Around the World In 80 Days

ஜூல்ஸ் வெர்னின் மிகப் பிரபலமான நாவல். 1872-இல் வெளிவந்தது.

பத்து பனிரண்டு வயதில் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றைப் படித்த நினைவு இன்னும் இருக்கிறது. ஃபிலியஸ் ஃபாக் கப்பல், ரயில், யானை, பனியில் செல்லும் “படகு” என்று பலவற்றிலும் மாறி மாறி பயணிப்பது, ஏடன், ப்ரிண்டிஸி, சிங்கப்பூர், ஹாங்காங், ஷாங்காய், யோகஹாமா, சான் ஃப்ரான்சிஸ்கோ, சிகாகோ, நியூ யார்க், லிவர்பூல், லண்டன் என்று என்னவோ பல கேள்விப்பட்டே இராத exotic நகரங்களின் பேர்கள், கடைசியில் அந்த முத்தாய்ப்பு (climax) எல்லாம் மனதைக் கவரந்தன. அட்சரேகை, தீர்க்கரேகை எல்லாம் அப்போதுதான் பாடப்புத்தகத்தில் பேசப்பட்டன, ஒவ்வொரு டிகிரிக்கும் நாலு நிமிஷம் நேரம் முன்னால் நகரும் என்று படித்திருந்தாலும் இந்தப் புத்தகம்தான் அதை தலையில் நன்றாக ஏற்றியது. ஆனால் பின்னாளில் ஆங்கிலத்தில் தேடிப் பிடித்து படித்தபோது அந்த மன எழுச்சி உண்டாகவில்லை.

இன்று உலகம் சுருங்கிவிட்டது. 80 நாள் என்ன, 8 நாளில் நாலு முறை உலகை சுற்றி வரலாம். மேலும் என் கண்ணில் ஜூல்ஸ் வெர்ன் காலாவாதி ஆகிக் கொண்டிருக்கும் எழுத்தாளர். காலாவதி ஆகிவிட்டார் என்று கூட சொல்லலாம். அதனால் மீண்டும் படித்துப் பார்ப்பதில் அத்தனை உற்சாகம் இல்லைதான். எப்படியோ மனதைத் தேற்றிக் கொண்டு படித்தேன்.

புத்தகம் ஏன் வெற்றி பெற்றது என்று நன்றாகவே புரிந்தது. இப்போது கூட கொஞ்சம் மன எழுச்சி உண்டாகத்தான் செய்கிறது. ஃபிலியஸ் ஃபாகின் சித்திரம் caricature-தான், ஆனாலும் சுவாரசியமாக இருக்கிறது. கடைசி முத்தாய்ப்பு இன்றும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்று இந்த நாவலுக்கு இருப்பது curiosity value மட்டுமே.

என்ன கதை? ஃபிலியஸ் ஃபாக் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ஆங்கிலேயர். எல்லாம் ஒழுங்காக சொன்ன நேரத்தில் சொன்னபடி நடக்க வேண்டும். தன் நண்பர்களிடம் 80 நாளில் உலகைச் சுற்றி பயணிக்க முடியும் என்று பந்தயம் வைக்கிறார்.

அன்று அது கஷ்டம்தான்; லண்டனிலிருந்து கப்பல்கள் மாறி சூயஸ் கால்வாய் வழியாக பம்பாய் செல்ல வேண்டும்; பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கு அப்போதுதான் ரயில் பாதை போடப்பட்டிருக்கிறது. கல்கத்தாவிலிருந்து ஹாங்காங்கிற்கு ஒரு கப்பல்; ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்கு இன்னொரு கப்பல்; ஜப்பானிலிருந்து சான் ஃப்ரான்ஸிஸ்கோவிற்கு இன்னொரு கப்பல் பயணம்; அமெரிக்காவில் அப்போதுதான் மேற்குக் கடற்கரையிலிருந்து நியூ யார்க் வரை ரயில் பயணம்; நியூ யார்க்கிலிருந்து லிவர்பூல்; லிவர்பூலிலிருந்து லண்டனுக்கு ரயில். ஒரு இடத்தில் மாறுவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டாலும் 80 நாளுக்கு மேலே தேவைப்படும்.

தன் வேலைக்காரன் பாஸ்பார்த்தூவோடு ஃபாக் கிளம்புகிறார். பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார். காவல்துறை அதிகாரி ஃபிக்ஸ் ஃபாக் வங்கியிலிருந்து பணத்தை திருடியவர் என்று தவறாக சந்தேகிக்கிறான். ஆனால் கைது செய்ய தேவைப்படும் warrant கிடைப்பதில் தாமதம், அதனால் ஃபாகைத் தொடர்கிறான்.

பம்பாயிலிருந்து கல்கத்தா போவதில் சிக்கல். ஃபாக் நம்பி இருந்த செய்தித்தாள் தகவல் தவறு, ரயில் பாதை போடுவது இன்னும் முடியவில்லை, நடுவே கொஞ்ச தூரம் பயணிகள் தானே ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டு அலஹாபாத் போக வேண்டும். ஃபாக் ஒரு யானையை வாங்கி பயணம் செய்கிறார். நடுவில் உடன்கட்டை ஏற பலவந்தப்படுத்தப்படும் ஔதாவைக் காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

ஃபிக்ஸ் ஹாங்காங் வரை தொடர்கிறான், வாரண்ட் இன்னும் அவன் கைக்கு வரவில்லை. ஹாங்காங்கில் அவன் சதியால் ஃபாக் தன் போக வேண்டிய கப்பலில் ஏற முடியவில்லை. இதனால் சான் ஃபரான்ஸிஸ்கோ செல்ல வேண்டிய கப்பலை தவற விடும் அபாயம். ஆனால் ஃபாக் இன்னொரு சிறு கப்பலை தனக்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்து கொண்டு போய் அந்தக் கப்பலை பிடித்துவிடுகிறார்.

இப்போது ஃபாக் ஆங்கில காலனிகளுக்கு வெளியே. ஃபிக்ஸால் அவரை கைது செய்ய முடியாது. அதனால் ஃபிக்ஸ் அவரை தாமதப்படுத்தும் முயற்சிகளை கைவிடுகிறான். அவர் சீக்கிரம் இங்கிலாந்து சென்றடைய தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறான்.

ஃபாக் அமெரிக்கா வருகிறார். ரயில் பயணத்தில் செவ்விந்தியர்கள் ரயிலைத் தாக்குகிறார்கள். அபாயகரமான நிலையில் ஒரு பாலம். சிறு தாமதங்களால் லிவர்பூல் செல்லும் கப்பலைத் தவறவிடுகிறார்கள்.

ஃபாக் மீண்டும் இன்னொரு கப்பலைப் பிடிக்கிறார். அந்தக் கப்பலை வாங்கியே விடுகிறார். நிலக்கரி தீர்ந்து போகும் நிலையில் கப்பலில் உள்ள மரச்சாமான்கள், பாய்மரங்கள் எல்லாவற்றையும் எரித்து லிவர்பூல் வந்து சேர்கிறார்.

லிவர்பூலில் இறங்கியதும் ஃபிக்ஸ் ஃபாகை கைது செய்கிறான். இரண்டு மணி நேரம் கழித்து தன் தவறு புரிகிறது. ஃபாக் தனக்கென்று ஒரு பிரத்தியேக ரயில் ஏற்பாடு செய்து கொண்டு லண்டன் வருகிறார். ஆனால் அவர் லண்டன் வந்து சேரும்போது அவர் சொன்ன கெடுவுக்கு மேல் சில நிமிஷங்கள் சென்றுவிடுகின்றன.

பந்தயத்தில் தோற்றோம் என்று ஃபாக் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். ஆனால் ஃபாக் கிழக்கிலிருந்து மேற்காகப் பயணித்திருக்கிறார். அமெரிக்காவில் எனக்கு இரவு எட்டு மணி என்றால் இந்தியாவில் காலை ஒன்பதரை மணி அல்லவா? அதனால் ஃபாக் வந்து சேர்ந்தது 79-ஆவது நாளில். அதை கடைசியில் உணர்ந்து சரியான நேரத்திற்கு போய்விடுகிறார். ஔதாவை மணக்கிறார். சுபம்!

