தன்னிச்சையாக நிகழும் ஒன்று. விவாதமென்பது கவிதை வாசிக்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கே.

    தொகுக்கப்பட்ட பக்கங்கள்: கவிதை பக்கம், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

    ஜெயமோகன் பாராட்டிய விமர்சனம் – “லங்காதகனம்”

    (மீள்பதிவு)

    இது நண்பர் முத்துகிருஷ்ணன் எழுதி இருக்கும் விமர்சனம். முத்துகிருஷ்ணன் இளைஞர், சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினர். காலவெளி என்ற தளத்தில் எழுதுகிறார்.

    ஜெயமோகனே சிலாகித்த விமர்சனம் இது. அவரது வார்த்தைகளில்:

    அந்தக் கதை எழுதி கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஆகின்றது. இத்தனை வருடங்களுக்கு பின் வந்துள்ள இந்த விமர்சனம் முழுமையாக அதை உள்வாங்கியிருப்பதைக் காண அலாதியான ஒரு நிறைவு. கலைக்கும் கலைஞனுக்குமான உறவைப் பற்றி, கலைஞன் கலையாக ஆகும் மர்மக்கணம் பற்றி, எல்லா எழுத்தாளர்களும் ஒரு கதை எழுதியிருப்பார்கள். அது கிட்டத்தட்ட ஒரு சுயப்பிரகடனம் போல.

    எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை தொடங்கி தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் “கடமைக்காக” நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு துறையிலும் மறுக்கமுடியாத ஆளுமையை அடைந்தவர் – பரவலாக அறியப்பட்டவர் என்றிருக்க வேண்டியதில்லை – எல்லோரும் தான் செய்யும் செயலில் ஒவ்வொரு முறையும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முனைபவர்களாக இருப்பதை காணலாம். திரும்பத் திரும்ப செய்ய வேண்டிவரும் செயலாக இருப்பினும் அதில் மேற்கொண்டு மேன்மையை அடைய முயற்ச்சிதுக் கொண்டே இருப்பதையும், அதன் வழியே தன்னையே சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதையும் சிறிது நேரம் நாம் அவதானித்தாலேயே உணரமுடியும்.

    நாம் ஒவ்வொருவரும் அப்படி ஒரு நிலையை ஒரு சில கணங்களாவது அனுபவித்திருப்போம். ஏதோ ஒரு காரியத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புத்தி, மனம் எல்லாவற்றையும் கொண்டு செய்து கொண்டு நிமிர்ந்து உணரும் பொழுது மிகுந்த நேரம் கடந்துவிட்டதைப் போலவோ அல்லது நேரம் ஸ்தம்பித்து நின்றதைப் போலவோ உணர்ந்திருப்போம். அத்தருணத்தில் மனம் சதா அதன் முன் விழுந்து கிடக்கும் ‘காலம்’ என்ற திரையை விலக்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதன் பின்னால் வந்து அடங்கிய பின் மிச்சமிருக்கும் அக்கண நேர விடுதலையின் ஞாபகமே அது. காலத்தை உதறி சஞ்சரிக்கும் அத்தருணங்களில் மனதின் எல்லைகளை அப்பாற்பட்ட சில விஷயங்கள் மனதால் அறியப்படுவதுண்டு. இக்கூற்று வெறும் தத்துவ தளத்தில் சொல்லப்படுபவை என்றில்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுகிறது.

    இந்நிலையை குறிக்கும் மிக பொருத்தமான ஆங்கில சொற்றொடர், “In the Zone” என்பதாகும். விக்கிபீடியாவில் flow (psychology) என்று தேடினால் முழு பொருளும் வாசிக்க கிடைக்கும். பொதுத் தளத்தில் இந்நிலையை பிரபலப்படுத்தியதில் பெரும் பங்கு டென்னிஸ் வீரர்களையே சேரும். இதையே உலகப் பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளர் யானி பேட்டியொன்றில் புதிய இசையை தேடி மனதின் ஆழங்களில் வேறெந்த சிந்தனையுமின்றி செல்லுகையில் “in the zone” என்ற நிலையில் எண்ணிலடங்கா இசை சாத்தியங்களையும், கருக்களையும் தான் கண்டடைவதாக குறிப்பிடுகிறார்.

    இங்ஙனம் செயலாற்றும் விதம் தவத்திற்கு சமமாகும். ஆனாலும் அது முழு தவமாகாது. ஏனென்றால் இச்செயல்கள் முழுமனதுடன் தன்னை இழந்து நிகழ்த்தப்பட்டாலும், எல்லா தருணங்களிலும் – சில கணங்களை தவிர – “நான் செய்யும் செயல்”, இச்செயலின் முடிவு, அதனால் நடக்கவிருக்கும் அடுத்த செயல் என்ற பகுப்பாய்ப்பு மனதில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும். தானறியாத மனதின் ஏதோ ஒரு சிறு பகுதி அச்செயலின் வெளியே நின்று இதை கவனித்துக் கொண்டேயிருக்கும் காரணத்தால் அச்செயல் மிக நேர்மையாக கூறுகையில் பூரணத்தை (perfection) அடைவதில்லை.

    மேலே சொல்லப்பட்டவைகளை விடுத்து செயலாற்றும் விதம் ஒன்றுள்ளது. அது, காலத்தின் பிரக்ஞையை மொத்தமாக இழந்து, தன்னிலிருந்து தன்னை விடுவித்து தானே அச்செயலாக மாறிவிடுவது. அந்நிலையில் செயலாற்றுபவன், செயல் என்ற வேறுபாடு இழந்து, தான் என்ற நிலையை என்றென்றைக்குமாக இழந்து செயலாகவே நிரந்தரமாக மாறிவிடுகிறான். அத்தகைய ஒரு நிகழ்ச்சியை நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் சாத்தியப்படக்கூடும் என கருத்துரீதியாக சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி ஒருவன் தன் கலையில் தன்னை இழக்கும் தருணத்தை காட்டும் கதையே ஜெயமோகனின் குறுநாவலான ‘லங்காதகனம்’.

    அனந்தன் ஆசான் இராமாயணத்தில் அனுமன் தூதில் அனுமனாக வேஷமிட்டு ஆடும் கதகளி ஆட்டக்காரன். அச்சன் மடம் என்ற அரண்மனையின் காரியதரசனாகிய அச்சுவிற்கு பொருளியல் படிக்கும் கல்லூரி மாணவனான ராமன் குட்டி பகுதி நேரமாக எடுபிடி வேலைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறான். ஒருநாள் அரண்மனையின் அருகில் உள்ள, கதகளி கலைஞர்கள் வேஷமிடும் அறையில் தனிமையில் இருக்கும் அனந்தனை ராமன் குட்டி சந்திக்கிறான். தான் யாரென்பதையும் கதகளியின் மேல் உள்ள பக்தியையும், அனுமன் தூது படலத்தின் ஒரு பகுதியான லங்காதகனத்தில் தான் ஆடும் பாத்திரமான உக்கிரரூபியாகிய அனுமனின் மேலுள்ள அன்பையும் ஒரு பித்து நிலைக்கு அருகில் நின்று அனந்தன் விளக்குவதை கேட்டு விட்டு சொல்லயியலா அதிர்ச்சியுடனும், பீதியுடனும் ராமன் திரும்புகிறான். அனந்தனின் அசைவுகளும், நளினமும் ஒரு குரங்கின் நடத்தையை ஒத்திருப்பதை ராமன் கண்டு கொள்கிறான். மற்றவர்கள் அனந்தனை குரங்காக மாறிப் போன கோமாளியாகவே காண்கிறார்கள்.

