தமிழறிஞர் வரிசை 23: ராய. சொக்கலிங்கம்

ராய. சொ.வைப் பற்றி நான் முதன்முதலாக கேள்விப்பட்டது 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோதுதான். யார் இந்த ராய. சொ. என்று வழக்கம் போல எழுதி இருந்தேன். மறைந்த சேதுராமன் அவரைப் பற்றிய விவரங்களைத் தேடி எடுத்துக் கொடுத்தார். (அவற்றைப் படித்த பிறகும் இவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டியவைதானா என்று என்னால் ஒரு அபிப்ராயத்துக்கும் வர முடியவில்லை என்பது வேறு விஷயம்.)

ராய. சொ.வின் ஒரெ ஒரு புத்தகத்தை – வில்லியும் சிவனும் – மட்டுமே புரட்டிப் பார்க்க முடிந்தது. அது எனக்கான புத்தகம் அல்ல. வில்லிபாரதத்தில் சிவனைக் குறித்து வரும் எல்லா பாடல்களையும் விளக்கி இருக்கிறார். குற்றால வளம் என்று ஒரு புத்தகமும் கிடைத்தது. குற்றாலத்தை விட ஜாதியைப் பற்றி நிறைய கட்டுரைகள் இருந்தன. ஒன்றும் குறிப்பிடும்படி இல்லை.

பாரதியின் வெகு சில புகைப்படங்களில் இதுவும் ஒன்றாம். வலப்பக்கம் இருப்பவர் ராய.சொ.

சேதுராமன் எழுதிய குறிப்பு கீழே:
தமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.

ராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.

தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ. முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப்படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

சொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தனவைசிய ஊழியன்‘ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்‘ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.

தன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.

இந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது. 1961ல் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள்நெறித் திருக்கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.

ஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.

தன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள் கொண்டது.

காந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.

இவரது படைப்புகளில் “தேனும் அமுதும்“, “திருவாசகத் தேன்“, “திருத்தலப் பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரைநடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்“, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது“, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும் உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்“, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.

முன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.

(ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்

தொடர்புடைய பதிவு:
ராய.சொ. பற்றி ஏ.கே. செட்டியார்
விக்கி குறிப்பு

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.