கமல் பரிந்துரை: டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை”

மீள்மீள்பதிவு, முதல் பதிவு நவம்பர் 2014-இல், சமீபத்திய பதிவு இங்கே

கமல் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிந்துரைத்திருந்தார், அதனால்தான் மீள்பதித்திருக்கிறேன். இது எல்லாருக்குமான புத்தகம் என்று எனக்குத் தோன்றவில்லை. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் ரசிப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் ஆவண முக்கியத்துவம் உடைய புத்தகம்.

kaaviyath_thalaivanமுதல் பதிவு வசந்தபாலன் இயக்கி, ஜெயமோகன் வசனம் எழுதி, சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் நடித்த காவியத் தலைவன் திரைப்படம் வெளியான தருணத்தில் எழுதப்பட்டது. படம் ஓடவில்லை என்று நினைவு. திரைப்படத்தின் களன் 1940களின் நாடக உலகம்.

எனக்குத் தெரிந்த வரையில் அந்தச் சூழலைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் டி.கே. ஷண்முகம் எழுதிய “எனது நாடக வாழ்க்கை“தான். பழைய பதிவை இங்கே மீள்பதித்திருக்கிறேன். மின்னூலுக்கும் சுட்டி இருக்கிறது, படித்துப் பாருங்களேன்!

டி.கே. சண்முகம் யாரென்று தெரியாதவர்களுக்கு: தமிழ் நாடகத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவர் நடித்த அவ்வையார் போன்ற நாடகங்கள் பெரும் வெற்றி பெற்றன. நாடக பாரம்பரியம் உள்ள குடும்பம். அப்பா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி எல்லாருமே நாடக நடிகர்கள், பாடகர்கள், நிர்வாகிகள் இத்யாதிதான். சினிமாவிலும் இவரும் தம்பி டி.கே. பகவதியும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சுப்பிரமணிய சிவாவாக நடித்தார். எம்.எல்.சி.யாக இருந்திருக்கிறார். கமலஹாசன் இவரை கவுரவப்படுத்தத்தான் ஒரு திரைப்படத்துக்கு “அவ்வை ஷண்முகி” என்று பேர் வைத்தார். சென்னையில் ஒரு காலத்தில் லாயிட்ஸ் ரோட் என்று அழைக்கப்பட்ட சாலை இன்று அவ்வை சண்முகம் சாலை என்று அழைக்கப்படுகிறது.

எனது நாடக வாழ்க்கை சமீபத்தில் ஜெயமோகன் பரிந்துரைத்த தமிழ் தன் வரலாறுகளில் ஒன்று.

புத்தகம் ஒரு லூப் மாதிரி போகிறது. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை

  • சண்முகம் நடிக்கும் ஒரு நாடகக் குழு ஒரு ஊருக்குப் போகும்.
  • நாடகத்துக்கு துட்டு வரும்/வராது.
  • அடுத்த ஊர்

அவ்வளவுதான் புத்தகம். டி.கே.எஸ். மீண்டும் மீண்டும் இதையேதான் எழுதுகிறார்.

பிறகு எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா? நிகழ்ச்சிகள் முக்கியமே இல்லை. அந்த நிகழ்ச்சிகள் வழியாக சித்தரிக்கப்படும் அன்றைய நாடகச் சூழல்; மற்றும் சில ஆளுமைகள் மட்டுமே புத்தகத்தில் முக்கியமானவை.

அன்றைய நாடகச் சூழல் இன்றைய சினிமா சூழலை ஓரளவு ஒத்திருக்கிறது. நாடகத்தை எழுதுபவர்கள், பாடி நடிக்கும் ஸ்டார்கள் ஆகியவர்களுக்குத் தேவை இருந்திருக்கிறது. நாடகம் தயாரிக்க, நாடகக் குழு நடத்த நிறைய முதலீடு தேவைப்பட்டிருக்கிறது. ரிஸ்க் அதிகம், ஆனால் நல்ல லாபம் வரலாம். நடிகர்களைச் சுற்றி கொஞ்சம் ஒளி வட்டம் இருந்திருக்கிறது. ஸ்டார்களை ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குக் ஹைஜாக் செய்ய முயற்சிகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகிகள் நினைத்தால் ஏமாற்றலாம், ஏமாற்றுகிறார்கள். ஆசிரியர்/ஸ்டார்களின் ஈகோ எப்போதும் பிரச்சினை. (ஜே.ஆர். ரங்கராஜு ராயல்டி விஷயத்தில் பயங்கர கறாராக இருக்கிறார்) எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் திடீரென்று வசூல் ஆகாமல் போகலாம், சாப்பாட்டுக்கே திண்டாடலாம். புராணக் கதைகள், பாட்டுகளுக்குக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து கொண்டே போய் சமூக நாடகங்கள் முக்கியத்துவம் பெறுவது, சினிமா அலையில் நாடகம் அழியத் தொடங்குவது ஆகியவையும் சொல்லப்படுகின்றன. இந்த சூழலை genuine ஆக சித்தரித்திருக்கிறார். பழைய சினிமா ரசிகர்கள் பல நடிகர்களின் பேர்களை – எம்.கே. ராதா, ஃப்ரென்ட் ராமசாமி, புளிமூட்டை ராமசாமி, எம்.ஆர். சாமிநாதன், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், பி.டி. சம்பந்தம் இத்யாதி – இங்கே recognize செய்யலாம். பொதுவாக எல்லாரும் சினிமாவுக்குப் போக முயற்சித்திருக்கிறார்கள்.

பல ஆளுமைகளைப் பற்றி பேசினாலும் தனியாக நிற்பது இரண்டு. ஒன்று சங்கரதாஸ் சுவாமிகள். சுவாமிகள் அபார திறமை உள்ளவர். அனேகமாக எல்லா நடிகர்களிடமும் அவரது தாக்கம் உண்டு. கடைசி காலத்தில் வாத நோயால் பாதிக்கப்பட்டு பேசக் கூட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். பாட்டும் வசனமும் எழுதுவதும் சொல்லித் தருவதுமே வாழ்க்கையாக இருந்தவர் பேச, எழுத முடியாமல் கடைசி நாட்களைக் கழித்தது சோகம்தான். இரண்டு என்.எஸ்.கிருஷ்ணன். என்.எஸ்.கே. எவ்வளவோ உயர்ந்த நிலைக்குப் போன பின்னும் இவர்கள் கம்பெனியைத்தான் தன கம்பெனியாக கருதி இருக்கிறார், கடைசி வரை நட்போடு இருந்திருக்கிறார். அவரது விசுவாசம் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

இது முதல் பகுதியே. 1950-களின் முற்பாதி வரை cover செய்திருக்கிறார். அதற்கப்புறமும் இருபது வருஷம் இருந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தைப் பற்றி இரண்டாம் பகுதி எழுதத் திட்டம் இருந்திருக்கிறது, அதைப் பற்றி பல இடங்களில் சொல்லவும் சொல்கிறார். ஆனால் எழுதுவதற்கு முன் இறந்துவிட்டார்.

புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

இதைத் தவிரவும் நாடகக் கலை, நாடகச் சிந்தனைகள், சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு, தமிழ் நாடகத் தலைமையாசிரியர், கலை கண்ட மலாயா (1973) ஆகிய புத்தகங்கள் கிடைக்கின்றன. தகவல்கள் இவற்றில் ஓரளவு மீள்பதிவு செய்யப்படுகின்றன. எல்லா புத்தகங்களும் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் (Tamil Virtual University) மின் புத்தகங்களாகக் கிடைக்கிறன.

படிக்கலாம் என்ற அளவில்தான் மதிப்பிடுவேன். Genuineness, ஒரு தொழில் சூழலின் சித்தரிப்பு இரண்டும்தான் இதன் பலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

சங்கரதாஸ் ஸ்வாமிகள்

சங்கரதாஸ் ஸ்வாமிகள் தமிழ் நாடகத்தின் தந்தை என கருதப்படுகிறார். என் கண்ணில் பம்மல் சம்பந்த முதலியாரும் அந்தப் பட்டத்துக்கு தகுதி உள்ளவரே. இருவரும் நாடகம் என்ற வடிவத்தை தமிழில் மீட்டு உருவாக்கிய முன்னோடிகள். ஸ்வாமிகள் பாய்ஸ் கம்பெனி என்ற பெரிய சீடர் பரம்பரையையும் உருவாக்கினார். தமிழ் நாடகத்தின் துரோணர் என்றே சொல்லலாம். இன்றும் அதன் எச்சங்கள் நம்மிடையே வாழ்கின்றன. (முதலியார் கூத்தாடி என்ற இழிவான கண்ணோட்டத்தை மாற்றினார்.) அவர்களது முக்கியத்துவம், பங்களிப்பு இவையே. அதற்காகவே இருவரும் நமது மரியாதைக்குரியவர்கள்.

ஸ்வாமிகள் எழுதியதெல்லாம் புராணங்கள், தொன்மங்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டவை மட்டுமே. சமூக நாடகங்கள் பக்கம் அவர் வரவே இல்லை. கொஞ்சம் quaint ஆன பழைய நடை, நிறைய பாடல்களோடு எழுதப்பட்டவை. இன்று படிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் வடிவ கச்சிதம் உள்ள படைப்புகள். தமிழில் நாடகம் என்ற வடிவமே அவரும் பம்மல் சம்பந்த முதலியாரும் கொண்டு வந்ததுதான் என்றே கருதுகிறேன். டம்பாச்சாரி விலாசம் போன்ற நாடகங்களுக்கும் இவர்கள் எழுதியதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. பாடல்கள் துருத்திக் கொண்டு தெரிவதில்லை. நடித்தால் இன்னும் பார்க்கலாம். எந்த நாடகத்திலும் நமக்குத் தெரியாத கதைகளோ, பெரிய மானுட தரிசனங்களோ இல்லை. ஆனாலும் அவர் முன்னோடி என்பதும் தெளிவு. என் கண்ணில் அவரது நாடகங்கள் காலாவதி ஆகவும் இல்லை. இந்த வடிவ உருவாக்கத்தையே தமிழ் இலக்கியத்துக்கு அவரது பெரிய கொடையாகக் கருதுகிறேன்.

ஸ்வாமிகள் 50 நாடகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறாராம். இப்போது கிடைப்பவை அபிமன்யு சுந்தரி, அல்லி, கோவலன், சத்தியவான் சாவித்ரி, சதி அனுசூயா, சதி சுலோசனா, சாரங்கதரன், ஞானசௌந்தரி, சீமந்தினி, நல்லதங்காள், பக்த பிரஹலாதா, பவளக்கொடி, லவகுசா, வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா மயான காண்டம் ஆகியவை மட்டுமே. இவை அனைத்தும் வீ. அரசு என்பவரால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நாடகங்கள் அனைத்தும் புராண, தொன்மக் கதைகள் அவரது ட்ரீட்மெண்டில் நாடகம் ஆக்கப்பட்டவை மட்டுமே. அது குறையாக ஒரு காலத்தில் தெரிந்திருக்கும்; இப்போதோ தமிழ் நாடகத்தின் வடிவமே அவரால்தான் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் பெரிதாகத் தெரிகிறது. நாடகங்களை அவர் நினைத்த மாதிரியே நடிக்கவும் பெரிய கூட்டத்திற்கே பயிற்சி அளித்திருக்கிறார். டி.கே.எஸ். சகோதரர்கள், பாலாமணி, சி.எஸ். சாமண்ணா, தசாவாதரம் புகழ் கன்னையா, பி.யூ. சின்னப்பா ஆகியோருக்கு அவர்தான் பயிற்சி அளித்தாராம். அதுவும் அவரது முக்கியப் பங்களிப்பு.

மேலும் முருகன் வேடனாகவும் விருத்தனாகவும் வந்து வள்ளியிடம் வம்பு பண்ணுவது எல்லாம் ஸ்வாமிகளின் கற்பனைதானோ என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அவரது லவகுசா நாடகத்தில் குசன் இறந்து லவன் மட்டுமே மிஞ்சுகிறான். அந்த மாற்றத்தை நான் ஸ்வாமிகளிடம் மட்டுமே கண்டிருக்கிறேன். சரஸ்வதி-லட்சுமி-பார்வதி தகராறும் (சரஸ்வதி சபதம் திரைப்படத்தின் கரு) அவரது கற்பனைதானோ என்று தோன்றுகிறது.

ஸ்வாமிகளின் பாட்டுக்கள் இன்ன ராகத்தில் பாடப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார். ஹிந்துஸ்தானி ராகங்கள், இங்கிலீஷ் நோட்ஸ் ஆகியவையும் உண்டு. பலவும் அன்று பிரபலமாக இருந்த பாட்டுக்களின் மெட்டுக்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பாட்டுக்கள் என்ன என்று இன்று தெரியவில்லை. ஆனால் பாட்டுக்களின் பெயர்கள் ஆர்வத்தைத் தூண்டுகின்றன – கொத்தவால் கோமளாங்கி கூறடி, திண்டுக்கல் ஜானகி, தேக்கோ தேக்கோ தேக்கோ சுந்தரியான் ஜான்….

இடையிடேயே நீண்ட வசனங்கள் வரும். ஸ்வாமிகளுக்கு ஹிந்து தத்துவக் கோட்பாடுகள் நன்றாகவே தெரியும், அவற்றை விளக்கி பாத்திரங்கள் பேசுவார்கள்.

ஸ்வாமிகளுக்கு குசும்புத்தனமான நகைச்சுவை உணர்வு உண்டு. உதாரணமாக பவளக்கொடி நாடகத்தில் அல்லியிடம் அர்ஜுனன் கிருஷ்ணன் தலையில் அடித்து சத்தியம் செய்கிறான். அதற்கு கிருஷ்ணன் இப்படி நீ சத்தியம் செய்து செய்து என் தலையில் நாலைந்து முடிதான் மிச்சம் என்று அலுத்துக் கொள்கிறான்!