எளிய சூத்திரத்தை வைத்து எழுதப்பட்ட நாவல்தான். உலக வரைபடத்தையும் நாடுகளின் எளிய சித்திரத்தையும் வைத்துக் கொண்டு சுலபமாக எழுதிவிடலாம். ஆனால் விறுவிறுப்பாக செல்கிறது. இன்றும் பதின்ம வயதினருக்குப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. காலாவதி ஆகிவிட்டதோ என்று சந்தேகித்தாலும் என் கண்ணில் இன்னும் வசீகரிக்கும் நாவல் (charming).

நாவல் எழுதப்பட்டது 1872-இல். சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது 1869-இல்; அமெரிக்காவில் பசிஃபிக் கடற்கரையையும் அட்லாண்டிக் கடற்கரையையும் இணைக்கும் ரயில் பாதைகள் (transcontinental railway) கட்டப்பட்டதும் 1869-இல். பம்பாய்-கல்கத்த ரயில் பாதை போடப்பட்டது 1870-இல். அதற்கு முன் இப்படி 80 நாள் உலகப் பயணம் சாத்தியமே இல்லை.

1956-இல் டேவிட் நிவன் ஃபிலியஸ் ஃபாகாக நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றது.

படியுங்கள், பத்து பதினோரு வயது சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சிறுவர் புத்தகங்கள்

இந்தப் பதிவில் சில miscellaneous சிறுவர் புத்தகங்கள். இவை எல்லாவற்றையும் ஒரு பத்து பனிரண்டு வயதிற்குள் படிப்பது நலம். நான் மனதளவில் வளரவே இல்லை என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு, அது இந்த மாதிரி புத்தகங்கள் எனக்கு இன்னும் பிடித்திருப்பதால்தான்.

  • Scarlet Pimpernel கதைகள்: பாரனஸ் ஆர்க்சி எழுதிய ஸ்கார்லெட் பிம்பர்னல் கதைகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரிய வெற்றி பெற்றன. முதல் நாவலான Scarlet Pimpernel 1903-இல் வந்தது. பிறகு பத்து பனிரண்டு நாவல்கள் வந்தன. ரெஞ்ச் புரட்சி காலத்தில் நடப்பதாக வடிவமக்கைப்பட்ட ஃபார்முலா கதைகள். ஒவ்வொன்றிலும் சர் பெர்சி ப்ளேக்னி தன் உயிரைப் பணயம் வைத்து ஃபிரான்சில் ஆபத்தில் இருக்கும் பிரபுக்கள் குடும்பத்தினரை மீட்டு இங்கிலாந்துக்குக் கொண்டு வருவார். இன்று படிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஆனால் அமெரிக்காவில் பள்ளிகளில் கூட சில சமயம் இவற்றை பாடமாக வைக்கிறார்கள். படிப்பதென்றால் பனிரண்டு வயதுக்கு முன்னாலேயே படித்துவிட வேண்டும். 🙂 எல்லா புத்தகங்களையும் இங்கே படிக்கலாம்.
  • Carry on, Mr. Bowditch (1956) புனைவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு. பௌடிச் உண்மை மனிதர். அன்றைய கடல் பயணத்துக்கான data-இல் சில தவறுகளைக் கண்டுபிடித்து அதை சரி செய்தவர். எனக்குப் பிடித்த புத்தகம். நியூபெர்ரி பதக்கம் வென்ற புத்தகம்.
  • Black Stallion தொடர்: முதல் புத்தகமான Black Stallion (1941) ஒரு காட்டுக் குதிரைக்கும் ஒரு சிறுவனுக்கும் உண்டாகும் உறவு. பிறகு நிறைய புத்தகங்கள். பெரியவர்களால் யூகிக்க முடியும் என்றாலும் சிறுவர்கள் ரசிப்பார்கள். எழுதியவர் வால்டர் ஃபார்லி. திரைப்படமாகவும் வந்தது.
  • Children of the Lamp தொடர்: P.B. Kerr எழுதிய இந்தத் தொடரின் முதல் நாவல் Akhenaten Adventure (2004). நாலைந்து நாவல்கள் வந்திருக்கின்றன. இரட்டைக் குழந்தைகளான ஜானும் ஃபிலிப்பாவும் அவர்கள் இருவரும் ஜின்னிகள் என்று தெரிந்து கொள்கிறார்கள். பிறகு என்ன எல்லாம் நடக்கிறது என்று கதை.
  • டெரக் லாண்டியின் ஸ்கல்டக்கரி ப்ளசன்ட் தொடர்: ஸ்கல்டக்கரி ஒரு துப்பறிபவன். ஆனால் வெறும் எலும்புக்கூடு. முதல் கதையில் அவன் செர்பைன் என்ற மந்திரவாதியை எதிர்த்துப் போராடுகிறான். அவனுடைய பார்ட்னராக ஒரு 12 வயது இளம் பெண் வருகிறாள். அவள் ஹாரி பாட்டர் மாதிரி. மந்திர மாய உலகம் இருப்பதை அறியாதவள், ஆனால் அவளுக்கு அந்த பாரம்பரியம் இருக்கிறது. செர்பைன் ஒரு மந்திரக்கோலை தேடுகிறான். அதற்காக நடக்கும் போராட்டம்தான் கதை. ஒரு 12 வயதில் படிக்கலாம்.
  • Boggart by Susan Cooper, 1993: ஒரு விளையாட்டான “பேய்” ஸ்காட்லாந்திலிருந்து கனடா சென்றுவிடுகிறது. அது எப்படி திருப்பி வருகிறது, திரும்பும் வரை என்னென்ன குறும்பு செய்கிறது என்று கதை. நான் படிக்க ஒரே காரணம் பெயர்தான். ஹாரி பாட்டர் புத்தகத்தில் boggart வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

கிறிஸ்துமஸ் நாவல்: Miracle on the 34th Street

Miracle on the 34th Street-ஐ நான் முதலில் திரைப்படமாகத்தான் (1947) பார்த்தேன். எளிய ஆனால் சரளமாகச் செல்லும், அங்கங்கே புன்னகைக்க வைக்கும் கதை, நல்ல முத்தாய்ப்பு (climax) உள்ளது, பார்க்கலாம். பிறகுதான் அது நாவலாகவும் வந்தது என்று தெரிகிறது. முதலில் நாவல் வந்ததா இல்லை திரைக்கதை நாவலாக எழுதப்பட்டதா என்று குழப்பமாக இருக்கிறது. வாலன்டைன் டேவிஸ் கதையாக எழுதினார், திரைப்படமாக வந்தது, பிறகு அவரே அதை நாவலாக எழுதினார் என்று தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் டேவிஸ் இந்தத் திரைப்படத்துக்காக சிறந்த கதாசிரியர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார்.

என்ன கதை? க்ரிஸ் க்ரிங்கிள் ஒரு முதியோர் இல்லத்தில் வாழ்கிறார். பார்ப்பதற்கு சான்டா கிளாஸ் போலவே மீசை, தாடி, தொப்பையுடன் இருப்பார். க்ரிஸ் க்ரிங்கிள் என்பது சான்டா கிளாசின் இன்னொரு பெயரும் கூட. தான் சான்டா கிளாஸேதான் என்று நம்புகிறார்.

கிறிஸ்துமஸ் சமயத்தில் நியூ யார்க்கில் நடக்கும் Macy’s Parade ஒரு பிரபல நிகழ்ச்சி. தற்செயலாக அங்கே சான்டாவாக “நடிக்கிறார்”. மேசி நிறுவனத்திலேயே அவருக்கு சான்டா வேலை கிடைக்கிறது. குழந்தைகள் சான்டாவிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பார்கள், இவரும் சரி சரி, நல்ல குழந்தைகளாக இருந்தால் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும்.

சில பொம்மைகள் மேசி கடையில் கிடைக்கவில்லை. க்ரிஸ் எந்த போட்டியாளர் கடையில் கிடைக்கும் என்று தகவல் தருகிறார். க்ரிஸ்ஸை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று பார்த்தால் இப்படி உதவி செய்கிறாரே என்று மேசிக்கு மேலும் கூட்டம் வருகிறது. மேசிக்கு கிடைக்கும் நல்ல பெயரைப் பார்த்து பிற கடைகளிலும் தங்களிடம் இல்லாதவை எந்தக் கடையில் கிடைக்கும் என்று தகவல் சொல்கிறார்கள். நாடு முழுவதும் Christmas Spirit பரவுகிறது.

