பொன்னியின் செல்வன் திரைப்படம்

ஒரு வழியாகத் திரைபப்டத்தைப் பார்த்துவிட்டேன்.

என்னைப் பொறுத்த வரையில் கதையின் நாயகர்கள் கலை இயக்குனர் தோட்டா தரணியும் நடன இயக்குனர் பிருந்தாவும்தான். தோட்டாவோடும் பிருந்தாவோடும் ஒப்பிட்டால் மற்றவர் எல்லாம் – மணிரத்னம் உட்பட – கொஞ்சம் சோட்டாவாகத்தான் தெரிகிறார்கள்..

மணிரத்னத்தின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் எப்போதுமே அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். அவர் இசை வீடியோக்களோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம் என்று எனக்கு சில சமயம் தோன்றியதுண்டு (உதாரணமாக காற்று வெளியிடை திரைப்படம்) நல்ல வேளையாக இந்தப் படத்தின் takeaway பாட்டுக்கள் மட்டும் அல்ல.

குறிப்பாக தேவராளன் ஆட்டம் வண்ணங்கள் நடனம் ஆடுவதைப் போல இருந்தது. ராட்சஸ மாமனே படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். Visual treat. இரண்டிற்கும் வீடியோ கிடைக்கவில்லை. யூட்யூபில் வர இன்னும் கொஞ்சம் நாளாகும் போலிருக்கிறது.

ஆனால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். பூங்குழலி அறிமுகக் காட்சியில் படகில் பூங்குழலி ஏறி நிற்கும்போது நிலா அது வானத்து மேலே பாட்டு இந்தப் படத்திலுமா என்று ஒரு நொடி தோன்றியது!

திரைப்படத்தின் பல காட்சிகள் – உடையும் பாலத்தின் மீது செல்லும் தேர், ஆற்றை தெப்பத்தின் மேல் கடக்கும் குதிரை, பழுவேட்டரையர் அரணமனை, இலங்கை அரசன் மஹிந்தன் வரும் காட்சி போன்றவை அழகுணர்ச்சியுடன் படமாக்கப் பட்டிருந்தன.

வேறு எதுவுமே இல்லாவிட்டாலும் இவற்றுக்காகவே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இன்னும் இருக்கின்றன.

திரைக்கதை வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். கதை பொன்னியின் செல்வனை இம்மியும் மாற்றாமல் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. ராஷ்டிரகூடர்களுடன் போர், நுளம்பம்பாடி போர், குந்தவை பழுவேட்டரையரை மடக்குவது என்றெல்லாம் நாவலில் கிடையாது. பெரிய பழுவேட்டரையரும், அனிருத்த பிரம்மராயரும், ஏன் ஆழ்வார்க்கடியானும் கூட நாவலில் இன்னும் பெரிய பாத்திரங்கள். ஆனால் திரைப்படத்தின் பெரும் பகுதி நாவலை அடியொற்றித்தான் செல்கிறது. நாவல் சில ஆயிரம் பக்கம் உடையது, கொஞ்சம் ramble ஆகத்தான் செய்யும். திரைப்படத்தின் விடுபடல்கள் நாவலை இன்னும் coherent ஆக்கும் முயற்சிகள் அவ்வளவுதான்.

திரைப்படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அப்படித்தான். உதாரணமாக நாவல் முழுவதும் குந்தவை ஒரு பெண் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்குத்தான் கல்கி விவரிப்பார். ஆனால் ஓலை அனுப்புவதைத் தவிர குந்தவை வேறு எதுவும் செய்யமாட்டாள். சிற்றரசர் கூட்டத்தில் தம்பிகளுக்கு உங்களில் இருவர் மகள்கள் மனைவி ஆகலாம் என்று ஆசை காட்டுவது அந்தப் பாத்திரத்தை வலுப்படுத்துகிறது.

ராஷ்டிரகூடர்களோடு போர் என்பது இன்னொரு நிராயுதபாணியை கொல்லமாட்டேன் என்ற ஒரு நொடி வசனத்துக்காக கட்டி எழுப்பப்பட்ட பிரம்மாண்ட போர்க்காட்சியோ என்று தோன்றுகிறது. வீரபாண்டியனைக் கொல்வதால் ஆதித்தகரிகாலனுக்கு ஏற்படும் அகச்சிக்கல்களை அந்த ஒரு நொடி வசனம் நன்றாகவே காட்டிவிடுகிறது.

மிக நீண்ட நாவலை கெடுக்காமல் நல்லபடி திரைக்கதை ஆக்குவது சிரமம். அதை மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மூவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வசனங்கள் மனோகரா வசனம் போல anachronism ஆகவும் இல்லை, அதே போல கொச்சையான பேச்சுத் தமிழாகவும் இல்லை. இயல்பாக இருக்கின்றன. அது ஜெயமோகனுக்கு ஜுஜுபி வேலைதான்.

முந்தைய பதிவிலிருந்து:

ஜெயமோகனிடம் மாற்றங்களைப் பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். அவர் நாவலில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய வேண்டி இருந்தது என்று சொன்னார். உதாரணமாக ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்று நாவலைப் படித்துவிட்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. அப்படி எல்லாம் திரைப்படத்தில் அரைகுறையாக விட்டுவிடுவது கஷ்டம். நந்தினியின் தந்தை யார்? வீரபாண்டியனா? அப்பாவையே கணவன் என்று ஆதித்த கரிகாலனிடம் சொன்னாளா? மந்தாகினிக்கு சுந்தர சோழர், வீரபாண்டியன் இருவருடனும் உறவு இருந்ததா? இதை எல்லாம் கல்கி வேண்டுமென்றே விவரிக்கவில்லை, சில முடிச்சுகளை வேண்டுமென்றே அவிழ்க்காதது அவரது உத்தி. நாவலை இன்னும் பிரமாதமாக்குகிறௌ என்று நண்பர்கள் அந்தக் காலத்தில் பேசிக் கொள்வோம். அதை எல்லாம் சரிப்படுத்த தேவை இருந்தது என்று ஜெயமோகன் சொன்னார். அதாவது நாவலின் இடைவெளிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்திருக்கிறது.

திரைக்கதையில் எனக்கு நொட்டை சொல்ல வேண்டுமென்றால்; வந்தியத்தேவனின் கதாபாத்திரம் நாவலில் முதலில் வீரன்; பிறகு கொஞ்சம் குறும்புத்தனம் உள்ளவன். திரைப்படத்தில் முதலில் பெண்களோடு flirt செய்யும் குறும்புக்காரன், அப்புறம்தான் வீரம் எல்லாம் என்ற சித்திரம் எழுகிறது. ஆ. கரிகாலன் பார்க்கும் இள வயது நந்தினிக்கும் வீரபாண்டியனின் மரணப்படுக்கையில் பார்க்கும் நந்தினிக்கும் உருவ வித்தியாசம் அதிகம். எப்படி பார்த்தவுடன் தெரிந்தது? வீரபாண்டியனே நந்தினி என்று அழைக்கிறார்தான், ஆனால் உலகத்தில் ஒரே நந்தினிதானா? ஓலை கொண்டு வந்த வந்தியத்தேவனைப் பார்த்து நீர் சோழ இளவரசியை மணப்பீர் என்று அருண்மொழி சொல்கிறார். கையில் இருப்பது நீ உடனே கிளம்பி வா என்று ஒரு ஓலை மட்டுமே; அதில் அக்காவின் உள்ளம் எப்படித் தெரியும்?

இரண்டாவதாக நடிப்பு; விக்ரமுக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஜெயம் ரவி பொருத்தமான தேர்வுதானா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவரும் நன்றாகவே செய்திருக்கிறார். கார்த்தியும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் கலக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராயும், அவருக்கு அடுத்தபடியாக த்ரிஷாவும். மற்ற பாத்திரங்களில் ஜெயராமும், பார்த்திபனும், ஐஸ்வர்யா லட்சுமியும், கிஷோரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஜெயராமின் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி இருக்கலாம், அந்த மெல்லிய நகைச்சுவை கொஞ்சம் மாறுதலாக இருந்திருக்கும்.

