கேகேஎம் (பின் தொடரும் நிழலின் குரல்)

பின் தொடரும் நிழலின் குரல் நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. நாவல் conceive செய்யப்பட விதம் பல புனைவு வடிவங்களை – நாடகம், சிறுகதை etc . – கதையில் புகுத்த ஏதுவாக அமைந்திருக்கும். அந்த கான்செப்ட், அது செயல்படுத்தப்பட்டிருக்கும் விதம் இரண்டுமே ஜெயமோகனின் ஜீனியசை காட்டுகின்றன.

நாவலில் கேகேஎம் என்று லோகல் கம்யூனிஸ்ட்/தொழிற்சங்கத் தலைவர். நிரந்தரப் போராளி. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும்போது இந்தப் போராளி எதை எதிர்த்துப் போராடுவது என்று தெரியாமல் விழிக்கிறார். கதையின் ஆரம்பத்தில் அவரது சிஷ்யனான அருணாச்சலமே அவரைப் பதவியிலிருந்து இறக்கும் சதியில் பங்கேற்கிறான். தோழர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை ஒரு ஆன்மீகவாதியாக கழிக்கிறார். அற்புதமான கதாபாத்திரம்.

கேகேஎம்மின் ஒரிஜினல் யார் என்று என்ற கேள்வி ரொம்ப நாளாக மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது. ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரையே கேட்டேன், அவர் பிடி கொடுத்துப் பேசவில்லை.

கே.பி.ஆர். கோபாலன் என்ற கேரளா கம்யூனிஸ்ட் தலைவரைப் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் ஒரு பதிவு ஒன்றைக் கண்டேன். யார் கேகேஎம் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடின் அரசு கோவில் நிலங்களைத்தான் மறுவிநியோகம் செய்தது என்று கேகேஎம் நாவலிலும் குறைப்படுவார் என்று நினைவு. கேகேஎம்மும் நீண்ட காலம் கழித்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார்.

கே.பி.ஆர். போன்ற ஆளுமைகள் எப்போதுமே ஆச்சரியப்படுத்துகின்றன. இவர் போன்றவர்கள் நான் எண்ணி இருந்த அளவு அபூர்வம் இல்லை என்பது நம்பிக்கை அளிக்கும் விஷயம். கே.பி.ஆர். முன்னாள் கேரளா முதல்வர் ஈ.கே. நாயனாரின் அங்கிள் (மாமாவா, பெரியப்பாவா, சித்தப்பாவா என்று தெரியவில்லை), நாயனாருக்கு ஒரு inspiration என்றும் எங்கோ படித்தேன்.

இணையத்தில் தேடியதில் கே.பி.ஆரின் ஃபோட்டோ எதுவும் சரியாக கிடைக்கவில்லை. கே.பி.ஆரும் நாயனாரும் சேர்ந்து இருக்கும் ஒரு இத்துனூண்டு ஃபோட்டோதான் கிடைத்தது. எலும்பும் தோலுமாக கே.பி.ஆர். இருப்பதும் கொஞ்சம் வளப்பமாக நாயனார் இருப்பதும் என் மனதில் இருந்த பிம்பத்துக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
ஜெயமோகன் பதிவு
கே.பி.ஆர். பற்றிய விக்கி குறிப்பு

அஞ்சலி – ர.சு. நல்லபெருமாள்

எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் மறைந்தார் என்று ஜெயமோகன் தளத்தில் படித்தேன். என்னைப் பொறுத்த வரையில் எழுத்தாளருக்கு அஞ்சலி என்றால் அவர் எழுத்தைப் பற்றி பேசுவதுதான். நான் அவரது கல்லுக்குள் ஈரம் புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் படித்ததில்லை. அவரது மாயமான்கள் என்ற புத்தகத்தை உள்ளூர் நூலகத்தில் பார்த்த நினைவு இருந்தது, அதையாவது படித்துவிட்டு அஞ்சலியை எழுதுவோம் என்று தள்ளிப் போட்டேன்.

கல்லுக்குள் ஈரம் நாவலைப் பற்றி என் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சில வருஷங்களுக்கு முன்தான் படிக்க முடிந்தது. இப்போது மங்கலாகத்தான் நினைவிருக்கிறது. காந்தியை கொல்ல நினைக்கும் ஒருவன் மனம் மாறுகிறான் என்று வெகு சுருக்கமாக சொல்லலாம். என்னை கவர்ந்த அம்சம் மெலோட்ராமா குறைவாக இருந்ததுதான். ஒரு அலை ஓசை அளவுக்கு நம்ப முடியாத தற்செயல் நிகழ்ச்சிகள் எல்லாம் கிடையாது. பாத்திரங்கள் ஓரளவு உண்மையானவர்களாக, நம்பகத்தன்மை உடையவர்களாகத் தெரிந்தார்கள். ஒரு above average “வணிக நாவல்” என்று சொல்லலாம். ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இங்கே வாங்கலாம். விலை 230 ரூபாய்.

ஹே ராம் படம் இதைத் தழுவி எடுக்கப்பட்டது என்கிறார்கள். எனக்கு நிறைய வித்தியாசங்கள் தெரிகின்றன.

