தஞ்சை மாவட்டத்தில் நில உடமையாளர்களின் அடக்குமுறைகளை ஆவணப்படுத்திய சோலை சுந்தரப்பெருமாள் மறைந்தார்.
சுந்தரப் பெருமாளின் புத்தகங்களில் இலக்கிய நயமோ, மானுட தரிசனமோ பெரிதாக வெளிப்படுவதில்லை. அவருடைய முக்கியத்துவம் அவரது புத்தகங்களை ஏறக்குறைய ஆவணமாகவே பார்க்க முடியும் என்பதுதான். உதாரணமாக அவரது தப்பாட்டம் நாவலில் பள்ளர் பறையர்களுக்காக உதவும் கதாபாத்திரம் “உயர்ஜாதிக்காரர்”, மூப்பர் ஜாதியினர். அவரது புத்தகங்களின் நம்பகத்தன்மை இந்த மாதிரி உண்மையான சித்திரங்களால் அதிகரிக்கிறது. அவரது நாவல்களில் மெய்நிகர் சித்திரம் கிடைத்துவிடுகிறது.
கீழ்வெண்மணியில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அதைப் பற்றி எனக்குத் தெரிந்து மூன்றே மூன்று நாவல்கள்தான் எழுதப்பட்டிருக்கின்றன. குருதிப்புனல் இ.பா.வுக்கு சாஹித்ய அகடமி பரிசு பெற்றுத் தந்தது. ஆனால் அது இலக்கியமாகவும் சரி, ஆவணமாகவும் சரி எனக்கு உயர்ந்த இடத்தில் இல்லை. கீழ்வெண்மணியைப் பற்றி எழுதியதுதான் பெரிய விஷயமாகத் தெரிந்தது, தெரிகிறது. பாட்டாளி என்பவர் கீழைத்தீ என்ற நாவலை எழுதி இருக்கிறாராம், நான் படித்ததில்லை.
சோலை சுந்தரப்பெருமாளின் செந்நெல் எனக்கு முக்கியமான இடத்தில் இருக்கிறது. இத்தனைக்கும் இலக்கியமாக உயர்ந்த இடத்தில் இல்லைதான். ஆனால் முக்கியமான ஆவணம். நம்பகத்தன்மை அதிகம். எரிக்கப்பட்ட ஒருவரின் தம்பியோ, பக்கத்து வீட்டுக்காரரோ நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியதைப் போல இருக்கும்.
தப்பாட்டம், செந்நெல் இரண்டு நாவல்களையும் பரிந்துரைக்கிறேன். நான் படிக்க விரும்பும் புத்தகம் தாண்டவபுரம். ஞானசம்பந்தர் தொன்மத்தை மறுவாசிப்பு செய்திருக்கிறாராம்.
அவரது பெயரிலிருந்து அவர் சுந்தரப்பெருமாள் கோவில் ஊர்க்காரன் என்று யூகிக்கிறேன். சுந்தரப்பெருமாள் கோவில் காலம் சென்ற கருப்பையா மூப்பனாரின் சொந்த ஊரும் கூட. மூப்பனார் குடும்பம் அங்கே பல தலைமுறைகளாக பெரும் பண்ணையார்கள்.
என்னைப் பொறுத்த வரை எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி எழுதுவதுதான். அவரது தப்பாட்டம் என்ற நாவலைப் பற்றி முன்பு எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.
தப்பாட்டம் 2002-இல் தஞ்சை மாவட்ட ஜாதீயப் பின்புலத்தை வைத்து எழுதப்பட்டது.
தஞ்சாவூருக்கு அருகே ஒரு சின்ன கிராமம்தான் கதை நடக்கும் இடம். ஊரில் பெரிய மனிதர்கள் மூப்ப ஜாதியினர். அடுத்த இடத்தில் அம்பலக்காரர்கள். பள்ளர், பறையர், சக்கிலியர் மூன்று ஜாதியினரும் உண்டு. மூப்பர்களுக்கும் அம்பலக்காரர்களுக்கும் கொஞ்சம் புகைச்சல் உண்டென்றாலும் மற்றவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இரட்டைக் குவளை டீக்கடை மாதிரி விஷயங்கள் சர்வசாதாரணம். சுந்தரமூர்த்தி வாத்தியார் பிறப்பால் மூப்பர் என்றாலும் கம்யூனிஸ்ட். ஜாதி வித்தியாசம் ஒழியவும், கம்யூனிஸ்ட் கட்சி வளரவும், எல்லாருக்கும் – மூப்பரிலிருந்து சக்கிலியர் வரை எல்லா ஜாதிக் குழந்தைகளுக்கும் உயிரை விட்டு படிப்பு சொல்லித் தருபவர். அவரால் பல மூப்பர் வீட்டுக் குழந்தைகள் பயன் அடைந்திருப்பதால் அவர் மேல் ஊர் பெரிய மனிதர்களுக்கு இருக்கும் எரிச்சல் அவ்வப்போது நொந்து கொள்வதற்கு மேல் போவதில்லை. மெதுமெதுவாக சின்னச் சின்ன தகராறுகள் மூலம் “கீழ்” ஜாதியினர் அடக்குமுறையை எதிர்க்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வளர்கிறது. அதை மும்முரமாக எதிர்க்கும் “மேல்” ஜாதியினர்.
கதை முக்கியமில்லை. கதை காட்டும் சித்திரம்தான் முக்கியம். ஒரு மெய்நிகர் வாசக அனுபவத்தைத் தருகிறார். ஆனால் அவரால் மனித மனதின் ஆழத்துக்குள் போக முடியவில்லை. மேலோட்டமாகத்தான் அவன் அடக்குமுறை செய்பவன், இவன் அடக்கப்படுபவன் என்ற அளவில்தான் எழுத முடிகிறது. இது புறவயமான உலகம் பற்றிய நாவல் மட்டுமே. வரவர எல்லா நாவலிலும் அகவயமான உலகம் தெரியாவிட்டால் திருப்தியாக இல்லை. சில சமயம் அதைத் தாண்ட முயற்சித்தாலும் – உதாரணமாக, தப்பு வாத்தியத்தை, அதை வாசிப்பதை எதிர்ப்பின் குறியீடாக காட்ட முயற்சிக்கிறார், அதெல்லாம் சரியாக வரவில்லை. நாவலின் பலமே சமீப காலத்தில் கூட, அனேகமாக இன்று கூட, நமக்கு நன்றாகத் தெரியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இடங்களில் கூட, இப்படிப்பட்ட ஜாதீய வன்முறைகள் நடப்பதை தோலுரித்துக் காட்டுவதுதான்.
படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
பெருமாளின் இன்னொரு புத்தகமான பெருந்திணைக்கும் ஆவண முக்கியத்துவம்தான். ஒரு பண்ணை, அதன் பறைய ஜாதி உழைப்பாளிகள். பல ஜாதி முறைப் பழக்கங்களை ஆவணப்படுத்துகிறார். ஆனால் நயம் இல்லாத புத்தகம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்