நான் படிக்க விரும்பும் அபிமன்யு சுந்தரி நாடகம் இணையத்தில் கிடைக்கவில்லை. இதுதான் மாயாபஜார் திரைப்படமாக உருவெடுத்ததாம். ஸ்வாமிகள் இதை ஒரே இரவில் எழுதியது பிரபலமான நிகழ்ச்சி. வள்ளி திருமணம், பக்த பிரஹலாதா (இரணியன்), லவகுசா, சதி அனுசூயா, சதி சுலோசனா போன்றவை இணையத்தில் கிடைக்கின்றன. கச்சிதமாக எழுதப்பட்ட நாடகங்கள். அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கும்.

சதி அனுசூயாவின் ஒரு பகுதிதான் பின்னால் சரஸ்வதி சபதம் திரைப்படமாகப் பரிமளித்தது என்று நினைக்கிறேன். சதி அனுசூயாவில்தான் தனியாக ஒரு காமெடி ட்ராக் எழுதப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். கர்வி பார்ஸ் அடங்காப்பிடாரி மனைவியை வைத்து எழுதப்பட்ட நகைச்சுவைப் பகுதி. அனுசூயா மனைவியைத் திருத்துவதாக நாலு வரி எழுதி அதை நாடகத்தோடு இணைத்துவிட்டார்! நேரம் இருந்தால் இந்தப் பகுதி நடிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

லவகுசாவும் அப்படித்தான்; தெரிந்த கதையை நீட்டி முழக்கி சொல்கிறார். சீதை மீண்டும் அக்னிப்பிரவேசம் செய்யும்போது தனியாகத் தீயில் இறங்குவதில்லை, சீதை, லவன் மற்றும் குசன் மூவரும் இறங்குகிறார்கள். தர்ப்பைப் புல்லிலிருந்து உருவாக்கப்பட்ட குசன் தீயில் மறைந்துவிடுகிறான். இப்படி குசன் இறப்பதாக இந்த நாடகத்தில்தான் முதன்முறையாக நான் பார்க்கிறேன்.

வள்ளித் திருமணம் நாடகத்தில் முருகன் வேடனாகவும் விருத்தனாகவும் வருவதும் பிள்ளையார் யானையாக வந்து வள்ளியை பயமுறுத்துவதும் ஸ்வாமிகளின் கற்பனையா இல்லை ஏற்கனவே இருந்த தொன்மங்களா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் நாடகம் கோர்வையாக இருக்கிறது. ‘சாயாத கொம்பிரண்டிருந்தாலும் தலை நிமிர்ந்து பாயாத மான்‘ என்பதுதான் தமிழ் நாடகங்களில் முதல் இரட்டை அர்த்த வசனமோ?

சதி சுலோசனா நாடகத்தில் இந்திரஜித் சுலோசனாவை கவர்ந்து மணப்பதும் லட்சுமணன் இந்திரஜித்தைக் கொல்வதும் விவரிக்கப்படுகிறது. இந்திரஜித்தின் வெட்டப்பட்ட தலை வந்து பேசுவது போன்ற காட்சிகள் அந்தக் காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனந்த ராமாயணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாம். ஸ்வாமிகளுக்கு பரந்த படிப்பு இருந்திருக்கிறது.

பக்த பிரஹலாதா (இரணியன்) நாடகம் நமக்கு நன்றாகத் தெரிந்த காட்சிகள்தான்.

நவராத்திரி திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி சங்கரதாஸ் ஸ்வாமிகளின் கைவண்ணம்தானாம். சிறு வயதில் மிகவும் ரசித்த காட்சிகளில் ஒன்று.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சோ ராமசாமி: யாருக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை சோ எழுதிய சிறந்த நாடகங்களில் ஒன்று. பெர்னார்ட் ஷா தரத்திலிருந்து வெகு தூரம்தான்; ஆனால் ஷாவை நினைவுபடுத்தும் படைப்பு.

சோவுக்கு ஒரு எளிய சூத்திரம் உண்டு. ஒரு சமூகப் பிரச்சினையை எடுத்துக் கொள்வார். இதில் விபச்சாரம். வேசித் தொழில் செய்பவள், அதில் நுழைய காரணமாக இருந்தவன், அவளுக்காக வாதிடும் வக்கீல், கொஞ்சம் அசட்டுத்தனமாக குடும்பத் தலைவர். தான் நடிக்க சவடாலும் நக்கலும் உள்ள ஒருவர்; நியாய உணர்ச்சி உள்ள குடும்பத் தலைவி. அவ்வளவுதான் நாடகம் தயார்!

கேசே இல்லாத வக்கீல் விபச்சார வழக்கில் மாட்டிக் கொண்ட பெண்ணைத் தன் வீட்டில் தங்க வைக்கிறான். (ஏன் என்றெல்லாம் கேட்கக் கூடாது). வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன் (தொழில் விஷயமாக வெளியூர் போயிருக்கிறான்), குடும்ப நண்பர், வழிகாட்டி, குடும்பத்தின் மனசாட்சி ராவுத்தர். வீட்டுக்கு வரும் பிரமுகர் வெளிப்படையாக இவள் அந்த மாதிரி பெண்ணாயிற்றே, எனக்கே பழக்கம் உண்டே என்கிறார். அவளை ஏமாற்றி இப்படிப்பட்ட ஒரு நிலைக்குத் தள்ளியதே அண்ணன்தான் என்று தெரிகிறது. ராவுத்தர் அவளை அண்ணனுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். அம்மாவுக்கு அதில் உள்ள நியாயம் புரிகிறது, ஆனால் தவிக்கிறாள். அண்ணன் இவள் கேடுகெட்டவள் என்கிறான். அவ்வளவுதான் நாடகம்.

சோ வேறு ஒரு பெண்ணை(ஆணை) பார்த்து ஒரு கணம் ஆசைப்பட்டாலும் – ஆசையை விடுங்கள், அவள்(ன்) அழகாக இருக்கிறான் என்று நினைத்தாலே அது விபச்சாரம்தான் என்று வாதிடுகிறார். ஏறக்குறைய ஜமதக்னி-பரசுராமரின் சட்டதிட்டம். அது அதிகப்படியாக இருந்தாலும் விபச்சாரத்தில் பெண்ணை மட்டும் தண்டிப்பது தவறு, போலித்தனம் என்று அவர் வாதிடுவது நன்றாகத்தான் இருக்கிறது.

தன்னை விசாரிக்கும் நீதிபதி வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று நாயகி மறைமுகமாகச் சொல்லும் காட்சி அருமை.

நாயகி வேசி, எனக்கே பழக்கம் உண்டு என்று வீட்டுக்கு வந்தவர் சொன்னதும் அவளை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவரிடம் இன்னும் ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உபசரிக்கும் காட்சியும் நன்றாக இருக்கிறது.

நாடகத்தில் எக்கச்சக்க ஆங்கிலம். 50 வருஷங்களுக்கு முன்பே ஏன் இத்தனை பீட்டர் என்று தெரியவில்லை.

ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், சிவகுமார் நடித்து சோ இயக்கத்தில் திரைப்படமாகவும் (1975) வந்தது.

சோவை நான் (அனேகமாக நான் மட்டும்தான்) தமிழின் சிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவராக மதிப்பிடுகிறேன். அதற்கு இந்த நாடகமும் ஒரு காரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

பழைய நாடகம்: ஏகை சிவசண்முகம் பிள்ளை எழுதிய கண்டிராஜா

ஏகை சிவசண்முகம் பிள்ளை எழுதிய கண்டிராஜா என்ற வரலாற்று நாடகம் அன்று எல்லா நாடக சபையாராலும்‌ பல முறை மேடையில்‌ ௩டிக்கப்பட்டது என்கிறார் டி.கே. ஷண்முகம். கண்டிராஜா கண்டி அரச வம்சத்தின் கடைசி அரசரான ஸ்ரீ விக்ரம ராஜசிம்மனின் ஆட்சியை ஏலப்பளை அதிகாரம் என்ற மந்திரி ஆங்கிலேயர் உதவியோடு முடிவுக்குக் கொண்டு வந்ததை விவரிக்கிறது. ஏலப்பளையின் சிறு குழந்தைகளைக் கொன்று அவர்கள் தலைகளை ஏலப்பளையின் மனைவியையே உரலில் இடிக்க வைத்ததாகவும் அதனால்தான் ஏலப்பளை அவரை எதிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இது மிகைப்படுத்தலா என்று தெரியவில்லை, ஆனால் இப்படி ஒரு “தொன்மம்” இருக்கிறது. நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் போடுவது போல அன்று இந்தக் காட்சி பார்ப்பவர்களை கதிகலங்க வைத்திருக்கும், அதனாலேயே இந்த நாடக அன்று வெற்றி பெற்றிருக்கும்.

ஊர்வசியும் இவள்தானோ, ரம்பைதானோ, ரதிதானோ – பிரம்மன் உலகை வெல்லப் படைத்தானோ இவள் ஊர்தானெது பேர்தானெது யார்தான் அறிவார் தானிது உன்னதமாகவே வந்தாள் – காதல் சன்னதம் யானுறத் தந்தாள்

என்ற பாடல் துணுக்கை சிவாஜி கணேசன்-சாவித்ரி நடித்த புகழ் பெற்ற நவராத்திரி திரைப்படத்தில் தெருக்கூத்து காட்சியில் கேட்டிருக்கலாம். அது இந்த நாடகத்தில்தான் வருகிறது!

இதைத் தவிர சம்பூர்ண இராமாயணம், அரிச்சந்திரா முதலான நாடகங்களையும் எழுதினாராம். இவர் எழுதிய பாடல்களைத்தான் எல்லா இராமாயண நாடகங்களிலும் பயன்படுத்தினார்கள் என்று டி.கே. ஷண்முகம் தகவல் தருகிறார். நாடக சபைகள் நாடக முகாம் நடத்துகையில் இறுதி நாளில் இவரது ராமாயண நாடகத்தை நடத்தி முகாமை முடிப்பார்களாம்.

சிவசண்முகம் பிள்ளை பிற்காலத்தில் கன்னையாவுக்காக நாடகங்கள் எழுதினாராம்.

இவரது புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை.

கண்டி ராஜா முன்னோடி நாடகம் மட்டுமே. அதன் பின்னணித் தகவல் ஏற்படுத்தும் பயங்கர உணர்வுக்காகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: நாடகத்தின் மின்பிரதி

எழுத்தாளர் சோ ராமசாமி

ChoRamaswamyசோ ராமசாமியின் முக்கியமான படைப்பு துக்ளக்தான். மிச்ச எல்லாம் அடுத்தபடிதான்.

இருந்த போதிலும் தமிழைப் பொறுத்த வரை அவர் ஒரு முக்கியமான நாடக எழுத்தாளர். அவரைத் தவிர வேறு யாரும் நையாண்டி, அதுவும் அரசியல் நையாண்டி (satire) சடையர் முயற்சி செய்ததாக தெரியவில்லை. அவரது அரசியல் நையாண்டி நாடகங்களும் நாவல்களும் – குறிப்பாக முகமது பின் துக்ளக் இன்னும் பொது நினைவில் இருக்கிறது.

எனக்குத் தெரிந்த வரையில் என்னைத் தவிர வேறு யாரும் சோவை எழுத்தாளராக, நாடக ஆசிரியராகப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் என் கண்ணில் அவர் கிரேக்க நாடக எழுத்தாளர் அரிஸ்டோஃப்னஸோடு ஒப்பிடக் கூடியவர். அரிஸ்டோஃபனஸும் சோவைப் போலவே அரசியல் நையாண்டியோடு சமூகப் பிரச்சினைகளை கலந்து கட்டி அடிப்பார்.

சோவுக்கு ஒரு எளிய சூத்திரம் உண்டு. ஒரு பிரச்சினையை எடுத்துக் கொள்வார். (விபசாரம், ஜாதி, நம் சட்ட அமைப்பில் நீதி கிடைப்பதில் உள்ள கஷ்டங்கள் மாதிரி) அதை விளக்குவது போல நாடகம் இருக்கும். அதில் யாராவது ஒருவர் நக்கல் அடித்துக் கொண்டே இருப்பார், கொஞ்சம் அசட்டுத்தனமான நகைச்சுவையாகத்தான் இருக்கும், அது கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரியும். சோ நடிக்க ஒரு பாத்திரம் வேண்டாமா? அன்றைய அரசியல் பிரச்சினைகளைப் பற்றி நிறைய அடிவெட்டு கமெண்ட் இருக்கும். அவ்வளவுதான், நாடகம் தயார்!

எனக்கு அசட்டுத்தனமான நகைச்சுவையாகத் தெரிவது அன்று சபா வட்டாரங்களில் தேவையாக இருந்திருக்கிறது. அந்தப் பாத்திரம்தான் நாடகம் சென்னை வட்டாரங்களில் வெற்றி அடைய முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது.

முகமது பின் துக்ளக் இந்த எளிய சூத்திரத்தை இன்னும் மேம்படுத்துகிறது. நக்கல் அடிக்கும் பாத்திரத்தை நாயகனாக்கிவிட்டார்! அதனால் நையாண்டியும் அடிவெட்டு கமெண்டுகளும்தான் துருத்திக் கொண்டு தனியாகத் தெரிவதில்லை, அவைதான் நாடகமே. விடுதலைப் போராட்டத்தின் லட்சியவாதம் மங்கி, சுயநலமும் தேர்தல் அரசியலும், வெட்டி சவால்களும் அதிகரித்திருக்கும் அரசியலை தன் களமாக எடுத்துக் கொள்கிறார்.

