ராஹுல் சாங்கிரித்யாயன் II – பிடித்த சிறுகதை: பிரவாஹன்

வோல்காவிலிருந்து கங்கை வரை பற்றி எழுதி இருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சிறுகதை இது.

பிரவாஹன் இளவரசன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறுபிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா? பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.

பிரம்மம் பற்றி பதின்ம வயதுகளில் படித்தபோது இது ரொம்ப சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. கொல்பவனும் பிரம்மம், கொலை செய்யப்படுபவனும் பிரம்மம், திருடுபவனும் பிரம்மம், திருட்டு கொடுப்பவனும் பிரம்மனும், கற்பழிப்பவனும் பிரம்மம், கற்பழிக்கப்படுபவளும் பிரம்மம் என்றால் அறமாவது நெறியாவது? ஜாலிலோ ஜிம்கானாதான்! அப்புறம் மறுபிறவி. அடுத்த ஜன்மத்தில் என்னவாகப் பிறந்தால் இந்த ஜன்மத்தில் என்ன? மயிரே போச்சு. பக்கத்து வீட்டு மாமி ஒருவர் அங்கே நிற்காதே, இங்கே போகாதே, இபபடி எல்லாம் செய்யாதே, அடுத்த ஜன்மத்தில் பாம்பாகப் பிறப்பாய், பல்லியாகப் பிறப்பாய் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் பல்லியாகப் பிறந்தால் என்ன மாமி, இரண்டு பூச்சியைப் பிடித்து தின்றுவிட்டு ஜாலியாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்டுவிட்டேன். அதற்கப்புறம் அவர் கப்சிப், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன மாதிரி அறிவாளிடா இவன் என்று இரண்டு பேர் வியப்போடு பார்த்தார்கள். பதின்ம வயதில் வேறென்ன வேண்டும்?

எனக்கு இந்த மாதிரி கதைகள் எப்போதுமே பிடிக்கும். நான் எழுதும் மஹாபாரதக் கதைகளும் இந்த மாதிரி ஏதாவது ஒரு தியரியாகத்தான் அனேகமாக இருக்கும். க்ஷத்ரிய ஆதிக்கத்தை ஒழிக்க பிராமண பரசுராமரின் சூழ்ச்சி என்ற ஒரு கான்ஸ்பிரசி தியரியை வைத்து ஒரு கதை எழுதியபோது இந்த பிரம்மம் பற்றிய கான்ஸ்பிரசி தியரி கதை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. என்ன, ராகுல்ஜி என்னை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் அவரது சிறுகதை நான் எழுதியதை விட மிக நன்றாக இருக்கிறது. நான் எழுதியது திராவிடக் கழக எழுத்தாளர்களின் கதைகளை விட நன்றாக இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களை விட நன்றாக எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. 🙂

சிறுகதையை இங்கே படிக்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: வோல்காவிலிருந்து கங்கை வரை

ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”

(மீள்பதிவு)

சிறு வயதிலேயே படித்த தரமான படைப்பு. இன்று படிக்கும்போது குறைகள் தெரியத்தான் செய்கின்றன, ஆனால் குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரு “தாயின்” தலைமையில் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த “ஆரியக்” குழுக்கள் மெதுமெதுவாக விவசாயம், கிராமம், “அசுரர்களோடு” போர்கள், தெய்வங்கள், இந்தியா வருதல், வேதங்கள், ஜாதி, சிறு அரசுகள், மன்னர்கள், சாம்ராஜ்யங்கள், முஸ்லிம்களின் வருகை, ஆங்கிலேய ஆட்சி, சுதந்திரப் போர் என்று பரிணாமிப்பதை சிறுகதைகள் மூலம் சித்தரிக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சிறுகதை கூட தனியாகப் படித்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. பிரச்சார நெடி – சாங்க்ரித்யாயன் கம்யூனிஸ்ட் சார்பு உடையவர், ஒரு டிபிகல் அந்தக் கால “முற்போக்கு” நோக்கோடு எழுதுபவர் – கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. பந்துலமல்லன் போன்ற கதைகள் பழைய ஐதீகக் கதைகளை அப்படியே திருப்பிச் சொல்கிறன. பேசிக் கொண்டே இருப்பார்கள். அவருக்கும் (என்னைப் போலவே) உரையாடல்கள் மூலம்தான் கதையை முன் நகர்த்த முடிந்திருக்கிறது. Subtlety, சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. தட்டையான பாத்திரப் படைப்புதான். இங்கே சொல்லப்படும் சரித்திரமான வந்தேறிய ஆரியர்கள் இந்தியாவில் இருந்த திராவிடர்களை ஆக்கிரமித்தார்கள் என்ற தியரி உண்மையில்லை என்று இன்று பலரும் கருதுகிறார்கள். (அவர் எழுதியபோது இந்த தியரி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்.)

சில அவசரமாக வரையப்பட்ட ஓவியங்கள் போன்று தோன்றும் கதைகள். ஆனால் அவற்றின் sweep, அவற்றுக்குள்ளே இருக்கும் தொடர்பு அருமை. இத்தனை குறைகள் இருந்தாலும் அது பெரிதாகத் தெரிவதில்லை. மொத்தமாகப் படிக்கும்போது இந்தியாவின் சரித்திரத்தையே காண்பித்துவிடுகிறார். அதுதான் இந்தப் புத்தகத்தை உயர்த்துகிறது.

எனக்கு மிகவும் பிடித்த கதை பிரவாஹன். பிரம்மம் என்ற தியரி எப்படி உண்டானது என்பதை தன் கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

1944-இல் (ஹிந்தியில்) எழுதப்பட்ட புத்தகம். நான் படித்தது தமிழில். கண. முத்தையா மொழிபெயர்ப்பு. தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

பின்குறிப்பு: சாங்க்ரித்யாயன் இந்திய குறிப்பாக பவுத்த தத்துவங்களில் ஸ்காலராம். இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். நான் படித்த இன்னொரு புத்தகம் சிந்து முதல் கங்கை வரை. லிச்சாவி குடியரசு மீது மகதப் பேரரசு (பிம்பிசாரன்-அஜாதசத்ரு காலம்) போர் தொடுத்து தோற்றத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சாண்டில்யன் ஸ்டைல் நாவல். ஆரிய-அனாரிய ரத்தக் கலப்பினால்தான் மன்னர்கள் தலை தூக்குகிறார்கள், குடியரசு முறை அழிகிறது, ஜாதி ஒரு ஏமாற்று, பவுத்த மதத்தின் பெருமை என்று அவருடைய பல தியரிகளை முன் வைத்திருக்கிறார். நயம் இல்லாத புனைவு, புதிதாக ஒன்றுமில்லை. தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராகுல் சாங்க்ரித்யாயன் பற்றி விக்கியில்
பிரவாஹன்