எனக்கு மகாபாரதம் என்றால் பித்து. பூமணி என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். மகாபாரதத்தை அவரது கோணத்தில் எழுதி இருப்பதை படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது. பூமணி மகாபாரதத்தை கொஞ்சம் கொச்சையான பேச்சுமொழியில் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான். உதாரணமாக அர்ஜுனனும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் அச்சு, கிச்சு, கருத்த மச்சான், கருவாயா என்று அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றே போதும் என்று பூமணி நினைத்துவிட்டார். நாளைக்கு பாரதத்தை சென்னைத் தமிழில் கூட எழுதலாம். “நீ சுபத்ரையை டாவு கட்டி இஸ்துக்கினு ஓட்று” என்று கிஷ்டன் அர்ச்சுனுக்கு அட்வைஸ் கொடுப்பதாக எழுதலாம். அதில் என்ன தரிசனம், கவித்துவம், நயம் இருக்கிறது? சில இடங்களில் அபூர்வமாக அந்த மொழியின் “பொருந்தாத்தன்மை” சின்னப் புன்னகையை வர வைக்கிறது, அத்தோடு சரி.
நாட்டார் இலக்கியப் பாணியில் எழுத முயற்சித்தாரோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த கொச்சையான பேச்சுமொழியை விட்டுவிட்டால்; பொன்னருவி கதையை இணைத்திருப்பது (கர்ணனை சூதன் என்று அவமானப்படுத்தும் மனைவி, புகழேந்திப் புலவர் இந்த நாட்டார் கதையை அம்மானையாக எழுதி இருக்கிறார் என்று நினைவு), விதுரனின் அம்மாவின் கணவன் அந்தப்புர காவலன், அதனால் காயடிக்கப்பட்டான் என்ற கற்பனை, இந்திரப்பிரஸ்தத்துக்கு வரும் இடும்பி-கடோத்கஜன் அவமானப்படுத்தப்படுவது என்ற கற்பனை, காந்தாரி சகுனியை உன் மாதிரி சகோதரன் இருந்து என்ன பயன் என்று திட்டும் இடம் என்று வெகு சில இடங்களில்தான் அது தெரிகிறது.
பூமணி இந்த நாவலை மகாபாரத நாயகிகளை, அவர்களது உணர்வுகளை முன்வைத்து எழுதினாராம். சில இடங்களில் – குறிப்பாக இடும்பி, பாஞ்சாலி-சுபத்திரை உறவு, காந்தாரியின் மன உளைச்சல் என்று இருந்தாலும் பொதுவாக இது மகாபாரதக் கதையை அப்படியேதான் திருப்பிச் சொல்கிறது. குந்தியையும் திரௌபதியையும் கதாநாயகிகள் என்று சொல்லலாம். திரௌபதி துகிலுரியப்படும்போது மீட்பது கிருஷ்ணன் அல்ல; தன்னைத் தானே மீட்டுக் கொள்கிறாள்!
விதுரன் யுதிஷ்டிரனின் தந்தை; திருதராஷ்டிரன் பீமனின் தந்தை என்ற கற்பனைகளை வேறு இடங்களில் படித்திருக்கலாம்; சகுனி நகுல-சகதேவனின் தந்தை என்ற என் கற்பனையையும் படித்திருந்தால் நூறாண்டு வாழ்க! ஆனால் கிருபர் அர்ஜுனனின் தந்தை என்ற கற்பனையை இங்கேதான் முதல் முறையாகப் படித்தேன். நானும் அப்படி யோசித்திருக்கிறேன், ஆனால் பாண்டவர்களை எரிக்கச் சென்று உபபாண்டவர்கள் படுகொலையில் பங்கு கொள்ளும் கிருபரை அர்ஜுனனின் தந்தையாக வைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை. தன் பேரனை தானே கொல்பவரா கிருபர்?
கொம்மை என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பினேன். நல்ல வேளையாக அவரே அதன் பல அர்த்தங்களை நாவலின் ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டார். கொம்மை என்றால் “திரண்ட”, “குமிழ் போன்ற” என்று பொருளாம். கொம்மை முலை என்றெல்லாம் வார்த்தை பிரயோகம் உண்டாம். ஒரு வேளை பெண்மையைக் குறிக்கும் விதமாக கொம்மை என்று பேர் வைத்தாரோ என்னவோ.
தீவிர மகாபாரதப் பிரியர்களுக்கு மட்டும்தான் பரிந்துரைப்பேன்.
பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதிய பிறகு நண்பர் ரெங்கசுப்ரமணி இதைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா என்று பார்த்தேன். அவர், கேசவமணி, நான் மூவருக்கும் ஏறக்குறைய ஒரே அலைவரிசை. (கேசவமணி இப்போதெல்லாம் எழுதுவதை நிறுத்திவிட்டாரோ?) கொம்மையைப் பற்றி எனது கருத்துக்கள்தான் அவருக்கும்…
தொகுக்கப்பட்ட பக்கம்: பூமணி பக்கம், மகாபாரதப் பக்கம்
தொடர்புடைய சுட்டி: கொம்மை பற்றி ரெங்கா