க்ரிஸ் தான் சான்டாதான் என்று சொல்லிக் கொள்வதால் அவருக்கு பைத்தியம் என்று வழக்கு நடக்கிறது. அவர் தான்தான் சான்டா என்று நிரூபிக்கிறார். எப்படி? வெள்ளித் திரையில் காண்க!

என் கண்ணில் திரைப்படத்தைப் பார்ப்பது உத்தமம். Feel good திரைப்படம். கிறிஸ்துமஸ் சமயம் வேறு, பாருங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள், திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: திரைப்படத்தைப் பற்றிய ஐஎம்டிபி குறிப்பு

எனிட் ப்ளைடன்

எனிட் ப்ளைடனை முதன்முதலாகப் படிக்கும்போது எனக்கு 13, 14 வயதிருக்கலாம். சுவாரசியம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம்தான், ஆனால் இலக்கியம் என்பது கொஞ்சமாவது புரிந்திருந்தது. சாண்டில்யனும் சிவசங்கரியும் இலக்கியம் படைக்கவில்லை என்ற அளவுக்காவது புரிந்திருந்தது. தமிழில் இலக்கியம் அவ்வளவாகக் கிடையாது என்றுதான் நினைத்திருந்தேன் (அதை க.நா.சு. பின்னாளில் மாற்றினார்)

தமிழ்ப் புத்தகங்களை வெறித்தனமாகப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆங்கிலம் என்றால் தயக்கம். ஆங்கிலத்தில் இலக்கியம் உண்டு, படிக்க வேண்டும் என்றும் சின்னதாக எண்ணம் இருந்தது. எப்படியோ துணிந்து ஏதோ ஒரு எனிட் ப்ளைடனிலிருந்து ஆரம்பித்தேன். படிக்கும்போது இவற்றைப் படிக்கும் வயது கடந்துவிட்டது, இவை வாண்டு மாமா தரம் என்று தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும் கையில் ஆங்கிலப் புத்தகம் இருந்தால் கெத்தாக இருக்கும் என்று எனிட் ப்ளைடனைக் கூட விடாமல் கையில் தூக்கிக் கொண்டு சில மாதங்கள் அலைந்திருக்கிறேன். பிறகு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அலிஸ்டர் மக்ளீன், பி.ஜி. உட்ஹவுஸ், ஷெர்லக் ஹோம்ஸ் என்றுதான் தாவினேன்; சுவாரசியம் மட்டுமே முக்கியமாக இருந்த காலகட்டம், டிக்கன்ஸ், ஹெமிங்வே, ப்ரெக்ட், ஷேக்ஸ்பியர் பக்கம் வரவே சில வருஷம் ஆயிற்று…

ஆனால் முதன்முதலில் படித்த ஆங்கில எழுத்தாளர் அல்லவா? அதனால் ஒரு soft corner உண்டு. சில சமயம் புரட்டிப் பார்ப்பேன். என் பெண்ணுக்கு ஏழெட்டு வ்யதில் Naughtiest Girl in School (1940) புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன், அவளுக்கு அப்போது பிடித்திருந்தது. கொஞ்சம் அடங்காப்பிடாரிப் பெண் பள்ளிக்கு சென்றதும் தன் பிடிவாதத்தை மெல்ல மெல்ல இழந்து அவளுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மிளிர்வதுதான் கதை. அவளுடன் சேர்ந்து சில புத்தகங்களை – Naughtiest Girl Again (1942), Naughtiest Girl Is a Monitor (1945) படித்தேன். பெண்ணுடன் சேர்ந்து படித்ததால் இந்த போரடிக்கும் புத்தகங்களும் பிடித்திருந்தன.

பிறகு இந்த வயதில் famous five புத்தகங்கள் பலவற்றைப் படித்தேன்.

ப்ளைடன் சிறு வயதில் படிக்க ஏற்றவர். உதாரணமாக famous five தொடரின் முதல் புத்தகத்தில் – Five on a Treasure Island – வீட்டின் அருகில் கடற்கரை; கொஞ்ச தூரத்தில் ஒரு தீவு; தீவில் ஒரு பாழடைந்த கோட்டை; தீவிலிருந்து கொஞ்ச தூரத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கப்பல்; கோட்டையில் ரகசிய வழிகள்; ஒரு புதையல் வேறு. ஏழெட்டு வயது சிறுவனுக்கு இந்த மாதிரிக் காட்சி மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தாதா என்ன?

அதே போலத்தான் Five Go Adventuring Again நாவலில் ஒரு சுரங்கப் பாதை; Five Run Away Together (1944)-இல் அவர்கள் தீவில் வசிக்க வசதியான ஒரு குகை;

இவை சாத்தியமா, நடக்கக் கூடியதா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் காலத்தில் McKenna’s Gold என்று ஒரு திரைப்படம் உண்டு. அது காட்டும் நிலக் காட்சிகள் – பெரும் மலைகள், நீல நிற ஏரிகள், கணவாய்கள், நிழல் வளர்வது – போன்றவை இவற்றை என்றாவது பார்க்க வேண்டும் என்று ஏங்க வைத்தன. அது மாதிரிதான்.

எனிட் ப்ளைடன் பற்றி எனக்குத்தான் nostalgia, soft corner என்று நினைத்திருந்தேன். அவர் இந்தியாவில்தான் மிகப் பிரபலமாம்!

எனிட் ப்ளைடனே 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் என் புத்தகங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு அக்கறை கிடையாது என்று சொல்லி இருக்கிறாராம். என் கண்ணில் பத்து வயது தாண்டிவிட்டாலே இவற்றைப் படிப்பது கஷ்டம். அதற்கு முன் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டி: Enid Blyton: The most comforting children’s books ever

சிறந்த (20) சிறுவர் புத்தகங்கள்

பிபிசி சமீபத்தில் சிறந்த சிறுவர் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க பலரையும் கேட்டு ஒரு பட்டியலைத் தொகுத்திருக்கிறது. டாப் நூறு புத்தகங்கள், அவற்றிலிருந்து ஒரு சிறிய பட்டியல் – டாப் 20 புத்தகங்கள்.

நான் மனதள்வில் சிறுவன்தான் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. சிறுவர் புத்தகங்களை இன்னும் புரட்டியாவது பார்க்கிறேன். என் பெண்கள் சிறுமிகளாக இருக்கும்போது அவர்கள் படிக்கும் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்தப் பட்டியலில் உள்ள Where the Wild Things Are, Goodnight Moon போன்றவை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானவை. என் பெண்கள் அவற்றை ரசிப்பதை நானும் ரசித்திருக்கிறேன். அதனால்தான் இந்த மாதிரி பட்டியல்கள் என்னைக் கவர்கின்றன. இதில் உள்ள க்ளாசிக் என்று சொல்லக் கூடியவற்றை அனேகமாகப் படித்திருக்கிறேன்!

இவற்றில் நான் அனைவருக்கும் பரிந்துரைப்பவை; Alice’s Adventures in Wonderland, Little Prince, Hobbit, Matilda, Fairy Tales (Hans Christian Andersen), Harry Potter and the Philosopher’s Stone, Howl’s Moving Castle, Watership Down, Grimm’s Fairy Tales, BFG, Lord of the Rings, Panchatantra, Treasure Island, Wind in the Willows, One Thousand and One Nights, Haroun and the Sea of Stories.