    அரண்மனையின் முதலாளியான ‘தம்புரான்’ ஒரு நாள் தன் நண்பர்களுடன் அங்கிருக்கும் கோவிலுக்கு கும்பிட வருகிறார். அப்பொழுது அனந்தனை கூப்பிட்டு தன் முன்னே நடக்க வைத்து நண்பர்களுக்கு வேடிக்கை காட்டுகிறார். மேலும் அனந்தனை அனுமனின் கோமாளி வேஷமாகிய கரி வேஷமிட்டு மாலை அவரிருப்பிடத்திற்கு வந்து ஆடி காட்டுமாறு சொல்லி விட்டு செல்கிறார். அனந்தன் அதற்கு சம்மதித்துவிட்டு ராமனிடம் மட்டும் தான் அன்று ஆடுவதை ஒளிந்திருந்து கூட பார்க்கக் கூடாது என சத்தியம் வாங்கிச் செல்கிறான். ஒவ்வொரு முறை அனந்தனை பார்த்து துணுக்குற்றாலும் ராமனுக்கு அவன் மேல் இரக்கம் கலந்த பரிவு உண்டாகிறது. ராமனிடம், தன் மேல் அனுமன் முழுவதும் குடி கொள்ளவில்லை என்றும், ஆட்டத்தின் சில கணங்களில் பூரண நிலையை தொட்டுவிட்டு திரும்பி விடுவதாகவும் அதன் பின் மனம் வெறுமையை அடைந்து விடுகிறது என அனந்தன் அரற்றுகிறான். சில தினங்களில் திருவிழா வருகிறது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மேடை அமைக்கப்பட்டு அடுத்த ஊர்களிலிருந்து கதகளி நாட்டிய கோஷ்டிகள் அங்கு வந்து தினமும் ஆடுவது வழக்கம். ஆரம்பத்தில் ராமனிடம் தனக்கு இம்முறை ஆடுவதில் விருப்பமற்று போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும் அனந்தன், ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து தான் கடவுளிடம் திருவுளச்சீட்டு போட்டு பார்த்ததாகவும் அதில் திருமூர்த்தி தன்னை ஆடச் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறான். மேலும் இம்முறை தான் பூரணமாக லங்காதகனத்தை ஆடப் போவதாக சொல்லிச் செல்கிறான். அதைக் கேட்டு ராமன் மனதில் அமைதியழிக்கும் தவிப்பும் பயமும் உருவாகிறது.

    மற்ற ஆட்டக்காரர்களுடன் அமர்ந்து ராமன் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அனந்தனின் சமீபத்தில் அதிகரித்த பித்து நிலையை நோக்கி மாறுகிறது. அப்பொழுது ஆட்டக்காரர்களுக்கு வேஷமிடும் பெரியவர் வாழ்கையை முழுவதுமாக கலையில் அர்ப்பணித்துக் கொண்டு மனதில் தான் ஆடப் போகும் பாத்திரத்தை முழுவதுமாக ஆவாகனம் செய்து வேறெந்த சிந்தனையும் இன்றி வாழும் ஆட்டக்காரன் வெகு அபூர்வமாக பூரணத்தை அடைந்து விட சாத்தியமுண்டு என கூறுகிறார். மற்ற ஆட்டக்காரர்கள் அதை கேட்டு கேலி செய்கின்றனர். பெரியவர் தாம் சொன்னது இளைய தலைமுறைக்கு புரியாதென்றும், லட்சத்தில் ஒரு கலைஞனுக்கு அது சாத்தியப்பட்டு விடும் என்றும், அதன் பொருட்டே கதகளி ஆட வரும் ஒரு மாணவனுக்கு கூட வேஷமிடுகையில் சம்பிரதாயத்திற்கு குறையாக ஒரு பொட்டு வைப்பது வழக்கம் என்று சொல்கிறார். அனந்தனின் இந்த நிலைமையால் இம்முறை அவனுக்கு சம்பிரதாயத்தை தாண்டி அவனறியாமல் இரண்டாவதாக ஒரு வேஷக்குறையும் வைக்கப் போவதாக கூறுகிறார்.

    லங்காதனம் அரங்கேறும் நாள் நெருங்குகையில் ராமனுக்கும் தவிப்பு கூடிக் கொண்டே வருகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு ராமன் வேஷமிடும் அறைக்கு செல்கிறான். பெரியவர் இன்னொருவருக்கு வேஷமிட்டுக் கொண்டிருக்கையில் அனந்தன் முழு வேஷத்துடன் இருட்டில் ஓர் மூலையில் சிலை போல் உட்கார்ந்திருப்பதை காண்கிறான். பெரியவர் மற்றவருடன் கிளம்புகையில் ராமனிடம் தான் கூடுதலாக ஒரு வேஷக்குறை வைத்திருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் அனந்தனுக்கு கண்ணாடியை கொடுக்கக் கூடாது என்றும் சொல்லிச் செல்கிறார். தனிமையில் அனந்தன் ராமனிடம் கண்ணாடியை கேட்கிறான், ராமன் இல்லையென்றதும், அவன் எதுவும் சொல்வதற்குள் அங்கிருந்த பானையிலிருந்த தண்ணீரை சாயத் தொட்டியில் கொட்டி தன் பிம்பத்தை அனந்தன் காண்கிறான். அதை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சத்தம் போட்டுக் கொண்டே ராமன் ஓடி பெரியவரை அரங்கத்தில் கண்டடையும் நேரம், புதர்களை அனாயாசமாக தாண்டி அனந்தன் பூரணமாக கதகளி களத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதை சொல்லி கதை முடிகிறது.

    படித்து முடிக்கையில் எழுதப்படாத இன்னொரு கதை அதன் முடிவிலிருந்து உருவாவது போல் தோன்றுகிறது. அனந்தன் அப்படி ஓடி வந்து என்ன செய்தான்? அந்த பெரியவர் சொன்னது போல லட்சாதி லட்சம் மக்களுள் ஒருவனுக்கு கிடைக்கும் உன்னத நிலையில் தான் எதை மனதில் ஆவாகனம் செய்தானோ அதாகவே மாறிவிட்டானா? அப்படி நடந்திருக்காவிட்டால் தன் போதத்தை என்றென்றைக்குமாக இழந்து முழுப் பைத்தியமானானா? அப்படி நிகழ்ந்திருக்க கூடுமென்றால் அதன் விளைவு ராமனிடம் என்ன உருவாக்கியிருக்கும்? அவன் ஒருவன் தானே அனந்தனின் அப்பயணத்தை அருகிலிருந்து உணர்ந்தவன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் முடிக்கவியலா ஒரு புதுக் கதை மனதில் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