மாயமான்கள்: சில பாத்திரங்களை மட்டும் காட்டுகிறார், கதை என்பதே இல்லை. கட்சி பலத்தை வைத்து எல்லாரிடமும் பணம் பிடுங்கும் வக்கீல்; அவரது இளம் மனைவி; ஜட்ஜ்; அவரது இளம் மனைவி, நியூவேவ் கதைகள் எழுதுபவர்; அந்த கதைகளைப் பதிக்கும் பத்திரிகை ஆசிரியர் – அவளை வளைக்கப் பார்க்கிறார்; இளம் ஜூனியர் வக்கீல்கள், சம்பத் பணக்கார நளினியை மணந்து சுகவாழ்க்கை வாழப் பார்க்கிறான். நளினியின் அப்பா, மில் முதலாளி; எல்லாரும் caricatures மட்டுமே. தவிர்க்கலாம்.

மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.

நல்லபெருமாள், அகிலன், நா.பா., மு.வ. போன்றவர்கள் கொஞ்சம் லட்சியவாதம், சமூகப் பிரக்ஞை உள்ள வணிக எழுத்தாளர்கள். சமூகத்தைத் திருத்த வேண்டும், சமூக அவலங்களை எழுத்தில் காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவர்கள் எழுத்தில் தெரிகிறது. துரதிர்ஷ்டம், அவர்கள் எழுதியது எல்லாம் கால ஓட்டத்தில் மறைந்துவிடும் என்றே கருதுகிறேன். நல்லபெருமாளின் பலம் (நான் படித்த இரண்டு புத்தகங்களை மட்டும் வைத்து) ஓரளவு மிகை உணர்ச்சிகள் (melodrama), உபதேசம் ஆகியவற்றை குறைத்து நம்பகத்தன்மையை கொஞ்சம் அதிகரித்து எழுதி இருப்பது. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் கல்லுக்குள் ஈரம் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

அட்லஸ் ஷ்ரக்ட் திரைப்பட விமர்சனம்

நான் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று அட்லஸ் ஷ்ரக்ட் (Atlas Shrugged). அதன் தாக்கம் இன்னும் என் மேல் இருக்கிறது.

எதேச்சையாக போன வெள்ளிக்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தது. போகலாம் என்று முடிவு செய்தேன். இந்த தளத்தின் சக ஆசிரியரான பக்சும் வந்தான். தியேட்டருக்குள் நுழைந்தால் எங்களையும் சேர்த்து நான்கு பேர்தான் இருந்தோம்.

படத்தின் தரம் அப்படி. ஏறக்குறைய புத்தகத்தில் உள்ளபடிதான் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நடிப்பு எல்லாம் படு சுமார். அதுவும் ஹாங்க் ரியர்டனாக நடிக்கும் கிரான்ட் பௌலர் மரம் மாதிரி நிற்கிறார். எல்லிஸ் வ்யாட்டாக வரும் கிரஹாம் பெக்கல் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.

கதையின் முதல் பாகம் மட்டுமே இப்போது திரைப்படமாக வந்திருக்கிறது. திறமைசாலி தொழிலதிபர்கள் எல்லாரும் மெதுமெதுவாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ரயில் கம்பெனி நடத்தும் டாக்னி டாகர்ட் தன்னுடைய அண்ணன் மற்றும் கம்பெனி CEO ஆன ஜிம் டாகர்ட் உட்பட்ட பலரிடமிருந்து முட்டுக்கட்டைகளை சந்திக்கிறாள். ஜிம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கும் டைப். டாக்னியோ உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று என்னும் டைப். எல்லிஸ் வாட் என்ற பெட்ரோலிய கம்பெனி முதலாளி தான் உற்பத்தி செய்யும் பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ரயில் கம்பெனியை ஜிம் தன் அரசியல் நண்பர்களை வைத்து மூடிவிடுகிறான். வ்யாட்டுக்கு டாகர்ட் ரயில் கம்பெனியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை. ஆனால் டாகர்ட் ரயில் கம்பெனி ரயில்களை சரியாக ஓட்டுவதில்லை. தண்டவாளத்தின் தரம் மோசமாக இருப்பதால் ரயில்கள் நேரத்தில் வருவதில்லை, விபத்துகள் ஏற்படுகின்றன. டாக்னி புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ரியர்டன் உலோகத்தை வைத்து தண்டவாளத்தைப் போடுகிறாள். ரியர்டன் உலோகக் கம்பெனி முதலாளி ஹாங்க் ரியர்டன் அவளுக்கு பல உதவிகளை செய்கிறார். அவர்களுக்கு எதிராக ஊடகங்கள், அரசு ஆராய்ச்சி நிறுவனம், பலரும் வேலை செய்கிறனர். எல்லா எதிர்ப்புகளையும் மீறி தண்டவாளம் போடப்படுகிறது, ரியர்டன் உலோகம் உண்மையிலேயே ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு என்று உலகம் உணர்கிறது. ஆனால் வியாட் இனி மேல் கம்பெனி நடத்த முடியாத சூழ்நிலையை அரசு ஏற்படுத்துகிறது. வியாட் தன் பெட்ரோல் கிணறுகளில் தீ வைத்துவிட்டு மறைந்து போய்விடுகிறார்.