ஆனால் முக்கிய நடிகர்களின் முதிர்ச்சியான தோற்றம் கொஞ்சம் உறுத்துகிறது. ஆதித்த கரிகாலன் இறக்கும்போது 30 வயது கூட இருக்காது. விக்ரமைப் பார்த்தால் நாற்பதாவது சொல்லலாம். அதே போல ஜெயம் ரவி கதையில் வரும் அருண்மொழியைப் போல இளைஞன் அல்ல. கார்த்தியும் மனதில் இருக்கும் வந்தியத்தேவனை விட கொஞ்சம் முதிர்ச்சியாகத்தான் தெரிகிறார்.

வந்த புதிதில் – ஒரு ஏழெட்டு வருஷமாவது – ஏ.ஆர். ரஹ்மானின் பாட்டுக்களை முதல் முறை கேட்கும்போதே பிடித்துவிடும். சின்னச் சின்ன ஆசையாகாட்டும், போறாளே பொன்னுத்தாயியாகட்டும், பேட்டை ராப் ஆகட்டும், அப்படித்தான். அப்புறம் சில வருஷம் முதலில் கேட்கும்போது பெரிதாக ஈர்க்காது, ஆனால் கேட்க கேட்கப் பிடித்துவிடும். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அப்படித்தான் இருக்கின்றன. இது வரை அடிக்கடி கேட்கவில்லை, அதனால்தானோ என்னவோ எதுவும் சரியாக நினைவிலேயே இல்லை. பார்ப்போம்.

என்னா கூச்சல் போட்டார்கள்! ஆழ்வார்க்கடியான் நாராயணா என்று சொல்லவில்லை, நெற்றியில் நீறு இல்லை, ஹிந்துக்களை இழிவு செய்கிறார்கள் என்று வெறும் டீசரைப் பார்த்துவிட்டு ஒரு கும்பல் கத்தியது. படம் வந்த பிறகு தானாக அடங்கி இருக்கிறது. ஆனால் பார்ப்பன ஆதரவு திரைப்படம், ராஜராஜன் ஹிந்துவே அல்ல என்று அடுத்த கும்பல் கிளம்பி இருக்கிறது. படத்தை எதிர்ப்பது என்று முடிவு எடுத்தாயிற்று, படம் எப்படி இருந்தால் என்ன, சும்மா கத்துவோம், என்று கிளம்பி இருக்கிறீர்களா? உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையாடா?

இதில் நடுவாந்தரமாக ஒரு கும்பல் கல்கியின் கதையை மாற்றிவிட்டார்கள் என்று கத்துகிறது. பொ.செ.யைப் இந்த சாக்கிலாவது ஒரு முறை படித்துப் பாருங்கப்பா!

பொ.செ. தமிழில் ஒரு cult நாவல். திரைப்படம் அப்படி ஒரு cult திரைப்படமாக அமையாது என்று நினைக்கிறேன். நன்றாக ஓடும், அடுத்த பாகம் வரும்போது நினைவிலிருக்கும், ஆனால் இன்னும் இரண்டு வருஷம் கழித்து மறந்தும் போய்விடும் என்று தோன்றுகிறது. விக்ரம் 2 திரைப்படம் போலத்தான் முடியும், பாஹுபலி போல cult திரைப்படமாக மாறாது என்று தோன்றுகிறது.

அதனால் என்ன? ஒரு குறைவுமில்லை. திரைப்படம் நன்றாகவே இருக்கிறது. அரங்கங்களில் சென்று பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், கல்கி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

சில சினிமா புத்தகங்கள்

மீனாகுமாரி இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். சாவித்ரியோடு ஒப்பிடலாம். சொந்த வாழ்க்கையும் கொஞ்சம் சாவித்ரியைப் போலத்தான் இருக்கும். சிறு வயதிலேயே திரைப்படங்கள், அவர் ஊதியத்தை வைத்து வாழ்ந்த குடும்பம், 20-21 வயதிலேயே ஏற்கனவே திருமணமான கமல் அம்ரோஹியுடன் காதல், திருமணம், மணமுறிவு; வித்தியாசம், மணமுறிவுக்குப் பிறகு தர்மேந்திரா உட்பட்ட சில காதலர்கள் இருந்தார்கள், பகிரங்கமாகத்தான் உறவு இருந்தது. வினோத் மேத்தா மீனாகுமாரி மறைந்தபோது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். பெரிய தரிசனம் என்று எதுவுமில்லைதான், ஆனால் முழுமையான வாழ்க்கை வரலாறு.

ராஜேஷ் கன்னா ஆராதனா வெளியான சமயத்திலிருந்து நாலைந்து வருஷம் புகழின் உச்சியில் இருந்தார். அதற்கு சமமாக எம்ஜிஆர்/ரஜினி மேல் தமிழர்களுக்கு இருந்த/இருக்கும் அன்பு, என்டிஆரை தேவுடுவாகவே பார்த்த தெலுங்கர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் கன்னாவுக்கு இருந்தது அகில இந்திய புகழ். அவரது உச்சங்களும் வீழ்ச்சியும் பெரிய நாவலின் கதைக்களனாக இருக்க சாத்தியம் உள்ளவை. நாலைந்து வருஷம் ராஜா, அதற்குப் பிறகு – முப்பது முப்பத்தைந்து வயதிலிருந்து பெருங்காயம் வைத்த டப்பா என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய அகச் சிக்கல்களை உருவாக்கும்? யாஸ்ஸர் உஸ்மான் எழுதிய Rajesh Khanna: The Untold Story of India’s First Superstar ராஜேஷ் கன்னாவின் அகச்சிக்கல்களை நன்றாகவே விவரிக்கிறது. இருந்தாலும் எனக்கு டைம் பாஸ்தான். காரணம் ராஜேஷ் கன்னா எனக்கு முக்கியமானவர் அல்லர். இத்தனைக்கும் “மேரே சப்னோன் கி ராணி” பாடலுக்கு பரம ரசிகன். அந்தப் பாடல் அவரை வைத்து படமாக்கப்பட்டிருக்கும் விதம் என் மனம் கவர்ந்தது. ஆனால் எனக்கு அவரது திரைப்படங்களில் பிடித்தது பாடல்கள்தான். என் நாயகர்கள் ஆர்.டி. பர்மனும் கிஷோர் குமாரும்தான். ஆனந்த் திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று, ஆனால் அது எனக்கு ரிஷிகேஷ் முகர்ஜியின் சாதனை. கௌதம் சிந்தாமணி எழுதிய “Dark Star: The Loneliness of Being Rajesh Khanna” அவரது திரைப்படங்களை விவரிக்கிறது.

சத்ருகன் சின்ஹா, Anything but Khamoshi (2016): பாரதி எஸ். ப்ரதான் எழுதி இருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் தன்னம்பிக்கை, அவரது ஸ்டைல், வில்லன் நடிகராக இருந்தவரை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அவரது பாணி ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மோகன்பாபு உட்பட்ட பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. புத்தகத்தில் கிடைக்கும் சித்திரம் அவர் போலித்தனங்கள் அற்ற மனிதர் என்பதுதான். குறைகள் அற்றவர் அல்லர், ஆனால் நிறைகளும் நிறைய உடையவர். ஆனால் யாருக்கும் தலை தாழ்த்தவில்லை. திருமணம் ஆன புதிதிலேயே கூட நடிகை ரீனா ராயோடு உறவு! பூனத்தோடு திருமணம், ரீனா ராயோடு தேனிலவு என்று இருந்திருக்கிறார். அரசியலில் பாஜகவுக்காக பெரும் கூட்டங்களை ஈர்ப்பவராக இருந்திருக்கிறார், ஆனால் மோதி அரசில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம். டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

ரிஷி கபூர், குல்லம் குல்லா (2017): மீனா ஐயரோடு எழுதியது. ரிஷி கபூர் ஹிந்தி சினிமாவின் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கிடைத்த லாபங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுபவித்திருக்கிறார். சில பல குறைகள் உள்ளவர். ஆனால் அவற்றுக்காக வருத்தப்படுபவர் இல்லை. போலித்தனம் இல்லை. என் மனதில் பதிந்த ஒரு இடம் – அவரது மனைவி நீது சிங் ரிஷி கபூர் பிற பெண்களுடன் உறவு கொண்டிருப்பார் என்று கோடி காட்டுவதுதான். இது திரை உலகில் எத்தனை சாதாரணமாக இருந்திருக்கிறது? டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

விக்ரம்

பல மாதங்களுக்குப் பிறகு அரங்கத்தில் பார்த்த திரைப்படம். ஹேமா பார்க்கலாம் என்று சொன்னதால் முதல் நாளே போய்ப் பார்த்தோம். டிக்கெட் எக்கச்சக்க விலை. எக்கச்சக்கம் என்று தெரிந்ததால் என்ன என்று தெரிந்து கொள்ள கூட விரும்பவில்லை.