அன்றைய போராட்டங்களுக்கு அவர் சொல்லும் தீர்வுகள் அபாரம். ஹிந்தி மொத்த இந்தியாவிற்கும் பொது மொழியானால் அது தென்னிந்தியர்களுக்கு அநீதி, ஆங்கிலம் பொது மொழியானால் வட இந்தியர்களுக்குப் பிரச்சினை, சரி இருவருக்கும் வேண்டாம் பாரசீகமே இந்தியாவின் பொது மொழி! வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்ப்போம் என்று பேசிக் கொண்டே இருப்பது. மந்திரி பதவிக்காக கட்சி தாவுகிறீர்களா, கட்சி தாவும் எல்லாரும் உதவி பிரதம மந்திரி!

சிறந்த அரசியல் நையாண்டி நாடகம். ராஜாஜியைக் கூட விட்டுவைக்கவில்லை. ராஜாஜி போன்ற ஒருவர், கருணாநிதியை நினைவுபடுத்தும் ஒருவர், கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதியாக ஒருவர், இந்திரா காந்தியை நினைவுபடுத்தும் ஒருவர். எல்லாரையும் வாரு வாரு என்று வாருகிறார். ராஜாஜி “உங்களுக்கெல்லாம் எது நல்லது என்று உங்களுக்குத் தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்கிறார். அன்றைய தி.மு.க. பேச்சாளர்கள் பாணியில் உதார் விடும் மேடைப் பேச்சு! தோழர்கள் ரஷ்யாவைப் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அதே நேரத்தில் சோ நாடகங்களின் பிரச்சினையும் தெளிவாகத் தெரியும். நாடகத்தின் சமகாலத்தனம் (contemporariness). நாடகம் வந்த காலத்தில்  அவர் எண்ணி இருந்த உள்குத்து எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும். என்னால் ராஜாஜியையும் கருணாநிதியையும் அடையாளம் காண முடிகிறது. ஆனால் தோழர்களின் பிரதிநிதி யார் என்று தெரியவில்லை. அடுத்த தலைமுறைக்கு கருணாநிதி மட்டும்தான் அடையாளம் தெரியும், ராஜாஜி கூட தெரியப் போவதில்லை. அரிஸ்டோஃபன்சுக்கும் இதே பிரச்சினை உண்டு. அவர் நாடகங்களில் க்ளியான் என்ற கிரேக்க அரசியல்வாதி சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப்படுவார். நமக்கோ க்ளியான் என்று ஒருவர் இருந்தார் என்பதே இந்த நாடகங்களின் மூலம்தான் தெரியும். முக்கால்வாசி கிண்டல் புரியப் போவதில்லை…

சோவே கதாநாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம். நல்ல திரைப்படமும் கூட.

சோ நிறைய நாடகங்களை எழுதி இருக்கிறார். முகமது பின் துக்ளக் தவிர  உண்மையே உன் விலை என்ன, சாத்திரம் சொன்னதில்லை, யாருக்கும் வெட்கமில்லை ஆகியவற்றை முக்கியத் தமிழ் நாடகங்கள் வரிசையில் வைப்பேன். இவை சிந்தனையை தூண்டும் நாடகங்கள். பெர்னார்ட் ஷாவுக்கும் சோவுக்கும் ரொம்ப தூரம்தான், ஆனால் இவை ஷா பாணியில் எழுதப்பட்டவை.

சாத்திரம் சொன்னதில்லை நாடகத்தைத்தான் அவரது சிறந்த நாடகமாகக் கருதுகிறேன். விரிவாக இங்கே.

உண்மையே உன் விலை என்ன நல்ல நாடகம். பெண்ணைக் கற்பழிக்க முயலும் பணக்கார வாலிபன், அவளைக் காப்பாற்ற வாலிபனைத் தாக்கும் டாக்சி ஓட்டுனர். வாலிபன் இறந்துவிடுகிறான். ஓட்டுனர் கிறிஸ்துவர். பாவமன்னிப்பு கேட்டுவிட்டு சரணடையப் போகிறான். பாதிரியார் நீ செய்தது தவறில்லை, நீ சரணடைய வேண்டாம் என்கிறார். அவன ஒளித்து வைக்கிறார். வாலிபனின் அப்பா தன் பையனைக் கொன்றவனை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று துடிக்கிறார். உண்மைகள் நீதிமன்றத்தில் வெளிவந்தால் வாலிபனுக்கு நிச்சயமாக விடுதலை கிடைத்துவிடும். பணத்தை வைத்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவள் குடும்பத்தையும் வில்லன் விலைக்கு வாங்குகிறார். பதவியை வைத்து வக்கீலையும், அவரிடத்தில் இருக்கும் சாட்சிகளையும். உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஓட்டுனருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் நண்பரை. நீதிமன்றங்களில் உண்மையை நிலைநிறுத்த என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கிறது, பணம், செல்வாக்கு எத்தனை தூரம் போகும் என்பதை சிறப்பாக எழுதி இருக்கிறார். முத்துராமன், அசோகன், ஸ்ரீகாந்த், விஜயகுமார் என்று பலரும் நடித்து சோ இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது, நல்ல திரைப்படமும் கூட.

யாருக்கும் வெட்கமில்லை அவரது இன்னொரு நல்ல நாடகம். இந்த முறை விபச்சாரத்தை பிரச்சினையாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏன் விபச்சாரம் நடக்கிறது, பெண்களை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று அலசுகிறார். அவரது இயக்கத்தில் ஜெயலலிதா, சிவகுமார், ஸ்ரீகாந்த் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

அவரது பிற முயற்சிகளில் சர்க்கார் புகுந்த வீடு நாவல் சிறந்த அரசியல் நையாண்டிகளில் ஒன்று. எம்ஜிஆர்-கருணாநிதி அரசியல், அன்றைய முக்கியஸ்தர்கள் ம.பொ.சி., அன்று இதயம் பேசுகிறது என்ற பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த மணியன், அன்றைய உழவர் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்திய நாராயணசாமி நாயுடு, மக்கள் குரல் என்ற பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்த டி.ஆர்.ஆர். என்று பலரையும் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் தாக்குகிறார். ம.பொ.சி.யும் மணியனும், டி.ஆர்.ஆரும் எம்ஜிஆரை முகஸ்துதி செய்யும் காட்சி ஒன்று இன்றும் நினைவிருக்கிறது. எம்ஜிஆருக்கு போடப்படும் மாலை அவரை லேசாக குத்திவிடும், அவர் வாய்க்குள் ஏதோ முனகுவார். உடனே ம.பொ.சி. இப்போது எம்ஜிஆர் தன்னிச்சையாக அம்மா என்று முனகினாரா இல்லை அண்ணா என்று முனகினாரா என்று மணியனையும் டி.ஆர்.ஆரையும் கேட்பார். அம்மா என்று பதில் சொன்னால் அப்படி என்றால் எம்ஜிஆருக்கு அண்ணா இரண்டாம் பட்சமா என்று கேள்வி வரும். அண்ணா என்றால் அம்மா இரண்டாம் பட்சமா என்று கேள்வி வரும். இப்படி மாட்டிவிட்டாரே என்று இருவரும் திருதிருவென்று முழிப்பார்கள். கடைசியில் வந்தது வரட்டும் என்று மணியன் அண்ணா என்று பதில் சொல்லிவிடுவார். அதற்கு ம.பொ.சி. அதுதான் சரி, ஏனென்றால் அன்னை சத்யா எம்ஜிஆருக்கு மட்டும்தான் அன்னை, ஆனால் அண்ணாதுரையோ தமிழர்களுக்கெல்லாம் அன்னை என்று முடித்துவிடுவார். அன்றைய ஜால்ராத்தனத்தை அருமையாக சித்தரித்திருப்பார்!

கந்தசாமி, ரகுநாத ஐயர் உட்பட்ட ஐந்து குடும்பங்களின் வரவு செலவை அரசே ஏற்று நடத்தும். எம்ஜிஆருக்கு ஏதோ கோபம் வந்து பால், மளிகை எந்தக் கணக்கையும் தீர்க்க பணம் தரவே மாட்டார்கள். இவர்கள் இருவரும் நாராயணசாமி நாயுடுவிடம் சென்று கடன் தொல்லைக்கு என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். நாயுடு பொதுவாக வாங்கின கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை என்பார். இந்த வரிக்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் நீங்கள் எண்பதுகளில் பத்திரிகை படித்தவர் என்று அர்த்தம்!

மேலும் விரிவாக இங்கே

கூவம் நதிக் கரையினிலே மூன்று பகுதியாக வந்திருக்கிறது. சர்க்கார் புகுந்த வீடு நாவலின் தொடர்ச்சி.
முதல் பகுதியில் ரகுநாத ஐயர் அரசியலில் நுழைகிறார். அவருக்கு ஜக்கு என்ற பேட்டை ரவுடிதான் எல்லாம். வழக்கம் போல கலைஞர், எம்ஜிஆர், இந்திரா, ராஜீவ், என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு கிண்டல் அடிக்கிறார். கதை என்றெல்லாம் யோசிக்கவே கூடாது. இதை எல்லாம் அனுபவிக்கனும், ஆராய்ச்சி செய்யக் கூடாது! இரண்டாம் பகுதியில் ஐயர் முதல்வராகிறார். அவருக்கு ஊழல் செய்வது எப்படி, சும்மா பேசி பேசியே காலத்தை ஓட்டுவது எப்படி என்று கற்றுத் தரப்படுகிறது. மூன்றாம் பகுதியில் எல்லாரும் இறந்து போய் எமலோகம் போகிறார்கள். அங்கேயும் கிங்கரர்களை வைத்து அரசியல்!

அவர் எழுதிய மகாபாரதம் பாரதத்துக்கு நல்ல அறிமுகம். எனக்கு அன்றும் இன்றும் என்றும் ராஜாஜியின் வியாசர் விருந்துதான் முதல் இடத்தில் இருக்கிறது என்றாலும் இதுவும் படிக்கக் கூடிய நல்ல அறிமுகம்தான். அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று எனக் கருதுகிறேன்.

எங்கே பிராமணன் ஓரளவு புகழ் பெற்ற நாவல். வர்ணாசிரம தர்மம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறார். படித்த காலத்தில் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் பிராமணர்கள் இல்லை என்ற கருத்து புரட்சிகரமாக இருந்தது. (எனக்கு பதின்ம வயதிலேயே அந்த எண்ணம்தான், நாம் நினைப்பது போலவே இவரும் எழுதி இருக்கிறாரே என்று கொஞ்சம் நல்லெண்ணம்…)

துக்ளக் படம் எடுக்கிறார் என்றும் ஒரு புத்தகம் உண்டு. எழுபதுகளின் இறுதியில் “எட்டு வயதுப் பையன் நாலாங்கிளாஸ் பரீட்சை எழுதுகிறான்” என்ற கதையை ஜெகன்மோகினி புகழ் விட்டலாச்சார்யா, எம்ஜிஆரை மறைமுகமாகத் தாக்கி கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்கள் (நாயகன் ஜெய்ஷங்கர்), சாமி படமாக எடுத்துத் தள்ளிய கே.எஸ். கோபாலகிருஷ்ணன், சிவாஜி படங்களை இயக்கிக் கொண்டிருந்த கே. விஜயன், பாலசந்தர், கிராமப் படமாக எடுத்துக் கொண்டிருந்த பாரதிராஜா, சோ,  கலைப்பட இயக்குநர் ஒருவர் எல்லாரும் அவரவர் பாணியில் திரைக்கதையாக மாற்றுகிறார்கள். இது என் தலைமுறைக்கும் முந்தைய தலைமுறையினர் மிகவும் அனுபவித்து ரசித்த ஒன்று. நானும்தான். இன்றைய இளைஞர்களும் கூட ரசிக்கலாம். எழுதியது சோவேதானா இல்லை துக்ளக் டீமா என்று சரியாகத் தெரியவில்லை.

அவரது சில படைப்புகளைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே:

மெட்ராஸ் பை நைட் என்ற நாடகத்தை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சென்னையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம். பார்த்தபோது பிடித்திருந்தது.

ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்ட்: ஒரு கற்பழிப்பு வழக்கு; வழக்கு தொடுப்பதில் குறியாக இருப்பவர்கள் ஒரு சமூக சேவகி, ஒரு சினிமா இயக்குனர், ஒரு பத்திரிகை ஆசிரியர், மற்றும் ஒரு கல்லூரி பேராசிரியர். குற்றம் சாட்டப்பட்டவனுக்காக ஆஜராகும் வக்கீல் இவர்களது உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் (சமூக சேவகி இந்த வழக்கை நடத்தினால் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று நினைக்கிறாள். இயக்குனருக்கு இந்த நிகழ்ச்சியை கதையாக வைத்து, சம்பந்தப்பட்ட பெண்ணையே நாயகியாகப் போட்டு படம் எடுத்தால் காசு பார்க்கலாம் என்ற எண்ணம்; பத்திரிகை ஆசிரியருக்கு அந்த கதையை எழுத ஆசை; பேராசிரியருக்கு அந்தப் பெண் மேல் ஒரு கண், ஆனால் அதை வெளியே சொல்லாமல் அந்த ஆண் மேல் ஆசை மாதிரி நடி என்று சொல்லி இருக்கிறார்.) கடைசியில் வக்கீலுக்கு ஒரு குழப்பம் (dilemma); பல காரணங்கள் இருந்தாலும் குற்றம் செய்ததற்கு பொறுப்பு அவன்தானே? இல்லை சமூகம்தான் காரணமா? நல்ல கேள்வி, பதில் இல்லாமல் விட்டுவிடுகிறார்.