இந்த மாதிரி பிரச்சாரக் கதைகளை படமாக்குவதும் கஷ்டம். இது கம்யூனிசத்தை எதிர்த்து காபிடலிசத்தின் புகழ் பாடும் கதை. கதையின் ஒரு பகுதியில் ஐம்பது அறுபது பக்கங்களுக்கு ஒரு சொற்பொழிவு வரும். 🙂 இதையெல்லாம் படத்தில் வைத்தால் ஒருவரும் வரமாட்டார்கள்.

டெய்லர் ஷில்லிங் டாக்னியாகவும், மாத்யூ மார்ஸ்டன் ஜிம் டாகர்ட்டாகவும், சு கார்சியா ஃ பிரான்சிஸ்கோ டன்கோனியாவாகவும், கிரான்ட் பௌலர் ஹாங்க் ரியர்டனாகவும், கிரஹாம் பெக்கல் எல்லிஸ் வ்யாட்டாகவும் நடித்திருக்கிறார்கள். இயக்கம் பால் ஜொஹான்சன்.

படம் தீவிர அட்லஸ் ஷ்ரக்ட் புத்தக ரசிகர்களுக்கு மட்டும்தான். திரைப்படம் என்ற வகையில் தோல்வியே.

தியேட்டரை விட்டுப் போகும்போது மீண்டும் எண்ணிப் பார்த்தேன். பத்து பேர் இருந்தோம். முதல் நாளே, அதுவும் வெள்ளி இரவு அன்றே இப்படி நிலைமை என்றால் படம் ஓடாது!

P.S. சினிமா தளமான அவார்டா கொடுக்கறாங்கவிலும் இந்த விமர்சனம் வந்திருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
ஐஎம்டிபி குறிப்பு

சுஜாதாவின் குறுநாவல் (கணேஷ்-வசந்த்) – “மலை மாளிகை”

சில சமயம் சுஜாதாவுக்கு ஒரு கான்செப்ட்-ஐ தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோன்றும். அதை வைத்து சின்னதாக ஒரு கதை எழுதுவார். இருதய மாற்று சிகிச்சையை வைத்து “உள்ளம் துறந்தவன்” என்று ஒரு நாவல், muscular dystrophy உள்ள ஒரு சிறுவன் பற்றிய ஆஸ்டின் இல்லம் என்று ஒரு சின்ன நாவல் (அப்பாவின் ஆஸ்டினா? திருத்திய இனியாவுக்கு நன்றி!) என்று சில நினைவு வருகின்றன. இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். Gerontology, Longevity, கூடுவிட்டு கூடு பாய்வது என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு கணேஷ் வசந்த் கதை எழுதி இருக்கிறார்.

சிம்பிளான கதை. கொடைக்கானல். வயதான, longevity பற்றி ஆராயும் செல்வந்தர் செல்வரங்கம். அவருக்கு ஒரு அழகான பெண் அசிஸ்டன்ட் – காஞ்சனா. (பின்னே வசந்த் யாரை சைட் அடிப்பது?) செல்வரங்கம் கணேஷையும் வசனத்தையும் கொடைக்கானலுக்கு அழைக்கிறார். போகிற வழியில் காஞ்சனாவைப் பார்க்கிறார்கள். காஞ்சனா நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. செல்வரங்கத்தின் வீட்டில் ஆமைகள் (ஆமைகள் நீண்ட நாள் உயிர் வாழும்), மூலிகைகள் என்று என்னவெல்லாமோ தட்டுப்படுகிறது. காஞ்சனாவையும் பார்க்கிறார்கள். உள்ளே போனால் செல்வரங்கத்தின் உயிரற்ற உடல். போலீசுக்கு ஃபோன் செய்கிறார்கள். ஆனால் செல்வரங்கம் உயிரோடுதான் இருக்கிறார். குழப்பம். பிறகு செல்வரங்கம் தான் உயிர் என்றால் என்ன, உயிரை ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாற்றுவது எப்படி என்றெல்லாம் கண்டுபிடித்துவிட்டேன் என்கிறார். காஞ்சனாவின் உடலுக்குள் தன் உயிரை செலுத்துவது போல ஒரு காட்சி. காஞ்சனா பேசுவதே இல்லை. என்ன மர்மம்? படித்துக் கொள்ளுங்கள்.

ஒரு quote:
கணேஷ் வசந்தை கேட்கிறார்: “காதல்னா உன் அகராதியின் என்ன அர்த்தம்?”
வசந்த்: “அது வந்து, ஒரு மாதிரி சிலுத்துக்கும் பாஸ். மூக்கு நுனில சில்லுன்னும் காத்து நுனில வெப்பமாகவும் இருக்கும். அப்புறம் இருப்புக் கொள்ளாது. எதையாவது எதாலயாவது பண்ணிக்கிட்டே இருக்கணும் போல… உங்களுக்குப் புரியாது பாஸ்!”

பெரிதாக முடிச்சு போட்டுவிட்டார். அதை எப்படி அவிழ்ப்பது? என்னவோ எழுதி முடித்திருக்கிறார். கதை பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எனக்கு தேறவில்லை. கணேஷ் வசந்த்தின் தீவிர ரசிகர்களுக்காக மட்டும்.

கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது. விலை 30 ரூபாய்.