இந்தப் பட்டியல்களில் இல்லாத மிகச் சிறந்த புத்தகங்கள் – Just So Stories, Jungle Book

வசதிக்காக டாப் 20 புத்தகங்ளின் பட்டியல் கீழே:

  1. Where the Wild Things Are (words and illustrations by Maurice Sendak, 1963)
  2. Alice’s Adventures in Wonderland (words by Lewis Carroll; illustrations by John Tenniel, 1865)
  3. Pippi Longstocking (words by Astrid Lindgren; illustrations by Ingrid Nyman, 1945)
  4. Little Prince (words and illustrations by Antoine Saint-Exupéry, 1943)
  5. Hobbit (words and illustrations by J.R.R. Tolkien, 1937)
  6. Northern Lights (Philip Pullman, 1995)
  7. The Lion, the Witch and the Wardrobe (words by C.S. Lewis; illustrations by Pauline Baynes, 1950)
  8. Winnie-the-Pooh (words by A.A. Milne; illustrations by E.H. Shepard, 1926)
  9. Charlotte’s Web (words by E.B. White; Illustrations by Garth Williams, 1952)
  10. Matilda (words by Roald Dahl; illustrations by Quentin Blake, 1988)
  11. Anne of Green Gables (L.M. Montgomery, 1908)
  12. Fairy Tales (Hans Christian Andersen, 1827)
  13. Harry Potter and the Philosopher’s Stone (J.K. Rowling, 1997)
  14. The Very Hungry Caterpillar (Eric Carle, 1969)
  15. The Dark is Rising (Susan Cooper, 1973)
  16. Arrival (Shaun Tan, 2006)
  17. Little Women (Louisa May Alcott, 1869)
  18. Charlie and the Chocolate Factory (Roald Dahl, 1964)
  19. Heidi (Johanna Spyri, 1880)
  20. Goodnight Moon (words by Margaret Wise Brown; illustrations by Clement Hurd, 1947)

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

தொடர்புடைய சுட்டிகள்: டாப் 100 சிறுவர் புத்தகங்கள், டாப் 20 சிறுவர் புத்தகங்கள்

ஷெர்லக் ஹோம்ஸின் தங்கை

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஆர்தர் கானன் டாயில் என்பது தெரிந்ததே. டாயில் இருக்கும்போதே வேறு பலரும் ஷெர்லாக்கை வைத்து கதைகள் எழுத ஆரம்பித்தார்கள் என்பது அவ்வளவாகத் தெரியாத விஷயம். இன்றைக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பின்புலத்தில் கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. என் கருத்தில் யாரும் டாயில் தரத்துக்கு வரவில்லைதான். இருந்தாலும் இவற்றில் பல எனக்கு சுவாரசியமாகத்தான் இருக்கின்றன. நான் ஷெர்லாக் ஹோம்சின் பரமரசிகன், ஏதாவது சின்ன விஷயம் நன்றாக இருந்தாலும் எனக்குப் பிடித்துவிடும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

எனோலா ஹோம்ஸ் (Enola Holmes) கதைகள் பதின்ம வயதினருக்காக எழுதப்பட்டவை. நாலு கழுதை வயதாகிவிட்டாலும் எனக்கும் கொஞ்சம் பிடிக்கும். திரைப்படமாகப் பார்த்த பிறகுதான் (Enola Holmes – 2020, Enola Holmes 2 – 2021) கதைகளைத் தேடிப் பிடித்து படித்தேன். இந்தத் தொடரின் கவர்ச்சி அன்றைய பெண்களின் சமூக நிலையை கோடி காட்டுவதுதான். அதை விரும்பித்தான் நான்சி ஸ்ப்ரிங்கர் இந்தக் கதைகளை எழுதியும் இருக்கிறார்.

இந்தத் தொடரின் சட்டகமும் எனக்கு சுவாரசியமாக இருந்தது. எனோலா ஹோம்ஸ் ஷெர்லாக் மற்றும் மைக்ராஃப்டின் 14 வயது தங்கை. அப்பா இல்லை. அம்மா வீட்டிலேயே படிக்க வைக்கிறாள், ஆனால் சம்பிரதமாயமான பள்ளிப் படிப்பு அல்ல. 14-ஆம் பிறந்த நாள் அன்று அம்மா அவளைத் தனியாக விட்டுவிட்டு போய்விடுகிறாள். இப்போது மைக்ராஃப்ட்தான் எனோலாவின் பாதுகாவலர் (guardian). பெண்கள் இரண்டாம் நிலை குடிமகன்(ள்)களாகக் கருதப்பட்ட காலம். எனோலாவை சம்பிரதாயமான பள்ளி, திருமணம் என்ற பாதையில்தான் மைக்ராஃப்டும் ஷெர்லாக்கும் திட்டமிடுகிறார்கள், ஆனால் எனோலாவுக்கு தன் சுதந்திரத்தை இழக்க கொஞ்சமும் விருப்பமில்லை. அம்மாவும் அவள் சுதந்திரமாக இருக்க விரும்பினால் உதவும் என்ற என்று நிறைய பணம் அவளுக்காக எற்பாடு செய்திருக்கிறாள். எனோலா லண்டனுக்கு தப்பி ஓடிவிடுகிறாள். மைக்ராஃப்டும் ஷெர்லாக்கும் அம்மாவையும் தங்கையையும் தேடுகிறார்கள். ஆணாதிக்க உலகம், பெண்களைப் பற்றி இருவருக்கும் நல்ல புரிதல் இல்லை. மீண்டும் மீண்டும் எனோலா ஷெர்லாக்கே தவற விடும் துப்புகளை கண்டுபிடிக்கிறாள். அவர்களிடமிருந்து தப்பிக் கொண்டே இருக்கிறாள். ஷெர்லாக்கும் எனோலாவும் தொடரில் சந்திக்கும் பல இடங்கள் புன்னைக்கை வைக்கின்றன.

படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவல்கள். திரைப்படங்களும் எனக்கு சுவாரசியமாக இருந்தன. புத்தகங்களைத் தேடிப் பிடித்து படித்தேன். நான் பதின்ம வயதிலிருந்து வளரவே இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது…

புத்தகங்களைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே…


முதல் நாவலில் – Enola Holmes and the case of the Missing Marquess (2006) – அம்மாவுடன் பிணக்கு இருப்பதால் பல வருஷங்களாக மைக்ராஃப்டும் ஷெர்லக்கும் எனோலாவைப் பார்த்ததே இல்லை. எனோலாவை வழக்கமாக பெண்கள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மைக்ராஃப்ட் முயல எனோலா வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். ஷெர்லக் மட்டுமே அவளிடம் கொஞ்சம் பாசம் வைத்திருக்கிறார், அவளை விடாமல் தேடுகிறார். எனோலா தற்செயலாக பிரபு வம்ச வாரிசு ட்யூக்ஸ்பரி கடத்தப்பட்டிருக்கும் வழக்கில் ஈடுபடுகிறாள், அவனைக் காப்பாற்றுகிறாள். லண்டனின் ஏழை மக்களின் வாழ்வு அவளை மிகவும் பாதிக்கிறது. சகோதரர்களுக்குத் தெரியாமல் லண்டனில் வாழ்கிறாள், இரவில் தன்னால் முடிந்த அளவுக்கு ஏழைகளுக்கு உணவளிக்கிறாள்.

அடுத்த நாவலான Case of the Left Handed Lady-இல்(2007) கதைப்பின்னல், மர்மம் எல்லாம் சுமார்தான். ஆனால் எனோலாவைத் தேடும் ஷெர்லக், ஷெர்லக்கிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் இனோலா என்ற சட்டகம்தான் கதையை சுவாரசியப்படுத்துகிறது. இந்த நாவலில் எனோலா காணாமல் போனவர்களைத் தேடுவதையே தன் “தொழிலாக” மேற்கொள்கிறாள். மெஸ்மரிசம் மூலம் ஒரு இளம் பெண்ணை – சிசலி – தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வில்லனை முறியடிக்கிறாள்.

Case of the Bizaree Bouquets-இல் (2008) டாக்டர் வாட்சனை பைத்தியம் என்று ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வில்லன் அடைத்துவிடுகிறான். வாட்சனைக் காணவில்லை என்று ஷெர்லக் தேடுகிறார். எனோலாவும். எனோலாவால் வாட்சனின் மனைவிக்கு வரும் பூங்கொத்துகளில் உள்ள செய்தி புரிகிறது. அதைப் பிடித்துக் கொண்டு வாட்சனின் நிலையை கண்டுபிடிக்கிறாள். ஆனால் வாட்சனை விடுவிக்க அவளால் முடியாது. இதே நேரத்தில் மைக்ராஃப்ட் எனோலாவும் அவள் அம்மாவும் பத்திரிகை விளம்ப்ரங்கள் (personals) மூலம் அவ்வப்போது தொடர்பு கொள்வதைப் புரிந்து கொண்டு எனோலாவைப் பிடிக்க அம்மா மாதிரி விளம்பரம் கொடுக்கிறார். எனோலா மைக்ராஃப்டின் தந்திரத்தைப் புரிந்து கொண்டு இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சந்திக்கலாம் என்று பதில் விளம்பரம் கொடுக்கிறாள். வாட்சன் விடுதலை!