    எப்படி இராமாயணத்தில் பல பகுதிகளில் அனுமன் பக்தனாகவும், அடக்கமானவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறானோ அதே போல அனந்தனும் அங்குள்ளவர்களால் கோமாளியாகவும் உதாசீனப்படுத்த வேண்டியவனாகவும் பார்க்கப்படுகிறான். சாப்பாட்டிற்காக வாசலில் தட்டுடன் தவிப்போடு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் வானர அனந்தனை மட்டுமே எல்லோரும் காண்கின்றனர். தான் ஆடும் கலையை உயிர் மூச்சாக கொண்டு, இலங்கையை எரித்த உக்கிரமான அனுமனை ஒத்த தீவிரத்தை உள்ளடக்கிய அனந்தனை ராமன் குட்டி மட்டுமே கண்டிருக்கிறான். அதற்கான முக்கிய காரணம் ராமன் அனந்தனை அவன் மனதின் யதார்த்த தீவிரத்துடன் இருக்கும் போதே அணியறையில் முதலில் சந்திக்கிறான் என்பதே. அனந்தன் நாட்கணக்கில் வெளியில் வராமல் தங்கியிருக்கும் சிவப்பொளி படர்ந்த அந்த அறை அவன் மனதின் உக்கிரத்தையும் தீவிரத்தையும் காட்டும் ஒரு படிமமாகவே வருகிறது. அதனுள்ளில் அமர்ந்திருக்கும் ராமன் காணும் அனந்தன் வெளியில் தெரியும் வயதான, ஒடுங்கிய, அழுக்கு உடையணிந்த மனிதனல்ல. மாறாக அவ்வறையின் சிவப்பொளியின் இன்னொரு அங்கமாக உள்ள ஒரு இருப்பாக தெரிகிறான். அவ்வறையில் அனந்தன் அனுமன் வாலிலிருந்த சம்கார அக்னியை கையில் முத்திரை வைத்து அசைந்து ராமனிடம் ஆடிக் காட்டும் போது அது அவன் இதயத்தின் உள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பூரணத்தை அடையும் வேட்கை என்று தோன்றுகிறது. அதற்கு வெளியே உள்ள மற்றவையெல்லாம் வெறுமையானது என்பதை ராமனின் மனவோட்டமாக வரும் “பகல் ஒளியின் அபத்தமான வெறுமையை அப்போதுதான் முதல் முறையாக உணர்ந்தேன். மனமும் கண்களும் கூசின” என்ற வரிகளில் சொல்லப்படுகிறது.

    அச்சன் மடமும் அதன் சுற்றமும் கண்முன்னே விரிவதற்கு ஏற்றார் போல் மிக நேர்த்தியாகவும், விடுபடல்கள் இல்லாமலும் அமைந்துள்ளது. மேலும் கதகளி ஆட்டத்தின் வழங்கு சொற்களும் ஆட்டக்காரர்கள் தயாராகும் போதுள்ள விவரணைகளும் அவர்களின் அணிகலங்களை பற்றிய விளக்கங்களும் கதையின் போக்கிலிருந்து வெளியில் தெரியாமல் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு துணை கதை மாந்தரின் குணாதிசயங்கள் அவர்கள் பேசும் ஒரிரு வசனங்களிலேயே மனதில் உருவாகி விடுகின்றன. குறிப்பாக கோவிலின் பூசாரி வந்தவர்களிடம் பேசும் வசனங்களில் அவரை பற்றிய முழு பிம்பம் மனதில் உருவாகி விடுகிறது. மாறி வரும் சமூக மாற்றங்களிலாலும், மக்கள் ரசனைகளாலும் கதகளி கலையை மட்டுமே நம்பியிருக்கும் கலைஞர்கள் உதாசீனப்படுத்தப்படுவதும் அதனால் அவர்கள் மனதில் உருவாகும் கசப்பும் இயலாமையும் கதையின் மொத்தப் போக்கில் சொல்லப்படுகிறது.

    இக்கதையில் ஒரு இடம் அது எழுதப்பட்டதையும் தாண்டி முடிவுறா விளக்கங்களுடன் தனித்து நிற்கிறது. திருவிழா ஆரம்பித்து கதகளி அரங்கு அமைக்கப்பட்டு தூங்காவிளக்கு ஏற்றப்பட்டவுடன் ராமன் அனந்தனை பார்க்கும் தருணம் இப்படி சொல்லப்படுகிறது, “அவர் எவரையும் பார்க்கவில்லை. பார்வை உட்புறமாக திரும்பியிருப்பது போலிருந்தது”. அவ்வரிகளை பல முறை வாசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வரும் விளக்கம் முடிவற்றதாக பல திசைகளில் விரிந்து செல்வது போலுள்ளது. இதையொத்த தொல் படிமம் சிவனின் நெற்றிக்கண்ணை அது மூடியிருக்கும் நிலையை குறிப்பிடும்பொழுது சொல்லப்படுவதுண்டு.

    இக்கதை இதே தொகுப்பிலுள்ள மற்ற கதைகளை விட என்னை கவர்ந்ததற்கான காரணம் வாசிப்பனுபவம் முடியும் போது பதில் கிடைக்காத கேள்வியொன்று எஞ்சி நிற்பது போல் மனதில் ஒரு தோன்றல் ஏற்படுத்துவதால் தான். முளைத்து நிற்கும் கேள்வி என்னவென்று தெளிவுபடுத்தி கூற இயலவில்லை. அந்த புரியாத்தன்மையே அக்கேள்வியை தேடி அக்கதையை நோக்கி என்னை ஈர்க்கின்றது.

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

    தொடர்புடைய பதிவுகள்: லங்காதகனம் பற்றி ஆர்வி

    வா.மு. கோமு எழுதிய “கள்ளி”

    இந்த நாவலின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பின் நவீனத்துவ நாவலில் காலம் முன்பின்னாக இருந்தாலும், கதை என்று ஒன்று தொடர்ச்சியாக இருக்கும். இதையோ பத்து தொடர்புள்ள சிறுகதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கோமு கள்ளி # 1, 2, 3… என்று இந்த சிறுகதைகளை வரிசைப்படுத்துகிறார். அவை காலவரிசைப்படித்தான் நடக்கின்றன. ஒரு கள்ளியில் வரும் பாத்திரங்கள் பிறவற்றிலும் வருகின்றன. ஒரே கிராமத்தில்தான் நடக்கின்றன். ஆனால் இவற்றை எல்லாம் இணைக்கும் கண்ணி என்று ஒன்று இல்லை.

    ஆனாலும் புத்தகம் படு சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு கள்ளியும் பாத்திரங்களின் சித்தரிப்புதான். அறுப்பு வேலை செய்பவர்களை கூலியில் ஏமாற்றப் பார்க்கும் முத்தாக் கவுண்டர், அவரிடம் பண்ணையம் பார்க்கும் மல்லி, ஊர் மேயும் மைனர்கள் சுரேந்திரன் மற்றும் பழனிச்சாமி, சுரேந்திரனின் ஓய்வு பெற்ற வாத்தியார் அப்பா சரக்கு அடித்துவிட்டு பண்ணும் அழும்பு, ஊரில் முடிச்சு போட்டுவிடும் வண்ணான் ராமசாமி, முத்தாக் கவுண்டரின் பெண்ணோடு ஓடிவிடும் மல்லியின் மகன் சண்முகம், படுக்கத் தயாராக இருக்கும் சிகாமணி, சுந்தரி, விஜயா என்று பல பெண்கள் என்று பாத்திரங்களின் சித்தரிப்புதான். அது பிரமாதமாக இருக்கிறது. தண்ணி அடிப்பதும், பெண்ணுக்கும் ஆணுக்கும் அலைவதும் நிறைய. பச்சை பச்சையாக பேசுகிறார்கள், திட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அது வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

    கதையின் களம் ஒரு வாய்ப்பாடி என்ற ஒரு சின்ன கிராமம். திருப்பூர், சென்னிமலை அருகில். “கீழ்” சாதியினரான மாதாரிகள் திருப்பூரில் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். நாவிதர்கள் வீட்டுக்கு வராமல் சலூன் வைக்கிறார்கள். கவுண்டனை விட்டால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலை இல்லை. மாறாக கவுண்டர்களுக்கு வேலைக்கு ஆள் தேடுவதில் கொஞ்சம் சிரமம். கவுண்டர்களின் பாலியல் மீறல்கள் நிறைய என்றாலும் மாதாரிகளுக்கும் கவுண்டர் பெண்களோடு உறவு இல்லாமல் இல்லை. பழைய ஜாதி சார்ந்த பொருளாதாரம் உடைய ஆரம்பித்திருப்பது நாவலின் பின்புலமாக இருக்கிறது.