சுந்தர ராமசாமியின் “நினைவோடை – ஜீவா”

சுந்தர ராமசாமி சில ஆளுமைகளை – கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, எழுத்தாளர்கள் க.நா.சு., சி.சு. செல்லப்பா, நண்பர் கிருஷ்ணன் நம்பி மற்றும் சிலரைப் பற்றிய தன் நினைவுகளை நினைவோடை என்ற சீரிஸில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். எல்லாம் சின்ன சின்ன புத்தகங்கள், சுலபமாக ஒரு இருபது முப்பது நிமிஷத்தில் படித்துவிடலாம். இவை எதுவும் வாழ்க்கை வரலாறு இல்லை. சுந்தர ராமசாமிக்கு அவர்களோடு இருந்த தொடர்பு, சுராவின் கண்ணில் இவர்கள் என்றுதான் இருக்கிறது.

ஜீவாவைப் பற்றி என் தலைமுறை ஆட்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஓரளவு தலைவர்கள், சமகால தமிழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் உள்ள எனக்கே கூட ஜீவா ஒரு பேர்தான். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. என்ன சாதித்தார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டாரா என்பது கூடத் தெரியாது. சுரா ஜீவாவின் ஆளுமையை சுலபமாகக் காட்டிவிடுகிறார்.

ஜீவாவின் பங்களிப்பு ஒரு தொழிற்சங்கவாதி என்றோ, அறிவுஜீவி என்றெல்லாம் இல்லை. அவர் ஒரு people person. எல்லாருடனும் கலந்து பழகுபவர். பேச்சாளர். அதுவும் அன்றைக்கு மக்கள் மனதை கவரக் கூடிய விதத்தில் பேசுவதில் வல்லவர்கள் – அண்ணாதுரை, கருணாநிதி, ம.பொ.சி. என்று பலர் இருந்தார்கள். இவர் அவர்களிலேயே சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். கூட்டத்தை கவரக்கூடிய charisma உள்ளவர். தான் சித்தாந்தத்தை கரைத்துக் குடித்தவன் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. எப்பேர்ப்பட்டவனுக்கும் ஏதோ தெரிந்திருக்கும், அதைப் பற்றி பேச வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். வரட்டு சித்தாந்தத்தைத் தாண்டி மனிதர்களைப் பார்த்தவர். உண்மையிலேயே இவரை மாதிரி ஆளுக்காகத்தான் ஓட்டு விழும். மனிதர்களின் இதயத்தை தொடக்கூடியவர். நல்ல மனிதர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஆனால் இவர் மாதிரி ஆட்களின் பங்களிப்பு வெகு விரைவில் மறந்துவிடும். அவரைப் பார்த்துப் பேசி பழகி பேச்சைக் கேட்டவர்களுக்குத்தான் நினைவிருக்கும். அவரது legacy என்று சொல்ல அந்த நினைவுகளைத் தவிர வேறு எதுவுமில்லை. அந்த நினைவுகளைத்தான் சுரா பதிவு செய்திருக்கிறார்.

சுரா கம்யூனிஸ்ட் கட்சி அனுதாபியாக இருந்திருக்கிறார். அதற்கு ஜீவா ஒரு முக்கிய காரணம். சின்ன வயது சுராவுக்கு ஜீவா ஒரு ஹீரோவாக இருந்திருக்கிறார். பிறகு கம்யூனிஸ்ட் கட்சியோடு கசப்பு ஏற்பட்ட பிறகும் ஜீவா இவரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். கடைசி வரை நல்ல உறவு இருந்திருக்கிறது. அந்த உறவை சிறந்த, ஆனால் சிம்பிளான கோட்டோவியம் மாதிரி இங்கே காட்டி இருக்கிறார்.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை நாற்பது ரூபாய். புத்தகத்தின் சில பக்கங்களை இங்கே படிக்கலாம்.

ஜீவாவைப் பற்றி ஒரு நல்ல வாழ்க்கை வரலாறு வர வேண்டும். அதற்கு தகுதியானவர் அவர் என்று அவரைப் பற்றி அதிகம் தெரியாத எனக்கே தெளிவாகத் தெரிகிறது. இப்போதைக்கு இதையாவது படியுங்கள்!

பக்சின் குறிப்பை இங்கே படிக்கலாம்.

பிற்சேர்க்கை: கே. ஜீவபாரதி ஜீவா எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்திருக்கிறார். அதைப் படித்தபோது ஜீவா அலங்காரப் பேச்சு, எதுகை மொகனை, இவற்றை எல்லாம் நம்பியவர் இல்லை என்று தெரிகிறது. விவரங்களைச் சேகரித்து நிறைய பேசி இருக்கிறார். புத்திசாலித்தனமாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அந்தப் பேச்சுகளுக்கு இன்று எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்னையில் ட்ராம் சர்வீஸ் நின்றபோது தொழிலாளர்கள் பட்ட பாடு என்பதில் இன்றைய மனிதர்களுக்கு என்ன இருக்கிறது?

ரொவால்ட் டாலின் சிறுவர் புனைவுகள்

மூன்றாவதோ நான்காவதோ வகுப்பில் என் பெண்ணுக்கு BFG என்ற ஒரு புத்தகத்தை படித்து அதைப் பற்றி ஒரு ரிப்போர்ட் எழுதவேண்டும். அதற்கு முன்னால் ரொவால்ட் டாலின் சில கதைகளைப் படித்திருந்தாலும் குழந்தைகளுக்காக நிறைய எழுதுவார் என்று தெரியாமல் போய்விட்டது. BFG ஒரு கிளாசிக், பெரியவர்களுக்கே பிடிக்கும். எட்டு ஒன்பது வயதில் சொல்லவே வேண்டாம்.

