ஜேஜே சில குறிப்புகள் படித்தபோது எனக்கு ஒரு 25 வயது இருக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். எங்கே நிஜம் முடிகிறது, கற்பனை ஆரம்பிக்கிறது என்று கூட சொல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு சுந்தர ராமசாமி என்று தேடிப் பிடித்து படித்தேன். புளியமரத்தின் கதை அற்புதமாக இருந்தது. பல சிறுகதைகள் – கோவில் காளையும் உழவு மாடும், புகழ் பெற்ற ரத்னாபாயின் ஆங்கிலம், புகழ் பெறாத சீதை மார்க் சீயக்காய்த் தூள், எனக்கு மிகவும் பிடித்த சிறுகதையான விகாசம், சிரிக்காமல் படிக்க முடியாத பிரசாதம் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.
ஆனால் எனக்கு பிடித்த நாவல் ஜேஜேதான். அது ஒரு tour de force. அதே நேரத்தில் இதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். நான் சாதாரணமாக புத்தகங்களை நாலைந்து முறை படிக்கும் வழக்கும் உடையவன். சு.ரா.வின் சிறுகதைகளை மட்டுமே நான் மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். இன்று மீண்டும் அவரது நாவல்களை படித்தால் என் மதிப்பீடு மாறலாம்.
மூன்று தமிழ் எழுத்தாளர்களை நான் ஜீனியஸ் என்று கருதுகிறேன். ஜெயமோகன் காலத்தால் மூன்றாமவர். அவருக்கும் மேலிருக்கும் ஒரே தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான் என்பது என் எண்ணம். விஷ்ணுபுரம், ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகியவை என்றும் நிற்கும் நாவல்கள். சிறுகதைகளிலும் நிறைய தேறும். இலக்கிய, பண்பாட்டு, அரசியல் விமர்சனக் கட்டுரைகளில் அவரது வீச்சு அகலமானது. ஆழமும் அதிகம்தான், ஆனால் ஆழத்தைப் பற்றிய மதிப்பீடு எதிர்காலத்தில் மாறலாம். (ஒரு காலத்தில் சுஜாதாவின் கட்டுரைகள் மிக ஆழமானவை என்று நினைத்திருந்தேன், இன்று இல்லை.)
சு.ரா.வை ஜெயமோகனின் ஒரு குரு என்று சொல்லலாம். அவரோடு பேசிப் பேசி விவாதித்து கற்றுக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதை ஜெயமோகனே சொல்லி இருக்கிறார். ஆனால் சு.ரா.விடம் அவருக்கு சில கசப்புகளும் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிந்தது. அவருடைய கருத்துப்படி அவர் குருவை மிஞ்சிவிட்ட சிஷ்யர். என் கருத்தும் அதுதான். துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவுதான் நினைவு வருகிறது.
சு.ரா. இறந்ததும் ஜெயமோகன் தன் சு.ரா. நினைவுகளை ராப்பகலாக உட்கார்ந்து எழுதி இருக்கிறார். அது நினைவின் நதியில் என்று புத்தகமாக வந்திருக்கிறது. நண்பர் ராஜன் வீட்டில் பார்த்தேன். எல்லாரும் என்னை சுற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் மானர்ஸ் இல்லாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு கொண்டு வந்து படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை.
சுருக்கமாக: இளமை, அனுபவம் இன்மை, இயல்பு, சொந்த வாழக்கையில் கடுமையான பாதிப்புகள், முதிர்வின்மை(immaturity), ஈகோ எல்லாம் சேர்ந்து ஜெயமோகனை ஒரு வழி செய்து கொண்டிருந்த நேரம். ஜேஜே சில குறிப்புகள் படித்துவிட்டு சு.ரா.விடம் போய் சேர்ந்திருக்கிறார். சு.ரா.விடம் எதிர்வாதம் செய்தே வளர்ந்திருக்கிறார். ஒரு கால கட்டத்தில் சு.ரா.வின் நவீனத்துவம் இவருக்கு போதவில்லை. குருவை மிஞ்சும் படைப்புகள் – விஷ்ணுபுரம் – வர ஆரம்பித்திருக்கிறது. குருவுக்கு ஈகோ, தன் புகழ் நிற்க வேண்டும் என்ற எண்ணம், குடும்ப பாசம், எந்த நெருங்கிய உறவிலும் வரும் சில பிரச்சினைகள் – இருவருக்கும் நடுவில் பிரிவு.