    கதையின் பலம் பலவீனம் இரண்டுமே அது சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதுதான். அருமையான சித்தரிப்பு என்றாலும் நாலைந்து கள்ளிக்குப் பிறகு கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. கூறியது கூறல்!

    கோமு ஆர். சண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், பெருமாள் முருகன் பரம்பரைக்காரர். எனக்கு இவர்களில் பெ. முருகன்தான் டாப் என்றாலும் கோமுவுக்கும் நிச்சயமாக இடம் உண்டு.

    கள்ளி உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 120 ரூபாய். வாங்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

    எட்றா வண்டியை என்ற இன்னொரு நாவலும் கிடைத்தது. சாமிநாதன் விரும்பும் பெண்கள் எல்லாரும் அவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தட்டிப் போகிறார்கள். படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை.

    பிற்சேர்க்கை: கோமுவின் சில கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. எனக்கு எந்தக் கதையும் பிரமாதமாகத் தெரியவில்லை. பிலோமி டீச்சர் கள்ளியின் தொடர்ச்சி மாதிரியே இருக்கிறது.

    தொடர்புடைய சுட்டிகள்: வா.மு. கோமுவின் தளம்

    நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள்

    நண்பர் விசு நாஞ்சில்நாடனோடு பழகிய நாட்களைப் பற்றி எழுதி இருக்கிறார். ஓவர் டு விசு!

    எழுத்தாளர் நாஞ்சில்நாடன் Bay Area வந்து சென்று ஒரு மாதகாலமாகிறது. அவருடன் உரையாடியவற்றிலிருந்து :

    ***

    கம்ப ராமாயண சொற்பொழிவாற்ற வந்தவரிடம், ஒரு பெரிய குஷன் சேரில் உட்காரச் சொன்னோம். மெதுவாக, “வாழ்க்க முழுக்க அதிகார பீடத்தையும், சிம்மாசனத்தையும் உடைக்கனும்னு பேசிகிட்டிருக்கேன். என்ன சிம்மாசனத்தில உட்கார சொல்றீங்களே. சாதா சேர் போதும், இது வேண்டாம்” என்றார். “பாற்கடல் முன்னால வந்து நின்ன ஒரு பூனை, மொத்த பாற்கடலையும் நக்கிக் குடிச்சுடுவேன்னு நினைக்கறது மாதிரி, ராம காவியத்தை பாட வந்திருக்கேன்னு கம்பன் சொல்றான்” என்று ஆரம்பித்தவர், அடுத்த இரண்டு நாட்கள் ‘ராவணன்’ என்ற தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார். தலைப்பு ராவணனாக இருந்தாலும், அவர் உரையில் வந்த கும்பகர்ணனின் பாடல்கள் என் நினைவை விட்டு நீங்கவேயில்லை.

    ‘நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்கு போகேன்;’
    ‘தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண் மேல்?’
    ‘வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்; விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது;’
    ‘என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல! உன்னை வென்று உயருதல் உண்மை;’

    “வான்மீகியும், கம்பனும் கையாண்டது செவ்வியல் வடிவம். ராமாயணத்திற்கு நாட்டாரியல் கதைகளில் நிறைய version உள்ளது. ஏதாவது பல்கலை, அனைத்து வடிவங்களையும் திரட்டி ஆராயவேண்டும்” என்றார். மூன்றாம் நாள், மரபிலக்கியம் பற்றி ஒரு அறிமுக வகுப்பெடுத்தார். முதல் நாள் வந்தவர்கள் பெரும்பாலும் மூன்று நாட்களும் வந்திருந்தார்கள். அவர் சொல்வதையே வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த எங்களிடம் “இப்ப வெறும் சக்கையதாங்க மெல்றோம். சாற தொலச்சிட்டோம். நிறைய பண்டிதர்கள் இருந்தாங்க. சில சமயம் என் மனசுல ஒரு வரி ஓடிட்டே இருக்கும். எந்த பாட்டுல அந்த வரி வருதுன்னு சட்டுனு பிடிபடாது. அவங்ககிட்ட கேட்டா உடனே சொல்லிடுவாங்க. அதே பொருள் வர்ற மத்த பாட்டும் சொல்லுவாங்க. எல்லோருக்கும் எண்பதுக்கு மேல வயசாயிடுச்சு. இனி அந்த மாதிரி யார் இருப்பாங்கன்னு தெரியலை” என்றார். கணினி இருக்கும்போது, வரி கண்டுபிடிப்பது மிகச் சுலபம். அது போலவே நல்ல தமிழ் அகராதியும், பதம் பிரிக்கப்பட்ட பாடல்களையும் வைத்து, reference பாடல்களையும், கணினி துணை கொண்டு அடையாளம் காண முடியும். நாஞ்சில் இருக்கும்போது, அவருடைய படைப்புகளைப் பற்றி பேசாமல், பழந்தமிழ் வகுப்பெடுக்கச் சொல்கிறோமே என்று ஒரு சிறிய வருத்தம் இருந்தது. ஆனால், நாஞ்சில் படைப்புகள் உள்ளிட்ட நவீன இலக்கியம், மண் மேல் இருக்கும் நீர்த்தடாகம் போல. எங்கள் சிலிக்கன் ஷெல்ஃப் வட்டத்து ஆட்களுக்கு அதை கண்டடைவது கடினமல்ல. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் நிலத்தடி நீர் போல, நீர் நோட்டம் பார்த்துச்சொல்லும் ஆசான் இல்லாமல் வாய்ப்பே இல்லை.

    முதல் நாள் முடிவில், மரபிலக்கியத்தை புதிதாக துவங்க வேண்டுமென்றால் எங்கிருந்து துவங்க என்று கேட்டேன். ஆத்திச்சூடியிலிருந்து இருந்து துவங்கலாம் என்றார். ஒரு கணம், சார்.. ஆத்திச்சூடியா.. அறம் செய்ய விரும்பெல்லாம் தெரியுமே என்று நினைத்தபோதே, நாஞ்சில், ஆத்திச்சூடியில் ‘ஔவியம் பேசேல்’ என்று வருகிறது, ‘ஔவியம்’ என்றால் என்ன ? எத்தனை பேருக்கு தெரியும், நீங்கள் மரபிலக்கியத்தை எதற்காக படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் அழகியலுக்கா, கவிதைக்கா, சொற்களுக்கா, உவமைகளுக்கா, வாழ்வனுபத்திற்கா என்பதைப் பொறுத்து, நீங்கள் நூல்களை தேர்வு செய்யவேண்டும். ஔவையிலும், வள்ளுவனிலும் துவங்கலாம். பக்தி இலக்கியம், நவீனத் தமிழிற்கு அருகிலேயே உள்ளது; பதம் பிரிக்க கற்றுக் கொண்டீர்களென்றால், கம்ப ராமாயணத்தில், நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் முக்கால்வாசி உங்களுக்கு புரியும்; அகராதி துணையுடன் மற்ற சொற்களுக்கும் பொருள் கொள்ளலாம்; சங்க இலக்கியத்திற்கு உரை ஆசிரியர்கள் துணை வேண்டும் என்றார்.