சாகி (Saki), ரொவால்ட் டால் (Roald Dahl) குசும்பு நிறைந்த எழுத்தின் சிறந்த பிரதிநிதிகள். டாலின் எழுத்துகளில் எவனாவது மாட்டிக் கொள்வான். திட்டம் போட்டு கவிழ்க்கப் பார்ப்பவன் தானே கவிழ்வான். Underdogs ஜெயிப்பார்கள். அதுவும் டால் சிறுவர்களுக்காக எழுதிய புத்தகங்கள் அபாரமானவை. படிப்பதற்கே ஜாலியாக இருக்கும். தமிழில் இந்த மாதிரி யாருமே எழுதுவதில்லை என்று எனக்கு பெரிய மனக்குறை உண்டு.

Fantastic Mr. Fox, 1970: ஒரு ஏழு எட்டு வயதில் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம். மிஸ்டர் நரி மூன்று பெரும் பண்ணையார்களின் கோழி, வான்கோழி எல்லாவற்றையும் தினமும் திருடி தன் குடும்பத்துக்கு விருந்து வைப்பவர். ஒரு நாள் பண்ணையார்கள் மிகவும் கடுப்பாகி இவர் இருக்கும் போனதை உடைத்து இவரை வெளியே தள்ளி இவரை கொல்லப் பார்க்கிறார்கள். பெரிய பெரிய புல்டோசர்களைக் கொண்டு வந்து இவர் போனதை உடைக்கிறார்கள். அப்புறம்? உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், இந்த கதையை படித்துக் காட்டுங்கள், இல்லாவிட்டால் அவர்களை படிக்க வையுங்கள். சமீபத்தில் திரைப்படமாகவும் வந்தது.

Enormous Crocodile, 1978 படிக்கும்போதே யாராவது குழந்தையைப் பிடித்து கதையை சொல்ல வேண்டும் என்று நினைக்க வைத்த புத்தகம். 🙂 கதை கிதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஆனால் படிக்கும்போதும் கேட்கும்போதும் ஜாலியாக இருக்கும்! க்வெண்டின் ப்ளேக் (Quentin Blake) வரைந்த படங்கள் அந்த ஜாலி உணர்வை இன்னும் கூட்டுகின்றன.

Matilda, 1988: Superb! ஒரு புத்திசாலி சிறு பெண்ணுக்கு சில அமானுஷ்ய சக்திகள் ஏற்படுகின்றன. குடும்பத்தினர், கொடுமைக்கார ஸ்கூல் டீச்சர் எல்லாரையும் எப்படி சமாளிக்கிறாள் என்று கதை. கட்டாயம் படியுங்கள், குழந்தைகளை படிக்க வையுங்கள்.
ஒரு நல்ல நாவல் திரைப்படமாக்கும்போது வெகு அபூர்வமாகவே திரைப்படம் நாவலின் தரத்துக்காவது வருகிறது என்பது என் அனுபவம். ஆனால் மடில்டா திரைப்படம் புத்தகத்தை விடவே ஒரு படி மேல்! கட்டாயம் பாருங்கள்! டானி டி விடோ (Danny de Vito) பிரமாதமாக இயக்கி இருக்கிறார்.

BFG, 1982: அந்த Big Friendly Giant பேசும் விதம் ஒன்றே போதும் இந்த புத்தகத்தைப் படிக்க. அதற்கு மேல் ஃப்ராப்ஸ்காட்டில் என்று ஒரு பானம். சோடா கீடா எல்லாவற்றிலும் குமிழ்கள் மேலே போகும், நமக்கு ஏப்பம் வருகிறது. இந்த அபூர்வ பானத்தில் குமிழ்கள் கீழே போகின்றன, என்ன ஆகும்! பெரிய சத்தத்தோடு whizpopperகள்தான்!
இந்த புத்தகம் பிடிக்காத ஏழெட்டு வயதினரை நான் இன்னும் பார்க்கவில்லை. திரைப்படமாகவும் வந்தது.

James and the Giant Peach, 1961: புகழ் பெற்ற இன்னொரு புத்தகம், ஆனால் நான் அவ்வளவாக ரசிக்கவில்லை. குழந்தைகளுக்கு பிடிக்கலாம். திரைப்படமாகவும் வந்தது.

Charlie and the Chocolate Factory, 1964: இன்னொரு புகழ் பெற்ற புத்தகம். சின்ன வயதில் படித்திருந்தால் இன்னும் ரசித்திருப்பேன். திரைப்படமாகவும் வந்தது.

George’s Marvellous Medicine இன்னொரு அருமையான கதை. ஜார்ஜ் தன் நச்சரிப்பு பாட்டிக்காக ஒரு புது மருந்தைத் தயாரிக்கிறான். மருந்தில் சேர்ப்பவை: ஷூ பாலிஷ், பெயின்ட், ஷாம்பூ, சோப், எஞ்சின் ஆயில் இத்யாதி. என்ன ஆகிறது?
மின்னூல் கிடைக்கிறது.

Esio Trot இன்னொரு சிம்பிளான குழந்தைக் கதை. ஆமை வளர்க்கும் பெண்ணை சைட்டடிக்கும் மாமாவின் தந்திரங்கள்.