நல்ல கருத்துள்ள நாடகம், ஆனால் சிறப்பாக வரவில்லை.

சம்பவாமி யுகே யுகே: லஞ்சம் தலை விரித்தாடுவதால் பகவான் நாராயணன் சம்பவாமி யுகே யுகே என்று சொன்ன மாதிரி மீண்டும் பிறந்து வருகிறார். ஆனால் அவரைப் பைத்தியம் என்று சொல்லி உள்ளே தள்ளி விடுகிறார்கள். நன்றாக வரவில்லை.

சட்டம் தலை குனியட்டும் நாடகத்தில் பணக்காரர்களால் சட்டம் வளைக்கப்படுவதைப் பற்றி எழுதுகிறார். சுமாராக இருக்கிறது.

வாஷிங்டனில் நல்லதம்பி: அரசியல்வாதி நல்லதம்பி (கருணாநிதிதான்) அமெரிக்கா சென்று போராட்டங்கள் நடத்தி ஜனாதிபதி ஆகி நயாகராவில் படகு விடும் திட்டம், அடுக்குமாடி இடிப்பு திட்டம் எல்லாவற்றையும் கொண்டுவருகிறார். படிக்கலாம்.

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் நாடகத்தில் எமலோகத்தில் கிங்கரர்களை வைத்து அரசியல் செய்து அங்கும் ஒரு தி.மு.க. போன்ற அரசியல்வாதி குழப்பம் செய்கிறார். படிக்கலாம்.

எங்கே போகிறாய்: சோழர் காலத்தவர் ஒரு தீவில் பல நூறு வருஷங்களுக்கு முன் செட்டில் ஆகி அங்கே அன்றைய தமிழ் கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள். கப்பல் கவிழ்ந்து ஒரு எம்.எல்.ஏ., இரண்டு இளைஞர்கள், ஒரு குப்பத்து ஆள் அங்கே போய் சேர்கிறார்கள். அப்புறம் வழக்கமான வசனங்கள். தவிர்க்கலாம்.

எஸ்.வி. சேகர் ஸ்டைலிலும் கதையே இல்லாமலும் சிரிப்பே வராமலும் சில நகைச்சுவைக் கதைகளை எழுதி இருக்கிறார். கல்கியில் தொடராக வந்த ஒரு யாரோ இவர் யாரோ (1967) உதாரணம்.

அவரது பிற நாடகங்களில் நான் சின்ன வயதில் பார்த்தவை நேர்மை உறங்கும் நேரம். அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிக் கொண்டே அதை சுத்தம் செய்யத் தேவையான உழைப்பைத் தர மறுக்கும் “அறிவுஜீவிகளைத்” தாக்குவார். வந்தேமாதரம் A Tale of Two Cities நாவலின் உல்டா. மனம் ஒரு குரங்கு Pygmalion நாடகத்தின் உல்டா (திரைப்படமாகவும் வந்தது).

என் கண்ணில் அவரது முக்கியப் பங்களிப்பு இதழியலாளராகத்தான். ஆனால் என்னைத் தவிர வேறு யாருக்கும் அவர் எழுத்தாளராகத் தெரிவதே இல்லை, அவரது இதழியல் பங்களிப்பு இந்த முகத்தை மொத்தமாக அமுக்கிவிட்டது என்பதுதான் சோகம். எழுத்தாளராக அவரது முக்கியப் பங்களிப்பு சில நாடகங்களிலும் அரசியல் நையாண்டிப் படைப்புகளிலும்தான் இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம் 1847-இல் எழுதப்பட்ட ரொம்பப் பழைய நாடகம். (தமிழ் விக்கி தளம் 1867 என்கிறது, ஆனால் என் குறிப்புகளின்படி 1847தான், எங்கே பார்த்தேன் என்பதுதான் நினைவில்லை) பாய்ஸ் கம்பெனி பாணி நாடகங்களில் இதுவே முதல் நாடகம் என்று எங்கோ படித்த நினைவு. தகவல் அல்லது நினைவு தவறாக இருக்க வாய்ப்புண்டு. பம்மல் சம்பந்த முதலியார் போன்ற முன்னோடியே இந்த நாடகத்தை முன்னோடி நாடகம் என்று குறிப்பிடுகிறார். ரத்தக்கண்ணீர் நாடகம்/திரைப்படத்தின் மூல வடிவம் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

எனக்கு பழைய நாடகங்களில் ஈர்ப்பு உண்டு. அதுவும் எத்தனை அரதப்பழசோ அத்தனை தூரம் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது 🙂 டம்பாச்சாரி விலாசம் திரைப்படமாக மறு ஆக்கம் செய்யப்பட்டதும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. (ஆனால் ரத்தக்கண்ணீர் திரைப்படமே எனக்கு பெரிதாக சுவாரசியப்படவில்லை.) ஒரே பிரச்சினை, ஆர்க்கைவ் தளத்தில் கிடைக்கும் மின்பிரதியின் தரம் கொஞ்சம் மோசம். படிப்பது கஷ்டம். தம் கட்டிப் படித்தாலோ அவ்வப்போது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது.

டம்பாச்சாரி விலாசம் அந்தக் காலத்திற்கு பெரும் புரட்சியாக இருந்திருக்க வேண்டும். ராமன், கிருஷ்ணன் என்று தெரிந்த கதை இல்லை; ராஜா ராணி கிடையாது; அன்றைய சமூகம்தான் பின்புலம் (மிகைப்படுத்தப்பட்ட பின்புலமாக இருக்கலாம்.)

நாடகத்தின் நடை பெரிய மாற்றமாக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். பாட்டுகளும் வசனங்களும் கலந்து வருகின்றன. பல முறை ஒரு பாடலை விளக்கியே வசனம் வருகிறது. அன்றைய பேச்சு மொழி நிறையவே பயன்படுத்தப்படுகிறது. பல மொழி வார்த்தைகள் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. தெலுகு வேலைக்காரன் – பெத்தபோயி – என்றால் அவன் தெலுங்கில்தான் பேசுகிறான். சோக்ரா உருதுவில். ஆங்கிலம் பீட்டர் விடுவது போல அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் மொழியே தமிழ் நாடகத் துறையில் முன்னடியாக இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளிலேயே (எழுத்துப் பிழைகளைத் திருத்தி இருக்கிறேன்.)

இந்நூலில் தெலுங்கு, பார்சி, இங்கிலீஷ் முதலாகிய தேசிய மொழிகளும் வாராங்க போராங்க வாராங்கோ போராங்கோ அவங்கோ இவங்கோ முதலாகிய கிராமிய மொழிகளும் ஸமஸ்கிருத நாடகங்கள் போலவும் தமிழ்க் குறவஞ்சி முதலானவைக்கள் போலவும் வேண்டிய இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

டம்பாச்சாரியும் அவன் நண்பர்களும் பீட்டர் விடுவதற்கு ஒரே ஒரு உதாரணம் கீழே.

வெயிட்டு செய் சட்டுவாஜீ
கெயிட்டுபோற் பறந்தே ஓடி
ஃபெயிட்டனைப் போட்டுக் கொண்டென்
ரயிட்டரை வரச் சொல்வாயே

ஆங்கிலத்தில் – “Wait, my assistant! Fly like a kite and ask my clerk to come back in the pheaton!”

கதைப் பின்னல் இன்று காலாவதியாகிவிட்ட ஒன்றுதான். என்ன நடக்கப் போகிறது என்பது மிக வெளிப்படை, கதையின் போக்கு வெகு சுலபமாகப் புரிந்திருக்கும். உதாரணமாக வில்லன் பேர்கள் எல்லாம் குடிகேடன், ஆயிரப் புளுகன் என்றுதான் இருக்கும். அவர்கள் அறிமுகக் காட்சியில் தான் எத்தனை குடும்பத்தைக் கெடுத்தேன், தான் எப்படிப்பட்ட பொய்களைச் சொல்வேன் எனறு விளக்கி பாட்டு பாடுவார்க்ள். டம்பாச்சாரியும் அவர்கள் வில்லத்தனத்தை மெச்சி எதிர்பாட்டு பாடுவார். எதற்கு குடிகேடனை தன் நண்பராகக் கொள்கிறார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பாத்திரப் படைப்புகளில் எந்த நுணுக்கமும் கிடையாது. ஆனால் டம்பாச்சாரி போன்ற ஒரு ஜமீந்தார், அவனை ஏமாற்றி வாழும் ஒட்டுண்ணி வில்லன்கள், தாசி, தாசியின் அம்மா, தாசிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் “மாமா”, வைத்தியர், சில பல வேலைக்காரர்கள், நேர்மையான பணியாட்கள், உத்தம மனைவி என்று பல சமூகத் தட்டுகளில் பாத்திரங்களை படைத்ததே பெரும் புரட்சியாக இருக்க வேண்டும். (மிருச்சகடிகம், மத்தவிலாசப் பிரகசனம் போன்ற விதிவிலக்குகளில் இப்படிப்பட்ட பாத்திரங்கள் இருக்கலாம்.)

ஒரு வரியில் சொன்னால் – உண்மையான முன்னோடி நாடகம்.

நாடகத்தை எழுதியவர் காசி விஸ்வநாத முதலியார். சைதாபுரத்துக்காரர், அதாவது இன்றைய சைதாப்பேட்டைக்காரர். 1806இல் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். முதலில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பிறகு மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார். டம்பாச்சாரி விலாசம் தவிர, தாசில்தார் விலாசம், பிரம்ம சமாஜ விலாசம் ஆகிய நாடகங்களை எழுதி இருக்கிறார்.

1880க்குப் பிறகு புகழ் பெற்று விளங்கிய பாலாமணி அம்மாள் குழுவினர் இந்த நடிகத்தை அடிக்கடி நடத்துவார்களாம். வசூல் குறையும்போதெல்லாம் இந்த நாடகத்தை போட்டுவிடுவார்களாம். தாசி மதனசுந்தரியாக பாலாமணி அம்மாளும் டம்பாச்சாரி பாத்திரத்தில் ராஜாம்பாள்/கோகிலாம்பாள்/வடிவாம்பாள் ஆகியோரும் நடித்தனர், பிற்காலத்தில் சி.எஸ். சாமண்ணா ஐயர் ஒரே நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார் என்றும் மூத்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் தகவல் தருகிறார். (அவர் இன்னொரு மூத்த நடிகரான சாரங்கபாணியிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.)

எளிய கதைதான்; டம்பாச்சாரி வீண் டம்பத்துக்காக பரம்பரையாக வந்த பணத்தை கோட்டை விடுகிறான். ஒட்டுண்ணி நண்பர்கள், தாசி மதனசுந்தரி அவனை சுத்தமாக மொட்டை அடித்துவிடுகிறார்கள். ஆனாலும் கடனை வாங்கி இவர்களுக்காக செலவழித்துக் கொண்டே இருக்கிறான். மனைவி மக்களைத் துரத்திவிடுகிறான். கடனைத் திருப்ப முடியாமல் சிறை. தப்பித்து வந்தால் தாசியும் நண்பர் என்று நினைத்தவர்களும் அவஐ அவமதிக்கிறார்கள், மனம் திருந்துகிறான். அப்பர் சுவாமிகள் உபதேசம் செய்கிறார். அவன் அப்பா அவனுக்கு தான் சேர்த்து வைத்ததில் கொஞ்சம்தான் கண்ணில் காட்டி இருக்கிறார், அதனால் முன் போலவே சொகுசு வாழ்க்கை, சுபம்! (ரத்தக் கண்ணீர் போல நோய், பிச்சை எடுக்கும் நிலை எல்லாம் வரவில்லை)

நாடகத்தில் அங்கங்கே ஒரு வரியைப் படித்ததும் நிறுத்திவிடுவேன். அதிலிருந்து அன்றைய சமூகச் சூழ்நிலை பற்றி கீற்று போல ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.

முதல் பக்கத்திலேயே எனக்கு களைகட்டிவிட்டது. எழுதியவர் முதலியார், மெய்ப்பு பார்த்து பதித்தவர் ராவுத்தர். ஜாதி ஆசாரம் மிகுந்த காலத்தில் கூட இப்படி எல்லாம் தொழில் முறை உறவு இருந்திருக்கிறது.

வடமொழி, தமிழ், தெலுகு ஆகியவற்றில் பெரும் புலவர்கள் என்று முதல் பக்கத்தில் ஒரு பட்டியல் போடுகிறார், அதாவது அன்று இந்த மூன்று மொழிகளுமே படித்தவர்களுக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

கை வறண்ட பிறகு கடன் வாங்கப் பகல் வேஷம் போட்டு டிஸ்கவுண்டு செய்வதால் டிஸ்கவுண்டு மேஸ்டராகி கோர்ட்டு வழக்குகளாடி இன்ஸால்வெண்டு ஆக்டில் வருவதால் இன்ஸால்வேண்டு மேஸ்டராகி பின்பு பிழைக்க வகை தெரியாதவர்களாததால் ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, குடிகேடன், இவர்களில் ஒருவாராகி…

இந்த வரியில் அப்படியே நின்றுவிட்டேன். அது என்ன டிஸ்கவுண்டு மேஸ்டர், தலைப்பாகை மாற்றி? (தலைப்பாகை மாற்றிக்கு பின்னால் விளக்கம் வருகிறது, அவன் தொப்பியை கழற்றி இவனுக்கும் இவன் தொப்பியைக் கழற்றி அவனுக்கும் போடுபவனாம், குல்லா போடுபவன் என்று பிற்காலத்தில் மாறி இருக்க வேண்டும்) திவால் ஆவது 1850களிலேயே சாதாரண நிகழ்ச்சியா? அப்படி என்றால் ஆங்கிலேய ஆட்சி, சட்டம், நீதிமன்றங்கள் எல்லாம் அப்போதே எத்தனை வலுவாக நிறுவப்பட்டிருக்க வேண்டும்? நீதிமன்றங்களில் முதலியார் நிறையப் பார்த்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

அப்புறம் நிறைய disclaimer – அதில் ஒன்று.