Case of the Peculiar Pink Fan-இல் (2008) மீண்டும் சிசலி. சிசலிக்கு கட்டாயத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிசலி சம்மதிக்காததால் அவளை சிறை வைத்திருக்கிறார்கள். தற்செயலாக இதில் தலையிடும் எனோலா; சிசலியை விடுவிக்க ஷெர்லக்கின் உதவியை சிசலியின் அம்மா கேட்டிருக்கிறாள். எனோலா எப்படி வில்லன்களை முறியடிக்கிறாள் என்பது சுவாரசியமாக இருக்கிறது.

Case of the Cryptic Crinoline-இல் (2009) ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்! நைட்டிங்கேலின் பழைய கடிதம் ஒன்று இன்று சர்ச்சையைக் கிளப்பக் கூடும். அந்தக் கடிதம் தன்னிடம்தான் இருக்கிறது என்பதே தெரியாத திருமதி டப்பர்; அவர் வீட்டில்தான் எனோலா வாடகைக்கு குடியிருக்கிறாள். கடிதத்தைத் தேடும் வில்லன்கள் டப்பரை கடத்துகிறார்கள். எப்படி எனோலா டப்பரைக் காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை.

Case of the Gypsy Goodbye-இல் (2010) ஒரு பிரபு குடும்பத்துப் பெண் கடத்தப்படுகிறாள். எனோலா, ஷெர்லக், மைக்ராஃப்ட் மூவரும் அவளை கண்டுபிடிக்கிறார்கள். இதற்கிடையில் இவர்களின் அம்மாவின் இறப்புச் செய்தி கிடைக்கிறது. அண்ணன்மார் இருவரும் எனோலாவின் தனித்தன்மையை ஒரு வழியாக உணர்கிறார்கள்.

Case of the Black Barouche-இல் (2021) ஷெர்லக்கும் எனோலாவும் சேர்ந்து தன் மனைவியை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சிறை வைத்திருக்கும் வில்லனை முறியடிக்கிறார்கள்.

Case of the Elegant Escapade-இல் (2022) மீண்டும் சிசலி. சிசலியையும் அவள் அம்மாவையும் கொடுமைக்கார அப்பா சிறை வைக்கிறான். எனோலா அவளை மீட்கிறாள். ஷெர்லக் சில மனத்தடைகள் இருந்த போதும் உதவி செய்கிறார். கடைசி காட்சியில் எனக்கு ஒரு கேஸில் உதவி செய் என்று எனோலாவைக் கேட்கிறார்!

மீண்டும் சொல்கிறேன், இவை பத்து பனிரண்டு வயது சிறுவர்களை குறி வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள்தான். ஷெர்லக் ஹோம்சுக்கு பெண்கள் உலகம், உணர்வுகள், பழக்க வழக்கங்கள் பற்றி இருக்கும் blind spot, லண்டனைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஷெர்லக்கிடம் தப்பி லண்டனிலேயே வாழும் எனோலா என்ற சட்டகம் (framework) அந்தக் கால பெண்கள் நிலை பற்றி தெரியும் கீற்றுச் சித்திரம் ஆகியவற்றால் நான் ரசித்தேன். திரைப்படங்களும் எனக்குப் பிடித்திருந்தன…

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் கதைகள்

ஹாரி பாட்டர்

ஹாரி பாட்டர் இன்று ஒரு பண்பாட்டுச் சின்னமாகவே ஆகிவிட்டது. நான் Prisoner of Azkaban வெளியான பிறகுதான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் இருந்த சூடு (Sorcerer’s Stone, Chamber of Secrets) பின்னால் குறைந்துவிட்டாலும் எனக்கு பிடித்தமான கதைகள்தான். திருமணம் ஆன பிறகு இந்தக் கதைகளை என் ஆறேழு வயது மருமகன்/மருமகள்களுக்கு சொல்லித்தான் நான் ஒரு கூல் மாமா ஆனேன். 🙂

எழுதிய ஜே.கே. ரௌலிங் உலகின் மிகப் பெரிய பணக்கார எழுத்தாளராக இருப்பார். பில்லியனர். புத்தகம் எக்கச்சக்கமாக விற்றது. திரைப்பட உரிமைக்கும் நிறைய பணம் பெற்றார். ஹாரி பாட்டருக்குப் பிறகு ராபர்ட் கால்ப்ரெய்த் என்ற புனைபெயரில் துப்பறியும் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஒரு விதத்தில் பார்த்தால் ஹாரி பாட்டர் கதைகள் School Stories ஆகத்தான் ஆரம்பித்தன – குறிப்பாக Sorcerer’s Stone உட்ஹவுசின் பள்ளிக் கதைகளை அமானுஷ்ய பின்புலத்தில் வைத்து மீண்டும் எழுதப்பட்டதுதான். அதில் நிறைய முடிச்சுகளைப் போட்டு அதைப் பின்னால் வரும் நாலைந்து புத்தகங்கள் அவிழ்க்கின்றன.

எனக்கு மிகவும் பிடித்தவை Sorcerer’s Stone மற்றும் Chamber of Secrets. Prisoner of Azkaban-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். For sheer inventiveness. ஹாக்வார்ட்ஸ் பள்ளி, மந்திரப் பொருட்களின் சந்தையான டியகான் சந்து, sorting hat, quidditch விளையாட்டு, தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வித்தைகளின் ஆசிரியர்கள், அதிலும் குறிப்பாக கில்டராய் லாக்ஹார்ட், பாம்புகளோடு பேசும் திறமை, polyjuice potion, basilisk, வேறு மிருகங்களாக மாறும் திறமை, patronus charm, தொடரிலேயே சிறந்த வில்லன் ஆகிய டோலரஸ் உம்ப்ரிட்ஜ், மந்திரக் கஷாயங்கள் (potions) செய்வதில் பிஸ்தா மாணவரின் குறிப்புகள் உள்ள பழைய புத்தகங்களை வைத்து ஹாரி அந்த வகுப்பில் கலக்குவது என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவையே இந்தக் கதைகளை நமது நினைவில் வைத்திருக்கும்.

Sorcerer’s Stone, Chamber of Secrets இரண்டையும் தனிப் புத்தகங்களாக படிக்கலாம். Prisoner of Azkaban, Goblet of Fire-ஐயும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் Order of Phoenix, Half-Blood Prince, Deathly Hallows மூன்றும் தொடர்ச்சியாகத்தான் படிக்க முடியும். அதுவும் திரைப்படங்கள் வர ஆரம்பித்த பிறகு எழுதப்பட்ட புத்தகங்கள் visual ஆக சிந்திக்கப்பட்டு, திரைப்படக் காட்சி அமைப்பு நன்றாக வர வேண்டும் என்று சிந்தித்து எழுதப்பட்டவை போலிருக்கின்றன. உதாரணமாக அரைப்பிணமான உயிர்கள் டம்பிள்டோரையும் ஹாரியையும் தாக்கும் காட்சி, அரைக்குருட்டு ட்ராகன் மீது ஏறி வங்கியிலிருந்த் தப்பிப்பது போன்ற காட்சிகளை சொல்லலாம். மேலும் ஹாரியின் நண்பர்களான ஹெர்மோயின், ரான் ஆகியோரின் பங்களிப்பு போகப் போக குறைந்து கொண்டே போகிறது. அது கதைகளின் கவர்ச்சியைக் குறைக்கிறது. பிற்காலப் புத்தகங்களில் பதின்ம வயது “காதல்” காட்சிகள் கொடுமை, மகா போர். திடீரென்று மில்ஸ் அண்ட் பூன் கதை போல அங்கங்கே ஒரு அத்தியாயம் வரும்.