டால் பெரியவர்களுக்காக எழுதியவை எல்லாம் வணிக எழுத்துதான். சாகி எழுதுவதைப் போல அடிநாதமாக ஒரு தீசத்தனம் தெரியும். எனக்குப் பிடித்த சிறுகதைகள் – Mrs. Bixby and the Colonel’s Coat, Parson’s Pleasure, Way Up to Heaven.
உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் டாலின் புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள், சினிமாவாக வரும்போது அழைத்துக் கொண்டு போங்கள்!

ராஜமார்த்தாண்டன் சிபாரிசுகள்

மூலப்பதிவு – தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்

ராஜமார்த்தாண்டன் முக்கியமான இலக்கிய – குறிப்பாக கவிதை விமர்சகர். நமக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம் என்பதால் எனக்கு இவரைப் பற்றி தெரிந்ததெல்லாம் secondhand information-தான். என்றாவது ஒரு நாள் இவர் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” கவிதைத் தொகுப்பை தம் கட்டி படித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமியின் பக்தர் போலிருக்கிறது, பத்தில் மூன்று புத்தகம் சுரா எழுதியதுதான். (இரண்டு ஜெயமோகனுடையது)

  1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் அருமை. என் பதிவு இங்கே. கந்தர்வனும் சிபாரிசு செய்கிறார்.
  2. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி அருமை.
  3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் அருமை. வேதம் படிக்கும், ஒரு விதவையுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பும் மகன், அவனது சோரம் போகும் அம்மா ஆகிய இரு பாத்திரங்களை வைத்து விளையாடி இருக்கிறார்.
  4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி அருமை. வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.
  5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி ரொம்ப நாளாக ஷெல்ஃபில் தூங்குகிறது. இன்னும் படிக்கவில்லை.
  6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன்.
  7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அருமையான புத்தகம். வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.
  8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் ஜெயமோகன் நாலைந்து அற்புதமான நாவல்களை எழுதி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் – விஷ்ணுபுரத்தை விட, ஏழாம் உலகத்தை விட, காடு நாவலை விட.
  9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன் சா.கந்தசாமியின் சிபாரிசும் கூட.
  10. உபபாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன் நல்ல புத்தகம். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு fascination உண்டு. மகாபாரதத்தை வைத்து எவ்வளவு மோசமாக எழுதினாலும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். இது நன்றாகவே எழுதப்பட்டிருக்கும், ஆனால் மகாபாரதத்தை வைத்து இதை விட நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன.

18வது அட்சக்கோடு

ஹைதராபாத் இரண்டு பெரிய பரம்பரைகளால் ஆளப்பட்டு வந்தது. முதலில் குதுப் சாஹிப் பரம்பரை. அப்பொழுது ஹைதரபாத் என்ற நகரம் இல்லை. கோல்கொண்டாவை தலைநகராகக் கொண்டு 8 குதுப் சாஹிப் மன்னர்கள் 1518லிருந்து 1687 வரை ஆண்டு வந்தார்கள். அதில் ஐந்தாவது குதுப் சாஹிப் மன்னன், முகமது குவாலி குதுப் சாஹிப் தன் பதினான்கு வயதிலிருந்து பாக்மதி என்ற இந்து அரண்மனை நாட்டியப் பெண்ணின் மேல் காதலுற்றான். ஆனால் அன்றைய சமூகம் அதை அங்கீகரிக்கத் தயங்கியது. அவன் தந்தை மகனின் ஆசையை புரிந்துக் கொண்டு பாக்மதி வாழும் சிச்லம் கிராமத்திற்கு மகன் சென்று வர வசதியாக இருக்கட்டுமே என்று நினைத்து கோல்கொண்டாவிற்கும் சிச்லத்திற்கும் நடுவே ஓடும் மூஸி நதிக்கு மேல் ஒரு பாலம் அமைத்துக் கொடுத்தான். அது புராணப்பூல் அல்லது “ஓல்ட் பிரிட்ஜ்” என்று இன்றும் வழங்கப் படுகிறது. பொறுத்திருந்து தான் மன்னனானதும் (1591ல்) பாக்மதியை திருமணம் செய்து அவளை இஸ்லாமிய மத மாற்றம் செய்தான். அவளை பட்டத்து ராணியாகவும் ஆக்கினான். அப்பொழுது இரண்டு பெயர் மாற்றங்கள் நடந்தன். பாக்மதியின் பெயரை “ஹைதர் மஹால்” என்றும் மனைவியின் மேல் உள்ள அன்பின் அடையாளமாக கோல்கொண்டாவை “ஹைதராபாத்”என்றும் மாற்றியமைத்தான். பின்னர் மூன்று குதுப் சாஹிப் மன்னர்கள் ஆண்டனர். தானா ஷா கடைசி மன்னன். அவன் ஆண்டு கொண்டிருக்கும் பொழுது முகலாய மன்னன் ஔரங்கசீப் ஹைதரபாத் மீது படையெடுத்தான். எட்டு மாதங்கள் தாக்குப் பிடித்த தானா ஷா, தன் தளபதி மஹாபத் கானால் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு 1687ல் தன் பிடியை இழந்தான். மஹாபத் கான் முகாலாய மன்னன் ஔரங்கசீப் அணியில் சேர்ந்ததன் பயனாக கோல்கொண்டாவின் கவர்னராக ஆனான். காலப்போக்கில் இதுவரை தக்கானத்தின் தலைநகராக இருந்து வந்த ஹைதராபாதை விட்டு இந்தக் காலகட்டத்தில் தலைநகர் ஔரங்காபாத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் ஹைதரபாத் களையிழந்தது.