வியாழக்கிழமை இரவில் கூட ஓரளவு கூட்டம் இருந்தது. அதிலும் பக்கத்தில் இருந்தவர் அதிதீவிர கமல் ரசிகர் என்று நினைக்கிறேன், அவ்வப்போது கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். அது திரைப்படத்தை மேலும் ரசிக்க வைத்தது.

திரைப்படத்தின் சுருக்கத்தை எல்லாம் எழுதி இனி மேல் பார்ப்பவர்களுக்கு ஏற்படக் கூடிய அதிர்ச்சி/மகிழ்ச்சி/ஏமாற்றங்களை குறைக்க விரும்பவில்லை. ஆனால் படம் முழுவதும் நானும் ஹேமாவும் ஏன் இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே இருந்தோம். சில இடங்களில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் படம் பார்ப்பது போல இருந்தது. லாஜிக் எல்லாம் பார்ப்பதாக இருந்தால் தவிர்க்கலாம். ஆனால் எதற்காகப் பார்க்க வேண்டும்? சும்மா ஜாலியாகப் பாருங்கள்!

லாஜிக் அங்கங்கே இடித்தாலும், சில இடங்களில் திரைக்கதை நன்றாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் குடும்பப் பாசம், கமலின் அந்தக் கால சக வீரர்கள் அவருக்குக் கூட்டாளிகளாக அமைவது, அதிலும் டினா என்ற கூட்டாளி சண்டையிடும் காட்சி, கொஞ்சம் மிகைப்படுத்தல் இருந்தாலும் சூரியா வரும் காட்சி, ஃபஹத்திடம் அவரது மனைவி ஒரு வழியாக நீ எங்கே வேலை பார்க்கிறாய் என்று கேட்கும் காட்சி, காலைத் தாக்கும் அந்தக் குள்ளமான வில்லன் என்று சிலவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

கதையின் நாயகன் கமல் அல்லர், ஃபஹத் ஃபாசில்தான். ஃபஹத்தின் பாத்திரத்தில் மிகைகள் உண்டுதான். உதாரணமாக வேலை மும்முரத்தில் திருமணத்தை மறந்துவிடுவதெல்லாம் திரைப்படத்தில்தான் நடக்கும். ஆனால் அவர் நன்றாக நடித்திருக்கிறார்.

கமல் இன்றும் நன்றாக ஆடுகிறார். குறிப்பாக பத்தல பத்தல பாட்டுக்கு சாண்டி மாஸ்டரின் நடன அமைப்பும் சரி, அதற்கு கமல் ஆடி இருப்பதும் சரி, நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் “மாஸ்”, அதீத ஹீரோயிச காட்சிகளைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அனிருத்திற்கு இந்தப் பாட்டு இன்னும் ஒரு பெரிய வெற்றி. ஆனால் போதை மருந்துகளைப் பற்றி இத்தனை வெளிப்படையாகப் பாடுவது எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. சின்னக் குழந்தைகள் பாட்டைத்தான் பாடும். நாளைக்கு ஒரு எட்டு வயதுக் குழந்தை சூப்ப்ர் சிங்கர் ஜூனியரில் வெள்ளைப் பௌடரை மூக்குறிஞ்சுவதைப் பற்றி பாடத்தான் போகிறது.

விஜய் சேதுபதிக்கு பெரிதாக வேலை இல்லை. கமலோடு நடிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாரோ என்னவோ. சும்மா தோற்றத்தை வைத்தே ஓட்டிவிடலாம் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். ஏறக்குறைய எம்ஜிஆர் படத்து நம்பியார் மாதிரி இருக்கிறது.

ப்ரதீப் சக்தி, குமரவேல், நரேன் ஆகியோருக்கு ஓரளவு நல்ல ஸ்கோப். நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

லாஜிக் எல்லாம் பார்ப்பதில் அர்த்தமில்லைதான். இருந்தாலும் அருள்ராஜை அத்தனை அனாயாசமாக அணுக முடிகிறது, அப்புறம் எதற்காக கடத்திப் போய் கொல்ல வேண்டும்? மண்டபத்திலேயே கொல்ல வேண்டியதுதானே? கடத்தினால்தான் சேஸ் வைக்க முடியும், கமல் 40 பேரை அடித்து நொறுக்குவதாக காட்சி அமைக்க முடியும் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார். கடைசி சண்டைக் காட்சியில் குமரவேலுக்கு தற்கொலை செய்து கொள்ள ஆசையா, இல்லாவிட்டால் குழந்தையைக் கொன்றுவிட ஆசையா? எதற்காக அப்படி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வில்லன்களை நோக்கிப் போகிறார்? கடைசி சண்டையில் வி. சேதுபதி மாத்திரையை விழுங்க ஏன் இத்தனை தாமதம் செய்கிறார்? முதலில் மூன்று நிமிஷம் அடி வாங்கின பிறகுதான் “ஊக்க மருந்து” சாப்பிடுவாரா? எதற்காக ஃபஹத் திரும்பி வந்து குழந்தையைக் காட்டுகிறார்? அந்தக் காலத் திரைப்படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நாயகன் குடும்பத்தினர் வலிய வந்து மாட்டிக் கொள்வார்கள், அதைத்தான் நினைவுபடுத்தியது.

நொட்டை சொன்னால் என்ன? படத்தை ஜாலியாகப் பார்க்கலாம். கமல் பல வருஷங்களுக்குப் பிறகு நடித்திருக்கிறார். அவருக்காக வடிவமைக்கப்படும் “அதீதக்” காட்சிகள் குறைவாக இருக்கின்றன. பொதுவாக நடிப்பு நன்றாக இருக்கிறது. பல துணைப் பாத்திரங்கள் வலுவானவை. குறைந்தபட்சம் ஒரு பாட்டாவது ஹிட். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பழைய திரைப்படம்: Good Will Hunting

Good Will Hunting

Good Will Hunting (1997) நல்ல திரைப்படம். . சிறந்த நடிப்பு. ஆனால் என்னவோ குறைகிறது.

லட்சத்தில் ஒருவர்தான் ஏதாவது துறையில் மேதையாக இருக்கிறார்கள். கோடியில் ஒருவர்தான் மேதையாகவே பிறக்கிறார்கள். ஜெயமோகனும் விஸ்வநாதன் ஆனந்தும் மேதைகள், ஆனால் என் போன்ற சாதாரணர்களுக்கும் விடாமுயற்சியோடு உழைத்தால் அவர்கள் நிலையை அடைய 0.0001% வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நான் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ராமானுஜனாகவோ பாபி ஃபிஷராகவோ மாற முடியாது. ராமானுஜனின் மூளை வேறு விதமாகதான் செயல்பட்டிருக்க வேண்டும். பாபி ஃபிஷரின் மேதமையும் கிறுக்குத்தனமும் தொடர்புள்ளவை.

மேதமை, மேதமையின் பிரச்சினகள் என்ற கருக்கள் என்னை எப்போதும் கவர்வன. அதிலும் இந்தத் திரைப்படம் கணிதப் பின்புலம் கொண்டது. திரைப்படம் வெளியானபோதும் சரி, 25 வருஷம் கழித்து மீண்டும் பார்த்தபோதும் சரி, இந்தத் திரைப்படம் எனக்கு ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்று புரிகிறது. திரைப்படத்தின் பல இடங்கள் எனக்கு பிடித்தமானவை. ஆனால் இந்தத் திரைப்படத்தில் விவரிக்கப்படும் பிரச்சினைகள் எனக்கு கொஞ்சம் எளிமையாக இருக்கின்றன. அதனால் என்னவோ குறைகிறது என்று தோன்றுகிறதோ என்னவோ.