அதனால் எனக்கு Sorcerer’s Stone, Chamber of Secrets இரண்டும்தான் முதல் படியில் இருக்கின்றன. அதற்கடுத்த படியில் Prisoner of Azkaban. பிறகு Goblet of Fire. அப்புறம் கடைசி புத்தகமான Deathly Hallows. அடுத்தபடி Half-Blood Prince. கடைசியாக Order of Phoenix.

Sorcerer’s Stone அருமையாக ஆரம்பிக்கிறது. பெற்றோரை ஒரு வயதில் இழக்கும் ஹாரி. சித்தி வீட்டில் வளர்கிறான். சித்தியும் சித்தப்பாவும் மூளி அலங்காரி ரேஞ்சில் ஹாரியை நடத்துகிறார்கள். சில அதிசய நிகழ்ச்சிகள் நடக்கின்றன, உதாரணமாக ஹாரியிடம் ஒரு பாம்பு பேசுகிறது. 11 வயதில் ஹாரிக்கு கடிதம் வருகிறது. அதை அவனிடம் தராமல் சித்தப்பா தட்டிப் பறிக்க, அலை அலையாக கடிதங்கள் வந்து கொட்டுகின்றன. யாராலும் தடுக்க முடியவில்லை. ஹாரி தான் மந்திர சக்தி உள்ளவன், மந்திர உலகத்தில் பிரபலமானவன் என்று தெரிந்து கொள்கிறான். தீய மந்திரவாதி வோல்டமோர்ட்டுக்கு ஹாரியால்தான் இறப்பு என்று தெரிகிறது. ஹாரி ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அவனைக் கொல்ல வருகிறான். ஆனால் ஹாரியின் பெற்றோர் தங்கள் உயிரைக் கொடுத்து அவனைக் காப்பாற்றுகிறார்கள். அம்மாவின் உயிர்த்தியாகம் வோல்டமோர்ட்டை “கொன்றுவிடுகிறது”. தீய சக்திகள் தோற்பதால் மந்திர உலகம் நிம்மதி அடைகிறது.

ஹாரி ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் சேர்கிறான். ஹாக்வார்ட்ஸ் பகுதி வுட்ஹவுஸின் பள்ளிக் கதைதான். ரான், ஹெர்மோயினி என்ற உயிர் நண்பர்கள். ட்ராகோ என்ற ஒரு ‘எதிரி’. ஸ்னேப் என்ற ஆசிரியருக்கு அவனைக் கண்டாலே ஆகவில்லை. தலைமை ஆசிரியர் டம்பிள்டோர் அவனுக்கு father figure ஆக இருக்கிறார். க்விடிச் விளையாட்டில் அவனுக்கு இயற்கையாகத் திறமை இருக்கிறது. வோல்டமோர்ட் இறக்கவில்லை, தன் சக்திகளை இழந்து மற்றவரின் உதவி இல்லாமல் வாழ முடியாத நிலை. அவன் க்விரல் என்ற ஆசிரியரோடு ஒட்டிக் கொண்டு தன் சக்திகளை மீட்க முயற்சிக்கிறான். ஹாரி, ரான், ஹெர்மோயினி மூவரும் க்விரல்-வோல்டமோர்ட்டின் முயற்சிகளைத் தோற்கடிக்கிறார்கள்.

Chamber of Secrets நாவலில் ஒரு டைரிதான் வில்லன். அதில் வோல்டமார்ட்டின் உயிரின், சக்தியின் ஒரு பகுதி இருக்கிறது. அது ரானின் தங்கை ஜின்னியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் அடியில் எங்கோ உறங்கும் ஒரு பெரும் பாம்பை தான் நினைக்கும்போது வெளியே வரச் செய்கிறது. அந்தப் பாம்பை நேரடியாகப் பார்த்தால் இறப்புதான். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அதன் பிம்பத்தைப் பார்க்கிறார்கள் அதனால் சிலையாக மாறிவிடுகிறார்கள். இதில் வெட்டி பந்தா காட்டும் ஆசிரியர் லாக்ஹார்ட் நடுவில் கலக்குகிறார்.

Prisoner of Azkaban நாவலில் ஹாரியின் அப்பாவின் உயிர் நண்பனாக இருந்த, ஆனால் ஹாரியின் பெற்றோரை வோல்டமோர்ட்டுக்கு காட்டிக் கொடுத்த குற்றத்துக்காக சிரியஸ் ப்ளாக் சிறையிலிருந்து தப்பிவிடுகிறான். ஹாரி தாக்கப்படுவான் என்று எல்லாரும் அஞ்சுகிறார்கள். இன்னொரு பிரமாதமான பாத்திரமான லூபின் ஹாரிக்கு ஆசிரியராக வருகிறார். லூபின் ஒரு werewolf. லூபின், ஹாரியின் அப்பா ஜேம்ஸ், சிரியஸ், ரானின் செல்ல எலி, ஸ்னேப் ஆகியோரை வைத்து ஒரு அருமையான முடிச்சு அவிழ்கிறது.

Goblet of Fire-இலிருந்துதான் இந்தத் தொடரின் சுமார்த்தானம் ஆரம்பிக்கிறது. இந்தப் புத்தகத்தின் நீளமும் கொஞ்சம் அதிகம். ஹாக்வார்ட்ஸ் போன்ற இன்னும் இரண்டும் மந்திரப் பள்ளிகளுடன் போட்டிகளை நடத்துகிறது. ஹாரி போட்டியில் கலந்து கொள்ள பேரே கொடுக்கவில்லை, ஆனால் அதிசயமாகச் சேர்க்கப்படுகிறான். இது அத்தனையும் வோல்டமோர்ட்டை மீண்டும் சக்திகளோடு எழுப்ப நடக்கும் சதி என்று தெரிகிறது. வோல்டமோர்ட் உயிர் பெறும் காட்சி திகில் கிளப்புகிறது. ஆனால் அந்த உச்சக்கட்டத்துக்கு செல்வதற்கு முன் இழுக்கிறார். ஸ்னேப் வோல்டமோர்ட்டுக்காக டம்பிள்டோரிடம் வேலை செய்யும் ஒற்றனா, இல்லை டம்பிள்டோருக்காக வோல்டமோர்ட்டிடம் ஒற்று வேலை பார்க்கிறாரா என்ற கேள்வி இருக்கிறது.

Order of Phoenix இந்தத் தொடரின் போரடிக்கும் புத்த்கம். இத்தனைக்கும் இந்தத் தொடரின் மிகச் சிறந்த வில்லனான் டோலரஸ் இதில்தான் வருகிறார். டோலரஸ் டம்பிள்டோரை கீழே தள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகிறார். அவர் ஹாரிக்கு கொடுக்கும் டார்ச்சர்கள்தான் நாவலின் சிறந்த பகுதி.

Half-Blood Prince-இல் வோல்டமோர்ட்டின் திட்டம் வெளியாகிறது. அந்தக் காலத் திரைப்படங்களில் மந்திரவாதியின் உயிர் ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு பெட்டியில் உள்ள வண்டில் இருப்பது போல வோல்டமோர்ட் தன் உயிரை ஏழு பங்காகப் பிரித்து பல இடங்களில் வைத்திருக்கிறான். அதை அழிக்க டம்பிள்டோர் பாடுபடுகிறார். அவருக்கு ஹாரி உதவுகிறான். ஹாரி ஒரு பழைய பாடப்புத்தகத்தின் பிரதியை வைத்துக் கொண்டு potions வகுப்பில் கலக்குவது நன்றாக வந்திருக்கும். ஸ்னேப் டம்பிள்டோரைக் கொல்கிறார்.

Deathly Hallows-இல் எல்லா முடிச்சுகளும் அவிழ்கின்றன. வோல்டமோர்ட் இப்போது மந்திர உலகை ஆள்கிறான். ஆனால் ஹாரி, ஹெர்மோயினி, ரான் போன்ற சிலர் இன்னும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். வோல்டமோர்ட்டின் உயிரின் பங்குகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படுகின்றன. கடைசி போரில் ஹாரியின் தரப்பு வெல்கிறது. நாவலின் சிறந்த பகுதிகள் ட்ராகன் மீதேறி வங்கியிலிருந்து தப்பிக்கும் காட்சி, டோலரஸின் நகை கைப்பற்றப்படும் காட்சி

Fantastic Beasts தொடர் திரைப்படங்களின் – Fantastic Beasts and Where to Find ThemThe Crimes of Grindelwald திரைக்கதைகளும் புத்தகங்களாக வந்திருக்கின்றன. சுமார். இதெல்லாம் படமாகப் பார்த்தால்தான் நன்றாக இருக்கும்.