ஜெயமோகனின் கண்ணில் நவீனத்துவத்தின் உச்சம் ஜேஜே சில குறிப்புகள்தான். (என் கண்ணில் அசோகமித்ரனே – கரைந்த நிழல்கள், பல சிறுகதைகள், மானசரோவர், தண்ணீர்….) சு.ரா. தன் வார்த்தைகளை கச்சிதமாக செதுக்க வேண்டும் என்ற ஆசையில் தன் படைப்பூக்கத்தை இறுகப் பிடித்திருந்தார் என்றும் அப்படிப் பிடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் பெரிய படைப்பாளியாக உயர்ந்திருப்பார் என்றும் கருதுகிறார். சு.ரா. தன் குருநாதரான க.நா.சு.வை விஞ்சினார் என்றும் தான் சு.ரா.வை விஞ்சிவிட்டோம் என்றும் நினைக்கிறார். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
சு.ரா.விடம் ஈகோ உண்டு என்றும் ஒரு படைப்பாளி சு.ரா.வை தாண்டாத வரை அவருக்கு பிரச்சினை இல்லை என்றும் அப்படி தாண்டிவிட்டால் அவரது படைப்புகளை பற்றி நல்ல வார்த்தை சொல்லமாட்டார், சமயத்தில் கொஞ்சம் அமுக்கப் பார்ப்பார் என்றும் ஜெயமோகன் சொல்கிறார். அப்படி இருந்தால் ஆச்சரியம் இல்லை. சு.ரா. என்ன தெய்வமா? மனிதர்தானே? சு.ரா.வை அப்படி எத்தனை பேர் தாண்டிவிட்டார்கள்? ஜெயகாந்தனுக்கு கிடைத்த பிரபலம் மீது அவருக்கு கொஞ்சம் மனத்தாங்கல் உண்டு, ஆனால் ஜெயகாந்தனை மிகவும் மதித்தார் என்றும், அசோகமித்ரனுக்கும் அவருக்கும் வெளியில் அறிவிக்கப்படாத பனிப்போர் உண்டு என்றும் ஜெயமோகன் சொல்கிறார். ஜெயமோகனுக்கும் தன் எழுத்து பற்றி ஈகோ – சரி பெருமிதம் – உண்டு என்பதை பதிவு செய்கிறேன்.
சு.ரா.வை பற்றி அவர் தரும் ஒரு படிமம் நன்றாக இருந்தது – பட்டுத் துணியில் சுற்றப்பட்ட இரும்புத் தடி. கொஞ்சம் மேட்டிமைத்தனம், மனிதர்களை எடை போடும் திறமை, இளைஞர்களை, ஒரு பட்டாளத்தையே விருந்தோம்பி கட்டி மேய்த்து அவர்களை அடுத்த படி ஏற வைக்கும் திறமைசாலி. Gentleman with a bit of ego என்ற படிமத்தை உண்டாக்குகிறார்.
சுத்த வெஜிடேரியன் ஆன சு.ரா. மீன் சாப்பிட்ட நிகழ்ச்சியை ஜெயமோகன் ஒரு பதிவில் எழுதி இருக்கிறார் – A true gentleman.