    பிறகு, எழுத்தாளனாக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஏன் கம்ப ராமாயணம் போன்ற காவியங்கள் படிக்கவேண்டும் என்று சொன்னார். “விற்போர்ல ஈடுபடறவனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக அவன் கூடவே ஒருத்தன் இருப்பான். எதிரியோட தரம், தூரம், ரதத்தோட வேகம்ன்னு பல கணக்குபோட்டு, அவன் அம்பறாத்தூளியில அம்ப நிரப்புவான். வில்லாளி, தூளியில கை வச்சான்னா, அந்தக் கனத்துக்கேத்த மாதிரி அம்பு இருக்கனும். அப்பதான் ஜெயிக்கமுடியும். அந்த மாதிரி, ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ ஒரு இடத்தில ஒரு வார்த்தை போடணும்னா, அவனுக்கு அந்த இடத்தில போடறதுக்கான சரியான சொல் வரணும். கம்பன் அந்த மாதிரியான ஒரு கவிஞன். அவனோட காவியத்தில எந்த இடத்திலயும், அங்க இருக்கிற சொல்ல விட வேற ஒரு சொல்ல யோசிக்க முடியாது. சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்துன்னு சொல்லியிருக்கானே வள்ளுவன். காவியங்களையும், மரபிலக்கியத்தையும் படிங்க, உங்க அம்பறாத்தூளி நிறையும்” என்றார். அதை ஒட்டி, முத்துகிருஷ்ணன் நவீன கவிதைகளை பற்றி நாஞ்சிலின் கருத்தை கேட்டார். “மரபுக் கவிதைகளில் இருக்கிற இலக்கணம் வேண்டாம்னா, இவங்க சங்க இலக்கியத்த நோக்கி போயிருக்கனும். அதில எதுக மோன இல்ல, கடுமையான இலக்கிய விதிகள் இல்ல. ஆனா, கவித்துவம் இருக்கு. இவன், ஒரு வரிய உடச்சி உடச்சி கவிதைன்னு எழுதறான். மொத்தமா எழுதினா, முப்பது பத்தி தாண்டாது. அத கவிதைன்னு போட்டுக்கறான். ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உபயோகபடுத்த மாட்டேங்குறான். என்ன மயித்துக்கு இவன் பத்து லட்சம் சொல் இருக்கிற மொழில எழுதறான்” என்று ஒரு பிடிபிடித்தார். கெட்ட வார்த்தைகளோ, வில்லங்கமான பழமொழிகளோ சொல்லும்போது, “பெண்கள் யாரும் இல்லைதான” என்று ஒரு தடவை சுற்றும்முற்றும் பார்த்துக்கொள்வார். “எக்ஸ்க்யூஸ் மி ஃபார் மை லாங்வேஜ்” என்று ஒரு முன்னறிவிப்பும் வந்துவிடும். (கவிதையா, காவியமா அப்படீன்னா என்று கேட்டு பல மைல் தூரம் ஓடும் நான், இவர் மந்திரித்து விட்டதில், வை.மூ.கோ.வின் கம்ப ராமாயண உரையை உடுமலை தளத்தில் வாங்கிவிட்டேன். தனியாக படித்து முடிப்பதற்கு கம்பனின் அருளும், நாஞ்சிலின் ஆசியும்தான் துணை புரிய வேண்டும்.)

    மூன்றாம் நாள் பேசும்போது, ‘பெரியாழ்வாருடைய டபுள் ஆக்ட் ஆண்டாள்’ என்று சொல்வது தவறு என்றவர், ஆண்டாளின் பாடல்களை சுட்டி, இவற்றை ஒரு பெண் மட்டுமே எழுதியிருக்கமுடியும் என்றார். சமீபத்திய – நெல்லை பல்கலை கழகத்தில் பாடதிட்டத்தின் ஆண்டாள் கதை controversy பற்றி கேட்டபோது, ஆண்டாள் நந்தவனத்தில் கிடைத்த குழந்தை; எந்த குலம் என்று தெரியாது, தாய் தந்தை தெரியாது; அன்றைய சமூகம் அவளை முறை தவறிய குழந்தையாக கருதியிருக்கும்; தன்னை யார் திருமணம் செய்ய வருவார்கள் என்று நினைத்து, அவள் எவ்வளவு வேதனைபட்டிருப்பாள்; அந்த சோகத்தை முன்னிலைப்படுத்தாமல், அவள் பிறப்பை மட்டுமே இழிவுபடுத்துவது தனக்கு உவப்பல்ல என்றார்; ஆண்டாள் எழுதிய மொழியில், இன்று பெண்கள், சுதந்திரமாக எழுவதற்கு உகந்த சூழல் இல்லை; சில எழுத்தாளர்களிடமும், அவர்களுடைய வாசகர்களிடமும் இருந்து, ஆபாச குறுஞ்செய்திகளில் தொடங்கி பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று சில உதாரணங்களைச் சொன்னார். செம்மொழியான தமிழ்மொழியில் எழுத ஒன்று கிழவியாக (அவ்வை) இருக்கவேண்டும், இல்லையென்றால் பேயாக (காரைக்கால் அம்மையார்) இருக்க வேண்டும் என்றார்.

    பின்பு ஒரு நாள் ‘சொல்’ பற்றி பேசும்போது, ‘தெரிவை’ (மாமனார், கைத்தலம் பற்ற கனாக் காணும் கதை) என்ற கதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். தெரிவைன்னா என்னான்னு தெரியாது, அதனால, கதை தலைப்ப ‘நீலவேணி டீச்சர்’ ன்னு மாத்திட்டான் எடிட்டர். பல சொல் நம்ம மொழியில் இருந்து அழிந்துவிட்டது. உதாரணமாக ‘அவ்வ’ என்ற சொல். வயதான முதாட்டியை குறிக்கும் சொல். (‘அவ்வையாரின்’ வேர்ச்சொல்). தமிழில் அது புழக்கத்தில் இல்லை. ஆனால், படுக மொழியிலும், தெலுங்கிலும் இருக்கு. நாம் பத்தாம் நூற்றாண்டில் பயன்படுத்திய பல சொற்கள் மலையாளத்தில் இன்றும் உள்ளது. நம்மால் இந்த சொற்களை ஆவணப்படுத்தக்கூட முடியல. 1920களில் வந்த அகராதியை விட அதிக சொற்கள் கொண்ட அகராதி அதுக்கு பிறகு வரலை. கண்மணி குணசேகரனின் ‘நடுநாட்டு சொல்லகராதி’, ‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு’, தெலுங்கைத் தாய் மொழியாக கொண்ட ஒரு நெசவுத் தொழிலாளியின் ‘எதுகை அகராதி‘ என்று அமைப்பின் உதவியில்லாமல், தனி நபர்கள் தங்கள் உழைப்பால் அகராதி உருவாக்குகிறார்கள். அரசோ, பல்கலைக்கழகங்களோ அவர்களை அங்கீகரிப்பதில்லை என்றார்.

    முதல் நாள் சொற்பொழிவில் வந்த நண்பரை (இளங்கோ?) அறிமுகப்படுத்திய ராஜன், இவர் சிறுகதைகள் எழுதுவார் என்றார். “கதைகள அனுப்புங்க, ராயல்டி கேக்காத எழுத்தாளர்கள நம்ம பப்ளிஷ்ர்கள் தேடிட்டு இருக்காங்க” என்று சொன்னவர், “முதல் பதிப்புக்கு ஏதோ ராயல்டி தருவாங்க. இரண்டாவது, மூணாவது பதிப்புக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது” என்றார். “தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை புடுங்கி வச்சுட்டா. ஏம்மா, கிழிஞ்சா பரவாயில்ல, வேற புத்தகம் வாங்கிக்கலாம்ன்னு சொன்னேன். குழந்தைகள பாடப்புத்தகங்கள் தவிர வேற புத்தகங்களை தொட விடமாட்டேங்குறாங்க பெற்றோர்கள். அவங்க கிட்டதான் பிரச்சனை” என்றார்.