Will Hunting and Friends

இளைஞன் வில் ஹண்டிங் எம்ஐடியில் சுத்திகரிப்பு பணியாளன். அநாதை. பிறவி மேதை. தானாகவே கணிதம் உட்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவன் நண்பர்கள் பெரிதாகப் படிக்காதவர்கள். உடல் உழைப்பால் வாழ்ப்வர்கள். ஆனால் அவர்கள்தான் அவன் உலகம். மேலும் படிக்கப் போனால், தன் நண்பர்களின் உலகத்திலிருந்து தான் விலக நேரிடும் என்று உணர்ந்திருக்கிறான். அதனால் தன் மேதமையை மறைக்கிறான், அவர்களோடு சுற்றுகிறான், குடிக்கிறான், சண்டை போடுகிறான், அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிறான்.

Will Hunting Solving a Problem

புகழ் பெற்ற கணிதப் பேராசிரியர் லாம்பா கடினமான ஒரு கேள்வியை கரும்பலகையில் எழுதி மாணவர்களை அதற்கு விடை தரும்படி சவால் விடுகிறார். வில் யாரும் இல்லாதபோது அதன் விடையை வில் எழுதி வைக்கிறான். யார் விடையை கண்டுபிடித்தது, யார் அந்த சிறந்த மாணவன் என்று எல்லாரும் தேடுகிறார்கள். லாம்பா இன்னும் கடினமான கேள்வியை – கரும்பலகையில் எழுதி வைக்கிறார். வில் அதற்கும் விடை எழுதும்போது அவனைப் பார்க்கிறார். வில் ஓடிவிடுகிறான். லாம்பா அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறார். வில்லுக்கு சண்டை ஒன்றில் மாட்டிக் கொண்டு சிறைக்கு செல்லும் நிலை. சிறையைத் தவிர்க்க லாம்பாவிடம் பாடம் கற்கவும், ஒரு மனநிலை மருத்துவரை சந்திக்கவும் வில் ஒத்துக் கொள்கிறான்.

மனநிலை மருத்துவர்களோடு வில் ஒத்துழைக்க மறுக்கிறான். லாம்பாவை விடவும் அவனுக்கு கணிதம் சுலபமாக இருக்கிறது. அதனால் லாம்பாவிடம் அலட்சியமாக நடந்து கொள்கிறான். லாம்பா வில்லை எப்படியாவது கணிதத்தில் மும்முரமாக ஈடுபட வைக்க வேண்டும் என்று முனைகிறார். தன் பழைய நண்பன் ஷானை அவனுக்கு மனநிலை மருத்துவராக ஏற்பாடு செய்கிறார்.

ஷான் தன் மனைவி இறந்த துக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறான். முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் வில்லோடு ஷானுக்கு நல்ல உறவு ஏற்படுகிறது. வில் ஸ்கைலர் என்ற பணக்கார, ஹார்வர்ட் கல்லூரி மாணவியால் ஈர்க்கப்படுகிறான். வில்லின் நெருங்கிய நண்பன் சக்கி வில் மேலே படிக்காமல் தங்களோடு சுற்றிக் கொண்டிருப்பது அவனுக்கு வருத்தம்தான் என்பதை வில்லிடம் சொல்கிறான். வில் தன் நண்பர்களின் உலகத்தை விட்டு தான் போக வேண்டிய அறிவுலகத்துக்கு செல்கிறான்.

திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பேராசிரியர் லாம்பா. அவர் கணிதத்தில் பல சாதனைகள் புரிந்திருக்கிறார், பல பரிசுகளை வென்றிருக்கிறார். ஆனால் வில் ஹண்டிங் வேற லெவல் என்பதை உணர்கிறார். வில் ஒரு தேற்றம் உள்ள காகிதத்தை எரிக்கும்போது அவர் பேசுவது என் உள்ளத்தைத் தொட்ட காட்சி.

மாட் டேமன், பென் ஆஃப்லெக், ராபின் வில்லியம்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கர்ட் எல்லாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ராபின் வில்லியம்ஸ் தன் நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்றார். திரைக்கதைக்காக மாட் டேமன்+பென் ஆஃப்லெக் இருவரும் ஆஸ்கர் விருது பெற்றனர்.

எனக்கு என்னவோ குறைந்தாலும் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: ஐஎம்டிபி குறிப்பு

டாப் சினிமா வசனங்கள்

கேட்டவுடன் கபகபவென்று சிரிக்க வைத்த வசனங்கள், அல்லது நினைவில் வரும்போதெல்லாம் புன்னகைக்க வைப்பவை, ஏதோ ஒரு விதத்தில் அந்தத் திரைப்படத்தையோ, நடிகரையோ வரையறுப்பவை.

சட்டென்று நினைவுக்கு வந்தவற்றின் பட்டியல். ரொம்ப எல்லாம் யோசிக்கவில்லை, இன்னும் நிறைய இருக்கும். உங்களுக்கு ஏதாவது நினைவு வந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

YearFilmQuote
1930Animal CrackersOne morning I shot an elephant in my pajamas. How he got into my pajamas, I will never know
1933King KongIt was beauty that killed the beast
1939Gone with the WindFrankly, my dear, I don’t give a damn
1939Wizard of OzToto, I’ve a feeling we’re not in Kansas anymore
1940சகுந்தலைஅடிப்பியா! உங்கப்பன் மவனே சிங்கண்டா!
1941Citizen KaneRosebud.
1942CasablancaOf all the gin joints in all the towns in all the world, she walks into mine
1942CasablancaRoundup the usual suspects.
Louis, I think this is the beginning of a beautiful friendship
1942CasablancaHere is looking at you, kid
1950Sunset BoulevardAll right, Mr. DeMille, I am ready for my close-up
1951Patala BhairaviNijam Cheppamantara Abaddham Cheppamantara
1951Patala BhairaviSahasam Cheyera Dimbaka!
1952பராசக்திகோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக
1953On the WaterfrontYou don’t understand. I coulda had class. I coulda been a contender
1953DevadasKaun kambakht bardaasht karne ko peeta hai
1954மனோகராபொறுத்தது போதும் பொங்கியெழு!
1957மகாதேவிமணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி!
1958நாடோடி மன்னன்சரிதான் நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது!

இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது.

1959வீரபாண்டிய கட்டபொம்மன்வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி!
1959Some Like It HotWell, nobody’s perfect
1960PsychoA boy’s best friend is his mother
1961கப்பலோட்டிய தமிழன்சொல்லிக் கொள்ளும்! நன்றாக நானூறு முறை சொல்லிக் கொள்ளும்!
1963Dr. NoBond. James Bond
1964Dr. StrangeloveGentleman, you can’t fight here! This is the war room!
1965ஆயிரத்தில் ஒருவன்மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!

1967GraduateMrs. Robinson, you are trying to seduce me, aren’t you?
1971AnandBabumoshai, zindagi badi honi chahiye, lambi nahi
1971Dirty HarryYou gotta ask yourself one question. “Do I feel lucky?”. Well, do ya punk?
1972GodfatherI will make him an offer he can’t refuse
1972PakeezahAapke paon dekhe, bahut haseen hai. Inhe zameen par mat utariyega, maile ho jayenge
1975DeewarMeri paas maa hai
1975DeewarMain aaj bhi pheke hue paise nahin uttatha
1975SholayKitne Aadmi?
1975SholayYeh Haath Mujhe De De Thakur!
1975JawsYou’re gonna need a bigger boat
1975Monty Python and the Holy GrailAfrican swallow or European swallow?
1976NetworkI am mad as hell and I am not going to take this any more!
1976Taxi DriverAre you talking to me?
1976Apocalypse NowI love the smell of napalm in the morning
1977Star WarsMay the force be with you
1978DonDon ko pakadna mushkil hi nahi, naamunkin hai
1980தில்லுமுல்லுஅய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்!
1980தில்லுமுல்லுகாந்தி உங்க வீட்டுக்கு வந்ததும் முதல்ல என்ன பண்ணினார்?
சட்டையக் கழட்டி கோட் ஸ்டாண்டில மாட்டினார்!
1980ShiningHeeeere’s Johnny!
1982E.T.E.T. Go home
1983வைதேகி காத்திருந்தாள்என்னண்ணே உடச்சிட்டீங்க!
1984TerminatorI’ll be back
1987நாயகன்நீங்க நல்லவரா கெட்டவரா?
1987Mr. IndiaMogambo Khush Hua
1987Wall StreetGreed is good
1988Rain ManI am an excellent driver
1988அக்னி நட்சத்திரம்என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!
1989When Harry Met SallyI’ll have what she’s having
1989Dead Poet’s SocietyCarpe Diem. Seize the day. Make you life extraordinary, boys.
1990மைக்கேல் மதனகாமராஜன்நீங்களும் குக்கு, கிராமமும் குக்கா?
1991Silence of the LambsA census take once tried to test me. I ate his liver with a nice Chianti and some fava beans
1991Terminator 2Hasta la vista, baby
1992My Cousin VinnyOh, Yeah. You Blend.
1992My Cousin VinnyAnd now, Mrs. Riley. And only Mrs. Riley
1992My Cousin VinnyYou were serious about that?
1992My Cousin VinnyHowever, In 1964, the correct ignition timing would be four degrees before top-dead-center
1992A Few Good MenYou can’t handle the truth!
1992தேவர் மகன்என்ன, திங்கற கையில கழுவணும், கழுவற கையிலே திங்கணும்
1994Pulp FictionThe path of the righteous man is beset on all sides by the inequities of the selfish and the tyranny of evil men
1995Apollo 13Houston, we have a problem
1995பாட்ஷாநான் ஒரு தடவை சொன்னா நூறு முறை சொன்ன மாதிரி
1996Jerry MaguireShow me the money!
1999Sixth SenseI see dead people
2000அலைபாயுதேநீ அழகா இருக்கேன்னு நினைக்கல
2001மனதை திருடிவிட்டாய்சிங் இன் த ரைன், ஐ அம் சொய்ங் இன் த ரைன்
2003வின்னர்ஒத்துக்கிடறேன். உன் தாய் பத்தினிதான்னு ஒத்துக்கிடறேன்
2003வின்னர்என்னை இது வரை யாரும் அடிச்சதில்லை.