1713இல் பரூக்சியர், ஔரங்கசீப்பின் படைத்தளபதி சின் க்விலிஜ் கானின் பேரனான குவமாருட்டினை ஹைதராபாதின் கவர்னர் பதவியில் அமர்த்தினான். அப்பொழுது தான் “நிஜாம்-அல்-ஹக்” என்ற அடைமொழி வழங்கப்பட்டது. முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவு நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது. அஸாஃப் சாஹி என்று வழங்கப் படும் இந்த நிஜாம் பரம்பரை முழுமையாக தக்கான ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொண்டது குவமாருதீன் காலத்தில் தான். மீண்டும் ஔரங்காபாத்திலிருந்து தலை நகர் ஹைதரபாத்திற்கு மாற்றப்பட்டது. ஏழு நிஜாம்கள் இந்த பரம்பரையில் ஆட்சி செய்து வந்தனர்.

1911ல் ஏழாம் நிஜாம் மிர் ஒஸ்மான் அலிக் கான் ஆட்சிக்கு வந்தான். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பொழுது தான் சுதந்திரமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வரவேண்டும் என விரும்பினான். அதாவது இந்தியாவுடன் இணைவதற்க்கு தயாராக இல்லை. ஆனால் இது சர்தார் படேலுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தலைவலி. இந்தியாவின் வயிற்றில் வளரும் புற்றுநோய் தக்கானம் என்று நினைத்தார். பிரபல வக்கீல் சர் வால்ட்டர் மான்க்ட்டன் நிஜாமுக்காக பிரிட்டிஷ் பார்லிமெண்டில் வாதடினார். ஆனால் மவுண்ட்பேட்டன் நிஜாம் இந்தியாவுடன் இணைவதே  சிறந்தது என்று கருத்துக் கூறி வந்தார். இந்தியாவுக்காக ஹைதராபாத் ஸ்டேட் காங்கிரஸ் தக்கானத்தில் போராடியது. நிஜாமுக்காக இட்டிஹாட்-அல்-முஸ்லிமீன் போராடியது. இதன் தலைவர் காஸீம் ரஜ்வி என்ற அலிகாரில் பயிற்சி பெற்ற வக்கீல். ரஜாக்கர் என்ற போராளிகள் படையை உருவாக்கினான். கத்தியையும் துப்பாக்கிகளையும் கையில் வைத்துக் கொண்டு ஹைதராபாத் தெருக்களை வலம் வந்தனர் ரஜாக்கர்கள். அதே நேரத்தில் நிஜாம் ஆட்சியில் அதிருப்தி அடைந்திருந்த கம்யூனிஸ்ட்கள் தெலிங்கானா பகுதிகளில் நிலங்களை நிஜாம் ஆட்சியிலிருந்து அபகரித்து விவசாயிகளுக்கு பங்கீடு செய்யத் தொடங்கினர். இந்த கம்யூனிஸ்ட் ”இணை ஆட்சியில்” வாராங்கல், கரீம்நகர், நல்கொண்டா பகுதிகளிலிருந்து கிட்டதட்ட 1000 கிராமங்கள் நிஜாம் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தது. காசீம் ரஜ்வி (ஜின்னாவின் ஆதரவுடன்), பிரிட்டிஷ் கான்செர்வேட்டோரி கட்சி, நிஜாம் ஒரு பக்கம் – மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இந்தியா இன்னொரு பக்கம்.

இந்த பின்புலத்தில் தான் அசோகமிதரனின் ”18வது அட்சக்கோடு” விரிகிறது. சந்திரசேகர் என்னும் கல்லூரி மாணவன் தன் குடும்பத்துடன் செகந்திராபாத் லான்ஸர் பாரக்ஸில் வசிக்கிறான். கொந்தளிக்கும் ஹைதராபாத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகம். 85 சதவிகிதம் இந்துக்கள். நிஜாம் சர்க்காரின் பெரிய பதவிகளில் அனேகமாக முஸ்லீம்கள். சராசரி மக்கள் தொகை பிற முஸ்லிம்களாலும் இந்துக்களாலும் அடங்கியிருந்தது. நிஜாமுக்கும் இந்திய யூனியனுக்கும நடக்கும் போராடங்களெல்லாம் மேட்டிமை இஸ்லாமியக் குடுமபங்களைப் பாதிக்காது போலும் என்று சந்திரசேகருக்குத் தோன்றுகிறது. அவன் கிரிக்கெட் நெட் பிராக்டீஸ் போகும் பொழுது நாஸிர் அலிக்கானால் அவன் கௌரவமாகவே நடத்தப்படுகிறான். சில சமயங்களில் அவனிடமிருந்து சலுகைகளும் கிடைக்கிறது. ஆனால் கிரிக்கெட் பிராக்டீஸ் முடிந்து வீடு திரும்பும் பொழுது ரஜாக்கர்களால் தாக்கப்படுகிறான். என்ன ஏது என்று கேட்பதற்கு ஆள் இல்லை. கேட்பவர்களும் ஏதோ பிரச்சனையை கொண்டு வருவானோ என்று ஒதுங்கப் பார்க்கிறார்கள்.