    நீங்க கடந்த சில வருடங்களில் மலேசியா, வளைகுடா நாடுகள், அமெரிக்கா என்று பல வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள், அங்கு தமிழர்களின் வாழ்க்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். மலேசியத் தமிழர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; அமெரிக்காவில் ஒரு சாரார் தங்கள் வேரோடு/மரபோடு தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார்கள், மற்றொரு சாரார் முழுக்க அமெரிக்கர்களாகவே மாறிவிட்டார்கள்; வளைகுடா நாடுகளில்தான் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றார். (தன்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் முதலாளியோ, யாரோ ஓங்கி முதுகில் அடித்தான் என்றார்.) வேறோரு நாளில், பாலாஜி இங்குள்ளவர்களைப் பற்றி உங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு, “எனக்கு உங்களைப் பத்தி கவலையில்லங்க. நீங்க யாரும் வழி தவறிய ஆடுங்க இல்ல, வழியைத் தேடிக்கிட்ட ஆடுகள், நீங்களும், உங்க புள்ளங்களும் பொழச்சுக்கும். நான் என் நாட்டப் பத்தி கவலைப்படுறேன். நேத்து இரண்டு நூலகத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க, அத பாத்த பின்னாடி, எங்கேயாவது மூலையில உக்காந்து ஓன்னு அழலாம் போல இருக்கு. இங்க புக்கெல்லாம் எப்படி அடுக்கி வெச்சிருக்கான். நம்ம ஊர் லைப்பரரில போய் ஒரு புத்தகத்த தேடினா ஆஸ்துமா வந்துடும்” என்று வருத்தப்பட்டார்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு, இளைய தளபதி விஜய் தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக Bay Area வந்திருந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நாற்பது டாலர்கள் கட்டணம் கட்டி, ஐந்நூறு-அறுநூறு தமிழர்கள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தார்கள். கூட்டத்தை பார்த்து பேதியடைந்த இளைய தளபதி பாதியிலேயே போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டார். இதை நாஞ்சிலிடம் தெரிவித்தபோது உண்மையிலேயே நொந்துவிட்டார். “கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் விழாவுக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டிருந்தாங்க. அதுக்கு முந்தய வருஷம் சிறப்பு விருந்தினர், எட்டாம் கிளாஸ் படித்த ‘காதல்’ பட நாயகி. மேடையிலேயே, ‘ஏண்டா, அவகிட்டருந்து என்னடா கத்துகிட்டீங்கன்னு’ ஒரு பிடி பிடிச்சேன். ஒரு அழுகல் கேக்க பாதி நம்ம ஊர்ல திங்கறான். மீதிய நீங்க திங்கிறீங்க. தமிழர்களுக்கு எப்ப சினிமா மோகம் குறையுமோ தெரியலை” என்றார். இயக்குனர் பாலாவின் ‘பரதேசி‘ படத்தில் கதை-வசனம் எழுதுவதாக சொன்னவர், “நாம் ஒரு சீன எழுதிக் குடுப்போம். டைரக்டர் அவரு கற்பனைக்கு ஏத்த மாதிரி, அத வேற லெவலுக்கு எடுத்துட்டு போவார்” என்று ஒரு உதாரணம் சொன்னார். (வெள்ளித்திரையில் காண்க – அது பட க்ளைமேக்ஸ்.) சில இயக்குனர்கள், தன் நாவல்களிலிருந்து பல பகுதிகள், க்ளைமேக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள் என்றவர், “சம்பளமெல்லாம் பேசலீங்க. ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்தான். படம் பேர் போடும்போது, நம்ம பேர் வந்தா சரி. நான் அதத் தவர வேற எதயும் எதிர்பார்க்கல” என்றார்.

    தொண்ணூறுகளின் இறுதியில், புலமைப் பூசல், எழுத்தரசியல் காரணங்களுக்காக, ஜெயமோகனை விட்டுவிட்டு தங்கள் தரப்பிற்கு வருமாறு சொன்னவர்களிடம், “ஜெயமோகன் கொலையே பண்ணிருந்தாலும், நான் அவனோடதான் இருப்பேன். உங்களோட வரமுடியாதுன்னுட்டேன்” என்றவர், “இவன் வீட்டு வாசப்படிய மிதிக்கக்கூடாதுன்னு நினைச்சுட்டு வந்த நாளெல்லாம் இருந்திருக்கு, ஆனா, அடுத்த நாளே திரும்ப போயிருக்கேன். ஏன்னா, அவன் என் மொழியில தோன்றின அபூர்வமான கலைஞன்” என்று மேலும் சில நிகழ்வுகளை சொன்னார். ஜெயமோகனுக்கும் நாஞ்சிலுக்கும் உள்ள நட்பை அறிந்திருந்தாலும், அவர் சொல்லும்போதே, அதில் நட்பை மீறிய பாசமும் தெரிந்தது. தான் எழுதத் துவங்கிய காலத்தில் தன்னை ஊக்கப்படுத்திய மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மீதும் பெரும் மரியாதை வைத்திருக்கிறார்.

    தன்ராம்சிங் மாதிரி கதைகள படிச்சு, அதன் பாதிப்பிலிருந்து வெளிவர நாங்கள்லாம் சிரமப்படறோம், நீங்க எழுதும்போது, உங்க மனநிலை எப்படி இருக்கும், நேரம், இடம்ன்னு தேர்ந்தெடுத்து எழுதுவீங்களா” என்ற கேள்விக்கு, “உக்கிரமான பகுதிகள், முக்கியமா காமம் சார்ந்த பகுதிகள் எழுதும்போது, காதெல்லாம் சிவந்து, மனசு வேறேங்கயோ இருக்கும். யாராவது அப்ப வந்து டிஸ்டர்ப் பண்ணா, கடும் கோபம் வந்து எரிஞ்சு விழுவேன். எழுதறதுக்கு நேரம், காலம் எல்லாம் கிடையாது. நிறைய முறை ஆஃபீஸ்லயே உக்காந்து எழுதிருக்கேன். எவனாது வந்து கேட்டான்னா, போடா மயிரு, நீ குடுக்குற சம்பளத்த விடவே அதிகமாவே வேலை செஞ்சுட்டேன்னு சொல்லிடுவேன்” என்றார்.

    “என்னால உணர்ச்சிகரமாக பேசமுடியும், ஆனா பேசமாட்டேன். என் தொழில் எழுத்து. அதனால, பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி எதிர்பார்க்க வேண்டாம்” என்று கம்ப ராமாயண உரைகளின்போது சொன்னவர், பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த பாராட்டு விழாவின் ஏற்புரையின்போது, ஒரு உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினார். அதற்கு முன் நாங்கள் ஏழு பேர் பேசி, வந்தவர்கள் பொறுமையை சோதித்தோம். முதலில் ஏற்புரை வழங்கிய பி.ஏ.கே.வின் செறிவார்ந்த உரை, கூட்டத்தை சென்று சேர்ந்தா என்று தெரியவில்லை. ஆனால், அன்றைய விழா நாயகன் கடைசியாக பேசிய நாஞ்சில்தான். அவர் உரையை, சிறு சலனம் கூட இல்லாமல் மொத்தக் கூட்டமும் கேட்டது. (வீடியோ வடிவம் வலையேற்றப்படும்).