போன வாரம்தானே அடிச்சேன்?

அது போன வாரம், நான் சொல்றது இந்த வாரம்.

2003வின்னர்இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளம் ஆக்கிட்டாங்க!
2010நகரம்எல்லாரும் பாத்துக்கங்க, நானும் ரௌடிதான்!
2010நகரம்பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்கு
2010நகரம்என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?
20103 IdiotsAll izz well

கலைஞானம்: சினிமா சீக்ரட்ஸ்

சுவாரசியமான புத்தகம்.

கலைஞானம் அவர் வார்த்தைகளிலேயே “கலாய் பூசுபவர்”. திரைக்கதைகளில் நகாசு வேலை செய்பவர். திரைக்கதை விவாதங்களில் கலந்துகொண்டு காட்சிகளுக்கு மெருகேற்றுபவர். நாற்பது ஐம்பது வருஷமாக இந்தப் பணியை செய்கிறவர். திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல முகங்கள் இருந்தாலும் இதுவே அவரது முக்கியமான முகம்.

நிறைய திரைப்படங்கள் பார்ப்பவர். அவர் பார்க்கும் கலாய் வேலை எல்லாம் ஒரு காட்சியில் எப்படி மேலே போவது என்றால் இந்த ஆங்கிலத் திரைப்படத்தில் இப்படி மேலே போனார்கள், அந்தப் பழைய தமிழ்ப் படத்தில் அப்படி இந்த முடிச்சை அவிழ்த்தார்கள் என்று சிக்கலைத் தீர்ப்பதுதான். உதாரணமாக இயக்குனர் விக்ரமன் வானத்தைப் போல திரைப்படத்தில் கதையை மேலே நகர்த்த முடியாமல் தவித்தாராம். இவர் மிக சிம்பிளாக அட்வைஸ் செய்திருக்கிறார். பழைய அண்ணன் தம்பி பாசத் திரைப்படங்களான குலதெய்வம், அன்புச் சகோதரர்களைப் பாருங்கள், உங்களுக்கு ஐடியா கிடைக்கும் என்று. விக்ரமன் படங்களைப் பார்த்தாராம், problem solved!

அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.

ரஜினிகாந்த் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த பைரவி என்ற திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் வெளிவந்தபோது நான் சின்னப் பையன். பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். நன்றாக ஓடவும் செய்தது. ரஜினி அதை இன்னும் மறக்கவில்லை என்கிறார்.

எப்படி இருப்பார் என்று யோசிப்பவர்களுக்காக: இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாக்யராஜை ஐயராக நடி என்று தூண்டிவிடும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

1950களில் இருந்தே திரைப்படங்களோடு தொடர்பு கொண்டவர். கார் ஓட்டும் ட்ரைவர் உட்பட பல வேலைகளைப் பார்த்திருக்கிறார். பெரும் பணக்காரர் ஆகிவிடவில்லை என்றாலும் தயாரிப்பாளர் நிலைக்கும் உயர்ந்திருக்கிறார். (வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று படித்தேன்.)

தான் பார்த்தவர்கள், நேரடி அனுபவங்களை சுவாரசியமாக நக்கீரன் பத்திரிகையில் தொடராக எழுதி வந்திருக்கிறார். அதுதான் இந்த சினிமா சீக்ரட்ஸ் புத்தகம். யாரைப் பற்றியும் குறை சொல்லிவிடக் கூடாது, அதுவும் குறிப்பாக அதிகாரமும் தாக்கமும் உடைய ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி, தேவர் போன்றவர்களைப் பற்றி எதுவும் குறைவாக சொல்லிவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்ச்சி தெரிந்தாலும் உண்மையாக இருக்கிறது.

சிறு வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம். அவரது உறவினரான கே.பி. காமாட்சி சினிமா உலகத்தில் இருந்தவர். (பராசக்தியில் பூசாரியாக நடித்தவர்) “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே“, “தேனுண்ணும் வண்டு” உட்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். அவரைப் பிடித்தால் சினிமாவில் நுழையலாம் என்று அவரைத் தேடி வந்திருக்கிறார். கே.பி. காமாட்சிக்கோ அப்போது தேய்முகம். குடியால் வந்த வினை. ஆனால் மதிப்பு இருந்திருக்கிறது. அவர் இறந்தபோது அவர் பிணத்தை எம்ஜிஆரும் என்எஸ்கேயும் தூக்கி வந்திருக்கிறார்கள்.

எப்படியோ கார் ட்ரைவராக தொத்திக் கொண்டுவிட்டார். கஷ்ட வாழ்வுதான். அறுபதுகளில் பத்து ரூபாய் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. ஊருக்கே திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெய்ஷங்கர் நடித்த காதல் படுத்தும் பாடு என்ற வெற்றித் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார். (தப்பித் தவறிக் கூட பார்த்துவிடாதீர்கள்.) வெகுளிப்பெண் என்ற திரைப்படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது. பிறகு குறத்தி மகன் என்ற திரைப்படம். கதை எழுதுபவர் என்ற பெயர் கிடைத்துவிட்டது.

தேவர் தன்னுடைய கதை இலாகாவில் மா.ரா., தூயவன் ஆகியவர்களோடு இவரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். தேவரைப் பற்றி வெகு சுவாரசியமாக எழுதுகிறார். தேவர் பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்தாராம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பழனி முருகனுக்கு கட்டப்பட்ட கோவணத்தை வாங்கி நனைத்து அதைப் பிழிந்து தண்ணீராகக் குடிப்பாராம். காரியம் நடக்கவில்லை என்றால் முருகனை கன்னாபின்னாவென்று திட்டுவாராம். எம்ஜிஆரோடு நெருக்கம் இருந்தபோதும் அவர் அதிமுக ஆரம்பித்தபோது அரசியல் அழுத்தத்தால் அவரை வைத்து படம் எடுப்பதை நிறுத்திவிட்டாராம். அதிமுக முதன்முதலாக பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு நின்றபோது தேவர் பணம் கொடுத்தாராம், ஆனால் அதை எம்ஜிஆர் மறுத்துவிட்டாராம். கே.ஆர். விஜயா தரப்பிலிருந்து பணம் வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டாராம்.

தேவர் தினமும் கதை கேட்பாராம். அதில் தனக்குப் பிடித்த ஐடியாக்களை எடுத்துக் கொள்வாராம். அதனால் இவர் போன்றவர்களுக்கு தினமும் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அது நல்ல பயிற்சியாக அமைந்தது என்கிறார்.