சற்பிராமண… அந்தணர்களை நான் தூஷிக்கவில்லை. பிராமண ஆசாரங்களிலிருந்து வழுவி… தாழ்ந்த குலத்தாருக்கு ஸ்தீரிகளை பிணைத்து வைக்கிற அப்படிப்பட்ட மகா நீசமான சீவனம் செய்கிறவர்களை மாத்திரமே எடுத்துச் சொல்ல வந்தது

அப்படி என்றால் இதையே பிழைப்பாக சில பல பிராமணர்களாவது கொண்டிருக்க வேண்டும்! இந்த நாடகத்தின் கும்பகோணம் ஐயரின் மறுவடிவம்தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி!

சில வர்த்தகர்கள்… குஜராத்திப் பேட்டையில் நடப்பது போல அதிக வட்டி முதலாகியா லாபத்தை இச்சித்து

குஜராத்திப் பேட்டைதான் இன்றைய சௌகார்பேட்டையா? 200 வருஷங்களுக்கு முன்பே வட்டி வியாபாரம் செய்யும் குஜராத்திகள் குடியிருப்பு சென்னையில் இருந்ததா?

வினோதரசமஞ்சரி புத்தகத்தை எழுதிய அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார், நன்னூலைப் பதிப்பித்த திருத்தணிகை விசாகப் பெருமாளையர் உட்பட்ட 20-30 பேர் சாற்றுக்கவிகள் (வாழ்த்துக்கள்) கொடுத்திருக்கிறார்கள். முதலியார் அன்று சென்னை பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியர்கள் பலரிடமிருந்தும் சாற்றுக்கவிகளை பெற்றிருக்கிறார். வேலூர் சுப்பராய முதலியார் மகாபாரதத்தை கீர்த்தனையாகப் பாடி இருக்கிறாராம், யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (லலிதாராமிடம் விசாரித்தேன், அவரே கேள்விப்பட்டதில்லை. தேடிப் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.)

விசாகப் பெருமாளையர்தான் அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் தலைமை தமிழாசிரியராம். முதலியாரின் வார்த்தைகளிலேயே –

மகா-ஸ்ரீ-ஸ்ரீ கம்பெனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூனிவர்சிடி எனும் சென்னை சகலசாஸ்திரசாலை தமிழ்த் தலைமை புலமை நடாத்தும் இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர்

கம்பெனி என்று இங்கே சொல்லி இருப்பது இந்த நாடகம் கம்பெனி நாட்களில், அதாவது 1857-க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற என் குறிப்புக்கு வலு சேர்க்கிறது. மேலும் கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன் என்று ஒரு இடத்தில் வருகிறது. எல்ஃபின்ஸ்டோன் 1842 வரைதான் சென்னை கவர்னராக இருந்தவர்.

சென்னை கவர்மெண்டு நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை வாழ்த்துப்பா கொடுத்திருக்கிறார், அது என்ன நார்மல் ஸ்கூல், இன்று என்ன பெயர் என்று தெரியவில்லை. பச்சையப்பா கல்லூரி அப்போதே இருந்தது என்று தெரிகிறது, பச்சையப்ப முதலியாரது சென்னைப் பலகலைச்சாலையில் தமிழ்த்தலைமை புலமை நடாத்தும் வித்துவான் சுப்பராயப் பிள்ளையும் கொடுத்திருக்கிறார். அதே பல்கலையில் தமிழ்ப் புலமை நடாத்தும் கூவம் ராஜா திரிபுராந்தக முதலியாரும், கூவம் சுப்பராய முதலியாரும் கொடுத்திருக்கிறார்கள். கூவம் என்று அப்போது ஒரு ஊர் இருந்திருக்கிறது! பல்கலை என்ற வார்த்தை அப்போதே புழக்கத்தில் இருந்திருக்கிறது.

சாற்றுக்கவிகளில் பாதி எனக்கு புரியவில்லை, கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது. அதுவும் செட்டியார் சிலேடையில் புகுந்து விளையாடுகிறார். அவர் “கற்பனை” என்ற வார்த்தையை நான்கு விதத்தில் பயன்படுத்துகிறார், எனக்கு மூன்றுதான் புரிந்தது. (கல் பனை மரம் போன்ற துதிக்கை உள்ள பிள்ளையார், கற்பு நெறி, கற்பனை..)

அங்குசபாசனுக்கும் அருள் குமரேசனுக்கும் மங்களம் என்று தொடங்குபவர் மகுட விக்டோரியா, மஹா பார்லிமெண்டார், அகில போர்ட் ஆஃப் கன்ட்ரோல், ஹானரபில் கம்பெனி, தகவு மைசூர் கர்த்தர் (மைசூர் மஹாராஜா), தஞ்சாவூர்க் கொற்றவர், புகழு நவாப், புனித கவர்னர், சுப்ரீம் கோர்ட்டார், சதர் கோர்ட்டார் என்று எல்லாருக்கும் மங்களத்தை அடுக்கிக் கொண்டே போகிறார்.

அங்கங்கே அன்றைய பெரிய மனிதர்கள் – கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன், கவுன்சில் மெம்பர் (காஜுலு) லக்ஷ்மிநரசு, செல்வந்தர்கள் பச்சையப்ப முதலியார், மணலி சின்னையா பிள்ளை, கோமள சீனிவாசப் பிள்ளை, திருத்தணிகை விசாகப் பெருமாளையர், (மழவை) மகாலிங்க ஐயர் – ஆகியோரின் பேரை நுழைத்துவிடுகிறார். சில இடங்களில் அவர் பெயரையும் நுழைத்துக் கொள்கிறார். வீட்டில் திருடியவன் அதிகெட்டிக்காரன் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு அன்றைய பெயர் பெற்ற திருடர்களின் பட்டியல் ஒன்று தருகிறார் – தண்டையார்பேட்டை குமரன், ஏரிவாய் தாண்டவராயன், தலைவிரிச்சான் ரத்னசபாபதி, தீவட்டிச் செல்லன் அப்புக்காத்தான்….

டம்பாச்சாரி அறிமுகக் காட்சியில் காதில் பச்சை முருகு காந்தி வீசும் சீமை ரவைக் கடுக்கன்; திருத்தமாக வாரப்பட்ட கன்னக் கருத்த ஜுலுப்பா (தலைமுடி என்று புரிகிறது, அனேகமாக உருது வார்த்தையான ஜுல்ஃப் என்று நினைக்கிறேன்), காதுக்கு கீழே கிருதா, முறுக்கிய மீசை, செஞ்சாய வேஷ்டி, கொக்கி மாட்டிய இஸ்திரி ஜாக்கெட்டு, சரிகை ஷால், நவாத்தின மோதிரம், கைக்குள் டப்பி (பொடி டப்பியா?), அக்கிள் (கைக்)குட்டை, வாட்ச், நெக்கில் (கழுத்தில்) செயின், ஜோடுகள், புனுகு ஜவ்வாது அணிந்து வருகிறான். இதுதான் அன்றைய ஸ்டைல் போலிருக்கிறது.

அவனிடம் சிப்பந்திகளாக சட்டுவாஜி (அப்படி என்றால்?), சோக்ரா, தவசுப்பிள்ளை, உக்காபர்தார் (ஹூக்காக்களை தயார் செய்பவர்), பெத்தபோயி (வீட்டு சாமான்களை சுத்தம் செய்பவர்), ரயிட்டர் (ரைட்டர், இவர்தான் சம்பளப் பட்டுவாடா செய்கிறவர் போலிருக்கிறது), தாருகா (சிப்பந்திகளின் மேலாளர் என்று நினைக்கிறேன்), கணக்கப் பிள்ளை, கோச்சுமான், வாட்ச்மேக்கர் (கடிகாரங்களுக்கு சாவி கொடுக்கும் பணியைச் செய்பவர்), பாரா சவுக் சேவகர் (வாயிற்காவல்), மஸால்ஜீக்கள் (வாசலில் லாந்தர் ஏற்றுபவர்கள்), பியூன்கள் என்று ஒரு பட்டாளமே வேலை செய்கிறது. இதில் உக்காபர்தார் சர்வசாதாரணமாக பான்சோத் (பெஹன்சோத், தமிழில் வக்காளவோழி) என்று வ்சனம் பேசுகிறார்! சிப்பந்திகள் திருடுகிறார்கள், ஆனால் எஜமானர் பொருட்படுத்துவதில்லை. டம்பாச்சாரி கணக்கரிடம் கைமாற்று வேண்டி இருந்தால் குஜராத்தி பேட்டையில் வாங்காதே, அவர்கள் ஒரே நாளில் எல்லா சொத்தையும் ஜப்தி செய்து அபகரித்துவிடுவார்கள் என்கிறான்.

முதல் காட்சியில் டம்பாச்சாரியின் நண்பர்கள் – குடிகேடன், ஜகஜாலப் புரட்டன், ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, இன்சால்வெண்டு மேஸ்டர், டிஸ்கவுண்டு மேஸ்டர், பகல் வேஷக்காரன், கவிராஜசிங்கம் கதிரைவேல் பண்டிதர் – விருந்துண்ண வருகிறார்கள். டம்பாச்சாரியின் சிற்றப்பா. மகா கஞ்சனான பரமலோபன் அவர்களுடன் சண்டை போடுகிறான். ஆனால் டம்பாச்சாரி சுகங்களை அனுபவிக்க மட்டும் ஒரு சங்கமே அமைக்கத் திட்டமிடுகிறான். அவனை மயக்க வேண்டும் என்று மதனசுந்தரி என்ற தாசி திட்டம் போடுகிறாள். கும்பகோணம் ஐயர் தூது போகிறார். மதனசுந்தரிக்கு மிட்டா, ஜமீன், கம்பெனி பத்திரங்கள் எல்லாவற்றையும் விற்று, முன்னோர் கட்டிய சத்திரங்களை இடித்து, அதிலிருந்து உத்தரங்கள் எல்லாவற்றையும் எடுத்து மெத்தை வீடு கட்டித் தருகிறான். கவர்ச்சிக் காட்சிக்காக நீ நிர்வாணமாக நின்றுகொண்டு எனக்கு எண்ணெய் தேய்த்துவிடு என்கிறான். (பிற்காலத்தில் பாலாமணி அம்மாள் என்ற அன்றைய நட்சத்திர நாடக நடிகை தாராசசாங்கம் என்ற நாடகத்தில் பார்ப்பவர்களுக்கு உடையே இல்லாத மாதிரி தோன்றும் மெல்லிய உடை அணிந்து எண்ணெய் தேய்த்துவிடும் காட்சி படுபிரபலம் என்று எம்.ஆர். ராதா எங்கோ எழுதி இருப்பதாக நினைவு.)

பூரி, ரொட்டி, ஆப்பம், வெண்ணெய், முட்டை, டீ ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். டீ என்றால் தேநீர்தானா என்று தெரியவில்லை! ரொட்டியை வெட்டு என்பதிலிருந்து அது இன்றைய unsliced bread ஆக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

நண்பர்களில் ஆயிரப் புளுகன் என்ற பாத்திரம் பேசும் வசனம் –

அகப்பட்டவர்களை ஏமாற்றி அவர்களுக்கு ஆயிரம் பொய்களைச் சொல்லி ஜகஜல்லி அடித்து கையிலிருப்பதைத் தட்டிக் கொண்டு சடகோபம் வைத்து வருகிறேன்

ஏமாற்றுவதற்கு சடகோபம் வைப்பது என்று சொல்வதை இது வரை பார்த்ததில்லை. ஜல்லி அடிப்பது என்று சுஜாதாவைத் தவிர வேறு யாரும் பய்ன்படுத்திப் பார்த்ததில்லை.

தலைப்பாகை மாற்றி காப்பிரைட்டுகளைத் திருடுவான் என்று ஒரு வரி வருகிறது. அப்படி என்றால் 1850களுக்கு முன்பே காப்பிரைட் சட்டங்கள் வழக்கில் இருந்திருக்கின்றன.

கவிராஜ பண்டிதர்

ஆசுபத்திரியில் கடிக்கவிடுவது அட்டை

என்று ஒரு இடத்தில் சொல்கிறார். அட்டைகளை கடிக்கவிட்டு மாசுள்ள ரத்தத்தை வெளியேற்றுவது அப்போதும் பழக்கத்தில் இருந்திருக்கிறது.

நண்பர்களுக்கு ஏற்படுத்திய விருந்தில் சீஸ்கேக், ஸ்பஞ்ச் கேக், பட்டர் கேக், ஃப்ரெஞ்சு மகரூன், மாகரோனி, ஃபிங்கர்கேக், மஃபின் பரிமாறப்படுகின்றன. இவற்றில் அனேகமானவற்றை நான் அமெரிக்கா வந்த பிறகுதான் கேள்வியே பட்டேன். 1850களிலேயே இவை சென்னையில் கிடைத்தனவா?

தாசி மதனசுந்தரிக்கு அவள் தாய் சொல்லித் தரும் உத்திகளில் ஒன்று –

மார்பின் மீதும் எந்தன் உத்தரீயம் போடு ஒரு பக்கம் தெரியவே

டம்பாச்சாரிக்கு கடன் கொடுப்பவர்களில் கோமுட்டி செட்டியார் புல்லையா செட்டியும் ஒருவர். அவர் எப்படி முன்னேறினார் என்பதை விவரிக்கிறார்.