    ***

    ஸ்டான்ஃபோர்ட் வானொலி நேர்காணலுக்காக, “நீங்கள் எழுதத் துவங்கியதற்கு என்ன காரணம்” என்று கேட்டோம். ஒரு கலைஞனுக்கே உரிய பெருமிதத்துடன் “நான் எழுதலைனா, என் மொழியில் சிலது எழுதப்படாமலேயே போயிடும். அதை என்னால் மட்டுமே சொல்லமுடியும். அதனால் எழுத வந்தேன்” என்றார். இந்தியா என்றால் வெளிநாட்டினருக்கு இருக்கும் பொது பிம்பம் எதிர்மறையானது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்‘, அர்விந்த் அடிகாவின் ‘White Tiger‘ போன்றவை வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம், அவை அந்த பொதுப் புத்தியை பிரதிபலிப்பதனாலேயே. அதே சமயம் இந்தியாவிற்கு வந்து சென்ற வெளிநாட்டு நண்பர்கள், தங்கள் வாழ்வின் மறக்க முடியாத அனுபவமாக இந்திய பயணத்தை நினைக்கிறார்கள். “நாங்க பிரச்சனைன்னு நினைக்கறதெல்லாம், ஒரு பிரச்சனையே இல்லைன்னு இங்க வந்து பாத்தப்ப புரியுது. இந்தளவு ஏற்றத்தாழ்வு இருந்தும், மக்களப் பாத்தா சந்தோஷமா இருக்காங்க. இது எப்படின்னு புரியலை” என்றார் ஒரு அமெரிக்கர். அவரை மீண்டும் சந்தித்தால், நாஞ்சிலின் “யாம் உண்பேம்“, “வனம்” போன்ற கதைகளை சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கதைகளில் கடைசி வரி/பத்தியை தவிர்த்தால், அது கீழ்/நடுத்தர வர்க்கத்து நெருக்கடிகளை சொல்லும் பல நூறு படைப்புகளோடு ஒன்றாக இருந்திருக்கும். முந்தைய தலைமுறையின் பசி, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை பேசும் மற்றுமொரு படைப்பாளியாக மட்டுமே இருந்திருப்பார். “என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே.

    அதே நிகழ்ச்சியில், “உரிய காலத்தில் அங்கீகரிக்கல, அல்லது மிகத் தாமதமாக அங்கீகரிச்சிருக்காங்கன்னு வருத்தமுண்டா ? உங்களுக்கு எப்பொழுதாவது எழுதுவதை விட்டுவிட்டு, உங்கள் தொழிலிலேயே கவனம் செலுத்தலாம் என்று தோன்றியிருக்கிறதா” என்ற கேட்டேன். “இல்லங்க.. வருத்தமெல்லாம் இல்லை. நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” என்றார். வேறோரு நாள், நானும் அருணும், ஸ்டான்ஃபோர்டு பல்கலை அருகே, அவரை ஒரு இனிப்பு கடைக்கு அழைத்து செல்லும்போது, “ஞானபீடம் வாங்கிட்டு, ஸ்டான்ஃபோர்டு உள்ள பேச வேண்டியவரை, பல்கலைக்கு வெளியே கூட்டிட்டு சுத்தறோம்” என்றேன். “ஞானபீடம்லாம் குடுக்கமாட்டானுங்க. விருது குழூல இருக்கவங்க எல்லாம் எழுதி தோத்துபோனவனுங்க. அவங்களால, வெற்றிகரமா எழுதறவங்கள சகிச்சிக்க முடியாது” என்றார். “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” என்று அவருடைய தளத்தில் உள்ள வாசகங்களை நினைத்துக்கொண்டேன்.

    வளர்ந்த நாடுகளில் முக்கால்வாசி இலக்கியவாதிகள் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள்; ஏதோ ஒரு வகையில் அமைப்போடு (பள்ளி, பல்கலை, அரசு) தொடர்புடையவர்கள். சில விதிவிலக்குகளை தவிர்த்தால், தமிழ்/இந்திய அமைப்பு, பெயர் சொல்லும்படியான இலக்கியவாதிகளை உருவாக்கவில்லை. தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருமே, அமைப்பிற்கு வெளியே இருந்து வந்தவர்கள்தான்.அந்த விதிக்கு நாஞ்சிலும் விலக்கல்ல. நாஞ்சில், கணிதத்தில் பட்டம் பெற்றவர் (தமிழில் அல்ல) ; தொழிலோ, ஓயாமல் ஊர் சுற்றிக்கொண்டிருக்க வேண்டிய விற்பனை பிரதிநிதி; வாழ்விடமோ ‘யாதும் ஊரே’ வகைதான். இருப்பினும், அன்றாட நெருக்கடிகளுக்கிடையே, எப்படியோ அவருக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது; எப்படியோ தரம் வாய்ந்த படைப்புகளை எழுத முடிந்திருக்கிறது; இந்த ‘எப்படியோ’வை தேடிக் கொண்டிருக்கும் என் போன்றோருக்கு, நாஞ்சிலோடு செலவிட்ட இந்த சில நாட்கள், பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையல்ல.

    பின்குறிப்பு: தோழி காவேரி விஜய் பற்றிய செய்தி மிகைப்படுத்தப்பட்டது, ஒரு வேளை உணவுக்கும் விஜயை சந்திப்பதற்கும் ஃபோட்டோவுக்கும் சேர்த்தும் இருபது டாலர் என்று சொன்னார். ஒரு வேளை சாப்பாட்டுக்கு பத்து பதினைந்து டாலர் ஆகலாம், இந்த ஊரில் ஃபோட்டோவை யாராவது எடுத்தால் அதை வாங்கவே பத்து பதினைந்து டாலர் ஆகும்.

    நண்பர் முத்துகிருஷ்ணன் தரும் தகவல் – எதுகை அகராதியை தொகுத்த நெசவாளர் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை என்ற ஊரில் பிறந்த பசுபுல இராமசாமி அப்பாய் செட்டியார் – வருடம் 1938. இப்போது சந்தியா பதிப்பகம் மீள் பதிப்பு வெளியிட்டுள்ளது.

    பைரப்பாவின் “ஆவரணா” – படிக்க விரும்பும் புத்தகம்

    நான் மிகவும் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பா. அவரது எழுத்துகள் இன்னும் முழுமையாக ஆங்கிலம்/தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அதுவும் ஆவரணாவைப் பற்றி ஒரு நண்பன் அடிக்கடி பேசுவான், மொழிபெயர்ப்பு இல்லையே என்று வயிறு எரியும்.

    நண்பர் உப்பிலி ஸ்ரீனிவாஸ் மூலமாக இந்தப் புத்தகம் தமிழில் வந்திருப்பது தெரிய வந்தது. அவர் எழுதிய அல்லது கட்-பேஸ்ட் செய்த சிறு கீழே உள்ள அறிமுகம் கல்கியில் வந்தது என்று ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். அவருக்கும் கல்கிக்கும் நன்றி! நூலைப் பதித்திருப்பது விஜயபாரதம் (இது பா.ஜ.க.வின் அமைப்பா?), மதிப்புரையை எழுதியவர் “திராவிட மாயை” சுப்பு என்று ரமணன் தகவல் தந்திருக்கிறார்.

    ஜெயமோகன் இது வெறும் பிரச்சார நாவல், பைரப்பாவுக்கு இழுக்கு என்று மதிப்பிடுகிறார். அது ஒரு பெரிய ஏமாற்றம்!

    எஸ்.எல்.பைரப்பா – கன்னட இலக்கியத்தின் இன்றைய சூப்பர் ஸ்டார். ‘ஆவரணா’ என்ற பெயரில் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நாவல், முதல் பத்து மாதங்களில் பதினான்கு பதிப்புகளைக் கண்டது. இப்போது முப்பது பதிப்புகளைக் கடந்து அசுர சாதனை செய்துள்ளது.