அப்படி ஓஹோ என்று இருந்த தேவருக்கும் கடைசி காலத்தில் கடன் தொல்லை. ரஜினியை வைத்து படம் எடுப்பதாக இருந்தாராம், ஆனால் அதற்குள் இறந்துவிட்டாராம். தேவர் போன பிறகும் பத்து வருஷமாவது தேவர் ஃபில்ம்ஸ் ஓடி இருக்கிறது. ஆனால் தேவர் ஃபில்ம்ஸுக்காக பல படங்களை இயக்கிய தேவரின் மாப்பிள்ளை தியாகராஜன், மற்றும் தேவரின் மகன் தண்டபாணி எல்லாரும் நொடித்துப் போனார்கள் என்கிறார். தண்டபாணி குடும்பத்தின் மருத்துவச் செலவுகளை நடிகர் சிவகுமார் ஏற்றுக் கொண்டாராம். ஆச்சரியமாக இருந்தது. தேவர் தன் படத்தில் வேலை செய்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே முழுச் சம்பளத்தை கொடுத்துவிடுவார் என்று படித்திருக்கிறேன். ராஜேஷ் கன்னாவுக்கு ஹாத்தி மேரா சாத்தி படத்தில் நடிக்க விருப்பமில்லை, ஆனால் தேவர் கொடுத்த பணத்தை மறுக்க முடியவில்லை, அதை வைத்துத்தான் தன் கனவு வீட்டைக் கட்டினார் என்பார்கள். (அந்த வீடு ராஜேஷ் கன்னா இறப்புக்குப் பிறகு 120 கோடிக்கு விற்கப்பட்டது.) தனக்கும் ஒரு வீட்டை கட்டிக் கொள்ளவில்லையா என்றுதான் தோன்றியது.

இந்தக் காலகட்டத்தில் பாக்யராஜ் இவருக்கு உதவியாளராக சேர்ந்திருக்கிறார். ஆனால் இவரது பாணி திரைக்கதைகள் பிடிக்காமல் ஓடிவிட்டாராம். ஆனால் எப்போதும் இவரை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறாராம்.

கே.பி. சுந்தராம்பாளின் வீட்டில் குடியிருந்திருக்கிறார். கேபிஎஸ்ஸுக்கு அப்போது குடும்பத்தோடு தகராறு. இவர் மனைவிதான் சமைத்துப் போட்டிருக்கிறார். அதுவும் கேபிஎஸ் ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் சாப்பிடுவாராம். பன்னிரண்டு மணிக்கு முன்னால் இலை போட்டாக வேண்டும். ஒரு நாள் தாமதமாகி கலாட்டா நடந்திருக்கிறது. கேபிஎஸ் இறந்த பிறகு இவர்தான் சொத்துக்களை பிரித்துக் கொடுக்கும் executor ஆக பணி புரிந்திருக்கிறார்.

சிவாஜியோடு பணி புரிந்த மிருதங்க சக்ரவர்த்தி திரைப்படம் நன்றாக ஓடிற்றாம். ஆனால் ராஜரிஷி படத்தை எடுத்து கையை சுட்டுக்கொண்டாராம். 1985-இலேயே ஒரு கோடி செலவாயிற்றாம். சிவாஜியே இந்தக் கதை இன்று ஓடாது, வேண்டாம் என்று சொன்னார், நான் கேட்காமல் படம் எடுத்து நஷ்டப்பட்டேன் என்கிறார்.

பல வருத்தங்கள்; உதாரணமாக தேவர் மகன் திரைப்படத்தில் இவரது பங்களிப்புக்கு கமல் சரியான சம்பளம் கொடுக்கவில்லையாம். (முதலில் இவர்தான் காக்கா ராதாகிருஷ்ணன் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்ததாம்.) ரஜினி இவருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று சொன்னவர் செய்யவில்லையாம். ஆனால் எதையும் பெரிதுபடுத்தவில்லை என்கிறார்.

தமிழ் சினிமா உலகம் சுவாரசியமானது. இவர் போன்றவர்கள் வெளியே தெரிவதில்லை. ஆனால் அதன் நாடி நரம்புகளைப் பார்க்கிறார்கள். அனுபவங்களை உண்மையாக வெளிப்படுத்தும்போது எந்த முயற்சியும் இல்லாமல் புத்தகம் நன்றாக வந்துவிடுகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

திரைப்படம்: மார்ஷல்

மார்ஷல் திரைப்படம் (2017) அமெரிக்க வரலாற்றின் ஒரு கணத்தை காட்டுகிறது. சாட்விக் போஸ்மன், ஜோஷ் காட் நடித்து ரெஜினால்ட் ஹட்லின் இயக்கியது.

தர்குட் மார்ஷல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பர் இன நீதிபதி. Brown vs Board of Education என்ற புகழ் பெற்ற வழக்கில் வாதாடி Separate But Equal என்பது இனவெறிக் கருத்தாக்கம் என்று புரிய வைத்தவர்.

திரைப்படம் காட்டும் காலத்தில் மார்ஷல் NAACP (National Association for the Advancement of Colored People) அமைப்பின் ஒரே வக்கீல். கறுப்பர்கள் மேல் அநியாயமான வழக்குகள் போடப்படும் இடங்களில் சென்று அவர்களுக்காக வாதாடுகிறார். கனெக்டிகட் மாகாணத்தில் ஒரு கறுப்பர் – ஜோசஃப் ஸ்பெல் – வெள்ளைக்காரப் பெண்ணை – திருமதி ஸ்ட்ரூபிங் – கற்பழித்து கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மார்ஷல் வாதிடச் செல்கிறார்.

திருமதி ஸ்ட்ரூபிங் பண்க்கார, மேல்தட்டு குடும்பத்தவர். ஸ்பெல் அவரது கார் டிரைவர். கணவர் ஸ்ட்ரூபிங் வெளியூர் சென்றிருக்கும் ஒரு இரவில் ஸ்பெல் கத்தி முனையில் தன் எஜமானியைக் கற்பழித்து பிறகு அவரை ஒரு பாலத்தின் மீதிருந்து தண்ணீரில் தூக்கி எறிந்து கொலை செய்ய முயன்றதாக வழக்கு. ஸ்பெல் அன்று இரவு முழுவதும் தான் பழக்கம் இல்லாத சிலரிடம் சீட்டாடிக் கொண்டிருந்ததாக சொல்கிறார், ஆனால் அவரிடம் அதை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை.

நீதிமன்ற முறைமைகளின்படி மார்ஷலுக்கு ஒரு உள்ளூர் வக்கீலின் உதவி தேவைப்படுகிறது. ஃப்ரீட்மன் என்ற வக்கீல் மாட்டுகிறார். ஆனால் நீதிபதி மார்ஷல் நீதிமன்றத்தில் வாயையே திறக்கக் கூடாது, ஃப்ரீட்மன்தான் வாதிடலாம், விசாரணை செய்யலாம் என்று உத்தர்விட்டுவிடுகிறார். ஃப்ரீட்மனுக்கு இது போன்ற கிரிமினல் வழக்குகளில் அனுபவமில்லை. மேலும் அவர் வெள்ளையர். இந்த வழக்கு தன் எதிர்காலத்தை பாதிக்கலாம் என்று பயப்படுகிறார். ஆனால் மார்ஷலின் தாக்கத்தால் தொடர்கிறார். ஃப்ரீட்மன் யூதரும் கூட. இனவெறி அவரால அடையாளம் காணப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அரசு தரப்பு வழக்கு வலுவாக இருக்கிறது. நீதிபதியும் வெள்ளையர் பக்கம் மனச்சாய்வு கொண்டவர். முழுக்க முழுக்க வெள்ளையர்களால் நிறைந்த ஜூரி குழு. டாக்டர் கற்பழிப்பு நடந்திருக்கிறது, திருமதி ஸ்ட்ரூபிங்கின் நகங்களில் கறுப்புத் தோல் துணுக்குகள் இருந்தன என்று சாட்சி சொல்கிறார். சில ஓட்டைகள் தெரிந்தாலும் வழக்கு அரசு தரப்பிற்கு சாதகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

ஸ்பெல், திருமதி ஸ்ட்ரூபிங் இருவருமே பொய் சொல்கிறார்கள் என்பதை மார்ஷல் உணர்கிறார். திருமதி ஸ்ட்ரூபிங் தாற்காலிக பலவீனத்தால் ஸ்பெல்லுடன் விரும்பியே உறவு கொண்டார், பிறகு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார், தான் தப்பிப்பதற்காகவே ஸ்பெல் மீது குற்றம் சாட்டுகிறார் என்று யூகிக்கிறார். ஸ்பெல்லை அதட்டி கேட்கும்போது ஸ்பெல்லும் வெள்ளை இனப் பெண்ணோடு பரஸ்பர சம்மதத்தோடு உறவு என்ற சொல்லப் பயந்துதான் இரவு முழுவதும் வெளியே சீட்டாடிக் கொண்டிருந்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தேன் என்று ஒத்துக் கொள்கிறார்.