முருக்கிலை தைத்து விற்றும் ஊசற்பட்டாணி விற்றும்
சரக்குள மளிகை வைத்தும் சராப்பு பேரங்கள் செய்தும்…

முதல் முதல் அரிசி போட்டு முருக்கிலை வாங்கி தைத்து விற்று துட்டாக்கி அந்தத் துட்டுக்கு பட்டாணி வாங்கி வறுத்து விற்றுப் பணமாக்கி அந்தப் பணத்துக்கு மிளகாய் புளி வாங்கி விற்று ரூபாயாக்கி, அந்த ரூபாய்க்கு கருமாந்திரத்தில் கொடுக்கப்பட்ட வஸ்திரங்களை குச்சிலிக் கடையில் பார்ப்பார் கொண்டு வந்து விற்க, அதுகளை வாங்கி ஜவுளி பேரம் செய்து ரூபாயை வராகனாக்கி அந்த வராகனைக் கொண்டு சராப்புக் கடை வைத்து வாங்கும்போது ஒன்பது மாற்றை ஏழு மாற்றுப் பொன்னென்றும் விற்கும்போது ஏழு மாற்றை ஒன்பது மாற்றென்றும் சொல்லி விற்று மேற்படி வராகன் மொத்தத்தை ஆயிரம் பதினாயிரம் லட்சமாகப் பெருக்கி அதைக் கோடிக்கணக்காக்க பேராசை பூண்டு டம்பாச்சாரிக்கு டிஸ்கவுண்டு கடன் கொடுத்து ஏமாந்து போக புல்லைய செட்டியார் வருகிற விதம் காண்க

கடன் கொடுக்கும் இன்னொருவர் கப்பல் வியாபாரம் செய்யும் ஷேக் மீரா லப்பை. லப்பை வியாபாரம் செய்யும் பொருட்களில் ஒன்று மயிர்முளைஞ்சான் கட்டை (வசம்பாம்!). இன்னொன்று குண்டி கிளிஞ்சாலும் கிளியாத முத்து வண்ணச் சேலை. அதைத் தவிர முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம், பச்சை, கெம்புக்கல், வைடூரியம், சீப்பு சிக்காங்கோல், சவுரி மயிர், குங்குமப்பூ, கோரோஜனம், ஜாதிக்காய், சாபத்திரி, லவங்கம், மொட்டைக் கொப்பரை, ருத்திராட்சம் என்று எல்லாவற்றையும் இறக்குமதி செய்கிறார். கடன் திருப்பி வரவில்லை என்றதும் வக்காளவோளி, கண்டாரோளி, தாயோளி என்றெல்லாம் டம்பாச்சாரியை திட்டுகிறார். இருவரும் டம்பாச்சாரி மீது கேஸ் போட, “படித்த” லாயர் துபாஷி அவர்களை சுலபமாக ஏமாற்றுகிறார்.

பண்டாரங்கள் பத்ரகிரி பாணியில்

ஆங்காரம் உள்ளெழுப்பி ஐம்புலனில் மனம் செல்ல
தூங்காமல் வேசியுடன் சுகித்திருப்பது எக்காலம்?

என்று பாடுகிறார்கள்.

நாடகத்தின் நடுவில் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் எழுதிய சமையல் நூலை வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்போம் என்று ஒரு வரி வருகிறது. சமையல் புத்தகங்கள் வர ஆரம்பித்துவிட்டன் போலிருக்கிறது!

முன்னோடி நாடகம். ஆனால் நாடகத்தில் அதைத் தவிரவும் கவர்கிறது. பிரதாப முதலியார் சரித்திரம் போல. கறாராகப் பார்த்தால் காலாவதி ஆகிவிட்டதுதான், ஆனால் I found it charming. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

எஸ்.வி. சஹஸ்ரநாமம் – தமிழ் நாடகங்களில் பாரதி

எஸ்.வி. சஹஸ்ரநாமம் பெயர் நினைவிருந்தால் உங்களுக்கு நாற்பது வயதாவது இருக்க வேண்டும். மிக இயல்பான நடிகர். திரைப்படங்கள் மூலம்தான் இன்று கொஞ்சமாவது நினைவில் இருக்கிறார், ஆனால் நாடகம் நாடகம் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

பசுபதி சார் தளத்தில் அவர் 1981-இல் எழுதிய ஒரு கட்டுரை கிடைத்தது, அவருக்கு நன்றி! பாரதியை அவர் எப்படி எல்லாம் தனது நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டார் என்று எழுதி இருக்கிறார். பாரதிக்கும் முன்னால் இருந்த நாடக உலகம் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.

கனபரிமாண காட்சி முறையை அவரது நாடகம் ஒன்றில் கலை இயக்குனர் கலாசாகரம் ராஜகோபால் அறிமுகப்படுத்தினாராம். அது என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வசதிக்காக கட்டுரையை தட்டச்சி இருக்கிறேன். ஓவர் டு சஹஸ்ரநாமம் சார்!


தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் நான் சேர்ந்த புதிதில் அநேகமாக எல்லா நாடகங்களும் புராண, இதிகாச வகைகளாக இருந்தன. அத்துடன் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியனவாகவும் இருந்தன. பிறகு கால மாறுதலுக்கேற்ற வகையில் சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் மேடைக்கு வர காரணமாக இருந்தவர் நாடக மேதை எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான். நடிகர் எம்.கே. ராதா அவர்களின் தந்தை.

நான் கம்பெனியில் சேரும்போது அவர் இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்தார்கள். அவரால் தயாரான சமூக நாடகங்கள் ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன்; இவ்வளவும் ஜே.ஆர். ரங்கராஜு அவர்களால் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டவை. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் மேனகாவும் கந்தசாமி முதலியார் அவர்களால்தான் மேடையில் நாடகமாக ஆக்கப்பட்டது. அவர்தான் எனது குரு. நாடக ஆசிரியர். எனக்கு நல்ல பாத்திரங்களை அளித்து அதிலே, பயிற்சி அளித்து பிறர் பாராட்டைப் பெறும் பாக்கியமும் நான் பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான்.

தேசீய விடுதலைப் போராட்டம் மும்முரமாகத் தொடங்கியபோது சமுதாயத்தின் ஒரு பகுதியான கலைஞர்களும் தங்கள் தொழில் மூலம் தேசீயப் போராட்டத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். நாடகங்கள் எதுவானாலும் தேசியக் கிளர்ச்சிக்குத் தேவையான பணிகளில் மக்கள் மனத்தைப் பண்படுத்தும்படியாக தங்கள் நடிப்பு, இசை அனைத்தையும் பயன்படுத்தலானார்கள். தேசியப் போராட்டத்தில் தமிழகத்துக் கலைஞர்களுக்கு பெரும் பங்குண்டு. பாரதியாரின் பல பாடல்கள் நாடகங்களில் பாடப்பட்டன.

1946-ஆம் ஆண்டில் என்.எஸ்.கே. நாடக சபாவை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது புதிதாக நாடகம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ப. நீலகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். “தியாக உள்ளம்” என்ற ஒரு கதையைக் குழுவில் படித்துக் காண்பித்தார். அந்தக் கதை கருத்துடையதாகவும் விடுதலைப் போராட்ட எழுச்சிக்குத் தூண்டுவதாகவும் இருந்தது. இரண்டொரு பாத்திரங்களை புதிதாக உருவாக்கி “நாம் இருவர்” என்று அந்நாடகத்துக்கு பெயரிட்டு தயாரிக்க ஏற்பாடு செய்தோம். இதில் இடம் பெற்ற பாரதியின் பாடல்கள் வெற்றிக்கு வழி காட்டின. இந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியடிகள் சென்னை வந்திருந்தார்கள். அப்போது பிரார்த்தனைக் கூட்டத்தில் நாங்கள் குழுவுடன் கலந்து கொள்வோம். எந்த நேரமும் புதிய நாடகத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் எனக்கு மகாத்மா தரிசனமும் நாடக வெற்றிக்கான வழியைக் காட்டியது. அதன் பலன்… மூன்று நான்கு காட்சிகளும் தேசியப் பாடல்களும் ஒரு சகோதரியின் பாகமும் உருவாகின. மகாத்மாவின் சிலையும் நாடகத்தில் முக்கியப் பங்கேற்றது. நாடகம் மிக வெற்றிகரமாக மேடை ஏறியது.

அன்று அந்த நாடகத்துக்குத் தலைமை ஏற்று, நாடகத்தை மிக மிக அழகாக ரசித்துப் பாராட்டி ஆசிரியரையும் கலைஞர்களையும் வாழ்த்தியவர் திரு. வ.ரா. அவர்கள். அவரைச் சந்திப்பதற்கு முன்னால், எனது எண்ணங்களில் கலக்கமும், செயலிலே தடுமாற்றமும், பார்வையில் சூன்யமும் இருந்தன. அந்தப் பெரியாரின் நட்பும் உறவும் கிடைத்த பின் எனது எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டது; செயலிலே நிதானம் ஏற்பட்டது; பார்வையிலே பிரகாசம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு திரு. ப. நீலகண்டன் அவர்களால் கொடுக்கப்பட்டது “இரத்த சோதனை” என்ற ஒரு நாடகம். அதை ஆதாரமாகக் கொண்டு பல மாற்றங்களுடன் “பைத்தியக்காரன்” என்ற நாடகத்தை உருவாக்கினோம். இந்த நாடகத்தின் மூலம் திரைப்படத்திலும் நான் முக்கிய பாத்திரமேற்று நடித்து, திரைக்கதை வசனமும் எழுதியதில் வெற்றியும் புகழும் கிடைத்தன; திரைப்பட வாழ்க்கைக்கு இது வழிகாட்டியது.

திரைப்படத்தில் நடிப்பதும், நாடகத்தில் நடிப்பதுமாகச் சில நாட்கள் சென்றன. திரைப்படத்து வருமானம் நாடக மேடையில் புதிய முறையில் நாடகங்களை நடத்தவும், காட்சிகளை அமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

1952-ஆம் ஆண்டு எங்களது சொந்தக் குழுவான சேவா ஸ்டேஜ் நாடக சபா ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியத் தரம் படைத்த பல எழுத்தாளர்களை நாடக ஆசிரியராக அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அந்த வரிசையில் திரு என்.வி. ராஜாமணி, திரு. தி. ஜானகிராமன், குகன், கு. அழகிரிசாமி, திரு. கோமல் சுவாமிநாதன், திரு. தாமரைமணாளன், திரு. மல்லியம் ராஜகோபால், திரு. எம்.கே. மணி சாஸ்திரி, திரு. கௌசிக் போன்றவர்கள்.

திரு. கலாசாகரம் ராஜகோபால் அவர்கள் கலை இயக்குனராக பணி மேற்கொண்டு, புதிய முறையில் காட்சி அமைப்புகளில் பலரும் பாராட்டும்படி சாதனைகள் செய்தார். கனபரிமாண காட்சி முறையை முதன்முதலில் தமிழக மேடைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் சுழலும் காட்சியையும் அமைத்துக் கொடுத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக “நாடகக் கல்வி நிலையம்” ஒன்று ஆரம்பித்து, நடிப்பு – நாடகத் தயாரிப்பு – நாடகம் எழுதுவது – நாடகக் காட்சி அமைப்பு, என்று நான்கு பிரிவுகளை ஏற்படுத்தி, அதில் 16 மாணவ மாணவியர் பயிற்சி பெற வழி செய்தோம். அதில் தோன்றியவர்தான் இன்று புகழடைந்துள்ள நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன். நடிகையர் வரிசையில் டி.கே. வசந்தாவும் தேர்ச்சி படைத்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமை உண்டு.

இந்த நாடகக் கல்வி நிலையத்தில் நடிப்புப் பயிற்சி அளிப்பது என்னுடைய கடமையாக இருந்தது. எனது வெகு நாளைய ஆசை மஹாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மேடை ஏற்ற வேண்டும் என்பது. அதற்காக நானாகவே மஹாகவியின் கவிதைகளில் வர்ணனைகளை எல்லாம் நீக்கிவிட்டு, நாடக உணர்ச்சிகளுக்கு வேண்டிய உரையாடல்களை மட்டும் தொகுத்து, கல்வி நிலைய மாணவர்களுக்கு மொழிப் பயிற்சிக்கு வலிமை ஊட்டுவதற்காகப் பயன்படுத்தினேன்.