இவற்றைத் தவிர சின்ன சின்ன followup படைப்புகள் – Fantastic Beasts and Where to Find Them, Quidditich through the Ages, Tales of Beedle the Bard, Harry Potter: The Prequel – எல்லாம் இருக்கின்றன. Fantastic Beasts போன்றவற்றை திரைப்படமாக பார்ப்பது உத்தமம். படிப்பதெல்லாம் பரம ரசிகர்களுக்குத்தான். ஹாரியின் கௌரவ சித்தப்பா ரீமஸ் லூபின், அதிபயங்கர வில்லி டோலரஸ் உம்ப்ரிட்ஜ்,  ஹாக்வார்ட்ஸ் பள்ளி ஆசிரியர்கள் மினர்வா மக்கொனகல், சிபில் ட்ரெலானி, ஹொரேஸ் ஸ்லக்ஹார்ன், க்விரல், சில்வானஸ் கெட்டில்பர்ன்,  ஹாக்வார்ட்ஸின் விஷமக்கார பேய் பீவ்ஸ் போன்றவற்றின் பின்புலத்தைப் பற்றி கதை/கட்டுரையாக வெளியிட்டிருப்பது ஓரளவு படிக்கலாம். ஆனால் சிறந்த spinoff படைப்பு Harry Potter and the Cursed Child. படிக்கவும் ஏற்றது.

FanFiction – அதாவது வாசகர்கள் தங்கள் கற்பனையை ஓடவிட்டு மறுவாசிப்பு செய்வது – ஆயிரக்கணக்கில் உண்டு. Potion Master’s Nephew-வை குறிப்பிட்டு சொல்லலாம்.

Ickabog என்று ஒரு சிறுவர் கதையும் உண்டு.

இந்த நாவல்களைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் அம்புலிமாமாவைப் படித்து பரவசம் அடைந்த சிறுவன் என்னுள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்தது. அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஒரே ஒரு புத்தகம் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் Sorcerer’s Stone, Chamber of Secrets இரண்டில் ஒன்றைப் படிக்கலாம். போகப் போக சூடு குறைந்துவிட்டாலும் தொடரே படிக்கக் கூடியதுதான். சோம்பேறிகள் திரைப்படங்களைப் பார்த்துக் கொள்ளலாம், அவையும் நன்றாக வந்திருக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: Young Adult Fiction

யானை டாக்டர்கள்

ஜெயமோகனின் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)எனக்குப் பிடித்த புனைவுகளில் ஒன்று. ஊருக்கே பிடித்த புனைவுதான். அதன் நாயகரும் யானை டாக்டருமான டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) உண்மை மனிதர் என்பது அந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

உள்ளூர் நூலகத்துக்குப் போனபோது தற்செயலாக கண்ணில் பட்ட புத்தகம் ஜேனி சோடோஷ் எழுதிய “Elephant Doctor“. “கதாபாத்திரங்களின்” பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். வழக்கம் போலவே டாக்டர் கே என்றோ கிருஷ்ணமூர்த்தி என்றோ நினைவில்லை, யானை டாக்டர் என்றுதான் நினைவிருந்தது. அவரைப் பற்றிய புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். இவர் பெயர் டாக்டர் கேகே (கே.கே. சர்மா). கே, கேகே என்ற பெயர்களில் குழம்பி ஜெயமோகனின் உண்மை நாயகன்தானாக்கும் என்று படித்துப் பார்த்தேன்.

இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் அதிசயப்பட வைக்கின்றன. கேகே அஸ்ஸாமியர். கே தமிழர். கேகேவுக்கு குடும்பம் உண்டு. கேவுக்கு யானைகள்தான் குடும்பம் போலிருக்கிறது. கேகேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. கேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்காததுதான் யானை டாக்டர் சிறுகதையின் முன்புலம் (foreground). கேகேதான் மயக்கமருந்தை துப்பாக்கி போன்ற ஒரு கருவியின் மூலம் யானைகளுக்கு செலுத்துவதில் முன்னோடி. கே யானைகளின் சவப்பரிசோதனையின் முன்னோடி என்று யானை டாக்டர் கதையில் சொல்லப்படுகிறது. கேகே சர்க்கஸ் யானைகளின் பராமரிப்பு பரிசோதனைக் குழுவின் உறுப்பினர், சர்க்கஸ் யானைகளின் உடல் நலத்தைப் பேண பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறார்; கே கோவில் யானைகளுக்கு “விடுமுறை” போல காட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று போராடி வென்றிருக்கிறார். கேகே காட்டு யானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார், ஆனால் அவரது பணி பொதுவாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுடன்தான். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது, ஆளைக் கொல்கிறது, அல்லது உடல்நிலை சரியில்லை என்றால் கேகேவைத்தான் அழைப்பார்களாம். கேவின் பணி காட்டு யானைகளுடன்தான் அதிகம் போலிருக்கிறது, தமிழகம்/கேரளப் பகுதிகளில் அவர்தான் யானை டாக்டர். யானை டாக்டர் புனைவில் கே அழுகிய சடலம் ஒன்றை ஆராயும்போது அவர் உடல் முழுதும் புழுக்கள்; ஒரு யானைக்கு எனிமா கொடுத்து 10-15 கிலோ யானை மலம் கேகே மேல் கொட்டி இருக்கிறது. கே வயதில் மூத்தவர் – 1929-இல் பிறந்திருக்கிறார். கேகே 1961-இல்.

ஜேனி சோடோஷின் புத்தகம் சிறுவர்களைத்தான் குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஜெயமோகனின் கதையைப் படித்திராவிட்டால் இதைப் புரட்டிக் கூட பார்த்திருக்கமாட்டேன். புத்தகம் பெரியவர்களுக்கு சுவாரசியப்படாது என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் தகவல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தன. சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்றோடு சில வருஷம் வாழ்ந்ததால் யானை என்றால் கேகேவுக்கு கொள்ளை இஷ்டம். நன்றாகப் படித்திருக்கிறார், டாக்டராகப் போ என்று குடும்பத்தார் சொல்ல இவரோ கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். யானை மருத்துவம் அப்போது படிக்கும் நிலையில் இல்லை. (கே எழுதி இருந்தால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.) இருந்தாலும் இவர் ஆடு/மாடு/நாய்/பூனைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலாக யானைக்கு வைத்தியம் பார்க்கும் வாய்ப்பு, ஆனால் யானையை நெருங்க முடியாத நிலை. மிருகக்காட்சி சாலை அதிகாரியின் உதவியுடன் மயக்கமருந்து தரும் துப்பாக்கியை பழகிக் கொண்டு யானையை மயக்கம் அடைய வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார். இவரது மைத்துனர், வனத்துறை அதிகாரி நாராயண் மதம் பிடித்த யானை ஒன்று மக்களைத் தாக்குகிறது என்று இவரை அழைக்க, இவர்கள் எல்லாரும் மயக்கமருந்து துப்பாக்கியோடு யானையை நெருங்கி இருக்கிறார்கள், யானை இவரது மைத்துனரை மிதித்தே கொன்றுவிட்டது. யானைகளுக்கு இலவச முகாம் எல்லாம் நடத்தி இருக்கிறார். மின்சாரம் தாக்கி காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றி இருக்கிறார். அவர் மருத்துவம் செய்த யானை ஒன்று 15-20 வருஷங்களுக்குப் பிறகு சர்க்கஸ் யானையாக இருக்கும்போதும் இவரை நினைவில் வைத்துக் கொண்டு துதிக்கையால் அணைத்துக் கொண்டிருக்கிறது!

மேன்மக்கள், வேறென்ன சொல்ல? சிறுவர் புத்தகமாக இருந்தாலும் என்னைப் போலவே நீங்களும் தகவல்களால் கவரப்படலாம். யானை டாக்டர் கதையைப் படிக்கவில்லை என்றால் தவறவிடாதீர்கள்!

