சந்தத்துக்கு அருணகிரி

சில கவிதைகளின் பலமே சந்தம்தான், அவற்றை வாய்விட்டுப் படிக்கும்போதுதான் மேலும் ரசிக்க முடிகிறது, முழுமையான திருப்தி கிடைக்கிறது. ஒரு வேளை அவற்றை கவிதை என்பதை விட பாடல்கள் என்று சொல்வது மேலும் பொருத்தமாக இருக்கலாம். தமிழின் ஆசிரியப்பா சந்தத்தை அருமையாக வெளிக்கொணரும் வடிவம் என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

சின்ன வயதில் எனக்கும் இந்தக் கவிதைகளை, பாடல்களை வாய்விட்டுப் படிக்கும் பழக்கம் இருந்தது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள், ஆனால் என் அம்மாவே என் குரலைப் பற்றி தகர சிலேட்டில் ஆணியால் எழுதுவது போல இருக்கிறது என்று அடிக்கடி வர்ணித்ததால் வெகு சீக்கிரத்தில் அந்தப் பழக்கம் விட்டுப் போய்விட்டது. 🙂

என்ன தூண்டுதல் என்றே தெரியவில்லை, நாலைந்து நாட்களாக அருணகிரிநாதரின் சில பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒரு லூப் மாதிரி மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அத்தனையும் சந்தத்துகாகவே மனதில் குடியேறி இருக்கின்றன என்று நினைக்கிறேன். சின்ன வயதில் தொக்குத் தொகுதொகு தொகு, குக்குகு குகுகுகு என்ன சொல்லும் இடத்தில் தடங்கல் வந்தே தீரும்!

கந்தர் அனுபூதியில் வரும் பாடல்கள் ஆசிரியப்பா என்று நினைக்கிறேன். திருப்புகழ் என்ன வடிவம் என்றே தெரியவில்லை. தமிழ் இல்லகணம் அறிந்த யாராவது சொல்லுங்களேன்!

கந்தர் அனுபூதியிலிருந்து இரண்டு பாடல்கள்:
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவானிறவான்
சும்மா இரு சொல்லறவென்றலுமே
அம்மா பொருளொன்றுமறிந்திலனே
(இது என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த கந்தர் அனுபூதி பாடல்)

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர என ஓதும்

முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமுவர்க்கத்தமரரும் அடி பேண

பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக

பத்தற்கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத்தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்தருள்வதும் ஒரு நாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப் பதம் வைத்துப் பைரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பைரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக என ஓத

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப்பிடி என முதுகூகை

கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப் பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்