இந்தக் கவிதை நாடகப் பயிற்சி நடக்கும் சமயம் அமரர் அவ்வை சண்முகம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் வகுப்பு முடிந்து போகும்போது, என்னிடம் தனியாகக் கூப்பிட்டு, இந்தக் கவிதை நாடகத்தை, தொழில்முறை நாடகம் நடத்தும் உங்கள் நடிகர்களைக் கொண்டு மேடை ஏற்றினால் பெருமையாக இருக்குமே எனத் தெரிவித்தார். பிறகு இதே கவிதை நாடகத்தை திரு. பி.எஸ். ராமையா அவர்களிடம் கொடுத்து தொழில் நடிகர்களான நாங்கள் நடிப்பதற்கேற்ற முறையில் நாடக உணர்ச்சியும் பண்பாடும் மெருகேற்றித் தொகுத்தளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி அவரும் செய்து கொடுத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற ஆதரவுடன் நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். இது வரை எங்களுக்குக் கிடைக்காத பாராட்டும் வாழ்த்துக்களும் மஹாகவியின் கவிதை நாடகத்தில் நாங்கள் பெற்றோம். அமரர் அவ்வை சண்முகத்துக்கு எனது மானசீகமான அஞ்சலியை நான் இப்போதும் செலுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த மஹாகவியின் பாஞ்சாலி சபதம் எங்களுக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற நகரங்களிலெல்லாம் பெருமையும், புகழும் ஏற்படக் காரணமாக இருந்தது. டில்லி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பான முதல் தமிழ் நாடகம் என்ற சிறப்பையும் அடைந்தது. கல்கத்தாவில் மஹாகவி தாகூர் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் நடத்தும் நல்வாய்ப்பையும் பெற்றோம். பெரிய அளவில் அரங்கம் அமைத்திருந்தார்கள். நாடகம் முடிந்ததும் பல வங்காள ரசிகர்கள், கலைஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மேடையில் உள்ளே வந்து, எங்களை நேரடியாகப் பாராட்டினார்கள். அவர்கள் “எங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், இனிமையான சொற்களை இசை போலக் கேட்க முடிந்தது, காட்சிகளும் நடிப்பும், வெகுவாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின, இந்த நாடகம் எங்கள மனத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

தென்னகமும் வடநாடும் மட்டுமல்லாமல் பாரதியார் கவிதை மூலம் என்னுடன் ரஷ்யாவுக்கும் பயணமானார். ஆம்! 1961-ஆம் ஆண்டில் பாரதீய நாட்டிய சங்கத்தார் நாடகக் கலையை அறிவது சம்பந்தமாக கலைத் தூதுக்குழு ஒன்றை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதில் தமிழகத்தின் சார்பில் என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னுடன் வங்காள நாட்டு மின்சார நிபுணரான திரு. தபன் சென் அவர்களும் உடன் வந்தார்கள். இவர் மத்திய சர்க்காரது நாடகப் பயிற்சிப் பள்ளியில் சிறந்த நாடகத் தயாரிப்பாளர். நான் வயதில் மூத்தவனாக இருந்தபடியால் என்னை அந்தக் கலைத் தூதுக்குழுவின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

ரஷ்யா செல்லும்போது பாரதியின் கவிதை நாடகமான பாஞ்சாலி சபதத்தை எங்கள் குழு நடிகர்களைக் கொண்டு டேப்பில் ஒலிப்பதிவு செய்து எடுத்துப்போய் மாஸ்கோ வானொலி நிலையத்தில் கொடுத்தேன். அதற்கு அவர்கள் உடன் ஒரு தொகையையும் கொடுத்துவிட்டார்கள். இரு முறை பாஞ்சாலி சபதத்தை ஒலிபரப்பியதாக என் ரஷ்ய நண்பர் திரு. செம்பியன் அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

பாஞ்சாலி சபதம் கவிதை நாடகம் வெளிநாட்டிலும் எனக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளது.

எனது நாடகக்கலை அனுபவத்தில் எத்தனையோ பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன என்றாலும் திருச்சியில் 1959-ஆம் ஆண்டில் கலை இலக்கியப் பெருமன்றம் ஆதரவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடைபெறும்போது அவர்கள், செப்பேடு தகட்டில் “பாரதிக் கலைஞன்” என்று பொறுத்துக் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கரத்தால் பாராட்டி வழங்கச் செய்ததை நான் இன்னும் பெரிதாக மதித்துப் போற்றி வருகிறேன்.

பாரதியாருக்கு நாடக உணர்வுகள் மிகுதியாக இருந்திருக்கின்றன. பாஞ்சாலி சபதம் இரண்டாவது சூதாட்டச் சருக்கம் ஆரம்பிக்கும் முன் கடவுள் வாழ்த்து வருகிறது. அது நாடகக் கலைக்கு இலக்கணம் யாத்துள்ளதைப் போலுள்ளது. அதை இங்கே எடுத்துக் சொல்ல விரும்புகிறேன்.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
கவிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல் இங்கிவை எல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ!
ஒளிவளருன் தமிழ்வாணீ! அடியேனேற் கிவையனைத்தும் உதவுவாயே!

நாடக உணர்வுகளைத் தட்டி எழுப்பவும் மஹா கவிஞர் தவறவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

தமிழ் நாடகம்: மெரினா

சமீபத்தில் சில மெரினா நாடகங்களை முதல் முறையாகவோ அல்லது மீண்டும் ஒரு முறையோ படித்தேன். அதனால் இந்தப் பழைய பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் மெரினாவின் நாடகங்கள் மிகவும் பிரபலம். தாம்பரத்தைத் தாண்டாத சபா நாடக உலகில் பிரகாசித்தார்.தனிக்குடித்தனம், கால்கட்டு, ஊர் வம்பு மாதிரி சில பல. அவை ஒரு காலகட்டத்தின் – குறிப்பாக எழுபதுகளின், நகர்ப்புற பிராமணர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டு வந்தன. அவர் விவரிக்கும் குடும்பத்துக்குள் நடக்கும் சண்டைகள் ஏறக்குறைய அதே மொழியில் நடந்துகொண்டிருந்தன.

பொதுவாக மெரீனா நகர்ப்புற – அதுவும் சென்னை நகர, மத்தியதர வாழ்க்கையை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களின் வாழ்க்கையை சித்தரித்தார். அன்றைய சபா நாடகங்களைப் பார்த்த பெருவாரியானவர்கள் பிராமணர்களே. இவர்களில் பெரும்பாலோர் விகடன் வாசகர்களும் கூட. அவரது எழுத்துக்கு இப்படி ஒரு மார்க்கெட் இருந்தது அவருக்கு பெரிய பலம். அதுவே அவரது பலவீனமும் கூட. குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. நாடகங்களில் பிற ஜாதிப் பாத்திரங்கள் வந்தாலும் (தனிக்குடித்தனம் குடை நாயுடு)  ஒரு பிராமணரின் கண்ணோட்டத்திலேயே அவர்களும் சிந்திப்பது போலத்தான் தோன்றும்..

பாத்திரங்கள் உண்மையாக இருந்தாலும் பொதுவாக கதை, முடிச்சு என்றெல்லாம் எதுவும் இருக்காது. அப்படியே முடிச்சு இருந்தாலும் அது வலிந்து புகுந்தப்பட்டதாக இருக்கும். நாடகத்தின் வெற்றி, சுவாரசியம் எல்லாம் அந்தக் கால ரசிகர்கள் தங்களையே நாடகத்தில் பார்ப்பதுதான்.

அனேகமாக கூத்தபிரானுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். (கூத்தபிரான் ரேடியோ அண்ணா என்றும் புகழ் பெற்றிருந்தார்.) தனிக்குடித்தனத்தின் வெற்றி அதை சினிமா உலகுக்கும் கொண்டு போனது.

வளர்ந்த சூழ்நிலையை விட்டு வெளியேறிய பிறகுதான் அதைப் பிரதிபலிக்கும் படைப்புகளை take it for granted ஆக எடுத்துக் கொள்ளும் மனநிலை மாறுகிறது. அப்படி பிரதிபலிக்கும் படைப்புகளின் நம்பகத்தன்மை அப்போதுதான் கண்ணிலேயே படுகிறது!

நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 95 வயதில் இறந்திருக்கிறார். விகடன் ஆசிரியர் குழுவில் ஒருவர். விகடன் அறுபது-எழுபதுகளில் பிரபலமாக இருந்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். பரணீதரன் என்ற பேரில் ஆன்மீகப் பயணக் கட்டுரைகள் எழுதினார். ஸ்ரீதர் என்ற பேரில் கார்ட்டூன்கள் வரைந்தார். மெரினா என்ற பேரில் நாடகங்கள் எழுதினார். மூன்று அவதாரங்களுக்குமே நல்ல மார்க்கெட் இருந்தது. அவரது நாடகங்கள் அனேகமாக விகடனில் தொடராக வந்தன. அதுவும் அவற்றின் பிராபல்யத்துக்கு ஒரு காரணம்.

மெரினாவின் நாடகங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா? பரணீதரனின் பயணக் கட்டுரைகள்? ஸ்ரீதரின் கார்ட்டூன்கள்? உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பொதுவாக தமிழ் நாடகங்களின் தரம் குறைவு. ஷேக்ஸ்பியரும் இப்சனும் ஷாவும் ப்ரெக்டும் மில்லரும் இங்கே இன்னும் அவதரிக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது மெரினாவின் உண்மையான சித்தரிப்புகளுக்கு தமிழ் நாடக வரலாற்றில் நிச்சயமாக இடம் உண்டு. ஒரே ஒரு படைப்பை படித்துப் பார்ப்பது என்றால் மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தைப் பரிந்துரைக்கிறேன். தனிக்குடித்தனம், ஊர் வம்பு, கால்கட்டு, எங்கம்மா, மாமியார் மெச்சிய மாப்பிள்ளை ஆகியவற்றை படிக்கலாம், பார்க்கலாம்.


அவர் எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதையே அவரது மாஸ்டர்பீஸாகக் கருதுகிறேன். எழுபதுகளின் பிராமண மத்திய தரக் குடும்பத்தை தத்ரூபமாகச் சித்தரித்தது. உண்மையில் நான் அவரைப் பற்றி சிலிகன்ஷெல்ஃபில் எழுத இந்த நாடகமே முக்கியக் காரணம்.

இந்த நாடகத்தில் வரும் பாத்திரங்கள் உண்மையானவர்கள். அவர்கள் நடத்தை, பேசும் விதம், பழகும் விதம் எல்லாம் என் அத்தைகளிடமும் மாமாக்களிடமும் அத்தான்களிடமும் அத்தங்காள்களிடமும் சித்தப்பாக்களிடமும் பெரியம்மாக்களிடமும் நான் கண்டவையே. நான் வளர்ந்த சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலித்திருக்கிறார். மாமியார்-மருமகள் தகராறுகள், ஷட்டகர்களின் (சகலபாடிகள்) ஈகோ பிரச்சினைகள், சென்னைக்கு வந்தாலும் மாமனார் வீட்டில் தாங்காமல் ஹோட்டலில் தங்கும் மாப்பிள்ளை, பக்கத்து வீட்டில் மைசூர்பாக் வாசனை பிடிக்கும் பாட்ராச்சாரி, டிவி இல்லாத நாட்களில் டிரான்சிஸ்டரில் கிரிக்கெட் கமெண்டரி கேட்டுக்கொண்டே இருக்கும் இளைஞன், பொருளாதார காரணங்களுக்காக வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் இருக்கும் பிரச்சினைகள், பாத்திரச் சீட்டு, நகைச் சீட்டு, புடவை வாங்கிவிட்டு பணம் தரப் படும் அவதி எல்லாம் என் குடும்பத்திலும் உறவினர் நண்பர் குடும்பங்களிலும் அனுபவித்தவையே, பார்த்தவையே. அந்தக் காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார். இதை நாகம்மாள், தலைமுறைகள், கோபல்ல கிராமம் genre படைப்பு. ஆனால் இரண்டாம் வரிசைப் படைப்பு.

என்ன கதை? ஒரு வழக்கமான அப்பா, அம்மா; ஒரு பெண் ரமா பணக்கார மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். இன்னொரு பெண் சாரு சொந்தத்தில் (மத்திய தரக் குடும்பம்) தியாகுவை மணந்து கொண்டிருக்கிறாள். சாருவுக்கும் மாமியாருக்கும் தகராறு. மாமியார் தியாகுவை smother செய்கிறாள். கிருஷ்ணமூர்த்தி மாமனார் வீட்டுக்கு வருவதே இல்லை. வழக்கமான பூசல்கள், சண்டைகள், நேற்று வரை கரித்துக் கொண்டிருந்தவர் நோய்வாய்ப்படும்போது ஆறுதலாக இருப்பது என்று போகிறது. கதாபாத்திரங்கள் உண்மையானவை. கதை? அதைத்தான் காணோம். மெரீனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

குறைகள் இல்லாத படைப்பு என்றெல்லாம் இல்லை. முக்கியமான குறை என்றால் இது நாடகமே இல்லை, நாவலை உரையாடல் வழியாக சொல்கிறார் அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டியம் அவசியம் இல்லை, படித்தாலே போதும். கதை என்று ஒன்று இல்லை. திடீரென்று ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் பின்னால் போய் ஒரு புகைப்படம் எடுத்த மாதிரி இருக்கிறது. புகைப்படம் உண்மையாக, தத்ரூபமாக இருக்கிறது, ஆனால் கலை அம்சம் குறைவு. அதுவும் இருந்திருந்தால்!

மாப்பிள்ளை முறுக்கு டிவி சீரியலாகவும் வந்ததாம். அதைக் கண்டு மெரீனா வெறுத்துப் போய் இனி மேல் டிவி சீரியலுக்கு நாடகங்களைக் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம்.


அவர் எழுதிய பிற நாடகங்களில் இவை குறைகள் உள்ள நாடகங்கள்தான் என்றாலும் படிக்க/பார்க்கக் கூடியவை. சுமார் என்ற தரத்திலாவது இருக்கின்றன.

தனிக்குடித்தனம்: (1969) இதுதான் மெரினாவின் மாஸ்டர்பீஸ் என சொல்லப்படுகிறது. இரண்டு நண்பர்கள். அவர்களுக்கு கல்யாணம் நடப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் இதுதான் நாடகம். நாராயணன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று துடிக்கிறான், கடைசியில் அவன் அப்பா அம்மா தனிக்குடித்தனம் போய்விடுகிறார்கள்! இன்று அத்திம்பேர்களும் சைக்கிள்களும் டிரான்சிஸ்டர்களும் நிறைந்திருந்த அந்த உலகத்தின் மெய்நிகர் சித்தரிப்புக்காகத்தான் படிக்க/பார்க்க வேண்டும். சோ ராமசாமி, கே.ஆர். விஜயா, ஒய்.ஜி. மகேந்திரன் நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

கால்கட்டு: அவரது இன்னொரு புகழ் பெற்ற நாடகம். சும்மா சத்தமாக மிரட்டிக் கொண்டே இருக்கும் அப்பா, அவர் ஸ்டைல் அது என்பதை நன்றாக உணர்ந்த குடும்பத்தினர், குடும்ப உறுப்பினரான தூரத்து உறவுக்காரர் அம்மாஞ்சி. இப்படிப்பட்ட குடும்பங்கள் நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அருகிக் கொண்டு இருந்தன. பாத்திரப் படைப்பு உண்மையாக இருந்தாலும் கதையைத்தான் காணோம்.