ஜெயமோகன் இந்த புத்தகம் எழுதும்போது நெகிழ்ந்த மன நிலையில் இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். (சு.ரா. மறைந்த ஓரிரு வாரங்களில் எழுதப்பட்ட புத்தகம்) என் அப்பாவின் குறைகள் எனக்கு தெரியும். ஆனாலும் அவர் மீது எனக்கு உயிர்தான். அதே போன்ற ஒரு உணர்வை சு.ரா. மீது அவர் வைத்திருப்பது தெரிகிறது.
எனக்கு இசைவில்லாத விஷயங்கள் சில: ஜெயமோகன் கருத்தில் ஒரு படைப்பு ஒரு தரிசனத்தை காட்டும்போது மட்டுமே உச்சத்தை அடைகிறது. தரிசனமே இல்லை என்று சொல்லும் படைப்புகளும் உச்சத்தை அடையலாம். ஜே ஜே அப்படிப்பட்ட ஒரு படைப்புதான். மாக்பெத் மாதிரி நாடகங்கள் மட்டுமே உச்சத்தை அடையலாம், ஆனால் சீசர் அண்ட் கிளியோபாட்ரா மாதிரி நாடகங்கள் அடைய முடியாது என்று சொல்வது எனக்கு இசைவில்லை. விஷ்ணுபுரம் எனக்கு மனித உணர்ச்சிகளை வேறு ஒரு மாபெரும் தளத்தில் காட்டுகிறது. நயாகரா போன்ற பிரமாண்டம். அதற்காக பத்து நொடியில் உடையும் சோப்பு குமிழிகளின் நிறங்களில் எனக்கு நிறைவு ஏற்பட முடியாதா? சு.ரா.வின் படைப்புகள் எனக்கு ப்ரூகலின் ஓவியங்களை நினைவுபடுத்துகின்றன. விஷ்ணுபுரம் குயர்னிகா ஓவியத்தை நினைவுபத்துகிறது. இரண்டும் கலையின் உச்சங்கள்தான். என்ன, எனக்கு குயர்னிகாவை விட விவசாயியின் திருமண விருந்து ஓவியம் பிடித்திருக்கிறது. ஆனால் ஜேஜேவை விட விஷ்ணுபுரம் பிடித்திருக்கிறது.
அப்புறம் கட்டுரைகள் எழுதும்போது யாராலும் மறுக்க முடியாத விஷயங்களையே எழுதுகிறார், அதனால் அதில் சாரம் இருப்பதில்லை என்றும் ந. பிச்சமூர்த்தி பற்றி ஒரு bland கட்டுரை எழுதினர் என்றும் ஜெயமோகன் சொல்கிறார். அவரது நினைவோடை சீரிஸ் புத்தகங்கள் அப்படி இல்லை – குறிப்பாக ஜீவா பற்றிய புத்தகம் ஒரு கிளாசிக்.
சு.ரா. மாதிரி ஒரு பெரிய எழுத்தாளரை பற்றிய முக்கியமான ஆவணம் இது. அது மட்டும் இல்லை, ஜெயமோகனைப் பற்றிய முக்கியமான ஆவணமும் கூட. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
பிற்சேர்க்கை: நான் இந்தப் பதிவை எழுதி பல மாதங்கள் ஆயிற்று. ஜெயமோகனை சந்தித்த புதிது. எப்படி சார் இருக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அவர் சகிக்கவில்லை என்பதை மிக நாகரீகமாகச் சொன்னார். தூக்கி பரணில் போட்டுவிட்டேன். பழைய draft மீண்டும் கண்ணில் பட்டபோது நாகரீகத்துக்கும் இங்கிதத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று பதித்துவிட்டேன்.
தொடர்புடைய பதிவுகள்:
சுந்தர ராமசாமி மீன் சாப்பிட்ட இரவு
ஒரு புளிய மரத்தின் கதை – பக்சின் விமர்சனம்
நினைவோடை – ஜீவா
37.523851
-122.047324
Like this:
Like ஏற்றப்படுகின்றது...