விமலாதித்த மாமல்லன் – ஜெயமோகனை சதா பின் தொடரும் நிழலின் குரல்

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் ஒன்று, ஒன்றரை வருஷத்துக்கு முன் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தின் மூலக்கரு தான் எழுதிய முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் என்ற சிறுகதைதான், அதை ஜெயமோகன் மறைக்கிறார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இதைப் பற்றி கருத்து சொல்லக் கூடியவர்கள் ஜெயமோகன், மாமல்லன், மற்றும் இந்த இரண்டையும் படித்தவர்கள். மாமல்லன் என்ன நினைக்கிறார் என்பது தெளிவு. ஜெயமோகன் கண்டு கொள்ளவே இல்லை. அப்போது அந்தக் கதையை நான் படித்திருக்கவில்லை. வீணான யூகங்களில் பயனில்லை என்று நானும் கம்மென்று இருந்துவிட்டேன்.

ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். நான் ஒரு சுயநலவாதி. எனக்கு வேண்டியது நல்ல வாசிப்பு அனுபவம். ஜெயமோகன் காப்பி அடித்திருந்தால் அது எனக்கு இரண்டாம் பட்சமே. அசோகமித்ரன் “Boarded Window” கதையைப் படித்து பிரயாணம் எழுதி இருக்கக் கூடும். புதுமைப்பித்தன் வால்டர் மிட்டி கதையைப் படித்து சுப்பையாப் பிள்ளையின் காதல்கள் கதையை எழுதி இருக்கலாம். பிரேம்சந்தின் சால்ட் இன்ஸ்பெக்டர் கதையைப் படித்துத்தான் கல்கி புது ஓவர்சியர் கதையை எழுதி இருக்கிறார் என்பது தெளிவு. எனக்கென்ன போச்சு? பிரயாணம், சு. பிள்ளை இரண்டும் எனக்கு வித்தியாசமான, உயர்ந்த வாசக அனுபவத்தை தருகின்றன. புது ஓவர்சியர் தரவில்லை. அதனால் நான் பிரயாணம், சு. பிள்ளை இரண்டையும் உயர்ந்த இடத்தில் வைக்கிறேன், புது ஓவர்சியர் கதையை நிராகரிக்கிறேன். அத்தோடு முடிந்தது.

ஜெயமோகன் காப்பியே அடித்திருந்தாலும் பி. தொ. நி. குரல் ஒரு உலக சாதனை என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அப்புறம் இன்னும் சில விஷயங்கள் எனக்குத் தெளிவாகத் தெரிந்தன. 25 பக்கக் கதையை காப்பி அடித்து ஆயிரம் பக்கம் எழுதுவது எல்லாம் நடக்காத காரியம். கண்ணெதிரில் புகாரின் என்ற நிஜ மனிதரின் வாழ்க்கை இருக்கும்போது ஜெயமோகனுக்கு ஒரு சிறுகதையைக் காப்பி அடித்து கதைக்கரு கண்டுபிடிக்க வேண்டியதில்லை. பழைய பேப்பர் கடையில் நோட்டுப் புத்தகம் வாங்குவது போலவும் அதில் ஒரு கதை இருப்பது போலவும் சுஜாதா எழுதிய காயத்ரி புத்தகத்தில் கூடத்தான் வருகிறது. அதற்காக மாமல்லனின் கதைக்கரு சுஜாதாவை காப்பி அடித்து எழுதப்பட்டது என்று சொல்ல முடியுமா என்ன? மாமல்லனாவது முப்பது நாற்பது கதை எழுதி பிரசுரித்திருக்கிறார். நான் ஒரே ஒரு (சுமாரான) கதை மட்டுமே பிரசுரித்திருக்கிறேன், அதுவும் இணையத்தில் மட்டுமே. என் கம்ப்யூட்டரில் நான் எழுதி வைத்திருக்கும் மூன்று கதைகளைப் போலவே கரு உள்ள கதைகளை நான் படித்திருக்கிறேன். கீதா பென்னட் “முந்தைய நாள் சாப்பாட்டை” ஃப்ரிஜ்ஜில் வைத்து சாப்பிடும் ஒரு NRI-யின் சமையல்காரத் தாய்க்கு அந்த முந்தைய நாள் சாப்பாடு மேல் இருக்கும் aversion-ஐப் பற்றி எழுதி இருக்கிறார். ஜெயமோகனே வாழ்க்கையில் எவ்வளவோ சிறுமைகள் அடைந்தும் ஜாதி பிரக்ஞை போகாத ஒருவரைப் பற்றி கதை எழுதி இருக்கிறார், அந்த சாயலில் நானும் கதை எழுதி வைத்திருக்கிறேன். பாண்டு பிள்ளைகள் பாண்டவர் என்று அழைக்கப்பட, திருதராஷ்டிரன் பிள்ளைகள் தாரத்தராஷ்டிரர் என்று இல்லாமல் குருவம்சத்தவர் என்று பொருள்படும்படி கௌரவர் என்று அழைக்கப்பட்டதிலும் அரசியல் உள்குத்து என்று ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன், தேவகாந்தன் அதை கதாகாலம் நாவலில் சொல்லி இருக்கிறார். நான் எப்படி இந்தக் கதைகளை நான் காப்பி அடிக்கவில்லை, இவை எல்லாம் என் சொந்த மூளையில் உருவானவையே, இவற்றை எழுதிய பிறகே இந்த “மூலக்கதைகளை” படித்தேன் என்று நிரூபிக்க முடியும்? முதல் படி கூட ஏறாத – படியை விடுங்கள், “ப” கூட ஏறவில்லை – எனக்கே இது பிரச்சினை என்றால் ஜெயமோகனுக்கு இருக்காதா?

இன்னொரு சின்ன விஷயம். மு.வ.வெ. புறாக்கள் சிறுகதையை ஒரு வழியாகப் படித்துவிட்டேன். இதிலிருந்துதான் பி.தொ.நி. குரல் உருவானது என்று மாமல்லன் நினைத்தாரானால் அவர் நாவலைப் படிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய எண்ணங்களுக்கு அவர் நேர்மையாக இருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை, ஆனால் அவரது கருத்துகள் ஏதோ கோபத்தில் உண்டானவை போலத் தெரிகிறது. இதனால்தானோ என்னவோ எப்போதும் ஜெயமோகனை நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மு.வ.வெ. புறாக்கள் சிறுகதையைப் பற்றி ஒரு வார்த்தை – எனக்கு இன்னும் இலையும் போர்வையும்தான் டாப் என்றாலும் இதுவும் அந்த வரிசையில் வைக்கக் கூடிய சிறுகதைதான்.

பிற்சேர்க்கை: ஜெயமோகனை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். என் மரியாதைக்குரிய நண்பர். அவருடன் உள்ள நட்பு இந்தப் பதிவை, மாமல்லனின் குற்றச்சாட்டைப் பற்றிய என் முடிவை பாதிக்கக் கூடாது என்பது எனக்கு முக்கியம். அப்படித்தான் இதை எழுதி இருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
விமலாதித்த மாமல்லனின் குற்றச்சாட்டு
முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் சிறுகதை
கிரிதரனின் பதிவு