    இவர் எழுதியுள்ள 24 நாவல்களில், சில திரைப்படங்களாகவும் வந்துள்ளன; ‘பர்வா’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தமிழர்களுக்கு அறிமுகமான பைரப்பா இப்போது மீண்டும் தமிழ்ப் புத்தகமாக வந்திருக்கிறார். இவரது ‘ஆவரணாவை’ ஜெயா வெங்கட்ராமன் தமிழாக்கி ‘திரை’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்.

    திரையின் கதாநாயகி லக்ஷ்மி, காந்தியவாதி நரசிம்ம கௌடா மகள். பெங்களூருவில் மேல்தட்டு முற்போக்குவாதியான லக்ஷ்மி, காதல் வயப்பட்டு சகமுற்போக்குவாதி அமீரைத் திருமணம் செய்து கொண்டு ரஸியா-வாகிறாள். இடதுசாரிகளின் கவனிப்போடும் அரசாங்கத்தின் கருணையோடும் ஆவணப் படங்களையும் எடுக்கிறார்கள்.

    திருமணத்துக்குப் பிறகு அமீர் இஸ்லாமியச் சட்டத்துக்குள் ரஸியாவை அடைக்க முயற்சி செய்கிறான். ரஸியாவுக்கு அதிர்ச்சி. கணவன்-மனைவி மோதல் என்பதைக் களமாக வைத்துக் கொண்டு பைரப்பா வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே போகிறார்.

    நரசிம்ம கௌடா மறைவுக்குப் பிறகு அஸ்தியை எடுத்துக்கொண்டு ரஸியா, காசிக்குப் போகிறாள். அந்த இடத்தில் காசியை ‘நகரங்களின் வளாகம்’ என்று பெருமைப்படுத்துகிறார் பைரப்பா. அவருடைய இந்தப் படைப்பை, கதைகளின் வளாகம் என்று சொல்லலாம்.

    எத்தனை கதைகள்? அமீர், ரஸியாவின் காதலில் உள்ள இனிப்பு; கடுப்பு கதைகள். பேராசிரியர் சாஸ்திரியின் சபலக் கதைகள்; எலிசபெத்தின் கத்தோலிக்கக்கதை; அருணா என்பவள் சல்மாவாகி சவூதிக்குப் போன கதை; நரசபுரத்தின் வீட்டு நூலகத்தில் மறைந்திருக்கும் கதைகள் என்று கலைடாஸ்கோபிக் கதைகள்.

    தந்தையின் குறிப்புகளைப் படிக்கும்போது ரஸியாவின் கண்முன்னே விரிகிறது ஒரு சரித்திரக் கதை. அது மொகலாயர் காலத்தை முன்னுக்கு வந்து நடப்புலகைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. பைரப்பாவின் எழுத்தில் வெளிப்படும் சம்பவங்கள் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

    “நம்முடைய பாடத் திட்டம் முற்போக்கு வாதிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது” என்று வாதம் செய்தார் ஒரு நண்பர்.

    மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியில், 1989-ல் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, “இஸ்லாமிய அரசர்கள் கோயில்களை இடித்தது பற்றிய செய்திகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறக்கூடாது” என்று சொன்னதை நினைவுபடுத்தினார் அந்த நண்பர் சொன்னதற்கு வலு கூட்டுகிறது நாவல்.

    திரை – கன்னட மூலம் எஸ். எல். பைரப்பா, தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.

    விலை ரூ. 250.

    தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்
    தொடர்புடைய சுட்டி: எஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா

    காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் – முன்னோடி

    காஜுலு லக்ஷ்மி நரசிம்ம செட்டியார் என்ற பேரை நான் முன்னால் கேட்டதே இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். ஆங்கில அரசு நிலைப்ப்படும்போது சட்ட ரீதியாக குரல் கொடுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் தாதாபாய் நௌரோஜி என்று சொல்லலாம். கிழக்கிந்திய கம்பெனிக்கும் விக்டோரியா மகாராணிக்கும் பெட்டிஷன் போட்டது, பத்திரிகை நடத்தியது எல்லாம் குறிப்பிட வேண்டியவை. பெட்டிஷன்களில் பத்து பதினைந்தாயிரம் கையெழுத்துக்கள்! அந்தக் காலத்தில் இத்தனை பேரை ஒன்று சேர்த்து குரல் கொடுப்பது எத்தனை கஷ்டமாக இருந்திருக்க வேண்டும்! இவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது, ஆனால் எந்த விவரமும் தெரியவில்லை. கூகிள் செய்து பார்த்தேன், மலர்மன்னன் எழுதிய ஒரு கட்டுரையில் இவரைப் பற்றி இரண்டு வரி வந்திருக்கிறது, அவ்வளவுதான். மலர்மன்னன் வார்த்தைகளில்:

    அரசு அதிகாரிகள் ஆதரவுடன் மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதைக் கண்டு ஹிந்துக்களின் உரிமைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் காஜுலு லக்ஷ்மநரசு என்ற தெலுங்கு வணிகர் ‘க்ரெசன்ட்’ என்ற பெயரில் 1844-ல் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அவரது முயற்சிக்கு மெட்ராஸ் நேடிவ் அஸோசியேஷன் என்ற அமைப்பு ஆதரவு தெரிவித்தது. சென்னை வணிகர்கள் முன்னின்று நடத்திய இச்சங்கம், கிழக்கு இந்தியக் கம்பெனி வர்த்தகத்திற்கு விசேஷச் சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. 1858-ல் பிரிட்டிஷ் அரசு கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து அதிகாரத்தை மேற்கொண்டு நேரடியாக ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டதால் க்ரெசென்ட்டின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. 1868-ல் லக்ஷ்மநரசு இறந்துவிட, அவரது பத்திரிகையும் நின்று போனது.

    ந. சஞ்சீவி எழுதி இருக்கும் “இரு பெரும் தலைவர்” என்ற புத்தகம் ஒன்றும் பேசப்பட வேண்டியதில்லை. காஜுலுகாருவைப் பற்றி விவரங்கள் இல்லை என்றால் இந்தக் குறிப்பே கூட வந்திருக்காது. புத்தகத்தை இணைத்திருக்கிறேன். காஜுலுகாருவைப் பற்றி தெரிந்தவர்கள் எழுதுங்களேன்!

    பதிவர் ராமநாதன் காஜுலுகாருவைப் பற்றி இன்னொரு சுட்டி கொடுத்திருக்கிறார், அதில் நிறைய விவரங்கள் இருக்கின்றன. அவருக்கு நன்றி! நானும் இணையத்தில் தேடிப் பார்த்தேன், எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும், நான் தேடியது Kajulu-காரு. அவரோ Gazulu! தெலுகில் z ஒலி கிடையாது, அது என்ன Gazulu என்று தெரியவில்லை.

    சஞ்சீவியின் இரண்டாவது பெரிய தலைவர் சேலம் ராமசாமி முதலியார். உ.வே. சாமிநாதய்யரை ஜீவக சிந்தாமணியைத் தேட வைத்ததே இவர்தான். முதலியார் பற்றி உ.வே.சா. தனது சுயசரிதையில் சொன்னதையே சஞ்சீவி ஏறக்குறைய திருப்பி எழுதி இருக்கிறார், அவ்வளவுதான்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    சஞ்சீவியின் புத்தகம் – மின்னூல்
    மலர்மன்னன் கட்டுரை
    Madras Ramblings கட்டுரை