ராஹுல் சாங்கிரித்யாயன் II – பிடித்த சிறுகதை: பிரவாஹன்

வோல்காவிலிருந்து கங்கை வரை பற்றி எழுதி இருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சிறுகதை இது.

பிரவாஹன் இளவரசன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறுபிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா? பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.

பிரம்மம் பற்றி பதின்ம வயதுகளில் படித்தபோது இது ரொம்ப சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. கொல்பவனும் பிரம்மம், கொலை செய்யப்படுபவனும் பிரம்மம், திருடுபவனும் பிரம்மம், திருட்டு கொடுப்பவனும் பிரம்மனும், கற்பழிப்பவனும் பிரம்மம், கற்பழிக்கப்படுபவளும் பிரம்மம் என்றால் அறமாவது நெறியாவது? ஜாலிலோ ஜிம்கானாதான்! அப்புறம் மறுபிறவி. அடுத்த ஜன்மத்தில் என்னவாகப் பிறந்தால் இந்த ஜன்மத்தில் என்ன? மயிரே போச்சு. பக்கத்து வீட்டு மாமி ஒருவர் அங்கே நிற்காதே, இங்கே போகாதே, இபபடி எல்லாம் செய்யாதே, அடுத்த ஜன்மத்தில் பாம்பாகப் பிறப்பாய், பல்லியாகப் பிறப்பாய் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் பல்லியாகப் பிறந்தால் என்ன மாமி, இரண்டு பூச்சியைப் பிடித்து தின்றுவிட்டு ஜாலியாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்டுவிட்டேன். அதற்கப்புறம் அவர் கப்சிப், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன மாதிரி அறிவாளிடா இவன் என்று இரண்டு பேர் வியப்போடு பார்த்தார்கள். பதின்ம வயதில் வேறென்ன வேண்டும்?

எனக்கு இந்த மாதிரி கதைகள் எப்போதுமே பிடிக்கும். நான் எழுதும் மஹாபாரதக் கதைகளும் இந்த மாதிரி ஏதாவது ஒரு தியரியாகத்தான் அனேகமாக இருக்கும். க்ஷத்ரிய ஆதிக்கத்தை ஒழிக்க பிராமண பரசுராமரின் சூழ்ச்சி என்ற ஒரு கான்ஸ்பிரசி தியரியை வைத்து ஒரு கதை எழுதியபோது இந்த பிரம்மம் பற்றிய கான்ஸ்பிரசி தியரி கதை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. என்ன, ராகுல்ஜி என்னை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் அவரது சிறுகதை நான் எழுதியதை விட மிக நன்றாக இருக்கிறது. நான் எழுதியது திராவிடக் கழக எழுத்தாளர்களின் கதைகளை விட நன்றாக இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களை விட நன்றாக எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. 🙂

சிறுகதையை இங்கே படிக்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: வோல்காவிலிருந்து கங்கை வரை

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.