(டாக்டர் கேயின் புகைப்படம் கிடைக்கவில்லை)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், இந்திய அபுனைவுகள், சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஃபாண்டம்

காமிக்ஸ், அதுவும் சாகச காமிக்ஸ் அறிமுகமானது இரும்புக்கை மாயாவி, லாரன்ஸ்-டேவிட், ஜானி நீரோ மூலம்தான். அதற்குப் பிறகு முத்து காமிக்ஸில் பிறகு வேறு நாயகர்கள் வந்தாலும் – ரிப் கிர்பி, சிஸ்கோ கிட், மாண்ட்ரேக் மாதிரி – யாரும் முதல் மூவர் அளவுக்கு மனதைக் கவரவில்லை. ஓரளவு அருகே வந்தது ஃபாண்டம் மட்டுமே.

ஃபாண்டம் ஏறக்குறைய டார்ஜான். நீண்ட பாரம்பரியம் உள்ள டார்ஜான். கதைகள் தனிப்பட்ட முறையில் எதுவும் பெரிதாக சுவாரசியப்படவில்லைதான். ஆனால் மண்டையோட்டு குகை, பந்தர் பிக்மிக்கள், கதை சொல்லும் மோஸ், பாண்டமின் ஓநாய், அவரது வெள்ளை குதிரை, பல தலைமுறை ஃபாண்டம்கள் எழுதி வைத்திருக்கும் சாகச வரலாறு, மண்டையோட்டு முத்திரை பதிக்கும் அவரது மோதிரம், இவைதான் காமிக்ஸ்களை சுவாரசியப்படுத்தின.

முதல் ஃபாண்டம் ஐநூறு அறுநூறு வருஷங்களுக்கு முன் கப்பல் உடைந்து ஆஃப்ரிக்காவின் காடுகளில் வந்து சேர்கிறார். பிக்மிக்கள் அவரது நண்பர்களாகிறார்கள். கடற்கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுசதை தன் சுயதர்மமாகக் கொள்கிறார். அவரது சந்ததியினரும் அப்படியே. காட்டின் காவல்துறை ஒன்றை உருவாக்குகிறார். இன்றைய ஃபாண்டமின் மனைவி டயானா. அவரும் அப்படியே சர்வாதிகாரிகள், கடற்கொள்ளையர்கள் எல்லாரையும் எதிர்த்துப் போராடுகிறார்.

பொதுவாக இன்றைய ஃபாண்டமின் சாகசங்களை விட சென்ற தலைமுறையினரின் சாகசங்கள் எனக்கு சுவாரசியமாக இருக்கும்.

ஃபாண்டம் பாத்திரத்தை படைத்தவர் லீ ஃபாக்.

சமீபத்தில் புத்தகமாக சிலவற்றை படித்தேன். சிறு வயதில் படிக்கத்தான் என்றாலும் எனக்கு நாஸ்டால்ஜியா, அவ்வப்போது புன்னகைத்தேன். எதையாவது படிப்பது என்றால் Story of Phantom, Slave Market of Mucar இரண்டையும் பரிந்துரைக்கிறேன்.

காமிக்ஸாக இல்லாமல் புத்தகமாகப் படித்தவை – Story of Phantom, Slave Market of Mucar, Golden Circle, Veiled Lady, Hydra Monster, Mysterious Ambassador, Mystery of the Sea Horse, Scorpia Menace.

இவை எல்லாம் பத்து வயதிற்குள் படிப்பதற்குத்தான். அதுவும் காமிக்ஸாகப் படிப்பதுதான் உத்தமம். ஆனால் அந்த வயதில் படிக்க மிக சுவாரசியமானவை.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

ஹாரி பாட்டர் வகை – பார்டிமேயஸ் நாவல்கள்

பார்டிமேயஸ் நாவல்கள் ஹாரி பாட்டர் வகையைச் சேர்ந்தவை. சிறுவர்களுக்காக, பதின்ம வயதினர்களுக்காக, இல்லை என்னப் போல அரைக்கிழமாக ஆன பிறகும் மனதளவில் வளராதவர்களுக்காக எழுதப்பட்டவை. விறுவிறுவென்று போகும், அமானுஷ்ய பின்புலம் கொண்டவை. எழுதியவர் ஜோனதன் ஸ்ட்ரௌட்.

பார்டிமேயஸ் சக்தி வாய்ந்த ஒரு பூதம். அலாவுதீனின் பூதம் போல. ஒரு ஜின்னி. கதைகள் நடக்கும் காலத்தில் மந்திரவாதிகள் சாம்ராஜ்யங்களை ஆள்கிறார்கள். இங்கிலாந்து முதன்மை சாம்ராஜ்யம். ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டு. மந்திரவாதிகளின் பலம் அவர்களால் பூதங்களை அடக்கி தங்கள் கட்டளைகளை நிறைவேற்றச் செய்வது. ஆதிகாலத்திலிருந்து – அதாவது எகிப்து, சுமேரியா, அட்லாண்டிஸ், சாலமன் காலத்திலிருந்து இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

முதல் புத்தகம் Amulet of Samarkand (2003). இதில் நதானியேலுக்கு வயது 11. அவனுக்கும் லவ்லேஸ் என்ற சக்தி வாய்ந்த மந்திரவாதிக்கும் சிறு சண்டை. நதானியேலுக்கு தன் வயதுக்கு மீறிய அறிவு, ஆர்வம். லவ்லேசை பழிவாங்க அவன் பார்டிமேயஸை அடிமைப்படுத்தி லவ்லேஸிடம் இருக்கும் ஒரு தாயத்தை திருடி வரச் செய்கிறான். தாயத்து – சமர்கண்ட் தாயத்து – பார்டிமேயசை விட பல மடங்கு சக்தி வாய்ந்த இன்னொரு பூதத்தை கட்டுப்படுத்துவது. லவ்லேஸ் அந்த தாயத்தை வைத்து இங்கிலாந்தின் பிரதமராக சதி செய்துகொண்டிருக்கிறான். தாயத்து திருடுபோனதும் அதைத் தேடி அலைகிறான். நதானியேலின் கார்டியன் ஆன அண்டர்வுட், நதானியேல் மேல் பாசம் காட்டும் ஒரே ஜீவனான அண்டர்வுட்டின் மனைவி ஆகியோரைக் கொன்று அந்தத் தாயத்தை மீண்டும் கைப்பற்றுகிறான். நதானியேலும் பார்டிமேயசும் எப்படி லவ்லேசின் சதியை முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.

இரண்டாவது புத்தகம் Golem’s Eye (2004). இப்போது நதானியேல் அரசில் உயர்பதவி வகிக்கிறான். லண்டனில் அவ்வப்போது ஒரு பெரிய களிமண் சிலை இரவுத் தாக்குதல்களை நடத்துகிறது. மந்திரங்கள் அறியாத சில சாதாரணர்களை மந்திரங்களும் பூதங்களும் ஒன்று செய்ய முடிவதில்லை. அவர்கள் சின்ன அளவில் கொரில்லாத் தாக்குதல்களை நடத்துகிறார்கள். நதானியேலுக்கு அவர்களைக் கண்டுபிடித்து அடக்கும் பொறுப்பு தரப்படுகிறது. பார்டிமேயஸின் உதவியுடன் நதானியேல் மீண்டும் வெற்றி பெறுகிறான்.

Ptolemey’s Gate (2005) அடுத்த புத்தகம். இந்த முறை அரசை கவிழ்க்க சதிகாரர்கள் செய்யும் முயற்சிகள் பூதங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடுகின்றன. நதானியேல், கிட்டி, பார்டிமேயஸ் ஒன்றாகச் சேர்ந்து அதிகாரத்தை மக்களுக்கு மீட்கிறார்கள். ஆனால் நதானியேல் தன் உயிரை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நாவல்கள் விறுவிறுப்பான பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமே. பார்டிமேயஸின் நக்கலான பேச்சும் விவரிப்பும் கதைகளை சுவாரசியப்படுத்துகின்றன. ஆனால் பதின்ம வயதில் சுவாரசியமாக இருக்கும். எந்த வயதாக இருந்தாலும், ஹாரி பாட்டர் கதைகளை நீங்கள் ரசித்தால் இவற்றையும் ரசிக்க வாய்ப்பிருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்