நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2: என்.வி. கலைமணி

ஏ.கே. வேலன் பற்றிய பதிவில்

சில முறை தரமற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் நாட்டுடமை ஆக்கிவிடுகிறார்கள். அதுவும் கட்சி சார்ந்தவர், தெரிந்தவர், எழுத்து எத்தனை குப்பையாக இருந்தாலும் சரி, செய்துவிடுவோம் என்று தோன்றிவிடுகிறது என்று நினைக்கிறேன். ஏ.கே. வேலன் அந்த ரகம்.

என்.வி. கலைமணியும் அதே ரகம்தான். அவர் எழுதி இருக்கும் புத்தகங்கள் பல இங்கே கிடைக்கின்றன. எல்லாம் நாலாவது ஐந்தாவது படிக்கும் மாணவன் படிக்கும் தரத்தில் எழுதப்பட்ட அறிமுகப் புத்தகங்கள் மட்டுமே. கலைமணி திராவிடநாடு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றியவர். கலைஞருக்கு தெரிந்தவர் என்று நினைக்கிறேன். மறைந்த சேதுராமன் திமுகவின் அன்றைய முக்கிய பிரமுகர் என்.வி. நடராஜனுக்கு உறவினரோ என்று சந்தேகிக்கிறார். அதனால்தானோ என்னவோ 2009-இல் அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

நான் இவற்றுள் சிலவற்றை படித்துப் பார்த்தேன். அனேகமாக தெரிந்த விஷயங்களை rehash செய்திருக்கிறார். தலைவர்களைப் பற்றி எழுதினால் அது hagiography ஆகத்தான் இருக்கும். சேரன்மாதேவி குருகுலத்தை எதிர்த்த ஈ.வே.ரா. பாரம்பரியத்தை சேர்ந்தவர்தான்; ஆனால் வ.வே.சு. ஐயர் பற்றிய புத்தகத்தில் அதைக் கண்டித்து எழுதுவதைக் கூட முடிந்த வரை தவிர்க்கத்தான் பார்த்திருக்கிறார். அவரையும் மீறி ஒரே ஒரு வரி இது சரியில்லை என்று எழுதி இருக்கிறார். 🙂 கப்பலோட்டிய தமிழன் புத்தகம் ஏறக்குறைய ம.பொ.சி. எழுதியதைப் போலவேதான் இருக்கிறது. வ.உ.சி. கல்கத்தாவில் காந்தியின் ஒத்துழையாமை இயக்க தீர்மானத்தை தீவிரமாக எதிர்த்ததைப் பற்றி கொஞ்சம் விவரித்திருக்கிறார்.

மறைந்த சேதுராமன் கஷ்டப்பட்டு 2009-இல் யார் யார் எழுத்து நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தாலும் அவரைப் பற்றி விவரங்கள் சேகரித்திருந்தார். அவரால் கூட அப்போது கலைமணியைப் பற்றி பெரிதாக விவரங்கள் சேகரிக்க முடியவில்லை.

சேதுராமனின் குறிப்புகள்: (கூட்டாஞ்சோறு தளத்திலிருந்து)

எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று கார்த்திக் சந்திர தத் பதிப்பித்துள்ள WHO IS WHO OF WRITERS (1999) சொல்கிறது. தமிழரசி என்ற வாரப்பத்திரிகையை வெளியிட்டு வந்தவர். நூற்றைம்பதுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இலக்கியம், நுண்கலைகள், அரசியல், இதழியல் முதலியவற்றைப் பற்றியுமல்லாது நாவல்களும் எழுதியுள்ளார்.

ஐம்பதுகளில் பல்வேறு தினசரி பத்திரிகைகளில் பணி புரிந்துள்ளார். இவற்றுள் முக்கியமானவை அண்ணா தொடங்கிய திராவிட நாடு, முரசொலி, தனி அரசு, தென்னகம், எரியீட்டி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களாகும்.

புத்தகங்களின் சில தலைப்புகள் — “தேசத் தலைவர் காமராஜ்”, “ஏழைகள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்”, “நேருவும் கென்னடியும்”, “நீதி மன்றத்தில் எம்.ஜி.ஆர்” முதலான வாழ்க்கைக் குறிப்புகள், “வஞ்சக வலை”, “மரண மாளிகை” போன்ற சரித்திர நாவல்கள், “இலட்சிய ராணி”, “சாம்ராட் அசோகன்” முதலிய நாடகங்கள், “சிந்தனை சிக்கல்கள்” என்ற அறிவியல் புத்தகம் — இவருடைய படைப்புகளாகும்.

டிசம்பர் 30, 1932ல் பிறந்த இவர் அண்ணமலை பல்ககலைக்கழகத்தின் மாணவர் – சரித்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘புலவர்’ பட்டமும் பெற்றவர்.

U.N.I. செய்திக் குறிப்புப்படி புலவர் கலைமணி 2007 மார்ச் 6-ஆம் தேதி காலமானார் என்று தெரிகிறது. மனைவி, இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள் கொண்டது இக்குடும்பம்.

என்.வி. என்ற இனிஷியல்களும், அண்ணா மற்றும் கழக நாளிதழ்களின் தொடர்பும், இவர் தி.மு.க.வை நிறுவிய ஐவர்களுள் ஒருவரான என்.வி.நடராஜன் குடும்பத்தைச் சேர்ந்தவரோ என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.

(தகவல் உபயம் – Who is Who of Indian Writers K. C. Dutt (1999) – UNI Press Release Mar. 7, 2007)

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை ஆன எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: என்.வி. கலைமணி பற்றிய விக்கி குறிப்பு

2 thoughts on “நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்து 2: என்.வி. கலைமணி

  1. முனைவர் தமிழ்குடிமகன், மேலாண்மை பொன்னுசாமி, முனைவர் சவுரிராஜன் ஆகியோரின் நுால்கள் கடந்த ஜூன் 2018ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. மேலாண்மை பொன்னுசாமி தெரியும். சௌரிராஜன் என்பவர் அக்னி நதி மொழிபெயர்ப்பாளர் சௌரியா? அப்படித்தான் தெரிகிறது. ஆனால் உறுதிப்படவில்லை. தமிழ்குடிமகன் பற்றி எழுதுங்கள்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.