சந்திரசேகருக்கு வெளியில் பிரச்சனைகள் எல்லாம் பதின்ம பருவ பிரச்சனைதான். ஆனால் எதிலும் உக்கிரமில்லாத மேம்போக்கான பிரச்சனைகள். வீட்டின் பொறுப்புகளை அக்கறையுடன் கவனிப்பது, பிரச்சனை உருவாக்க வரும் ஆங்கிலோ-இந்திய குடுமபச் சகோதரர்களை கையாளுவது, கிரிக்கெட்டில் தான் காலூன்றுவோமா என்று தவிப்பது , மகாத்மா காந்தியை சுட்டவர்கள் மேல் வெறி உருவாகுவது போன்ற நிகழ்வுகளில் பல்வேறு உணர்ச்சிகளுடன் ஒரு பதின்ம வயது உள்ளம் எப்படி போராடும், பின்னர் இப்படிப்பட்ட மனச் சஞ்சலங்களை கையாள எந்தக் குடுமப்ச் சூழ்நிலை சாதகமாக இருக்கும் என்பதெல்லாம் பல இடங்களில் நயத்துடன் வெளிப்படுத்தப்படுகிறது.

அசோகமிதரன் கதைகளில் பல விஷயங்கள் பூடகமாகவே சொல்லப்பட்டிருக்கும். வாசகர்கள் சிந்தித்துப் பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும். கெமிஸ்டிரி லாப்பில் உப்பை கஷ்டப்பட்டு கண்டுபிடிப்பது ஒரு இருபது பேர் என்றும் மற்றவர்கள் அதை மிகச்சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள் என்பது முதல் பிற பல முக்கிய விஷயங்களையும் அவர் பூடகமாகவேச் சொல்கிறார். 18வது அட்சக்கோடு என்பதும் கூட பூடகம் தானே!

கலவரங்களில் மனித மனம் எப்படியெல்லாம் தன் உயிரை காத்துக் கொள்ள போராடுகிறது, தன் குடுமபத்தை காப்பாற்றுகிறது. வெறுப்பு என்ற ஒரே காரணத்திற்க்காக நுன்னுணர்வுகளை அகத்தில் அழித்து சக மனிதர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ள எப்படி முடிகிறது? நுன்னுணர்வுகள் இரண்டு வகையாக பரிணமிக்கிறது. ஒன்று பிற மனிதர்களை இழிவு படுத்திவிடக்கூடாது என்பதற்காக எழுச்சியூட்டும் அறமற்ற செயலை செய்யாமலேயே விலகியிருந்து பாதுகாப்பது; அல்லது தெரிந்தோ தெரியாமலோ ஒரு இழிவுச் செயலில் ஈடுபட்டு அதன் குற்ற உணர்வில் ஒரு தரிசனத்தை அடைவது. மனிதனை மனிதனாகவும் உலகை வாழ்வதற்கு உகந்த இடமாக வைப்பதும் இந்நுணர்வுகளே என்பது கதையின் ஒரு பெரிய தரிசனமாக உணரப்படுகிறது.

A related Slideshow

This slideshow requires JavaScript.

 

இந்த புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபயர்க்கப்பட்டு “18th Parallel” என்று வெளியிடப்பட்டுள்ளது.

வெங்கட் சாமிநாதன் டாப் டென் தமிழ் நாவல்கள் தேர்வு

மூலப் பதிவு: தலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்

வெங்கட் சாமிநாதனுக்கெல்லாம் அறிமுகம் தேவை இல்லை. தமிழின் சிறந்த இலக்கியம் விமர்சகர்களில் ஒருவர் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

  1. மோகமுள் – தி. ஜானகிராமன் கும்பகோணத்து தெருக்களின் தூசி புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது.
  2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் சிறந்த நாவல், விரிவான பதிவு இங்கே.
  3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அருமையான புத்தகம். நான் படிக்கும்போது எனக்கு இருபது இருபத்தைந்து வயது இருக்கலாம். சுராவை நான் பெரும் படைப்பாளியாக கருத ஆரம்பித்தது இந்த புத்தகத்தைப் படித்த பிறகுதான். எனக்கு புளியமரத்தை விடவும் இதுதான் பிடித்திருக்கிறது. இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும்.
  4. கோவேறு கழுதைகள் – இமையம் படித்ததில்லை.
  5. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படித்திருக்கிறேன், ஆனால் சரியாக நினைவில்லை. நினைவிருக்கும் வரையில் நல்ல நாவலே, ஆனால் சூப்பர் டூப்பர் நாவல் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.
  6. தூர்வை – சோ. தர்மன் படித்ததில்லை.
  7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் படித்ததில்லை.
  8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ் படித்ததில்லை.
  9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்; அற்புதமான நாவல். ஆனால் சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.
  10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள் முக்கியமான புஸ்தகம். நல்ல நாவல் என்று சொல்ல மாட்டேன். கீழ்வெண்மணி பற்றி எழுதப்பட்ட docu-fiction. படிக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கும் என்று நமக்கு தோன்றும். இதை விட புகழ் பெற்ற இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். இதிலோ அந்த ஊரிலேயே வாழ்ந்த ஒருவர் கதையை சொல்வது போல தோன்றும்.