குற்க்கு விசாரணையில் திருமதி ஸ்ட்ரூபிங் ஒரு போலீஸ்காரரை உதவிக்கு சுலபமாக கூப்பிட்டிருக்கலாம், ஆனால் அவர் கூப்பிடவில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது. வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு ஸ்பெல் குற்றமற்றவர் என்று ஜூரி குழு தீர்ப்பளிக்கிறது.

உண்மையான ஃப்ரீட்மன்தான் வழக்கை நடத்தினார், மார்ஷல் அவருக்கு ஆலோசகராக இருந்தார் என்று எங்கோ படித்தேன். திரைப்படத்தில் மார்ஷலின் திட்டங்கலை ஃப்ரீட்மன் நிறைவேற்றுகிறார், அவ்வளவுதான். ஆனால் மார்ஷல் இது போன்ற பல வழக்குகளை நடத்தி இருக்கிறார். அவரது வழக்கு அனுபவங்களின் பிரதிநிதியாக இந்த வழக்கை திரை வடிவமாக்கினார்களாம்.

திரைப்படம் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஃப்ரீட்மனாக நடித்திருக்கும் ஜோஷ் காட் கலக்கி இருக்கிறார். மார்ஷலாக நடிக்கும் சாட்விக் போஸ்மனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார். நடிப்பு, திரைக்கதை இரண்டுக்காகவுமே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

பாயசம் (தி. ஜானகிராமன்) குறும்படம்

மேம்படுத்தப்படுத்தி மீண்டும் பதிப்பதற்கு ஒரே காரணம்தான். நெட்ஃப்ளிக்சில் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் டெல்லி கணேஷ், ரோஹிணி, அதிதி பாலன் நடித்து இந்த சிறுகதை வெளியாகி இருக்கிறது.

இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்த வசந்துக்கு ஒரு ஜே!

நவரசாவின் எல்லா அத்தியாயங்களையும் நான் பார்த்து முடிக்கவில்லை. பார்த்தவற்றுள் பலவும் சுமார்தான். ஆனால் இந்த நிகழ்ச்சி (episode) பிரமாதம். அபாரமான சிறுகதையோடு சிறந்த நடிப்பும் சேர்ந்துவிட்டால் இது போன்ற குறும்படங்கள் எங்கேயோ போய்விடுகின்றன.

டெல்லி கணேஷின் நடிப்பு மிக அருமை. ஆங்காரத்தை, தானும் தன் குடும்பமும் தாழ்ந்திருப்பதை அருமையாகக் காண்பித்திருக்கிறார். அதிதி பாலன் கடைசியில் டெல்லி கணேஷைப் பார்க்கும் பார்வைக்கே முழு பைசா வசூல். துணைப் பாத்திரங்களாக வருபவர்களும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மணப்பெண்ணாக வருபவர், அவருடைய மகிழ்ச்சியும் அக்காவிடம் இருக்கும் அன்பும் பிரமாதமாக வந்திருக்கிறது; மற்றும் காத்தாடி ராமமூர்த்தி. “இது என்ன காப்பியா” என்று கேட்டால் “அப்படித்தான் சொல்றா” என்று அவர் பதில் சொல்வது இன்னாளில் அழிந்து கொண்டிருக்கும் அக்மார்க் தஞ்சாவூர் பிராமணக் குசும்பு.

இரண்டாவதாக அந்த கல்யாணக் காட்சியை படமாக்கி இருக்கும் விதம். நான் இளமையில் பார்த்த திருமணங்களை கண் முன் கொண்டு வந்துவிட்டது. அதுவும் அந்த ஜமக்காளம்! அந்த மாதிரி ஒரு ஜமக்காளத்தைப் பார்த்து பல வருஷம் ஆயிற்று.

பாயசம் சிறுகதையைப் பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது? தி.ஜா.வின் முழு வீச்சும் வெளிப்படும் சிறுகதை. மனித மனத்தின் அசூயையை, பொறாமையை, உறவுகளுக்குள்ளே இருக்கும் அகங்காரப் (ego) பிரச்சினைகளை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது. தவறவிடாமல் படியுங்கள்!

இந்த சிறுகதையை ஜெயமோகன், எஸ்.ரா. இருவரும் சிறந்த தமிழ் சிறுகதை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி. ஜானகிராமன் பக்கம், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: பாயசம் சிறுகதை

சார்பட்டா பரம்பரை

மாறுதலுக்காக இன்று ஒரு திரைப்படத்தைப் பற்றி.

சார்பட்டா பரம்பரை சமீப காலத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் ஒன்று. விளையாட்டை பின்புலமாகக் கொண்ட நல்ல திரைப்படங்களில் ஒன்று.

படத்தின் பலம் திரைக்கதை; பின்புலம்; நடிப்பு; புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகள்; ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள்.

குத்துமதிப்பாக 1975-1977 காலத்தை பெரிய செட் எல்லாம் போடாமல் (ஒரே ஒரு மணிக்கூண்டு செட்), சிகை அமைப்பு, மீசை, ஆடைகள், சிறு திண்ணைகள் உள்ள கூரை வீடுகள் என்று திறமையாகக் கொண்டு வந்துவிட்டார்கள். குத்துச்சண்டை அரங்க செட்டும் நன்றாக இருக்கிறது.

விளையாட்டு திரைப்படங்களுக்கு அடிப்படைக் கதை ஒன்றேதான். நாயகன்/நாயகி பலவீனங்கள் உள்ள, அனேகமாக அனுபவம் இல்லாத ஒரு போட்டியாளன் – underdog. அவனு(ளு)க்கு எதிராக மிக வலுவான, உச்சியில் இருக்கும் போட்டியாளன். ஜெயிக்க வாய்ப்பே இல்லை. இதில் நாயகன்/நாயகிக்கு போட்டியிடுவதில் பல இன்னல்கள் வரும். எப்படியோ கடைசியில் நாயகன்/நாயகிக்கு வெற்றி. இதே கதையைத்தான் Rocky, Bend It Like Beckham, Tin Cup, ஜோ ஜீத்தா வொஹி சிக்கந்தர், லகான் மாதிரி எல்லா படங்களிலும் வேறு வேறு திரைக்கதைகளாகக் காட்டுகிறார்கள். பலமுள்ள கரு. தன்மீட்பு (redemption), போராட்டம் எல்லாவற்றையும் சுலபமாகக் கொண்டு வந்துவிடலாம்.

