ராமையா தாஸை (1914-1965) நான் திரைப்பட பாடலாசிரியராகவே அறிவேன். திரைப்பட பாடல்கள் பாமரர்களை குறி வைத்து எழுதப்பட வேண்டும், எளிமையாக இருக்க வேண்டும் என்ற உறுதியான கருத்துள்ளவர். குப்பனுக்கும் சுப்பனுக்கும் எழுதுகிறேன், தில்லாடாங்கு டாங்கு திருப்பிப் போட்டு வாங்கு என்றுதான் எழுத வேண்டும் என்று சொன்னாராம்.
கல்யாண சமையல் சாதம், ஆஹா இன்ப நிலாவினிலே, வாராயோ வெண்ணிலாவே, பிருந்தாவனமும் நந்தகுமாரன், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா, மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ, தேசுலாவுதே தேன் மலராலே, கண்களும் கவி பாடுதே, மாப்பிள்ளைடோய் மாப்பிள்ளைடோய், குல்லா போட்ட நவாபு, ஜாலிலோ ஜிம்கானா, தாராபுரம் தாம்பரம் போன்ற பல வெற்றி பெற்ற பாடல்களை எழுதி இருக்கிறார்.
தாஸ் மாயாபஜார், மிஸ்ஸம்மா போன்ற திரைப்படங்களைத் தயாரித்த விஜயா-வாஹினி ஃபிலிம்ஸாரின் ஆஸ்தான வசனகர்த்தா/பாடலாசிரியர். தமிழ்/தெலுகு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரித்த நிறுவனம் அது. தமிழுக்கு இவர் பொறுப்பு. ராணி லலிதாங்கி என்ற திரைப்படத்தையும் தயாரித்தார்.
2010-இல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன. நாட்டுடமை ஆக்கப்படும் அளவுக்கு எதுவும் பெரிதாக எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. கருணாநிதி ஆட்சிக்காலம், அவருக்கு திரைப்படத்துக்கு எழுதியவர்கள் என்றால் கொஞ்சம் மனச்சாய்வு (soft corner) உண்டு, நாட்டுடமை ஆக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை பக்கம்