ஊர் வம்பு அவருடைய புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று. வம்பு பேசும் அய்யாசாமி ஐயரின் பெண்ணுக்கும் இன்னொரு வம்புக்கார அத்தையின் மருமகனுக்கும் கல்யாணம். ஒரு காலத்து பிராமண milieu தத்ரூபமாக இருக்கிறது. ஆனால் இது என் காலத்துக்கும் முற்பட்ட milieu, அவ்வளவாக ஒட்ட முடியவில்லை.

எங்கம்மா: பிராமணக் குடும்பம், மூன்று பிள்ளைகள். முதல் பையன் மனைவிக்கு அடங்கினவன், தனிக்குடித்தனம் போய்விட்டான். இரண்டாமவன் ஜாதி விட்டு கல்யாணம் செய்துகொண்டவன், தனியாக இருக்கிறான். கடைசி பையனுக்கு ஜாதிக்குள்ளேயே பெண் பார்க்கிறார்கள். கல்யாணம், சச்சரவுகள், குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று போகிறது. அப்பா இறந்ததும் ஆசாரமான அம்மா தன் தலித் மருமகளுடன் போய் இருப்பதாக கதை முடிகிறது.

மாமியார் மெச்சிய மாப்பிள்ளை: பிள்ளையை வரப் போகும் பெண்டாட்டி பிரித்துவிடப் போகிறாள் என்று அம்மாவுக்கு பயம், அதனால் கல்யாணம் பண்ணிக் கொல்லாதே என்று பிள்ளைக்கு உபதேசிக்கிறாள். எப்படியோ கல்யாணம் நடக்கிறது. மருமகள் மாமியார் மேல் உயிராக இருக்கிறாள். பிறகு?


இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.

காதலென்ன கத்திரிக்காயா: இளைஞன் காதல் காதல் என்று அலைய எதுவும் வொர்க் அவுட் ஆகமாட்டேன் என்கிறது. வாரப்பத்திரிகை தொடர்கதை என்று தெளிவாகத் தெரிகிறது. அறுபதுகளில் ஸ்டவ் ஜோசியம் என்று (உய்ஜா மாதிரி இருக்கிறது, ஸ்டவ் நகருமாம்!) ஒன்று பரபரப்பாக இருந்ததாமே! இந்த நாவலில் வருகிறது

கல்யாண மார்க்கெட்: காதல், மறுக்கும் அப்பா, எப்படியோ சேரும் ஜோடி. தண்டம்.

மாமனார் சரணாகதி: குடும்பத்தை அடக்கி அட்டூழியம் செய்யும் குடும்பத் தலைவர்.

நாடகம் போட்டுப் பார் என்று நாடகம் போடுவதைப் பற்றியே ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார். நம்பகத்தன்மை இருந்தாலும் சுவாரசியமாக இல்லை.

வடபழனியில் வால்மீகி: தண்டம். வால்மீகி இன்றைய (அறுபதுகளின்) சென்னைக்குத் திரும்பி வருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: மெரினா பற்றி ஒரு கட்டுரை

மனோன்மணீயம்

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.

manonmaneeyam_sundaram_pillaiசுந்தரம் பிள்ளையைப் பற்றிய பதிவில் மனோன்மணீயம் (1891) நல்ல நாடகம் இல்லை, முன்னோடி நாடகம் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தேன். ஏதோ ஒரு ஆர்வத்தால் நாடகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படித்ததெல்லாம் உரைநடை கதைச்சுருக்கமே, ஒரிஜினல் கவிதை இல்லை என்று தெரிந்தது. நல்ல நாடகம் இல்லை என்று சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், என் எண்ணம் மாறிவிட்டது.

கவிதையின் கற்பூர வாசனை எனக்குத் தெரிவதில்லைதான். ஆனால் தமிழின் ஆசிரியப்பா மாதிரி சிறந்த சந்தம் உள்ள ஒரு வடிவம் அபூர்வம். அசை பற்றியெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை. ‘தானனா தானா தானனா தானா’ என்ற ஆசிரியப்பா வடிவம் நேர்-நிரை, நேர்-நேர், நேர்-நிரை, நேர்-நேர் என்ற அமைப்பில் இருப்பது அற்புதமான சந்தம். இந்த சந்தத்திலேயே 100, 120 பக்கத்துக்கு எழுதி இருக்கிறார், அபாரம்! ஒரு முறையாவது வாய்விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும்.

புதுக்கவிதை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால் இந்த சந்தத்தை, வெண்பாவின் வடிவ நேர்த்தியை புதுக்கவிதை மறக்கடித்துவிட்டதே என்ற வருத்தத்தை மனோன்மணீயம் ஏற்படுத்திவிட்டது. (எனக்கு கலிப்பா, வஞ்சிப்பா எல்லாம் பள்ளியில் படிக்கும்போதே ததிங்கிணத்தோம்.)

அருமையான சில வரிகள் கீழே.

ஓவியந்தொழில் வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந்தொடத் தொடத் துலங்குதல் போல
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவு தோன்றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதாய் உறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே!

ஸ்டீரியோடைப் பாத்திரங்கள்தான். கதையும் அவருடையதல்லதான். ஆனால் கச்சிதமாக ஒரு கதையை உருவாக்கி/எடுத்தாண்டு இருக்கிறார். வடிவ கச்சிதத்துக்காகவே படிக்கலாம், கவிதையாக எழுதி இருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது. படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நாடகத்தின் மூலம் லிட்டன் பிரபு எழுதிய Secret Way.

திரைப்படத்தையும் பரிந்துரைக்கிறேன். சுந்தரம் பிள்ளை பதிவிலிருந்து:

மனோன்மணீயம் மனோன்மணி என்ற பேரில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்து திரைப்படமாகவும் வந்தது. முழுத் திரைப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது. கே.வி. மஹாதேவன் இசையமைத்த முதல் படம் இதுதானாம். சின்னப்பா நல்ல குண்டாக இருந்தாலும் முதலில் வரும் கத்திச் சண்டை பயிற்சிக் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். (கிட்டத்தட்ட ஐந்தாவது நிமிஷத்தில் வருகிறது) வசனமும் நன்றாக இருக்கும், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: மனோன்மணீயம் மின்னூல்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம் (மீள்பதிவு)

பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு எழுத்தை மாற்றாமல் மீள்பதித்திருக்கிறேன்.

தமிழின் சிறந்த நாடகங்களுள் ஒன்று.

பொதுவாகவே தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. ஷேக்ஸ்பியரும், இப்சனும், பெர்னார்ட் ஷாவும், பெர்டோல்ட் ப்ரெக்டும், ஆர்தர் மில்லரும் இன்னும் தமிழில் இல்லை. அந்த விதத்தில் சுஜாதா ஒரு முன்னோடி. நல்ல நாடகங்கள் எழுத முயற்சி செய்திருக்கிறார். ஊஞ்சலில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஏறக்குறைய டென்னசி வில்லியம்சின் நாடகங்களை நினைவுபடுத்துமாறு அவர் இன்னும் சில நாடகங்களை – டாக்டர் நரேந்திரன், சரளா இப்போது நினைவு வருகிறது – எழுதி இருக்கிறார். குப்பைகளும் உண்டு. உதாரணமாக சிங்கமய்யங்கார் பேரன் எனக்கு தேறவில்லை.

கதை என்ன பிரமாதக் கதை? அப்பா வரதராஜன் ஒரு காலத்தில் பெரிய எஞ்சினியரிங் பிஸ்தா, கவர்னரே இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வருகிறார். இன்று பெண்ணின் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதனின் வீழ்ச்சியை, அப்பா ஒரு anachronism ஆக மாறிவிட்டதை, அருமையாக சித்தரித்திருக்கிறார். ஐயோ, திறமையான, பல வெற்றிகளை அடைந்த மனிதன் இன்று இப்படி சொதப்புகிறானே என்று நமக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்துவதில் சுஜாதா வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மாதிரி பெருங்காயம் வைத்த டப்பாக்களை அவரே நிறைய பார்த்திருப்பார். அதை அற்புதமாக கொணடு வந்திருக்கிறார்.

சுஜாதாவுக்கு நன்றாகத் தெரிந்த பிராமண milieu. வசனங்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன. அது இந்த நாடகத்தின் பெரிய பலம். அப்பா பாத்திரம் மட்டுமில்லை, ஒரு காலத்தில் அப்பாவின் உதவியாளனாக இருந்து இன்று பெரிய தொழிலதிபராக இருக்கும் மதி, பெண் கல்யாணி, அம்மா பாத்திரம், பெண்ணின் காதலனாக வருபவர் எல்லாமே ரத்தமும் சதையும் உள்ள நிஜ மனிதர்கள். சில காட்சிகள் – கல்யாணி பணத்தை அப்பாவுக்கு தருகிறேன் என்பது, வரதராஜன் பஸ் கம்பெனியில் ட்ரிப் ஷீட் எழுதப் போகும் சீன், மதியின் கம்பெனிக்கு சென்று அவனை சந்திக்கும் சீன், மதியின் உதவியாளர்கள் இவரது ப்ராஜெக்ட் தேறாது என்று மதியிடம் சொல்வது எல்லாம் மிக அருமையாக வந்திருக்கும்.

இந்த நாடகத்தை நான் வீடியோவில் பார்த்தேன். ஒரு நல்ல நடிகனுக்கு இந்த நாடகம் ஒரு பிரமாதமான வாய்ப்பு. பூர்ணம் விஸ்வநாதன் இந்த ரோலுக்கு பொருத்தமானவர்தான், ஆனால் ஓவர்ஆக்டிங் செய்து கொலை செய்துவிட்டார். உண்மையை சொல்லப்போனால் அவரது மிகை நடிப்பில் ஏற்பட்ட கடுப்பு எழுத்தின் திறமையையே மறைத்துவிட்டது. கடுப்பேற்றும் மிகை நடிப்புக்கும் இதற்குத் தேவையான ஆர்ப்பாட்டமான நடிப்புக்கும் ஒரு மயிரிழைதான் இடைவெளி, அந்த இடைவெளியை பூர்ணம் தவறவிட்டுவிட்டார். இதை இன்றைய நடிகர்கள் – பிரகாஷ் ராஜ் மாதிரி யாராவது நடித்தால் நன்றாக வரும். பூர்ணமே கூட இன்னொரு நாளில் அருமையாக நடித்திருக்கலாம். என் துரதிருஷ்டம், வீடியோ எடுக்கப்பட்ட அன்று அவர் சொதப்பிவிட்டார்.

ஊஞ்சல் நாடகத்தைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் சிலாகித்திருக்கிறார். உண்மையில் நான் தமிழில் நல்ல நாடகம் இல்லை என்று சொன்னபோது சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி அவர்தான் நினைவுபடுத்தினார். அதற்குப் பிறகுதான் நான் ஊஞ்சல் நாடகத்தை தேடிப் பிடித்து படித்தேன் – பூர்ணத்தின் மிகை நடிப்பால் இந்த நாடகத்தை ஒதுக்கிய நான் மறுவாசிப்பு செய்ய அவரே காரணம். இதைப் பற்றி எங்காவது எழுதி இருக்கிறாரா என்று நெட்டில் தேடிப் பார்த்தேன், தென்படவில்லை. இந்த பதிவு அவர் கண்ணில் பட்டால் ஏதாவது சொல்வார் என்று நம்பிக்கை…

ஜெயமோகன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார், எனக்குத்தான் தேடத் தெரியவில்லை. 🙂 அவரது விளிம்புகளில் ரத்தம் கசிய – சுஜாதா நாடகங்கள் பதிவிலிருந்து ஒரு excerpt:

அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள்.

சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று காலாவதியாகும் ஒரு தலைமுறையை தன் கதைக்கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, அன்புள்ள அப்பா , ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக் கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்ல மெல்ல சமாதானம் செய்து கொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதை விட அந்த சமரசத்தின் பரிதாபம். அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.

சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்க வைக்கும் தன்மை கொண்டவை.

ஜெயமோகனின் மறுமொழியையும் இங்கே இணைத்திருக்கிறேன். ஜெயமோகன் இந்த தளத்தை அனேகமாக தினமும் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. (குறிப்பாக இந்த பதிவை ஜெயமோகனின் கவனத்துக்கு கொண்டு போன உத்தம் நாராயணனுக்கு நன்றி!)

சுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல்ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்.

சுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வர்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவர்ச்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச் சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது.

இந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல.

அருமையான தீம், பாத்திரப் படைப்பு, வசனங்கள், powerful காட்சி அமைப்பு எல்லாமே இந்த நாடகத்தின் பெரிய பலங்கள். கட்டாயமாகப் படியுங்கள், முடிந்தால் (பூர்ணம் சொதப்பிய வீடியோவாக இருந்தாலும் சரி) பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி:
சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி ஜெயமோகன் – விளிம்புகளில் ரத்தம் கசிய
சிமுலேஷனின் விமர்சனம்