சார்பட்டா பரம்பரைக்கும் அதே மூலக்கதைதான். வடசென்னை பின்புலம். குத்துமதிப்பாக 1975-1977 காலம். நெருக்கடி நிலை இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இன்னும் தி.மு.க. ஆட்சி. குத்துச்சண்டை வீரர்கள் பல குழுக்களாக – சார்பட்டா, இடியாப்பம் என்று பல பரம்பரைகள் – தீவிர போட்டியில் இருக்கிறார்கள். குத்துச்சண்டை தெரிந்தவர்கள் சுலப்மாக ரௌடிகளாக மாறமுடிகிறது. குத்துச்சண்டையில் ஆர்வம் உள்ள, ஆனால் குத்துச்சண்டையில் ஈடுபடக் கூடாது என்று அம்மாவால் தடுக்கப்பட்டிருக்கும் நாயகன் கபிலன். சார்பட்டா பரம்பரையோது தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்பவன். தி.மு.க. சார்புடைய ரங்கன் வாத்தியாருக்கு ஏகலைவன். இடியாப்ப பரம்பரையின் வேம்புலியை யாராலும் வெல்ல முடியவில்லை. வாத்தியார் கேவலப்படக் கூடாது என்று கபிலன் குத்துச்சண்டையில் இறங்குகிறான். இயற்கையாகவே நன்றாக ஆடமுடிகிறது. யாரும் எதிர்பார்க்காத முறையில் சார்பட்டா பரம்பரையின் அன்றைய முதல் வீரனான ராமனை அடித்து நொறுக்குகிறான். ரங்கன் வாத்தியார் அவனை போட்டியில் இறக்குகிறார். இடியாப்ப பரம்பரையின் முக்கிய வீரனான ரோஸை வென்றுவிடுகிறான். வேம்புலியோடு போட்டியில் வேம்புலியின் தோல்வி உறுதி என்ற நிலையில் ராமனின் சித்தப்பா ஒருவனே கலவரத்தை உண்டாக்கி போட்டியை நிறுத்துகிறான். ரங்கன் வாத்தியார் மிசாவில் சிறை செல்கிறார். ஒரு கைகலப்பில் கபிலன், ரங்கன் வாத்தியாரின் மகன் வெற்றி சிறையில். வெளியே வந்ததும் கள்ளச் சாராயம், ரௌடித்தனம், குடி என்று கபிலன் வாழ்க்கை மாறுகிறது. வேம்புலி மீண்டும் வெற்றிகளை அடைந்தாலும் கபிலனிடம் தோற்கும் நிலையில் இருந்த அவமானம் நீங்கவில்லை. மீண்டும் சவால் விடுகிறான். ஆனால் கபிலன் இன்று தொப்பையோடு குத்துச்சண்டை போடும் நிலையில் இல்லை. பழைய போட்டியாளன் ராமனே அவனை அடித்து நொறுக்குகிறான். ரங்கன் வாத்தியார் அவனுக்கு பயிற்சி தர மறுக்கிறார். எப்படியோ மீண்டும் உடல்நிலை தேறி, கடும் சண்டையில் வென்று, தன்மீட்பு (redemption)!

மூலக்கருவை கெடுப்பது சுலபம். அதுவும் இடைவேளை சமயத்திலேயே நாயகன் வெல்லும் காட்சி. அப்புறம் படத்தை எப்படித் தொடர்வது? தன்மீட்பு என்ற கருவை எப்படிக் கொண்டு வருவது? திறமையாக நெருக்கடி நிலை, கபிலனைக் கட்டுப்படுத்தக் கூடிய வாத்தியார் மிசாவில் சிறை செல்வது, கபிலன் திசை மாறுவது, நாயகனுக்கு தொப்பை விழுவது, அப்பாவின் பழைய நண்பர் பயிற்சி அளிப்பது, ஆக்ரோஷமான இறுதி சண்டை காட்சி என்று கதையை கொண்டு போயிருக்கிறார்கள். முதல் பாதியோ இரண்டாம் பாதியை விட விறுவிறுப்பானது. பாக்சிங் பக்கம் போகக் கூடாது என்று தடுக்கும் அம்மா, தற்செயலாக நடக்கும் சண்டை, மாமா மகளோடு திருமணம், டான்சிங் ரோஸ் பாத்திரம், ரோசின் உடல்மொழி, குத்துச்சண்டை பாணி, ரோசுடன் நடக்கும் சண்டை, வேம்புலியுடன் முதல் சண்டை,சார்பட்டா உள்ளிட்ட பரம்பரைகளில் வரலாறு எல்லாவற்றையும் பின்னி இருக்கிறார்கள்.

ஆர்யா தான் இனி எதற்கும் லாயக்கில்லையா என்று உடைந்து அழும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் சஞ்சனா கல்க்கிவிட்டார். அம்மாவாக வருபவரும். பசுபதி விறைப்பான உடல்மொழி, இஸ்திரி கலையாத ஜிப்பா, கரைவேட்டி, துண்டு வைத்தே சிறப்பாக நடிக்கிறார். டான்சிங் ரோசின் உடல்மொழி அபாரம். கலையரசனின் பாத்திரப் படைப்பு அருமை. அப்பாவே தனக்கு வாய்ப்பை மீண்டும் மீண்டும் மறுப்பதில் ஏற்படும் ஆங்காரம்; கள்ளச் சாராயம் என்று வாழ்க்கை திரும்பும்போது ஆர்யா தனக்கு கட்டுப்படுவதில் ஏற்படும் சிறு மகிழ்ச்சி; ஆனால் அப்பாவே மறுத்தாலும் ஆர்யாவுக்கு துணை நிற்பது என்று பல வித shades of grey உள்ள பாத்திரம். வேம்புலியின் குரு துரைக்கண்ணு வாத்தியார், போட்டிகளை நடத்தும் காளி வெங்கட், நேர்முக வர்ணனை தரும் தங்கதுரை என்று பலரும் திறமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக துரைக்கண்ணு வாத்தியாராக வருபவர்.

ஆனால் எல்லாரையும் தூக்கி சாப்பிடுபவர் ஜான் விஜய். அவரது ஆங்கிலமும் உச்சரிக்கும் விதமும் அபாரம். அடுத்தபடியாக சொல்ல வேண்டியவர் ஆர்யாவின் மனைவி சஞ்சனா; ஆர்யாவின் அம்மா; டான்சிங் ரோஸ்; பசுபதி.

பசுபதி இரண்டாம் பகுதியில் குறைந்த நேரமே வருகிறார். அதை அதிகபப்டுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்கள் என்னை பெரிதாகக் கவரவில்லை. சில சமயம் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். அந்த ரகமோ என்னவோ.

பா. ரஞ்சித் இயக்கிய திரைப்படங்களில் அட்டக்கத்தி திரைப்படம் அளவுக்கு வேறு எந்தப் படமும் வரவில்லை என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. இதில் அதை மிஞ்சிவிட்டார்.

ரஞ்சித் தனது படங்களில் அம்பேத்கார் படம், மாட்டுக்கறி பற்றி ஒரு வரி ஆகியவற்றை குறியீடுகளாக அடிக்கடி பயன்படுத்துவார். அதை ஏன் இப்படி சின்ன குறியீட்டுக் காட்சியாக பயன்படுத்த வேண்டும், பெரிதுபடுத்தினால் படம் போரடிக்கும் என்று நினைக்கிறாரா என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. இதிலும் ஓரிரு நொடிகளே வரும் குறியீட்டுக் காட்சிகள்தான்.

ஹாலிவுட்டில் சில சமயம் திரைப்படம் வந்த பிறகு அதை நாவலாக வெளியிடுவார்கள். ரஞ்சித் இந்தத் திரைப்படத்துக்கும் அப்படி செய்யலாம். (ஆனால் ஒரிஜினல் புத்தகங்களே தமிழ் நாட்டில் விற்பது கஷ்டம்தான்…)

நல்ல திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

ஹசீன் தில்ரூபா திரைப்படத்தின் முடிச்சு

நெட்ஃப்ளிக்ஸில் டப்ஸி பன்னு நடித்து ஹசீன் தில்ரூபா என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

திரைப்படத்தின் முடிச்சு ரொவால்ட் டால் எழுதிய ஒரு சிறுகதைதான் – Lamb to the Slaughter (1953) சிறுகதையைப் படித்தபோது பத்தோடு பதினொன்று என்றுதான் தோன்றியது. ஆனால் டாலின் எழுத்து திரைப்படமாக்க எப்போதும் ஏற்றது. மடில்டா, Fantastic Mr. Fox, ஏன் நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் பூர்ணம் விஸ்வநாதன் ரஜினிகாந்தோடு ஜெயித்தால் கார், தோற்றால் கட்டைவிரலை வெட்டிவிடுவேன் என்று வைக்கும் பந்தயக் காட்சி (Man from the South)என்று பல சொல்லலாம். இந்தத் திரைப்படத்தில் இந்திய சூழ்நிலைக்கேற்ற மசாலா கலந்து நன்றாக வந்திருக்கிறது. கதையை சொல்லிவிட விரும்பவில்லை, ஆனால் நம்பகத்தன்மை குறைவான காட்சிகள் கூட உறுத்தவில்லை.  டப்ஸி, நாயகன் விக்ராந்த் மாஸ்ஸி, நாயகனின் அம்மாவாக நடிப்பவர் கலக்கி இருக்கி இருக்கிறார்கள்.

ரொவால்ட் டாலின் படைப்புகளில் தவறவே விடக்கூடாதது BFG.

திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் சிறுகதையையும் படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலகப் புனைவுகள், திரைப்படங்கள்