அஞ்சலி: பா. செயப்பிரகாசம்

அடுத்தடுத்து இரண்டு எழுத்தாளர் மறைவு.

பா. செயப்பிரகாசத்தை நான் அதிகம் படித்ததில்லை. நிஜமான பாடல்கள் சிறுகதை பிடித்திருந்ததால்தான் இந்த அஞ்சலியை எழுதுகிறேன்.

இன்குலாபுக்கு சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டபோது நடுவர் குழுவில் இருந்த பா. செயப்பிரகாசத்தை ஜெயமோகன் அதிகார வெறி பிடித்த ஆக்டோபஸ், இலக்கியம் பற்றி அறியாதவர், ராஜேஷ்குமாருக்கும் அசோகமித்திரனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்று கழுவி ஊற்றினார். அரசு உயர் அதிகாரி இடதுசாரி புரட்சி அமைப்பின் தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினார். ஒருவர் மீது மற்றவர் அவதூறு வழக்கு தொடுத்தனர் என்று நினைவு.

ஆனால் என் கண்ணில் செயப்பிரகாசம் இலக்கியவாதிதான். இது ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்த பிறகு எழுந்த எண்ணம்தான், sample size சிறியதுதான். என்றாலும் இப்படிப்பட்ட சிறுகதைகளை எழுதியவருக்கு அசோகமித்திரன் என்ன எழுதினார், ராஜேஷ்குமார் என்ன எழுதுகிறார் என்று தெரியாமல் இருக்க முடியாது. எனக்கே தெரிகிறது.

ஆனால் செயப்பிரகாசம் முன்னணியில் இருக்கும் இலக்கியவாதி அல்லர். அவர் எழுதிய எந்த சிறுகதையும் நான் ஒரு anthology-யைத் தொகுத்தால் அதில் இடம் பெறாது. இது சுவை வேறுபாடு அல்ல, அவர் எங்கோ பின்னால்தான் நிற்கிறார். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய “முற்போக்கு” கதைகள்தான் மீண்டும் மீண்டும். பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன். இதுவும் அந்த ஒரு சிறுகதைத் தொகுப்பை வைத்து எழும் கருத்துதான்.

செயப்பிரகாசத்தை நல்ல எழுத்தாளராக மதிக்காத ஜெயமோகனே கூட அவரது இதழியல் பங்களிப்பு முக்கியமானது என்று அங்கீகரிக்கிறார். செயப்பிரகாசம் மன ஓசை என்ற சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர்.

அவரது ஆளுமையை அவரோடு நேரடியாகப் பழகிய பெருமாள் முருகன் தன் அஞ்சலிக் கட்டுரையில்சி விவரித்திருந்தார். என்ன காரணத்தாலோ இப்போது தலைப்பு மட்டுமே இருக்கிறது. பெ. முருகன் உட்பட்ட பலருக்கு நிறைய உதவி செய்திருக்கிறராம். அதிகார பீடங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டவர், நிறைய உதவி செய்பவர், முன்னோடி இதழியலாளர், சில நல்ல சிறுகதைகளை எழுதியவர் ஆகிய நான்குமே சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

செயப்பிரகாசம் ஒரு தளத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

வழக்கமான வரிதான் – எழுத்தாளருக்கு அஞ்சலி என்பது அவரது படைப்புகளைப் பற்றி எழுதுவதுதான். அவரது அக்னி மூலை சிறுகதைத் தொகுப்பை பற்றி எழுதியதை மீள்பதித்திருக்கிறேன்.


பா. செயப்பிரகாசத்தின் பேரை அங்கே இங்கே கேட்டிருந்தாலும், அவருடைய அம்பலக்காரர் வீடு சிறுகதையை எங்கோ (விட்டல்ராவ் தொகுத்த இந்த நூற்றாண்டு சிறுகதைகள் தொகுதி என்று நினைக்கிறேன்) படித்திருந்தாலும் சமீபத்தில் ஜெயமோகன் அவரைக் கழுவி ஊற்றியபோதுதான் அவரது பெயர் பிரக்ஞையில் ஏறியது. கையில் கிடைத்த ஒரு சிறுகதைத் தொகுப்பைப் – அக்னி மூலை – படித்துப் பார்த்தேன்.

இந்தக் கதைகளில் எனக்குப் பிடித்தவை ‘நிஜமான பாடல்கள்‘. ஏழை கொத்தாசாரி கோவில் வேலை கிடைக்கும், பிள்ளைகளுக்கு சோறு போடலாம் என்ற எதிர்பார்ப்பு தகரும்போது சாமி சிலையை உடைக்கிறான். இந்த மாதிரி ஒற்றை வரி சுருக்கங்களை வைத்து இந்தக் கதையை மதிப்பிட முடியாது, படித்துத்தான் பார்க்க வேண்டும். வளரும் நிறங்கள் சிறுகதையில் அந்தக் கால சண்டியரை இன்று அடையாளம் கண்டு கொள்ளும் தருணம் நன்றாக வந்திருந்தது. அக்னி மூலை, ஒரு ஜெருசலேம் போன்றவை பரவாயில்லை ரகம். அம்பலக்காரர் வீடு, தாலியில் பூச்சூடியவர்கள் இரண்டும் அவரது சிறுகதைகளில் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்படுகின்றன.

பா. செயப்பிரகாசம் ‘முற்போக்கு’ எழுத்தாளர் என்று நினைக்கிறேன். ஏழைகளின் உலகத்தை, குறிப்பாக கிராமத்தில் ‘கீழ்ஜாதியினரை’ பற்றிய கதைகள்தான் மீண்டும் மீண்டும். ‘முற்போக்கு’ எழுத்து என்றல்ல, சட்டகத்தை வைத்து அதற்குள் எழுதப்படும் எழுத்து அனேகமாக இலக்கியம் ஆவதில்லை. பல இடங்களில் இதைத்தான் சொல்லப் போகிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது எழுத்தில் தெரியும் genuineness அவரை இலக்கியத்துக்கு அருகிலாவது கொண்டு வருகிறது. சுமாரான எழுத்தாளர் என்றே மதிப்பிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பக்கங்கள்:
செயப்பிரகாசத்தின் தளம்
பா.செயப்பிரகாசத்தின் தாலியில் பூச்சூடியவர்கள் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் தடையம் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மகன் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் புத்தர் ஏன் நிர்வாணமாக ஓடினார் சிறுகதை
பா.செயப்பிரகாசத்தின் மூளைக்காய்ச்சல் சிறுகதை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.